கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகம் ஆகஸ்ட் இருபதாம் தேதியை அடையாளப்படுத்துவது பூமியின் வரலாற்றில் மிக அதிக மனித மரணங்களுக்கு காரணமான ஓர் உயிரினத்தின் பெயரிலேயே! நம் சுண்டு விரல் நகம் அளவிற்கு மட்டுமே வளரும் கொசுக்களே அந்த பயங்கர உயிரினங்கள்! பூமியில் இதுவரை தோன்றிய மனித உயிர்களில் பாதியை அதாவது 5,200 கோடி மனித உயிர்களைக் கொன்றொடுக்கியது கொசுக்கள் பரப்பிய நோய்களே என்று கருதப்படுகிறது.
இலண்டன் சுரங்கப் பாதை கொசுக்கள்
கொசுக்கள் பூமியில் தோன்றி இருபது கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வாழும் சூழலுக்கேற்ப பல பரிணாம வழிகளில் பயணித்து மூவாயிரத்திற்கும் அதிகமான உயிரினங்களாக நூறு இலட்சம் கோடி கொசுக்கள் பூமியில் இன்று நம்முடன் சுகமாக வாழ்கின்றன. ஆனால் இவற்றில் க்யூலெக்ஸ் மொலெஸ்ட்டஸ் (Culex molestus) என்ற ஓர் இனத்தின் பரிணாம வரலாறு அசாதாரணமானது. இலண்டன் சுரங்கப்பாதை கொசுக்கள் (London underground mousquitos) என்று அறியப்படும் இவற்றின் கதை சுவாரசியமானது.இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் 1940 செப்டம்பர் 7 முதல் 1941 மே 11 வரை ஹிட்லரின் தலைமையில் படைகள் இலண்டன் நகரத்தில் தி ப்ளிட்ஸ் (The blitz) என்ற பெயரில் குண்டு மழை பொழிந்தது. தாக்குதல் தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக 57 நாட்கள் மக்கள் வாழ்ந்த இடங்களிலும் முக்கிய கட்டிடங்களின் மீதும் ஒரு இலட்சம் குண்டுகள் வீசப்பட்டன.
இலண்டன், காவெண்ட்ரி (Coventry), பர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்ட்டர் போன்ற மாநகரங்களில் மரணத்தின் பெரு விளையாட்டு! பக்கிங்ஹாம் அரண்மணை, செயிண்ட் பால் கதீட்ரல் தேவாலயம், பாலங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள், சாலைகள் அழிந்தன. எட்டாயிரம் வீடுகள், அதே அளவிற்கு குழந்தைகள், நாற்பதாயிரம் மனித உயிர்களின் பேரிழப்பு! கூரைக்கு கீழ் நிம்மதியாக படுத்துறங்க முடியாமல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இலண்டனின் புகழ்பெற்ற சுரங்கப் பாதைகளில் அடைக்கலம் புகுந்தனர்.
இலண்டன் சுரங்கப் பாதை இரயில் அமைப்பு பூமிக்கடியில் அந்த காலத்தில் விரிவான வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது. சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சம் புகுந்தது பற்றிய புகைப்பட வடிவ ஆதாரங்களை இன்றும் இம்பீரியல் போர் அருங்காட்சியகங்களில் காணலாம். மனிதர்கள் மட்டும் இல்லாமல் கொசுக்களும் குண்டுகளின் நெருப்பு மழையில் இருந்து தப்ப சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்தன.
க்யூலெக்ஸ் மொலெஸ்டஸ் பரிணாமமும் உடலமைப்பும்
க்யூலெக்ஸ் மொலெஸ்ட்டஸ் என்ற புவியின் வட கோளப்பகுதியில் காணப்படும் சாதாரண வீட்டுக் கொசுக்களில் ஓர் இனம் அப்போது நிலவிய சாதக பாதக சூழ்நிலைகளில் பக்குவமடைந்து க்யூலக்ஸ் பிப்பியன்ஸ் (Culex pipiens CX Pipiens) என்ற பொதுப்பெயரில் இரண்டு சூழல் தனித்துவம் மிக்க நோய் பரப்பும் புதியதொரு இனம் பரிணாமமடைந்தது. தரைக்கு மேல் வாழும் பிப்பியன்ஸ் டயாபாஸஸ் (pipiens diapauses) என்ற இனம் குறிப்பாக குளிர்காலத்தில் பறவைகளைக் கடிக்கின்றன.
தரைக்குக் கீழ் வாழும் மற்றொரு இனமான மொலஸ்ட்டஸ் ட்ரைப்ஸ் (molestus thrives) சுரங்கப் பாதைகள், அடித்தளங்கள் மற்றும் மனிதனால் எழுப்பப்பட்ட நிலத்தடி வாழிடப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பாலூட்டிகளைக் கடிக்கின்றன. இரத்தம் குடிக்காமல் இவை முட்டையிடுகின்றன. இந்த இரு இனங்களும் சில இடங்களில் மட்டும் மரபணு மாற்றம் அடைந்துள்ளன. இதனால் இவை இரண்டையும் கணிப்பது கடினம். மேலும் தரைக்குக் கீழ் வாழும் இந்த இனத்தின் தோற்றம் இப்போதும் சர்ச்சைக்குரியது.
என்றாலும் விரைவான, நகரமய வாழ்க்கை தகவமைப்பிற்கு உயிரினங்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது பற்றிய நூறாண்டுக்கும் மேற்பட்ட மரபணு மற்றும் சூழல் ஆய்வுகளில் இருந்து இவை வட ஐரோப்பாவில் இப்போது காணப்படும் இனம் உருமாறிய, வட ஆப்பிரிக்க இனங்களுடன் கலந்ததால் தோன்றியுள்ளது என்று நம்பப்படுகிறது. மேலும் தரைக்கு மேல் வாழும் இனத்தில் இருந்தே தரை கீழ் வாழும் இனம் பரிணாமம் அடைந்தது என்ற வாதம் தவறு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உண்மையில் இலண்டன் சுரங்கப் பாதை கொசுக்களின் இனம் மத்திய கிழக்கு பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்டான மனிதர்களைக் கடிக்கும் இனத்தில் இருந்து மாற்றம் அடைந்து உருவாகியிருக்கலாம் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை கடிப்பதால் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.
