எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley) அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தின் டுபேலோ (Tupelo, Mississippi)  என்ற ஊரில், 1935 ல் ஒரு வெள்ளை ஏழைக் குடும்பத்தின் ஒரே மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோருடன் டென்னிசியிலுள்ள மெம்பிஸ் (Memphis, Tennessee) என்ற ஊருக்கு குடி பெயர்ந்தார்.

அங்கே ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தினர் வசிக்கும் பகுதியில், கூச்ச சுபாவமுள்ள, கிடார் வாசிக்கும் சிறுவனாக 'Blues' இசைத்தட்டுக் கம்பெனியைச் சார்ந்து வளர்ந்தார். அப்பொழுது அங்கு கனரக வாகனம் ஓட்டிப் பழக பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். இருந்தாலும், அவர் கிடார் வாசித்துப் பாடுவதில் மிகுந்த ஆர்வமாயிருந்தார்.

அதிர்ஷ்டவசமாக 1954 ல் ஒரு நல்ல நேரமும் வாய்ப்பும் அமைந்தது. அங்கே ஒருநாள் 'Blues' இசைத்தட்டுக் கம்பெனியின் வழக்கமான ஒலிப்பதிவின் இடைவேளையில், அந்தக் கம்பெனியின் பிரபலமான "That's All Right' என்ற பாடலை எல்விஸ் பாடுவதை, இசைத்தட்டுக் கம்பெனியின் உரிமையாளர் Sam Phillips கேட்க நேர்ந்தது.

அப்பொழுதுதான், ஒரு அழகிய தோற்றமுள்ள வெள்ளைச் சிறுவனிடம் 'Blues' ன் உணர்வைத் தூண்டும் பாடல்களைப் பாடக்கூடிய திறமை பளிச்சிடுவதை இசைத்தட்டுக் கம்பெனியின் உரிமையாளர் உணர்ந்தார். அதுவரை அத்தகைய சங்கீதம் கறுப்பினத்திற்கான பாணியாக அமைந்திருந்தாலும், எல்விஸ் பாடிய பாங்கு மக்கள் கேட்டதும், ஒரே இரவில் மிகவும் பிரபலமான நட்சத்திரப் பாடகரானார்.

இசைத்தட்டில் ஒளிப்பதிவு செய்ய அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1956 ல் அவர் பாடிய இசைத்தட்டு வெளிவந்தபோது, அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகப் பிரபலமான பாடகரானார்.  அந்த இசைத்தட்டில் அவர் பாடிய 'Heartbreak Hotel', 'Hound Dog', 'Love Me Tender'  என்ற பாடல்கள் மிகப் பிரசித்தம்.

அமெரிக்காவின் தலைசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிப் பாடும் அவரது ஒயிலான குரல், மிரட்டலான பார்வை, உந்துதலான சுழற்சியான ஆட்டம் ஆகியன இளைஞர்களை அவருடைய பாடல்கள் மீது பைத்தியமாக்கியது.

ஆனால், மூத்த ராக் பாடகரான பிராங்க் சி்நெட்ரா, அமெரிக்க     பழமைவாதிகள் சார்பில், எல்விஸ் பாடும் பாணியை ஏளனம் செய்து கோபம் கொண்டு, அவர் பாடும் இசைத் தன்மை வருந்தத்தக்க துர்நாற்றமுள்ளது என்றும், இளைஞர்களிடம் அழிவுக்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார். ஆனால், இளைஞர்களிடம் எல்விஸின் தனிப்பட்ட செல்வாக்கும், தங்கு தடையில்லா இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது தவிர்க்க முடியாததாகியது.

எல்விஸ் இசையில் கறுப்பர்களின் நாகரிக அடையாளம் இருந்தது என்றும், இணக்கமற்ற நிற வேறுபாட்டைத் தணித்து ஆசுவாசப்படுத்த உதவியது என்றும், வெவ்வேறு சமுதாயங்களுக்குப் பொதுவான நாகரீகத்தையும் உருவாக்கியது என்றும் கலிபோர்னியா யுனிவர்சிட்டியின் வரலாற்றாளர் Cheri Paris தெரிவிக்கிறார்.

1957 ல் எல்விஸ் ராக் சங்கீத நட்சத்திரமாக திகழ்ந்தபோது, Memphis ல் Graceland Mansion என்ற பெரிய மாளிகையை வாங்கினார். சினிமா நடிகராகி நான்கு வெற்றிப் படங்களையும் கொடுத்த முதல் ராக் பாடகரும் இவர்தான். 1958 ல் ராணுவ சேவையிலும் சேர்ந்து இரண்டாண்டுகள் ஜெர்மனி சென்றார்.

இவர் 1960 ல் ராணுவப் பணி முடிந்து திரும்பியபோது, ரயில் நிலையத்தில் இவரது ராக் இசை ரசிகர்களின் பெரும் கூட்டம் காத்திருந்தது. மீண்டும் இசைத்தட்டுகளில் பதியப்பட்ட 'It's Now or Never', 'Are You Lonesome Tonight' என்ற பாடல்கள் பி்ரபலமாயின. Graceland Mansion க்கு திரும்பியபொழுது அவருக்கு துணையாயிருந்த இளவயது Priscilla Beaulieu சில காலங்களில் அவருக்கு மனைவியாகவும் ஆனார். அப்படியே ரசிகர்களிடமிருந்தும் விலகி தனிமையை விரும்பி ஒதுங்கிவாழ்ந்தார். ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தவிர்த்தார். அவருடைய தொழில் நடவடிக்கைகளை Calonel Tom Parker என்ற நிர்வாகி கவனித்துக் கொண்டார்.

1960 லிருந்து 1969 வரை 27 படங்களில் நடித்தார். 1968 ல் எல்விஸ் பாடும் தொழிலில் விருப்பமின்றி, அவரால் உருவாக்கி வளர்க்கப்பட்ட  ஹிப்பி நாகரிகத்தையும் வெறுத்தார். ஏழு வருட இடைவெளிக்குப் பின் சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியாக ரசிகர்கள் முன் தோன்றினார். 

பெருகி வரும் ஹிப்பி நாகரிகத்திற்கும், போதை மருந்து உபயோகத்திற்கும் எதிராக, தனது புகழுடன் கூடிய மக்களிடம் உள்ள ஈர்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல விருப்பம் தெரிவித்து, தனது நாட்டுப்பற்று உணர்வை அன்றைய அமெரிக்க ஜனாதிபதி Richard Nixon க்கு கடிதம் மூலம் 1970 ல் வெளிப்படுத்தினார்.

எல்விஸின் Prisclla வுடனான திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்தது. அவர் உடலும் அளவுக்கதிகமாக பெருத்தது. அவர் தன்னம்பிக்கையை இழந்து, அதீதமான தூக்க மாத்திரைகளில் சரணடைந்து, 1973 லிருந்து சிறுகச் சிறுகத் தன்னை இழந்து கொண்டிருந்தார்.

இவர் 1953  - 1977 கால கட்டத்தில் சுமார் 800 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1963  - 1964 ல் நான் பார்த்த, 'Girls Girls Girls' படத்தில் வரும் 'Look Like An Angel' பாடல் எங்கள் மாணவ நண்பர்களிடம் மிகப் பிரபலம். 

1977 ல் அவர் ஒரு விபரீதமான கேலிச்சித்திரம் போல இருந்ததாக அவரின் வாழ்க்கை வரலாறு எழுதிய Tony Scherman கூறுகிறார். அதே ஆண்டின் ஆகஸ்டு, 16 ஆம் தேதி, காலை 6 மணிக்கு Racquetball விளையாடிச் சென்ற Rock 'n Roll இசை மன்னன் எங்கும் காணாமல், மதியம் 2.30  மணியளவில் (42 வயதில்) அவரது மாளிகையின் குளியலறைத் தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இவர் இறப்பிற்கு, இவர் நீண்ட காலமாக மருத்துவரின் ஆலோசனைப்படி, மிக அதிகமான - 10000 தடவைக்கு மேல் எடுத்துக் கொண்ட மயக்க மருந்துகள் (Narcotics-Morphine), மன அமைதிப்படுத்தும் மருந்துகள் (Tranquilliser), தூக்க மாத்திரைகள் (Ethinamate), Antihistamine மாத்திரைகள் (Chlorpheniramine) ஆகியவைகளின் கூட்டு விளைவே எனப்படுகிறது.    

