கலை, கலகம்: கலை இயக்கங்கள் (பழைய கற்காலம் தொடங்கி போஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை)
(கி.மு. 7,00,000 - கி.பி. 1950)

தொடங்குவதற்கு முன்…

மனிதனின் அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருப்பது கலைகள். நிகழ்கால சமூகத்தின் அக, புறப் பிரச்சனைகளையும், சமூகத்தின் மீதான ஆளும் வர்க்க அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து மனித சமூகம் ஒரு தீர்வை நோக்கி நகர வடிகாலாகவும், கலகக் குரலாகவும் இருந்து செயல்படுபவைகள் கலைகள். அது எந்த வகையிலான கலைகளாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த இயங்கியல் இதுவாகத்தான் இருக்கும். மனித சமூகம் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகளாக கலைகள் மனித சமூகத்தை முன்னகர்த்திச் செல்லும் கருவிகளில் முக்கியமான கருவியாக இருந்து வருகிறது.

மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுடன் சேர்த்து, தன்னையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொள்ள கூடியவைகள் கலைகள். கலைகள் ஒரே கட்டத்தில் தேங்கிவிடக் கூடியவைகள் அல்ல. சமூகத்தின் வளர்ச்சியை விரும்பாத, வளர்ச்சி பெறாத ஒரு சமூகத்தை அடிமையாகக் கொண்டு அதிகார, பொருளாதார குளிர்காய நினைக்கும் மனித முயற்சிகள் வேண்டுமானால் செயற்கையாக கலைகளை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் ஒரு தேக்க நிலையிலேயே முடக்க முடியுமே ஒழிய, கலைகள் தன்னியல்பாக ஓரிடத்தில் தேங்கக் கூடியவைகள் அல்ல. மனித சமூகத்தின் கடந்த கால, நிகழ் கால செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள பண்பாட்டு மானுடவியலும் அடிப்படையாக இருக்கிறது. பண்பாடுகளின் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பது கலைகள். அதன்படி மனித சமூகத்தின் கடந்தகால நிகழ்காலப் போக்குகளை நாம் புரிந்து கொள்ள கலைகளும் நமக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன.

கலையின் கடந்த கால பரிணாம வளர்ச்சிகளை நாம் திரும்பிப் பார்க்கும்போது நமக்கு அதன் ஊடே தெரியவருவது மனித சமூக மற்றும் தனி மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சிகளும் கூட. வேட்டை நாகரீக மனிதனின் கலைகள் விவசாயம் கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. அதன் வழி தனி மனித சிந்தனைகள் விவசாய நாகரீகத்தின் அக, புற பிரச்சனைகளில் இருந்து தப்பி, ஒரு தீர்வை நோக்கி நகர துணை செய்கிறது. விவசாய நாகரீகம் உலக பேரரசுகளின் நாகரீகமாக வளரும்போது கலைகளும் தங்களை அதற்கு ஏற்ப அடுத்த வளர்ச்சிக்கு நகர்த்திக்கொண்டு தனி மனித சிந்தனைகளையும் புதிய தீர்வுகளை நோக்கி நகர்த்துகிறது. இப்படியே இன்றைய நவீன காலம் வரை கலைகளின் வளர்ச்சியானது எங்கும் தேங்காத ஒரு நீண்ட பயணத்தை நடத்தி வருகிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட வேட்டை நாகரீகத்தில் தொடங்கி (ஆப்பிரிக்க, இந்திய துணைகண்டம் மற்றும் ஸ்பெயின்), தமிழ் சிந்து, எகிப்து, சுமேரியா, கிரேக்கம், ரோமன், பைசாண்டியம், அமெரிக்க சிகப்பிந்திய கலைகள், சீனம், இஸ்லாமிய கலைகள், மத்தியக் கால கோத்திக் கலை, ரினையசன்ஸ், எக்ஸ்பிரசனிசம், இம்பிரசனிசம், கியுபீசம், தாதாயிசம், அப்ஸ்டிராக்ட்- எக்ஸ்பிரசனிசம், சர்ரியலிசம், ரோமான்டிஸசம், சிம்பாலிசம், நேச்சுரலிசம், இமேஜிசம், ஃபாவுசிம், டே ஸ்சிடஜல், ஃபியூச்சரிசம், மினிமலிசம், நியோ-தாதா, நியோ- எக்ஸ்பிரசனிசம், போஸ்ட்- இம்பிரசனிசம், போஸ்ட்-மினிமலிசம், ரியலிசம், ஓப்-ஆர்ட், போர்க்யூ, கிளாசிசம், புலூம்ஸ்பரி குரூப், பிலாக் மெளண்டேய்ன் காலேஜ், ஆர்ட் டேகோ, ஆர்ட் நுவோ, கன்ஸ்டிரக்டிவிசம், ஃபிலெமிஷ் ஸ்கூல், ஃபிலக்சூஸ், மேனரிசம், மாஸ்சர்ரியலிசம், நியோ-கிளாசிக்கல், போட்டோரியலிசம், பாயிண்டலிசம், பிரீ-ராப்பாலடிஸ், சிச்சுவேசனிசம், ரோகோகோ, நபிஸ், ஆர்லம் ரினையசன்ஸ், கிராஃபிடி ஆர்ட், மார்டனிசம், போஸ்ட்- மார்டனிசம் என்று கலைகள் மனித வரலாற்றினுடே கடந்து வந்தப் பாதை மீக நீண்டது.

கலைகளின் வரலாற்றுப் பயணத்தைக் குறித்து நாம் தெரிந்துகொள்வது மிக அவசியமாகிறது. கலைகள் மனித சிந்தனைப் போக்கில் எத்தகைய தாக்கங்களை செலுத்தி சமூக மேம்பாட்டுக்கான புரட்சிகர மாற்றங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை அதன் முழுப் பரிமாணத்துடன் புரிந்துகொள்ள இது நமக்கு வசதியாக இருக்கும். கலை வரலாறு என்கிற பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்துகொள்வதைவிட முழுமையாக (வாசிப்பில் முழுமை என்பதற்கான வரையறை இல்லை என்கிற போதிலும்) தெரிந்துகொள்வது தமிழ் வெளியில் கலைகள் குறித்த ஆரோக்கியமான விவாதங்களையும் தேடல்களையும் முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதாலேயே இந்தத் தொடரை எழுத உட்கார்ந்தேன். கலைகளின் வரலாற்றைத் தொடங்குவதென்றால் அதன் மூலத்திலிருந்துதானே தொடங்க வேண்டும். தொடங்குவோம் வாருங்கள்.

வரலாற்றிற்கு முற்பட்ட கற்கால மனிதனின் கலைகள்

ஆதிகால மனித சமூகத்தின் கலை வெளிப்பாடுகளில் ஒன்றாக இன்றைக்கு நமக்கு கிடைப்பவைகள் அவன் குகைகளில் தீட்டிய சுவர் ஓவியங்களே. இரண்டு இலட்சம் வருடத்திய தனி மனித சிந்தனை வளர்ச்சிப் போக்கை நமக்கு கண்ணாடி போலக் காட்டுபவைகள் இந்த ஓவியங்கள். கற்கால மனிதன், தன் உணர்வுக் கிளர்ச்சியை, சிந்தனை முதிர்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்திய இசை மற்றும் நடனக் கலைகளை இன்றைய நிலையில் அப்படியே மீட்டு உருவாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. காரணம் ஓவியங்களைப் போன்று அந்த கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே நிலைத்திருக்கும் ஊடகங்களில் நிகழ்த்தப்பட்ட (பாறைகள்) கலைகள் அன்று. அவைகள் குறித்த எத்தகைய எழுத்து வடிவ அல்லது குறியீட்டு வடிவக் குறிப்புகளையும் கற்கால மனிதர்கள் நமக்கு விட்டுச் செல்லவில்லை. ஆக, கற்கால மனிதனின் கலைகள் என்று எடுத்துக்கொண்டால் (நம்மால் இன்றைக்கு காணக் கூடிய கற்கால மனிதர்களின் கலைகள்) அவை ஓவியமும் சிற்ப கலையும் மாத்திரமே.

கற்கால மனிதனின் சிந்தனையில் ஓவியம் என்பது மந்திரத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே இருந்திருக்கிறது. கற்கால மனிதர்கள் தங்களின் அன்றாட வயிற்றுப் பாட்டிற்கு வேட்டைத் தொழிலையே பெரிதும் சார்ந்திருந்தார்கள். வேட்டையின் மூலம் பெறப்படும் உணவுகளே அவர்களின் பிரதான உணவுகளாக இருந்திருக்கின்றன. இன்றைக்கு அரிசி இல்லாத வாழ்வை எப்படி நம்மால் கற்பனையும் செய்துப் பார்க்க முடியாதோ அதேப் போன்று கற்கால மனிதர்களால் வேட்டை மிருகங்களின் வழி கிடைக்கும் மாமிச உணவுகள் இல்லாத வாழ்வை கற்பனைக் கூட செய்து பார்த்திருக்க முடியாது. அதன் காரணமாகவே அவர்கள் கற்பனை முழுவதும் நிரம்பி இருந்தவைகள் வேட்டைத் தொழிலும், அவர்கள் உணவிற்காக வேட்டையாடிய மிருகங்களும். கற்கால மனித சமூகத்தில் வேட்டைத் தொழில் என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருந்திருக்கவில்லை. உடம்பை வளர்க்க தினம் தினம் வேட்டையின்போது அவர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைக்க வேண்டியிருந்தது. இத்தகைய நித்திய கண்டம் பூரன ஆயுசு போராட்டம் வாழ்வைக் குறித்த சிந்தனை போராட்டத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களைப் பொருத்தவரையில் இயற்கை மற்றும் இயற்கைப் பொருட்களில் இருக்கும் ஆன்ம சக்திகளே (spirits) தங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை (உணவுத் தேடல்) கட்டுப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன என்பது அவர்களது திடமான தத்துவ புரிதல் மற்றும் ஆழமான நம்பிக்கை.

