கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கை, கால்கள் இல்லாதவை. ஊர்ந்து செல்லும் அமைதியான, எளிய உயிரினங்கள். மற்ற உயிரினம் போல ஒன்றுதான் பாம்பு. முன்பு டைனசோர் காலத்தில், இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மண்ணைத் தொட்டு பூமிக்கு வந்தவை. பரிணாமத்தின் பரிசோதனை பரம்பரைகளை வெற்றி கொண்டு இன்று வரை ஊர்ந்து ஊர்ந்து பூமியில் வாழ்ந்துகொண்டிருப்பவை. இவற்றை புனிதர் பட்டம் கட்டி தெய்வமாக்குவதற்குப் பதில் விவரமாக புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. இதில் மிகக் குறைந்த எண்ணிக்கை உள்ளவையே நச்சுத்தன்மை உடையவை. இதில் சாதாரணமாக நாம் காண்பது நான்கைந்து இனங்களை மட்டுமே. இவை மனிதர்கள் இருக்கும் இடத்தில் இருந்து எப்போதும் ஓடி ஒளிந்து கொள்ளவே முயல்கின்றன.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாம் இவற்றின் பின்னால் ஓடி சாகடிக்கிறோம். அல்லது கடிக்கப்படுகிறோம். தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொள்கிறோம். ஹீரோத்தனம் காட்ட வெறும் கைகளால் பிடிக்க முயல்கிறோம்.
ஏன் எதற்காக பாம்புகள் உடலில் நஞ்சு உள்ளது?
இந்தியாவில் சாதாரணமாக காணப்படும், மனிதனைக் கொல்லுமளவு நஞ்சுள்ள பாம்பு இனங்கள் நான்கு மட்டுமே. அவை கட்டு விரியன் (Common Indian Krait - Bungarus caeruleus), இந்திய நாகம் (Common Indian Spectacled Cobra - Naja naja), கண்ணாடி விரியன் (Russell's Viper - Daboia russelli) மற்றும் சுருட்டை விரியன் (Saw scaled Viper - Echis carinatus). இவை மனிதனைக் கொல்லுமளவுக்கு நஞ்சு உள்ளவை என்ற பொருளில் big four என்று அழைக்கப்படுகின்றன.இது தவிர ராஜநாகம் (King cobra Cobra - Ophiophagus hanna), ஒன்றிரண்டு சம்பவங்களில் மட்டுமே மனித உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் கூன் மூக்கு குழி விரியன் பாம்பு (Humpnosed Pit Viper - Hypnale hypnale) போன்றவை இந்தியாவில் காணப்படும் சில நச்சுப் பாம்புகள்.
ராஜநாகத்தை சாதாரணமாக பசுமை மாறாத வனங்கள், அவற்றுடன் சேர்ந்துள்ள பகுதிகளில் மட்டும் காண முடியும். மனிதரைக் கொல்லும் அளவுக்கு நச்சுத் தன்மை அற்றவை என்றாலும் நாகப்பாம்பு, பச்சிலைப் பாம்பு, பூனைக்கண்ணன் அல்லது பூனைப் பாம்பு (Cat eyed snake) போன்றவை நஞ்சுள்ள வேறு சில இனங்கள்.
கை, கால்கள் இல்லை என்பதால் இயற்கை இவற்றுக்கு சில தனித்துவம் மிக்க வரங்களை அளித்துள்ளது. இதில் சுவாரசியமான சிலவற்றை இங்கு காண்போம். ஊர்ந்து செல்வதால் உடல் காயப்பட, சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க இவற்றுக்கு தோலால் ஆன ஆடை உள்ளது! நம் உடலில் நகம், முடி ஆகியவை கரோட்டின் என்ற புரதத்தால் ஆக்கப்பட்டுள்ளது போல இவற்றின் உடலிலும் இந்தப் பாதுகாப்பு உள்ளது.
பாம்புகள் பொதுவாக நிலப்பகுதியிலேயே வாழ்கின்றன. ஆனால் ஐந்து இனங்கள் மட்டும் கடல் நீரில் வாழ்கின்றன. இவை மேற்கு இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன. இவை அரிதாகவே தரை இறங்குகின்றன. இவற்றில் மிகச் சிறிய இனம் இரண்டடி நீளம் உள்ளது. பெரியவை நான்கடி வரை நீளம் உடையவை. என்றாலும் வனப்பகுதிகளில் வாழும் இவற்றின் நடத்தை பற்றி போதிய தரவுகள் இல்லை.
பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) வகைப்பாட்டின்படி நூறு பாம்பு இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.
உடல் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தத் தோல் கவசம் வளர்வதில்லை என்பதால் இவை ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் தோல் உரிக்கின்றன. இது பாம்பு தோலுரித்தல் என்று அழைக்கப்படுகிறது. வாயின் நுனி முதல் வாலின் கடைசி வரை தசைகளால் ஆன குழல் போன்ற வடிவத்தில் உடல் அமைந்திருப்பதால் இவற்றின் உள் உறுப்புகள் அனைத்தும் நீண்டதாக, ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது.
புலன்களின் அதிசயம்
இமைகள் இல்லாததால் பாம்புகள் கண்களை இமைப்பதில்லை. கண்கள் எப்போதும் திறந்தே இருக்கும். புற்றுகளிலும் மற்ற இடங்களிலும் ஊர்ந்து சென்று நுழையும்போது இமைகள் இல்லாத கண்ணில் தூசுக்களும் மண்ணும் விழ வாய்ப்பு உள்ளது. அதனால் இவை எப்போதும் பிரில்ஸ் (brilles) என்ற கண்ணாடி போல பளபளப்பான கவசத்தை அணிந்து கொண்டே நடக்கின்றன. இதனால் இவற்றின் கண்கள் இருட்டிலும் பளபளப்புடன் மின்னுகின்றன.
நம்மைப் போல பாம்புகளுக்கு புறச்செவிகள் இல்லை. என்றாலும் நமக்கு செவிப் பகுதியில் இருக்கும் உள்ளுறுப்புகள் அனைத்தும் இவற்றுக்கு உள்ளன. இவற்றின் கேள்விப்புலனுக்கு பயன்படும் கொலுமெல்லா (columella) என்ற உறுப்பு சிறிது வித்தியாசமானது. இது கீழ் தாடையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிர்வுகள் உணரப்படுகின்றன. ஆனால் நாம் கேட்கும் ஒலிகளில் பாதியை மட்டுமே பாம்புகளால் கேட்க முடியும். கீழ் தாடை எலும்புகள் வழியாக கடந்து செல்லும் அதிர்வுகளை மட்டுமே இவை உணர்கின்றன. அதனால் இவை தாடை எலும்புகள் மூலமே கேட்கின்றன என்று கூறலாம்.
