சப்பானியர் போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் கல்வி என்பதையே மூன்றை ஆண்டுகளாக மறந்திருந்த நிலையில் தமிழர்களுக்காக ஒரு தமிழ்ப்பள்ளியை தொடங்க அ.ந.மொய்தீன் அவர்கள் தான் எடுத்துக் கொண்ட முயற்சியை நெஞ்சில் பதிந்த நினைவுச் சுவடுகள் என்ற நூலில், 1946 ஜனவரி மாதம் முதல் தேதியன்று தஞ்சம்பகார் ரோட்டில் ஏ.மீ.உதுமான் பிடித்திருந்த 72 வது எண் கடை வீட்டில் இருந்த ஒரு அறையில் கடையநல்லூர் முஸ்லீம் லீக் முறையாக இயங்க ஆரம்பித்தது (நூல் பக்கம் 47) என்று கடையநல்லூர்முஸ்லீம் லீக் தொடங்கப்பட்ட வரலாற்றைக் கூறத் தொடங்கியவர் அச் சங்கத்தில் தமிழ்ப் பள்ளி தொடங்கு வதற்கான முயற்சி எடுக்கப்பட்டதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார் ,

சிறிய அளவில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையைச் சங்கக் கூட்டத்தில் வெளியிட்டோம். எல்லோரும் அந்த யோசனையை ஆதரித்தார்கள். அப்போது இருந்த ஆர்வத்தில் எதைப் பற்றியும் யோசிக்காது தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றை எப்படியும் ஆரம்பித்து நடத்துவதென்று முடிவெடுத்து விட்டோம். 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சின்னஞ்சிறு சங்க அறையில் தமிழ்ப் பள்ளிக்கூடம் கோ. அப்துல் ரஹ்மான் முன்னிலையில் , ஹாபிஸ் செ.ஆ. அஹ்மது சாஹிப் துவா ஓத எளிமையான முறையில் துவங்கப்பட்டது. பள்ளிக் கூடக் காரியங்களைக் கவனிப்பதற்காகப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த க. அப்துல் ஹமீது, ந.சி.அப்துல் காதர், ம.நா. சுலைமான் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். (இங்கு அ.ந.மொய்தீன் அவர்கள் மேற்குறிப்பிட்ட மூவரையும் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் என்று குறிப்பிட்டிருப் பதைக் கவனிக்க வேண்டும் - கவி). எடுத்த எடுப்பிலேயே 54 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்து விட்டார்கள் .

பின்பு திரு. அ.ந.மொய்தீன் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு தமிழகம் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அது குறித்து அவர்,

‘கப்பல் பயணம்ஆரம்பித்த சல நாட்களிலேயே என்உடல் நிலையைப் பற்றிய நினைப்பு என்னை விட்டு அகன்றது. சங்கத்தையும் பள்ளிக் கூடத்தையும் பற்றி கவலையே மனத்தை வாட்டிக் கொண்டிருந்தது. ஊரில் இருந்தபடியே சங்கத்தையும் பள்ளிக் கூடத்தையும் பலப்படுத்தவதற்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்’ என்று கூறுகின்ற அவர் வீட்டில் 3 நாட்கள் தங்கி ஓய்வு பெற்ற பிறகு அங்கிருந்து பிரைமரி முஸ்லிம் அலுவலகத்திற்குச் சென்றதையும் அதன் செயலாளர் எஸ்.கே.ஹாஜா அவர்கள் தனக்கு பிரைமரி முஸ்லிம் லீக் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் செய்தியை தெரிவித்து அந்நிகழ்ச்சியில் தான் ஆற்றிய உரையை பின்வருமாறு அ.நா.மொய்தீன் அவர்கள் கூறுகிறார்,

வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசிய நான், கடல்கடந்து சிங்கப்பூர் சீமையில் கடையநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் கடினமாக உழைத்துதான ஜீவனம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். படிப்பறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள். சரியான கல்வி அறிவு பெற்று ஏனையவர்களைப் போல நம் மக்களும் முன்னேறாவிட்டால் எதிர்காலத்தில் நம் சமூகம் சிங்கப்பூரில் பெயர்போட முடியாது என்று கூறினேன்.

சிங்கப்பூரில் கடையநல்லூர் முஸ்லீம்களின் நிலையை எடுத்துக் கூறிய திரு.அ.நா.மொய்தீன் அவர்கள் மேலும்,

எனது பேச்சு வரவேற்பு நிகழ்ச்க்கு வந்திருந்தவர்களின் மனத்தைக் கவர்ந்து விட்டது. இச்சமூக மக்களால் சிங்கப்பூரில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் பணிகளுக்கு உதவுவதாய் என்னிடம் உறுதிக் கூறினார்கள். வாய் மூலமாக எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுப்பது நல்ல பலன் அளிக்கும் என்று சிலர் யோசனை கூறினார்கள். அதனையடுத்து, சிங்கப்பூரில் உள்ள கடையநல்லூர் வாசிகளின் வேண்டுகோள் என்ற தலைப்பில் அறிக்கை ஒ ன்று 1946 ஆம் ஆண்டு செப்படம்பர் 15 ஆம் தேதியில் தயாரிக்கப்பட்டு அவ்வூரில் உள்ள சங்கங்களிலும் பள்ளி வாசல்களிலும் விநியோகிக்கப்பட்டது. சிங்கப்பூரி லிருந்து கடையநல்லூர் முஸ்லீம் லீக் சார்பில் வேண்டுகோள் அறிக்கையை அச்சிட்டு அதை அஞ்சலில் அனுப்பி வைப்பதற்கான செலவு மட்டும் 400 வெள்ளி வரை ஆகியது. கடையநல்லூர்க்காரர்கள் வசூலிக்கும் பணம் கைக்கு இப்போது வரும் அப்போது வரும் என பல மாதங்கள் வரை காத்திருந்து விட்டு வெறுங்கையுடனும் - ஏமாற்றத்துடனும் கப்பலேறி சிங்கப்பூருக்குப் புறப்பட்டேன்

என்று நூலின் பக்கம் 53,54 களில் பள்ளிக் கூடமும் ஊரில் குடித்த மனப் பாலும் என்ற தலைப்பில் மனம் வருந்தி கூறியுள்ளார்.

தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்கு உமறுபுலவர் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் திரு.அ.நா. மொய்தீன் அவர்கள் ,

நாங்கள் ஆரம்பித்த தமிழ்ப்பள்ளிக் கூடத்துக்கு ஆரம்பத்தில் எந்தப் பெயரையும் நாங்கள் சூட்டவில்லை. சாதாரணமாக சிறுவர் தமிழ்ப் பாடசாலை என்றே அழைத்து வந்தோம். பள்ளிக் கூடம் ஆரம்பித்து பல மாதங்களுக்குப் பிறகே அதற்கு உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளிக்கூடம் என்ற நாமம் சூட்டப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் ச.சா. சின்னப்பனார் அவர்கள்தாம். இன்று சிங்கை தமிழர்கள் ச.சா.சின்னப்பனார் என்ற பெயரை மறந்திருக்கக் கூடும். ஆனால் சிங்கப்பூர் தமிழர்களின் முன்னேற்றத்துக்காக அப்போது தன்னலம் பாராது உழைத்த பெரிய மனிதர் அவர். ஒரு நாள் அவர் நாங்கள் நடத்திக் கொண்டிருந்த பள்ளிக் கூடத்துக்கு வருகையளித்து எங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்று பரிவோடு வினவினார். நாங்கள் நடத்தும் பள்ளிக் கூடத்துக்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டார். பள்ளிக்குப் பெயர் எதுவும் சூட்டப்பட வில்லை என்று நாங்கள் கூறியதும் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளிக் கூடம் என்று பெயரிடுமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார். சின்னப்பனாரின் யோசனையின் பேரில்தான் நாங்கள் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளிக் கூடம் என்று பெயரிட்டோம்

என்று எழுதியுள்ளார்.

பள்ளிக் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது, அதை அரபி மதரஸா நடத்தினால் பிள்ளைகள் மார்க்கக் கல்வி பெறுவார்கள் என்ற எண்ணமும் குழப்பமும் ஏற்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்தது. செயலாளராக இருந்த வி.மு.செய்து மசூது அவர்கள் இரண்டு ஆசிரியர்களை ஒரு மாத முன் பணத்துடன் நீக்க முடிவு செய்துவிட்டார்.

இது குறித்து அ.நா. மொய்தீனுக்கும் மசூது அவர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு அவ்விரண்டு ஆசிரியர்களுக்கு பதிலாக ஹஜரத் மார்களை வைத்து மத்ரஸா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை மசூது அவர்கள் கூறியதும் தமிழ்ப் பள்ளிக் கூடத்தை மூடுவதும் மத்ரஸா நடத்துவதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அ.நா. மொய்தீன் அவர்கள் கடுமையாக கூறிவிட்டார். அதன் பிறகு க.அ.உதுமான் கனி அவர்கள் மூலம் திருமதி சரோஜினி தேவி லாஸரஸ் என்ற அம்மையார் ஆசிரியராக நியமிக்கப்பட்டு உமறுப்புலவர் தமிழ்ப்ப்பள்ளி தொடர்ந்து நடத்தப்பட்டது. மேலும் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் நேரடியான நிர்வாகத்தில் பள்ளிக் கூடம் நடக்குமானால் குழப்பம் வரும் என்பதை உணர்ந்த அ.நா.மொய்தீன் அவர்கள் சங்கச் சார்பில் தனிக்குழு அமைக்க ஆலோசனைக் கூறினார். அதன்படியே தனிக்குழு அமைக்கப்பட்டது.

பின்பு பள்ளிக் கூடத்தை பார்வையிட வந்த கல்வி இலாக்கா இயக்குநர் ஒருமாதம் கழித்து, பள்ளிக் கூடம் நடத்துவதற்கு முழுதும் தகுதியற்ற இடம் கடையநல்லூர் முஸ்லீம் லீக் இல்லம் என்று குறிப்பிட்டு வேறு இடமாகப் பார்த்து பள்ளி நடத்துமாறு அறிக்கை அனுப்பினார்.

1946 இல் மேக்ஸ்வெல்ரோட்டில் பள்ளிக் கூடம் கட்டுவதற்கு ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல சிக்கல்களுக்கு பிறகு லேண்ட் ஆபிஸ் 5600 சதுர அடி கொண்ட அந்த இடத்தில் 80 பிள்ளைகள் படிக்கக் கூடிய இரண்டு வகுப்பறைகள் கூடிய பள்ளிக் கூடம் கட்ட அனுமதி வழங்கியது. 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிதி கேட்டு திரு. அ.நா.மொய்தீன் அவர்கள் முயற்சியை மேற்கொண்டார்கள்.

நிதி கேட்கும் அறிக்கையை மலாயா நண்பன் ஆசிரியர் கரீம்கனி அவர்களிடம் அளித்து பத்திரிக்கையில் வெளியிடுமாறு அ.நா.மொய்தீன் கூறினார்கள். அது குறித்து நிகழ்ந்தவற்றை திரு.அ.நா.மொய்தீன் அவர்களே தனது நூலில்,

எங்கள் அறிக்கையைக் கரீம்கனி அவர்கள் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தமிழ்ச் சிறுவர் பாடசாலையைப் பற்றி மட்டுமே வானளாவ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே எங்களுக்கு பேசக்கூடிய வாய்ப்பையும் அவர் அளிக்க வில்லை. தமிழச் சிறுவர் பாடசாலையின் மேம்பாட்டுக்காக என்னென்ன செய்யப்படும் என்பதை விவரித்துக் கொண்டிருந்த அவர் இறுதியாக எங்களின் அறிக்கையைப் பத்திரிக்கை யில் பிரசுரிக்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறியும் விட்டார்

என்று எழுதியுள்ளார். மேலும் திரு.அ.நா. மொய்தீன் அவர்கள்,

உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளிக்கூடம் சம்பந்தமான அறிக்கையை கரீம்கனி பிரசுரிக்க மறுத்தது எங்களுக்குப் பலத்தை ஏமாற்றத்தை அளித்தது. ஏழு மொழிகளை அறிந்த அறிஞர் எனப் போற்றபட்ட அவரின் இந்தப் போக்கிற்குக் காரணம் என்னவென்றும் தெரியவில்லை. ஒரு சமயம் ஆரம்பத்திலிருந்து தன்னைக் கலந்து கொள்ளாமல் பள்ளிக்கூடம் நடத்தவும் பள்ளிக் கூடத்திற்கான புதிய கட்டிடம் கட்டவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டிருந்தது அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