பொதுவாக மற்ற வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய மனித இரத்தம் அவசியம். ஆனால் இவை அவ்வாறு இல்லை. மாலை வேளையில் மட்டுமே சாதாரண கொசுக்கள் கடிக்கும்போது இவை இரவு பகல் வேறுபாடு இல்லாமல் கடிக்கின்றன. பல பத்தாண்டுகளாக ஐரோப்பாவில் வெஸ்ட்நைல் போன்ற நோய்கள் ஏற்பட இவையே காரணம் என்று நம்பப்படுகிறது.
சுரங்கப் பாதை கொசுக்களின் வேறுபட்ட பண்புகள்
க்யூலெக்ஸ் மொலஸ்ட்டஸ் கொசுக்கள் இப்போதும் நகரப்பகுதிகளில் கழிவுநீர் உள்ள இடங்கள், கட்டிடங்களின் அடித்தளங்கள் போன்றவற்றில் பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மனிதர்களைத் தாக்குகின்றன. மற்ற இனங்களுடன் ஒன்றுசேர்ந்து புதிய தலைமுறைகளை உருவாக்கும் இனப் பண்பு (speciation) இவற்றிடம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பருவ காலங்களில் மட்டுமே மற்ற இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. நம் ஊர்களில் மழைக்காலங்களில் மட்டுமே கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன.
மேலைநாடுகளில் கொசுக்களின் இனப்பெருக்கம் குளிர்காலத்தில் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த கதையின் கதாநாயகனான மொலஸ்ட்டஸ் கொசுக்கள் எல்லா காலங்களிலும் முட்டையிட்டு பெருகுகின்றன. இரயில் சுரங்கப் பாதைகளில் கோடையும் குளிரும் இலையுதிர்காலமும் வசந்தமும் இல்லை. எப்போதும் ஒரே காலநிலை. வெளிச்சம் குறைவு. ஏராளமான மனித இரத்தம். இவற்றின் ஆக்ரோஷம் மிக்க வேதனை தரும் கடியில் இருந்து மனிதர்கள் எங்கே தப்பியோடுவது?
இவை பரிணாமம் அடைந்து உண்டான சுரங்கப் பாதைகளில் பறவைகள் இல்லை. அதனால் பறவைகளைக் கடிப்பதில்லை. இரத்தத்தைக் குடிப்பதில்லை. பூமியின் சில நிலப்பகுதிகளில் தனித்துவமான சூழ்நிலைகளில் ஒற்றைப்பட்டு வாழ நேரிடும் உயிரினங்களின் பரிணாம கதைகளுக்கு வடக்கு கேரளாவில் செங்கல் குன்றுகளில் கிணறுகள், அவற்றை இணைக்கும் நீர் மூலங்களில் மட்டுமே காணப்படும் விசித்திர மீனினங்கள், காலப்பகோஸ் தீவில் பயமில்லாமல் வாழும் குருவிகள், கழுத்து நீண்ட ஆமைகள், பல வகை குகை மீன்கள் போன்ற எடுத்துக்காட்டுகள் உலகம் முழுவதும் உள்ளன.
கடந்த ஒரு நூற்றாண்டில் மொலஸ்ட்டஸ் கொசுக்கள் பரிணாம வேறுபாடு அடைய மனிதனும் ஒரு சாட்சி என்பதால் இவை தெற்கு வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் எல்லா இடங்களிலும் இந்த இந்த இனம் வாழ்கிறது.
போர் முடிந்தது… ஆனால்…
ஜெர்மனியின் ப்ளிட்ஸ் குண்டுத் தாக்குதலில் சகலமும் நஷ்டப்பட்டு இலண்டன் இரயில்வே சுரங்கப் பாதைகள், மற்ற இடங்களில் அபயம் தேடிய மனிதர்களுக்கு அன்று “அமைதியாக இருங்கள். தொடர்ந்து செல்லுங்கள்” (Keep calm and carry on) என்ற ஒரு முழக்கம் நம்பிக்கையளிக்கும் பிரபல வாசகமாக இருந்தது.
பிரிட்டிஷ் தெருக்கள், விமான நிலையங்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் இடங்கள், சாவி கொத்துகள், காஃபி கோப்பைகள், T ஷர்ட்களில் அச்சிடப்பட்ட இலண்டனின் நம்பிக்கை நட்சத்திரமான அந்த புகழ் பெற்ற முழக்கம் இப்போதும் அங்கு நடைமுறையில் உள்ளது. இரத்தக்களறியான இரண்டாம் உலகப்போர் முடிந்தது. மக்கள் மறைவிடங்களில் இருந்து வெளியில் வந்து வாழத் தொடங்கினர். ஜெர்மன் சாம்ராஜ்யம் வீழ்ந்தது.
ஆனால்… கொசு என்ற பயங்கர உயிரினத்துடன் நாம் நடத்தும் தீவிர போர் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எடி செயிலர் Eddie Seiler), சால் மார்க்கஸ் (Sol Marcus), பெனி பெஞ்சமின் (Bennie Benjamin) ஆகிய இசைக்கலைஞர்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எழுதிய ஒரு பாடல் புகழ் பெற்றது.
“உலகம் முழுவதும் விளக்குகள் மீண்டும் அணைக்கப்படும்போது
சிறுவர்கள் அனைவரும் மீண்டும் வீடு திரும்பிய பிறகு
மேலிருக்கும் வானில் இருந்து மழையோ பனியோ மீண்டும் பெய்யும்போது
ஒரு முத்தம் என்பதற்கு பொருள் விடைபெறுவதில்லை …
மாறாக அது அன்பிற்கு ஹலோ சொல்வதே”
“When the lights go on again all over the world
And the boys are home again all over the world
And rain or snow is all that may fall from the skies above
A kiss won't mean "Goodbye" but "Hello to love”
ஆனால் கொசுக்களின் முத்தம் மரணத்திற்கான முத்தம்! நினைவில் வைத்துக் கொள்வோம்.