இவை மூக்கால் நுகர்வதில்லை. நாவால் நுகர்கின்றன. ஜேக்கப்சன்ஸ் (Jacobson’s organ) என்ற தனித்துவம் மிக்க நுகர்வுணர்வு உறுப்பு உள்ளது. இது பாம்பின் வாய்ப்பகுதிக்கு நேர் மேலாக அமைந்துள்ளது. பாம்பு தன் முன்நாக்கை வெளியில் நீட்டும்போது அது காற்றில் இருந்து வேதிப்பொருட்களை சேகரிக்கிறது. பிறகு பாம்பு தன் நாக்கை உள்ளே இழுத்துக் கொள்ளும்போது வாசனையை நுகர்கிறது. வாசனை வரும் திசையை அறிய இரண்டாகப் பிளந்த நாக்கு உதவுகிறது.
பல பாம்புகளும் நல்ல புகைப்படக் கலைஞர்கள். அவற்றின் மூக்குக்கும் வாய்க்கும் இடையில் உள்ள பகுதிகள் வழியாக அல்லது மேல் உதட்டின் பாகங்கள் வழியாக அவை இரை அல்லது எதிரியின் உடல் வெப்பநிலையை உணர்ந்து மூளைக்கு அனுப்பி அந்த உயிரினத்தின் உடல் வெப்ப வரைபடத்தை உருவாக்குகின்றன. இரையாக இருந்தால் பிடிக்கின்றன. எதிரியாக இருந்தால் ஒளிந்து மறைகின்றன.
இவை குளிர் இரத்தப் பிராணிகள். உடலுக்குள் வெப்பத்தை உருவாக்கும் ஆற்றல் இல்லாத புழுக்கள், பூச்சிகள், மீன்கள், ஊர்வன, இருவாழ்விகள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்த உயிரினங்கள். பாலூட்டிகள், பறவைகள் போன்றவை வெப்ப இரத்தப் பிராணிகள். நல்ல குளிர்காலத்தில் பாம்புகள் வெப்பமான இடத்தை தேடிச் செல்கின்றன. கோடையில் குளிர்ந்த இடத்தில் இருக்க விரும்புகின்றன.
இரையின் கை, கால்களில் இருக்கும் நகம், மற்ற பாகங்களால் உணவுக்குழாய் சேதமடையாமல் இருக்க அவை இரையை தலை முதலாக விழுங்குகின்றன. இரை பெரிதாக இருந்தால், வாய்க்குள் செல்ல முடியாததாக இருந்தால் அதை விழுங்கும்போது இவற்றின் தாடை எலும்புகளின் பின்புறம் கதவு போல அகலமாகத் திறக்கும். மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க தொண்டையில் அமைந்துள்ள க்ளாட்டிஸ் (glottis) என்ற குழல் போன்ற உறுப்பின் உதவியுடன் இவை மூச்சு விடுகின்றன.
மனிதரைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்
பாம்பின் உமிழ்நீரே நஞ்சு. மனிதன் போன்ற உயிரினங்களை கொல்லக்கூடிய வீரியம் உடையவை நஞ்சுள்ள நச்சுப் பாம்புகள் என்றும், வீரியமற்றவை நச்சுத் தன்மையற்ற பாம்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பாம்பைப் பற்றியும் ஏராளமான கதைகள் உண்டு.
இதிகாச காலம் முதல் இன்று வரை மனிதன் இவற்றைப் பற்றி ஏராளமான கற்பனை கலந்த மூட நம்பிக்கையைத் தூண்டும் கதைகளை உருவாக்கி இருக்கிறான். முன்பொரு குறும்புக்கார நரி ஒரு அட்டையிடம் கேட்டது. “நீ நடக்கும்போது எந்த காலை முன்னால் வைத்து நடக்கிறாய்?”. அதனுடன் அட்டையின் நடை நின்றது. பாம்புகளும் இதே போலத்தான் என்றொரு கதை உண்டு.
முன்னோக்கிச் செல்பவர்களை பின்னோக்கி இழுத்து கீழே தள்ளிவிடும் வகையில் தெரிந்தோ தெரியாமலோ புனையப்பட்ட பல கதைகள் ஏராளம். பாம்புகளுக்கு மனிதர்களைப் பற்றி எந்த மூட நம்பிக்கையும் இல்லை. அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வந்த உயிரினங்கள் இல்லை. அவற்றை அவற்றின் வழிக்குப் போகவிட்டால் போதும்.
மனிதரைக் கொல்ல அவதாரம் எடுத்த விஷ உயிரினங்கள் இல்லை பாம்புகள். நம்மைப் போல பூமியில் வாழ இயற்கையால் படைக்கப்பட்டவை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர் வாழ என்று சில தேவைகள் உள்ளன. இரை வேண்டும். இணை வேண்டும். இடம் வேண்டும். நம்மைப் போன்ற உயிரினங்கள் வெளியில் இறங்குவது இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே.
இதற்கு இந்த உயிரினங்களும் விதிவிலக்கு இல்லை. இணை தவிர மற்ற இரண்டு தேவைகளை நிறைவு செய்து கொள்ளவே நம் வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் அவை நுழைகின்றன. இந்த இரண்டு தேவைகளும் நம் வீடு அல்லது சுற்றுப்புறங்களில் இல்லாமல் இருந்தால் அவை நாம் இருக்கும் இடங்களைத் தேடி வராது.
பாம்பின் நஞ்சு
நம் கவனக் குறைவே நம்மைப் பாம்புகள் கடிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தருகின்றது. நம் உயிரைக் குடிப்பது பாம்புகளின் விஷம் இல்லை. நம் அலட்சியமே அதற்குக் காரணம். பரிணாமம் அவற்றுக்கு நஞ்சைக் கொடுத்திருப்பது நம்மை கொல்ல அல்ல. இரை பிடிக்க, பிடித்த இரையை செரிக்கவுமே அவற்றுக்கு அந்த நஞ்சு!
