வட கொலம்பியாவில் இருக்கும் வறண்ட வெப்பமண்டல மழைக்காடுகளில் ஆய்வாளர்கள் காட்டன் டாப் டாமரிண்டு (cotton-top tamarind) என்னும் உலகின் அரிய வகை குரங்கினங்களில் ஒன்றின் வாழிடத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகள் காட்டில் வாழ்பவரான லூயிஸ் எண்ட்ரிகே செண்டினா (Luis Enrique Centena ) இப்போது வெள்ளை மற்றும் சிவப்பு நிற உரோமங்களுடன் உள்ள காட்டன் டாப் குரங்குகளின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறார்.
முன்பு காட்டின் எதிரியாக இருந்த லூயிஸ் இப்போது அதன் பாதுகாவலராக உள்ளார். சுமார் ஒரு பவுண்டு அல்லது அரை கிலோகிராம் வரை மட்டுமே எடையுள்ள உலகின் மிக ஆபத்தான நிலையில் உள்ள இந்த குரங்குகள் மருத்துவ ஆய்வுகள், வன அழிவு, சட்ட விரோத வணிகத்தால் அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளன. 7,500 குரங்குகள் மட்டுமே இப்போது காடுகளில் உயிர் வாழ்கின்றன.
வட கொலம்பியாவில் மட்டுமே காணப்படும் இந்த இன குரங்குகளின் வாழிடப் பரப்பு 8% குறைந்துவிட்டது. மேய்ச்சல் மற்றும் மரம் வெட்டுதலே இதற்கு முக்கியக் காரணம். சான் ஹுவான் நெப்பொ மியூசினோ (San Juan Nepomuceno) குன்றில் ஒரு சிறிய பரப்பு மட்டுமே இந்த உயிரினங்களின் வாழிடமாக இப்போது உள்ளது.
முன்பு மரம் வெட்டியவர்கள், விவசாயிகள், சூழலியலாளர்கள், உயிரியலாளர்கள் இணைந்து மேனியழகிற்காக புகழ்பெற்ற இந்த குரங்குகளின் வாழிடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். “இவை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை.
எந்த ஒரு நிறுவனப் பாதுகாப்பு திட்டத்திலும் இவை பற்றி பேசப்படுவதில்லை.
இது கவலையளிப்பது. இந்த இனத்தையும் இவற்றின் வாழிடத்தையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு இப்பணியில் பல பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் சூழல் பாதுகாப்பு அமைப்பான ஃபன்டஸியான் ஓ டிட்டி திட்டத்தின் (Fundación Proyect Tití) தலைவர் ரோஸமிரா கிலன் (Rosamira Guillen) கூறுகிறார்.
“இந்த குரங்குகள் மனிதர்கள் போன்றவை. ஐந்து அல்லது ஏழு உறுப்பினர்கள் அடங்கிய நெருக்கமான குழுக்களில் வாழும் இவை சிக்கலான அழைப்புகள் மூலம் தகவல் தொடர்பு கொள்கின்றன.
வாழிட எல்லைகளை கடுமையாக பாதுகாக்கின்றன. விதைப் பரவல், மலர்களின் மகரந்த சேர்க்கை, பூச்சிக் கட்டுப்பாட்டு போன்றவற்றின் மூலம் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
“இவை நம்மைப் போன்றவையே. மனிதர்களுக்குக் கற்றுத் தருகின்றன. தங்கள் இளம் வாரிசுகளை அன்புடன் கவனித்துக்கொள்கின்றன. நாம் பேசும் மொழியில் பேசுவதில்லை. இது மட்டுமே நமக்கும் இவற்றிற்கும் இடையில் உள்ள வேறுபாடு” என்று காடு மீட்பு மற்றும் ஆய்வு அறக்கட்டளையின் (foundation’s forest restoration and research team) உறுப்பினருமான லூயிஸ் கூறுகிறார். இந்த குரங்குகள் கவர்ச்சியான செல்லப் பிராணிகளாக விற்கப்படுகின்றன. முதலில் மருத்துவ ஆய்வுகளுக்காக இவை 1960 மற்றும் 70களில் யு எஸ்ஸிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
பிறகு பாரம்பரிய மேய்ச்சல், விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்பட்டபோது இவற்றின் வாழிடப் பரப்பு 720,000 ஹெக்டேர்/1.8 மில்லியன் ஏக்கர்களாக சுருங்கியது. “கடத்தல்காரர்கள் குரங்குகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு 12 15 பவுண்ட் வரை தருகின்றனர்” என்று பத்தாண்டுகளாக கடத்தலைத் தடுக்கப் போராடுபவரும், இதுவரை 200 குரங்குகளை காப்பாற்றிய சூழல்ல் பாதுகாவலருமான ஃப்ராங்லின் காஸ்ட்ரோ (Franklin Castro) கூறுகிறார்.
ஃபண்டஸியான் அமைப்பிற்கு கிடைத்த நிதியுதவியின் மூலம் துண்டாடப்பட்ட காட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி மரங்களை வளர்க்கத் தொடங்கியது. “இந்த இடம் முன்பு தரிசாக இருந்தது. இப்போது ஆனால் மரங்கள் வளரத் தொடங்கியவுடன் குரங்குகள் இப்பகுதிக்கு மீண்டும் திரும்பி வந்தன. இது பரவசமூட்டுவது” என்று காடு மீட்பு அறக்கட்டளையின் மரம் வளர்ப்புத் திட்ட தலைவர் மார்சிலோ ஆர்டெகா (Marcelo Ortega) கூறுகிறார்.
இப்பகுதியில் இப்போது 120,000 மரங்கள், குத்துச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் குழுவில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் குரங்கின் முதுகில் டிரான்ஸ்மிட்டர்களைப் பொருத்துகின்றனர். களப் பணியாளர்கள் சமிஞ்ஞைகள் மூலம் காட்டில் குரங்குகளைப் பிந்தொடர்ந்து செல்கின்றனர். “நான் ஒரு உயிரியலாளர் இல்லை என்றாலும் இந்த காட்டிலிருந்தும் குரங்குகளிடம் இருந்தும் நான் நிறைய கற்றுள்ளேன். 2018 முதல் இங்கு பணிபுரிகிறேன்.
நான் செய்த தவறுகளை சரி செய்ய இன்னும் பத்தாண்டுகள் ஆகும்” என்று லூயிஸ் கூறுகிறார். 2012-2013க்குப் பிறகு இந்த உயிரினங்களின் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குரங்குகளை காப்பது இங்கு வாழும் அரிய வகை ஆமைகள், கறுப்பு சிலந்திக் குரங்குகள், டூக்கன்கள் (toucans) என்ன்று அழைக்கப்படும் ஒரு வகைப் பழம் தின்னும் பறவைகள் மற்றும் டமான்யுயஸ் (tamanduas) என்று அழைக்கப்படும் ஒரு வகை எறும்புத் தின்னி பிராணிகளை பாதுகாப்பதற்கு உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காடுகள் மீட்கப்பட்டால் நாமும் பேரழிவுகளில் இருந்து மீட்கப்படுவோம் என்பதற்கு இந்த முயற்சிகள் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்