vallikannu. 350jpgகவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், நாடக ஆசிரியர், இலக்கிய வரலாற்றா சிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட படைப்பாளி வல்லிக்கண்ணன்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டாரம் திசையன்விளையில், ரா.மு.சுப்பிரமணியம் பிள்ளை, மகமாயி அம்மாள் வாழ்விணையருக்கு 12.11.1920 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ணசுவாமி. இவரது தந்தையார் சுங்கத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றினார்.  தமது பத்து வயதில் தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.

கோவில்பட்டி, பெருங்குளம் முதலிய ஊர்களில் தமது தொடக்கக் கல்வியையும், திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர், பாளையங்கோட்டை புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புடன் அவரது படிப்பு முடிவடைந்தது.

பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போது வல்லிக்கண்ணனின் எழுத்துப் பணி குறித்து, வேளாண்மை விரிவு அலுவலர் அந்தோணிப் பிள்ளை என்பவர் உயர் அதிகாரிக்குப் புகார் செய்தார். இதனால், தமது அரசுப் பணியினை உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளி யேறினார். 1941 ஆம் ஆண்டு முதல் தமது வாழ்க்கையை எழுத்துப் பணிக்கு அர்ப்பணித்தார்.

உலக அளவிலும், இந்திய அளவிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையையும், செயல்பாடுகளையும் படித்தார். அவை அவரது சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

`மணிக்கொடி’ இதழ்களின் தொகுப்பைப் படித்து, அவ்விதழ்களில் புதுமைப்பித்தன் கதைகளைப் படித்து, அக்கதைகளினால் ஈர்க்கப்பட்டு, தாமும் அதுபோன்று எழுத வேண்டும் என ஆர்வம் கொண்டு, தமது கதை களை இதழ்களுக்கு அனுப்பினார்.

தமது சொந்த ஊர்ப் பெயரான இராசவல்லிபுரம் என்பதிலுள்ள வல்லி என்ற பெயரையும் இணைத்து வல்லிக்கண்ணன் என்ற பெயரை உருவாக்கினார். இப் பெயர் மூலம் இவரது பிறந்த மண் பற்றையும், தமிழ் மொழிப் பற்றையும் உணர்த்துகிறது.

வல்லிக்கண்ணன் `கிராம ஊழியன்’ இதழின் பொறுப்பாசிரியராக 1944 முதல் 1947-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். `இளவல்’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதினார். அழகு, திங்கள், அந்திவானம், மழை போன்ற இயற்கைகளை பாடுபொருளாக்கி கவிதைகள் படைத்துள்ளார். இவரது கவிதைகள் அழகுணர்ச்சி மிகுந்தவையாகும். மகாகவி பாரதி யாருக்குப் பின் காட்சிக் கவிதைகள் படைத்து வெற்றி கண்டவர்களுள் வல்லிக்கண்ணன் குறிப்பிடத்தக்கவர்.

“சுதந்திரம் வந்தது

சுகம் தான் வந்ததோ?

உம்மைச் சேர்ந்தோரே

உம் பேர் சொல்லித்

தாம் உயர வகை கண்டனர்!”

என்ற கவிதையின் மூலம் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், அதனால் பலன் பெறுவதற்கு வழிகண்ட சுயநலவாதி களை அம்பலப்படுத்துகிறார்.

“நீவிர்

அன்று போல் இன்றும்

ஏழையாய் தரித்தரராய்

பட்டினிப் படையினரால்

உண்ண உணவும்

உடுக்க உடையும்

உறையுள் வசதியும்

பெற்றிட இயலாப் பூச்சிகளாய்

உழைத்துச் சலித்து,

வரிகளும் உயர்விலைகளும்

கொடுத்துச் சோர்ந்து

எவர் ஆண்டால் நமக்கென்ன?”

ஏழை மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாழும் அவல நிலைகண்டு குமுறுகிறார். வல்லிக் கண்ணனின் கவிதைகள் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காணும் வகையிலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகவும், தொழிலாளர்களின் நலம் நாடு பவைகளாகவும் அமைந்துள்ளது. மேலும் இன்றைய மானுட வாழ்க்கையின் அவல நிலையைக் கண்டு வெதும்பி உள்ளம் குமுறி தமது கவிதைகளைப் படைத் துள்ளார்.

அமர வேதனை, புதுக்குரல்கள் முதலிய கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வல்லிக்கண்ணன் காலத்தின் தாக்கத்திற்கு உட்படுபவராகவும் அதே காலத்தின் மீது தமது தாக்கத்தைச் செலுத்துபவராகவும் விளங்குகிறார்.

வல்லிக்கண்ணன் 1950-ஆம் ஆண்டு `விடியுமா?’ என்னும் நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் ஓட்டல் தொழிலாளர்களின் சிக்கல்களையும், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் சித்திரிக்கிறது.