இது உணவை செரிக்க உதவுகிறது. நம் உமிழ்நீர் வாய்க்குள் சென்று விழும் ஒவ்வொரு பருக்கையைப் பொறுத்தவரையும் ஒரு நச்சுப்பொருளே. என்றாலும் நம்மை ஒரு பாம்பும் நஞ்சுள்ள உயிரினம் என்று அழைப்பதில்லை. பேசும் சக்தி இல்லாததால் அல்ல, அவற்றுக்கு விவரம் இருப்பதால்தான் அவை அவ்வாறு நம்மை அழைப்பதில்லை!
அதனால் உணவு மற்றும் இடத்தை பொறுத்தவரை நம்மைப் போல அதே ஸ்ட்டேட்டஸ் உள்ள பாம்புகளைத் துன்புறுத்தாமல் அழிக்காமல் அவற்றின் போக்கில் அவற்றை வாழ விடுவோம். நம் அறியாமையால் அல்லது பாம்புகளின் அறியாமையால் அவை நாம் வாழும் இடங்களுக்குள் நுழைந்து விட்டால் அவை சட்டென்று நம் கண்களில் படும்படியான சூழ்நிலையை உருவாக்கி வைப்போம். பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போது விலகி நின்று அவற்றை உற்றுநோக்குவோம்.
வெளியில் தானாகவே செல்ல அவற்றுக்கு உதவும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவோம். வெளியில் செல்லவில்லை என்றால் மட்டும் அதிகாரப் பூர்வ பாம்பு பிடிப்பவர்களை உதவிக்கு அழைப்போம். நாம் நலமுடன் வாழ விரும்புவது போல பாம்புகள் உட்பட பூமியில் உள்ள எல்லா உயிரினங்களையும் வாழ விடுவோம்.
** ** **
மேற்கோள்கள் மற்றும் மேலதிக விவரங்களுக்கு
https://www.mathrubhumi.com/environment/features/all-you-need-to-know-about-snake-day-1.8735628
&
https://nationalzoo.si.edu/animals/news/do-snakes-have-ears-and-other-sensational-serpent-questions#
&
https://en.m.wikipedia.org/wiki/Common_krait
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
துருக்கியில் உள்ள அக்பெலென் (Akbelen) காடுகள் முதல் வட இந்தியா, பிரேசில் வரையுள்ள காடுகளில் கிராமப்புறப் பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக காடுகளைக் காக்க போராடி வருகின்றனர்.
பூமியின் எதிர் கரையில் துருக்கி மக்ளா (Muğla) மாகாணத்தில் அக்பெலென் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் தாவர மற்றும் விலங்கு பன்முகத் தன்மைக்கு அடிப்படையாக இருந்த சுமார் 700 ஹெக்டேர் பரப்பு காடுகளை லிக்னைட் நிலக்கரியை சுரங்க விரிவாக்கம் செய்து அதிக அளவு தோண்டி எடுத்து அணல் மின்நிலையத்திற்கு அனுப்ப YK Energy என்ற நிறுவனம் பெரும்படையுடன் வந்தபோது அப்பகுதி கிராமப்புற பெண்கள் எதிர்த்து நின்றனர்.
அக்பெலென்
ஆரோக்கியத்திற்கு கேடு தரும் லிக்னைட் என்ற பழுப்பு நிலக்கரி உள்ளெரி என்ஜின்களில் பயன்படுத்தப்படும்போது கடினமான கறுப்பு நிலக்கரியை எரிப்பதை விட அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் இருந்து காடுகளைக் காக்க கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கிராமப்புற மக்களும் சூழல் போராளிகளும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து செயல்படுகின்றனர். ஆனால் நாச வேலை தொடர்கிறது.
2023 கோடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மரங்களை வெட்ட வந்தபோது பிரச்சனை தீவிரமானது. தடுத்து நின்றவர்கள் ஆயுதம் தாங்கிய படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பசுமை போர்த்தியிருந்த காடுகள் மரம் வெட்ட வந்தவர்களின் ஆவேச செயல்களால் ஒரு சில மணி நேரங்களுக்குள் அழிவின் களமாகியது.ஒரு கெட்ட கனவு போல காடுகள் அழிந்தன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. நீர் பீச்சியடிக்கப்பட்டது. நாற்பது போராளிகள் கைது செய்யப்பட்டனர்.
உண்மையான தகவல்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டது. இதுவரை அழிந்த மரங்கள் எவ்வளவு என்று தெரியவில்லை. அக்பெலென் காட்டின் 60% அதாவது 65,000 மரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த அழிவை ஈடு செய்ய 130,,000 மரக்கன்றுகள் புதிதாக நடப்படும் என்று மக்ளா மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நன்கு வளர்ந்த ஒரு காட்டை முழுமையாக அழித்துவிட்டு அதற்கு ஈடாக இளம் கன்றுகள் அவசரகதியில் நடுவது எதிர்பார்க்கும் பலனைத் தருவதில்லை.
இது வெறும் ஒரு அரசியல் கண் துடைப்பு மட்டுமே. 2020ல் துருக்கி அரசாங்கம் பதினோரு மில்லியன் மரக்கன்றுகளை அவசரகதியில் நட்டது. இதில் 90% அழிந்து போயின. வன அழிவுக்கு எதிரான போராட்டத்தை உள்ளூர் பெண்களே முன்னின்று நடத்துகின்றனர். போராட்டத்தை துருக்கி சமூகம் ஆதரித்தது. அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத இப்பெண்கள் தாய்வழிச் சமூகமாக வந்தவர்கள் (Matriarchs) என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் தங்கள் இளம் தலைமுறையை, வருங்காலத் தலைமுறையை காக்க பொது வெளி போராட்டத்திற்கு இழுக்கப்பட்டனர். சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சிகள் காணொளிகள் மூலம் பரவின. அதில் ஒன்றில் ஒரு பெண் போராளி “காட்டில் என்னுடைய மரங்களைக் கட்டிப்பிடித்து அவற்றுக்கு நான் முத்தமிட்டேன். ஒவ்வொரு முறை ஒரு மரம் வெட்டப்படும்போதும் என்னுடைய கை காலை இழப்பது போல உணர்ந்தேன்” என்று கூறினார்.
“இந்த பெண்களின் அர்பணிப்பு உணர்வும் கிராம மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு இடையில் இருக்கும் சகோதரத்துவமும் ஆழமான உள்ளுணர்வு உடையது. எங்களால் முடியும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது” என்று சூழல் கொள்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய மூத்த ஆலோசகர் டென்னிஸ் கூமுஷல் (Deniz Gümüşel) கூறுகிறார்.