** ** **
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/about-all-you-need-to-know-about-culex-molestus-and-blitz-1.8839705
&
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9108678/
&
https://rarehistoricalphotos.com/london-blitz-underground-photos/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- ரமேஷ் தங்கமணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் ஒரு காந்தத்தின் இருவேறு துருவங்கள் போன்றது; இரண்டும் இணைய வாய்ப்பென்பது இல்லவே இல்லை. பகுத்தறிவு எதையும் கேள்விக்கு உள்ளாக்கும் காலத்திற்கு தகுந்தாற் போல் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். மூடநம்பிக்கையோ கண்மூடித்தனமாக எதையும் நம்பும் அதையே பரப்பவும் செய்யும். பகுத்தறிவாதிகள் ஒரு மனத்தினராக தன்னம்பிக்கையோடு செயல்படுவர். ஆனால் மூடநம்பிக்கை உடையவர்களோ; ஒருபுறம் தாங்கள் நம்புகின்ற ஒரு நம்பிக்கையை கடவுள் நிலைக்கு உயர்த்தி கொண்டாடுவார்கள் மறுபுறம் அதனை துன்புறுத்தி கீழான நிலைக்கு கொண்டு செல்லவும் துணிவர். மூடநம்பிக்கையாளர்களின் இத்தகைய இருநிலை போக்கானது பெண்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. எவ்வாறெனில் பெண்களை சக்தி வடிவமாக கொண்டாடும் கூட்டமே பெண்களுக்கு எதிரான சுரண்டல், குடும்ப வன்முறை, பலாத்காரம் போன்ற கீழான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த இருநிலை மனத்தினரால் பாதிப்புக்குள்ளாவது மனித இனம் மட்டுமின்றின் சில விலங்கினங்களும் தான், அவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள்.மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்னே தோன்றிய "மூத்த குடி" உயிரினம் பாம்புகள். பாம்புகள் இயற்கையை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனித இனம் பரிணமித்த போது பாம்பிற்கும் மனிதனுக்குமான மோதல் தொடங்கியிருக்கலாம். ஆதி மனிதர்களின் உள்ளத்தில், பாம்பு கடியால் இறக்கும் சக மனிதர்களைக் கண்டு, பாம்பின் மீது ஒருவித பயமும் வெறுப்புணர்வும் தோன்றியிருக்கக் கூடும். பாம்பின் மீதுள்ள பயத்தின் காரணமாக இயற்கையை வணங்கும் மக்கள் கூட்டம் பாம்புகளை கடவுளாக வணங்கத் தொடங்கியது. இந்திய, மேற்குலக மற்றும் பழங்குடியின கலாச்சாரங்களில் பாம்புகளின் தாக்கம் வெகுவாகக் காணப்படுகிறது. யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்கள் பாம்பினை சாத்தான் எனும் தீமையின் வடிவமாக சித்தரிக்கின்றன. இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியான ஹதீசில் (திர்மிதி) பாம்புகளை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று பதியப்பட்டுள்ளது. அதே யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வேதங்கள் மோசஸ் (மூஸா) அவர்கள் அற்புதம் நடத்திய ஒரு கருவியாக பாம்புகள் பயன்பட்டதாக உயர்த்தி கூறுகின்றன.
இந்தியா என்றாலே ஒரு காலத்தில் மேலை நாட்டினரின் பார்வையில், பாம்புகளும் பாம்பாட்டிகளும் நிறைந்த ஏழை நாடு என்ற மதிப்பீடே இருந்தது. பெரும்பான்மை இந்தியர்கள் பாம்புகளை தெய்வமாக வழிபாடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் காணப்படும் ஆதி பழங்குடி வாழிபாடுகளில் தொடங்கி முக்கிய வேத இதிகாசங்கள் மற்றும் பவுத்த மரபுகள் அனைத்திலும் பாம்பு வழிபாடு குறித்த குறிப்புகள் கணக் கிடைக்கின்றன. இந்தியர்களால் வணங்கப்படும் பெரும் தெய்வங்களான சிவன் தன்னுடைய கழுத்தில் பாம்பினை அணிந்து காட்சியளிக்கிறார், விஷ்ணுவோ தன்னுடைய படுக்கையாகவே பாம்பினை கொண்டுள்ளார். தவிர நாகர் சிலை வழிபாடு மற்றும் புற்று கோவில் வழிபாடு என்பது தென்னிந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு வழிபாட்டு நம்பிக்கையாகும். திருமண தோஷம் நீங்குதல் மற்றும் குழந்தை வரம் வேண்டி நாகர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. வாசுகி, ஆதிசேஷன், காளிங்கன், மானசா, ராகு, கேது போன்ற பாம்புகள் இந்திய ஆன்மீக வெளியில் முக்கிய பாத்திரங்களாக விளங்குகின்றன. குணமடைதல், ஞானம் மற்றும் யோகா குண்டலினி சக்தியின் சின்னமாக பாம்புகள் உருவகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு சமூகத்தில் உயர்வான இடத்தில் பாம்புகளை வைத்து கொண்டாடும் "நம்பிக்கையாளர்கள்" பலர், பாம்புகளைக் குறித்த பல பொய்யான அறிவியல் ஆதாரமற்ற புரளிகளை பரப்பி, அதன்காரணமாக பாம்புகளைக் கண்டால் அடித்து கொல்லவும் செய்கின்றனர்.
