அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உயிரினங்கள் சில குறிப்பிட்ட செடிகள் அல்லது அவற்றின் சாற்றைப் பிழிந்து பயன்படுத்துகின்றன. இது அவை தங்கள் ஆரோக்கியத்தை திரும்பப் பெறவே. அவை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி நமக்குத் தெரிவதில்லை. சில சமயங்களில் நாய்கள் புல் தின்பது வளர்ப்பவர்களுக்கு தெரியும். உட்கொண்ட உணவு பிடிக்காததால் அதை வாந்தி எடுத்து வெளியேற்றவே அவை இவ்வாறு செய்கின்றன.
கதி கெட்டு புலி புல் தின்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. கேரளாவில் இது ஒரு பழமொழி. ஒருவேளை அவை சுய டாக்டராக மாறி சிகிச்சை செய்து கொள்ளலாம். வண்ணத்துப் பூச்சிகள், அவற்றின் புழுக்கள், முதல் மனிதக் குரங்குகள் வரை இவ்வாறு சுயமாக சிகிச்சை செய்து கொள்ள பல்வேறு வழிகளை ஆராய்ந்து பின்பற்றுகின்றன.
பெரும்பாலான விலங்குகள் பச்சை இலைகளையும் தண்டுகளையும் மருந்திற்காகப் பயன்படுத்துகின்றன. 2024ல் ஒரு ஒரங்கோட்டான் தன் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக ஒரு செடியின் பச்சிலை சாற்றைப் பிழிந்து தடவியது விலங்குலகின் பிரபல செய்தியாகப் பேசப்பட்டது. இந்தோனேஷியாவில் மக்கள் பயன்படுத்தும் இந்த பொருள் காயங்களைக் குணப்படுத்த, வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
கொசுக் கடியில் இருந்து தப்ப பூனைகள் மிண்ட் குடும்பத்தைச் சேர்ந்த காட்னிப் (catnip) செடியின் இலைகள் மேல் விழுந்து புரள்வதுண்டு. சிம்பன்சிகள் பச்சிலைகளை பல சமயங்களிலும் செடியில் இருந்து பறித்து அப்படியே உண்பதாக அவை பற்றி ஏராளமான உற்றுநோக்கல்களையும் பல்வேறு ஆய்வுகளையும் செய்த ஜெயின் குடோல் (jane goodall) கூறியுள்ளார்.
இந்த இலைகள் அவற்றின் கழிவுகளில் அப்படியே வெளித்தள்ளப்படுகின்றன. வயிற்றுப் பூச்சிகளை குறைக்கவே அவை இவ்வாறு செய்கின்றன என்று கண்டறியப்பட்டது. பூச்சிகளால் சகிக்க முடியாத சில வேதிப்பொருட்கள் இந்த இலைகளில் உள்ளன. இலையோடு இவற்றையும் வெளியேற்றுவது சுலபம். இதில் சில இலைகள் கரடுமுரடானவை. நுண்ணிய பூச்சிகள் அதில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த இலைகள் சிறிய அளவில் குடலைத் தூண்டி விடுகிறது. அதனால் இவ்வாறு நிகழ்கிறது.
பூச்சிகளும் வெளியில் தள்ளப்படுகின்றன. அட்லாண்டா எமரி (Emari) பல்கலைக்கழக ஆய்வாளர் ஜாப் டெ ரூட் (Jaap de Roode) இது பற்றி பல ஆய்வுகளை நடத்தியுள்ளார். டன்ஜானியாவில் சிம்பன்சிகள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த ஒரு குறிப்பிட்ட செடியின் தண்டை சாறு பிழிந்து குடிப்பதை ஜெயின் குடோல் முதல்முதலில் கண்டறிந்தார். இது மக்களால் இதே வயிற்றுக் கோளாறுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.
மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளும் பிஞ்ச் பறவைகளும்
மனிதக் குரங்குகள் மட்டும் இல்லாமல் பூச்சிகள், மற்ற பிராணிகள் இது போன்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் அரசன் என்று அழைக்கப்படும் மோனார்க் வண்ணத்துப் பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள புத்திசாலித்தனத்துடன் ஒரு குறிப்பிட்ட வகை எருக்கு செடியைப் பயன்படுத்துகின்றன. இதன் இலைகளில் நச்சுத்தன்மை உள்ளது.
இந்த வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுவதும் அவற்றின் புழுக்கள் வளர்வதும் இந்த இலைகளில்தான். இதனால் மற்ற இரை பிடி உயிரினங்கள் இந்தப் புழுக்களை ஆக்ரமிப்பதில்லை. இதே பிரிவைச் சேர்ந்த வேறு எருக்கு செடி இலைகளில் இவை முட்டையிடுவதில்லை என்பது வியப்புக்குரியது.
கரடிப் புழுக்கள் (woolly bear caterpillar) ஆல்கலாய்டு போன்ற சில குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் அடங்கிய இலைகளை உண்டு கொசுக்களில் இருந்து தப்புகின்றன.
