பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் அலூசியன் ஆகிய எரிமலைத் தீவுகளிலும், ஓரிகன், கலிபோர்னியா, மெக்சிகோ, பெரு, மற்றும் சிலி ஆகிய நிலப்பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த எரிமலைத் தீவுகளிலும், நிலப்பகுதிகளிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக்கொண்டு இருக்கின்றன.

 கடந்த 2004-ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்திருக்கும் வட அமெரிக்காவின் ஓரிகன் நகரக் கடல் பகுதியில் பத்தே நாளில் அறுநூற்றுக்கும் அதிக முறை, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டன. இதே போன்று 2005-ம் ஆண்டிலும் இரண்டே வாரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முறை நிலம் அதிர்ந்தது.

 முக்கியமாக ஓரிகன் நகரக் கடற்பகுதியில் 1981-ம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஓரிகன் நகர கடற்கரையில் இருந்து 300 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஒரு இடத்தில், நீரில் அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது அங்கு எரிமலைகள் எதுவும் காணப்படவில்லை.

 ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1989-ம் ஆண்டு அதே இடத்தில், பத்து மைல் தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தார்கள். எனவே தரைப் பகுதியில் இருந்து எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பது நிரூபணமாகிறது. ஆனால் பசிபிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பான் போன்ற எரிமலைத் தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.

 அதாவது பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரையானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகரும் பசிபிக் கடல் தரையானது, ஜப்பானுக்கு கீழாக செல்வதாகவும், அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

 மேலும் பசிபிக் கடல் தரை வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாகப் பசிபிக் கடல் பகுதியில் வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையில் நாலாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக அமைந்திருக்கும் ஹவாய் எரிமலைத் தீவுகளைக் குறிப்பிடுகின்றனர்.

 அதாவது பசிபிக் கடல் பகுதியில், பூமிக்கு அடியில் ஒரு இடத்தில் பாறைக்குழம்பு கடல் தரையைப் பொத்துக் கொண்டு, கடல் தரைக்கு மேலே எரிமலையாக உருவாகியதாகவும், அதே நேரத்தில் கடல் தரையும் வடமேற்கு திசையில் நகர்ந்ததால், எரிமலையும் கடல் தரையுடன் வடமேற்கு திசையில் நகர்ந்தது என்றும், மறுபடியும் எரிமலை மையத்திற்கு மேலே நகர்ந்து வந்த பசிபிக் கடல் தரைக்கு மேல் புதியதாக ஒரு எரிமலை உருவானதாகவும், அந்த எரிமலையும் கடல் தரையுடன் வடமேற்கு திசையில் நகர்ந்தது என்றும், இது போன்று தொடர்ந்து பலமுறை நடைபெற்றதால், வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி வரிசையாகப் பல எரிமலைத் தீவுகள் உருவாகியது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

 ஆனால் உண்மையில் பசிபிக் கடல் தரை அதே இடத்தில் தான் இருக்கிறது. குறிப்பாக பசிபிக் கடல் தரை நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் அதே ஹவாய்த் தீவு வரிசைக்குத் தெற்கே, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் லைன் தீவுகள் என்று அழைக்கப்படும் இன்னொரு எரிமலை வரிசைத் தீவுகளும் அமைந்திருக்கின்றன.

 புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று உண்மையில் பசிபிக் கடல் தரையானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தால், ஹவாய் எரிமலை வரிசைத் தீவுகளுக்கு அருகில் இருக்கும் லைன் எரிமலை வரிசைத் தீவுகளும், ஹவாய் தீவு வரிசைக்கு இணையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் லைன் எரிமலை வரிசைத் தீவுகள், ஹவாய் எரிமலை வரிசைத் தீவுகளுக்கு இணையாக அமைந்திருக்கவில்லை.