உலகிற்கு முன்மாதிரியான ராஜஸ்தான் சம்பவம்
உலகின் எல்லா இடங்களிலும் இப்போது நிகழ்வதையே அக்பெலன் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. காலநிலை மாற்றம் தீவிரமடைகிறது. பேராசை பிடித்த கார்ப்பரேட்டுகள் சர்வாதிகார ஆட்சியாளர்களின் துணையுடன் இயற்கையை, வளங்களைத் தாக்கி அழிக்கின்றனர். இந்தப் போராட்டங்களை பெரும்பாலும் பெண்களே முன்னின்று நடத்துகின்றனர். பாரம்பரியத்தில் நம்பிக்கையுடைய பெண்கள் மரங்களைக் காப்பது புதியது இல்லை.
இந்தியாவில் 1730களில் ராஜஸ்தானின் பிஷ்னோய்(Bishnoi) சமூகத்தைச் சேர்ந்த அம்ரிடா தேவி (Amrita Devi) என்ற வீரப் பெண்மணியின் தலைமையில் வன்னி மரங்களை அழிப்பதற்கு எதிராகப் போராடினார். இதில் 365 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். அம்ரிடாவின் வீரச்செயல் கதைகள் மூலம் பரவியது. இது இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1970களில் இமாலயத்தின் உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ளூர் மொழியில் “மரங்களைக் கட்டிப்பிடியுங்கள்” என்று பொருட்படும் சிப்கோ இயக்கத்தைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் மரம் வெட்டுவதற்கு எதிராக அகிம்சை வழியில் போராடினாலும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அக்பெலென் காடுகளில் இன்று நடப்பது போல அன்று 2021ல் அங்கு நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் உடலை கவசமாகப் பயன்படுத்தி மரங்களைக் காப்பாற்றினர்.
உகாண்டாவில் மரங்களை எரித்து மரக்கரி எடுக்கவும், மரங்களை வெட்டி இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடனும் வனங்களை அழிக்கும் வணிக குழுக்களுக்கு எதிராக பெண்கள் பல்வேறு இயக்கங்களை தலைமையேற்று நடத்துகின்றனர். ஈகுவெடோரில் அலையாத்தி காடுகளைக் காக்க பெண்கள் ஒன்றுசேர்ந்து போராடுகின்றனர். ஆதிவாசிப் பெண்களே இந்தோனேஷியா வடக்கு சுமத்ரா பகுதியில் காகிதம் மற்றும் காகிதக்கூழ் தயாரிக்க, மற்ற தேவைகளுக்காக சுரங்கம் மற்றும் தோட்டப்பயிர் விரிவாக்க நிறுவனங்களை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர்.
இந்தோனேஷியாவ்யில் மாலோ (Mollo) என்ற ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த மாமா அலெட்டா (Mama Aleta) என்று செல்லமாக அழைக்கப்படும் அலெட்டா பான் (Aleta Baun) என்ற இயக்கவாதி 150 பெண்களுடன் சேர்ந்து பலம் பொருந்திய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுகிறார். சமீபத்தில் தங்க மனிதன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் “தாவரங்களுக்கு ஆத்மா உண்டு” என்று நம்புகிறார்.
மரங்களைத் திருமணம் செய்துகொண்ட ப்ரிஸ்ட்டல் பெண்கள்
பிரேசிலில் முந்தைய சர்வாதிகார ஆட்சியில் அழிக்கப்பட்ட வனச்செல்வத்தை மீட்கும் பணியில், மகளிர் சமூக மேம்பாட்டிற்கும் பாப ஷூ நட் ப்ரேக்கர்ஸ் (babassu nut breakers) என்ற இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் பாடுபடுகின்றனர். “கென்யாவில் மரங்களைக் காப்பது நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதன் அடையாளம். மரங்களை காக்கப் போரிடுவது போல வறுமையையும் நாட்டின் முறைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் சமத்துவமின்மையையும் எதிர்த்து மக்கள் கை கோர்த்து ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்” என்று பசுமை வளையம் அமைப்பை நிறுவிய வங்காரி மாதாய் (Wangari Maathai) கூறியுள்ளார்.
இவர் காருரா (Karura) காடுகளைக் காக்க வலிமை வாய்ந்த படைகளை எதிர்த்து நின்றார்.
இன்று யுகாண்டாவின் லீன் அம்புஜாவா (Leah Namugerwa), கேம்பியாவின் ஃபேட்டு ஜெங் (Fatou Jeng) போன்ற இளம் போராளிகள் காடு காக்க தீச்சுடர் ஏந்தி போராடுகின்றனர். *செனகல் நாட்டில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம்” என்ற பொருள்படும் எண்டலூம் வெர்ட் (Ndoloum Vert) என்ற இயக்கம் காடு வளர்ப்புக்கு உதவுவதுடன் ஒவ்வொரு மரத்தையும் ஒரு மனிதருடன் இணைத்துப் பேசுகிறது.
“நாம் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்கள். இயற்கையை விட மேலானவர்கள் என்ற நம் எண்ணத்தை இது அழிக்கிறது” என்று காணாமல் போன மரங்களின் தீவு (Island of Missing Trees) என்ற நாவலை எழுதிய நாவலாசிரியர், அரசியல் அறிவியல் துறை நிபுணர், சூழலியலாளர் ஆசிரியர் எலிப் ஷாஃபாக் (Elif Shafak) கூறுகிறார்.
சிப்கோ இயக்கப் பெண்களிடம் இருந்து உள்ளுணர்வு பெற்ற யு கே ப்ரிஸ்ட்டலில் (Bristol) 70 பெண்கள் குடியிருப்பு பணிகளுக்காக நன்கு வளர்ந்த மரங்களை அழிக்கும் நிறுவனங்களின் திட்டத்தை நூதன வழி ஒன்றின் மூலம் தடுத்து நிறுத்தி மரங்களைத் திருமணம் செய்து கொண்டனர். ஹாண்டுரஸ் நாட்டில் பழம்பெரும் சூழல் போராளியும் ஆதிவாசி சமூகத் தலைவியுமான பெர்டா கசீர்ஸ் (Berta Cáceres) அவரது வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டார்.