எல்விஸ் இன்றும் தன பாட்டுக்களினாலும், அவர்தம் அழகிய  தோற்றத்தினாலும் ராக் இசைப் பிரியர்களின் மனம் கவர்ந்தவர்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

மாக்சிம் கார்க்கி - உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள்.

karky_370இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.

இளமைக்காலம்

கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது. அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது -

“என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார்.

அந்த இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதை அவர் தனது மனைவியிடமும் நண்பர்களிடம் மட்டும் பிற்காலத்தில் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதய வலிபற்றித் தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்து விட்டான் என்று அவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது உண்டு. அதற்காக அவர் வேதனைப்பட்டதில்லை. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து கார்க்கி நுகர வேண்டியிருந்தது. வெளியில் மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவித்தனர். வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையில் இருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.

முதல் கவிதை

ஒருமுறை கார்க்கி நேங்குரோத் நகரில் வாழ்ந்தபோது அவரது அறைக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான். அவன் நெடுநேரம் அந்த அறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு கார்க்கி விழித்துக் கொண்டிருந்தார். முதலில் திருடனின் தேடலை ரசித்த போதிலும் பின்பு அது அவன் மீதான பரிதாபமாக மாறியது. அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு திருடனைப் பார்த்து “நண்பனே, உனது முயற்சி வீணானது. கடந்த மூன்று மணிநேரமாக என் அறையில் நீ தேடிக் கொண்டிருக்கும் பொருளை நான் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாய்த் தேடி வருகிறேன். விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கக்கூடப் பணமில்லாமல் இருளில் தவிக்கிறேன். போயும் போயும் திருடுவதற்கு என் வீட்டுக்கு வந்தாயே. திருட்டுத் தொழிலுக்கு நீ புதியவரோ? சரி, எதற்கும் நாளைக்கு நீ பகலில் வா. இரண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்” என்று கூறினார். அதற்குப் பிறகு திருடன் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.

கார்க்கி முதன்முதலாகக் கவிதை எழுதியது வேடிக்கையான சம்பவமாகும். அது அவர் காசான் ரயில் நிலையத்தில் காவல்காரராக வேலை செய்தபோது நடந்தது. அங்கு அவரது அறைக்குப் பக்கத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கான சமையலறை இருந்தது. அங்கு ஒரு தடித்த சமையல் காரி பணியாற்றினார். வாலிபமிடுக்கும் உடற்கட்டும் மிக்க கார்க்கியை அந்தப் பெண் இரவு நேரங்களில் தொந்தரவு செய்து வந்தாள். அவளது தொல்லை குறித்து தொழிலாளர்களிடமும், ரயில் நிலைய அதிகாரி வரை கார்க்கி புகார் கூறினார். ஆனால் எவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

சமையல்காரப் பெண்ணின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கார்க்கி அது பற்றி ஒரு கவிதை எழுதினார். அதில் சமையல்காரியைப் பற்றி முதலில் வர்ணித்துவிட்டு, அவளிடம் சிக்கி ஒவ்வொரு இரவும் தான்படுகிற நரக வேதனையை நகைச்சுவை ததும்ப எழுதினார். அதில் ரயில்வே அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அது இருந்தது. கவிதையை எழுதி அதிகாரியிடம் கொடுத்தார். இருபது தினங்கள் கழித்து கார்க்கிக்கு ஊர் மாற்ற உத்தரவு கிடைத்தது. அக்காலத்தில் ஊர்மாற்றம் பெறுவது எளிதல்ல. அது சொர்க்கத்திற்கே சென்று திரும்புவது போன்றது. அதிகாரிகளுக்குக் கார்க்கியின் கவிதை புரியாத புதிராகவே இருந்தது. எனினும் ஊர் மாற்றம் செய்தனர்.

அவரது முதல் கவிதை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றது. தொழிலாளர்களும் அந்தக் கவிதையைப் படித்து கிண்டலும் கேலியும் சிரிப்புமாக இருந்தனர். ஊர் மாற்றத்திற்குப் பின்பு கார்க்கி தனது இரண்டாவது கவிதையை எழுதினார். “பழங்கமுகு மரத்தின் கீதம்” என்ற அந்தக் கவிதை எங்கும் பிரசுரமாகவில்லை. தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினார். எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன என்று அவர் கூறினார். எனது கவிதைகளில் மனிதனின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் துடிப்பு ஏனோ மந்தமாக உள்ளது என்று தனது நண்பர்களிடம் சுயவிமர்சனம் செய்துகொண்டார். இதனால் அவர் உயிரோடு வாழ்ந்த வரை அவரது கவிதைகளைத் தொகுப்பாக வெளியிட அவர் சம்மதிக்கவே யில்லை. அவர் இறந்த பின்புதான் அந்தக் கவிதைத் தொகுப்பு வெளியானது.

கார்க்கி முக்கியமான நூல்களைத் தவிர மற்றவைகளை ஒருமுறைக்கு மேல் வாசிப்பதில்லை. படித்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூடச் சொல்லுவார். படிக்கும் விசயங்கள் அவரது சிந்தனையில் ஆழமாய்ப் பதிந்திருந்தன. அவரது நினைவாற்றல் அபூர்வமானது. தனது பத்து வயதில் அவர் முதலில் வாசித்த ஹான்ஸ் ஆண்டர்சனின் சிறுவர் கதைத் தொகுதியிலுள்ள பல கதைகளை அவர் கடைசி வரை மறக்கவில்லை.

மகனின் மரணம்

கார்க்கிக்கு ரஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளும் தெரியும். கார்க்கியின் மகனுக்கும் ஐந்து மொழிகள் தெரியும். மகன் உதவியைக் கொண்டு கார்க்கி உலக இலக்கியங்கள் பற்றிய பல விமர்சனங்களையும், ஒரு விமர்சன நூலையும் வெளியிட்டார். பல நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து கார்க்கியின் மகன் தனது தந்தைக்கு எடுத்துரைப்பார். அதே போல் கார்க்கியின் கதைகளை ரஷ்ய மொழியிலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்த்து அனுப்புவதிலும் உதவினார். உலக நாடுகளிலிருந்து நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்கு மகனின் உதவியுடன் பதில் எழுதினார்.

பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக்லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர்சன், சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. கார்க்கி வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் தனது மகனையும் அழைத்துச் சென்றார். வெளிநாடுகளில் சாதாரண மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களைப் பற்றியும், வாழ்வு மற்றும் பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்வதில் அவரது மகனின் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவியது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள்பற்றி கார்க்கி கட்டுரைகள் எழுத இவை உதவியாக இருந்தன. ஆனால் கார்க்கியின் துரதிருஷ்டம் அவருக்குப் பேருதவிபுரிந்த மகன் 1934ஆம் ஆண்டு திடீர் மரணம் அடைந்தார். மகனின் மரணம் அவரை அடியோடு உலுக்கிவிட்டது. அந்தப் பாதிப்பு கார்க்கிக்கு இறுதிவரை தொடர்ந்தது.