 லைன் வரிசைத் தீவுகள், ஹவாய்த் தீவு வரிசையில் இருந்து சற்று மாறுபட்டு விலகிச் செல்கிறது. எனவே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று பசிபிக் கடற்தரை நகர்ந்து கொண்டு இருக்கவில்லை என்பது பசிபிக் கடல் தரையின்மேல் வெவ்வேறு கோணத்தில் அமைந்திருக்கும் வரிசைத் தீவுகள் மூலம் நிரூபணமாகிறது. எனவே பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற எரிமலைத் தீவுகளில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு, அந்தத்  தீவுகளில் உள்ள எரிமலை மற்றும் எரிமலையைச் சுற்றியுள்ள தீவுப் பகுதிகள் அவ்வப்பொழுது மேல் நோக்கி உயர்வதே காரணம் ஆகும்.

 -  விஞ்ஞானி க.பொன்முடி

Pin It

ஜப்பானின் Nankai கடற்பகுதிதான் உலகிலேயே அதிகமான நிலநடுக்கங்களை சந்தித்துவரும் இடம். இந்தப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களின் வலிமை ரிக்டர் அளவுகோளில் 8.3 ஆகும்.  இந்த இடம் ஜப்பானின் தென்மேற்கே உள்ளது. ஒரு பன்னாட்டு அறிஞர்குழு இந்த கடற்பகுதியில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கென Chikyu என்று பெயரிடப்பட்டு ஜப்பானிய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. Chikyu

ஜப்பானிய மொழியில் Chikyu என்றால் பூமிப்பந்து என்று பொருளாம். இந்தகப்பலில் தங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் குழுவில் ஐரோப்பா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். 57,000 டன் எடையுள்ள இந்தக் கப்பலின் முதல் ஆய்வுப்பயணம் இதுவே என்பதும் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வுக்கப்பல் இதுதான் என்பதும் கூடுதல் சிறப்புகள். இந்தக்கப்பலில் இருந்துகொண்டு புவியோட்டின் tectonic platesஐ எட்டக்கூடிய 6,000 மீட்டர் ஆழத்திற்கு துளையிடுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கப்பல் 12,000 மீட்டர்வரையில் பூமியை துளையிடும் ஆற்றல் கொண்டது.

பூமியின் மேலோடு பல அடுக்குகளைக் கொண்டது பூமியின் உட்பகுதியை கற்கோளம் என்றும் மென்பாறைக்கோளம் என்றும் இரு கூறுகளாக பிரிக்கிறார்கள். கற்கோளம் குளிர்ந்ததும், உறுதியானதும் ஆகும். மென்பாறைக்கோளம், சூடானதாகவும் உறுதி குறைந்ததும் ஆகும். மண்ணியல் கோட்பாட்டின்படி கற்கோளம் வெவ்வேறான tectonic தட்டுகளின் மீது திரவம் போன்ற மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்துகொண்டிருக்கிறது. மென்பாறைக்கோளத்தின் தன்மை இடத்துக்கு இடம் மாறுபடக்கூடியது. இவை tectonic தட்டுகளை வெவ்வேறு திசைகளில் நகரச்செய்கின்றன. இரண்டு தட்டுகள் சந்திக்கும் பொதுவான எல்லையில்தான் நிலநடுக்கம், எரிமலை போன்ற நிலஉருவவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஒரு மெல்லிய tectonic மண்தட்டு வலிமையான கண்டத்தின்மீது மோதும்போது ஏற்படும் கீழ்நோக்கிய நகர்வு (subduction of two tectonic plates) குறித்த ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளும். tectonic plates உரசிக்கொள்ளும் ஆழம்வரை துளையிட்டு மண்படிவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதுடன் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகளைப் பொருத்துவதும் இந்த ஆய்வுகளின் நோக்கமாகும்.

நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதுதான் இந்த ஆய்வுகளின் நோக்கம் என்று இந்தக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு டோபின் கூறுகிறார். இவர் விஸ்கான்சி-மாடிஸன் பல்கலைக்கழகத்தின்  மண்ணியல் நிபுணர். நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னறிவிப்புகள் இப்போதும் கிடைக்கின்றன. ஆனால் அவை சில வினாடிகளுக்கு முன்பு மட்டுமே கிடைக்கின்றன. இந்த ஆய்வுகளின் அன்றாட முன்னேற்றத்தை NanTroSEIZE ன் இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். NanTroSEIZE என்பது Nankai Trough Seismogenic Zone Experiment என்பதன் சுருக்கப்பெயராகும்.