மர எறும்புகள் (wood ants) அல்லது தச்சர் எறும்புகள் (carpenter ants) சில குறிப்பிட்ட செடிகளில் உள்ள டானின் (tannin) என்ற சாயப் பொருளில் அடங்கியுள்ள பிசின் போன்ற பொருளை பூசி தங்கள் புற்றுகளை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கின்றன. செடிகள், பழங்கள், விதைகள், கொட்டைகள், காய்களில் காணப்படும் டானினில் இது அதிக அளவில் உள்ளது.
ஆடுகளில் வயிற்றுப்பூச்சித் தொல்லை அதிகமாகும்போது அவற்றுக்கு பொதுவாக விருப்பமில்லை என்றாலும் சில இலைகளை அவை உண்கின்றன.
நகர்ப்புற விரிவாக்கத்தால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமூட்டும் உண்மை தெரியவந்தது. மெக்சிகோ நகரில் பிஞ்ச் (Pinch) பறவைகளின் கூடுகளில் வெளுத்த, மிருதுவான பொருட்கள் அதிக அளவில் காணப்பட்டன. இது ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால் ஒரு மழை பெய்த பின் உண்மை வெளிப்பட்டது. சிகரெட்டுகளை உடைத்து தூவப்பட்டபோது கிடைத்த புகையிலைப் பொருட்களே அவை.
வாசனையில் இருந்து அது சிகரெட்டிற்குள் இருக்கும் புகையிலை என்பது உறுதியானது. தீங்கு செய்யும் உயிரினங்களை விரட்டவே பறவைகள் இவ்வாறு செய்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீங்குயிரிகளை கூடுகளுக்குள் அதிக அளவில் விட்டபோது பறவைகள் கூடுதல் சிகரெட்களை உடைத்து அதிக அளவில் புகையிலையை பரப்பிவிட்டன. பல பறவைகள் இது போல புகையிலைச் செடிகளைப் பயன்படுத்தி கூடுகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கின்றன.
உயிரினங்களுக்கு நோய்கள், தொற்றுகள், எதிரிகளின் தாக்குதல் போன்றவை பற்றி எப்படித் தெரியும்? புழு பூச்சிகள் பிராணிகள் எல்லாம் மனிதனை விட நுண்ணறிவில் தாழ்ந்த நிலையில் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சில குறிப்பிட்ட செடிகள், இலைகளை இந்த உயிரினங்கள் நலமுடன் வாழ பயன்படுத்துகின்றன என்று மனிதர்களாகிய நமக்குத் தெரிவதில்லை. அவை சிகிச்சை செய்து கொள்ளும் முறைகள் பற்றியும் தெரியாது.
நான்கு வகை வாசனைகளை வேறுபடுத்தி கரடிப் புழுக்களால் நுகர்ந்து அறியமுடியும். இதற்காக உள்ள உணர்வு நீட்சிகள் அவற்றுக்கு உதவுகின்றன. இதில் ஒன்றே இலைகளில் உள்ள ஆல்கலாய்டுகளை அறிய உதவுகிறது. நறுமணம் பற்றிய விவரங்கள் சமிஞ்ஞைகளின் மூலம் புழுக்களின் மூளைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மூளை கட்டளையிடுவதால் அவற்றிற்கு விருப்பமில்லாத இலைகளையும் அவை உண்கின்றன.
பல உயிரினங்களும் செடிகளின் வாசனையை நுகர்தலின் மூலம் அறிகின்றன, கற்கின்றன, பரிசோதனை செய்கின்றன. செடிகளுக்கும் நோய்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைத் தெரிந்து கொள்கின்றன. சிம்பன்சிகள் போன்ற பல விலங்குகள் இத்தகைய அறிவைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. அவை ஒரு குறிப்பிட்ட சிறப்பு முறையில் இலைகளை விழுங்குகின்றன. அவை இலைகளை ஒரு தனி ரீதியில் மடித்து எடுத்து உண்கின்றன. இதை அவை வயது முதிர்ந்தவர்களிடம் இருந்து பார்த்துத் தெரிந்து கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புழு பூச்சிகள் முதல் புலிகள் யானைகள் வரை இயற்கை படைத்த அணைத்து உயிரினங்களும் சிந்தித்து செயல்படும் திறனில் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவை இல்லை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.
மூலம்: https://www.mathrubhumi.com/technology/science/animal-self-medication-1.10504937
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வட கொலம்பியாவில் இருக்கும் வறண்ட வெப்பமண்டல மழைக்காடுகளில் ஆய்வாளர்கள் காட்டன் டாப் டாமரிண்டு (cotton-top tamarind) என்னும் உலகின் அரிய வகை குரங்கினங்களில் ஒன்றின் வாழிடத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகள் காட்டில் வாழ்பவரான லூயிஸ் எண்ட்ரிகே செண்டினா (Luis Enrique Centena ) இப்போது வெள்ளை மற்றும் சிவப்பு நிற உரோமங்களுடன் உள்ள காட்டன் டாப் குரங்குகளின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறார்.