உலகத் தொடர்புகள்

கார்க்கி ஒவ்வொரு நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிறநாட்டு இலக்கியங்களைப்பற்றி அந்தந்த நாட்டு எழுத்தாளர்களிடமே விமர்சனம் செய்வார். பாராட்டிப் புகழவும் செய்வார். ஒருமுறை இத்தாலி நாட்டு எழுத்தாளர்கள் கார்க்கியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உலக இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் கார்க்கியுடன் நீண்ட நேரம் விவாதித்தனர். பின்பு கார்க்கி அவர்களிடம் இத்தாலிய இலக்கியத்தின் ஜனநாயகம் பாரம்பரியம் பற்றியும், அதன் பரம்பரையாக வரும் இலக்கிய மாண்பு பற்றியும் நீண்ட சொற்பொழி வாற்றினார். இலக்கியம் பற்றிய அந்த இத்தாலிய எழுத்தாளர்களின் தவறான பார்வையைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இறுதியில் அவர்களிடம் “உங்கள் தாய்மொழியான இத்தாலியில் தொன்றுதொட்டு வந்துள்ள இலக்கியச் செல்வங்களை இன்னும் அதிகமாக நீங்கள் படித்தால் அனைவருக்கும் நல்ல பயன்கிடைக்கும்” என்று கார்க்கி கூறி அனுப்பினார்.

குடும்ப வாழ்க்கை

கார்க்கி தனது சொந்த வாழ்க்கையில் சிறந்த கணவராகவும் மதிப்பிற்குரிய தந்தையாகவும் வாழ்ந்தார். அவர் பெரும்பாலும் கோபமேபடமாட்டார். கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தவே முடியாது. தன் மனதில் பட்டதை நேருக்கு நேர் நின்று தைரியமாகச் சொல்வார். மகத்தான தலைவர் லெனினுக்கு முன்னால்கூட அவர் தனது கருத்தை அழுத்தமாய்க் கூறுவார். சமயங்களில் லெனினுடைய முடிவுகளுக்கு முரண்பட்ட கருத்துக்களைக் கூட அவரிடம் அழுத்தமாய்க் கூறுவதற்குத் தயங்கியதேயில்லை.

ஒருமுறை, ரஷ்யாவின் இருபதாம் நூற்றாண்டின் மகாகவி என்று புரட்சிக்கு முன்பு முதலாளித்துவ விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற சாலியாபினுக்கு சிறப்பு விழா மாஸ்கோவில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்குக் கார்க்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் முழுக்கப் பெரும் வணிகர்களும், பிரபுக்களும், அவரின் வாரிசுகளும் கலந்துகொண்டனர். கவிஞர் சாலியாபினைப் பற்றி அனைவரும் வானளாவப் புகழ்ந்தனர். இறுதியாக கார்க்கி பேசினார். மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த சாலியாவினைப் பார்த்து கார்க்கி “சாலியாபின், நீர் ஒரு சிறந்த அறிவாளி! ஆனால் உமது அறிவுத் திறனெல்லாம், கவிதை ஆற்றல் எல்லாம் சொகுசு வர்க்கத்தினரான பெரும் வணிகர்களின் அருமை மனைவிகளின் பட்டாடையிலும் பகட்டுத் தோற்றத்திலும் ஆழ்ந்து அமிழ்ந்து பாலைவனத்தில் இறைத்த நீராகி விடுகிறது. அன்பனே! இனிமேலாவது உன் கண்களைத் திறந்துபார். அனாதரமான, அடிமைப்பட்டுத் தவிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவத்துடிப்பளிக்க உனது சொற்களைச் சீராக்கு. அன்றுதான் நீ உண்மையிலேயே மாபெரும் கவிஞனாவாய்” என்று கூறினார். கார்க்கியின் பேச்சுக்கெதிராக வணிகர்களும் பிரபுக்களும் ஆவேசமாகவும் கடுங்கோபத்தோடும் கூக்குரல் கிளப்பினார். ஆனால் கார்க்கியின் ஓங்காரக் குரலின் முன்னால் அவை ஒடுங்கிப் போய்விட்டன.

கார்க்கியிடம் சில அபூர்வப் பழக்கவழக்கங்கள் இருந்தன. உதாரணமாக அவர் பேனாவால் எழுதுவதை வெறுத்தார். அவர் தனது படைப்புகளைப் பென்சிலால்தான் எழுதினார். அதற்காக அவர் விதவிதமான பென்சில்களை உபயோகப்படுத்தினார். தனது பென்சில்களை அவர் எப்போதும் கூர்மையாகச் சீவி வைத்திருப்பார். அவர் மேஜை முழுவதும் பென்சில்களைப் பரப்பி வைத்திருப்பார். ஒவ்வொரு வார்த்தையின் தகுதிக்கும், அவசியத்துக்கும், முக்கியத்துவத்திற்கேற்ப பென்சில்களை மாற்றி எழுதுவார். ஆனால் அவர் தட்டெழுத்து (டைப்ரைட்டர்) எந்திரத்தை மிகவும் விரும்பினார்.

அவர் படிப்பது பெரும்பாலும் படுக்கையில்தான். அவர் பத்திரிகை படிப்பது மட்டும் நாற்காலியில் அமர்ந்து படிப்பார். கார்க்கிக்கு எப்போதும் மிகச் சிறிய பொருள்களின் மீது தான் அதிக ஆசை இருந்தது. சிறிய சிற்பங்கள் மீது அவருக்கு மிகவும் பிரியம். அவர் பல நாடுகளுக்கும் பெரும் தொகை அனுப்பிச் சிறிய சிற்பங்களை வாங்கித் தனது படுக்கை அறையில் வைத்திருந்தார். சீனாவிலிருந்து நான்கு மாத உழைப்பில் உருவான ஒரு தந்தச் சிற்பத்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கினார். அதை அவர் கையிலெடுத்துப் பார்த்து ரசிப்பார். அந்தச் சீனச் சிற்பியின் உழைப்பையும் திறமையையும் பாராட்டினார். அந்தச் சிற்பத்தைத் தனது கலைக் கண்ணால் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார். உலகின் ஓட்டத்திற்கு உழைப்புத்தான் ஜீவசக்தி என்ற கருத்தில் கார்க்கி உறுதியாக இருந்தார்.

உழைப்புத்தான் உலகின் ஜீவசக்தி என்ற கருத்தைச் சில எழுத்தாளர்களிடம் பேசும்போது கூறினார். கலாசாரப் பண்பாட்டுக்கும் உழைப்புக்குமிடையே நிலவும் பிரிக்க முடியாத உறவைப் பற்றியும் அவர்களிடம் அழுத்தமாக எடுத்துரைத்தார். “கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்று உழைப்பின் பெருமையை எழுத்தாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார் கார்க்கி.

கலாசாரத்தைப் படைப்பவர்களும், உலகின் அனைத்து வகையான செல்வங்களையும் உருவாக்குவோர் மக்கள்தான். இந்த உண்மையை கார்க்கி தொடர்ந்து கூறிவந்தார். உழைப்பாளி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களின் போராட்டங்களிலிருந்தும்தான் உணர்வு பெற்றதாய்க் கூறினார். கணக்கற்ற நூற்றாண்டுகளில் மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் படைத்து உருவாக்கிய போற்றுதலுக்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களிலிருந்துதான் நான் உணர்வு பெற்றேன் என்றார். அதிலிருந்துதான் உற்சாகத்தையும் தனது மொழியையும், உருவகங்களையும் கற்பிதங்களையும் பெற்றுத்தான் கார்க்கி தனது அமர இலக்கியங்களைப் படைத்தார்.

எழுதக் கற்பித்த ஆசிரியர்

இளம் எழுத்தாளர்கள் மீது கார்க்கி மிகுந்த அக்கறை காட்டினார். அவர்களது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவர்கள் எழுதிய படைப்புகளைப் பொறுமையாய்ப் படித்து தனது கருத்துக்களைக் கூறித்திருத்துவார். கடிதங்கள் மூலமாகவும் எழுத்தாளர்களின் படைப்புகளை விருப்பு வெறுப்பின்றிப் படித்துக் கருத்துக்களை அனுப்புவார். அவர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விவாதங்கள் நடத்தி அவர்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பார். அவர்கள் எழுதிய கைப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பார்.

