யானை, நீர் நாய், திமிங்கலங்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை இருக்கிறது? தாங்கள் வாழும் சூழல் மண்டலத்தில் இவை அனைத்தும் கார்பன் சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. யானைகள் விதைகளைப் பரப்புகின்றன. குறைவான உயரத்தில் வளரும் தாவரங்களைக் காலில் போட்டு மிதிக்கின்றன. உயரமான மரங்கள் வளர உதவுகின்றன.

கடல் நீர் நாய்கள் கடல் முள் எலிகளை (Sea urchins) உண்கின்றன. இதனால் கடற்பாசிகள் (kelp) செழித்து வளர்கின்றன. திமிங்கலங்கள் ஆழ்கடலில் உணவை உண்டு சுவாசிக்கவும், ஓய்வெடுக்கவும் அவை கடல் மேற்பரப்பிற்கு வரும்போது சத்துகளை வெளிவிடுகின்றன. மிதவை உயிரினங்கள் (phytoplanktons) அதிக அளவில் உருவாக இது தூண்டுதலாக அமைகிறது.

இந்த உயிரினங்கள் மட்டும் அல்ல, பல உயிரினங்கள் அவை வாழும் சூழலில் அதிக அளவில் கார்பனைச் சேகரிக்க உதவுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இது உதவுகிறது. ஆப்ரிக்கா டன்ஜானியாவில் மாரா (Mara) மற்றும் அருஷா (Arusha) பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள செரங்கெட்டி (Serengeti) சூழல் மண்டலத்தில் வாழ்ந்த காட்டெருமைகளின் (wildebeest) எண்ணிக்கை நோய்த்தொற்றால் குறைந்தது.whale 397காட்டுத்தீ

புற்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகி முளைத்தன. அடிக்கடி காட்டுதீ சம்பவங்கள் அதிகமாக இது காரணமானது. திறம்பட்ட நோய் மேலாண்மை மூலம் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. காட்டுத்தீ சம்பவங்கள் குறைந்தன. ஏற்பட்ட தீ விபத்துகளையும் சுலபமாக கையாள முடிந்தது. கார்பன் உமிழும் இடமாக இருந்த இப்பகுதி இதனால் கார்பனை சேகரிக்கும் இடமாக மாறியது.

இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. விலங்குகள் உணவு உண்ணுதல், இடம் பெயர்தல், மிதித்தல், குழி தோண்டுதல், மலம் கழித்தல் மற்றும் வாழிடங்களை அமைத்தல் போன்றவற்றினால் அவை வாழும் சூழல் மண்டலங்கள் திறம்பட கார்பனை சேகரிக்கும் இடங்களாக மாறுகின்றன. 0.3% கார்பனை மட்டுமே உலகின் மொத்த உயிர்ப்பொருளில் (biomass) வனவிலங்குகள் கொண்டுள்ளன என்றாலும் குறிப்பிட்ட சூழல் மண்டலத்தில் இவற்றால் சேகரிக்கப்படும் கார்பனின் அளவு 15% முதல் 200% வரை உள்ளது.

இயற்கையின் வழியில்

காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை சமாளிக்க இயற்கை வழிகளே உதவும் என்று சமீபகாலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது மட்டும் போதாது. வளிமண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இயற்கையின் அளவில்லாத இந்த ஆற்றலையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று லண்டன் விலங்கியல் சங்கத்தின் (Zoological Society of London ZSL) தலைமை செயல் அலுவலர் மாத்யூ குட் (Matthew Gould) கூறுகிறார்.

இந்த ஆய்வுக்கட்டுரை சூழல் சீர்கேடுகளை இயற்கை வழியில் தீர்வு காண்பதை வலியுறுத்துகிறது. மனிதனால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத இயற்கை தீர்வை நோக்கி செயல்படுகிறது. கார்பனைக் கைப்பற்றுவதற்கு உதவும் செயல்முறைகளை (Carbon Capture Systems CCS), புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்றாலும், இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் நிரூபிக்கப்பட்ட பலன் தரும் முறைகளை புறக்கணிக்கக் கூடாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு இயற்கையை மதித்து நடக்க நாம் முதலில் கற்க வேண்டும். கார்பன் சேமிப்பிற்கு உதவாத ஒற்றைப்பயிர் முறையைக் கைவிட வேண்டும். வனவிலங்குகளின் வாழிடங்களைத் துண்டாடுவதை நிறுத்த வேண்டும். கார்பன் சேமிப்பிற்கான தீர்வு இயற்கையில் தாவரங்களிடம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாசிகள், சதுப்புநிலக் காடுகள், கடற்புற்களை மீட்க வேண்டும்.