முன்பு காட்டின் எதிரியாக இருந்த லூயிஸ் இப்போது அதன் பாதுகாவலராக உள்ளார். சுமார் ஒரு பவுண்டு அல்லது அரை கிலோகிராம் வரை மட்டுமே எடையுள்ள உலகின் மிக ஆபத்தான நிலையில் உள்ள இந்த குரங்குகள் மருத்துவ ஆய்வுகள், வன அழிவு, சட்ட விரோத வணிகத்தால் அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளன. 7,500 குரங்குகள் மட்டுமே இப்போது காடுகளில் உயிர் வாழ்கின்றன.
வட கொலம்பியாவில் மட்டுமே காணப்படும் இந்த இன குரங்குகளின் வாழிடப் பரப்பு 8% குறைந்துவிட்டது. மேய்ச்சல் மற்றும் மரம் வெட்டுதலே இதற்கு முக்கியக் காரணம். சான் ஹுவான் நெப்பொ மியூசினோ (San Juan Nepomuceno) குன்றில் ஒரு சிறிய பரப்பு மட்டுமே இந்த உயிரினங்களின் வாழிடமாக இப்போது உள்ளது.
முன்பு மரம் வெட்டியவர்கள், விவசாயிகள், சூழலியலாளர்கள், உயிரியலாளர்கள் இணைந்து மேனியழகிற்காக புகழ்பெற்ற இந்த குரங்குகளின் வாழிடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். “இவை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை.
எந்த ஒரு நிறுவனப் பாதுகாப்பு திட்டத்திலும் இவை பற்றி பேசப்படுவதில்லை.
இது கவலையளிப்பது. இந்த இனத்தையும் இவற்றின் வாழிடத்தையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு இப்பணியில் பல பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் சூழல் பாதுகாப்பு அமைப்பான ஃபன்டஸியான் ஓ டிட்டி திட்டத்தின் (Fundación Proyect Tití) தலைவர் ரோஸமிரா கிலன் (Rosamira Guillen) கூறுகிறார்.
“இந்த குரங்குகள் மனிதர்கள் போன்றவை. ஐந்து அல்லது ஏழு உறுப்பினர்கள் அடங்கிய நெருக்கமான குழுக்களில் வாழும் இவை சிக்கலான அழைப்புகள் மூலம் தகவல் தொடர்பு கொள்கின்றன.
வாழிட எல்லைகளை கடுமையாக பாதுகாக்கின்றன. விதைப் பரவல், மலர்களின் மகரந்த சேர்க்கை, பூச்சிக் கட்டுப்பாட்டு போன்றவற்றின் மூலம் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
“இவை நம்மைப் போன்றவையே. மனிதர்களுக்குக் கற்றுத் தருகின்றன. தங்கள் இளம் வாரிசுகளை அன்புடன் கவனித்துக்கொள்கின்றன. நாம் பேசும் மொழியில் பேசுவதில்லை. இது மட்டுமே நமக்கும் இவற்றிற்கும் இடையில் உள்ள வேறுபாடு” என்று காடு மீட்பு மற்றும் ஆய்வு அறக்கட்டளையின் (foundation’s forest restoration and research team) உறுப்பினருமான லூயிஸ் கூறுகிறார். இந்த குரங்குகள் கவர்ச்சியான செல்லப் பிராணிகளாக விற்கப்படுகின்றன. முதலில் மருத்துவ ஆய்வுகளுக்காக இவை 1960 மற்றும் 70களில் யு எஸ்ஸிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
பிறகு பாரம்பரிய மேய்ச்சல், விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்பட்டபோது இவற்றின் வாழிடப் பரப்பு 720,000 ஹெக்டேர்/1.8 மில்லியன் ஏக்கர்களாக சுருங்கியது. “கடத்தல்காரர்கள் குரங்குகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு 12 15 பவுண்ட் வரை தருகின்றனர்” என்று பத்தாண்டுகளாக கடத்தலைத் தடுக்கப் போராடுபவரும், இதுவரை 200 குரங்குகளை காப்பாற்றிய சூழல்ல் பாதுகாவலருமான ஃப்ராங்லின் காஸ்ட்ரோ (Franklin Castro) கூறுகிறார்.
ஃபண்டஸியான் அமைப்பிற்கு கிடைத்த நிதியுதவியின் மூலம் துண்டாடப்பட்ட காட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி மரங்களை வளர்க்கத் தொடங்கியது. “இந்த இடம் முன்பு தரிசாக இருந்தது. இப்போது ஆனால் மரங்கள் வளரத் தொடங்கியவுடன் குரங்குகள் இப்பகுதிக்கு மீண்டும் திரும்பி வந்தன. இது பரவசமூட்டுவது” என்று காடு மீட்பு அறக்கட்டளையின் மரம் வளர்ப்புத் திட்ட தலைவர் மார்சிலோ ஆர்டெகா (Marcelo Ortega) கூறுகிறார்.