தகவல்: மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க: http://www.jamstec.go.jp/chikyu/eng/index.html.

Pin It

ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் சுமத்ரா, ஜாவா, பாலி, லம்போக், சும்பவா, புளோரஸ், திமோர் என வரிசையாகப் பல தீவுகள் அமைந்திருக்கின்றன. இதில் புளோரஸ் என்ற தீவில் உள்ள ஒரு குகையில் இருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று அடி உயரமேயுள்ள கற்காலக் குள்ள மனிதர்களின் எலும்புகளையும் அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் எடுத்திருக்கின்றனர்.

       ஏற்கனவே திமோர் தீவில் இருந்தும் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவில் இருந்தும் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளையும் கற்கருவிகளையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல.

       குறிப்பாக லம்போக் சும்பவா புளோரஸ் திமோர் ஆகிய தீவுகள் நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கின்றன. முக்கியமாக பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றார்கள் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் எழுந்திருக்கின்றன.

       அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கருவிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

       அதன் பிறகு கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் ஆனால் நாலாயிரம் அடி வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் கற்கால மனிதர்கள் எப்படி சென்றார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

       டிம் வைட் என்ற ஆராய்ச்சியாளர், புளோரஸ் தீவிற்கு கற்காலக் குள்ள மனிதர்கள் பாலி தீவில் இருந்து சுனாமி அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

       ஆனால் ராபர்ட் பெட்நரிக் என்ற ஆராய்ச்சியாளரோ இந்தோனேசியத் தீவுகளுக்கு இடையே ஓடும் கடல் நீரோட்டங்களை, கட்டுமரம் போன்ற மரக் கலங்கள் மூலமாக, துடுப்பு போட்டு வலிந்து கடந்தால்தான் கடக்க முடியும் என்று கூறுகிறார். கூறியதோடு நிற்காமல் அவர் சோதனை முயற்சியாக கட்டுமரம் மூலம் பாலி தீவில் இருந்து லம்போக் தீவிற்கு சில மாதிரிப் பயணங்களையும் மேற்கொண்டார். அவரது கட்டுமரக் கடல் பயணத்தை பி.பி.சி. செய்தி நிறுவனமும். நேஷனல் ஜியாகிரபிக் சேனலும் செய்திப் படமாகத் தயாரித்தன.

              முக்கியமாக கட்டுமரம் முழுக்க முழுக்க கற்கருவிகளைக் கொண்டுதான் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் கல்லைக் கொண்டு மூங்கில்களை வெட்டும் பொழுது மூங்கில்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இது போன்ற மூங்கில்களைக் கொண்டு கட்டுமரம் செய்தால் அந்தக் கட்டுமரம் கடலில் மிதக்காமல் மூழ்கி விடும். எனவே முக்கிய நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டு, இரும்புக் கருவிகள் மூலம் கட்டுமரம் செய்யப்பட்டது. அதே போல் கல்லைக் கொண்டு ஒரு துடுப்பைக் கூட செய்ய முடியவில்லை.

       கட்டு மரம் தயாரானதும் பாலி தீவில் இருந்து அதிகாலை ஆறு முப்பது மணிக்கு உதவிக் கப்பல்கள் புடை சூழ, கட்டுமரம் கடலில் இறங்கியது. மொத்தம் பனிரெண்டு பேர், முதலில் மூவர் மட்டுமே துடுப்பு போட்டனர். மூன்று மணி நேரத்தில் அவர்கள் களைத்ததும் அடுத்த மூன்று பேர் துடுப்பு போட்டனர். உச்சி வெய்யிலில் அவர்களும் சோர்ந்து விட, உடன் அடுத்த செட் பணியைத் தொடங்கியது. அதே நேரத்தில் கட்டுமரம் ஆழமான கடல் பகுதியை அடைந்தது. இது வரை முன்னேறிக் கொண்டு இருந்த கட்டுமரத்தை கடல் நீரோட்டம் பக்க வாட்டில் இழுத்தது.