கார்க்கி தனக்கிருக்கும் அதிகமான இலக்கியப் பணிகளுக்கிடையே புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து, விமர்சனம் செய்து அவர்களிடம் நட்பு ரீதியாக எடுத்துக் கூறி வந்தார். அவர்களின் பிரியத்துக்குரிய வழிகாட்டியாகவும் தோழராகவும் கார்க்கி திகழ்ந்தார். மேலும் அவர்களது படைப்புகளைப் பல்வேறு பத்திரிகைகளுக்குச் சிபாரிசு செய்து பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.

புதிய எழுத்தாளர்களுக்கு கார்க்கி எழுதும் கடிதங்கள் நீளமாகவும், தெளிவாகவும், உணர்வூட்டுவதாகவும் இருக்கும். இதோ உதாரணத்திற்கு கார்க்கியின் ஒரு கடிதம்:

அன்புள்ள நண்பரே,

உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இவ்வளவு காரசாரமாகவும், உயிர்த் துடிப்போடும், சீரிய கவிதை மொழியில் இதை நீங்கள் எழுதியிருப்பதைக்கண்டு மகிழ்கிறேன். உங்கள் ஆற்றலும், கவிதைத் துறையில் உங்களுக்குள்ள நம்பிக்கையும் மேலும் பெருகவேண்டும். மனப்பூர்வமாய் இதயத்தின் அடியாழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன்.

உங்களுடன் ஒப்பிடும்போது வயது முதிர்ந்தவன் என்ற முறையில் நான் நல்லதொரு ஆலோசனையை வழங்கத் துணிகிறேன். எந்த நேரமும் அயராது உழையுங்கள். உங்கள் ஆயுதத்தைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். வற்றாத ஊற்றுப் போன்ற மக்களது செழுமிய, எழில் மிகுந்த இன்சுவை மொழியைத் தொடர்ந்து பயிலுங்கள். இம்மொழியிலிருந்து நீங்கள் மேதைமையோடும் ஆற்றலோடும் வெளிப்பட முடியும். நல்ல கருத்துகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைக்கும் வல்லமையைப் பெறமுடியும். எந்தச் சிறிய விஷயத்தையும் கவனியாது விட்டுவிடாதீர்கள். எதைப் பற்றியும் அஞ்சாதீர்கள். அனைத்தையும் துருவி ஆராயுங்கள். அரிய வகையான விசயங்களை அனைவருக்கும் பயன்தரக் கூடியவற்றை உங்களால் திறம்படக் கண்டறிய முடியுமென்று உறுதியாய்க் கூறுகிறேன்” என்று கடிதத்தை கார்க்கி முடித்துள்ளார்.

கார்க்கி தனக்குப் பின்னால் ஒரு எழுத்தாளர் பரம்பரையை உருவாக்க இப்படிப்பட்ட நட்புரீதியான விமர்சனங்களும் கடிதங்களும் விவாதங்களும் உதவிபுரிந்தன. தன்னை நேரில் வந்து சந்திக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு கார்க்கி ஒரு பொன்மொழியைக் கூறுவது வழக்கம். “அன்பர்களே, கவிஞர்களாகவும், நாவலாசிரியர்களாகவும் எழுத்தாளர் களாகவும் சிறந்து விளங்க வேண்டுமா? அந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் கனல்பறக்கும் இதயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவார்.

இந்தக் கனல் பறக்கும் இதயம் கார்க்கிக்கு அமைந்திருந்தது. மாமேதை லெனின் இதற்குக் காரணமாக இருந்தார். லெனின் கார்க்கியின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இருவரும் தனிமையில் பல மணி நேரம் பேசுவார்கள். சில நேரம் சண்டையிடுவது போல் பேச்சு உக்கிரமாக இருக்கும். கார்க்கி கதை சொன்னால் லெனின் அதைப் பிரியமாய்க் கேட்பார். ஒருநாள் கார்க்கி லெனினுக்கு ஒரு கதை சொன்னார்.

கதை இதுதான். புரட்சி வென்ற பிறகு பணக்காரச் சீமாட்டிகளுக் கெல்லாம் தலைவலி அதிகரித்தது. அப்போது ஜார் மன்னனின் நேரடி வாரிசு என்று கூறிக்கொண்ட ஒரு சீமாட்டி தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான வசதி இல்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள ஆற்றுக்குப் போனாள். தமது எஜமானி ஆற்றில் பாயப் போவதை அறிந்த நான்கு நாய்கள் அவளைக் கவ்விப் பிடித்துத் தடுத்தன. அதனால் சீமாட்டி தனது தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.

கார்க்கி இந்தக் கதையைக் கூறிவிட்டு லெனினுடைய கருத்து என்ன என்று கேட்டார். லெனினின் முகம் மாறிக் கண்கள் மேலும் கீழுமாய் கார்க்கியைப் பார்த்தன. சில வினாடிகள் கண்களை மூடித் திறந்துவிட்டு லெனின் அமைதியாகக் கூறினார். “இது கற்பனைக் கதையாக இருந்தால்கூட இதில் அடங்கியுள்ள கருத்து ஒன்றும் மோசமானதல்ல”, என்று கூறிவிட்டு “இது புரட்சி தந்த அருமையான கேலிக்கதை” என்று சிரித்தார். பின்பு கார்க்கியும் லெனினும் சேர்ந்து சிரித்தனர்.

கார்க்கி, லெனின் இருவரிடமும் ஒரு பொதுப் பார்வை இருந்தது. அவர்கள் இருவரும் தங்களை நன்கு அறிந்திருந்தனர். தாங்கள் பின்பற்றும் பாதை குறித்துத் தெளிவோடும் தேர்ச்சியோடும் இருந்தனர். லெனினைப் பற்றி கார்க்கிக்கு மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. கார்க்கி தனது மரணப்படுக்கையில்கூட லெனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தார். அதே போல் லெனினும் கார்க்கியை தனது உயிராக நேசித்தார். வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட லெனின் கட்சி உறுப்பினர்கள் மூலம் கார்க்கிக்குக் கடிதங்கள் எழுதிவந்தார். கார்க்கியும் லெனினும் சதுரங்கம் விளையாடுவர். அப்போது சிரிப்பும் கும்மாளமுமாய் இருவரும் ஆடுவர்.

இலக்கிய மேதை

ரஷ்ய இலக்கியத்தில் பிற எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது கார்க்கியே எல்லா வழிகளிலும் சிறந்து விளங்கினார். புஷ்கின், கோகோல், துர்கனேவ், டால்ஸ்டாய், லெர்மன்தோவ், கிராஸ்கோவ், ரேபின், லெஸ்கோ, ஆஸ்ட்ராவ்ஸ்கி ஆகிய ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை முழுமையாகப் படித்து கார்க்கி மனப்பாடம் செய்திருந்தார். அவர் டால்ஸ்டாயை ரஷ்ய மக்களின் உண்மையான தவப்புதல்வன் என்று கூறினார். புஷ்கின் பற்றி கார்க்கி “புஷ்கின் ரஷ்ய நாட்டின் மகத்தான கவிஞர். அவரது இலக்கியத் தொண்டு ரஷ்யாவுக்குப் பெருமை சேர்த்தது. புஷ்கின் அனைத்து ஆரம்பங்களின் ஆரம்பம்” என்று கூறினார்.

கார்க்கி அன்டன் செகாவ், மாயகோவ்ஸ்கி போன்ற தனது சமகால எழுத்தாளர்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்துகொண்டார். அந்த மாபெரும் கவிஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கார்க்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நேரம் கார்க்கி வெளியூரிலிருந்தார். பின்பு அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பாகவே அந்தக் கடிதம் கிடைத்திருந்தால் மாயகோவ்ஸ்கியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்று மிகுந்த துயரமடைந்தார். மாயகோவ்ஸ்கியின் வளர்ச்சிக்கு கார்க்கி அரும்பாடுபட்டவர். அதனால் அவரது மரணம் கார்க்கியை உலுக்கிவிட்டது.