கரீம் கனி அவர்கள் என்னைக்காட்டிலும் மிக அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர். அடிக்கடி தேநீர் அருந்தும் சுபாவம் உடையவர். எளிதில் முன்கோபமடையக் கூடியவர். எங்களின் அறிக்கையை அவர் பிரசுரிக்க மறுத்ததும் அதே அறிக்கையை நாங்கள் தமிழ் முரசு பத்திரிக்கை ஆசிரியர் கோ.சாரங்கபாணியிடம் கொடுத்தோம். எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அதனை, அவர் அப்படியே பிரசுரித்திருந்தார். 1949 பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தமிழ் முரசில் அறிக்கை பிரசுரமான பிறகு அதே மாதம் 22 ஆம் தேதி மேக்ஸ்வெல் ரோட்டில் பள்ளிக் கூடம் கட்டுவதற்குரிய இடம் ஒதுக்குவதற்கு அரசாங்கம் முன் வந்திருப்பது பற்றிய கடிதம் கிடைத்தது

என்று மலாயா நண்பனையும் தமிழ்முரசையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

Pin It

ஒன்றுபட்ட மலாயாவில் 40 கல்வித்துறையில் மலர்ச்சியை ஏற்படுத்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் அங்கு வாழும் இனமக்களின் மொழியின் அடிப்படையில் சீன மொழிக்கும் மலாய் மொழிக்கும் இடம் அளிக்கப்பட்டது. மேலும் மூன்றாவது பெரிய இன மக்களான இந்தியத் தமிழர்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்தியர்களுக்கான பகுதி ஏற்படுத்த வேண்டும் என்று கார் சாண்டர்ஸ் குழு கருதியது. அப்போது மலாயாவில் 6 இலக்கம் தமிழர்கள் இருந்தார்கள். எனவே இந்தியப் பகுதியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதோடு பழமையும் வளமையும் வாய்ந்த மொழி. மேலும் மொழியோடு தமிழர்களின் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏராளமான இலக்கியங்களையும் கொண்ட மொழி என்று அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்:

1. மலாயாவில் வாழும் தமிழர்களில் 70 விழுக்காட்டினர் மலாயாவில் பிறந்தவர்கள். 1938 ஆம் ஆண்டிற்கு பிறகு குடியேற்றம் இங்கு இல்லை.

2. பலருடைய வீட்டுமொழி தமிழாகவே இருந்தது. தோட்டங்களில் உள்ள பாடசாலைகளில் 7 ஆம் வகுப்பு வரை தமிழ்க் கல்வி வழங்கப்பட்டு வந்தது. இருந்தும் 3 ஆம் வகுப்புக்கு மேல் யாரும் பாடசாலைகளில் கல்வி பயில வில்லை.

3. உயர் வகுப்பு நிலைகளில் தமிழ் படிக்க வசதியில்லை. எனவே அவர்கள் உயர் படிப்புக்காக இலங்கைக்கோ இந்தியாவுக்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பகுதி ஏற்படுத்தப்பட்டால் இந்த செலவுமிக்க வெளியேற்றம் தவிர்க்கப்படும்.

4. கீழ்நிலைப் படிப்புகளுக்கு மலாயா சிறந்த மொழியாக இருக்கும் நிலையில் இந்திய மொழிகளில் ஒன்றாவது சேர்க்கப்பட வேண்டும். அதுவும் பெருமளவில் தேவையாயிருக்கக் கூடிய மொழி தமிழ்.

இத்தகைக் கருத்துக்களை இக் குழு தெரிவித்த பின்னர், இதனடிப்படையில் ஆலோசனை வழங்க இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு. நீலகண்ட சாஸ்திரியார் அழைக்கப்பட்டிருந்தார். இதனடிப்படையில் மலாயா வந்திருந்த நீலகண்ட சாஸ்திரியாருக்கு மலாக்கா நாட்டுக் கோட்டை செட்டியாரகள் சங்கம் அவருக்கு வரவேற்பளித்திருந்தது.

அவ்வரவேற்பில்,

இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள். இந்நாட்டில் எழிலும் வளமும் மிக்கதொன்றாகச் செய்த பெரும் தொண்டு அவர்களையே சாரும். இந்நாட்டில் மலாயா என்ற பேரே தமிழர்களின் பண்பாடும் இந்நாட்டு மக்களின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து இன்று சிறப்புற விளங்குகின்றது என்பதும் சரித்திரம் பகரும் உண்மைகளாகும். ஆதலின் பல்கலைக் கழகத்தில் தொடங்க இருக்கும் இந்தியப் பகுதி இங்கு வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினராக இருக்கும் தமிழர்களின் எதிர்கால நலனுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில் அமைவதே சாலச் சிறப்புடைத்து.

இந்தியப் பகுதியில் தமிழ், வடமொழி,ஹிந்தி என்ற மூன்றில் இந்நாட்டின் நலனுக்குத் தொண்டாற்றியவர்களும் இன்று வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினரும் தமிழர்களேயாதலால் தமிழ்ப் பகுதியையே தொடங்குதல் வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். தொடர்ந்து நிலைத்து நின்று பெரும் பயன்தரும் வகையில் தங்கள் அறிவுரை அமைதல் வேண்டுமெனில் இந்தியப் பகுதி தமிழ்ப் பகுதியாக இருத்தலே ஏற்புடைத்து.

இன்று நாட்டில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் கருத்தும் விருப்பமும் வேண்டுகோளுமதுவே என்பதைத் தாங்கள் இவண் வந்ததிலிருந்து அறிந்து கொண்டிருக்கலாம்.