தன் கடைசி நேர்முகத்தின் போது “ஆற்றல் வெறும் ஒரு தொழில்நுட்ப விஷயம் மட்டுமில்லை. வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. அரசியல், இறையாண்மை, எல்லை மற்றும் சமூக சுய தீர்மானம் எடுத்தலுடன் தொடர்புடையது” என்று கூறினார். வன அழிவை எதிர்க்கும் பெண்களின் போராட்டம் தற்செயலாக நிகழ்ந்ததில்லை. நீர்ப்பற்றாக்குறை, உணவு பாதுகாப்பின்மை போன்ற காலநிலை சீரழிவின் தாக்கத்தால் பெரும்பாலும் ஆதிவாசிப் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நாளைய உலக நம்பிக்கையின் திறவுகோல்கள்
இது போன்ற சம்பவங்களில் பெண்களே இடம்பெயர்வோரில் 80%. கலவரங்கள், அகதிகளாக ஆக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகின்றன. நிலத்தையும் நீரையும் பாதுகாப்பதை தாய்மை உணர்வோடு போற்றும் பெண்கள் துரதிர்ஷ்டவசமாக கொடூரமான முறையில் ஒடுக்கப்படுகின்றனர். மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவில் மட்டும் 2016-2019 காலத்தில் 1070 வன்முறைச் செயல்கள் மனித உரிமைக்காக குரல் கொடுத்த பெண்களுக்கு எதிராக நடந்தன.
சமூகரீதியில் இவர்கள் பலவீனமான நிலையில் இருந்தாலும், இவர்களின் குரல் புற உலகம் அறியாமல் அழுத்தப்படுகிறது என்றாலும் இவர்கள் தளராமல் தொடர்ந்து போராடுகின்றனர். சூழல் பேரழிவுகளின்போது பெண்கள் பெரும் சுமையை சுமக்கின்றனர். அவர்களே சமூகத்தை கட்டியெழுப்புபவர்கள். நீரை சுமந்து வருபவர்கள். நினைவாற்றலின் தூதுவர்கள். கதை சொல்லிகள்.
மாநகரங்களில் இருக்கும் மாணவ பருவ இயக்கவாதிகள் முதல் கிராமப்புறங்களில் வாழும் தாய்வழிச் சமூகத்தை சேர்ந்த பெண்கள் வரை அவர்களே சூழல் அவசரநிலை, நிலம் மற்றும் நீர் பாதுகாப்பின்மைக்கு எதிரான போராட்டத்திற்கான அடுத்த அத்தியாயத்தின் இதயத்துடிப்பாக செயல்படப் போகிறவர்கள். சமத்துவமின்மை, அநீதி மற்றும் வன்முறையை எதிர்கொள்ளும் அவர்களே நாளைய உலக ஒற்றுமைக்கான ஒளி. சூழல் அழிவை எதிர்க்கும் போராட்ட குணத்தின் நம்பிக்கை திறவுகோல்கள்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கையின் சமநிலையை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை உலகம் இப்போது உணரத் தொடங்கியுள்ளது.
டுங்கர்வாடியில் கழுகுகள்
கழுகுகள் மரணத்தின் மறுவடிவமாக மக்களால் கருதப்படுகின்றன. வானில் கழுகுகள் வட்டமிட்டால் இறந்த உடல் அருகில் எங்கோ உள்ளது என்பதன் அடையாளம் அது என்று கருதப்பட்டது. மென்மையான சிறகுகளோ, உரோமமோ இல்லாத தலை, சதையைப் பிய்த்து குத்திக் கிழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் கத்தி போன்ற கூர்மையான அலகு, அதன் வடிவம் போன்றவை பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவை.
ஆனால் இயற்கையில் இந்தப் பறவைகள் ஆற்றும் பணியை இன்னும் மனிதகுலம் முழுமையாக உணரவில்லை. இறந்த உடல்களை உண்பதன் மூலம் இவை பலதரப்பட்ட நோய்கள் பரவுவதைத் தடுக்கின்றன. தெற்கு மும்பை வழியாக பயணிப்பவர்கள் அந்த மாநகரத்தின் நடுவில் ஒரு அடர்ந்த காடு இருப்பதை கவனிக்காமல் போக முடியாது! மலபார் குன்றுகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஏக்கரில் டுங்கர்வாடி (Doongerwadi) என்று அழைக்கப்படும் இந்தக் காடு அமைந்துள்ளது.மும்பையில் பார்சி சமூகத்தினரில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடக்கும் புனித இடம் இது. நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்காசியாவில் இருந்து பார்சிகள் இந்தியாவுக்கு குடியேறிய காலத்தில் மும்பையில் மலபார் குன்றுகள் முழுவதும் வனப்பகுதியாக இருந்தது என்று “ராஜ்பவன்ஸ் இன் மகாராஷ்டிரா” என்ற நூலில் சதாசிவ் கோரக்ஷகார் (Sadashiv Gorakshakar) கூறுகிறார். 18ம் நூற்றாண்டின் கடைசி வரை புலியும் கழுதைப்புலியும் நரியும் கழுகுகளும் இந்த காட்டில் வாழ்ந்து வந்தன.
பிரிட்டிஷ் இந்தியாவில் 1870ம் ஆண்டிற்குப் பிறகு மலபார் குன்றுகள் மும்பையில் பெரிய செல்வந்தர்களின் குறிப்பாக பார்சிகளின் காலனியாக மாறியது.
1672ல் பார்சிகளின் சவ அடக்கம் நடக்கும் சாந்தி கோபுரம் என்ற பொருள்படும் டோமாஸ் (tower of silence) அல்லது டக்மா (dakhma) டுங்கர்வாடியில் நிறுவப்பட்டது. இறந்தவர்களின் உடலை வல்லூறு அல்லது பிணம் தின்னி கழுகுகளுக்கு உணவாக கொடுக்கும் சோரோஸ்ட்டிரியன் (Zoroastrian) முறை கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் இருந்தது என்று கிரேக்க வரலாறு கூறுகிறது. ஆனால் இதை ஹிராட்டடஸ் (Herodotus) என்ற கிரேக்க அறிஞர் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய குறிப்புகளில் முதல்முறையாக ஆவணப்படுத்தினார். பார்சி மத நம்பிக்கையின்படி பார்சிகள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய “ஆகாய அடக்கம்” (Sky burriel) என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். நெருப்பு, நீர் அல்லது மண்ணில் உடல்களை அடக்கம் செய்வது இயற்கையை களங்கப்படுத்தும் என்று பார்சிகள் நம்புகின்றனர்.