கார்க்கி கணித நூல்களைத் தவிர மற்ற எல்லா நூல்களையும் படிப்பார். தத்துவம், ஆன்மிகம், உளநூல் ஆகிய நூல்களையும் பொறுமையாக வாசிப்பார். ஒருமுறை சில அமெரிக்க விஞ்ஞானிகள் அவரைக் காண வந்திருந்தனர். அவர்களுடைய ஒரு கேள்வி கணிதம் பற்றியதாக இருந்தது. அதற்கு கார்க்கி “கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை” என்று கூறினார்.

கார்க்கி குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவார். அவருக்குச் சிறுவயது முதலே அனாதைக் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவந்து பசியாற்றி அனுப்பும் பழக்கம் அவருக்கிருந்தது. 1898இல் அவரது கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளிவந்தன. அப்போது அவருக்குக் கிடைத்த பெருந்தொகையைக் குழந்தைகளுக்காகவே செலவிட்டார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பணம் கிடைத்தது. ஏராளமான குழந்தைகளைத் தனது வீட்டில் திரட்டி அவர்களுக்குப் புதுஉடைகள் விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து, விருந்து வைத்து ஒரு திருவிழாப் போன்று கொண்டாடினார். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி மகிழ்வித்தார். கார்க்கி வெளியில் செல்லும்போது பையில் இனிப்புகளைக்கொண்டுபோவார். வீதியில் நடமாடும் ஏழைகளுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டுத் திரும்புவார்.

கார்க்கியின் தனிப்பெரும் பண்பு தொழிலாளி, விவசாயி, ஏழை மக்கள் மீது அவருக்கிருந்த கரிசனம் தான். அவர்களுடைய வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த நம்பிக்கை அவரிடம் ஆழமாக அவரது பேச்சிலும் எழுத்திலும் இந்த நம்பிக்கை ஒளிவு மறைவின்றி வெளிப்பட்டது.

கார்க்கி வாலிபராக இருந்தபோது நீட்சேயின் கவிதைகளை ஆழ்ந்து படித்தார். அவைகளில் அவர் தனது தத்துவத்தை வெளிப்படுத்திஇருந்தார். “வீழ்ந்து கிடக்கும் மனிதனை மேலும் வீழ்த்தாட்டு” என்பது அவரது தத்துவமாக இருந்தது என்று கார்க்கி கூறினார். மேலும் அவர் தாஸ்தவெஸ்கி தனது இலக்கியத்தில் புகுத்தி இருந்த தத்துவம் “கர்வமுள்ள மனிதனே, சரணடைந்துவிடு” என்பதுதான். என்னுடைய தத்துவம் “வீழ்ந்து எழுந்திருக்கும் மனிதனைக் கைகொடுத்துக் தூக்கிவிடு” என்பதுதான் என்று கார்க்கி கூறினார்.

கார்க்கியின் துணைவியார் திருமதி பெஷ்கோவா அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒருமுறை கார்க்கியுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கிராமத்தில் அப்போது விவசாயிகள் நாற்று நடுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். கார்க்கி அவர்கள் வேலை செய்வதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நான் அவரைப் பரிவுடன் பார்த்தேன். அவர் “இருபதாண்டுகளுக்கு முன்பு நான் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறேன். இதே விவசாயிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மெலிந்த உடலையும், உக்கி உருகிப்போன கண்களையும், வறுமையில் வாடிய அவர்கள் நிலையையும் கண்டு அன்று நான் கண்ணீர் வடித்தேன். மனம் தாங்காமல் அன்று நான் கண்ணீர் விட நேர்ந்தது. ஆனால் இன்று நான் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். இன்று சோசலிச ஆட்சியில் எனது தாய் நாட்டின் உழைப்பாளி மக்களிடம் உருவாகியுள்ள ஆவேசமும் உற்சாகமும், உத்வேகமும், தாயகத்தை வளர்ப்பதில் அவர்கள் காட்டும் கூட்டு முயற்சியும் அற்புதமானவை. அவர்களின் சிரித்த முகங்களும், இன்பமாய் ஒலிக்கும் கிராமிய கீதங்களும் என்னிடம் இன்பத்தை வாரியிறைப்பதைக் காண்கிறேன்” என்று கூறினார். அன்று விவசாயிகளோடு கார்க்கியும் பயிர் நட்டு அவர்களுக்கு உதவினார்.

ரஷ்யாவில் கார்க்கி கைதூக்கிவிட்ட மனிதன் அசுர சக்தி பெற்றவனாகி உலகிற்கே வழிகாட்டியானான். கார்க்கி தனது தத்துவத்தைத் தனது காலத்திலேயே கையாண்டு வெற்றி கண்டவர். உலக முற்போக்கு இலக்கியத்தின் முதல்வராகவும், சோசலிச யதார்த்தவாதத்தின் பிதாமகனாகவும் திகழ்ந்தார்.

கார்க்கி உலக இலக்கியத்தின் மணி மகுடம், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம். உலகின் எட்டுத் திசையிலும் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் அழியாத சொத்து. உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை அவர் புகழ் அழியாது நிலைத்திருக்கும்.

(உங்கள் நூலகம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It

ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டில் பிறந்து 1904 வரை 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் மகத்தான இலக்கியச் சாதனைகளை நிகழ்த்தியவர்.

செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இது வம்ச பரம்பரையாக நீடித்தது. எண்பது ரூபிள் கடனுக்காக அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் அடிமைகளாயினர். கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டு விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ். பாவெலுக்கு மூன்று ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் அன்டன்செகாவ் மூன்றாவது மகனாய் பிறந்தார்.

பாவெல், டாகன்ராக் கிராமத்தில் ஒரு பல சரக்குக்கடை நடத்தி வந்தார். அவருக்கு வயலின் வாசிக்கவும் ஓவியம் தீட்டவும் தெரியும். தனது பிள்ளைகளை அடித்து உதைத்து இம்சிப்பார். கொடூர குணம் கொண்டவர். அவரது சொல்லை சிறிதளவு மீறினாலும் நையப்புடைத்து விடுவார். தனது பிள்ளைகள் சர்ச்சில் சுவிசேஷப் பாடல்கள் பாடவேண்டுமென்று பாவெல் விரும்பினார். அதற்காக மகன்களை அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பிப் பாடப் பயிற்சியளிப்பார். தூங்கி வழிந்தால் அடியும் உதையும் கிடைக்கும். கடைக்குட்டியான அன்டனுக்கும் அடிவிழும். இந்தக் கொடூரமான பாட்டுப் பயிற்சிக்கு பாவெல் ஒரு தத்துவ விளக்கமளித்தார்.

“பாடுவது உடலுக்கு உரமூட்டும் - சர்ச்சுக்குப் போவது ஆத்மாவுக்குத் திட மூட்டும்” என்று அடிக்கடி கூறுவார்.

அவரது அடாவடி முயற்சியால் இரண்டும் நிகழவில்லை. நிர்ப்பந்தமாகத் திணிக்கப்பட்ட சர்ச்சுக்குப் போகும் பழக்கம் பிள்ளைகளிடம் கடவுள் நம்பிக்கையை வளர்க்கவில்லை. மாறாக அவர்களை மதநம்பிக்கையற்ற நாத்திகர்களாக்கி விட்டது. தந்தையின் கொடூரமான வளர்ப்பினால் மூத்த சகோதரர்கள் இருவரும் குடிகாரர்களாகவும் பெண் பித்தர்களாகவும் மாறிப் போனார்கள். இதில் அன்டன் மட்டும் தனிரகமாக இருந்தார்.