தங்கள் அறியவுரையால் இந்தியப் பகுதி தமிழ்ப் பகுதியாகத் திகழுமாயின் இங்கு வாழும் தமிழர்கள் தங்கள் மொழி வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் உதவி புரியும். தங்கள் செயலுக்கு என்றும் நன்றி செலுத்துவது உறுதி. ஆதலின் இலக்கியமும் பண்பாடும் மிக்க தமிழ்ப் பகுதி இந்நாட்டுப பல்கலைக் கழகத்தில் இடம்பெறுமாறு தங்கள் அறிவுரை அமைதல் வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்

என்று கூறியிருந்தனர். இருந்த போதிலும் ஏற்புரை நிகழ்த்திய நீலகண்ட சாஸ்திரி அவர்கள்,

மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு தனி ஸ்தானம் ஒதுக்க இயலா தென்றும் தமிழுக்கென்று கேட்டால் ஹிந்தி வேணுமென்ற கிளர்ச்சி அதிகப்படுமென்றும் சமஸ்கிருதம், தமிழ் வகுப்புகள் ஏற்படுத்தி அதில் ஒருவர் பேராசிரியராகவம் மற்றவர் விரிவுரையாளராகவும் நியமிக்கப் படலாமென்றும் அதன் மூலம்தான் தமிழுக்கு ஆதரவிருக்கு மென்றும் மேல் கண்ட திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்படுமானால் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமென்றும் கூறினார்.

இவருடைய இப்பேச்சினால் ஏமாற்றமடைந்த மலாயாத் தமிழர்கள் அவருக்கு எதிராக கொதித்து எழுந்தனர். இவரின் இப்பேச்சைக் கண்டித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள், சாஸ்திரியாரின் மலாக்காப்பேச்சு என்று தலைப்பிட்டு, தமிழ்முரசு 23.04.1953 நாளிதழில்,

‘பேராசிரியர் சாஸ்திரியார் மேற்கண்டவாறு பேசியிருப்பாரேயானால் அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு தனி ஸ்தானம் ஒதுக்க இயலாதென சாஸ்திரியார் கூறுவது தவறு என்பதை கார் ஸாண்டர்ஸ் அறிக்கையே பளிச்சென்று எடுத்துக் காட்டும். அந்த அறிக்கையில் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி தமிழ்மொழி விரிவுரையாளர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால் மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு தனி ஸ்தானம் ஒதுக்க இயலாதென சாஸ்திரியார் சொல்வது சுத்தப் பொய் என்பது தெளிவு’

என்று கடுமையாக எழுதியிருந்தார். மேலும் 24.4.1953 ஆம் நாளைய தலையங்கத்தில், ‘சாஸ்திரியாரின் மேஸ்திரி வேலை என்ற தலைப்பில்,

தமிழுக்கு மட்டும் மலாயா பல்கலைக் கழகத்தில் இடமா என்று எண்ணியவர்களும், தமிழ், தமிழர் என்ற பெயர் மட்டில் மலாயா பல்கலைக் கழகத்தில் இடந்தேட வேண்டுமென்று கருதிய வர்களும் இப்பிரச்சனையில் தலையிட்டனர். மொழி விசயத்திலும் பல்கலைக் கழகப் படிப்பு வி­யத்திலும் சச்சரவு வேண்டாம் அதைப் பார்த்து இதரர்கள் நகைக்கவும் இடமளிக்க வேண்டாம் என்று எண்ணிய தமிழ்ப் பகுதி போர்டார் தமிழ்ப் பகுதி என்ற பெயருக்குப் பதிலாய் இந்திய பகுதி என்று பெயரமைக்க ஒப்புக் கொண்டனர். அதோடு அந்த இந்தியப் பகுதியின் தலைவர் தமிழ்ப் பேராசிரியராக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தனர். இவைகளை நிர்ணயம் செய்த பின்னரே திரு. நீலகண்ட சாஸ்திரியார் அவர்களை வரவழைத்து இந்தியப் பகுதிக்கானப் பாடத் திட்டம் வகுத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டது. திரு.சாஸ்திரியாரை வரவழைப்பது பணச் செலவான காரியம் என்று மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அபிப்ராயப் பட்டனர். அந்த அபிப்பிராயத்தின் காரணமாய் இந்தியப் பகுதி அமைப்பும் தமிழ் படிப்பிற்கான ஏற்பாடும் நீண்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு விடுமென்று எண்ணிய இந்தியப் பகுதி போர்டார் திரு. சாஸ்திரியாரை விரைவில் வரவழைத்து இந்திய பகுதியின் அமைப்பிற்கு விரைவாக வழிவகுக்க விரும்பினர். இவ்வாறான முறையில் மலாயாவிற்கு விஜயமளித்திருக்கும் திரு. சாஸ்திரியார் தேவையில்லாப் பேச்சுகளைப் பேசி மலாயா இந்தியர்களிடையே வம்பை வளர்த்து விடுவது தகாத காரியம் என்று கூறுவோம்’.

என்றும் சாடியிருந்தார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் சீன, மலாய்ப் பகுதிகள் இவ்வாண்டு ஆரம்பிக்கப் படும். ஆனால் இந்தியப் பகுதி 1954 அக்டோபரில்தான் ஆரம்பிக்க இயலும் என்று துணை வேந்தர் சர் சிட்னி கெயின் பத்திரிகையாளரிடையே அறிவித்தார். தேவையான சிப்பந்திகள், பணம், மற்ற ஏற்பாடுகள் ஆகியவை பூர்த்தியடைந்து விட்டால் 1954 அக்டோபரில் இந்திய பகுதி இயங்கத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பது இன்னும் ஒருவருடத்திற்கு தள்ளிப்போடப் படுகிறது என்ற அறிவிப்பு இந்தியர்களிடையே ஒரு சோர்வையும் அதற்கான காரணத்தையும் அறிய ஆவல் ஏற்பட்டது. நீலகண்ட சாஸ்திரியார் அளித்த அறிக்கையின் படி இந்தியப் பகுதி எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு யாராலும் வெளிப்படையாகச் சொல்லப்பட வில்லை. சாஸ்திரியாரின் மலாக்கா பேச்சும் இன்னும் பிற இடங்களில் பேசியப் பேச்சும் பல அய்யங்களை இந்தியத் தமிழர்களிடையே தோற்றுவித்துவிட்டன.