இயற்கைப் பொருட்களில் இருக்கும் ஆன்ம சக்திகளை தங்களின் கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் தங்களின் வாழ்க்கைப் போராட்டம் பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடும் என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்த அவர்களுக்கு பெரும் துணையாக இருந்தது ஓவியங்கள். கற்கால மனிதர்களின் குகை சுவர் ஓவியங்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல், அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் ஆன்ம சக்தியைத் தங்களின் கட்டுக்குள் கொண்டுவருவதாகவே இருந்திருக்கிறது. வேட்டைக்குப் புறப்படுவதற்கு முன்பாக வேட்டை மிருகங்களின் உருவங்களை குகைகளின் சுவர்களில் தீட்டி அந்த ஓவியங்களை தங்களின் ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் சடங்கின் மூலம் அந்த மிருகங்களின் ஆன்ம சக்தியை தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். இது ஏறக்குறைய ஒருவகை மந்திர சடங்கு போன்றதாகவே கற்கால மனிதர்களிடம் செயல்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய வரலாற்று மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

கற்கால மனிதர்கள் இடையே ஓவியங்களைத் தீட்டும் செயலானது மந்திர மத சடங்காகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம் குகைகள். கற்கால மனிதர்கள் தங்களின் வசிப்பிடமாகக் கொண்டிருந்த குகைகளில் இத்தகைய ஓவியங்களை அவர்கள் தீட்டியிருக்கவில்லை. ஓவியங்களைத் தீட்டுவதற்கென்றே அவர்கள் சில குகைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிற்கால சமூகங்களில் வழிபாட்டிற்காக கோயில்களைக் கட்டி அதில் தெய்வ சிலைகளை வைத்து மனிதன் வழிபாடு நடத்தியதைப் போல, கற்கால மனிதர்கள் ஓவியங்கள் மூலமான தங்களின் மந்திர சடங்கை நடத்த சில பிரத்தியேக குகைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த குகைகள் இன்றைய மனித கண்களுக்கு அகப்படாமல் பாதுகாப்பான மறைவிடங்களில் இருப்பதற்குக் காரணமும் இதுவே. தங்களின் மந்திர சடங்கு ஓவியங்களை மறைவிடத்தில் மிக பாதுகாப்பாக வைத்திருக்க (இயற்கை சீற்றங்களான வெயில், புயல் மழை போன்றவைகளில் இருந்து பாதுகாக்க) கற்கால மனிதர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களின் குகை ஓவியங்கள் எத்தகைய இயற்கை சேதாரங்களும் இல்லாமல் இன்றைக்கு நமக்கு புதிது போல கிடைக்க இதுவும் ஒரு காரணம்.

கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள் பெரும்பான்மையாக ஆப்பிரிக்கக் கண்டத்திலும், இந்தியாவிலும், ஸ்பெயின் மற்றும் பிரான்சின் தெற்குப் பகுதியிலும் இன்றைக்கு நமக்கு காணக் கிடைத்திருக்கிறது. ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இத்தகைய ஓவியங்களை உருவாக்கிய கற்கால (Paleolithic) மனிதர்களை ஆருக்னேசியன்ஸ் என்றும், பிரான்சு மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய பகுதிகளில் குகை ஓவியங்களை உருவாக்கிய கற்கால மனிதர்களை மக்டலேனியன்ஸ் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். இதில் ஆருக்னேசியன்ஸ் வரைந்த குகை ஓவியங்கள் சுமார் 1,00,00 - 40,000 வருடங்கள் பழமை கொண்டவைகள். இதற்கு உதாரணமாக இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருக்கும் பிம்பெட்கா குகை ஓவியங்களைக் குறிப்பிடலாம். குகை ஓவியங்களிலேயே காலத்தால் மிகப் பழமையானவைகளாக கருதப்படுபவைகள் (சுமார் 50,000 – 1,00,000 ஆண்டுகள் பழமையானவைகள்) பிம்பெட்கா குகை ஓவியங்கள்.

bhimbetka art

(பிம்பெட்கா குகை ஓவியங்கள்)

பிம்பெட்கா குகை ஓவியங்களை பெட்ரோகிளிப்ஸ் என்று வகைப்படுத்துகிறார்கள் கலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இவைகள் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்களாக இருக்கின்றன. இதற்கு அடுத்து மிக பழமையான குகை ஓவியங்கள் இருப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்ட இடம் இந்தோனேசியாவின் சுலவேசியில் இருக்கும் டிம்புசெங் குகை. இவைகளின் காலமும் ஏறக்குறைய 70,000 – 40,000 வருடங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவைகளும் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்களே. இதற்கு அடுத்து கற்கால ஓவியங்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் கிடைப்பது ஸ்பெயினிலும் பிரான்சிலும். பிரான்சின் லாஸ்கா என்னும் இடத்திலும் வடக்கு ஸ்பெயினின் அல்டாமிரா என்னும் இடத்திலும் இருக்கும் குகைகளில் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட குகை ஓவியங்கள் கிடைக்கின்றன.

french art

(பிரான்சின் லாஸ்கா குகை ஓவியங்கள்)

spanish art

(ஸ்பெயினின் அல்டாமிரா ஓவியம்)

கற்கால மனித சமூகத்தில் ஓவியக் கலைஞர்கள் என்று தனி பிரிவு இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் அன்றாட வேட்டைத் தொழிலில் ஈடுபடாமல் மந்திர சடங்கு நடத்தப்படும் குகைகளில் பெரும் பகுதி நேரத்தை செலவிட்டு ஓவியங்களை வரைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஓவிய மந்திர சடங்கை நடத்திய பூசாரிகளும் இவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அப்ஸ்டிராக்ட் (இயற்கையிலிருக்கும் பொருள்களை அப்படியே பிரதியெடுத்தது போல வரையாமல் அந்தப் பொருளை அடையாளப்படுத்தும் ஓர் அடையாளக் குறியையோ அல்லது அடையாளத்தையோ வரைவது. உதாரணமாக காட்டெருமையை அப்படியே வரைவதற்குப் பதிலாக அதன் தலையில் இருக்கும் வளைந்த கொம்புகளை மாத்திரம் வரைந்து காட்டெருமையாக அடையாளப்படுத்துவது) வகை ஓவியங்களையும், நேச்சுரலிச வகை ஓவியங்களையும் கற்கால மனிதர்கள் வரைந்திருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் ஓவியக் கலையின் மேம்பட்ட உத்திகளில் ஒன்றான ஃபோர் ஷார்டனிங் என்கிற உத்தியைக் கூட கற்கால ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய ஓவியங்களில் பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.

வரையப்படும் ஓவியத்திற்கான மாஸ் மற்றும் வால்யூம் போன்ற முப்பரிமாண தோற்றங்களை உண்டாக்க கற்கால ஓவியக் கலைஞர்கள் தாங்கள் வரையும் குகையின் சுவர் பகுதியை மேடு பள்ளங்களாக செதுக்கி அதன் மீது தங்களின் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். சிகப்பு, மஞ்சள், கருப்பு போன்ற நிறங்களையும், இவைகளின் கலவை நிறங்களையும் தங்களின் ஓவியங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியத்தின் மீது பூசப்பட்ட வண்ணம் உதிர்ந்துவிடாமல் இருக்கவும், வெளுத்து விடாமல் இருக்கவும் மிருகங்களின் இரத்தத்தையும், மனித சிறுநீரையும், மூலிகைகளின் சார்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியங்களைத் தீட்ட விரல்களையும், மிருகங்களின் ரோமங்களை சேர்த்துக் கட்டிய கருவிகளையும், மரப்பட்டைகளையும் உபயோகித்திருக்கிறார்கள்.

மனித பரிணாம வளர்ச்சியில் ஹோமோ ஹிரக்டஸ் காலம் தொட்டே மனிதன் ஓவியங்களை வரையத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நமக்கு இப்போது கிடைப்பவைகள் ஹோமோ சேப்பியன்ஸ் கால ஓவியங்களே. சிற்பக் கலையைப் பொருத்த மட்டில் ஹோமோ ஹிரக்டஸ் கால சிற்பங்கள் சில இப்போது நமக்கு கிடைத்திருக்கின்றன. இவைகள் சுமார் ஆறிலிருந்து ஏழு இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டவைகள். சுண்ணாம்பு பாறைக் கற்கள், மிருகங்களின் கொம்புகள் மற்றும் தந்தங்கள் போன்றவற்றில் ஹோமோ ஹிரக்டஸ் காலம் தொடங்கி கற்காலம் வரை சிறிய உருவிலான சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சிற்பங்களில் பிரதானமானது இன்றைக்கு ஆராய்ச்சியாளர்களால் வீனஸ் என்று அழைக்கப்படும் பெண் வடிவ சிற்பங்கள். இந்த சிற்பங்கள் வளமையின் அடையாளக் குறி என்று மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த சிற்பங்களும் குகை ஓவியங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அனேகமாக கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இது நமக்கு உணர்த்தும் வரலாற்று உண்மை, குகைகளில் ஓவியங்களை வரைந்த கலைஞர்களே இந்த சிற்ப உருவங்களையும் செதுக்கியிருக்க வேண்டும் என்பது.

ஓவியங்கள் மந்திர சடங்கிற்குப் பயன்பட்டதைப் போன்றே சிற்பங்களும் கற்கால மனிதர்களால் மந்திர சடங்கிற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கற்கால மனித சிந்தனை பெண்களை வளமையின் குறியீடாகப் பார்த்திருக்கிறது. மிகவும் குறிப்பாக பெண்ணின் உடலை. தங்களுக்கான வேட்டை உணவு தடையின்றிக் கிடைக்க வேட்டை மிருகங்களின் இனப்பெருக்கம் என்பது மிகுதியான அளவில் இருக்க வேண்டும் என்பதை கண்டு கொண்டிருந்த அவர்கள், தாங்கள் வேட்டையாடும் விலங்குகளின் இனப்பெருக்கத்தை செயல்படுத்தும் இயற்கை சக்தியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கற்கால மந்திர சடங்கு ஷாமன்கள் (குகை ஓவியங்களை வரைந்த கலைஞர்களும் இவர்கள்தான்) பெண் உருவம் கொண்ட வீனஸ் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள். மனித இனத்தைப் பெருக்க பெண்ணின் உடல் கருவியாக இருப்பதைப் போல உணவிற்கான மிருகங்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் இயற்கை சக்தியை கையாளும் கருவியாகவும் பெண்ணின் உடல் இருக்கும் என்கிற மந்திர சிந்தனையின் அடிப்படையிலேயே கற்கால சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கற்கால சிற்பக் கலையை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். முதலாவது, அல்ட்ரா பிரிமிடிவ் ஹியுமனாயிட் ஹாப்ஜக்ட்ஸ். இவைகள் சுமார் 6,00,000 – 7,00,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள். இவைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல. காற்று மற்றும் நீர் அரிப்பால் இயற்கையாக கற்களில் உண்டான வடிவங்கள். இவைகளை ஹோமோ ஹிரக்டஸ் மனிதர்கள் தங்களின் வசிப்பிடங்களில் சேகரித்து வைத்திருந்திருக்கிறார்கள். தங்களின் மந்திர சடங்குகளுக்கு பயன்படுத்தவேண்டி. உதாரணமாக வீனஸ் ஆப் பெர்கத் ரேம் சிற்பத்தை சொல்லலாம்.

venus of bergathrem

(வீனஸ் ஆப் பெர்கத் ரேம். சுமார் 3,00,000 வருடங்களுக்கு முற்பட்டது.)