பனிக்கண்டத்தில் வனவிலங்குகளின் கூட்டம்

ஆர்க்டிக் பகுதியில் அளவற்ற கார்பன் உறைபனிப் பாறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் விலங்குகளின் கூட்டம் பனி உருவாகாமல் இருக்க, மண் உறைநிலையில் இருக்க உதவுகின்றன. கலைமான், காட்டுக் குதிரைகள், அமெரிக்க துருவப் பகுதியில் வாழும் கஸ்தூரி மணம் உடைய எருது போன்ற விலங்குகள் (musk ox), காட்டெருமைகள் போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

இயற்கைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சூழலைப் பாதுகாக்க அது உதவும். மேம்பட்ட சூழலில் வனவிலங்குகளின் எண்ணிக்கை விரைவாகப் பெருகும். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் இதற்கான பணிகள் நடைபெற வேண்டும். இங்கிலாந்தில் செம்பருந்து (red kites), நேபாளம் மற்றும் இந்தியாவில் புலிகள் போன்ற வனவிலங்கு மீட்பின் வெற்றிக்கதைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆய்வுகள் லண்டன் விலங்கியல் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்பட்டன. விலங்குகள் இயற்கை வழியில் கார்பனை சேகரிக்க உதவும். மக்களுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் உறவைப் புதிப்பிக்க வேண்டும். இதன் மூலம் மனித வனவிலங்கு மோதலை தவிர்க்க முடியும். உள்ளூர் மக்களிடம் இயற்கையுடனான உறவு புதிப்பிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பலவன் (Palawan) தீவில் மக்களே முன்வந்து எறும்புத்தின்னிகளுக்காக (pangolins) சரணாலயம் ஒண்றை அமைத்து நடத்தி வருகின்றனர்.

வனவிலங்குகள் வாழும் உலகில்

இந்த அணுகுமுறையே இங்கிலாந்து கடலோரப் பகுதியில் அழியும் நிலையில் இருந்த ஏஞ்சல் சுறாக்களை (Angel shark) பாதுகாக்க உதவும் திட்டங்களை செயல்படுத்த மக்களுக்கு உதவியது. வனவிலங்குகள் வாழும் உலகில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இயற்கை உதவும் என்பதற்கு டன்ஜானியா செரங்கெட்டி சூழல்மண்டலம் சிறந்த எடுத்துக்காட்டு.

மனித குலத்தின் எதிர்காலம் வனவிலங்குகளின் நலவாழ்வுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தாவர விலங்குகளே நமக்கு உதவும் இயற்கையின் ஆயுதங்கள். நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் இந்த உயிரினங்களை நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/commentisfree/2023/apr/19/elephants-otters-whales-nature-climate-breakdown-carbon-ecosystems?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இதுவரை மனிதன் ஆழ்கடலில் அறியாத இடத்தில் ஒரு அதிசய உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நத்தை மீன் (Snailfish) வகை சூடொலிபாரிஸ் (Pseudoliparis) இனத்தைச் சேர்ந்தது. 2022ல் தொடங்கிய இந்த ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டு மாத ஆழ்கடல் ஆய்வின்போது விஞ்ஞானிகள் பயன்படுத்திய தானியங்கி வாகனங்களின் புகைப்படக் கருவியில் இந்த மீனின் படங்கள் பதிவாகியுள்ளது. 8000 மீட்டருக்குக் கீழ் ஆழ்கடலில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

தென்மேற்கு ஜப்பானில் இஸு-ஒகஸ்வாரா பள்ளத்தில் (IZu-Ogasawara trench) கடலின் 8336 மீட்டர் ஆழத்தில் இந்த உயிரினம் வாழ்வது தெரிய வந்துள்ளது. இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சுடொலிபாரிஸ் பெலியிவி (Pseudoliparis belyaevi) இனத்தைச் சேர்ந்த வேறு இரண்டு மீன்களின் புகைப்படமும் ஆழ்கடல் வாகனத்தின் புகைப்படக் கருவியில் பதிவாகியிருப்பது தெரிய வந்தது. இவை ஜப்பானின் அதே பகுதியில் 8022 மீட்டர் ஆழத்தில் நீந்திக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.deepest fish in japanபத்தாண்டு ஆய்வுத் திட்டம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் மைண்டரூ (Minderoo) பல்கலைக்கழகத்தின் ஆழ்கடல் ஆய்வுப் பிரிவு விஞ்ஞானிகள் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.