இப்பகுதியில் இப்போது 120,000 மரங்கள், குத்துச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் குழுவில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் குரங்கின் முதுகில் டிரான்ஸ்மிட்டர்களைப் பொருத்துகின்றனர். களப் பணியாளர்கள் சமிஞ்ஞைகள் மூலம் காட்டில் குரங்குகளைப் பிந்தொடர்ந்து செல்கின்றனர். “நான் ஒரு உயிரியலாளர் இல்லை என்றாலும் இந்த காட்டிலிருந்தும் குரங்குகளிடம் இருந்தும் நான் நிறைய கற்றுள்ளேன். 2018 முதல் இங்கு பணிபுரிகிறேன்.
நான் செய்த தவறுகளை சரி செய்ய இன்னும் பத்தாண்டுகள் ஆகும்” என்று லூயிஸ் கூறுகிறார். 2012-2013க்குப் பிறகு இந்த உயிரினங்களின் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குரங்குகளை காப்பது இங்கு வாழும் அரிய வகை ஆமைகள், கறுப்பு சிலந்திக் குரங்குகள், டூக்கன்கள் (toucans) என்ன்று அழைக்கப்படும் ஒரு வகைப் பழம் தின்னும் பறவைகள் மற்றும் டமான்யுயஸ் (tamanduas) என்று அழைக்கப்படும் ஒரு வகை எறும்புத் தின்னி பிராணிகளை பாதுகாப்பதற்கு உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காடுகள் மீட்கப்பட்டால் நாமும் பேரழிவுகளில் இருந்து மீட்கப்படுவோம் என்பதற்கு இந்த முயற்சிகள் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மியாவ்… மியாவ்… என்று குரல் கொடுத்தபடியே வீட்டிற்குள்ளும், வீட்டைச் சுற்றிலும் மனிதர்களுடன் பழகும் உயிரினங்கள் பூனைகள். வடிவத்திலும் முகத்தோற்றத்திலும் செல்லத்தனம் தோன்றும் என்றாலும் இவற்றைப் பற்றி சுபகரம் இல்லாத செய்திகளே ஆய்வாளர்களிடமிருந்து வருகிறது. உலகளவில் இந்த செல்லப் பிராணிகள் பிடித்துத் தின்னும் விலங்குகளின் அளவு குறித்து நடந்த முதல் ஆய்வு இவை வன உயிரினங்களின் அழிவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறுகிறது.
பூனைகளின் தோழமையை மனிதர்கள் விரும்புகின்றனர். ஆனால் இவை உயர் திறனுள்ள கொலையாளிகள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான உயிரினங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகளை இவை உண்கின்றன. 9,000 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வளர்ப்பு விலங்குகளாக பழக்கப்படுத்தப்பட்டது முதல் அண்டார்டிகா தவிர பூமியின் மற்ற எல்லா கண்டங்களிலும் இவை வாழ்கின்றன. மனிதன் குடியேறிய இடங்களில் அவனுடன் சென்ற இவை அப்பகுதி உள்ளூர் உயிரினங்களை ஆக்ரமித்து கொன்று அழித்தன.
இது பற்றிய ஆய்வுக்கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications இதழில் வெளிவந்துள்ளது. பூனைகளே ஆக்ரமிப்பு விலங்குகளில் மிக மோசமானவை. “இவற்றின் இரை பிடிக்கும் பண்புகள் பற்றி இந்த ஆய்வு விரிவாக ஆராய்ந்துள்ளது” என்று யு எஸ் ஆர்பர்ன் (Auburn) பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக்குழு தலைவருமான கிறிஸ்டோபர் லெஃப்ட்ஸிக் (Christopher Lepczyk) கூறுகிறார். இவற்றிற்கு உணவாகும் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பூச்சிகளில் 17% அழியும் ஆபத்தில் உள்ளவை.
பூனைகள் உண்ணும் 90% வகை உயிரினங்களில் 981 பறவையினங்கள், 463 ஊர்வன வகை விலங்குகள், 431 பாலூட்டி வகைகள், 119 வகை பூச்சிகள், 57 வகை இருவாழ்விகள் அடங்கும். கண்டங்களில் அழியும் நிலையில் உள்ளவற்றை உண்பதை விட இவை தீவுகளில் மூன்று மடங்கு அதிகமாக உண்கின்றன. நியூசிலாந்து ஸ்டீபன்ஸ் தீவு ராக்ரன் (Stephens Island Rockwren) மற்றும் நியூசிலாந்து க்வைல் (New Zealand quail) போன்றவற்றை இவை தின்றே அழித்து விட்டன.