இரண்டாவது, பிரிமிடிவ் ரிலிப்ஸ். இவைகள் இன்றிலிருந்து சுமார் 25,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள். இதற்கு உதாரணமாக வீனஸ் ஆப் வில்லன்டார்ப் சிற்பத்தை சொல்லலாம்.

venus of villaindrop

(வீனஸ் ஆப் வில்லன்டார்ப்)

மூன்றாவது, வீனஸ் பிகரின்ஸ். இவைகள் சுமார் 40,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள். வீனஸ் ஆப் ஹோலி பெல்ஸ் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

venus of holybells
(வீனஸ் ஆப் ஹோலி பெல்ஸ்)

நான்காவது, கார்விங்ஸ் ஆப் ஆன்திரோபோமார்பிக் பிகர்ஸ். இறுதியாக கார்விங்ஸ் ஆப் அனிமல் பிகர்ஸ். இவை இரண்டும் சுமார் 35,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள்.

african art

(ஆப்பிரிக்க ஆன்திரோபோமார்பிக் பிகர்)

அப்ஸ்டிராக்ட் வடிவத்தில் தொடங்கிய பழைய கற்கால மனிதனின் கலைகள் (அப்ஸ்டிராக்ட் கலை என்றால் என்ன என்பதுக் குறித்து முன்பேப் பார்த்திருக்கிறோம்) புதிய கற்காலத்தின் உச்சத்தில் நேச்சுரலிசத்தை நோக்கி வளர்ச்சியடைந்திருந்தது. இதை வரலாற்றுக்கு முந்தைய நேச்சுரலிசம் என்றுக் கூட வகைப்படுத்திக்கொள்ளலாம். (நேச்சுரலிச கலை என்பது இயற்கையில் உள்ள பொருட்களை – மனிதன் உட்பட – உள்ளது உள்ளபடி கலைகளில் பிரதிபலிப்பதாகும். இயற்கை வடிவங்களை உள்ளார்ந்த தனிப்பட்ட கருத்துக்களுடன் திரித்தோ அல்லது மாற்றியோ வெளிப்படுத்தாமல் இயற்கையில் இருக்கிறபடி அப்படியே கலை இரசனை மிளிர வெளிப்படுத்துவது நேச்சுரலிசம். நேச்சுரலிசத்திற்கும் ரியலிசத்திற்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. ரியலிச வகை கலை சொல்லப்படும் பொருளை – கருத்தை - மிக முக்கியமானதாக எடுத்துக்கொள்ளக் கூடியது. நேச்சுரலிசம் சொல்லப்படும் பொருள் எந்த முறையில் – வழி முறையில் - வெளிப்படுத்தப்படுகிறது என்பதை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளக் கூடியது. இரண்டாவது வேறுபாடு, ரியலிச கலை அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பிரதிபலிக்க கூடியவைகள். நேச்சுரலிசம் அப்படியான எத்தகைய கருத்துக்களையும் வெளிப்படுத்தாது.)

லாஸ்கா மற்றும் அல்டாமிரா குகைகளில் கிடைக்கும் குகை ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய நேச்சுரலிச வகை கலைகளுக்கு உதாரணங்களாக இருக்கின்றன. பிரான்சிலிருக்கும் லாஸ்கா குகை ஓவியங்கள் குறித்த அரிதான ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டிருக்கிறது. The Cave of Forgetten Dreams என்பது அந்த ஆவணப்படத்தின் பெயர். இது 2010-ஆம் ஆண்டு வெளியானது. லாஸ்கா குகை ஓவியங்கள் தற்போது பொது மக்களுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது. அதற்குள் இருக்கும் ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டி, லாஸ்கா குகை ஓவியங்கள் குறித்து முதலும் கடைசியுமாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் The Cave of Forgetten Dreams. இது புத்தக வடிவிலும் கிடைக்கிறது.

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It

மலையக இலக்கியத்தின் தலைமகன். ஆசிரியர், இதழாளர், கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல் செயற்பாட்டாளர், களப் போராளி, எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர் ‘மலையக மக்கள் கவிமணி’ சி.வி. வேலுப்பிள்ளை!

“புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப்
போற்றும் இரங்கற்
புகல் மொழி இல்லை;

பழுதிலா அவர்க்கோர்
கல்லறை இல்லை,
புரிந்தவர் நினைவு நாள்
பகருவார் இல்லை,

ஊனையும் உடலையும்
ஊட்டி இம்மண்ணை
உயிர்த்தவர்க்கு! இங்கே
உளங்கசிந் தன்பும்

பூணுவாரில்லை – அவர்
புதை மேட்டிலோர் - கானகப்
பூவைப் பறித்துப்
போடுவாறில்லையே?

ஆழப் புதைத்த
தேயிலைச் செடியின்
அடியிற் புதைத்த
அப்பனின் சிதைமேல்


ஏழை மகனும்
ஏறி மிதித்து
இங்கெவர் வாழவோ
தன்னுயிர் தருவன்

என்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு
இங்கோர் கல்லறை
எடுத்திலர்! வெட்கம்!!

- சி.வி.வேலுப்பிள்ளை

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ஏழை மக்கள் கங்காணிகள் மூலம் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கைக்கு தோணி ஏறியவர்களில் நூற்றுக்குப் பதினைந்து சதவீதம் பேர் படகுகள் கவிழ்ந்து இறந்தனர். புயல் காற்றுக்கு தப்பிய தோணியில் வந்தவர்கள் காடுகள், மலைகள் வழியே நடத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு சாவு அங்கே காத்திருந்தது.

cv velupillaiநடக்க முடியாதவர்களை எவ்வளவு தூரம் தூக்கிச் செல்ல முடியும். பத்து மைல் பதினைந்து மைல் தூக்கி களைத்து முடியாத நிலையில் நடுகாட்டில் மிருகங்களுக்கு இரையாக இவர்களைப் போட்டார்கள். இந்தத் துர்பாக்கிய நிலைக்கு ஆளானவர்கள் கையை நீட்டி கதறி அழுதார்கள். ஒரு சிரட்டையில் தண்ணீரும் இலையில் கொஞ்சம் ஆகாரமும் வைத்துவிட்டு உள்ளம் குமுறி அழுத கண்ணீருடன் சுற்றத்தினர் புறப்படுவார்கள். கானகத்தில் தனிமையில் விடப்பட்டவர் அவஸ்தையை சொல்ல முடியுமா?

படகில் இருந்து இறங்கிய மக்களை மலையகத்திற்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்வது போல் கங்காணிகளும், காவலர்களும் அழைத்துச் சென்றனர். கொட்டும் மழையிலும், நடுங்கும் கடும் குளிரிலும், வீசும் புயற்காற்றிலும் நடந்து செல்லும் போது மலேரியா, காலரா நோய் பாதிக்கப்பட்டும், விஷ அட்டைகள் கடித்தும் வழியிலே மரணமடைந்தவர்களை, இடையிலே குழி தோண்டி புதைத்துவிட்டு நெஞ்சக் குமுறலும், வேதனையும் மனதில் சுமந்து வாய் பொத்தி அழுத கண்ணீருடன் சென்ற சோகம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்பட்டதில்லை. அன்பு மனைவியை பறி கொடுத்த கணவனும், உயிர்க் கணவனை இழந்த மனைவியும், மகனை, மகளை, மருமகளை, மருமகனை இடைவழியில் பறிகொடுத்து வேதனையில் துடித்தவர்கள் ஏராளம்.

இவ்விதம் மரணம் அடைந்தவர்களின் எலும்புக் கூடுகள் ஆங்காங்கே கிடந்தது. அடுத்தடுத்து வந்த தொழிலாளர்கட்கு பாதை காட்டுவதற்கு ஏதுவாக இருந்தன என்று அறியும் போது எத்தனை அவலமான, துயரமான வாழ்க்கை இந்த மக்களுடையது என்பது தெரியவரும்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மலையகத் தமிழ் மக்கள் மலையகத்தைச் சீராக்கிச் சேர்த்தளித்த செல்வங்கள் எண்ணிலடங்கா. காப்பியையும், தேயிலையையும், ரப்பரையும் நட்டு கிராமங்களையும், பட்டினங்களையும் உருவாக்கி, பிரதான போக்குவரத்துப் பாதைகளை அமைத்து தம் உடல் பொருள் ஆவி அத்தனையும் இலங்கைத் தீவின் நலனுக்காக – நல்வளர்ச்சிக்காக – நல்வாழ்வுக்காக அர்ப்பணித்து, நடுக்கடலில் திக்குத் திசையறியாத, நாவாய் போல ஆக்கப்பட்ட நிலையை ‘மலையக மக்கள் கவிமணி’ சி.வி. வேலுப்பிள்ளை தமது கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் வட்டக் கொடை பூண்டுலேயா பகுதியைச் சேர்ந்த மடக்கொம்புர தோட்டத்து பெரியக் கங்காணி கண்ணப்பன் வேலு சிங்கம் - தெய்வாணையம்மாள் வாழ்விணையருக்கு 14.09.1914 அன்று மகனாகப் பிறந்தார் சி.வி. வேலுப்பிள்ளை. இவரது முழுப்பெயர் கண்ணப்பன் வேலுசிங்கம் வேலுப்பிள்ளை என்பதாகும்.

அட்டன் மெதடிஸ்ட் கல்லூரி, நுவரெலிய புனித கிருத்துவக் கல்லூரி, கொழும்பு நாளந்தா வித்தியாலயம் முதலியவற்றில் கல்வி பயின்றார்.