இந்திய சமூகப் பரப்பில் பாம்புகளைக் குறித்த மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் அறிவியல் சாராத தகவல்கள் அதிகம். பாம்புகளை குறித்த மூட நம்பிக்கைகளில் முக்கியமானது மந்திரித்தல் மூலம் பாம்பு கடி விஷத்தை முறிக்க முடியும் என்பதாகும், ஆனால் இது ஒரு தவறான நம்பிக்கை. பாம்புக்கடிக்கு சரியான முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகி பாம்புக்கடிக்கு உரிய எதிர்ப்பு மருந்தினை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். பாம்புகள் குறித்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பரப்பப்படும் மூடநம்பிக்கையானது பாம்புகள் பழிவாங்கும் தன்மை கொண்டவை என்பதாகும். ஆனால் பாம்புகளின் மூளை-நரம்பு மண்டலமானது மனிதர்களையோ அவர்களின் செயல்களையோ நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை என்பதே உண்மை. இதன்மூலம் பாம்பு ஜோடிகளில் ஒன்றை கொன்றால் மற்றோரு பாம்பு துணையானது தேடிவந்து பழிவாங்கும் என்பது அப்பட்டமான பொய் என அறிவியல் கூறுகிறது. சில பாம்புகள் (தண்ணீர் பாம்பு அல்லது மண்ணுளி பாம்பு) மனித உடலில் பட்டால் வெண்குஷ்டம் போன்ற சரும நோய் ஏற்படும் என்பது அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கையாகும். நாகப்பாம்புகள் யாரையும் கடிக்காமல் தன்னுடைய விஷத்தை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் நாளடைவில் அந்த விஷமானது நாகமணியாக மாறும் என்பது கடைந்தெடுத்த மூடநம்பிக்கை. ஏனெனில் பாம்பின் விஷம் என்பது மனித உடலில் சுரக்கும் எச்சில் மற்றும் இந்திரியம் போன்ற ஒரு திரவ வடிவ சுரப்பே ஆகும்.
பாம்புகளை குறித்த பழமையான மூடநம்பிக்கை, பாம்புகள் (மகுடி) இசைக்கு மயங்கும் தன்மை கொண்டவை என்பது. பாம்புகளால் பெரிய சத்தம், வெப்பம் மற்றும் அதிர்வினை மட்டுமே உணர்ந்து கொள்ள இயலும். எனவே பாம்புகள் தலை அசைத்து சீறுவது மகுடி ஓசைக்காக அல்லாமல், அதனை இசைப்பவரின் கைகளின் அசைவிற்கே ஆடுகின்றன என்பதே உண்மை. பாம்புகள் பால் குடிக்கும் என்று கருதி மக்கள் புற்று கோவிலில் பால் ஊற்றுவார்கள் ஆனால் பாம்புகள் பால் குடிக்கும் வழக்கம் கொண்ட உயிரினங்கள் இல்லை. இவ்வாறு பாம்புகளைக் குறித்த பல்வேறு மூடநம்பிக்கை தகவல்களானது அறிவியல் தொழிநுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்திலும் கூட மக்கள் மத்தியில் உலவுகின்றது.
பாம்புகளை இறைவன் என்கிற நிலைக்கு உயர்த்தும் சமூகமானது, பாம்புகளைக் கண்டால் கல்லால் அடித்து துன்புறுத்தவும் கொல்லவும் முற்படுகின்றது. இத்தகைய முரணான செயல்பாட்டிற்கான காரணங்களாவன; அதீத மூடநம்பிக்கை மற்றும் போதிய அறிவியல் விழிப்புணர்வு இல்லாததேயாகும். உண்மையில் பாம்புகள் பயந்த சுவாபம் கொண்ட உயிரினங்களாகும். பாம்பினக்களில் மிகக் குறைவானவை மட்டுமே விஷம் கொண்டவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவை இரையை வேட்டையாடுவதற்கும் தற்பாதுகாப்பிற்காக மட்டுமே மற்ற விலங்கினங்களையோ மனிதர்களையோ தாக்குகின்றது. உயிர் மண்டலத்தில் கொல்லுதல் மற்றும் கொல்லப்படுதல் என்ற உயிர்சங்கிலியின் முக்கிய கண்ணியாக பாம்புகள் விளங்குகின்றன. பாம்புகளிலிருந்து எடுக்கப்படும் விஷமானது புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பாம்புகளானது; பயம், மருந்து தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பிற்காக தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றது. இவற்றில் பயத்தின் காரணமாக பாம்புகள் கொல்லப்படுவதை போதிய விழிப்புணர்வின் மூலமே தடுக்கமுடியும். இறுதியாக, பாம்புகளை தெய்வநிலைக்கு உயர்தவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவற்றை தேவையின்றி கொல்லாமல் இருப்பது உயிர்சூழலை சமநிலையில் வைப்பதற்கும் பூமியில் மனித இனம் நிலைபெற்று வாழ்வதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதே பகுத்தறிவாதிகளின் வேண்டுகோள்.
(16 சூலை - உலக பாம்புகள் தினம்)
- Dr. ரமேஷ் தங்கமணி, விஞ்ஞானி, ஜி.எஸ். கில் ஆய்வு நிறுவனம், வேளச்சேரி - 42
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புல்லைப் பறித்து பசுவுக்குக் கொடுத்து அதில் இருந்து பால் கறந்தெடுத்து மனிதன் குடிக்கத் தொடங்கி வெறும் 11,000 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன. ஆனால் இதே முறையில் தீனி போட்டு பூஞ்சைகளை வளர்த்து தங்கள் லார்வாக்களுக்கு உணவாக சில இன எறும்புகள் கொடுக்கின்றன. இது ஆரம்பித்து கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன.
மனிதன் தவிர மிகச் சிக்கலான, அளவில் பெரும் எண்ணிக்கையிலான சமூக வாழ்க்கை நடத்தும் உயிரினங்களே இலை வெட்டும் எறும்புகள் (Leaf cutter ants). ஒரு சில ஆண்டுகளிலேயே 6,500 சதுர அடி அளவு பரப்புள்ள இவற்றின் புற்றுகளில் 80 லட்சம் எறும்புகள் வரை வாழத் தொடங்கும். தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா, மெக்சிகோ, பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இவை இலை வெட்டும் எறும்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அட்டா, அக்ரோமியம் எக்ஸ் (Atta and Acromyrmex) என்ற இரு வகைகளாக 47 இனங்களில் காணப்படுகின்றன.இவை ஐம்பது மில்லியன் ஆண்டுகளாக ஒரு வகையில் உழவு செய்து வருகின்றன. இலைகள், பூக்கள், புற்கள் எல்லாவற்றையும் வெட்டியெடுத்து தங்கள் உடல் எடையை விட இருபது முதல் ஐம்பது மடங்கு எடையை சுமந்து செல்லும் ஆற்றல் உள்ளவை இவை. மனிதர்களுக்கு மட்டும் இந்தத் திறன் இருந்திருந்தால் ஒரு மனிதன் 4,000 கிலோ எடையை சுமந்து கொண்டு செல்ல முடியும். இணை சேரும் காலத்தில் சிறகுகளை உடைய இந்த இன எறும்புகள் ஒன்று சேர்ந்து பறந்து கொண்டே இணை சேர்கின்றன. ஒரு காலனியை உருவாக்கத் தேவையான 30 கோடி ஆண் இனச்செல்களை சேகரிக்க பெண் எறும்புகள் பல ஆண் எறும்புகளுடன் இணை சேர்கின்றன.