இதனால் அங்கு பூனைகளை தீவை விட்டே விரட்ட அரசியல்வாதி ஒருவர் ஒரு இயக்கமே நடத்துகிறார். குழந்தைகள் காட்டுப் பூனைகளை சுட்டுக் கொல்வதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டிகள் குறித்து அங்கு விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டும் பூனைகள் ஆண்டிற்கு 300 மில்லியன் விலங்குகளைக் கொல்கின்றன. இதனால் அங்கு சூழல் பாதுகாப்புக் குழுக்கள் பூனைகளை வீட்டுக்குள் பாதுகாக்க வேண்டும் என்று உரிமையாளர்களை வலியுறுத்துகின்றனர்.
தென்மேற்கு ஜெர்மன் வால்டோர்ஃப் (Walldorf) போன்ற உலகில் சில இடங்களில் வசந்த காலத்தின் மூன்று மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்து தரையில் முட்டையிட வரும் அரிய வகை கொண்டை வானம்பாடி (crested lark) போன்ற பறவையினத்தைக் காக்க பூனைகளுக்கு பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. மனிதன் அறிந்தவற்றில் 9% பறவைகள், 6% பாலூட்டிகள், 4% ஊர்வன விலங்கினங்கள் பூனைகளால் உணவாக்கப்பட்டுள்ளன. எவ்வளவு சாப்பிட்டாலும் இவற்றிற்கு திருப்தி ஏற்படுவதில்லை.
ஓர் உயிரினம் சூழல் மண்டலத்தில் இழக்கப்பட்டிருந்தால் அல்லது அரிதாக இருந்தால் அதை உணவாக உண்ணும் இரை பிடி விலங்கின் உணவுப் பட்டியலிலும் அந்த உயிரினம் இல்லாமல் போயிருக்கும். வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் வாழும் இடத்தில் இருக்கும் உயிரினங்களை பெருமளவில் உண்ணும் இயல்புடையவை. இதனால் இயற்கை வனச்சூழலில் சில குறிப்பிட்ட உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போன கறுப்பு இடங்கள் (blindd spots) காணப்படுகின்றன.
விஞ்ஞானிகள் பூனைகளின் உணவு முறை பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுகளை ஆழமாக ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆய்வுகள் நடத்தப்படும்போது இந்த ஆய்வின் இறுதிக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ள உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த ஆய்வு சுற்றித் திரியும் வளர்ப்பு பூனைகளை (Felis catus) மையமாக வைத்தே நடத்தப்பட்டது. சில பெரிய விலங்குகள் இவற்றால் இரை பிடிக்கப்படாமல் கொல்லப்பட்டிருக்கலாம்.
“இரவு நேரங்களில் வீட்டுக்குள் வைத்து பாதுகாப்பது, மணிகளுடன் கூடிய கழுத்துப் பட்டைகளை அணிவிப்பது போன்ற செயல்கள் மூலம் பூனைகள் இரையாகப் பிடித்து உண்ணும் அழியும் பறவை மற்றும் வன உயிரினங்களைக் காப்பாற்ற முடியும். தோட்டங்களில் இந்த உயிரினங்கள் செலவிடும் நேரத்தை குறைக்க கேடு ஏற்படுத்தாத அல்ட்ரா ஒலி கருவிகளையும் பயன்படுத்தலாம்.
பூனைகளின் இரை பிடிக்கும் பண்பு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ள அல்லது பலவீனமான நிலையில் இருக்கும் பறவையினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக தாழ்வாக அல்லது நிலத்தில் முட்டையிடும் பறவைகளை இது பெரிதும் பாதிக்கிறது. தரை வாழ் விலங்குகள் இயல்பாக தோன்றாத தீவுப்பகுதிகளில் பறவைகளின் அழிவுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது.
தரையில் முட்டையிடும் பறவைகள் வாழும் இடங்களுக்கு அருகில் புதிய குடியிருப்பு பகுதிகளை ஏற்படுத்தாமல் இருப்பது, அவற்றுக்கு சொந்தமில்லாத தீவுகளில் காட்டுப் பூனைகளின் எண்ணிக்கையை குறைப்பது அல்லது முற்றிலுமாக இல்லாமல் செய்வது போன்ற நடவடிக்கைகள் நன்மையை ஏற்படுத்தும்” என்று ராயல் சங்க பறவைகள் பாதுகாப்பு அமைப்பின் (the Royal Society for the Protection of Birds (RSPB) பேச்சாளர் கூறுகிறார்.
“இந்த ஆய்வு வரவேற்கத்தக்கது. தீவுப்பகுதிகளில் பூனைகளால் ஏற்படுத்தப்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு அங்கு வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இந்த ஆய்வு முடிவுகள் உதவும்” என்று பிரிட்டிஷ் பறவையியல் அறக்கட்டளையின் (British Trust for Ornithology (BTO)) மைக் டாம்ஸ் (Mike Toms) கூறுகிறார். இனி இவற்றை செல்லமாக வளர்ப்பதுடன் இவற்றின் தாக்குதலில் இருந்து மற்ற உயிரினங்களை பாதுகாப்புடன் வாழ அனுமதிப்போம்.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/dec/12/cats-diet-2000-species-conservation-study-aoe?