உடல்களை இயற்கை வழி அடக்கம் செய்ய எழுப்பப்பட்ட கோபுரங்கள் பெரும்பாலும் ஒரே வடிவமைப்புடன் கட்டப்பட்டன. இவற்றின் மேற்கூரை சமதளமாக இருக்கும். இது மூன்று பகுதிகளை உடையது. இறந்த ஆண்களின் உடல்கள் வெளிப்புற வளையப் பகுதியில் வைக்கப்படுகின்றன. பெண்களின் உடல்கள் நடுப்பகுதியிலும் குழந்தைகளின் உடல்கள் உட்புறப் பகுதியிலும் வைக்கப்படுகின்றன. எலும்புகள் சூரிய ஒளி மற்றும் காற்றால் வெளிரச் செய்யப்படுகின்றன. மீதி மக்கி கரித்தூள், மணலால் சிதைக்கப்பட்டு கடலுக்கு சென்று சேர்கின்றன.
உடலை உயிரினங்களுக்கு உணவாகக் கொடுப்பதே சிறந்தது என்று பார்சிகள் நம்புகின்றனர். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ள நம்பிக்கையின்படி பார்சிகள் தங்கள் உறவினரின் உடலை கோபுரத்தின் உச்சியில் சவ அடக்கத்திற்காக கிடத்துகின்றனர். உடல்களை உண்ண கழுகுகள் கூட்டமாக வானில் இருந்து வந்து இறங்கும்.
2006ல் மும்பையில் கழுகுகளின் எண்ணிக்கை 97% அளவிற்கு கவலையூட்டும் விதத்தில் குறைந்ததை பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) ஆவணப்படுத்தியது.
மும்பையில் வானில் இருந்து கழுகுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் காணாமல் போயின! இதனால் உண்டான பக்கவிளைவுகள் மிகப் பெரியதாக இருந்தது. டுங்கர்வாடியில் நிசப்தமான கோபுரத்தின் உச்சியில் சவங்கள் அனாதையாகக் கிடந்தன. கழுகுகள் ஏறக்குறைய இல்லாமல் போயின. உடல்களைத் தின்ன வரும் பருந்துகள் மற்றும் காக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் சிறிய பறவைகளான அவற்றால் ஒரு மனித உடலை முழுமையாக உண்ண முடியவில்லை!
பாதி உண்ட நிலையில் கிடந்த உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசின. சுற்றுப்புறவாசிகள் புகார் கூறினர். பார்சி சமூகத்தினரை இந்த விஷயம் உணர்வுப்பூர்வமாக சங்கடத்தில் ஆழ்த்தியது. ஒரு பிரிவினர் தங்களுக்கு மின் மயானம் போதும் என்று கூறினர். பாரம்பரியவாதிகள் நிம்மதி இழந்தனர். பிரச்சனை பெரிய விவாதமாக மாறியது. பார்சி பஞ்சாயத்து உடல்களை உலர்த்த பெரிய சூரிய ஒளி பிரதிபலிப்பு உலர்த்திகளை நிறுவியது.
ஆனால் மழைக்காலத்தில் இவை போதுமான அளவுக்கு செயல்படவில்லை. பார்சி சமூகத்தினரும் அரசும் சூழல் செயல்பாட்டாளர்களும் பிரச்சனையைத் தீர்க்க வழி தேடி அலைந்தனர். கால்நடைகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டிக்ளோஃபெனாக் ((diclofenac) ) என்ற வலி நிவாரணி மருந்தின் பயன்பாடே கழுகுகளின் இன அழிவிற்கு காரணம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் தெற்காசியாவில் இருக்கும் கழுகுகள் மறையத் தொடங்கின.
இது பற்றி ஆய்வுகள் நடந்தன. கால்நடை சிகிச்சையில் வலி நிவாரணி மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு பிறகு அவைகள் இறந்தபின் அவற்றின் உடலை உட்கொள்ளும் கழுகுகளின் உடலிலும் சென்று சேர்ந்தது. இதனால் கழுகுகளுக்கு ஏற்பட்ட சிறுநீரக நோயால் அவை இறந்தன. 2006ல் இந்த மருந்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 90களில் இலட்சக்கணக்காக இருந்த கழுகுகள் 2006 காலத்தில் வெறும் ஒரு சில ஆயிரங்களாக சுருங்கின!
இந்தியக் கழுகு என்று அறியப்படும் நீண்ட அலகுள்ள வல்லூறு (Long billed vulture), வெந்நிற வல்லூறு (White-backed vulture) ஆகிய இரண்டு இனங்கள் அன்று மும்பையில் சர்வசாதாரணமாக இருந்தன. குளிர்காலத்தில் நகருக்கு வலசை வரும் க்ரிஃபன் வல்லூறு (griffon vulture) என்றொரு இனமும் அப்போது இருந்தது. 2007ல் மும்பையில் 11,000 ஓரியண்ட் வெண்ணிற கழுகுகள், 45,000 நீண்ட அலகுள்ள கழுகுகள் மற்றும் 1000 ஸ்லெண்டர் (slender vulture) கழுகுகள் இருந்தன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
ஆய்வுகளும் பாதுகாப்பு முயற்சிகளும்
2012ல் இந்த இனங்களின் எண்ணிக்கை குறையும் வேகம் மாறியது என்று பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் கூறியது. 2015ல் மீண்டும் ஆய்வு நடந்தது. அப்போது 6,000 ஓரியன் வெண்ணிற வல்லூறுகள், 2,000 நீண்ட அலகுடைய வல்லூறுகள், 1000 ஸ்லெண்டர் வல்லூறுகள் இருந்தன என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. கழுகுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. கவலை தொடர்ந்தது.
மும்பையில் கழுகுகளுக்கு இரண்டு விதமான மரணங்கள் சம்பவித்தன! ஒன்று ஒரு குறிப்பிட்ட பறவையினத்தின் மரணம். இது மனிதன் ஏற்படுத்திய காரனங்களால் நிகழ்ந்தது. மற்றொன்று மூவாயிரம் ஆண்டு நீண்டு நின்ற ஒரு பாரம்பரிய சம்பிரதாயத்தின் மரணம். ஒரு உயிரினத்தின் அழிவு மனிதனின் சமூக வாழ்வை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டே இது. பார்சி சமூகத்தின் சடங்கு முறை தடைபட்டதையும் கழுகு இனத்தின் அழிவையும் கண்டு டுங்கர்வாடி வனத்தை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பித்தது.