ராணி எறும்பு
தரையைத் தொடும்போது இறக்கைகளை இழக்கும் பெண் எறும்புகள் காலனியை உருவாக்க உகந்த இடத்தைத் தேடுகின்றன. நூறு பெண் எறும்புகள் இருந்தால் அவற்றில் ராணியாக மாறி காலனியை உண்டாக்க இரண்டு மூன்று எறும்புகளால் மட்டுமே முடியும். ஒவ்வொரு ராணியின் தலையில் இருக்கும் இன்ஃப்ராபக்கெல் பை (infrabuccal pocket) என்று அழைக்கப்படும் பையில் பூஞ்சைகளின் மைசீலியம் காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி எறும்புகள் பூஞ்சைகள் அடங்கிய ஒரு நந்தவனத்தை உருவாக்குகின்றன. காலனிகளில் பெரும்பாலும் ஒரு ராணி எறும்பு மட்டுமே இருக்கும் என்றாலும் ஒரு சில காலனிகளில் ஒன்றிற்கும் கூடுதலான ராணி எறும்புகளும் இருப்பதுண்டு.
இவ்வாறு உருவாக்கப்படும் காலனிகளில் எறும்புகள் அவற்றின் அளவைப் பொறுத்து மிகச் சிறியவை (minim), சிறியவை (miner), நடுத்தரமானவை (mediam) மற்றும் பெரியவை (major) என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் அவற்றிற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள வெவ்வேறுவிதமான வேலைகளைச் செய்கின்றன.
வேலைகள் பலவிதம்
மிகச் சிறியவை பூஞ்சை நந்தவனத்தைப் பராமரிக்கின்றன. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சிறிய எறும்புகள் வரிசையாகச் செல்லும் எறும்புத் தொடர்களின் பாதுகாப்பிலும் தாக்க வரும் எதிரிகளைத் துரத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.
நடுத்தர அளவுடையவை இலைகளை வெட்டியெடுத்து காலனிகளுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. படைவீரர்கள் என்று அழைக்கப்படும் பெரிய எறும்புகளே காலனிகளைப் பாதுகாப்பது மற்றும் எறும்புகள் போகும் வழியில் இருக்கும் தடைகளை நீக்குவது மற்றும் பொருட்களை காலனிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வேலைகளை செய்கின்றன.
வளர்க்கப்படும் பூஞ்சைகளின் குடும்பம்
வெவ்வேறு வகை இன எறும்புகள் இனத்திற்கேற்ப பலவித பூஞ்சைகளை வளர்க்கின்றன. இப்பூஞ்சைகள் லெபியோட்டேசி (Lepiotaceae) குடும்பத்தைச் சேர்ந்தவையே. எறும்புகள் இந்த பூஞ்சைகளை மிகக் கவனமாக வளர்க்கின்றன. புதிதாக வெட்டியெடுத்து வந்த இலைகளை மிதித்து நசுக்கி பூஞ்சைகளுக்குக் கொடுத்து வளர்க்கும் இந்த எறும்புகள் மற்ற எதிரிகளிடம் இருந்தும் அவற்றைப் பாதுகாக்கின்றன.
பூஞ்சைகளில் இருந்து கிடைக்கும் வேதியல் அறிகுறிகளின் உதவியுடன் தாங்கள் கொண்டுவரும் இலைகள் பூஞ்சைகளுக்கு பிடித்திருக்கிறதா என்பதை இவை அறிந்து கொள்கின்றன. பிடிக்கவில்லை என்றால் பிறகு அத்தகைய இலைகளை எறும்புகள் கொண்டு வருவதில்லை. இவ்வாறு இவை வளர்க்கும் சத்துகள் நிறைந்த பூஞ்சைகளை முதிர்ந்த எறும்புகள் சேகரித்து லார்வாக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றன.
லார்வாக்கள் ஆரோக்கியமான உணவை உண்டு வளர எறும்புகளின் உதவி தேவை. எறும்புகளின் லார்வாக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்றால் பூஞ்சைகள் அத்தியாவசியமானவை. இலை வெட்டும் எறும்புகளுடன் இவ்வாறு ஒன்று சேர்ந்து கூட்டு வாழ்க்கை வாழும் பூஞ்சைகள், இனப்பெருக்கத்திற்காக ஸ்போர்களை பல காலங்களாக உண்டாக்குவதில்லை. எறும்புகள் பூஞ்சைகளை வளர்க்க ஆரம்பித்து ஒன்றரை கோடி ஆண்டுகளாகி விட்டன. இது முழுமையடைய இன்னும் மூன்று கோடி ஆண்டுகள் தேவைப்படும்.
சுத்தமான புற்றுகள்
இந்த செயல் இப்போது பாதியே முடிந்துள்ளது. இப்பூஞ்சைகள் எறும்புகளுக்குத் தீவனம் கொடுக்க சத்துகள் நிறைந்த பகுதிகளை உருவாக்குகின்றன. உயிருள்ள பூஞ்சைகளை வளர்ப்பதால் அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது தங்களுடைய தலையாய பொறுப்பு என்பதால் எறும்புகள் புற்றுகளை சுத்தமாகப் பராமரிக்க பெரும் முயற்சி செய்கின்றன.
காலனிகளின் நீண்ட ஆயுளிற்கு புற்றுகளின் கழிவு மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. எறும்புகளின் பூஞ்சைகளைக் கொன்று அவற்றின் உடலை உணவாக்கும் சில எதிரிப் பூஞ்சைகள் காலனிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
உலகில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான நுண்ணுயிர்க்கொல்லிகளை (antibiotics) உற்பத்தி செய்யப் பயன்படும் ஆக்டினோமைசெட்டோட் என்ற பாக்டீரியா இந்த எறும்புகளின் உடலில் காணப்படுகிறது. இது எறும்புகள் பாதுகாக்கும் பூஞ்சைகளை எதிரிப் பூஞ்சைகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறது.