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கழிவுகள் ஒரு நீர் நிலையின் ஜீவனை நிலைநிறுத்தும் என்று கேட்கும்போது நெற்றி சுளிப்பவர்களுக்கு கென்யா சாவோ (Tsavo) தேசியப் பூங்காவில் உள்ள எம்சிமா அருவி (Mzima Spring) அந்த கருத்து தவறு என்பதற்கு ஒரு வலுவான ஆதாரம். இந்த இடத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களான நீர் யானைகளே இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். பகல் முழுவதும் எம்சிமாவில் தூங்கி, கொண்டாடி, நீந்தி மகிழும் இந்த உயிரினங்களின் கழிவுகள் நீரில் கலக்கும்போதே இந்த அருவி ஜீவனுள்ளதாகிறது!
நீர் யானைகளின் கழிவுகள் எம்சிமாவை (Mzima Springs) கண்ணாடி போல பாதுகாக்கிறது. கழிவில் அடங்கியுள்ள சத்துகளுக்கு அப்பால் எம்சிமாவைத் தவிர அதில் வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் அருகில் உள்ள பரந்து விரிந்த பழக்காடுகள், புல் மேடுகளுக்கு இந்த அருவி ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. நீர் நிலையின் நிலைநிற்பிற்கு இது இன்றியமையாததாக மாறுகிறது. இதுவே இந்தப் பூங்காவின் அற்புதம்.
ஆறு மாத காலம் நீண்டு நிற்கும் கடுமையான வறட்சி. ஒரு துளி நீருக்காக நான்கு பக்கமும் ஓடும் விலங்குகள். வற்றி வறண்ட ஆற்றில் குழி தோண்டி தூய்மையான நீரை சேகரிக்கும் பிரம்மாண்ட யானைகள். நீர் தேடி மைல் கணக்கான தொலைவுகளில் இருந்து பறந்து வரும் பறவைகள். இதற்கு நடுவிலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாக வாழ்பவர்கள்! அவர்கள் சாவோவில் உண்டாக்கிய புரட்சிகரமான மாற்றங்களே இந்தக் கதையின் சாராம்சம்.
கென்யாவின் பழமையான தேசியப் பூங்காவான சாவோவில் உள்ள உயிரினங்களின் அசாதாரண வாழ்க்கையே இந்த அழகான கதை! 13,747 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்து உள்ள கென்யா தேசியப் பூங்காவே சாவோ பூங்கா. நீர்யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட விலங்குகளும் பல அபூர்வ தாவர வகைகளும் வாழும் இந்தப் பூங்கா வன உயிரினங்களின் தியேட்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வாழும் எண்ணற்ற உயிரினங்களுக்கு ஆதாரமாக உள்ள பல நீரருவிகளில் எம்சிமாவும் ஒன்று. நீர் யானைகளின் சத்துகள் நிறைந்த கழிவுகள் இந்த அருவியை வளமாக்குகிறது. இந்த நீர் வளத்தை மட்டுமே நம்பி வாழும் ஏராளமான நுண்ணுயிரிகள், மீன்கள் இங்கு உள்ளன. கழிவுகளை உண்ணும் நுண்ணுயிரிகள் இங்குள்ள நீரை நச்சுத் தன்மையற்றதாக மாற்றுகிறது. இவற்றை உண்டு வாழும் மீன்களும் இங்கு உள்ளன. அருகில் இருக்கும் பழக்காடுகளுக்கும் இந்த நீர்நிலையே ஆதாரமாக உள்ளது.
ஈச்சை, அத்தி, நாவல் போன்றவை நீர்நிலைக்கு அருகில் பழங்களின் சொர்க்கபூமியை உருவாக்குகின்றன. இந்த பழங்களை உண்டு உயிர் வாழும் வெல்வெட் குரங்குகள் போன்ற உயிரினங்களுக்கும் இந்த நீர்நிலை ஆதாரமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் பேருக்கு மட்டுமே வாழ்ந்த நீர் யானைகளின் மீள்வரவு இப்போது இந்த வனப்பகுதி முழுவதையும் செழுமையடையச் செய்துள்ளது. சூலு (hyulu) குன்றுகளுக்குக் கீழ் இயற்கை உண்டாக்கிய நீர்த்தேக்கம் என்று எம்சிமா அழைக்கப்படுகிறது.
தாகம் போக்கும் சிவப்பு யானைகள்
கென்யாவில் எம்டீட்டே ஆண்டேவில் (Mtito Andei) இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் சாவோ பூங்காவின் தெற்குப் பகுதியில் எம்சிமா அருவி அமைந்துள்ளது. உலகின் தூய்மையான நீர்நிலைகளின் பட்டியலில் இந்த அருவியும் உள்ளது. மலைத்தொடர் பாறைகளில் உண்டாகும் பல துவாரங்கள் வழியாக அருவிக்கு நீர்வரத்து நடைபெறுகிறது. இதனால் கடும் வறட்சியிலும் இங்கு மட்டும் நீர் வற்றுவதில்லை.