வலிமையான அந்த பார்வைக்கு முன்னால் டுங்கர்வாடியை வட்டமிட்ட ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்கள் நிசப்தமாயினர்! மும்பை நகர சமூகம் தங்களுக்கு பக்கத்தில் இருந்த காட்டை, அதில் வாழும் கோடானுகோடி உயிர்களை பரந்து விரிந்த ஆழமான அர்த்தத்தில் காண ஆரம்பித்தது.
2017ல் மும்பையில் பசுமை கட்டிடங்களை நிர்மாணிப்பது பற்றிய உரையாடலில் ஈடுபட்டிருந்த நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர், நகர்ப்புற சூழலியலாளர், சூழல் மற்றும் சமூகம் என்ற இணைய வாசல் அமைப்பின் விஞ்ஞானியுமான ஆன் ரெய்டுமார்க்கெர் அவர்களுக்கு (Anne Rademacher) மும்பை டுங்கெர்வாடியில் அழிந்து கொண்டிருக்கும் கழுகுகள் பற்றி ஆராய அழைப்பு வந்தது.
“உயிப் பன்மயத் தன்மையின் காவல் கோட்டையே டுங்கெர்வாடி. மும்பை நகரம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடின் பெரும் பகுதியை இந்த காடே உறிஞ்சுகிறது. நகரம் ஏற்படுத்தும் ஒலி மாசைக் குறைக்கிறது. மழை நீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறக்குகிறது. காட்டின் பரிசுத்தமான அர்த்தத்துடன் சூழல் முக்கியத்துவத்தை டுங்கெர்வாடி உணர்த்துகிறது” என்று அவர் கூறுகிறார்.
தேசிய செயல் திட்டம்
பார்சி சமூகத்தின் சூழலியலாளரும் சூழல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான அமைப்பின் (Centre for Environment Research & Education) தோற்றுனருமான டாக்டர் ராஷ்னே டுங்கர்வாடியில் நாட்டுப்புற மரங்களையும் குத்து செடிகளையும் வளர்க்கும் திட்டத்தை ஆரம்பித்தார். 2015ல் நடப்பட்ட 7092 மரக்கன்றுகள் இன்று பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. வல்லூறுகளை அழிவில் இருந்து மீட்க தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கால்நடைகளுக்காக தயாரிக்கப்படும் புதிய ஸ்டீராய்டு, வீக்கம் ஏற்படுத்தாத மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு முன்பே அவற்றை கழுகுகளில் பரிசோதிக்க வேண்டும் என்று கழுகுகள் பாதுகாப்பு செயல் திட்டம் அறிவுறுத்தியுள்ளது. பல மாநிலங்களில் இந்த உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் முதல் ஆசிய கிங் வல்லூறு பாதுகாப்பு மையம் உத்தரப்பிரதேசத்தில் மஹராஜ்கஞ்ச் (Maharajganj) மாவட்டத்தில் ஜடாயு மையம் என்ற பெயரில் செயல்படுகிறது.
2023 பிப்ரவரியில் மேற்கு வங்காளத்தில் பர்சா புலிகள் சரணாலயத்தில் இருபது கழுகுகள் வளர்க்கப்பட்டு பிறகு காட்டிற்குள் விடப்பட்டன. பாம்பே இயற்கை வரலாற்று சங்கம், வனத்துறை, ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 2024 ஜனவரி புள்ளிவிவரங்களின்படி டிசம்பர் 2023ல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் 308 கழுகுகள் வாழ்கின்றன என்று தெரிய வந்துள்ளது.
இந்த உயிரினங்களைக் காக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று காணாமல் போய்க் கொண்டிருக்கும் கழுகுகள் மீண்டும் முன்பு போல வானில் வலம் வரும் காலம் விரைவில் வரட்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இன்னும் இரண்டு மில்லியன் பூஞ்சை உயிரினங்கள் பூமியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது என்று லண்டன் க்யூ (Kew) தாவரவியல் பூங்கா ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட 2023ம் ஆண்டிற்கான உலக தாவர மற்றும் விலங்குகள் (State of Flora & fauna) நிலை பற்றிய ஆய்வறிக்கை கூறுகிறது.
மனிதனின் கண்டுபிடிப்பு தேடலில் பூஞ்சையினங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தாவரங்களும் அழியும் ஆபத்தில் உள்ளவை என்பதால் அவை நிரந்தரமாக அழிந்துவிடும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.
கண்டுபிடிக்கப்படும் புதிய உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி உயிரினங்களும் மறையும் ஆபத்தில் உள்ளன. மனித உடலில் வயிற்றுப்பகுதி செரிமான மண்டலத்தில் உள்ள மைக்ரோபியோமில் (gut microbiome) உணவு செரித்தல், ஆற்றல் பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தி பெற உதவும் பூஞ்சைகள் வாழ்கின்றன.இந்தப் பூஞ்சைகள் முதல் பூமியில் உள்ள மிகப் பெரிய தரைவாழ் பூஞ்சையினம் வரை காணப்படும் உயிரினங்கள் அவற்றின் உயிர்ப்பன்முகத் தன்மையில் முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன.
இவை காற்று, தாவர விலங்குகளுக்குள், மண் மற்றும் கடலில் பல அளவுகளில் பல வடிவங்களில் வாழ்கின்றன. இவற்றில் 90% இன்னமும் அறிவியலால் அறியப்படாதவை என்று க்யூ ராயல் பூங்கா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் பூஞ்சைகள் உள்ளன. 155,000 பூஞ்சை உயிரினங்கள் மட்டுமே இதுவரை கண்டறியப் பட்டுள்ளன. “இது மனிதன் இன்னமும் கால் பதிக்காத எல்லை ப்பகுதி (uncharted territory). கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் நம் வாழ்வின் நிலைத்தன்மை, விவசாயம் போன்றவற்றில் இந்த உயிரினங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் மிக உயிர் வாழ்வில் மிக முக்கிய இடம் உள்ளது.
அண்டவெளியில் கரும்பொருட்கள் பூமியில் பூஞ்சைகள்
இப்போது உயர் தர டி என் ஏ பகுப்பாய்வு வசதிகள் உள்ளன. அறியப்படாத பூஞ்சைகள் பற்றிய ஆய்வுகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் அண்டவெளியை ஆராய்வது போல. விண்வெளி ஆய்வில் கரும்பொருட்கள் போல பூஞ்சைகள் என்று ராயல் பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Prof Alexandre Antonelli) கூறுகிறார்.