இது தவிர இந்த எறும்புகளின் நடுப்பகுதி வயிற்றில் இருந்து சிட்டினேசிஸ் (chitinases), லிக்னோசல்யுலைசஸ் (lignocellulases) மற்றும் பினைலசெட்டிக் அமிலம் (phenylacetic acid) போன்ற வேதிப்பொருட்கள் சுரக்கப்படுகின்றன. இவை பூஞ்சைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
கழிவுக்குவியல்கள்
வயதிற்கு வந்த எறும்புகளே கழிவுகளை காலனிக்கு வெளியில் கொண்டுபோய் சேர்க்கின்றன. இலைகளை வெட்டியெடுத்து வருவது, பூஞ்சைகளின் நந்தவனத்தைப் பராமரிப்பது போன்ற வேலைகளை சிறு வயது எறும்புகள் செய்கின்றன. அட்டா கொலம்பிக்கா (Atta colombica) என்ற ஒரு இலை வெட்டும் எறும்பு இனம் கழிவுகளை காலனிக்கு வெளியில் குவியல்களாக சேர்த்து வைக்கின்றன.
இந்தக் குவியலில் பயனில்லாத பொருட்கள், மீதமிருக்கும் பூஞ்சைகள் போன்றவை உள்ளன. சுலபமாக மக்க வேண்டும் என்பதற்காக இவை கழிவுக்குவியல்களை அவ்வப்போது கிளறி விடுகின்றன. இந்தக் குவியல்களைச் சுற்றிலும் இறந்த எறும்புகளையும் இவை கலந்து வைக்கின்றன.
தலையைத் துளைத்து ஈயின் முட்டை
இலைகளை வெட்டி சேகரித்து வரிசை வரிசையாக ஊர்ந்து வரும் இவற்றை சில எதிரி ஈ இனங்கள் ஆக்ரமித்து இவற்றின் தலையைத் துளைத்து அதற்குள் முட்டையிடுவது உண்டு. பல சமயங்களில் தொழிலாளி எறும்பின் தலை மீது ஏறி மிகச் சிறிய இனத்தை சேர்ந்த ஒரு எறும்பு உட்கார்ந்து இந்தத் தாக்குதலைத் தடுக்கிறது. பல வழிகள் மூலம் காலனிகளில் எதிரிப் பூஞ்சைகள் நுழைகின்றன. இது காலனிகளின் முழு அழிவிற்குக் காரணமாகும்.
இதையுணர்ந்து கெட்டுப் போன பூஞ்சைகளை எறும்புகள் வெகுதொலைவிற்கு எடுத்துக் கொண்டு போய் போட்டுவிட்டு வருகின்றன. இவை மனிதர்கள் மற்றும் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பயிர்களின் இலைகள் முழுவதையும் வெட்டி அழித்து காலனி உண்டாக்க எடுத்துச் செல்கின்றன. சாலைகள், விளை நிலங்களின் அழிவிற்கு இவை காரணமாகின்றன.
ஒரு நாளிற்குள் ஒரு எலுமிச்சை மர இலைகள் முழுவதையும் இவற்றால் வெட்டி சேதப்படுத்த முடியும். இவற்றின் புற்றுகளுக்கு வெளியில் பெரிதாகும் கழிவுக்குவியல்களை வளரும் தாவரங்களின் இளம் கன்றுகள் மீது தெளித்தால் எறும்புகள் ஒரு மாதத்திற்கு அந்தப் பக்கம் தலைகாட்டுவதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எறும்புகள் உலகில் இவை ஒரு தனி ரகம். இயற்கையின் படைப்பில் இவை ஒரு அதிசய உயிரினமே!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காட்டுத் தீயில் எரிந்து சாம்பலான காடுகளை உயிர்ப்பிக்க கறுப்பு மரங்கொத்தி (Black backed woodpecker) என்ற ஒரு சின்னஞ்சிறிய பறவையே ஆய்வாளர்களுக்குப் பேருதவி செய்கிறது. இந்தப் பறவைகளுக்கும் காட்டுத்தீக்கும் இடையில் இருக்கும் தொடர்பே இது குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்களுக்குத் தூண்டுதலாக அமைந்தது.
காட்டுத்தீ நிகழ்வுகளுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினருக்கு காடுகளை உயிர்ப்பிக்க, பன்மயத் தன்மையை மீட்க கறுப்பு மரங்கொத்திகளின் வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆன்லைன் கருவியைக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எரிந்த காடும் கறுப்பு மரங்கொத்தியும்
சாதாரணமாக காட்டுத்தீ ஏற்பட்ட பிறகு எரிந்து போன மரங்களை வெட்டி அகற்றுவதே தீ சம்பவத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் தீ மேலாண்மை (post fire management) நடவடிக்கை. ஒவ்வொரு முறையும் மரத்தை வெட்டும்போது காடு முழுவதும் பைத்தியம் பிடித்தது போல கறுப்பு மரங்கொத்திகள் பறப்பதை ஆய்வாளர்கள் கவனித்தனர். தீ பிடித்த மரங்களை வெட்டுவது இப்பறவைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்தது.பைரோ பன்முகத்தன்மை
பைரோ பன்முகத்தன்மை (Pyrodiversity) நிலையில் உள்ள காடுகளே இவற்றிற்கு மிகப் பிடித்தமானவை. ஒரு நிலப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படும் விதங்களில் உள்ள வேறுபாடே பைரோ பன்முகத் தன்மை எனப்படுகிறது. காடு முழுவதும் எரியாத நிலை - எரிந்து போன காடுகளுக்கு நடுவில் ஆங்காங்கே சில பசுமைப் பிரதேசங்கள் மீதமாகியிருக்கும். எல்லா மரங்களும் முழுவதுமாக எரியாத நிலை - அடுத்த மழையில் அவை துளிர் விடும் என்பது நிச்சயம். இந்த நிலையில் இருக்கும் காட்டுத் தீ ஏற்பட்ட காடுகளில் இப்பறவைகள் கூட்டமாக பறந்து வருகின்றன.