எனவே இது குறித்தும் தமிழ்முரசு சார்பில் துணைவேந்தர் அவர்களிடம், ,தமிழுக்குச் தனி ஸ்தானம் கிடையாதென்றும், சமஸ்கிருதமும் தமிழும் சேர்ந்த பகுதியை ஏற்றாலன்றி இந்தியப் பகுதியே ஏற்படாதென்றும் மலாக்காவில் சாஸ்திரியார் சுட்டிக் காட்டப்பட்டபோது, மலாக்காவில் திரு.சாஸ்திரியார் பேசியது பற்றிய தப்பபிப்ராயமாக இருக்க வேண்டுமென்று சர் சிட்னி குறிப்பிட்டார். அச் செய்தியில் குறிப்பிட்டிருப்பது போன்ற எண்ணம் பல்கலைக் கழகத்திற்கோ பேராசிரியர் சாஸ்திரியாருக்கோ கிடையாது என்றார் துணை வேந்தர்.

கார் ஸாண்டர்ஸ் சிபாரிசுக்கு மாறுபட்டதாக பேராசிரியரியர் சாஸ்திரியின் சிபாரிசு இருக்குமானால் பல்கலைக் கழகமும் கல்வி போர்டும் அதனை ஏற்குமா என்று தமிழ்முரசு நிருபர் கேட்டதற்கு அத்தகைய மாறுபாடு எழாது என்றும் அப்படி எழுந்தால் கல்வி போர்டு அது பறறி முடிவு செய்யுமென்றும் சர் சிட்னி பதிலளித்தார். (தமிழ் முரசு செய்தி)

இது குறித்து தமிழவேள் அவர்கள் 26.4.1953 ஆம் நாளைய தமிழ்முரசு இதழில்,

‘திரு. சாஸ்திரியாரின் பேச்சைக் கேட்டவர்களில் பலரும் அவருடன் சம்பா­னை நடத்தியவருள் பலரும் அவர் ஒரு சமஸ்கிருதப் பிரசாரகர் என்ற அபிப்பிராயம் கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தப்பெண்ணங்கள் தோன்றுவது இயல்பேயாகும். இந்த தப்பெண்ணங்களைப் போக்க யாராவது ஏதாவது செய்வார்களா என்று எதிர்பார்க்கிறோம். அல்லது பேராசிரியர் சாஸ்திரியார் அவர்கள் ஒரு அறிக்கையின் மூலம் தம்மைப் பற்றியும், மலாயாவிற்கு தாம் வந்த காரியத்தைப் பற்றியும் யாரும் தப்பெண்ணங் கொள்ள வேண்டாம் என்பதற்கான நியாயங்களை கூறுவாரா என்றும் எதிர்பார்க்கிறோம். மலாயா இந்தியர்களைப் பற்றி திரு.சாஸ்திரியார் தப்பெண்ணத்தோடு இந்தியா திரும்புவதும் திரு. சாஸ்திரியாரைப் பற்றி மலாயா இந்தியர்கள் தப்பெண்ணங் கொண்டிருப்பதும் சரியல்ல என்பதே நமது எண்ணம்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சாஸ்திரியார் அவர்களும் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அவ்வேண்டுகோளில்,

‘மலாயா பல்கலைக் கழகத்தில் உத்தேசிக்கப்படும் இந்திய இலாகாவில் தமிழ் மொழிக்குரிய இடம் பற்றிய என் கருத்து சம்பந்தமாக பத்திரிகைச் செய்திகளையும் அபிப்ராயங்களையும் கண்டேன். மிகப் பெரும் பாலான தமிழர்களையுடைய இந்திய சமூகத்திற்குப் படிப்பு மொழியாக தமிழுக்குள்ள முக்கியத்துவத்தை என்னுடைய சிபார்சுகள் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்பதை மலாயா இந்தியர்களுக்கு உங்களுடைய பத்திரிகை மூலம் உறுதி கூற விரும்புகிற¼ன். அபிப்பிராய பேதத்திற்கிடமே இல்லை என்பதை என்னுடைய சிபாரிசு வெளிவரும் பொழுது அவர்கள் உணர்வார்கள்’

என்று கூறியிருப்பதாக தமிழ்முரசு 30.4.1953 இதழ் தலையங்கத்தில் கூறியிருந்தது.

சாஸ்திரியார் இவ்வாறு அறிக்கை வெளியிடுதற்குக் காரணம் சிங்கப்பூரில் அவருக்கு எதிராக நடந்த கண்டனக் கூட்டம் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புமே காரணமாகும். இச்செய்தியை தமிழ்முரசு நாளிதழ் (27.04.1953) அன்று கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றது:

நீலகண்ட சாஸ்திரியார் போக்கிற்கு சிங்கப்பூர் தமிழர்கள் கண்டனம்!

பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு முதலிடம் தந்தாக வேண்டுமென வற்புறுத்தல்

தமிழர்கள் ஒன்றுபட்டால் எல்லோரும் மதிப்பார்கள்; இல்லையேல்....

பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரை காணவும் அவருடைய கருத்தையறியவும் ஆவலோடு நேற்று இராமகிருஷ்ணா மிசன் ஹாலில் கூடிய ஏராளமான தமிழ் மக்கள் அவர் கடைசி நேரத்தில் பேச மறுத்து விட்டதைக்கேட்டு ஏமாற்றமும் கோபமும் அடைந்தனர்.

தமிழர் சங்கத்தின் சார்பில் கூட்டப்பட்டிருந்த அக் கூட்டம் சாஸ்திரியார் வர மறுத்ததை ஆலோசிக்கும் தமிழர்களின் பொதுக் கூட்டமாக மாற்றப்பட்டது. திரு. சாஸ்திரியார் மீது ஒரு கண்டனத் தீர்மானமும் ஏகமனதாக கூட்டத்தில் நிறைவேறியது.

நிறைவேறிய தீர்மானமாவது:

சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க 26.4.53 இல் தமிழர் பொதுக் கூட்டமொன்றில் பேச ஒப்புக்கொண்ட பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் அன்று பகல் வரை அவரின் ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நிறை வேற்றிக் கொண்டிருந்து விட்டு குறிப்பிட்ட தமிழர் கூட்டத்திற்கு மட்டும் வர முடியாதென சீட்டனுப்பி சிங்கப்பூர் தமிழ் மக்களை அவமானப்படுத்தியதால் அவரின் இச் செயலை சிங்கப்பூர் தமிழர்களின் இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நோரிஸ் ரோடு இராமகிருஷ்ண மிசன் ஹாலில் தமிழர் சங்க ஆதரவில் அதன் தலைவர் திரு.ஜகனாதன் தலைமையில் பேராசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரியார் ‘தமிழர் சரித்திரமும் பண்பும்’ என்ற தலைப்பில் பேசுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஏராளமான மக்கள் குறித்த நேரத்தில் ராமகிருஷ்ணா ஹாலிலும் வெளியிலும் இடம் நிறைந்து விட்டதால் கட்டிடத்தின் கீழே சாலையிலும் குழுமி யிருந்தனர்.

வராததற்குக் காரணம்:

ஆனால் சங்கத்தின் காரியதரிசி திரு. எஸ்.வீராசாமி, பேராசிரியர் சாஸ்திரியார் கால்வலியின் காரணமாக கூட்டத்திற்கு வர முடியாதென கடிதம் எழுதியிருப்பதாக ஒலி பெருக்கியில் அறிவித்தார். திரு. சாஸ்திரியார் கூட்டத்திற்கு வராதது கால் வலி காரணம் என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதாயில்லை என்று சொல்லி பேராசிரியரே தான் முதல் நாள் மாலை காந்தி ஞாபகார்த்த கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் அன்று காலை கூட ரேடியோ மலாயாவுக்குச் சென்று ஒரு பேச்சை பதிவு செய்து விட்டு வந்ததாகவும் மறுநாள் மலாயா பல்கலைக் கழகத்தில் நிச்சயமாகப் பேச போவதாகவும் தன்னிடம் சொன்னதாக திரு. வீராசாமி தெரிவித்தார். தமது உடல்நிலையின் காரணமாக பேராசிரியர் விருந்துகளில் கலந்து கொள்வதையோ மற்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதையோ நிறுத்த வில்லை என அவர் குறிப்பிட்டார்.

திரு. நீலகண்ட சாஸ்திரியார் தமிழர் சங்க காரியதரிசிக்கு எழுதியிருந்த கடிதத்தில் உங்கள் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு நான் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தோனே´யாவில் என் சுற்றுப் பிரயாணத்தின் போது வலக்காலை மிகவும் வருத்திக் கொண்டு விட்டேன். மேலும் நோவச் செய்யும் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாமென டாக்டர் ஆலோசனை கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கூட்டத்திற்கு வந்திருப்பவர்களில் சிலரே தமிழர் சங்கத்தில் அங்கத்தினர்களாதலால், ஏராளமான தமிழர் நிறைந்திருக்கும் இக்கூட்டத்தை தமிழ் மக்களின் சார்பிலே நடத்தலாம் என்று தமிழர் சங்கத் தலைவர் திரு. ஜெகனாதன் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் சார்பில் திரு.சாரங்கபாணியைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்கையில் சாஸ்திரியார் இக்கூட்டத்திற்கு வராததன் மூலம் தமிழ் மக்களை அவமானப்படுத்தி விட்டார் என்று குறிப்பிட்டார்.

தலைமை வகித்துப் பேசுகையில் திரு.சாரங்கபாணி சொன்னதாவது:‡ சிங்கப்பூர் தமிழ் மக்களிடம் அறிமுகம் செய்து கொள்ளவும் அபிப்ராயத்தைப் பரிமாறிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒரே கூட்டத்தில் சாஸ்திரியார் கலந்து கொண்டிருந்தால் கெளரவமாய் இருந்திருக்கும். படிப்பாளியான அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் இன்புற்றிருப்பர். அவர் உடல் நலத்தைக் காரணம் காட்டி வர இயலாது என்று கடைசி நேரத்தில் கூறியதை எவரும் ஒப்புக் கொள்ள முடியாது. தமிழ் மக்களைச் சநதிக்க சாஸ்திரியாருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவர் இரண்டு மூன்று நாட்களில் ஊருக்கு போவதற்கு முன்பு சம்மதம் தெரிவித்தால் அவர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ய தமிழ் மக்கள் தயாராயிருக்கின்றனர்.

தமிழுக்கு முதலிடம் தருக:

இப்பொதுக் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டிய வி­யம் என்னவென்பது பற்றி தலைவர் கூட்டத்தினரைக் கேட்டார். திருவாளர்கள் எஸ். வீராசாமி, சின்னப்பனார், நாகராசன், து. லெட்சுமணன், சோமசுந்தரம், சி.த. ஆதிமூலம், எம்.கே. பக்ருதீன், சு.கிருஷ்ணன், சு.தெ. மூர்த்தி, ம.ப.ரத்தினசாமி, நடராசன் ஆகியோர் பேசினர். சனிக்கிழமை மாலையும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பேராசிரியர், தமிழர் கூட்டத்திற்கு வராதது பற்றி வருத்தம் தெரிவித்தனர். மலாக்காவிலும் கோலாலம்பூரிலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தனியிடம் தர இயலாதென அவர் பேசிய செய்திகளில் பேச்சாளர்கள் சஞ்சலம் தெரிவித்தனர். தமிழுக்கு முதலிடம் கொடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களின் கண்டனத்தை பேராசிரியர் சாஸ்திரியாருக்குத் தெரிவிக்க வேண்டுமென்று அவர்கள் கோரியதற்கிணங்க தீர்மானத்தை தலைவர் பிரரேபிக்க ஏகமனதாக கூட்டத்தினர் நிறைவேற்றினர்.