கொழும்பு நாளந்தா வித்தயாலயம், பூண்டுலேயா தாகூர் பாடசாலை, தலவாக்கலை சுமண வித்தியாலயம், அட்டன் மெதடிஸ்ட் கல்லூரி முதலியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மலைநாட்டு மக்கள் கல்வி கற்பது ஆபூர்வமாயிருந்த காலத்திலேயே கல்வி கற்று ஆசிரியராகப் பணி புரிந்தவர் சி.வி. வேலுப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

சி.வி. வேலுப்பிள்ளை தோட்டத்தியே பிறந்து வளர்ந்தவர். அங்கு அல்லற்படும் தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்கூடாக நேரில் கண்டவர். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக உழைத்துக் கொண்டிருந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நலன், பாதுகாப்புக் கருதி 1939ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘இலங்கை இந்தியன் காங்கிரசி’ல். இணைந்து அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.

இலங்கை சுதந்திரம் பெற்றபின் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தலவாக்கொல்லைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலைநாட்டில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் பிரதிநிதிகளாக, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தொழிற்சங்க சட்டங்கள் முதலாளிகளின் கைகளில் கசையைக் கொடுப்பவைகளாகவும், தொழிலாளிகளைக் கசையடியைப் பெற்றக் கொள்பவர்களாகவும் ஆக்கத்தான் உபயோகப்படுத்தப்படுகின்றன” என்று 1950 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் முழங்கினார் சி.வி. வேலுப்பிள்ளை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆங்கில வெளியீடான ‘Congress News’ (காங்கிரஸ் நியூஸ்) இதழின் ஆசிரியராக செயற்பட்டார்.

இலங்கைப் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா, இலங்கையில் வாழும் பத்து இலட்சம் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கு பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, 1948- 18ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் 18.10.1948 அன்று குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்ற மக்களாக்கினார்.

சி.வி. வேலுப்பிள்ளை தமது வாழ்க்கைத் துணைவியாக சிங்களப் பெண்மணியை மணந்து ஒருமைப்பாட்டுக்கு ஓர் உதாரணமாக விளங்கினார்.

“ஒரு சமுதாயத்துக்கு எதிரான அநியாய பழிவாங்கல் மலைநாட்டு மக்களை சமூக பொருளாதார ரீதியாக தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைக்குத் தள்ளியது பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கை சுதந்திரம் பெற்ற பின் கொண்டு வரப்பட்ட முதலாவது சட்டம் இதுவாகும். இந்தச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை (குடியுரிமையை) பறித்தது. இந்திய வம்சாவளி மலைநாட்டுத் தமிழர்கள் குடியுரிமையோ, வாக்குரிமையோ அற்றவர்களாக நடாற்றில் விடப்பட்டனர்.

கொடிய வன விலங்குகள் நிறைந்த, அடர்ந்த வனப்பிரதேசங்களை அழித்து பணப்பயிர்களை நட்டு, மனித குடியேற்றங்களை ஏற்படுத்தியவர்கள். இந்தக் கடின உழைப்புக்கென்றே கடல் கடந்து கொண்டு வரப்பட்டவர்கள் இவர்கள். அவர்களது அயராத உழைப்பினால் உருவானது தான் மலைநாட்டின் மரகதப் பசுமை.

“மலையகத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள், பலவிதமான அட்டைகள் தங்களது இரத்தத்தை குடிக்க வழிவிட்டிருக்கிறார்கள். முதலாளித்துவ அட்டைகள், லேவாதேவி அட்டைகள், வெள்ளைக்கார அட்டைகள், கங்காணி அட்டைகள், அரசியல் அட்டைகள், கடைக்கார அட்டைகள், விசா, பாஸ்போர்ட் பெற்றுத் தரும் தரகு அட்டைகள் என்று பல அட்டைகள் அவர்களை ஒரேடியாக உறிஞ்சி எடுக்கின்றன”.

“இந்த மக்களின் வாழ்க்கை உண்மையில் மிகவும் கொடூரமானது என்றாலும், வதங்கி, வாடி, நிச்சயமற்ற தமது அவல வாழ்க்கையிலும் தங்களுக்கு என்று ஒரு கௌரவத்தைக் கொண்டிருந்தனர்”.

“இந்த மக்களை அந்நியர்களாக கருதி ஒதுக்கும் கொடுமை ஒருபக்கம். மற்றொரு பக்கம இந்த் உழைப்பாளக் கூட்டத்தினரால் உருவாக்கப்பட்டத் தேயிலைச் செடிகளையும், அகன்ற வாகனப் பாதைகளையும், நீண்ட இரயில்வே பாதைகளையும், நீண்டு வளைந்த பாலங்களையும் கட்டி எழுப்பியவர்கள் என்பதை நினைக்க இலங்கை அரசாங்கம் தயார் இல்லை”.

“இந்த மக்களின் உழைப்பை ஏற்றுக் கொண்டு அதனால் ஏற்பட்ட வளத்தை அனுபவித்துக் கொண்டு அந்த உழைப்பாளி மக்களின் உணர்வுகளை மதிக்கவும், இந்நாட்டின் குடிமக்களாக ஏற்கவும், மறுக்கிறது இலங்கை அரசாங்கம். இது அநீதியானது”.

“இந்திய அரசாங்கம் இன்னொரு நாட்டு மண்ணில் இருக்கும் தங்களின் மக்களுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறது. இலங்கை அரசாங்கம் கொடிய நோயினால் நாசமடைந்த காப்பி பயிர்களை அழித்துவிட்டு, அந்த இடங்களில் தேயிலைச் செடியை நட்டு, பேணி வளர்த்து, வளம் சேர்த்த பத்து லட்சம் தமிழ் மக்களை அனாதைகளாக்கி அல்லலுற வைப்பது மிகவும் கொடுமையானது. இந்தக் கொடூர நிகழ்வுகளைக் காணுகையில், அதிகாரம், மன்னர் ஆதிக்கம், பாராளுமன்ற பலம், படைகளின் சக்தி இவைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது” என சி.வி. வேலுப்பிள்ளை பகிரங்கமாக அறிவித்தார்.

பிரஜாவுரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராக 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி முடிய இலங்கை பிரதம மந்திரியின் அலுவலகம் முன்பு 142 தினங்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. 09.06.1952 அன்று நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட சி.வி.வேலுப்பிள்ளை உட்பட 11 நபர்களை காவல்துறையினர் குதிரைப்படையை ஏவித் தாக்குதல் தொடுத்தனர். பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றி பத்துமணி நேரம் வாகனத்திலேயே காட்டு மிராண்டித்தனமாக அடைத்து வைத்து, குடிநீரோ, உணவோ வழங்காமல் கொடுமை புரிந்தனர்.

தங்களுக்கு விருப்பமான ஒரு தொழிற்சங்கத்தில் சேரத் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக மிகப்பெரிய போராட்டத்தை தியகமையைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கில் அணிதிரண்டு நடத்தினார்கள்.

மலையகத் தோட்டத் தொழிலாளிகள் தாம் நினைத்த நேரத்தில் வெளியேற முடியாமல் காவல் காக்கப்பட்டனர். வெளியேற முயன்று பிடிப்பட்டவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டது. கடுமையான கடன் பளுவை உதறித்தள்ள முடியாத நிலையும், வறுமையும் நிலவியது. ஒரு தோட்டத்தைவிட்டு வெளியேறினாலும் வேறொரு தோட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியாத நிலையும், நிலமான்ய சமூகத்தில் நிலவியது போன்று தொழிலாளியை மண்ணோடு பிணைந்த அடக்குமுறை கோலோச்சியது. மலையக தேயிலைத் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் வேரூன்றிவிடாமல் தோட்ட நிர்வாகம் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டது.

இச்சூழலில் சி.வி.வேலுப்பிள்ளை ஜனநாயக தொழிலாளர் காங்கிரசில் இணைந்து செயற்பட்டார். தோட்டத்துரைமார்கள் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை அங்கீகரிக்க மறுத்தனர். இதன் விளைவாக அக்கரைப்பத்தனை டயகம தோட்டத்தில் சி.வி. வேலுப்பிள்ளை தலைமையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி முப்பத்தெட்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட காவல்துறை, போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது 18.05.1956 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் ஆபிரகாம் சிங்கோ என்ற இளம் தொழிலாளி களப்பலியானார். இந்த தியாகமிக்க போராட்டத்தின் விளைவாக இலங்கை அரசாங்கம் தொழிற்சங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. அச்சட்ட திருத்தத்தின்படி, ஏழு பேர் சேர்ந்து தொழிற்சங்கம் அமைக்க அனுமதியும், பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அங்கீகரிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் சேர்த்து சங்கமாக்கியதுடன், சம்பளம், தொழில் பாதுகாப்பு, மாதச்சம்பளம், ஆண், பெண் சம சம்பளம் முதலியவைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி கண்டார் சி.வி. வேலுப்பிள்ளை.

யட்டிந்தோட்டை உருளவள்ளி தோட்டத்தை இலங்கை அரசாங்கம் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரித்து, அங்கு வாழ்ந்த தொழிலாளர்களை வெளியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தொழிற்சங்கத் தலைவர் கே.ஜி.எஸ். நாயர் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தார்கள். அப்போராட்டத்திற்கு ஆதரவாக அட்டன் பகுதியைச் சேர்ந்த எண்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார் சி.வி.வேலுப்பிள்ளை.

இலங்கை அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, கண்டி மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கரை சுவீகரித்து, அத்தோட்டங்களில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை குடும்பத்தோடு வெளியேற்றியது. திக்கு திசை தெரியாமல் தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பமும் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். அந்த கொடுமையைக் கண்டு சி.வி.வேலுப்பிள்ளை கோபம் கொண்டு,; அவசரமாக, கொள்ளுப்பிட்டியிலுள்ள தேயிலை சபை மண்டபத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும கூட்டினார். நடந்த அநீதிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி, தொழிலாளர்களை மீண்டும் தோட்டத்துக்குள் குடியேற்றச் செய்தார்.