அப்போது எரிந்து போன மரங்களில் ஒரு வகை வண்டுகளின் (beetles) லார்வாக்கள் பெருகுகின்றன. இந்த லார்வாக்கள் மரங்கொத்திகளுக்குப் பிடித்தமான உணவு. வெந்து உருகி சூடு ஆறிய காட்டில் புதிதாக எரிந்த பகுதி அல்லது குறைவாக எரிந்த பகுதிகளுக்கு சமீபப் பிரதேசங்களில் மரங்கொத்திகள் கூடு கட்டுகின்றன. இந்த இடங்களில் இவற்றின் குஞ்சுகளுக்கு எதிரிகளிடம் இருந்து ஒளிந்து கொள்ள இதன் மூலம் மறைவிடம் கிடைக்கிறது. காட்டுத் தீக்கு பிந்தைய தீ மேலாண்மை திட்டமிடலில் இதுபோன்ற மதிப்புமிக்க தகவல்கள் உதவுகின்றன.
பத்தாயிரம் துண்டுகளுடன் உள்ள ஒரு பெரும் புதிர் போலதான் காட்டுத் தீ. காலநிலை மாற்றம் இந்தத் துண்டுகளை பல விதங்களில் இணைத்து வைக்கிறது என்று கார்னல் பறவையியல் ஆய்வக (Cornell lab of ornithology) முதுகலை முனைவர் விஞ்ஞானி, பயன்பாட்டு சூழலியல் மற்றும் சூழலியல் மாதிரி துறை நிபுணர் மற்றும் ஆய்வுக்குழுவின் முதன்மை ஆசிரியர் ஆண்ட்ரூ ஸ்டில்மேன் (Andrew Stillman) கூறுகிறார்.
பைரோ பன்முகத்தன்மையின் முதல் ஆய்வாளர்
பைரோ பன்முகத்தன்மையின் அடிப்படையில் வன ஆய்வு மதிப்பீடுகளை முதல்முதலாக மேற்கொண்டவர் இவரே. கறுப்பு மரங்கொத்திகள் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை சூழலியல் பயன்பாடுகள் (Ecological applications) என்ற ஆய்விதழில் 2023 ஏப்ரல் 25ல் வெளிவந்துள்ளது.
பறவைகள், வன உயிரினங்கள் பற்றி ஆராயும் இந்த ஆய்வகம் இமஜன் (Imogene) ஜான்சன் பறவைகள் மையத்தில் சப்சகார் (Sapsucker) என்ற மரங்களுக்கான சரணாலயத்தில் அமைந்துள்ளது. இது நியூயார்க் இத்தகா (Ithaca) பகுதியில் உள்ள கானெல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவாக செயல்படுகிறது. அதிதீவிர காட்டுத்தீ சம்பவங்கள் கலிபோர்னியாவின் புதிய இயல்பாக (newnormal) மாறியுள்ளது. அடர்த்தியான காடுகளின் இயல்பு, வறட்சி மற்றும் காட்டுத் தீயின் தீவிரம் அதிகரிப்பதுமே இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால் பைரோ பன்முகத் தன்மையுள்ள சூழல் மண்டலத்தில் காட்டுத் தீ படர்ந்த பிரதேசங்களில் பொதுவாக பறவைகள் சிரமம் இல்லாமல் வாழ்கின்றன. கறுப்பு மரங்கொத்திகளுக்கு பைரோ பன்முகத் தன்மையுடைய காடுகளே மிகப் பிடித்தமானவையாக உள்ளன. புதிதாக எரிந்த காடுகள், குறைவான அளவு மட்டுமே எரிந்த காடுகளை இவை விரும்புகின்றன. ஒவ்வொரு காட்டுத் தீ சம்பவத்திற்குப் பிறகும் காட்டை மீட்க எடுக்கப்படும் பணிகளுக்கு இணையாக மனிதர்கள், வனவிலங்குகளின் நலன்களைப் பாதுகாப்பது தீ மேலாண்மையினர் எதிர்கொள்ளும் கடினமான சவால்.
தீ ஏற்பட்ட காடுகளில் வனவியல் வாழ்வைக் குறித்து ஆராய ஆய்வாளர்களுக்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. என்ன செய்ய வேண்டும், எப்பகுதியை முதலில் மீட்பது போன்றவை பற்றி உடனடியாக முடிவு செய்வது மிகக் கடினமாகவுள்ளது. இந்த சூழ்நிலையில் காட்டுத் தீக்குப் பிறகு கறுப்பு மரங்கொத்திகள் பறந்து வரும் பிரதேசங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆராயத் தொடங்கினர்.
ஒரு காட்டுத் தீ நிகழ்வு ஏற்பட்டு ஒரு சில மாதங்கள் கழித்து தரவுகளைப் பயன்படுத்தி மரங்கொத்திகள் எங்கு அதிகமாக கூடுகின்றன என்று புதிய ஆன்லைன் கருவி மூலம் அறிய முடியும். காட்டுத்தீயின் தீவிரம் பற்றிய செயற்கைக்கோள் தரவை முதல் அடுக்காகக் கொண்டு பல அடுக்கு தகவல்கள் இந்த ஆன்லைன் கருவி மூலம் பெறப்படுகிறது. இத்தரவுகள் தீ மேலாண்மைத் துறையினரால் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தீயால் இழக்கப்பட்ட வனப்பரப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.
மற்ற தரவு செய்திகள் மரங்கொத்திகளின் கூடுகளின் அமைவிடம், அவற்றிற்கு இடையில் இருக்கும் தொலைவு, அப்பகுதியில் வளரும் தாவரங்கள் பற்றிய விவரம், அந்த இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை, தரைமட்டத்தில் இருந்து காட்டின் உயரம் மற்றும் கடைசியாக தீ ஏற்பட்ட பிறகு உள்ள ஆண்டு இடைவெளி போன்ற விவரங்கள் பெறப்படுகின்றன. பதினோரு ஆண்டு ஆய்வுகளின் பலனாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆன்லைன் கருவியின் உதவியுடன் இந்தப் பறவைகள் இருக்கும் இடங்கள் பற்றி முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க முடியும்.