பாவெலின் நடத்தையால் பல சரக்குக் கடை நஷ்டமாகி கடன்காரராகிவிட்டார். கடனுக்காக அன்டன் செகாவை ஈடாக கிராமத்துக் கடன் காரர்களிடம் விட்டுவிட்டு குடும்பத்தை மாஸ்கோ வுக்குக் கொண்டு போய்விட்டார். மூன்றாண்டுகள் கிராமத்தில் அடிமை வேலை செய்து கொண்டே படித்தார். பின்பு மாஸ்கோ பள்ளியில் அன்டன் சேர கிராமத்தைவிட்டு வெளியேறினார். 1879ம் ஆண்டு அவருக்கு டாக்டர் படிப்புப் படிக்க நிதியுதவி கிடைத்தது. மருத்துவம் பயிலத் துவங்கினார். தந்தை பாவெல் உழைக்க லாயக்கற்றவராகி விட்டார். மூத்த சகோதரர்கள் பொறுப்பற்றவர் களாக இருந்தனர். இருபத்தைந்து ரூபிள் உபகாரச் சம்பளம் பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டே குடும்பத்தையும் அன்டன் கவனிக்க வேண்டியிருந்தது. தனது இருபதாவது வயதில் சிறுகதைகள் எழுதத் துவங்கினர்.

அன்டன் செகாவின் கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டார். 1884ம் ஆண்டு செகாவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. அதன்பின் அவர் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கு செகாவின் எழுத்துக்கள் பிரபலமடைந்து புகழ்பெற்றிருந்தார். பீட்டர்ஸ்பர்க்கில் எழுத்தாளர் களுக்குள் போட்டியும் பொறாமைகளும் இருந் தது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாய் தாக்கி எழுதியும் பேசியும் வந்தனர். இதைக் கண்டு செகாவ் பயந்துவிட்டார். அதுவரை தனது மனம் போன போக்கில் எழுதிவந்தவர் கொஞ்சம் திட்டமிட்டு மாற்றிக் கொண்டார். இலக்கிய உணர்வு மேலோங்க எழுத வேண்டுமென்று ஆர்வம் ஏற்பட்டது.

அவரைக் காசநோய் தொற்றிக்கொண்டது. எழுத்துப்பணி குறைந்தது. ஆனால் எழுத்தின் தரம் பிற எழுத்தாளர்கள் போற்றும் அளவுக்கு உயர்ந் திருந்தது. 44 ஆண்டு வாழ்க்கையில் செகாவ் 24 ஆண்டுகள் எழுதியிருக்கிறார்.

செகாவ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர் களுக்கும் நாடகம் எழுதும் ஆசை தீவிரமாக இருந்தது. அவரும் நாடகங்கள் எழுதினார். “இவானோவ்” என்ற அவரது நாடகம் 1887ம் ஆண்டு மாஸ்கோவில் அரங்கேற்றப்பட்டது. நாடக ரசிகர்களுக்கு அந்த நாடகம் புரியவில்லை. அற்புதமான சிறுகதை எழுத்தாளரின் நாடகத்தை நன்றாக இல்லை என்று சொல்லவும் மனமில்லை. இவர்களுக்கும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர் களுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டு பின்பு கைச் சண்டையாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண் டனர். நாடகம் பெரும் குழப்பத்தில் முடிந்தது.

இரண்டாண்டுகள் கழித்து பீட்டர்ஸ்பர்க் நகரில் இவானோவ் நாடகம் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அரங் கேற்றப்பட்ட செகாவின் நாடகம் படுதோல்வி யடைந்தது. அதே ஆண்டில் புகழ்மிக்க சைபீரியப் பயணத்தை தனது முப்பதாவது வயதில் மேற் கொண்டார். பத்தாண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்த அவர் அடிக்கடி ரத்தவாந்தி எடுத்தார். இத்தனை மோசமான உடல்நிலை யோடு பனி உறையும் சைபீரியாவுக்குப் பயண மாவதை அவரது நண்பர்கள் தடுத்துப் பார்த் தனர்.அக்காலத்தில் கொடுந்தண்டனை பெற்ற கைதிகளைக் கொண்டு போய் அடைத்து வைக்கும் இடமாக சைபீரியா இருந்தது. ஆனால் செகாவ், கைதிகளைப் பற்றி தகவல்கள் திரட்டப்போவதாய் கூறிப் புறப்பட்டார். போக்குவரத்து வசதிகளற்ற அந்தக் காலத்தில் அவர் சென்று திரும்பினார். பிற்காலத்தில் அவர் எழுதிய விசயங்களில் ஒரே ஒரு கதையைத் தவிர வேறு எதிலும் சைபீரிய அனுபவம் வெளிப்படவில்லை.

செகாவ் தனது நிறைவேறாத காதலை மறப்பதற்கே சைபீரியா சென்றார் என்ற கருத்தும் உண்டு. லிடியா என்ற பெண் மீது அவருக்குக் காதல். ஆனால் அவள் திருமணமான பெண். எனினும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அதனால் அவர் எழுதுவது கூடக் குறைந்துவிட்டது. இதனால் அவரது வருவாய் குறைந்துவிட்டது.

ஒரு மணமான பெண்ணை எப்படித் திருமணம் செய்ய முடியும் என்று அவர் சிந்திக்கவே யில்லை. சைபீரியா சென்றுவிட்டு அவர் மாஸ் கோவுக்குத் திரும்பிய பிறகும்கூட அவரால் லிடியாவை மறக்க முடியவில்லை. அவளை மூன்று நான்குமுறைதான் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புகளில் கூட இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில்லை. ஒரு நாள் இருவரும் ஒரு ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் இரவு அவர் ரத்தவாந்தி எடுத்தார். லிடியாவை மறுநாள் ஓட்டலில் சந்தித்தபோது அவர்கள் இருவரும் கொஞ்சிக் குலாவவில்லை. லிடியாவை ஏதோ ஒன்றைப் படிக்கச் சொல்லிக் கேட்கும் அளவுக்கே செகாவ் இருந்தார்.அவர் பேசக்கூடாது என்று டாக்டர்கள் தடைபோட்டிருந்தனர். அவர் “உனக்கு மிகவும் நன்றி” என்று ஒரு சீட்டில் எழுதி லிடியாவிடம் கொடுத்துவிட்டு நாளைக்கும் நீ வா என்று மட்டும் கூறினார். ஆனால் லிடியாவின் கணவன் தந்திமேல் தந்தி கொடுத்து அவள் உடனே வந்து சேர வேண்டுமென்று கட்டளையிட்டான். வேறு வழியின்றி லிடியா ஓட்டலைவிட்டு வெளியே வந்தார்.

லிடியா வெளியே வந்தபோது அங்கு டால்ஸ்டாய் நின்று கொண்டிருந்தார். அவர் செகாவைப் பார்க்க வந்திருந்தார். அவர் எழுதிய அன்னாகரினா நாவல்வந்து அனைவரது இதயங் களிலும் இடம்பிடித்திருந்ததால் லிடியா அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுப் போய் விட்டாள். செகாவின் அடுத்த நாடகமான “கடல் நாரை”யில் லிடியாவைத்தான் கதாநாயகியாக வரித்து எழுதியதாய் கூறப்பட்டது.

பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்றியபோது “கடல்நாரை” நாடகம் படுதோல்வியடைந்தது. பின்பு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் கடல் நாரை நாடகத்தை மாஸ்கோவில் மீண்டும் மேடையேற்றினார். நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நட்பு ஏற்பட்ட பின்பு செகாவ் மேலும் மூன்று நாடகங் கள் எழுதினார்.மூன்றும் பெரும் வெற்றி பெற்றன. செகாவை ஒரு நாடக மேதையாக உலகுக்கு மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் அறிமுகம் செய்தது. மேலும், அவருக்கு எஞ்சியிருந்த சில ஆண்டுகளில் மணவாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் நடிகை யான ஆல்கா நிப்பரை செகாவ் 1901ல் திருமணம் செய்து கொண்டார்.