‘இனிப்படமாட்டேன்’ ‘காதல் சித்திரம்’, ‘வீடற்றவன்’, ‘வாழ்வற்ற வாழ்வு’, ‘பார்வதி’, ‘எல்லைப்புறம்’ முதலிய நாவல்களையும், ‘பத்மாஜினி;’ என்ற நாடகத்தையும், ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்ற கவிதை நூலையும். ‘உழைக்கப் பிறந்தவர்கள்’, ‘முதற்படி’ முதலிய கட்டுரை நூல்களையும், ‘மலைநாட்டுப் மக்கள் பாடல்கள்’, ‘மாமன் மகனே’ முதலிய பாடல் தொகுப்புகளையும் மற்றும் ‘வழிப்போக்கன்’ என்ற வசன கவிதை நூலையும் படைத்து தமிழுலகுக்கு அளித்துள்ளார் சி.வி.வேலுப்பிள்ளை.

“தமிழிலும், ஆங்கிலத்திலும் தமது படைப்புகளைச் செய்ததன் மூலம் தமிழின் எல்லைகளுக்கு அப்பாலும், தான் சார்ந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த அவலங்களை அறிமுகப்படுத்தியன் மூலம் இலக்கிய உலகியல் முக்கியத்துவம் பெறுகிறார் சி.வி. வேலுப்பிள்ளை” என இலங்கை இலக்கியத் திறனாய்வாளர் சியாமளா தெரஸா புகழ்ந்துரைத்துள்ளார்.

மலையக இலக்கியத்துக்கு நூற்றைம்பது ஆண்டு பாரம்பரியம் உண்டு. கிராமியப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், தோட்டப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், கதைப்பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் என்றெல்லாம் மலையக மக்களின் அடிமனத்து உணர்ச்சிகளையும், அவர்தம் ஆசாபாசங்களையும் அழகுற வெளிப்படுத்துவனவாகும்.

சி.வி. வேலுப்பிள்ளை மலைநாட்டுப் பாடல்களை தொகுத்து, அவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதழ்களில் வெளியிடும் அரும்பணியில் ஈடுபட்டார். இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழ்களிலும் அவைகளை வெளியிட்டார்.

“ ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ வெறுமனே காதலையும் சாதலையும் சித்தரிக்கும் இதய கீதங்கள் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் ஜீவிய சரித்திரம் முழுவதையும் விஸ்தரித்துக் காட்டுவன” என்று சி.வி. வேலுப்பிள்ளை தமது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

“மலை நாட்டு மக்கள் பாடல்கள் ஒரு சமூகத்தின் உருவாக்கத்தையும், இலங்கையின் வரைபடத்தின் மத்திய பிரதேசத்தில் இருந்திருக்கக் கூடிய வெறும் வனாந்திரத்துக்குப் பதிலாக ஓர் யெவனமிக்க நந்தவனத்தை ரத்தப் பிரதேசத்தை உருவாக்கி இந்தப் பிரமாண்டமான மனித உழைப்பின் மகோன்னத வெற்றியைப் பெரும் அளவு பிரதிபலிக்கும் வரலாற்றுச் சாட்சிகளாகவும் இவை விளங்குகின்றன” என்று ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ என்னும் தமது நூலின் பின்னுரையில் சி.வி. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாட்டுப்பாடல்கள் ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை; அவர்களது கனவுகளின் இலட்சியத் குரலாகவும் விளங்குகின்றன” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலே கண்டிச் சீமைக்கு ஆள் கூட்டிய போது பிறந்த பாடல்கள் முதல், இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து இங்கேயே இறந்தவர்களை எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல்கள் வரை, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் பிரதிபலிக்கும் பாடல்கள் - காதலிலிருந்து கடவுள் வழிபாடுவரை பல்துறைகளைச் சார்ந்த பாடல்கள் - இத் தொகுதியில் இடம் பெறுகின்றன" என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க. கைலாசபதி, சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய ‘மாமன் மகனே’ என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலைத் தோட்டத்தில் தங்கள் இரத்தத்தையும், வியர்வையும் சிந்தி உழைக்கும் பெண் தொழிலாளர்களின் வேண்டுகோளாக வருகைப் பதிவேட்டில் அரை பெயர் போடக் கூடாது என்பதை,

“பொட்டுப் பொட்டா பொஸ்தகமாம்
பொன் பதிச்ச பேனா குச்சியாம்
ஆதரிச்சு பேரு போடும்
ஐயா கணக்கப் புள்ளே
பொழுதும் எறங்கிரிச்சு
பூ மரமும் சாஞ்சிரிச்சு
இன்னம் இரங்கலையா
எசமானே ஒங்க மனம்
அவசரமா நா(ன்) போறேன்
அரே பேரு போடாதீங்க”

என்ற மலைநாட்டு மக்கள் பாடல் மூலம் அறியலாம்.

சி.வி.வேலுப்பிள்ளைக்கு ‘மக்கள் கவிமணி’ என்ற பட்டத்தை 1981 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மலையக இலக்கியப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் கலாநிதி க.கைலாசபதி வழங்கினார். அவர் ஆற்றிய பாராட்டுரையில், “மலையக நாட்டுப் பாடல்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதிகாரப்பூர்வமானதும், நம்பத்தகுந்ததுமான தொகுதியொன்றை வெளியிடும் தகுதி சி.வி.வேலுப்பிள்ளைக்கே உண்டு. ஆசிரியராய், தொழிற்சங்கவாதியாய், பாராளுமன்ற உறுப்பினராய், அரசியல் பிரமுகராய், இலக்கியக் கர்த்தாவாய், பத்திரிக்கை எழுத்தாளராய், இவை யாவற்றிற்கும் மேலாக அப்பழுக்கற்ற மனிதாபிமானியாய் வாழ்ந்து வரும் வேலுப்பிள்ளை அவர்களுக்கு நாட்டுப் பாடல்களில் நாட்டம் இன்று, நேற்று ஏற்பட்டதொன்றல்ல. அவரது ஊனுடனும், உதிரத்துடனும் ஒன்றாகிக் கலந்து விட்ட ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மலைநாட்டுத் தமிழ் மக்கள் தலைவர்கள்’ என்ற தலைப்பில் 1958 ஆம் ஆண்டு ‘தினகரன்’ இதழில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார் சி.வி.வேலுப்பிள்ளை. அத்தொடர் கட்டுரையில் கோ. நடேசய்யர், அப்துல் அஸீஸ், ஜார்ஜ் மேத்தா, கே. இராஜலிங்கம், எஸ்.பி. வைத்தியலிங்கம், குஞ்சுபரிசண்முகம், டி. சாரநாதன், எக்ஸ் பெரைரா, எஸ். சிவனடியான், எஸ். தொண்டமான், சார்லஸ் ஆண்ட்ரூஸ் முதலிய தொழிற்சங்கத் தலைவர்கள் குறித்து எழுதியுள்ளார். மேலும், மலையகத்தில் ஏற்பட்ட தொழில் மாறுதல்கள் தொழிற்சங்க வளர்ச்சி, அரசியல் பாதிப்புகள், சமூக மாற்றங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியன குறித்தும் அக்கட்டுரைத் தொடரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், ‘மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்’ என்னும் தொடரை ‘தினகரன்’ இதழில் எழுதினார். அத்தொடரில் எஸ். சோமசுந்தரம், எஸ்.எம். சுப்பையா, ‘போஸ்’செல்லையா, கே. சுப்பையா, கே. குமாரவேலு, வி.கே. வெள்ளையன், டி.இராமானுஜம், சிவபாக்கியம் பழனிசாமி, எஸ். நடேசன், பி.தேவராஜ், கே.ஜி. எஸ். நாயர் என்ற பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் குறித்து எழுதியுள்ளார் சி.வி.வேலுப்பிள்ளை.

தொழிலாளரும் எழுந்து நின்று போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுள்ளனர். தோட்டங்களுக்குள் தொழிற்சங்கள் வேரூன்றிவிடாமல் தோட்ட நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகளின் பின்னணியில் தான் ‘வீடற்றவன்’ நாவல் விரிகிறது. “கூலிக்காரனுக்கும் பொண்டாட்டியா என்பது சரியாகிவிட்டது. துரைமார் கிளப்பில் இவன் பொண்டாட்டியை அவனும், அவன் பொண்டாட்டியை இவனும் பிடித்துக் கொண்டு இரவிரவாக ஆடுவதைப் பற்றி பேச உரிமை உண்டா? இங்கே என்றால் புருஷன் பொண்டாட்டி சண்டையில் கூட அவர்கள் உள்ளே நுழைவார்கள். தோட்டம் என்பது ஒரு மதில்லாத சிறை” என ‘வீடற்றவன்’ நாவலில் சி.வி.வேலுப்பிள்ளை தொழிலாளர்களின் அவலத்தையும், தோட்டத்துரைகளின் ஆடம்பரமான அசிங்கங்களையும் தோலுரித்துக் காட்டுகிறார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல அவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த உண்மையைத்ததான் ‘வீடற்றவன்’ நாவல் வெளிப்படுத்துகிறது என எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் தொ.மு.சி. ரகுநாதன் இந்நாவலில் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம், சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம், கிராமியத் தோட்ட ஒருங்கிணைப்பு, தோட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் காட்டுமிராண்டித்தனமான இன அடக்குமுறைகள், தாக்குதல்கள் என்பனவற்றால் மலையகத் தமிழர்கள் நாடற்று, நிர்க்கதியான நிலைமைக்கே தள்ளப்பட்டு வந்துள்ளனர். புதிய சவால்களை எதிர்கொள்ளும் திடம் கொள்ளும் நேரத்திலும், தாங்கள் முன்பின் அறிந்திராத, முற்றாகவே தொடர்புகள் அறுந்து போன நிலையிலும் இந்தியாவை நோக்கிச் செல்லத் தவிக்கும் தூரத்துப் பசுமைகளும் யதார்த்த நிலைமையே என்ற இன்றைய மலையகத் தமிழர்களின் கையறு நிலையினை ‘வீடற்றவன்’ நாவல் சித்தரிக்கிறது” என இந்நாவலின் அணிந்துரையில் இலக்கியத் திறனாய்வாளர் மு. நித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாட்டுத் தமிழர்கள் காப்பி, தேயிலை பெருந்தோட்டங்களை உருவாக்க வந்த வெறும் ‘கூலிப்பட்டாளம்’ அல்ல. அவர்களுக்கு நாடு உண்டு. கலாச்சாரம், பண்பாடு, சடங்கு, சம்பிரதாயங்கள், இதிகாசம் எல்லாமே உண்டு என்பதை விளக்குமுகமாகவே ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ (டீழசn வழ டயடிழரச) நூலை எழுதினார் சி.வி.வேலுப்பிள்ளை.