சந்தேகம் வளர்ந்த விதம்:

தலைமை வகித்த திரு.சாரங்கபாணி தமது முடிவுரையில் சொன்னதாவது:

‘சாஸ்திரியார் பற்றிய சந்தேகம் வளர்ந்திருப்பதற்கு அவர் தமிழ் மக்களை சந்திக்காமை ஒரு காரணம். அவர் பெடரேசனில் குறிப்பாக மலாக்காவிலும், கோலாலம்பூரிலும் தெரிவித்த கருத்துகளும் சந்தேகத்தை அதிகப்படுத்தின. கோலாலம்பூர் ஆங்கிலப் பத்திரிகையான மலாய் மெயிலுக்கு பேராசிரியர் அளித்த பேட்டியில், இந்தியர்கள் தங்களுக்கிடையே உள்ள தகராறைத் தீர்த்து வைக்குமாறு என்னைக் கேட்டுக் கொள்வதிலேயே என் நேரத்தை வீணாக்கி விட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். பிறகு இநதிய அராசாங்க தகவல் அதிகாரி ஒரு மறுப்பு அனுப்பினார். அதில் இந்தியர்களிடையே அடிப்படையான அபிப்ராய பேதம் இருப்பதாக சொல்லவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இந்த காரணங்களினால் இங்கு நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை பேராசிரியர் சாஸ்திரியாருக்கும் இந்திய அரசாங்க பிரதிநிதிக்கும் அனுப்ப வேண்டும்’ என்று திரு. சாரங்கபாணி பிரரேபித்ததை கூட்டம் ஏகமனதாக ஆமோதித்தது.

கவலை வேண்டாம்:

தொடர்ந்து தலைவர் பேசுகையில் சொன்னதாவது:

‘தமிழுக்கு மலாயா பல்கலைக் கழகத்தில் இடம் கிடைக்காது போய்விடுமோ என்ற அச்சத்தை நீக்குமாறு உங்களைக் கோருகிறேன். பல்கலைக் கழக கல்வி போர்டு அங்கத்தினன் என்ற முறையில் உங்களுக்கு இந்த உறுதியை நான் சொல்ல முடியும். இந்திய பகுதியில் தமிழுக்கு முதலிடம் இல்லாது போகவே போகாது. அப்படி முதலிடம் மறுக்கப்படுமானால், தமிழுக்கு முதன்மையிடம் கிடைப்பதற்காக தமிழ் மக்கள் சார்பில் எல்லா முயற்சியும் செய்வதாக உறுதி கூறுகிறேன். இந்த நாட்டுக்குப் பயன்படக் கூடியது இந்திய மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான். அரசாங்கமும் இதனை ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தைத் தவிர மக்கள் மொழியாக அரசாங்கம் அங்கீகரித்து ஆதரவு காட்டும் மொழிகள் தமிழ், மலாய், சீனம் என்பதை யாரும் மறுக்க முடியாது’.

‘மலாயா பல்லைக் கழகத்திற்கு பொதுமக்களிடம் நிதி கேட்கப்பட்ட பொழுது முதன் முதலாக பணம் கொடுத்தது ஒரு தமிழ் இளைஞர். தமிழுக்கு முதலிடம் தருவதாக பல்கலைக் கழகம் தீர்மானம் செய்து போதிய பணமின்மையால் சில ஆண்டு களுக்கு இந்தியப் பகுதி ஆரம்பிப்பதை ஒத்தி வைக்கிறோம் என்று சொன்னால் நாம் என்ன செய்வது?’

அவன் கூட மதிக்க மாட்டான்:

‘சாஸ்திரியார் சொன்னது தப்பு, சமஸ்கிருதம் வேண்டாம் என்று கூச்சல் போட நமக்குத் தெரிந்தால் மட்டும் போதாது’.

‘நாம் செய்ய வேண்டுவது என்ன என்ற பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். சாஸ்திரியார்களோ மற்ற கோஷ்டியார்களோ அலட்சியம் செய்கிற நிலையில் நாம் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கலாகாது’

‘தமிழர்களிடம் சக்தியிருக்கிறது. உணர்ச்சியிருக்கிறது. ஒன்றுபட்டு அவற்றை செயல் முறையில் திருப்ப வேண்டும். தமிழர் , தமிழ் மொழி சம்பந்தப் பட்ட எந்தக் காரியத்திலும் உற்சாகம் காட்ட வேண்டும். ஆயிரக் கணக்கில் திரள வேண்டும். அப்படியிருந்தால் யாரும் தமிழரை எளிதாக நினைக்க மாட்டார்கள். ஓராயிரம் இளைஞர்களாவது தமிழ் சேவை செய்ய வருவோம் என்று உறுதி கூற வேண்டும். அப்பொழுதுதான் தமிழனுக்கு எதிர்கால வாழ்வு உண்டு. இல்லையேல் தமிழரை சாஸ்திரி மட்டுமல்ல பேச்சா காடிக்காரன் கூட மதிக்கமாட்டான்’. (தமிழ்முரசு 27.04.1953).

இறுதியில் நீலகண்ட சாஸ்திரியாரின் சமஸ்கிருதத்தை மலாயாப் பல்கலைக் கழகத்தில் புகுத்தும் முயற்சி தோல்வியடைந்தது.

Pin It

தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை, முன்வைத்தவர். ஒப்பியல் நோக்கையும், சமூகவியற் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர். ‘கலை கலைக்காக’ என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர். இலக்கியத்திற்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர். சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்.

 kailasapathy_324தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றுநெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர். கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தீவிர முயற்சியில் ஈடுபட்டவர். ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகச் செயல்பட்டவர். சிறந்த கல்வியாளராக விளங்கியவர். கல்விக் கோயிலான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர். இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இத்தனை பெருமைக்கும் உரியவர். ‘ஈழம் தந்த கொடை’! கலாநிதி க.கைலாசபதி.

 மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி-தில்லைநாயகி நாகமுத்து வாழ்விணையருக்கு 05.04.1933 ஆம் நாள் கைலாசபதி பிறந்தார். இவரது தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்று முடித்தார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். ‘தமிழும் மேலைத் தேய வரலாறும்’ - என்பதைப் பாடமாகப் படித்தார்.

 பல்கலைக் கழகக் கல்வி முடிந்தபின் ‘தினகரன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலை கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.

 பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ‘நடமாடும் கலைக் களஞ்சியம்’ பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். ‘தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ‘கலாநிதி’ (முனைவர்) பட்டம் பெற்றார். இந்த ஆய்வும், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனின் அறிவார்ந்த வழிகாட்டலும் கைலாசபதியின் எதிர்கால எழுத்துப் பணிக்கான ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன.

 கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, கெல்டிக், ஐரிஷ் இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீர யுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

 ‘தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல் தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் ஆய்வு நூல்களில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது.

 மேலும், இவரது ஆராய்ச்சி நூலை, செக்கோஸ்லாவியத் தமிழறிஞர் ‘கமில் சுவலபில்’ தமது தமிழிலக்கிய வரலாற்று நூலில் விதந்து பாராட்டியுள்ளார்.

 தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

 ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக் கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும், மூன்று ஆண்டுகள் செயல்பட்டார். அமெரிக்காவிலுள்ள ‘அயோவோ பல்கலைக்கழத்திலும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக, யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் ‘புதியதைப் படைக்கும் எழுத்துக்களுக்குரியர்’ (குநடடடிற in உசநயவiஎந றசவைiபே) என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

 யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு, இலங்கைப் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.

 “இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்” என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.

 “கலை, இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சமூகவியலை பற்றுச் கோடாகக் கொள்ள வேண்டும். ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடைப்படையில் இருக்க வேண்டும்”. என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

 “உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்” என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.

 “மரபு வழிக் கலை வடிவங்களையும் அவற்றின் கூறுகளையும் நாடகம் என்னும் வரம்புக்குள் கொண்டு வந்து அதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிற நாட்டு நாடக உத்திகளையும் தக்க வண்ணம் ஏற்று, காலத்துக்கேற்ப மாற்றம் செய்தால் தமிழ் நாடகம் புத்துயிர் பெறும்” என்பது அவரின் நாடகக் கொள்கையாகும்.

 “குழந்தைகளின் வயது, மூளைவளர்ச்சி, மொழித்திறன், ஆற்றல், ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு குழந்தைகளுக்கான இலக்கியத்தைப் படைக்க வேண்டும் என்பார்.

 “தேசிய இலக்கியம் என்பது பிரதேச எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, சனநாயக நாட்டம், மனிதாபிமானம் என்ற ஐந்து தன்மைகளைக் கொண்டது. அது சமூகத்தை மாற்றிப் புதியதாய் அமைக்க வேண்டும் என்னும் இலட்சியத்தைக் கொண்டதாயும் உள்ளது. சமுதாய மாற்றத்துக்குப் பாடுபடும் பாணியிலேயே சகலவிதமான சனநாயக இயக்கங்களுடனும், போராட்டங்களுடனும் அது தன்னை அய்க்கியப்படுத்திக் கொள்கிறது. சாதியொழிப்புப் போராட்டத்திலிருந்து, கிராமியக் கலைகளின் புத்துயிர்ப்பு வரையிலான எண்ணற்ற செயல்களுடன் தேசிய இலக்கியம் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறது.” எனத் தேசிய இலக்கியம் பற்றித் தெளிவுறுத்துவார்.

 இலங்கையில் முற்போக்கு இலக்கியம், தேசிய இலக்கியம், மண் வாசைன இலக்கியம் ஆகியன அதனதன் இயல்போடு வளர பாடுபட்டவர்.

 “உணர்ச்சிவழி நின்று செயல்படுவதைவிட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை”- என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

 ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’, ‘தமிழ் நாவல் இலக்கியம்’, ‘ஒப்பியல் இலக்கியம்’, ‘அடியும் முடியும்’, ‘இலக்கியமும் திறனாய்வும்’, ‘கவிதை நயம்’, ‘சமூகவியலும் இலக்கியமும்’, ‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்’, ‘திறனாய்வுப் பிரச்சினைகள்’, ‘பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்’, ‘இலக்கியச் சிந்தனைகள்’, ‘பாரதி ஆய்வுகள்’, ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’, ‘இரு மகாகவிகள்’, ‘சர்வதேச அரசியல் நிகழ்வுகள்’ முதலிய நூல்களை, திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.

 சீன நாட்டின் அழைப்பினை ஏற்று தமது குடும்பத்தினருடன் அங்கு சென்றார். சீணப் பயனம் பற்றி, ‘மக்கள் சீனம் - காட்சியும் கருத்தும்’ என்ற நூலைத் தமது துணைவியாருடன் இணைந்து எழுதியுள்ளார். அய்ந்து ஆங்கில நூல்களையும் படைத்து அளித்துள்ளார்.

 இலங்கையிலிருந்து வெளிவந்த, ‘தொழிலாளி’, ‘தேசாபிமானி’, ‘செம்பதாகை’, ‘ரெட்பானர்’, முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில், சமூக இயல் முன்னேற்றத்திற்கான கட்டுரைகளை வடித்தார். பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க’த்தின் ‘இளங்கதிர் ’இதழிலும், இலக்கிய இதழான ‘மல்லிகை’யிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. இதழிலும், தமிழ்நாட்டு இதழ்களான ‘தாமரை’ ‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘செம்மலர்’, ‘தீக்கதிர்’, ‘ஜனசக்தி’, ‘ஆராய்ச்சி’, முதலியவற்றிலும் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார்.

 இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான தத்துவார்த்த நூல், கைலாசபதியின் ‘தமிழ்நாவல் இலக்கியம்’!. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகின்றது! இந்த ஆய்வு நூல், அறிவியல் அடிப்படையிலான சமூகவியல் அணுகுமுறையைக் கொண்டதாகும்.

 மார்ச்சிய அணுகுமுறையில் ஆய்வை மேற்கொண்டு தமிழ்ச் சமூக அரசியல் – பொருளாதார வளர்ச்சியினூடாகத் தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தினார், கைலாசபதி. ஆவர் கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் - எனப் பன்முகத்தன்மையுடன் விளங்கினார்.

 முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி க.கைலாசபதி, இரத்தப் புற்று நோயால் தாக்குண்டு தமது நாற்பத்தொன்பதாவது வயதில் 06.12.1982 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

 தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழநாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் இலக்கியத் திறனாய்வுத்துறையில் கலாநிதி க.கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றும் விளங்குவார்.!

குறிப்பு : 06-12-2010 அன்று கலாநிதி கைலாசபதி அவர்களின் 28 வது நினைவு தினம் ஆகும்.

Pin It