       இருப்பினும் விடாப்பிடியாகத் துடுப்பு போட்டதில் ஒருவர் மயங்கி விழ, அவருக்குப் பதிலாக உதவிக் கப்பலில் இருந்து வந்த ஒருவர் மூலம் மறுபடியும் கட்டுமரம் செலுத்தப்பட்டது. அதற்குள் கடல் நீரோட்டம் கட்டுமரத்தை வெகு தூரம் இழுத்துச் சென்றதில், இது வரை எதிரில் தெரிந்த தீவே கண்ணில் இருந்து மறைந்துவிட்டது. எனவே கட்டுமரம் பழைய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மறுபடியும் துடுப்பு மூலம் செலுத்தப் பட்டது.

       ஆனாலும் கட்டுமரம் அங்குலம் அங்குலமாகவே முன்னேறியது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காற்று திசை மாறி வீசிய பொழுது, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னேறியதில் மாலை ஆறு முப்பது மணிக்கு லம்போக் தீவிற்கு, முன்பே இருக்கும் ஜிலி என்ற தீவில் கட்டுமரம் கரை ஒதுங்கியது. “ஓரிரு நிமிடங்கள் நாங்கள் ஓய்வு எடுத்து இருந்தாலும் எங்களால் கரையை அடைந்திருக்க இயலாது” என்று கட்டுமரத்தை செலுத்தியவர்கள் மூச்சிரைக்கக் கூறினார்கள். ஆக மொத்தம் பனிரெண்டு மணிநேரம் தொடர்ந்து துடுப்பு போட்டும் லம்போக் தீவை அடையும் முயற்சி தோல்வியடைந்தது.

       தற்கால மனிதர்களாலேயே கடக்க இயலாத கடல் பகுதியை கற்கால மனிதர்கள் எப்படி கடந்திருப்பார்கள்?

       இது குறித்து லாயின் டேவிட்சன் என்ற ஆராய்ச்சியாளர், கடந்த இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமின்றி ஒரே மாதிரி காணப்படுகின்றன. எனவே கற்கால மனிதர்களின் அறிவு நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே கற்கால மனிதர்கள் நீண்ட காலத் திட்டம் போட்டு தொலை தூரக் கடல் பயணங்களை மேற்கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்று டேவிட்சன் கூறுகிறார்.

       எல்லாவற்றுக்கும் மேலாக திமோர் தீவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால், திமோர் தீவில் இருந்து பார்த்தால் ஆஸ்திரேலியக் கண்டம் இருப்பது கண்ணுக்கே தெரியவில்லை. எனவே கண்ணுக்கே தெரியாத ஒரு இலக்கை நோக்கி கற்கால மனிதர்கள் கடல் பயணம் மேற்கொண்டிருப்பார்களா? அது மட்டுமல்லாது திமோர் தீவிற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் இருக்கும் ஆழ் கடல் பகுதியைக் கடக்கவே பெட் நரிக் குழுவினருக்கு ஆறு நாட்கள் ஆனது. இது போன்ற பகல் இரவுப் பயணங்களை அதுவும் “கடலில்” கற்கால மனிதர்கள் மேற்கொண்டிருப்பார்களா? ஆறு நாட்களுக்கு கற்கால மனிதர்கள் உணவுக்கும் முக்கியமாக குடி நீருக்கும் என்ன செய்திருப்பார்கள்?

“காட்டு மிராண்டிகள் கடல் பயணம் செய்ய வில்லை. கடல் மட்டம் தான் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.”

       எனவே ஆசியக் கண்டத்திலிருந்து நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்தில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளும் கற்கருவிகளும் காணப்படுவதற்கு, நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியப் பகுதியில் கடல்மட்டம் நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததே காரணம்.

       எனவே நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது. அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால் தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

நிலம் ஏன் உயர்ந்தது? கடல் மட்டம் ஏன் உயர்ந்தது?

       பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவானது. இந்நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணெயும் பிரிந்ததால் பாறைத் தட்டு அடர்த்தி குறைந்ததாக உருவானது. இதனால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால் நிலப் பகுதிகள் உயர்ந்தது. அதே நேரத்தில் பாறைக் குழம்பு குளிர்ந்த பொழுது அதிலிருந்து பிரிந்த நீர், ஆழ் கடல் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக கடலில் சேர்ந்ததால் கடல் மட்டம் நாலாயிரம் அடி உயர்ந்தது.