1963 ஆம் ஆண்டு ஆசிய, ஆப்பிரிக்கா கவிதையின் முதலாவது தொகுப்பில் சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதையும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இவரது கவிதைகள் இலங்கை, இந்தியா, சீனா, இந்தோனிசியா, கொரியா, சூடான், ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பிரபலமாகியது. இந்த கவிதை நூல் “வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாக அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும், குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளர்களின் அவஸ்தையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது”.

இத்தொகுப்பில் இடம் பெற்ற தமிழ்க் கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை மட்டுமே.

‘தேயிலைத் தேசம்’ (In Ceylon Tea Garden) உழைக்கும் மக்களைப் பற்றிய படைப்பு, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலைகளை கவித்துவத்துடனும், யதார்த்தத்துடனும் காட்டுகின்றன. ஊனையும், உதிரத்தையும், உயிரையும் ஈந்து இம்மலையக மண்ணை உயிர்ப்பித்த இம்மக்களை தேயிலை மக்கள் என்றும், அவர்கள் உருவாக்கிய இந்த மண்ணைத் தேயிலைத் தேசம் என்று குறிப்பிட்டார் சி.வி. வேலுப்பிள்ளை. இந்நூல் இரஷ்ய மொழியிலும், பின்னர் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.

‘இவர்கள் கிராமம், நகரம் ஆகியவற்றுக்கு வெகுதூரத்தில் லயங்களில் ஒதுக்கப்பட்டு வாழ்கிறார்கள். இலையின் கருமை நிறைந்த சூழ்நிலையிலே, கவ்வாத்து கொழுந்தெடுப்பு ஆகிய அன்றாட செயல்களையே வாழ்வாகக் கொண்ட இவர்கள் தோட்டத்திற்கு வெளியேயுள்ள உலகத்துடன் தொடர்பை இழந்து விடுகிறார்கள். கிராமத்திலும், நகரத்திலும் வாழும் அவர்களது அயலார்களைக் கூட நெருங்க முடியாதென வர்ணிக்கிறார் ஆசிரியர். இன்பமும், துன்பமும் அமைந்துள்ள நன்கு கலந்து தீட்டப்பட்ட ஓவியமாக அமைந்துள்ள நூல் ‘உழைக்கப் பிறந்தவர்கள்’. அத்துடன் பாத்திரங்களுக்கும் ஆசிரியருக்குமுள்ள நெருங்கிய தொடர்பும் இழையோடும் பிரிவும் இதனை சுவைமிக்க நூலாக்கியிருக்கின்றன.

“ ‘உழைக்கப்பிறந்தவர்கள்’ தோட்ட உழைப்பாளர் சமூகத்தைப் பற்றியச் சித்திரங்கள். கர்ண பரம்பரை கதைகள், அவதானிப்புகள் என்பனவற்றை உள்ளடக்கிய சுவை மிகுந்த தொகுப்பாகும். ஆசிரியரின் அனுபவ அறிவு இவைகளுக்கூடாக இழையோடி நூலாகப் பின்னிப்பிணைந்து இனமரபு கட்டுரையாக உயர்வடைகிறது. இந்த நாட்டைத் தாய் நாடாகக் கருதும் எந்த மனிதருக்கும் உழைக்கப் பிறந்த தோட்டத்து மக்கள் உறவினர்களாக கருதப்படல் வேண்டும் என்ற எண்ணத்தை இத்தொகுப்பு ஏற்படுத்துகிறது” என சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்ரமசிங்கா புகழ்ந்துரைத்துள்ளார்.

“சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகள் படிப்பவர் நாடி நரம்புகளில் சூடேற்றும் ஆர்வத்துடிப்பு மிகுந்தவை. இம்மக்களின் வாழ்க்கையே துயரம் மிகுந்தது. குளிர் மிகுந்தது. அட்டைகள் நிறைய உயிர்வாழும் பகுதி அது. அட்டைகள் இரத்தம் குடித்து உயிர்வாழ்பவை. அது இயற்கை நியதி. தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் இயற்கையின் குழந்தைகள். எனவே, அவர்களுக்கு இந்நியதியைத் தவிர வேறு நியதி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அதை முழுதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்று எழுத்தாளர் எஃப்.டி.சில்வா இத்தொகுப்பின் முகவுரையில் பதிவு செய்துள்ளார்.

சி.வி. வேலுப்பிள்ளை 19.11.1984 அன்று காலமானார். எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் பார்வையாளனாக மட்டும் இருக்கக் கூடாது. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக போராடுபவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர் சி.வி. வேலுப்பிள்ளை.

இலங்கை அரசாங்கம் சி.வி. வேலுப்பிள்ளைக்கு நினைவு முத்திரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ‘வீடற்றவன்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.

சி.வி. வேலுப்பிள்ளை இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட வேண்டும்.

சி.வி. வேலுப்பிள்ளை பிறந்து வாழ்ந்த இடத்தில் அவருக்கு சிலை எழுப்ப வேண்டும். அவர் வாழ்ந்த இல்லம் அவரது நினைவிடமாக்கப்பட வேண்டும்.

“மலையகத் தோட்டப் பாட்டாளி மக்களின் துன்ப துயரங்களை, சோகப் பெருமூச்சுகளை, உழைப்பு ஒன்றைத் தவிர, வேறொன்றும் அறியாத, வாயிருந்தும் பேச முடியாத அந்த ஊமை ஜனங்களுடைய வாழ்வின் அவலங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிச் சர்வதேச அரங்கில் அவர்களது நிலைமையை எடுத்துக் காட்டியவர் சி.வி. வேலுப்பிள்ளை” என ஈழத்து எழுத்தாளர் அந்தனி ஜீவா புகழரம் சூட்டியுள்ளார்.

“தேயிலை உள்ளவரை, தேயிலை மக்களைப் பற்றி சிந்தித்த சி.வி. வேலுப்பிள்ளையின் படைப்புகளும் நின்று நிலைக்கும் என்பது உறுதி” என ஈழத்து எழுத்தாளர் சாரல் நாடன் பதிவு செய்துள்ளார்.

“வியர்வை வடித்து
கூலியாய் உழைத்து
வெறுமையுள் நலிந்து
வீழுவது எல்லாம்
துயரக் கதையினும்
துன்பக்கதை. அதைத்
தொனிக்குதே பேரிகைத் (தப்பொலி)
துடி ஒலிக்குமுறல்” - சி.வி. வேலுப்பிள்ளை

- பி.தயாளன்

Pin It

zoroastriasm

தெரிந்த விசயத்திலிருந்து தொடங்கி தெரியாத விசயத்தில் முடிப்பதா? இல்லை, தெரியாத விசயத்தில் தொடங்கி, தெரிந்த விசயத்தில் முடிப்பதா என்று இந்தக் கட்டுரையை எழுத (இப்பொழுதெல்லாம் யார் சார் எழுதுகிறார்கள்!) உட்கார்ந்தபோது சிறிது தயக்கம்... பிறகு தெரிந்த விசயத்திலிருந்தே தெரியாத விசயத்திற்குப் போகலாம் என்று முடிவு செய்து எல்லோருக்கும் தெரிந்த டாட்டா பிர்லா-வில் இருந்து தொடங்குகிறேன்.

அப்ப அது என்ன தெரியாத விசயம் என்றால் இந்தக் கட்டுரையின் தலைப்பை இதற்கு முன்பு நீங்கள் வேறு எங்கும் கேள்விப்படாதிருந்தால் அப்பொழுது அதுதான் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் தெரியாத விசயம். போன தலைமுறை மனிதர்கள், பண விசயத்தில் ஓட்டைக் கையாக இருப்பவர்களைப் பார்த்து ‘இவரு பெரிய டாட்டா பிர்லா... அப்படியே அள்ளிவிடராரு' என்று பல்லைக் கடிப்பதைப் பார்த்தோ, கேட்டோ இருக்கலாம். ஆனால் இந்த டாட்டா பிர்லாவின் பூர்வீகம் குறித்து கேள்விப்பட்டது கொஞ்சமாகத்தான் இருக்கும்.

அது என்ன வீகம், பூர்வீகம் என்றால் 200, 300 வருடப் பூர்வீகமெல்லாம் இல்லை... 3500-லிருந்து 3700 வருடங்களுக்கு முந்தைய பூர்வீகம் டாட்டா, பிர்லாக்களுக்குப் பின்னால் இருக்கிறது. உடனே நீங்கள் முதுகை நிமிர்த்திக் கொண்டு எழுந்து உட்கார்ந்தால், ஏன் இப்பொழுதே முதுகை விரைப்பாக்குகிறீர்கள் என்று கேட்கமாட்டேன். நான் சொன்னது டாட்டா, பிர்லாக்களுக்குப் பின்னால் என்று... அதாவது டாட்டாவும், பிர்லாவும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களோ அந்த இனத்திற்குப் பின்னால் 3700 வருட வரலாற்றுப் பழமை இருக்கிறது.

இந்தியாவில் இந்தியர்களில் ஒருவராக நம் சகோதரர்களாக இருக்கும் பார்சிகளைப் பற்றி நீங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். அவ்வளவாக உங்களுக்கு இவர்களைக் குறித்த அறிமுகம் இருந்திருக்காது. ஆனால் சிலரின் பெயரைச் சொன்னால் உடனடியாக உங்களுக்குத் தெரிந்துவிடும்... அதனால்தான் டாட்டாவையும், பிர்லாவையும் எடுத்தேன். இவர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மாத்திரம் அல்ல, இன்னும் பெயர் சொல்லும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களும் கூட உங்களுக்கு நன்றாகவே பரிச்சயம் ஆகியிருக்கும். ஆனால் அவர்களின் பெயரைக் கொண்டு ஒன்று அவர்களை இந்துவாகவோ அல்லது இஸ்லாமியராகோ அடையாளப் படுத்தியிருப்பீர்கள். உதாரணமாக, Ardeshir Godrej, இந்தியாவின் சிறந்த தொழில் குழுமங்களில் ஒன்றான Godrej குழுமத்தை நிறுவியவர். Farok Engineer சிறந்த கிரிக்கெட் வீரர். Homi Bhabha இந்திய அறிவியல் கழகத்தின் முன்னோடி மற்றும் Feroze Ghandhi, Dadabhai Naoroji.

இந்தியாவிற்குள் பார்சிகள் நுழைந்தது கி.பி. 8 தொடங்கி 10-ஆம் நூற்றாண்டுகளின் இடைவெளியில். இந்தியாவில் இவர்களைப் பார்சிகள் என்றாலும், பொதுவாக இவர்களை சொராஸ்டர்கள் (Zoroasters) என்பார்கள். இவர்களுக்கும் தஞ்சைப் பகுதியில் இருக்கும் சொவ்ராஸ்டிரர்களுக்கும் (Sourashtras) தொடர்பு கிடையாது. தஞ்சைப் பகுதி சொராஸ்டிரர்கள் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். மராட்டியர்களின் தென்னகப் படையெடுப்போடு சேர்ந்து தமிழகத்திற்கு வந்த குஜராத்திகள் சொவ்ராஸ்டிரர்கள் (Sourashtras).

சொராஸ்டர்கள் (Zoroasters), ஈரானைப் பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களின் பூர்வீகம் ஈரானின் வட மேற்குப் பகுதிகளில் இருந்து, கி.மு. 3800-களில் இடம் பெயரத் தொடங்கி, ஆரிய கால்நடை மேய்ப்போர் இனத்திலிருந்து தொடங்குகிறது. இடம் பெயரத் தொடங்கிய ஆரிய இனத்தின் ஒரு கிளையானது, அன்றைய ஈரானின் Sistan பகுதிகளுக்குள் நுழைந்தது. இப்படி கிளையாகப் பிரிந்த ஆரிய கால்நடை மேய்ப்போர் இனத்தின் ஒரு கிளை தான் கைபர் கணவாய் வழியாக வட இந்தியப் பகுதிகளுக்குள் நுழைந்தது. பிற்காலத்தில் அலை அலையாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தது வேறு வரலாறு.

ஈரான் பகுதிகளுக்குள் புகுந்த ஆரிய இனத்தின் குழுவிற்கு மதப் போதகராக இருந்தவர் Zarathustra. இவரின் பெயரிலேயே Zoroastrinism என்கிற மதம் உருவானது. கிரேக்கத்தில் இவரை Zoroaster என்பார்கள். இங்கே இருக்கும் Zarathustra-வின் ஓவியத்தைப் பார்த்ததும் தவிர்க்க முடியாமல் “I am the way, the truth and the life” என்று சொல்லும் இயேசுவின் ஓவியம் நினைவிற்கு வரலாம். இயேசு கிருஸ்துவிற்கு முன்பே Rightesouness குறித்து மிகவும் வலியுறுத்தியவர் Zarathustra.

இது மாத்திரம் அல்ல... Triad என்று சொல்லப்படும் Trinity (திரித்துவம்), இறுதித் தீர்ப்பு நாள், ஏக இறைத்துவம் என்று இப்படி பல விசயங்களைப் பற்றி Zarathustra கி.மு. 1500 வருடங்களுக்கு முன்பே Avesta என்கிற zoroaster-களின் புனித நூலில் சொல்லியிருக்கிறார். சரதுஸ்டரா (Zarathustra) மிகச் சரியாக எந்த காலகட்டத்தில் வாழ்ந்தார் என்பதில் குழப்பமே நீடிக்கிறது. அவர் வாழ்ந்த காலகட்டத்தைக் குறிப்பிடும் வரலாற்று தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைத்தபாடில்லை. ஆனால் இலக்கிய ஆதாரங்கள் ஏகப்பட்டது அவர் பற்றி இருக்கிறது. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான பிளைனி போன்றவர்கள் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். இதில் முக்கியமானது zoroaster-களின் புனித நூலான Avesta. இது ஏக இறைவன் மூலம் சரதுஸ்டராவிற்கு அறிவிக்கப்பட்டது என்று zoroaster-கள் நம்புகிறார்கள். இந்தப் புனித நூல் சரதுஸ்டராவிற்கும் ஏக இறைவன் என்று அவர் குறிப்பிடும் Ahura Mazda-விற்கும் இடையே நடக்கும் உரையாடல் அமைப்பில் அமைந்த நூல்.

சில ஆராய்ச்சியாளர்கள் சரதுஸ்டராவே Avesta-வை இறைவனுக்கும் அவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் தொனியில் எழுதியது என்று கருதுகிறார்கள். சரதுஸ்டரா ஒருவரா அல்லது பல பேர்கள் பல காலகட்டங்களில் இந்தப் பெயரில் இருந்தார்களா என்பதும் ஆராய்ச்சிக்குரிய விசயமாக இருந்து வருகிறது. கிரேக்க இலக்கியத்தில் மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல சிலர் சரதுஸ்டரா பெயரைப் புனைப் பெயராகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். Avesta 17 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் கதா (Gathas) என்று அழைக்கப்படுகிறது. பெயரில் சமஸ்கிருத வாடை வருகிறதே என்று நீங்கள் சற்று உங்களின் தேடல் புலனை உசுப்பிவிட்டிருந்தால் அது சரியே. நாம் முன்பே பார்த்ததுப் போல Zoroaster-கள் ஆரியர்களின் ஒரு கிளை இனம் என்பதால் அவர்களின் சிந்தனைகளிலும் மொழியிலும் சமஸ்கிருதத்தின் மூல மொழியே பெரிதும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

Avesta ஒட்டுமொத்தமாக 17 கதாக்களைக் கொண்ட ஒரு நூல் போல தோற்றம் அளித்தாலும், அதில் இரண்டு நூல்கள் இருப்பதை 19-ஆம் நூற்றாண்டில்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டார்கள். ஒன்றிற்கு Young Avesta (புதிய) என்றும், மற்றொன்றிற்கு Old Avesta (பழைய) என்றும் பெயர் கொடுத்திருக்கிறார்கள். புதிய அவெஸ்டா பெரும்பாலும் பழைய அவெஸ்டாவில் சொல்லப்பட்டுள்ளவைகளை திரும்ப சற்று திருத்தி சொல்வது போலவே அமைந்திருக்கிறது. பழைய அவெஸ்டாவின் காலம் கி.மு. 1700 -1200 என்றும், புதிய அவெஸ்டாவின் காலகட்டம் கி.மு. 1200 – 1000 என்றும் பொதுவாக வகை பிரித்திருக்கிறார்கள். இது மிகச் சரியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் ரிக் பாடப்பட்ட காலத்தை ஒத்திருக்கிறது. ஆரிய - திராவிடம் என்கிற கருத்தாடலே பெரிய மோசடி என்று மோசடியாகப் பேசும் உதடுகள் இத்தகைய பிற வரலாற்று ஆதாரங்களையும் சற்று படிக்க வேண்டும். படித்தாலும் மோசடி பேசிய உதடும், புரட்டு செய்யும் நாக்கும் சும்மாவா இருக்கும்!

ஈரானின் வட மேற்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்து கால்நடைகளை கிளப்பிக்கொண்டு பெரும் எண்ணிக்கையில் (என்ன சுமார் ஆயிரக் கணக்கில் இருக்குமா என்று நீங்கள் சிந்தித்தால் உங்கள் சிந்தனையில் சிறிது திருத்தம் வேண்டும். அது ஆயிரக் கணக்கில் அல்ல, இலட்சக் கணக்கில்) தென் கிழக்கு திசையில் நகரத் தொடங்கிய ஆரியர்களின் ஒரு பகுதி அன்றைய பெர்சிய (Persia) நிலப்பகுதியான Sistan-ற்குள் நுழைகிறது. இது இன்றைய Afghanistan, Uzbekistan மற்றும் Tajikistan பகுதிகளில் இருக்கிறது. இது கி.மு. 1800-களில் நடைபெறுகிறது. ஆரிய இனத்தின் ஒரு கிளையான Zoroaster-களின் பூர்வீகம், அதாவது அவர்கள் இடம் பெயர்ந்து பெர்சியப் பேரரசு பகுதிகளுக்குள் நுழைந்து, முதன் முதலில் தங்கிய இடம் Azerbaijan அல்லது Rag என்று Pahlavi ஏடுகள் சொல்கின்றன. Pahlavi என்பது அன்றைய அதாவது கி.மு. 800 – 200 நூற்றாண்டுகளில் பெர்சிய பேரரசில் பெர்சிய மொழியான Pahlavi-யை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம். இது பழைய ஆராமிக் (Aramaic) மொழியில் இருந்து வளர்ந்த மொழி.

Zoroaster-கள் Rag பகுதிக்குள் நுழைந்த காலகட்டங்களில் பெர்சிய நிலப் பகுதியில் மிகவும் பலம் வாய்ந்த பேரரசுகளாக இருந்தவைகள் பாபிலோனியா மற்றும் எகிப்து. இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் சிந்துவெளி திராவிட பேரரசுகளை மட்டுமே எதிர்கொண்டார்கள். ஆனால் Zoroaster-களின் நிலை வேறாக இருந்தது அவர்கள் நாலாபக்கமும் இரண்டு பேரரசுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்தானோ என்னவோ சிந்துவெளிக்குள் நிறையவேற்றிய சோமபான போர் சித்துவேலைகளை மத்திய கிழக்கு பகுதிகளுக்குள் காட்ட முடியவில்லை. ஆரிய இனத்தில் மதத் தேவைகளை நிறைவேற்ற தனியாக ஒரு பிரிவினர் உண்டு. ரிக் அவர்களை ரிஷிகள் என்று சொல்கிறது. அப்படியான ஒரு பிரிவில் இருந்து வந்தவராக சரதுஸ்டரா இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சரதுஸ்டராவைப் பொருத்த மட்டில் இந்த பூமியையும் பிரபஞ்சத்தையும் படைத்து காப்பது Ahura Mazda (Wise Lord). அப்படியே மாஸ்தா இரண்டு சக்திகளைப் படைக்கிறார். ஒன்று Spenta Mainyu மற்றது Angra Mainyu (Ahriman).