தினம் 50 மில்லியன் கேலன் நீர் மலை உச்சியில் இருந்து இங்கு வருகிறது. நீர் யானைகள் தவிர நைல் முதலைகளும் இந்த இடத்தின் நிரந்தர குடியிருப்பாளர்கள். இங்கிருந்து மற்ற நீர்நிலைகள் வெகு தொலைவில் அமைந்திருப்பதால் இந்த உயிரினங்களுக்கு இந்த அருவியே முக்கியமான வாழிடம். அருவியுடன் தொடர்புபடுத்தி நீர் யானைகள் உண்டாக்கிய இயற்கை விதிகள் மற்றும் உணவுச் சங்கிலியின் கதை மகத்தானது.
சாவோ பூங்காவின் மேற்கு எல்லையில் உலகிலேயே மிக உயரத்தில் இருந்து எரிமலைக் குழம்பு ஓடிவரும் யாட்டா (Yatta) பீடபூமி உள்ளது. 290 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஓடிவரும் இந்த குழம்பே கடினமான காலநிலையிலும் இங்கு இயற்கையாக உருவாகியிருக்கும் சில நீர் நிலைகளுக்கு நீரைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ஆறு மாதகாலம் கூட நீண்டு நிற்கும் கடும் வெப்பத்தில் இவை உயிரினங்களுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கிறது.
பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் சிவப்பு யானைகளுக்கும் இந்த இடத்தின் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு உள்ளது. யானைகள் கடும் கோடையில் குடிக்க நீர் தேடி அலையும் விலங்குகளின் தாகம் போக்கும் சேவையை செய்கின்றன. வறண்டு போன நதியில் குழி தோண்டி நீரை சுரக்கச் செய்கின்றன. இவை மற்ற யானைகளுக்கு இல்லாத நீண்ட தந்தங்களையும் தும்பிக்கையையும் இதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன.
இவை பல பகுதிகளிலும் குழிகளை உண்டாக்கி நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. நீரைத் தேடி பூங்காவின் எண்ணற்ற சிறு உயிரினங்கள், பறவைகள் வருகின்றன. இந்த யானைகளுக்கு நீர் உள்ள இடத்தை கண்டறியும் திறன் உள்ளது. இரும்பின் அம்சம் அதிகமாக உள்ள பூங்காவின் மண் மற்றும் தூசுக்களே இங்கு வாழும் யானைகளுக்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. வெப்பத்தை சமாளிக்க சேற்றைப் பூசி நீரில் குளிப்பதால் இவற்றின் உடல் சிவப்பாக மாறியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனிதனைக் கொன்று தின்ற இரட்டைச் சிங்கங்கள்
புள்ளிவிவரங்களின்படி 13,000 யானைகள் இங்கு வாழ்கின்றன. சூப்பர் டஸ்க்கர் (Super tusker) என்று அழைக்கப்படும் யானைகள் இதில் வியப்புக்குரிய அம்சம். இந்த இடம் 10 முதல் 13 அடி வரை உயரம் உள்ள இவற்றின் முக்கிய வாழிடம். இவற்றின் உடல் எடை 45 கிலோ. இவற்றின் தந்தங்கள் தரை வரை தொடும். அதனால் இவற்றுக்கு சூப்பர் டஸ்க்கர் என்ற பெயர் ஏற்பட்டது.
உலகில் இன்று மிச்சம் இருக்கும் இத்தகைய 30 யானைகளில் ஒரு சில இப்போது சாவோவில் வாழ்கின்றன. இவை ஆப்பிரிக்க யானைகளில் மரபணு ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களால் தோன்றின. காலநிலை மாற்றம், வேட்டையாடல், மனித வன விலங்கு மோதல் போன்றவை ஆப்பிரிக்க யானைகளின் வாழ்வை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஜிம்பாப்வே, போட்ஸ்வானா போன்ற நாடுகள் இந்த யானைகளை வேட்டையாட அனுமதிக்கின்றன.
ஆனால் கென்யா இதை அனுமதிப்பதில்லை. 2022 நவம்பர் 21 அன்று இங்கு வாழ்ந்த சூப்பர் டஸ்க்கர் யானைகளில் ஒன்றான லுகார்டு (Lugard) யானை பூங்காவின் மேற்குப் பகுதியில் இறந்தது. இது கடும் வறட்சியால் மரணமடைந்தது என்று அதன் உடலைப் பகுப்பாய்வு செய்த நிபுணர்கள் கூறினர்.