புகழும் பணமும் மரியாதையும் செகாவுக்கு குவிந்த நேரத்தில் அவரது உடல்நலம் வேகமாகக் கெட ஆரம்பித்தது. காசநோயும் ரத்த வாந்தியும் அதிகரித்தது. அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம்” 1904ல் அரங்கேறியபோது பல தடவை ரத்தமாக வாந்தி எடுத்தார். ஒரே நாளில் பல கதைகளை எழுத முடிந்த அவருக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் கூட எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் அவரது நோயும் துன்ப துயரமும் அவரது இலக்கியப் படைப்புகளில் வெளிப் பட்டதேயில்லை. வாழ்க்கையை அதன் இயல் போடு ஒட்டியதாக நுட்பமான தகவல்களை மிக எளிமையாக எழுதினார். சுருக்கமாகவும், நகைச் சுவையோடும் மிகுந்த பரிவோடும் எழுதியிருப் பதை இன்றும் நாம் வாசித்து உணரலாம்.

செர்ரிப் பழத்தோட்டம் நாடகம் ஆல்கா நிப்பரைக் கதாநாயகியாகக் கொண்டு தொடர்ந்து மேடையேற்றப்பட்டது. செகாவ் அளவற்ற மகிழ்ச்சியோடு இருந்தார். பேடன்வீலர் என்ற இடத்தில் செகாவ் தனது மனைவியுடன் தங்கினார். 1904ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று இருவரும் உல்லாசமாய் பேசிக் கொண்டிருந்தனர். ஆல்கா சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அன்று இரவே செகாவ் டாக்டரை அழைத்து வரும்படி கூறினார். டாக்டர் வந்து சோதித்தபோது அவரிடம் “நான் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். டாக்டர் செகாவுக்கு ஐஸ்கட்டியை வைத்தார். “எதற்கு என் காலியான இதயத்தின் மீது ஐசை” வைக்கிறீர்கள்?” என்று செகாவ் கேட்டார். அதன்பிறகு அவருக்கு நினைவு தவறிவிட்டது. சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தார். ஜூலை 2ம்தேதியன்று தனது நாற்பத்தி நான்காவது வயதில் தனது ஆயுளை முடித்துக் கொண்டார்.

ஊழல் குடும்பம், ஊழல் அரசு,ஊழல் சமூகம் இவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத வராக செகாவ் திகழ்ந்தார். மனிதகுலம் இவற்றைச் சகித்துக் கொள்வதை அவர் ஒரு போதும் ஏற்க வில்லை. அதே சமயம் அவர் தன்னை ஒரு சீர்திருத்த வாதியாகவோ, தர்மோபதேசியாகவோ எண்ணிக் கொண்டதில்லை. வாழ்க்கை யில் திறமையோடு வாழ வேண்டும். எதிலும் ஒரு அளவும், அழகும் வேண்டும். அனைவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக, சாரமற்ற தாக இருக்கிறது என்பதை உறைக்கச் செய்வதே தனது நாடகங்களின் குறிக்கோள் என்றும் கூறினார். அதற்காக நான் நீதிகளைப் புகுத்தவில்லை என்று கூறினார்.

டால்ஸ்டாய், செகாவைப் பற்றி “எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் தூக்கியடித்து விடுகின்றன. ஷேக்ஸ்பியர் வாசகனை எங்கேயோ அழைத்துச் செல்வது போல் உணர முடிகிறது. ஆனால் உனது படைப்புகளோடு எங்கே போவது? இங்கேதான் இருக்க வேண்டும்” என்று செகாவிடம் கூறினார். அதே டால்ஸ்டாய் “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை அவர் ஈடு இணையற்றவர்” என்றும் கூறினார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் பேசுவதை செகாவ் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். இந்தச் செகாவ் ஒரு நாத்திகன் என்று கூறிவிட்டுப் போவார்.

டால்ஸ்டாயை செகாவ் கிண்டல் செய் வதுண்டு. “ஆறு அடி என்பது பிணத்துக்குத்தான். மனிதனுக்கு இந்த உலகம் முழுவதும் போதாது. ஏன்-இந்தப் பிரபஞ்சமே போதாது. இந்த இயற்கை முழுவதுமே உயிர்த்துடிப்புள்ள மனிதனுக்குப் போதாது” என்று ஆறடி நிலம் என்ற கதையை எழுதிய டால்ஸ்டாயை செகாவ் கிண்டல் செய்தார். எனினும் டால்ஸ்டாயைப் போன்று வேறு எவரையும் என்னால் நேசிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வாழ்க்கையில் போலித்தனத்தையும், போலித்தனமான மனிதர்களையும் செகாவ் வெறுத்தார். நாடக மேடையில் நடிகர்கள் நடிப் பதைப் பார்த்து “இந்த நடிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைவாக நடித்தால் நன்றாக இருக்கும்.” என்பார். மாக்சிம் கார்க்கியைக் கூட செகாவ் கண்டித்துள்ளார். “உங்கள் எழுத்தில் அடக்கம் குறைவு. இயற்கையை வர்ணிக்கும் போது உரையாடலில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வர்ணனைகளைப் படிக்கும் போது அவை இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று கார்க்கியிடம் கூறியுள்ளார். ஆனால் கார்க்கியை அவர் ஒரு போதும் புறக்கணித்ததில்லை. கார்க் கிக்கு எழுதிய கடிதமொன்றில் “நீங்கள் ஒரு அற்புதக் கலைஞர், அறிஞர், வாழ்வின் விசயங்களை அற்புதமாக உணர்ந்து எழுதுகிறீர்கள்” என்று செகாவ் குறிப்பிட்டுள்ளார்.

செகாவின் கதைகள், நாடகங்களில் சொற்கள் சிக்கனமாய் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். அவரது நாடகங்களில் “மௌனம்” என்ற குறிப்பு இருக்கும். செர்ரிப் பழத்தோட்டத்தில் மட்டும் 35 மௌனங்கள் உள்ளன. முதலாளித்துவ, நிலப்பிரபுத் துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்தியதால் லெனினும், ஸ்டாலினும் செகாவைப் பிற்காலத்தில் கொண் டாடினர். செகாவின் ‘ஆறாவது வார்டு’ தோழர் லெனினுக்கு மிகவும் பிடித்தமான கதையாகும்.