Spenta Mainyu அறச் செயல்களை, உண்மையை, ஒளியை, வாழ்வை விரும்பும் சக்தி. Mainyu அழிவை, வஞ்சகத்தை, இருளை, மரணத்தை விரும்பும் சக்தி. இந்த இரண்டு சக்திகளுக்கு இடையே நடக்கும் ஓயாத சண்டைதான் உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பதாக சரதுஸ்டிரா அவெஸ்டாவில் மறை பொருளாக உணர்த்துகிறார். மித்ராவையே Ahura Mazda என்று சரதுஸ்டிரா குறிப்பிடுகிறார். வருண மித்ராவேதான். ரிக்-கில் பரிச்சயம் உடையவர்களுக்கு இந்த மித்ரா யார் என்று தெரியும். வருண மித்ரா என்றால் இன்னும் நன்றாகவே தெரியும். ஆரியர்கள் மித்ராவையும், வருணாவையும் இரட்டைச் சகோதரர்களாகவே பாவித்தார்கள். சிந்துவெளிக்குள் புகும் காலகட்டங்களுக்கு முன்பாக பாடப்பட்ட ரிக் ஸ்ருதிகளில் வருண மித்ரா மிகவும் உயர்வாகப் போற்றப்படுகிறார்கள். வருண மித்ரா ஓளிக் கடவுளாக பார்க்கப்பட்டார்கள்.

ஆரியர்கள் சிந்துவெளிக்குள் புகுந்து, சிந்துவெளி திராவிடப் பேரரசுகளை எதிர்கொள்ளத் தொடங்கியதும், வருண மித்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்திரன் முக்கியத்துவம் பெறுகிறான். ரிக்-கில் இந்திரன் ஆரியர்களின் போர்த் தளபதிகளில் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிறான். இந்த இந்திரன் ஆரியர்களின் போர்த் தளபதியா அல்லது சிந்துவெளி திராவிட அரசர்களின் தளபதிகளில் ஒருவனா என்பது ஆராய்ச்சிக்குரிய விசயம். சில ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி திராவிட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டதன் காரணமாக இந்திரன் என்னும் திராவிட அரசன் ஆரியர்களுடன் சேர்ந்து கொண்டு தனது இனத்தை எதிர்த்தான் என்று கருதுகிறார்கள். இது இந்த கட்டுரைக்கு அப்பாற்பட்ட விசயம் என்பதால் மீண்டும் மித்ர வருணாவிற்கே செல்வோம்.

சரதுஸ்டரா வருணனைக் குறிப்பிடவில்லையென்றாலும் வருணனின் குணாதியசங்களையும் மித்ராவான Ahura Mazda-வின் இயல்புகளாக சித்தரிக்கிறார். Spenta Mainyu மற்றும் Angra Mainyu இடையே நடைபெறும் சண்டையில் Ahura Mazda, Spenta Mainyu-வுக்கு உதவுகிறார். இதற்காக அவர் மேலும் ஆறு amesha spentas-களைப் படைக்கிறார். இந்த ஆறு spentas-களில் குறிப்பாக Vohu Manah (நன் மதி) என்கிற spenta-வை இந்த காரியத்திற்கு Ahura Mazda பயன்படுத்துகிறார். அவெஸ்டாவின் பல கதாஸ்-களில் Vohu Manah பல முறை முதன்மையானதாக கையாளப்பட்டிருக்கும். நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெறும் சண்டை குறித்த கருத்தாக்கம், மித்ர (Ahura Mazda) வழிபாடு, ஒளியின் அடையாளமான (மித்ராவின்) நெருப்பை வழிபடுவது ஆகியவைகள் சரதுஸ்டராவால் அவெஸ்டா புனித நூல் வழியாக ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது. அவெஸ்டா திரித்துவம் (Trinity), இறுதித் தீர்ப்பு (The Judgement Day) நாள் பற்றியும் பேசுகிறது.

மித்ரா (Mithra - divine judge), ராஸ்னு (Rašnu - the god of righteousness) மற்றும் சரோசா (Sraoša - the god of obedience) ஆகிய மூவரும் இந்த உலகத்தின் முடிவான இறுதித் தீர்ப்பு நாளில் மனிதர்களின் நன்மை தீமைகளை எடை போட்டு நியாயம் வழங்குவார்கள் என்று அவெஸ்டா குறிப்பாக சொல்கிறது. இந்த திரித்துவ கருத்து அன்றைய அதாவது கி.மு. 2000-களில் மத்தியத் தரைக் கடல் பகுதி முழுவதும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. Zoroaster-களின் சம காலத்தவரான Elamite-களும் திரித்துவம் பற்றிப் பேசுகிறார்கள். Elamite-கள் குறித்த பைபிலின் பழைய ஏற்பாடு பேசுகிறது. ஆனால் அவர்களிடம் இருந்த திரித்துவக் கருத்துக்களைப் பற்றி அல்ல என்பது வேறு விசயம். Elamite-களின் Inshushinak, Ishnikarab மற்றும் Lagamar ஆகியவர்கள் இறுதித் தீர்ப்பு நாள் அன்று மனிதர்களின் நன்மை தீமைகளை வகை பிரித்து அவர்கள் நியாயம் வழங்குவார்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

இதே திரித்துவம் கிருஸ்தவத்தில் ஏக இறைவன் (The God Almighty), The Son (Jesus the Savior) மற்றும் பரிசுத்த ஆவி (The Holy Spirit) என்று சொல்லப்படுகிறது. இயேசு கிருஸ்து திரித்துவம் குறித்த பேசினாரா என்பது ஆராய்ச்சிக்குரிய விசயமென்றாலும் இயேசுவிற்கு முன்பே திரித்துவம் என்னும் கருத்து மத்திய தரைக் கடல் பகுதிகளில் ஏறத்தாழ 2000 வருடங்களாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. யூதர்கள் திரித்துவும் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் திரித்துவத்தை நம்புவதும் இல்லை. ஆனால் முதல் தலைமுறை யூத கிருஸ்தவர்களான இயேசு கிருஸ்துவின் சீடர்கள் திரித்துவக் கொள்கையை எங்கிருந்து பெற்றார்கள் என்பது விளக்கப்பட வேண்டிய விசயம். இயேசு கிருஸ்து நிச்சயம் அன்றைய காலகட்டத்தில் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் வழக்கிலிருந்த Zoroastrianism குறித்து அறிந்திருந்திருக்க வேண்டும். நன்மை, தீமை, நீதி (righteousness), ஒளி (light) குறித்துப் பேசும் இயேசு கிருஸ்து திரித்துவம் குறித்துப் பேசுவதில்லை.

பிறகு எப்படி திரித்துவம் கிருஸ்தவத்திற்குள் வந்திருக்க வேண்டும் என்பதற்கு விடை திரித்துவக் கொள்கை என்பது அன்றைய காலகட்டத்தில் Zoroastrianism மற்றும் Elamite-களின் மதங்களில் வழக்கிலிருந்த ஒரு விசயம். மனிதர்கள் நீதி தவறி நடப்பார்களேயானால் அது மிகப் பெரிய பாவமாக அன்றைய மத்திய தரைக் கடல் மதங்களான Zoroastrianism-த்திலும் Elamite மதத்திலும் வகைப்படுத்தப்பட்டது. Zoroastrianism-த்தில் இப்படி நீதி தவறி நடப்பதே பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம். அப்படிப்பட்டவர்களை Mithro-Druj (sinners against Mithra) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கிருத்தவத்தை வெளியில் இருந்து அணுகுபவர்கள் ஏன் கிருத்தவத்தவர்களே கூட இத்தகைய விசயங்களைக் குறித்து அதிகம் கண்டுகொள்ளவதில்லை. கிருத்தவத்தைத் தாக்குபவர்கள் திரித்துவ கருத்தாக்கத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசாமல் மொட்டையாக திரித்துவம் இயேசுவில் இருந்தே தோன்றியதாக வாதங்களை முன்வைக்கிறார்கள். இந்த வாதங்களை எதிர்கொள்ளும் கிருஸ்தவர்களும் திரித்துவ கருத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அதற்கான விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள்.

அடுத்து இயேசுக் கிருஸ்து கிருஷ்ணரின், திருமாலின் அவதாரம் என்று கதை கட்டுபவர்கள் அவர்களுடைய ஆரிய கிளைப் பிரிவான zoroaster-கள் குறித்து மூச்சே விடமாட்டார்கள். மூச்சு, பேச்சு காட்டினால் அவர்கள் வந்தேறிகள் என்பது சபை ஏறிவிடும் என்கிற காரணத்தால். எங்களுடைய கிளையினமான zoroaster-களின் இறுதித் தீர்ப்பு நாள் திரித்துவக் கொள்கை பார்த்தீர்களா... கிருத்தவம் வரை பிரதிபலித்திருக்கிறது என்று கருத்துச் சொல்வார்களா என்றால்...?

ஈரானில் கி.மு. 1700-களில் தோன்றிய Zoroastrianism, Achaemenid பேரரசு காலம் (கி.மு.550–330), Seleucid பேரரசு காலம் (கி.மு. 323–129), Parthian பேரரசு காலம் (கி.மு. 247– கி.பி. 224) மற்றும் Sasanian பேரரசு காலமான கி.பி. 224–651 வரை ஈரான் தொடங்கி மத்திய தரைக் கடல் பகுதியின் பல பகுதிகளில் வழக்கிலிருந்தது. இதைத் தோற்றுவித்த சரதுஸ்டரா ஒருவரா அல்லது ஒரு குழுவின் பெயர் சரதுஸ்டராவா என்பதெல்லாம் இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. அவெஸ்டாவில் சரதுஸ்டரா தன்னை இறைவனின் இறைத் தூதராக பாவித்துக் கொள்கிறார். Ahura Mazda நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெறும் சண்டை குறித்து தன்னிடம் சொன்னதையே அவெஸ்டா என்கிற புனித நூலாக எழுதியதாக சொல்லிக் கொள்கிறார்.

(இந்த இடத்தில் Manichaeism என்று சொல்லப்படும் ஒரு மதக் கருத்தும் குறிப்பிடத்தக்கது. இது ஈரானில் பெரிசிய மானி (Mani) என்பவரால் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டது. Manichaeism-த்தில் இறைவன் Zurvan என்று அழைக்கப்படுகிறார். இந்த மதக் கருத்திலும் நன்மைக்கும் (Good) தீமைக்கும் (Evil) இடையே சண்டை நடக்கிறது. Ormazd என்பவர் நன்மை விரும்பி, Ahriman என்பவர் இருளின் பக்கம் நிற்பவர். இந்த மதத்தில் Zoroastrianism, Elamite, Christianity மற்றும் Buddhism ஆகியவற்றின் தாக்கம் இருக்கின்றன).

- நவீனா அலெக்சாண்டர்

Pin It