உயிரிழந்தபோது இதன் வயது 53. அதே மாதம் தித (Dida) என்ற மற்றொரு சூப்பர் டஸ்க்கர் யானையும் இறந்தது. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று சாவோ சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை கூறுகிறது. இவை இறந்தபோது இவற்றின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. லுகார்டின் இறந்த உடல் அது இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட தந்தமும் எடுப்பான முகமும் லுகார்டின் தனித்துவமான பண்புகள். வருகையாளர்கள் மற்றும் வனட் துறையினரிடமும் அன்பாகப் பழகி வந்த லுகார்டின் உயிரிழப்பு பூங்காவிற்கே பெரிய நஷ்டமாக கருதப்பட்டது.
சாதாரணமாக சிங்கங்கள் மனிதர்களை வேட்டையாடுவதில்லை. ஆனால் இந்தப் பூங்கா இந்தக் கூற்றை மாற்றி எழுதிய ஒரு சரித்திரம் உள்ளது. 1898ல், ஒன்பது மாதங்களில் 135 பேரை இங்கு வாழ்ந்த இரட்டை ஆண் சிங்கங்கள் வேட்டையாடின. பிடரி இல்லாத இந்த ராட்சத சிங்கங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. இது பற்றி ஆழமாக ஆராயப்பட்டது.
இரயில் பாதை அமைப்பும் சிங்கங்களின் வேட்டையாடலும்
1898ல் கென்யா உகாண்டா இரயில் பாதை அமைக்கும் வேலை தொடங்கியது. இதற்கு ஆசியாவில் இருந்து வந்தவர்களை 1889 மார்ச் முதல் டிசம்பர் வரை உள்ள காலத்தில் இந்த இரட்டைச் சிங்கங்கள் கொன்று தின்றன. இவை பிறகு சுட்டுக் கொல்லப்பட்டன என்றாலும் பூங்காவின் வரலாற்றில் இந்த நாட்கள் பீதி ஏற்படுத்துபவையாக இருந்தன.
கென்யா 1889 மார்ச்சில் சாவோ நதிக்குக் குறுக்கே இரயில் பாதை அமைக்கும் வேலையை ஆரம்பித்தது. முகாம்கள் 13 கிலோமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டன. பாதை அமைப்பதற்காக இந்தியத் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்தனர். வேலை ஆரம்பித்ததுடன் சிங்கங்களின் தாக்குதலும் தொடங்கியது. இரவில் இவை பல தொழிலாளர்களை இழுத்துச் சென்று உண்டன. வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு பேரை இவை கொன்றன.
சிங்கங்களைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு தலைவராக லெப்டினண்ட் கர்னல் ஜான் ஹென்றி பேட்டர்சன் (John Henry Patterson) இருந்தார். சிங்கங்களைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. ஆனால் பலன் ஏற்படவில்லை. இருபது பேர் அடங்கிய குழு கர்னல் இதற்காக உருவாக்கப்பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு டிசம்பர் 9 அன்று இரண்டு சிங்கங்களில் ஒன்று கொல்லப்பட்டது. இருபது நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சிங்கமும் கொல்லப்பட்டது. பிறகு இவற்றின் தோல் 1924ல் சிகாகோவில் ஃபீல்டு அருங்காட்சியகத்தில் 5,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இவையே வரலாற்றில் மிக அதிகமான மனிதர்களைக் கொன்றவை. இவற்றின் மண்டையோடு மற்றும் உடலின் தலைப்பகுதி ஆராயப்பட்டன. பற்கள் சேதமடைந்திருந்தது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு வேளை இவற்றின் கொலை வெறிக்குக் காரணமாக இருக்கலாம்.
அற்புதங்களின் முடிவில்லாத கதை சொல்லும் தேசியப் பூங்காக்கள்
ஒவ்வொரு தேசியப் பூங்காவிற்கும் சொல்வதற்கு என்று ஏராளமான ஆச்சரியங்கள், அற்புதங்களின் கதைகள் உண்டு. மனிதனைத் தவிர காடும் மலையும் கடலும் இயற்கையின் பங்குதாரர்கள் என்பதை இத்தகைய பூங்காக்கள் உறுதிப்படுத்துகின்றன. இவற்றின் வெற்றி போராட்டங்களின் அனுபவப் பாடங்கள். அந்தக் கதைகளை இவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இயற்கையை காக்க வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு உண்டு என்பதை இவை நினைவுபடுத்துகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றில் அதிக வெப்பமுடைய ஆண்டாகவே நம்மைக் கடந்து செல்கிறது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் எல்நினோ போன்ற நிகழ்வுகளும் புவி வெப்ப உயர்வும் மீளமுடியாத பேரிடரை நோக்கியே நம்மை இழுத்துச் செல்கிறது. இந்நிலையில் இத்தகைய இடங்கள் பேரிடர்களின் தீவிரத்தைக் குறைக்க நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
உலகை ஆச்சரியப்படுத்திய சாவோ பூங்காவின் கதையும் இதையே நமக்கு ஞாபகப்படுத்துகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.