Òநட்ட கல்லைக் குளிப்பாட்ட வெள்ளிக்குடங் களிலே பாலா? ஆகா நாட்டிலே பட்டினிப் பட்டாளம் பெருத்துக் கிடக்கு, பச்சைக் குழந்தைகள் பாலுக்கு பறவாப் பறக்குது. தினந்தோறும் குடம், குடமாகப் பால் சாக்கடையிலே போய்ச் சேருது, அபிசேகமாம், புண்ணியமாம், இது மாதிரி அநியாயம் வேறு எந்த நாட்டிலேயாவது நடக்கிறதா? இந்த நாடு விடியுமா?” இது அவரது Ôவிடியுமா?Õ என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ள வசனமாகும்.

செவ்வானம், வசந்தம் மலர்ந்தது, வீடும் வெளியும், ஒரு வீட்டின் கதை, அலைமோதும் கடல் ஓரத்தில், இருட்டு ராஜா, நினைவுச்சரம் முதலிய நாவல்களை எழுதி உள்ளார். வல்லிக்கண்ணன் தமது பதினாறு வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். அவரது முதல் கதை `சந்திர காந்தக்கல்’ பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. கல்யாணி முதலிய சிறுகதைகள், மத்தாப்புச் சுந்தரி, ராதை சிரித்தாள். ஒய்யாரி, அத்தை மகள், முத்தம், ஆண் சிங்கம், அருமை யான துணை, மனிதர்கள் உள்ளிட்ட 19 சிறுகதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். கடலில்  நடந்தது (மார்க்சிம் கார்க்கி), டால்ஸ்டாய் கதைகள், மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் முதலிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது `பெரியமனுஷி’ என்னும் சிறுகதை உலகத்துச் சிறுகதைகள் ஆங்கில மொழித் தொகுப் பிற்காக இந்திய மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு, வெளியிடப்பட்டது. மேலும், ‘Stories from Asia Today;  என்னும் ஆங்கிலத் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.

'இன்றைய சமுதாயம் பிளவுண்ட சமுதாயம், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என வர்க்கப் பிரிவும், தொழிற் பிரிவும் மக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. இது போன்றே மக்கள் அரசியல் வாதிகள் என்ற பிளவும் மக்களிடம் காணப்படுகிறது. மக்கள் வாக்களிப்பவராகவும், அரசியல் வாதிகள் வாக்குகளைப் பெறுபவராகவும் உள்ளனர். மேலும், வாக்களிக்கும் மக்கள் அரசியல் வாதிகளிடமிருந்து எதிர்பார்ப்பவர்களாகவும், எதிர்பார்க்கின்ற மக்களை அரசியல்வாதிகள் வஞ்சிப்பவர்களாகவும் உள்ளனர்”,  என்ற இன்றைய நடப்பை `வள்ளல்தனம்’ என்னும் தமது சிறுகதையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமுதாயத்தில் காணப்படும் சிக்கல்களும், அவற்றை நீக்குவதற்கான தீர்வுகளும், அறிவியல், சமுதாயவியல், உளவியல் அடிப்படையில் வல்லிக்கண்ணனின் சிறு கதைகள் உள்ளது என திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திட, வாழ்க்கைத் துன்பங்களுக்கான உரிய காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண தமது கதைகளில் வலியுறுத்தியுள்ளார்.

பாரதிக்குப்பின் தமிழ் உரை நடை, பாரதிதாசனின் உவமை நயம், எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் - விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதலிய அழியாக் கட்டுரை நூல்களை எழுதி அளித்துள்ளார்.

இவரது 'எழுத்தாளர்களும் பத்திரிக்கைகளும்' என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசளித்துப் பாராட்டியது.

'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் இவரது நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

கோவையில் 1944-ஆம் ஆண்டிலும், சென்னையில் 1946-ஆம் ஆண்டிலும் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாடுகளில் கலந்து கொண்டார். அம்மாநாடுகளில் மகாகவி பாரதியாரின் பாடல்கள் நாட்டுடைமை யாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து அதற்காகப் பாடுபட்டார்.

திருச்சியில் 1947-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறு பத்திரிகைகள் மாநாட்டிற்கு வல்லிக்கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார்.

“இலக்கியத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் கனமாக சிந்தனைகள் பரவுவதற்கும், திறமையான எழுத்தாளர்கள் வளரவும் சிறு பத்திரிகைகள் உதவ முடியும்” என்பதை வலியுறுத்தினார்.

மக்கள் கலாசாரத்தை மண்ணாக்கும் திரைப்படம், மேற்கத்திய கலாசார சீரழிவு, பெண்களை வணிகப் பொருளாகப் பாவிப்பது முதலியவற்றை எதிர்த்து படைப்பாளிகள் தங்களின் எழுதுகோலை உயர்த்திட வேண்டுகோள் விடுத்தார்.

எண்ணத்தையும், எழுத்தையும் உயர்வாக மதித்தவர். எழுதுவதையும் சொல்வதையும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர். சாதி, மன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். இளம் எழுத்தாளர்களையும் படைப் பாளர்களையும் ஊக்கப்படுத்தி, ஆதரவளித்தவர். தமிழ் இலக்கிய உலகில், `இலக்கிய பீஷ்மர்’, `இலக்கிய ரிஷி’ எனப் போற்றப்பட்டவர்.

வல்லிக்கண்ணன் சென்னையில் வாழும்போது நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 09.11.2006-அன்று தமது 86ஆவது வயதில் மறைந்தார்.

Pin It