கண்டறியப்படாத புதிய பூஞ்சை உலகம் பற்றிய இச்செய்தி ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது என்றாலும் அவற்றில் பல இனங்கள் அழியும் ஆபத்தில் இருப்பவை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் அடையாளம் காணப்பட்ட சிறப்பு கடத்து திசுக்களைக் கொண்டுள்ள வாஸ்குலர் தாவரங்களில் 70% ஏற்கனவே விரைவில் அழியும் ஆபத்தான நிலையில் (threatened) உள்ளன.
இந்த வகை உயிரினங்களில் 59% இனங்கள் அழியும் ஆபத்தை (Endangered (EN)) நிலையிலும் 24% இனங்கள் இந்த நிலையை விரைவில் அடையும் ஆபத்திலும் வாழ்கின்றன. பூமியில் இதுவரை 350,000 வாஸ்குலர் வகை தாவரங்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. 100,000 இனங்கள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இவற்றில் மூன்றில் ஒன்று அழியும் நிலையில் உள்ளது.
புதிய உயிரினங்கள் வேறெந்த நிலையிலும் வாழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவை அணைத்தும் அழிவை நெருங்கி விட்டவையாக வகைப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொது மக்கள் புதியவற்றை கண்டுபிடிப்பதை உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் ஊக்குவிக்கின்றனர். புதிய டி என் ஏ மரபணு வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தின் (DNA sequencing technique) புரட்சியால் ஒரு ஸ்பூன் மண்ணில் நூற்றுக்கணக்கான புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் மண் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பும் மண் மாதிரியின் ஒரு ஸ்பூன் மண்ணில் கண்டுபிடிக்கும் புதிய பூஞ்சை ஒன்றிற்கு பெயர் சூட்டும் வாய்ப்பு அதை அனுப்பும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. 2020 முதல் இத்திட்டத்தின்படி 10,200 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. ஆண்டிற்கு 50,000 புதிய இனங்களை அடையாளம் காண முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
2023ல் க்யூ பூங்கா விஞ்ஞானிகள் பிரேசில் அட்லாண்டிக் பகுதி மழைக்காடுகளில் ஜாம்பி-எறும்புத் தின்னி (zombie-ant fungi) போல trapdoor வகையைச் சேர்ந்த சிலந்தியை உண்ணும் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையினத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய இனங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் அவற்றை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. ”புதியவை கூடுதலாக கண்டுபிடிக்கப்படுவது மருத்துவம், வேளாண்மை, பொறியியல் மற்றும் மனித நோய்களை இன்னும் மேம்பட்ட முறையில் புரிந்துகொள்ள உதவும். தாவர விலங்குகளை விட டி.என்.ஏ. தொழில்நுட்பம் பூஞ்சைகளை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது.
பூஞ்சைகள் என்றால் ஆரம்பத்தில் நாய்க்குடைகள் மற்றும் லைக்கன்கள் (lichens) எனப்படும் பூக்களற்ற, மஞ்சள் அல்லது சாம்பல் நிறமுடைய, பாறைகள், சுவர்கள், மரங்கள் மீது படர்ந்து வாழும் சிறிய தாவரங்கள் மட்டுமே ஆராயப்பட்டு வந்தன. நம் மைக்ரோபையோமில் ஏராளமான பூஞ்சைகள் உள்ளன என்று இன்று அறியப்பட்டுள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்கள் பூஞ்சைகளால் ஏற்படுகின்றன அல்லது சமநிலையற்ற நிலையில் அவை நம் உடலிற்குள் இருப்பதால் தோன்றுகின்றன.
"மண்ணிற்கடியில் வாழும் பூஞ்சைகள் மரங்களை மண்ணோடு பிணைக்கின்றன. மரங்களின் வேர்களுடன் கூட்டுயிரி வாழ்க்கை வாழ்வதற்கான உறவை (symbiotic relationship) இவை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பரம் உதவி செய்து வாழ்கின்றன. நீரையும் சத்துப் பொருட்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த உயிரினங்களின் ஸ்போர்களை இப்போதும் நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றுராயல் பூங்காவின் மூத்த ஆய்வாளர் எஸ்ட்டர் கயா (Ester Gaya) கூறுகிறார்.
புதிய தாவரங்கள் மற்றும் பூஞ்சையினங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி விவரிப்பது உயிர்ப்பன்மயத் தன்மை அறிவியலில் ஒரு முக்கிய சவால். மோசமான அறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இடைவெளியுள்ள கொலம்பியா, நியூ கினி போன்ற 32 தாவர உயிர்ப்பன்மயத் தன்மை இருண்ட இடங்கள் (Plant biodiversity dark spots)அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகின் பல இடங்களில் போதுமான அளவில் ஏராளமான தாவரங்கள் இது வரை சேகரிக்கப்படவில்லை. ஆராயப்படவில்லை அல்லது அந்த இடங்களின் உயிர்ப்பன்மயத் தன்மையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் ஏராளம் என்பதால் இவை இருண்ட இடங்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
இன்று நாம் அறியாமல் நம்முடன் வாழும் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கும்போது கண்டுபிடிக்கப் படாதவையும் அவற்றை நாம் அறியும் முன்பே அழிந்துவிடும் என்பது மனிதன் உடனடியாக சூழலைக் காக்க உருப்படியாக அவனால் ஆனதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- இந்தியாவின் வண்ணத்துப் பூச்சிக்கு அரேபியாவில் பாஸ்போர்ட்
- வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் தேவாலயங்கள்
- கொலையாளித் திமிங்கலங்கள்
- ஒரு மனிதன் ஒரு குளம் ஒரு சில தவளைகள்
- பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்
- அழிவின் விளிம்பில் கானமயில்
- நஞ்சு உண்ணும் சீல்கள் மனிதருக்கு உதவுமா?
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- இயற்கையின் ஆயுதங்கள்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன
- அழிவில் இருந்து மீண்டு வந்த வண்ணத்துப் பூச்சி
- திமிங்கல வேட்டை
- யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை?
- யார் காப்பாற்ற வருவார் இந்த உயிரினங்களை?
- மீண்டும் பறக்குமா குவாமின் மீன்கொத்திப் பறவை?
- கடலின் மழைக் காடுகளைக் காப்பாற்றும் கலைச் சிற்பங்கள்
- கரடிகள்
- மண்ணிற்கடியில் ஒளிந்திருக்கும் விலையுயர்ந்த பூஞ்சை
- நுண் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகள்