“எல்லா உயிரினங்களும் மறைந்து போய்விட்டால் ஆத்மார்த்தமான சூன்யத்தில் சிக்கி மனிதன் மரணமடைவான். உயிரினங்களுக்கு சம்பவிப்பது எல்லாவற்றையும் மனிதனும் அனுபவிப்பான். எல்லாம் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பவை. பூமிக்கு வருவது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் வரும்” - ஒரு அமெரிக்கப் பழங்குடியினப் பழமொழி.

அருணாசலப் பிரதேசம் இயற்கை ஆர்வலர்களின் விருப்பமான இடம். இன்று காடுடன் சேர்ந்து வாழும் சில ஆதிவாசிப் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும், பறவை விலங்குகளின் விற்பனையை நடத்தி வரும் கடத்தல்காரர்களுக்கும், உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்கப் போராடும் ஆர்வலர்களுக்கும் இடையில் அருணாசலப் பிரதேசம் போராடிக் கொண்டிருக்கிறது.

பசுமை எழில் கொஞ்சும் மாநிலம்

இம்மாநிலத்தின் நிலப்பரப்பில் 80% வனப்பகுதியே. பசுமை மாறாக் காடுகள், உயரமான மண் மேடுகள், நதிகள், பள்ளத்தாக்குகள் இவற்றுடன் இமயமலைச் சிகரங்கள் நிறைந்து காணப்படும் இங்கு உயிர்ப் பன்மயத் தன்மையின் செழிப்புமிக்க அடையாளங்களாக ஐநூற்றிற்கும் மேற்பட்ட பறவை இனங்கள், ஆயிரக்கணக்கான அபூர்வ தாவரங்கள் வாழ்கின்றன. அனைவரையும் இங்கு ஈர்ப்பது பறவைச் சுற்றுலா.Nishi tribal lightenedமேற்கு காமெங் (Western Kameng) மாவட்டத்தில் உள்ள கழுகு முட்டை சரணாலயம், பாசிகட் (Pasighat) மாவட்டத்தில் உள்ள டேயிங் எரிங் (Daying Ering) நினைவு வனவிலங்குகள் சரணாலயம், நம்தப்பா (Namdapha) தேசிய பூங்கா உட்பட எட்டு வன உயிரி சரணாலயங்கள், ஒரு அலங்கார மலர்ப் பூங்கா, இரண்டு தேசியப் பூங்காக்கள் உள்ளன.

வேட்டைத் திருவிழா

இங்கு வாழும் ஒரு சில ஆதிவாசி இனங்கள் வேட்டைத் திருவிழாக்கள் நடத்துகின்றன. வேட்டைத் திருவிழாவில் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் வரிசை வரிசையாகத் தொங்க விடப்படுகின்றன. பறக்கும் அணில், கலீச் பெசண்ட், சிவப்பு செம்போத்து (Red pheasant), மான், கீரி போன்றவை இன அழிவை சந்திக்கும் அபூர்வ உயிரினங்கள். இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆதிவாசி இனமான ஆதி (Adi) இன மக்களுக்கு நவம்பரில் டோரங், மார்ச்சில் உனைங் ஆரான், ஜனவரியில் டிஷாங் ஆகியவை முக்கியத் திருவிழாக்கள். இவற்றுடன் திருமண விழாக்களும் முன்காலம் முதலே இவர்களால் வேட்டையாடலுடன் கொண்டாடப்படுகின்றன.

முன்பு மூங்கில் பொறிகளைப் பயன்படுத்தி உயிரினங்கள் பிடிக்கப்பட்டன. பிறகு ஏர் கன் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்கள் வேட்டையாடினர். இதனால் நிமிட நேரத்திற்குள் ஏராளமான உயிரினங்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. இதனுடன் சேர்ந்து வன உயிரினங்களின் இறைச்சிக்கான சந்தையும் வளர்ந்தது. இவர்களின் வேட்டையாடும் திறனைச் சுரண்ட வன உயிரினங்களைக் கடத்துபவர்களும் வரத் தொடங்கினர்.

வேட்டையாடுதலில் இருந்த பாரம்பரிய நம்பிக்கையின் கட்டுப்பாடுகளை சில ஆதிவாசிகள் பணத்திற்காக காற்றில் பறக்கவிட்டனர். இவர்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் உலா வந்தனர். குழந்தைகள்கூட குறைந்த காசுக்காக கண்ணில் தென்பட்ட பறவைகளை சுட்டு வீழ்த்தினர்.

மௌனமான கிராமங்கள்

பறவைகள் இல்லாத கிராமங்கள் நிசப்தமாயின. உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. அவை வம்சமிழந்து அழிவை நோக்கிச் சென்றன. 2002-2005ல் 53 இனப் பறவைகள் மிதமிஞ்சிய வேட்டைக்கு இரையாகின என்று மேற்கு அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மூன்று ஆதிவாசி சமூகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறின.

வெப்ப மண்டலச் சூழலியல் (Journal of Tropical ecology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின்படி வேட்டையாடப்படுபவற்றில் ஐந்து இனங்களைச் சேர்ந்த பறவைகள் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலிலும், ஐந்து இனங்கள் வருங்கால ஆபத்தில் உள்ள உயிரினங்களின் பட்டியலிலும், ஓர் உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளவற்றின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளவை.

புதிய முயற்சி

வனமும் வனப்பொருட்களும் ஆதிவாசிகளின் உரிமை. காட்டை தங்கள் சொந்த வீடாகக் கருதும் ஆதிவாசிகளை அங்கிருந்து விரட்டாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தி காட்டின் காவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். ஆதிவாசி இனத் தலைவர்களின் ஆய் பானே கபாங் குழுவுடன் வேட்டைக்கு எதிரான பேச்சுகள் நடந்தன.

2015ல் இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி இனத் தலைவர்கள் மாநில வனத்துறையினரால் அஸ்ஸாம் காசிரெங்கா சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆதிவாசித் தலைவர்கள் பழமையான சம்பிரதாயங்களைக் கைவிட முடிவு செய்தனர். கிராமங்களின் உயிர்ப் பன்மயத் தன்மையைக் காப்பாற்ற உறுதி எடுத்தனர்.

இருவாயன் கூடுகளை தத்து எடுக்க வாருங்கள்

இருவாயன் அல்லது இருவாய்ச்சி பறவை (hornbill) உள்ள ஒரு காடு முழுமையுடையது என்று சொல்லப்படுவதுண்டு. பழங்களைத் தின்று விதைகளை வெகுதூரம் வரை பரவச் செய்வதால் இவை காட்டின் விவசாயிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் 1972 வன உயிரிப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள இப்பறவை அருணாசலப் பிரதேசத்தின் மாநிலப் பறவை.

2018ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன. இப்பறவைகளின் அழிவிற்கு இம்மாநிலத்தின் முதன்மை ஆதிவாசி நைஷி (Nissi) இனத்தவரின் வேட்டையாடலே காரணம். இவர்களின் தலைப்பாகையில் இப்பறவையின் அழகான பெரிய மஞ்சள் நிற அலகு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. பறவையின் இறைச்சி, இறகுகளை இவர்கள் பயன்படுத்தினர்.

பறவைக்கூடு

வேட்டைக்காரர்களையே பாதுகாவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். இதன் பலனாக 2011ல் இருவாயன் பறவைக்கூடு தத்து எடுக்கும் திட்டம் (Hornbill Nest Adoptation Programme HNAP) தொடங்கப்பட்டது. இதற்காக நைஷி ஆதிவாசித் தலைவர்களின் கோரா-ஆபே சங்கம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (Nature Conservation Foundation) பாடுபட்டது.

சூழலியலாளர் அபராஜிதா தத்தா 1995 முதல் இப்பறவையைக் குறித்து நடத்திய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டது. பறவையின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட ஆதிவாசிகளுக்கு அறக்கட்டளை பிரதிபலன் தரத் தொடங்கியது. 2020ல் பாதுகாக்கப்பட்ட 40 கூடுகளில் இருந்து 152 பறவைக் குஞ்சுகள் பிறந்தன!

யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம்

இம்மாநிலத்தில் இப்பறவைகளின் கூடுகளை யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம். இதற்குக் கட்டணம் மாதம் ரூ 6000. பாதுகாக்கப்படும் பறவையின் குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் ஆண்டுதோறும் அனுப்பப்படும். இத்திட்டம் கூடுகளைப் பாதுகாக்கும் ஆதிவாசிக் குடும்பத்திற்கு சம்பளம் கொடுக்க அறக்கட்டளை கண்டுபிடித்த வழி.

புதிய தலைப்பாகை

காட்டுடன் நைஷி இனத்தவருக்கு இருந்த ஆத்மார்த்தமான உறவு புரிந்து கொள்ளப்பட்டது. தலைப்பாகையில் பறவையின் அலகிற்கு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டதால் இத்திட்டம் வெற்றி பெற்றது. இதில் இந்திய வன உயிரி அறக்கட்டளையினர் (Wildlife Trust of India WTI) பெரும்பங்கு வகித்தனர்.

பறவையின் அலகு போலவே தோற்றமளிக்கும், ஆனால் அதைவிட நீண்டநாள் உழைக்கக்கூடிய கண்ணாடி நாரிழையால் ஆன அலகுடன் கூடிய தலைப்பாகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறையில் அலகுகள் தயாரிக்கும் தொழில் ஆதிவாசிகளின் வருமான மார்க்கமாக மாற்றப்பட்டது.

மாநிலத்தின் பகே (Pakke) புலிகள் காப்பகத்திலும் அருகில் உள்ள காடுகளிலும் இன்று இப்பறவையின் கூடுகளை தாராளமாகக் காணலாம். இரவு நேரங்களில் இவற்றின் நூற்றுக்கணக்கான பறவைகளை இன்று சர்வசாதாரணமாகக் காண முடியும். கூடுகளைப் பார்க்க, அவற்றைப் படமெடுக்க ஏராளமானோர் இங்கு வருகின்றனர். சூழல் சுற்றுலாவின் மூலம் ஆதிவாசிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.

துப்பாக்கி ஒப்படைக்கும் திட்டம்

வேட்டையாடுவதைத் தடுக்க அரசு 2021ல் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதுவரை 2400 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு சில வாரங்களுக்குள் கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வீடுகளுக்கு அருகிலும், காட்டிலும் பறவைகள் மீண்டும் வர ஆரம்பித்தன. மைனா, கிளி, குயில், புல் புல், குருவி, புறா, பருந்து போன்றவை கூட்டமாக வந்தன. காட்டில் பறவைகளின் சங்கீதம் கேட்க ஆரம்பித்தது.

வன உயிரினங்களைக் கொல்வது, பிடித்து வைப்பதற்கு எதிராக சட்டங்கள் உள்ளன. வேட்டை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, நஞ்சு வைத்து மீன்களைக் கொல்வது சட்டவிரோதம். ரூ 25,000 வரை இதற்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை கிராம வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதிவாசிகளிடையில் கல்வியறிவு பெற்ற சூழல் விழிப்புணர்வு உள்ள புதிய தலைமுறையினர் வேட்டைக்காரர்களைப் பிடிக்க, உட்காடுகளில் காவலிற்குச் செல்ல தாமே முன்வந்து தயாராகின்றனர்.

வன அழிவு

2002-2019ல் அருணாசலப்பிரதேசத்தில் 1,100 சதுர கி மீ பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டன என்று உலக வனக் கண்காணிப்பு அமைப்பு (Global Forest Watch) 2020 அறிக்கையில் கூறியுள்ளது. சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுதல், பழங்குடியினருக்கு இடையில் ஏற்படும் கலவரங்கள், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல், வனங்களை பணப்பயிர் தோட்டங்களாக மாற்ற அழித்தல் போன்றவை இதற்குக் காரணம்.

2021ல் கண்டுபிடிக்கப்பட்ட சாம்பல் நிற அலகு பாஃப்லர் (Greybilled babblar), 2022ல் கண்டுபிடிக்கப்பட்ட ரோஸ் பிஞ்ச் (three banded rose pinch , பகன் லியாச்சியா (Bugun Liochchiya) உள்ளிட்ட பல புதிய பறவையினங்கள் சமீபத்தில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

அன்பு செலுத்தும் இயற்கையின் அம்சங்களான மரம், செடி, கொடி, பறவை, விலங்குகளை மனிதன் நேசிக்கத் தொடங்கினால் இயற்கையும் அவனை நேசிக்கும். உயிரினங்கள் இல்லாத உலகில் மனிதனும் உயிருடன் இருக்க முடியாது. ஏனென்றால் பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்!

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/nature-future-column-on-aarunachal-pradesh-anti-poaching-prject-1.8318787

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

நாட்டின் பெயரைக் கொண்டுள்ள கானமயில் (Great Indian Bustard) என்ற இந்தப் அரிய வகைப் பறவை இந்தியாவில் இப்போது வெறும் 150 மட்டுமே உள்ளன. 1994ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) இன அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இவை சேர்க்கப்பட்டன. மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முன்பு இவை வாழ்ந்து வந்தன. இன்று இரண்டு மாநிலங்களில் மட்டுமே இவை அதிகம் காணப்படுகின்றன என்று கருதப்படுகிறது.

இவற்றின் எண்ணிக்கை குறைய பல காரணங்கள் உள்ளன. மின்சாரக் கம்பிகளில் மோதி ஏற்படும் மரணங்களே அதிகம் நடந்துள்ளன. வேட்டைக்காரர்களை அடையாளம் காண இவற்றிற்கு பக்கவாட்டில் மட்டுமே அதிக பார்வைத் திறன் உள்ளது. இதனால் வேட்டை விலங்குகளையும், முன்னால் இருக்கும் மின்சாரக் கம்பிகளையும் இவை துல்லியமாகக் காண முடிவதில்லை.

இதுதவிர மற்ற தடைகள் மீது மோதி ஏற்படும் மரணங்களும் நிகழ்கின்றன. இந்திய வன உயிரி அறக்கட்டளை (Wildlife Trust of India WTI) 2017- 2020 காலத்தில் தார் பிரதேசத்தில் இவ்வாறு நடந்த 6 மரணங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது.Great Indian Bustardபுலிகள் பாதுகாப்பு திட்டம் போல ஒன்று

இவற்றின் பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தின் தலையீடுகள் பல முறை ஏற்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மின்கம்பிகள் மீது மோதுவதால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க பூமிக்கடியில் கம்பிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. புலிகள் பாதுகாப்பிற்காக புலி பாதுகாப்புத் திட்டம் (Project tiger) நடைமுறைப்படுத்தப் பட்டது போல இவற்றைப் பாதுகாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்தது. இதன் பலனாக 2012ல் கானமயில் பாதுகாப்புத் திட்டம் (Project Bustard) என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.

இப்போது இவை 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி இவற்றின் வாழிடங்களை தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களாக அறிவிக்கும் திட்டம் உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் வனத்துறை மற்றும் இந்திய வன உயிரி அறக்கட்டளையின் உதவியுடன் இவற்றிற்காக சிறப்பு இனப்பெருக்க மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் மாநிலப் பறவை

இது ராஜஸ்தானின் மாநிலப் பறவை. உலகில் இப்போது உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள 200 பறவைகளில் 96 சதவிகிதமும் இம்மாநிலத்திலேயே வாழ்கின்றன. நாட்டில் உள்ள 150 கானமயில்களில் 126 பறவைகளின் வாழிடம் இந்த மாநிலமே. 1960களில் 1260 பறவைகள் இருந்தன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இடையில் இந்த எண்ணிக்கையில் 75% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்பு இந்தியாவில் 11 மாநிலங்களில் இவை வாழ்ந்து வந்தன.

என்றாலும் இன்று இவை ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவை சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன. பறவைகள் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் பறப்பதில் இவை நிபுணர்கள் இல்லை. 15 கிலோ வரை வளரும் இயல்புடையவை. உடல் எடை கூடுதலாக உள்ள, அதிகம் பறக்க இயலாத பறவைகளில் முதலிடத்தில் உள்ளன.

ஆணும் பெண்ணும்

பொதுவாக இவற்றின் நீளம் நான்கு அடி. பெண்களை விட ஆண் பறவைகளே அதிக எடையுடையவை. இறக்கைகளின் நிறத்தை வைத்து ஆண், பெண் பறவைகள் அடையாளம் காணப்படுகின்றன. பெண் பறவைகளில் கறுப்பு நிற க்ரீடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. பிராந்திய மொழியில் இவை கோடாவன் என்று அழைக்கப்படுகின்றன.

1972ல் வேட்டையாடப்படுவது தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை இவை பெரும் எண்ணிக்கையில் வேட்டையாடியே அழிக்கப்பட்டன. 1980ல் இவற்றின் எண்ணிக்கை 1000. 150 என்ற மோசமான நிலைக்கு இப்போது இவற்றின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கம்பிகள் இடித்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 18 பறவைகள் உயிரிழப்பதாக இந்திய வன உயிரி அறக்கட்டளை கூறுகிறது.

உடல் எடை 15 கிலோ என்பதால் மின்சாரக் கம்பிகள் குறுக்கிடும்போது உடனடியாக இவற்றால் தங்கள் வழியை மாற்றிக் கொள்ள இயல்வதில்லை. இது இவற்றின் இறப்பு விகிதம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். முன்னால் உள்ளதைப் பார்க்கும் திறனும் இவற்றிற்குக் குறைவு என்பதால் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசின் 2009 மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.

கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம்

ராஜஸ்தானில் ஜைசல்மீரில் கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இங்கு இதற்காக வனப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 குஞ்சுகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. வரும் மூன்று ஆண்டுகளில் இவை இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை அடையும். அப்போது இவை காடுகளில் கொண்டு சென்று சுதந்திரமாக விடப்படும். மறுவாழ்வு வசதிகள் செய்யப்படும்.

என்றாலும் இதனுடன் தொடர்புடைய 50% செயல்பாடுகள் மட்டுமே உரிய முறையில் நடந்தன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அணைத்துண்ணிகள் (omnivores). கிடைப்பதை உண்ணும் இயல்புடையவை. சிறிய பிராணிகள், ஊர்வன, புழுக்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.

இவற்றின் இனப்பெருக்கம் மழைக்காலத்தில் நடக்கிறது. வித்துகள், நிலக்கடலை போன்றவை குளிர் மற்றும் வறட்சி அதிகமுள்ள காலங்களில் இவற்றின் முக்கிய உணவு. வயது வந்த பறவைகளுக்கு பருந்துகள், எகிப்திய வல்லூறுகள் போன்றவை முக்கிய எதிரிகள். சாம்பல் நிற செந்நாய்கள் இவற்றை வேட்டையாடுவது உண்டு. பசுக்கள் மேயும்போது இவற்றின் முட்டைகள் மிதிபடுவதால் அவை அழிந்து போவதும் உண்டு.

ஆண்டுதோறும் புதிய கூடுகள்

மார்ச் முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்க காலம். இனப்பெருக்கத்தைப் பற்றிய விவரங்கள் ஆராயப்பட்டுள்ளன என்றாலும் இவை கூடு கட்டுவது மற்றும் இவற்றின் இணை சேரும் சுபாவம் பற்றி இன்னும் அதிகம் ஆராயப்படவில்லை. ஒருமுறை இனப்பெருக்கத்திற்காக கட்டிய கூடுகளை இவை மறுபடியும் பயன்படுத்துவது இல்லை. ஆண்டுதோறும் புதிய கூடுகளைக் கட்டுகின்றன.

முந்தைய ஆண்டுகளில் மற்ற கானமயில்கள் கட்டிய கூடுகளை இவை சில சமயங்களில் பயன்படுத்துவதுண்டு. மண்ணில் சிறிய குழிகளைத் தோண்டி கூடு கட்டுகின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்றிற்கு மேற்பட்ட பறவைகளுடன் இணை சேர்கின்றன. ஆண் பறவைகள் மற்ற பெண் பறவைகளுடன் அதிகமாக இணை சேர்கின்றன. பெண் பறவைகள் ஒரு பிரசவத்தில் ஒரு முட்டையை இடுகிறது. ஒரு மாத காலம் அடை காக்கும் பருவம்.

ஆண் பறவைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இனப்பெருக்க வயதை அடைகின்றன. பெண் பறவைகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இனப்பெருக்க பருவத்தை அடைகின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள். இறக்கைகளின் அளவு 210 முதல் 215 செண்டிமீட்டர்.

கானமயில் பாதுகாப்புத் திட்டம்

இணை சேரும் காலத்தைத் தவிர மற்ற சமயங்களில் இவை வலசை செல்லும் இயல்புடையவை. எண்ணிக்கையில் பெரும் குறைவு ஏற்பட்டதால் 2011ல் இவை அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினமாக அறிவிக்கப்பட்டன. வாழிட அழிவு இவை சந்திக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனை. 2012ல் இந்திய அரசு இவற்றின் பாதுகாப்பிற்காக கானமயில் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. என்றாலும் இத்திட்டத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. இனி வரும் காலத்திலேனும் இந்த உயிரினங்கள் அழிவின் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுமா?

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/all-you-need-to-know-about-great-indian-bustards-1.8433984

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

கடல்வாழ் பாலூட்டி விலங்குகளான சீல்களில் (Seal) சில, உண்ணும் உணவில் கலந்திருக்கும் நஞ்சை சமாளித்து உயிர் வாழும் திறன் பெற்றுள்ளன. இந்தத் திறன்  பற்றிய ஆய்வு மனிதர்களுக்கான மருத்துவத்தில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஹ்ஃவான் ஃபெர்னாண்டஸ் மிருது உரோமம் உள்ள சீல்கள் (Juan Fernandez fur seal) மிக ஆபத்தான காட்மியம் உள்ளிட்ட உலோகத்தை உணவுடன் சேர்த்து உண்கின்றன என்றாலும் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மனிதனின் செயல்களால் பூமியில் இருந்தே அழிந்து விட்டன என்று கருதப்பட்ட இந்த உயிரினம் இப்போது சூழலில் கலந்திருக்கும் மிக மோசமான உலோக நச்சுகளை சமாளித்து வாழ்கின்றன. ஆர்த்தோஸ்பேலஸ் பிலிப்பியை (Arctocephalus Philippii) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இவை உலகின் மிகத் தனிமைப்பட்ட இடங்களில் வாழ்பவை.

இவை காட்மியம், பாதரசம் போன்ற நச்சு உலோக மாசுகளை உண்டு ஆபத்தில்லாமல் உயிர் வாழ்கின்றன. பிலிப்பியை என்ற இந்த இனம் உலகின் இரண்டாவது மிகச்சிறிய மிருது உரோம சீல் வகையைச் சேர்ந்த இனம். இவை சிலி நாட்டின் கரையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வான் ஃபெர்னாண்டஸ் வளைகுடா மற்றும் அதற்கு அருகில் இருக்கும் ஒரு சில பசுபிக் கடல் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன.Juan Fernández fur sealsஇங்கு இவற்றின் வாழிடத்தை அலெக்சாண்டர் செல்கர்க் (Alexander Selkirk) என்ற கடற்பயணி 1704-1709 ஆண்டுகளுக்கு இடையில் கடலில் மூழ்கி ஆராய்ந்து அறிந்தார். இந்நிகழ்வு டானியல் டிஃபோ (Daniel Defoe) என்பவரால் ராபின்சன் க்ரூஸோ (Robinson Cruso) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த வளைகுடாப் பகுதியின் முக்கியத்தீவு ராபின்சன் க்ரூஸோ என்று பெயரிடப்பட்டது.

ஆனால் அதன் பிறகு இந்த விலங்குகள் மிகத் தீவிரமாக அவற்றின் உரோமம் மற்றும் இறைச்சிக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இப்பகுதியில் இருந்த நான்கு மில்லியன் உயிரினங்கள் கொல்லப்பட்டன. இதனால் 19ம் நூற்றாண்டில் இவை இப்பகுதியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயின. 1960களில் இவற்றின் சிறிய காலனி இத்தீவுப்பகுதியின் ஒரு குகைக்குள் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்வரை இவற்றின் இனம் அழிந்து விட்டது என்றே கருதப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட உயிரினம்

இதன் பின்னர் இவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இப்போது இத்தீவின் பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை 80,000.

வளர்ச்சியடைந்த சீல்கள் கடலில் வாழ்கின்றன. நவம்பர் டிசம்பர் மாதங்களில் குட்டிகள் மிருதுவான கறுப்பு நிற உரோமத்துடன் பிறக்கின்றன. பிறகு இந்த நிறம் சில ஆண்டுகளில் மங்கி பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த உயிரினங்கள் பற்றி விஞ்ஞானிகள் சமீப காலத்தில் ஆராயத் தொடங்கும் முன்புவரை இவை பற்றி மிகக் குறைவான விவரங்களே அறியப்பட்டன. இத்தகைய ஆய்வுகளின்போதே நஞ்சு உண்டாலும் பாதிக்கப்படாத இவற்றின் அதிசயிக்க வைக்கும் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மலம் ஆராயப்பட்டபோது அதில் மிக அதிக அளவு காட்மியம், பாதரசம் மற்றும் பிற நச்சு உலோக மாசுக்கள் இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வியப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு. காட்மியம், பாலூட்டிகளுக்கு நச்சுத் தன்மையை தரக் கூடியது. ஆனால் இந்த சீல்கள் இந்த நஞ்சை எவ்வாறு செரிக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக உள்ளது.

தங்கள் உடலின் செரிமான உறுப்புகள் வழியாக இவற்றை சீல்கள் செல்ல அனுமதித்தாலும் அதனால் இந்த உயிரினங்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உயிர் வாழ்கின்றன என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சூழல் பாதுகாப்பு ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கான்ஸ்டண்ச டோரோ-வால்டிவிசோ (Constanza Toro-Valdivieso) கூறுகிறார்.

இந்த உயிரினங்கள் இந்த நஞ்சுகளை எங்கிருந்து பெறுகின்றன என்பதும் ஆய்வாளர்களை வியப்படையச் செய்தது. இத்தீவில் உள்ள மண் மற்றும் சுற்றியுள்ள நீரில் இருக்கும் காட்மியத்தின் அளவு மிகக்குறைவு. இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது உணவின் மூலமே சீல்கள் இந்த நஞ்சுகளைப் பெறுகின்றன என்று கண்டறியப்பட்டது.

பெருவட்ட கடல் நீர்ச்சுழற்சி

அண்டார்க்டிக் மிருது உரோம சீல் போன்ற சில சீல் இனங்கள் அவை வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் நீரில் உள்ள மிதவை உயிரினங்களையே (krill) உண்கின்றன. ஆனால் இந்த சீல்கள் ஏராளமான ஸ்குவிட் (Squid) மற்றும் இதர மீன்களை உட்கொள்கின்றன. பெண் சீல்கள் 500 கிலோமீட்டர் வரை கடலில் பயணம் செய்து தங்கள் இரையை வேட்டையாடுகின்றன. இதற்காக இவை தெற்கு பசுபிக் பெருவட்ட கடல் நீரோட்ட சுழற்சியை (Gyre) கடந்து செல்கின்றன.

பெருவட்ட கடல் நீரோட்டச் சுழற்சி என்பது அதிவிரைவாகச் சுழலும் கடல் நீரோட்டம். இச்சுழற்சியில் சகலவிதமான கழிவுகளும் சிக்கிக் கொள்கின்றன. இங்கிருந்தே சீல்கள் காட்மியம் போன்ற நஞ்சுகளை உணவின் மூலம் பெறுகின்றன என்று கருதப்படுகிறது. அதிவேகமாகச் சுழலும் கடல் நீரோட்டத்தில் மனிதன் உருவாக்கும் காட்மியம், பாலிமரால் ஆன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன. இவற்றை ஸ்குவிட் மற்றும் மீன்கள் உணவுடன் உண்கின்றன. இவற்றிடம் இருந்து சீல்களின் உணவில் இந்த நஞ்சுகள் சேர்கின்றன என்று நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக இந்த வகை உயிரினங்கள் பற்றி ஆராய்ந்து வரும் வால்டிவிசோ அடங்கிய விஞ்ஞானிகள் குழுவின் இந்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் Royal Society open science என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பாலூட்டிகளுக்கு நஞ்சாக இருக்கும் காட்மியம் போன்றவற்றை இந்த உயிரினங்கள் எவ்வாறு செரிமானமடையச் செய்து அதிக பாதிப்பு இல்லாமல் வாழ்கின்றன என்பது பற்றி தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவற்றின் மலம் தவிர இயற்கையாக உயிரிழந்த இவற்றின் எலும்புகளிலும் நச்சு மாசுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எலும்புகளில் காணப்படும் அதிகப்படியான சிலிகான் காட்மியம் போன்ற நஞ்சுகளை சமாளிக்க இவற்றிற்கு உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது நம் மருத்துவத் துறையில் முக்கியப் பயன்களைத் தரக் கூடியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மனிதன் அறியாத பல அதிசயங்கள்

நஞ்சை சமாளிக்கும் இதன் பண்பு இதன் உடலில் இருக்கும் மரபணுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அல்லது முற்றிலும் மனிதன் அறியாத வேறு காரணத்தால் இவ்வாறு நிகழலாம். இது பற்றி வரும் ஆண்டுகளில் தீவிரமாக ஆராயப்படும் என்று வால்டிவிசோ கூறுகிறார். மனித குலம் அதிகம் அறியாத இந்த உயிரினங்கள் இதுவரை நாம் அறியாத பல அதிசயிக்க வைக்கும் அறிவியல் உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தலாம்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/apr/29/seals-mystery-ability-to-tolerate-toxic-metal-could-aid-medical-research-say-scientists?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

நாகாலாந்தில் வோர்க்கா (Wokha) மாவட்டத்தில் உள்ள பாங்டி (Pangti) கிராமம். நாகரீக வசதிகள் எவையும் நுழையாத ஆதிவாசிகளின் நாடு. அங்கே ஆண்டுதோறும் அரங்கேறும் ஆகாய அதிசயத்தின் கதைதான் இது. இலட்சக்கணக்கான அமுர் வல்லூறு (Amur falcon) பறவைகள் கூட்டம் கூட்டமாக இங்கே பறந்து வருகின்றன. அவற்றை ஆதிவாசிகள் சுவையான பறவை இறைச்சிக்காக போட்டி போட்டுக் கொண்டு வேட்டையாடி ஒரு பறவையை பத்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்றனர்.

வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொலைதூர மாவட்டங்களில் இருந்து இறைச்சி வாங்க ஏராளமானோர் வந்தனர். ஆண்டுக்கணக்கில் நடந்து வந்த பறவை வேட்டை, விற்பனை பற்றி மிகத் தாமதமாகவே வெளியுலகம் அறிந்து கொண்டது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையை எதிர்த்து 2012ல் குரல் எழுப்பினர். மெல்ல மெல்ல இது பலன் தரத் தொடங்கியது. உலகம் அறிந்திராத ஒரு கிராமம் மெல்ல மெல்ல பறவைகள் பாதுகாப்பின் சொர்க்கபூமியாக மாறியது. புதிய வரலாறு எழுதப்பட்டது.

இது உலகம் முழுவதும் பரவியது. பறவை வேட்டை தடை செய்யப்பட்டது. நாகர்கள் சினந்து எழுந்தனர். அம்பையும் வில்லையும் ஏந்தி போராடத் தயாராயினர். கிராமம் போராட்டக்களமானது. ஆனால் வனத்துறையினரும், மாநில அரசும் நிலைமையை உணர்ந்து செயல்பட்டனர். பல சூழல் அமைப்பினரும், மாணவர்களும், இளைஞர்களும் களத்தில் குதித்தனர். ஆதிவாசிகளை வனப் பாதுகாப்பிற்காக செயல்பட உற்சாகப்படுத்தினர். சிறிதுசிறிதாக அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தைக் கண்டறிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.pangti villageஆதிவாசிகளின் கோபம் அடங்கியது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் இயக்கமாக செயல்படத் தொடங்கியதுடன் மக்கள் மனம் மாறினர்.

பாங்டியில் மலைப்பகுதிகளில் எங்கும் காணப்படும் அமுர் வல்லூறு என்ற இந்த சின்னஞ்சிறிய பறவையை இன்று இங்கு வாழும் கிராம மக்கள் எவரும் வேட்டையாடுவது இல்லை. கிராம மக்களின் நலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பல தன்னார்வ நிறுவனங்கள் உதவின.

கிராமம் பறவைகள் பாதுகாப்பில் உலகப் புகழ் பெறத் தொடங்கியது. இது கிராம மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தியாவிற்கு உள்ளேயிருந்தும் வெளியில் இருந்தும் பல தன்னார்வ நிறுவனங்கள் வரத் தொடங்கியதுடன் கிராமத்தின் முகச்சாயல் மெல்ல மாறியது. கிராம கவுன்சிலர் ஆர் ஷிரி அவர்களின் ஆலோசனையின்படி கிராம மக்கள் செயல்பட்டனர். கிராம மக்களின் நலவாழ்விற்கு முன்னுரிமை தரப்பட்டது. பறவை பாதுகாப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அமுர் வல்லூறு என்னும் அதிசயம்

பறவை ஆர்வலர்களுக்கு என்றும் ஒரு அதிசயமாக இருக்கும் அமுர் வல்லூறுகள் அக்டோபர் மாதத்தில் மங்கோலியா, சைபீரியாவில் இருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்திற்கு வருகின்றன. ஒன்றரை மாதம் வரை அவை இந்த கிராமத்தில் தங்குகின்றன. பத்து இனங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் பெரிய பிராணிகளே இவற்றின் முக்கிய உணவு. இடைவேளைக்குப் பிறகு இவை மகாராஷ்டிரா வழியாக இந்தியப் பெருங்கடலைக் கடந்து தென்னாப்பிரிக்காவை நோக்கி பறக்கின்றன.

மங்கோலியா, சைபீரியாவில் இருந்து நாகாலாந்து வழியாக தென்னாப்பிரிக்காவை சென்றடையும்போது இவை 30,000 கிலோமீட்டர் தொலைவிற்குப் பறந்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்காவில் இருந்து நாகாலாந்து வழியாக இவை புறப்பட்ட இடத்தைச் சென்றடைகின்றன. அதிக தூரம் பறக்கும் வலசைப் பறவைகளில் இதுவும் ஒன்று. பருந்து இனத்தைச் சேர்ந்தது என்றாலும் பார்ப்பதற்கு ஒரு புறாவின் அளவே உள்ள இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இவை வலசை செல்லும் காலத்தில் எங்கும் இடை நிற்காமல் தொடர்ந்து பறக்கும் ஆற்றல் பெற்றவை.

உயிர் பறிக்கும் வலைகள்

பறவை பறக்கும் வழியெங்கும் பெரிய வலைகளைக் கட்டியே கிராம மக்கள் இதை வேட்டையாடினர். மரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட லேசான வெள்ளை நிறத்தில் உள்ள நீளமான வலைகளை பறக்கும்போது பறவைகளால் பார்க்க முடியாது. வலையில் அகப்படும் அவற்றை கிராமவாசிகள் பிடித்து கால்களைக் கட்டி ஒரு தாங்கியில் தொங்கவிடுவர்.

ஒரு நாளில் ஆதிவாசித் தலைவர் பரிந்துரை செய்யும் ஒரு சிலர் வலை கட்ட அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்கள் மற்றவர்களின் முறை. இவ்வாறு ஒன்றரை மாதத்திற்குள் கிராமவாசிகள் அனைவருக்கும் பறவையைப் பிடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நாகாலாந்து வன உயிரி உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை இயக்குனர் பானோ ஹராலு வேட்டைக்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமானவர். தூர்தர்ஷனின் செய்தியாளராக பணி புரிந்துள்ள இவர் நாகாலாந்து ஆங்கிலச் செய்தித்தாள்களில் செயல்பட்டு வந்தார்.

இயற்கை நாகாஸ் (Natural Nagas) என்ற அமைப்பின் தலைவர் ஸ்டீவ், கிராம கவுன்சில் தலைவர் ஆர் ஷிரி, வனத்துறையின் தலைமை பாதுகாவலர் லோகேஸ்வர ராவ் ஆகியோர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தலைமை வகித்தனர். கிராம மக்களை உற்சாகப்படுத்த ஸ்காட்லாந்து வங்கி (Bank of Scotland) விருதுகளை வழங்கியது. 2017ல் பானோ ஹராலு நாரீ சக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதே ஆண்டு சிறந்த அறிவியல் திரைப்படத்திற்கான விருது சினோ இகோஷு (Sino Yhoshu) இயக்கிய பாங்டி கதை (The Pangti story) என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது. வேட்டைக்காரர்களாக இருந்த நாகர்களின் கிராமம் எவ்வாறு பறவைகளின் காவல் பூமியாக மாறியது என்பதே திரைப்படத்தின் மையக்கதை.

பாங்டி இன்று உலகப் பறவை சுற்றுலா வரைபடத்தில்

இப்போது அக்டோபரில் உலகில் பல பகுதிகளில் இருந்தும் பறவை ஆர்வலர்கள் இங்கு வருகின்றனர். இது சூழல் சுற்றுலா வளர வழிவகுத்தது. இது கிராம மக்களின் வருமான மார்க்கமாக மாறியது. அமெரிக்க பறவையியலாளர் ச்காட் வீடன்சால் (Scott Wiedensaul) எழுதியுள்ள இறக்கைகளின் உலகம் (A World of the wing) என்ற புகழ்பெற்ற நூலில் பாங்டி கிராமவாசிகள் பறவைகள் பாதுகாப்பிற்காக நடத்திய ஆத்மார்த்தமான முயற்சிகளும், பானோ ஹராலுவின் தளராத போராட்டங்களும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மனமுவந்து மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் எந்த நரகமும் அழகு பூமியாக மாறும் என்பதற்கு ஒருகாலத்தில் வேட்டை கிராமமாக இருந்து இன்று பறவைகளின் கிராமமாக மாறியுள்ள பாங்டி கிராமம் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/travel/features/how-a-nagaland-village-turned-from-hunting-ground-to-safe-haven-for-amur-falcon-1.8313069

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It