இதனால் காட்டைக் காப்பாற்ற ஏற்படும் நேர விரயத்தைக் குறைக்க முடியும். இந்த கருவி காட்டுத் தீ மேலாண்மைத் துறையினர், சூழல் பாதுகாவலர்கள், தனியார் நில உரிமையாளர்கள் போன்ற பல்வேறு பிரிவினருக்கு உதவும். இப்போது இக்கருவி கலிபோர்னியாவிற்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் இம்முறை மற்ற இடங்கள், பிற உயிரினங்களின் பாதுகாப்பிற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
காட்டுத்தீ அணைந்த பல மாதங்களுக்குப் பிறகுள்ள நிலைமையும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுத் துறையின் ஒருங்கிணைந்த தீ அறிவியல் பிரிவு, அமெரிக்க வனச்சேவைகள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான கார்னல் அட்கின்சன் (Atkins) மற்றும் பறவைகள் எண்ணிக்கைக்கான ஆய்வுக் கழகத்தின் (Institute for bird population) நிதியுதவியுடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
எரிந்த மரங்கள், கறுத்த மண், தீ பிடித்த காட்டைப் பார்க்கும்போது எல்லாம் முடிந்து விட்டது என்றே நாம் நினைப்போம். எல்லாம் எரிந்து சாம்பலாகி இருக்கும். ஆனால் காட்டிற்குள் நடக்கும்போது புது உயிர்ப்பின் தளிர்கள் துளிர் விடுவதைக் காண முடியும். காட்டுத் தீயில் எரிந்த காடு நம்ப முடியாத ஒரு சூழல் மண்டலம்.
மரணமடையாத காடு
எரிந்த காடு சிக்கலானது, தனித்தன்மை வாய்ந்தது, மதிப்பு மிக்கது. எரிந்த ஒவ்வொரு காட்டின் ஒவ்வொரு துண்டிலும் புதிய உயிர் நிறைந்து தளும்பி நிற்கிறது. அந்தப் பிரதேசம் உயிருடன்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது! அது மரணமடையவில்லை, மாறியே இருக்கிறது என்று ஸ்டில்மேன் கூறுகிறார்.
காடும் காட்டுத்தீயும் சமரசத்துடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு காட்டுத்தீக்குப் பிறகும் காடு முன்பை விட கூடுதல் வலிமையுடன் வளர்கிறது. காட்டுத்தீயை சமாளிப்பதற்குரிய அதிசயிக்கத்தக்க திறன் சில இன மரங்களுக்குள் இருக்கிறது. தீ எரித்த காடுகளில் முதலில் துளிர் விடும் மரங்களில் லாட்ஜ் பைன் என்ற மரமும் ஒன்று.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த மரத்திற்கு வாழும் திறமை உள்ளது. இதன் சிறிய காய்கள் மூடப்பட்ட சிறிய அறைகள் போல இருக்கும். பழம் நிறைய ஆயிரக்கணக்கான வித்துகள் இருக்கும். பசையைப் பயன்படுத்தி இயற்கையாக சீல் செய்தது போல இதன் காய்களின் அமைப்பு காணப்படுகிறது. இந்த காய்கள் திறக்கப்பட வேண்டுமென்றால் காட்டுத்தீயால் உருவாகும் உயர்ந்த வெப்பம் தேவை! இந்த சூடு கிடைக்கவில்லை என்றால் இந்தக் காய்கள் ஆண்டுகணக்கில் முளை விடாமல் அப்படியே மண்ணில் கிடக்கும்! ஹாண்டுரோசா பைன் போன்ற சில மரங்கள் அவற்றின் கடினமான தோலைப் பயன்படுத்தி காட்டுத் தீயை சமாளித்து வாழ்கின்றன.
உலகெங்கும் காட்டுத் தீ சம்பவங்களின் தீவிரத் தன்மை அதிகரிக்கிறது. வெப்பநிலை அதிகமுடைய, நீடித்து நிற்கும் காட்டுத் தீ காடுகளின் இயல்பான மறுபிறவியை தடை செய்கிறது. மண்ணின் ஆழத்தில் பரவும் வறட்சி அதிக எண்ணிக்கையிலான வித்துகளை அழிக்கிறது. தீ அணையும்போது மண்ணில் மிச்சம் இருக்கும் வித்துகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. 2022ல் பிரேசிலில் அமேசான் காட்டுத்தீ முன்பை விட கடினமானதாக இருந்தது.
இதே ஆண்டில் காட்டுத் தீயால் உமிழப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் அளவு ஐரோப்பா, இங்கிலாந்தில் பல மடங்காக அதிகரித்தது. நாசாவின் வளங்களை மேலாண்மை செய்வதற்கான தீ தடுப்பு நடவடிக்கைகளுக்கான தளத்தின் (Firing formation for resource management site) புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 2023ல் பிப்ரவரி 13-20ம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில் மட்டும் சுமார் 1,156 காட்டுத் தீ சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்தன.
காலநிலை மாற்றத்தின் கருணையில்தான் காடு இன்று உள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. கறுப்பு மரங்கொத்தி போல இன்னும் ஆயிரமாயிரம் பறவைகள் காடுகளைக் காக்க நமக்கு வேண்டும்.
** ** **
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/black-backed-woodpecker-and-deforestation-nature-future-1.8589651
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மனிதனைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்!
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- காணாமல் போகும் கழுகுகள்
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- இந்தியாவின் வண்ணத்துப் பூச்சிக்கு அரேபியாவில் பாஸ்போர்ட்
- வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் தேவாலயங்கள்
- கொலையாளித் திமிங்கலங்கள்
- ஒரு மனிதன் ஒரு குளம் ஒரு சில தவளைகள்
- பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்
- அழிவின் விளிம்பில் கானமயில்
- நஞ்சு உண்ணும் சீல்கள் மனிதருக்கு உதவுமா?
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- இயற்கையின் ஆயுதங்கள்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன
- அழிவில் இருந்து மீண்டு வந்த வண்ணத்துப் பூச்சி
- திமிங்கல வேட்டை
- யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை?
- யார் காப்பாற்ற வருவார் இந்த உயிரினங்களை?
- மீண்டும் பறக்குமா குவாமின் மீன்கொத்திப் பறவை?