       இவ்வாறு நிலப் பகுதிகள் உயரும்பொழுது தான் நில அதிர்ச்சி நிலச் சரிவு சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன.

கண்டங்கள் நகர்கின்றன என்று கூறுவது சரியல்ல.

       கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்தது. அதன் வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு இடம் பெயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் கடல் பகுதியால் பிரிக்கப்பட்டன.

       எனவே ஒரே வகை விலங்கினங்கள் கடல் பகுதியால் பிரிக்கப்பட்ட பல்வேறு கண்டங்களில் காணப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம். ஆனால் ஒரே வகை விலங்கினங்கள் பல கண்டங்களிலும், தீவுகளிலும் காணப்படுவதற்கு, ஒரு காலத்தில் இந்த நிலப்பகுதிகள் யாவும் ஒன்றாக இணைந்து ஒரு பெரியகண்டம் இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங்கண்டம் பல துண்டுகளாக உடைந்து பல்வேறு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று கற்பனையாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது.

       குறிப்பாக அட்லாண்டிக் கடலால் பிரிக்கப்பட்ட தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் மெசோசாரஸ் என்ற நிலத்தில் வாழ்ந்த விலங்கின் எலும்புகள் காணப்படுவதற்கு, முன்பு ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் முற்றிலும் தவறான ஒரு விளக்கம் கூறப்படுகிறது.

       ஆனால் உண்மையில் நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது அதன் காரணமாகவே நில அதிர்ச்சி ஏற்படுகின்றது.

 -  விஞ்ஞானி க.பொன்முடி. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

 

இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப்பட்டது. னால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்

இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9  அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை.

குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் மிதக்கிறது.

இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிக் கொண்டிருப்பதால் பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது அதிலிருந்து நீரும் வாயுக்களும் பிரிவதால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் பாறைத் தட்டுகளின் கன அளவும் அதிகரிக்கின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன.

இவ்வாறு பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயரும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் அப்பகுதியில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பழைய பாறைத் தட்டுகளை மேல் நோக்கி தள்ளுகின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன. இவ்வாறு ஒரு இடத்தில பாறைத் தட்டுகள் உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அப்பகுதியில் உள்ள மற்ற பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

மற்றபடி சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகருவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மையென்றால் இந்தியாவில் எல்லா இடத்திலும் ஒரே நாளிள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்

1679   ஜனவரி 28  அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம்.

1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம்.

1807 டிசம்பர் 10  அன்று சென்னையில் நில நடுக்கம்.

1816 செப்டம்பர் 16  அன்று சென்னையில் லேசான நில நடுக்கம்.

1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.

1823  மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.

1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.

1867 ஜூலை அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.

1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.

1882 பிப்ரவரி 28  ஊட்டியில் நில நடுக்கம்.

1900 பிப்ரவரி அன்று கோவையில் நில அதிர்ச்சி.

1841 ஜூன் 26  அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.

1972 ஜூன் 26  அன்று கோவையில் நில அதிர்ச்சி.

1988 ஜூலைஅன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு.

1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம்.

2000 டிசம்பர் 12  அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் லேசான நில நடுக்கம்.

2001  ஜனவரி அன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.

2001 ஜனவரி 26  குஜராத்தில் ஏற்ப்பட்ட கடுமையான நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.

2001 செப்டம்பர் 26  அன்று புதுவை கடலோரத்தில் லேசான நில நடுக்கம்.

2001  செப்டம்பர் 26 அன்று சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம்.இரண்டு பேர் பலி.

2001 அக்டோபர் 28 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் நாகர்கோவிலில் லேசான நில அதிர்ச்சி.

-மூலம்: இணையம்.

மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன, டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.(தினத்தந்தி-19.07.2009)

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம். எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும். சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.

- விஞ்ஞானி.க.பொன்முடி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It