செகாவின் பார்வை வித்தியாசமானது. அவர் ஒருமுறை ஹாங்காங் சென்று வந்தார். அதுபற்றி அவரது நண்பர் சுவோரினுக்கு எழுதிய கடிதத்தில் “பிரிட்டிஷ்காரன் காலனி நாடுகளில் மக்களைச் சுரண்டுகிறான் என்று கூக்குரலிடு கிறோம். பிரிட்டிஷ்காரன் சுரண்டுகிறான். அத்துடன் நல்ல சாலைகளை அமைக்கிறான். சுகாதாரமான சாக்கடை வசதிகள் கட்டுகிறான். ரஷ்யாவில் உங்கள் சங்கதி என்ன? நீங்களும்தான் சுரண்டுகிறீர்கள். பதிலுக்கு என்ன தருகிறீர்கள்? “என்று கேட்டார். அதே போல் விஞ்ஞான வளர்ச்சியில் செகாவுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. “விஞ்ஞானம் கற்பதால், வருவதால் மனிதன் கெட்டுப் போவதில்லை. வளர்ச்சிதான் அடைகிறான். இலக்கியமும் விஞ்ஞானமும் கரங்கோர்த்து இணைந்து செல்ல வேண்டியவை யாகும்” என்றார். எமிலிஜோலாவும், டால் ஸ்டாயும் தங்கள் படைப்புகளில் மருத்துவம் பற்றிய பகுதிகளில் தவறாக எழுதியிருப் பதாகவும், அது தனக்கு எரிச்சலூட்டுவதாகவும் குறிப்பிட் டுள்ளார். ஒரு இலக்கியவாதி ஒரு ஆராய்ச்சி யாளனைப் போல சரியான விபரங்களை எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அற்ப ஆயுளில் காலமாகிவிட்ட செகாவ் தனது வாழ்நாளில் பாதிக்குமேல் எழுதியுள்ளார். அவர் ஒரு டாக்டர் என்றாலும் மருத்துவம் பார்க் காமல் எழுதுவதற்கே தனது வாழ்வை அர்ப் பணித்தார். ஒவ்வொரு முறையும் தன்னைத் திருத்திக் கொள்ளவும், அழகுபடுத்திக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. எழுதிவிட்டு தானே சுயமாக மதிப்பீடு செய்வார். நண்பர்கள், வாசகர்கள் கூறும் கருத்துக்களையும் ஆலோசனை களையும் கவனமாகப் பணிந்து ஏற்றுக் கொள்வார். ஆனால் விமர்சகர்களின் மீது அவருக்கு நம்பிக்கை யில்லை. “நானும் எனது கதைகளின் விமர்சனங் களை இருபத்தைந்தாண்டுகளாகப் படித்து வருகிறேன். ஒருமுறை கூட ஒரு பயனுள்ள கருத்தை யோ வார்த்தையோ காணமுடியவில்லை. உழுது கொண்டிருக்கும் குதிரையை உபத்திரப் படுத்தும் ஈயைப் போன்றுதான் விமர்சகர்கள் இருக் கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவரது காதல் வாழ்வும், மணவாழ்வும் மிகவும் கசப்பான முடிவாகவே இருந்தது. முதலில் செகாவ், ஓல்கா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஓல்காவுக்கக் கருச்சிதைவு ஏற் பட்டது. அதனால் ஓல்கா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு லிடியா என்ற பணக்காரச் சீமாட்டி செகாவைக் காதலித்தார். செகாவும் அவளை மிகவும் நேசித்தார். இடையில் செகாவ் லிடியா வை ஒரு நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவரும் காதல்வயமாகி லிடியா அந்த நண்பனுடன் ஓடிப்போனாள். நண்பனின் இந்தத் துரோகமும், லிடியாவின் ஓடுகாலித்தனமும் செகாவை நிரந்தரமாகப் பாதித்துவிட்டது. லிடியாவால் ஏற்பட்ட மன பாதிப்பிலிருந்துதான் அவர் “நாய்க்காரச் சீமாட்டி” கதையை எழுதியதாய் கூறப்படுகிறது.

செகாவ் ஒரு டாக்டர் என்பது அவருக்கே மறந்துவிடும். அவர் ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை ஒன்றைத் திறந்தார். அது ஏழைகளுக்கு ஓரளவே பயன்பட்டது. எழுதுவதில் மூழ்கியதால் ஏழைகளுக்குப் பயன்தரும் விதத்தில் அவரால் இயங்க முடியவில்லை.

செகாவ் மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார். இவை 13 தொகுதி களாக வெளி வந்துள்ளன. அவரது நாட்குறிப்பு களும், கடிதங்களும் தனித்தொகுதிகளாக வெளி யாகியுள்ளன. எழுத்துலகில் நீடித்து நிலைக்க விரும்புவோர் அவைகளைத் தேடிப் பிடித்துப் படித்தாக வேண்டும். அவரது நாடகங்களில் இவானோவ், கடல்நாரை, காட்டுப்பேய் ஆகி யவை புகழ்பெற்றவையாகும். தமிழில் வான்கா, பந்தயம், ஆறாவது வார்டு, நாய்க்காரச் சீமாட்டி போன்ற சில கதைகள் மட்டுமே வந்துள்ளன.

செகாவ், பேடன் வீலர் என்ற ஊரில் மரண மடைந்த செய்தி மாஸ்கோவில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது உடல் மாஸ்கோ ரயில் நிலையத்தில் எதிர்பார்க்கப்பட்டது. எளிய நடை யில் பரிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகளும் நாடகங்களும் எழுதித் தங்களை மகிழ்வித்த அன்டன் செகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திட மக்கள் ஆயிரக்கணக்கில் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர். அப்போது ஜப்பானுடன் ரஷ்யா போரிட்டுக் கொண்டிருந்த காலம். அப்போரில் ஜெனரல் கெல்லர் என்பவர் கொல்லப்பட்டு அவரது சடலம் ரயிலில் வந்தது. ராணுவத்தினர் அந்த உடலிருந்த பெட்டியைச் சுமந்துகொண்டு ராணுவ கீதங்களை இசைத்தபடி சென்றனர். செகாவின் சடலத்தைத்தான் கொண்டு செல் கிறார்கள் என்று நினைத்து மக்கள் கூட்டம் ராணுவ வாத்திய கோஷ்டியின் பின்னால் சென்று கொண்டி ருந்தனர். செகாவ் என்ற தங்கள் மாபெரும் எழுத்தாளருக்கு ரஷ்ய அரசு ராணுவ மரியாதை அளிப்பதாக அவர்கள் தவறாகக் கருதிவிட்டனர்.

ரயில்வே நிர்வாகத்தின் கவனக்குறைவால் செகாவின் உடல் “மீன்” என்று குறிக்கப்பட்ட குளிர்பதனப் பெட்டியில் மாஸ்கோ வந்து சேர்ந்தது. விபரம் தெரிந்த எழுபது எண்பது பேர் மட்டுமே அவரது உடல் பின்னால் சென்றனர். இந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியும் தனது வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்து வந்து கொண்டிருந்தார். அவர் ஜெனரல் கெல்லரின் இறுதி ஊர்வலத்திற்காகத் தாமதமாக வந்தவர். தனது மரணத்தில் கூட செகாவ் சிறிது கேலியையும் நகைப்பையும் கலந்துவிட்டார்!

இதை அறிந்த மாக்சிம் கார்க்கி மிகுந்த கோபமடைந்தார். “ஐயோ! பெறற்கரிய இந்த அற்புத மனிதரையா மீன் பெட்டியில் கொண்டு வந்தார்கள்? என் நெஞ்சம் துடிக்கிறது. கதறிக் கதறி அழுது என்னைச் சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஒரு அழுக்குக் கூடையில் எடுத்து வந்தது பற்றி செகாவுக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனால் நமக்கு? நமது ரஷ்ய சமுதாயத்திற்கு? என்னால் இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லையே” என்று கதறினார்.

 செகாவ் இறந்து பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1917ல் ரஷ்யப்புரட்சி வெற்றி பெற்று மகத்தான சோவியத் யூனியன் உருவானது. சோவியத் அரசு அமைந்த பின்பு அவருடலை மீண்டும் ஒருமுறை விசேட ராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது. மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் உறுப்பினர்களுக்காகத் தனியே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அவரது மனைவி ஆல்கா நிப்பரும் வந்திருந்தார். செர்ரிப் பழத்தோட்டம் நாடகம் நடைபெற்றது. கதாநாயகியாக ஆல்காவே நடித் தார். ரஷ்யாவில் கார்க்கியின் “அடி ஆழங்கள்” நாடகத்திற்கு அடுத்தபடியாக மக்களால் விருப்பப் பட்ட நாடகம் செர்ரிப்பழத் தோட்டம்தான் என்று கூறப்படுகிறது.

செகாவின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டம் கூட மனித சமூகத்தில் மண்டிக் கிடக்கும் ஊழல் தன்மையை இடித்துரைக்கும் அவரது கதை போலத்தான் தோன்றுகிறது. ஒரு போர்வீரனின் சடலத்தோடு மாறாட்டம் நிகழ்ந்ததிலும் ஒரு நியாயம் உள்ளது போலும். ஏனெனில் செகாவின் கடைசி நிமிடங்களில் சுயநினைவின்றி உளறும் போது அவரது வார்த்தைகள் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தன. கூர்ந்து கவனித்ததில் “மஞ்சூரியா- ஐயோ அங்கே என் நாட்டு மக்களை ஜப்பானியர் கொன்று குவிக்கிறார்களே” என்று அவர் புலம்பியது கேட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ராணுவ மரியாதை இதற்குத்தான் போலும்.

செகாவின் 150வது பிறந்த ஆண்டில் புதிய தலைமுறைகள் அவரது படைப்புகளைப் பயிலட்டும்.

(செம்மலர் நவம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It