8000 மீட்டர் ஆழமுள்ள ஜப்பான் கடற்பகுதி, 9300 மீட்டர் ஆழமுடைய இஸு-ஒகஸ்வாரா பள்ளம் மற்றும் 7300 மீட்டர் ஆழமுடைய யுக்கியு (Ryukyu) பள்ளம் ஆகிய பகுதிகளில் வாழும் ஆழ்கடல் மீனினங்கள் பற்றி அறிய இந்த ஆய்வுகள் நடந்தன. உலகில் ஆழ்கடலில் வாழும் மீனினங்கள் பற்றி அறிய நடைபெற்று வரும் பத்தாண்டு கால ஆய்வின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆளில்லா ஆழ்கடல் மிதவை லேண்டர் (landers) வாகனங்கள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்ட அதி நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய, மீன்களைத் தன்பால் ஈர்க்கும் தன்மையுடைய தூண்டில் கேமராக்களை (baited cameras) பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆழ்கடல் பள்ளங்களின் ஆழமான பகுதிகளில் இக்கருவிகள் மிதக்க விடப்பட்டன.

உலகில் இதுவரை தேங்கிய நீர் முதல் கடலின் ஆழமான பகுதிகள் வரை 4000 நத்தை மீன் இனங்கள் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த சில மீனினங்கள் பெற்றுள்ள சிறப்புத் தகவமைப்பின் மூலம் இதே பேரினத்தைச் சேர்ந்த மற்ற நத்தை மீன்களைக் காட்டிலும் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன என்று இந்த ஆய்வுப்பயணத் திட்டத்தின் தலைவர் மற்றும் மைண்டரூ ஆழ்கடல் ஆய்வுப்பிரிவின் (UWAD) நிறுவனர் பேராசிரியர் ஆலன் ஜெமிசன் (Prof Alan Jamieson) கூறியுள்ளார்.

8000 மீட்டர் ஆழத்தில் வாழும் உயிரினத்தின் உடலமைப்பு எப்படி இருக்கும்?

மேற்பரப்பில் இருப்பதை விட கடலின் எட்டாயிரம் மீட்டர் ஆழத்தில் அழுத்தம் எட்டு மடங்கு அதிகமாக இருக்கும். உலகின் மிக ஆழமான கடற்பகுதியில் வாழும் இந்த மீனின் படத்தில் இருந்து அது கரணைகள் போன்ற காப்பு புடைப்புகளுடன் கூடிய, முண்டுமுடிச்சுகள் உள்ள, வளைந்து நெளிந்த அமைப்புடன் (gnarly) கறுத்த நிறத்தில் பெரிய பற்கள் போன்ற பகுதியையும் சிறிய கண்களையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது என்று ஆலன் கூறியுள்ளார்.

இதன் கறுப்பு நிறத்திற்கும் இது வாழும் ஆழ்கடற்பகுதிக்கும் தொடர்பில்லை என்று கருதப்படுகிறது. அடிக்கடி காண முடிவதில்லை என்பதால் இது போன்ற ஆழ்கடல் உயிரினங்களின் சிறப்புத் தகவமைப்புகளை ஆராய்வது கடினமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவற்றின் உடலில் நீச்சல் சிறுநீர்ப் பைகள் (swim bladders) காணப்படுவதில்லை. இது இவை மிக ஆழமான கடலில் வாழ உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

உயர் அழுத்தம் உள்ள பகுதிகளில் உடலில் வாயுக்குழி (gas cavity) போன்ற உடற்பகுதியைப் பெற்றிருப்பது மிகக் கடினம். இந்த மீன்கள் செதில்கள் அற்றவை. இதற்குப் பதில் இவை கூழ்மத் தன்மையுடைய அடுக்கைப் பெற்றுள்ளன. இது மீனின் உடற்செயலியக்கத்திற்கு உதவுகிறது என்று ஆலன் கருதுகிறார்.

சாதனை ஆழத்தில்

கேமராவில் இளம் மீன் ஒன்றின் படமே பதிவாகியுள்ளது. மற்ற ஆழ்கடல் மீன்கள் போல் இல்லாமல் நத்தை மீனினங்களில் வளர்ந்த மீன்களை விட இளம் மீன்களே அதிக ஆழமுடைய பகுதிகளில் காணப்படுகின்றன.

8000+ மீட்டர் ஆழத்திற்கும் அதிகமான பகுதிகளில் மிகச் சிறிய உயிரினங்களே அதிகமாக வாழ்கின்றன. இப்போது இஸு-ஒகஸ்வாரா பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மீன் இதற்கு முன் 2017ல் 8178 மீட்டர் ஆழத்தில் மரியான (Mariana) பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நத்தை மீன் வாழ்ந்த ஆழத்தை விட 158 மீட்டர் அதிக ஆழத்தில் வாழ்கிறது. இது ஒரு சாதனை ஆழம். 2017 ஆய்வையும் ஆலன் ஜெமிசனே நடத்தினார். ஜப்பான் ஆய்வுகள் மரியானா பள்ளத்தில் வாழும் நத்தை மீன் உலகில் மிக ஆழமான கடற்பகுதியில் வாழும் மீனினமாக இருக்காது என்று முன்பு கருதப்பட்டதை உறுதி செய்துள்ளது என்று ஆலன் கூறுகிறார்.

கடலாழத்தில் ஒரு உயிரினத்தின் வாழ்க்கை

ஆழ்கடல் வாழ் உயிரினங்களின் தகவமைப்பிற்கு வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. குளிர்ச்சி உள்ள பகுதிகளுக்குச் செல்லச் செல்ல தெளிவற்ற தன்மை அதிகமாகிறது. வெதுவெதுப்பான பகுதிகளுக்குச் செல்லச் செல்ல ஆழம் அதிகரிக்கிறது. ஜப்பான் பள்ளம் பசுபிக் பெருங்கடலில் மரியானா பள்ளத்திற்கு வட திசையில் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு கடல் நீர் மரியானாவை விட சிறிதளவு அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இது நீரின் ஆழத்தில் வேறுபாடு ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 8200-8400 மீட்டர் ஆழத்தில் மீனினங்கள் வாழ்வது சாத்தியமற்றது என்று கருதப்பட்டது. மீன்கள் ஆஸ்மலைட் (Osmolyte) என்ற அழுத்தத்தை சமாளிக்கும் தன்மையுடைய திரவத்தை (fluid) பெற்றுள்ளது.

மீன்களுக்கென்று தனி வாசனை ஏற்பட இதுவே காரணம். உயிரி வேதியியல்ரீதியாக மீன்கள் வாழும் ஆழத்திற்கும் இந்த திரவத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. 8200-8400 மீட்டர் ஆழத்தில் வெப்பநிலை வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. செல்களில் உள்ள இந்த திரவத்தின் அடர்த்தி மேலும் அதிகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது ஐசஸ்மோசிஸ் (Isosmosis) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது 250 முறை ஆழ்கடல் மிதவை வாகனங்கள் பயன்படுத்தப்பப்டன. இந்த ஜப்பான் ஆய்வின்போது கேமராவின் சாளரப்பகுதி குறுகலாக்கப்பட்டது. ஒவ்வொருமுறை வாகனம் கடலின் 8336 மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டபோதும் இந்த மீன்கள் காட்சி தந்தன.

பூமியிலேயே ஆழமான பகுதியில் வாழும் இந்த மீனின் கண்டுபிடிப்பு இயற்கை என்னும் அற்புதக் கலைஞனின் படைப்பில் மனிதன் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதையே நினைவுபடுத்துகிறது!

மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/apr/03/scientists-find-deepest-fish-ever-recorded-at-8300-metres-underwater-near-japan?

&

Deepest ever fish caught on camera off Japan - https://www.bbc.co.uk/news/science-environment-65148876

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

அழுத்தத்தை அனுபவிக்கும்போது தாவரங்கள் அல்ட்ராசானிக் ஒலிகளை எழுப்புகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தாகத்தால் வாடும் அல்லது பழுதடைந்த செடிகள் இசைக்குழுவில் ஒரு இசைக்குறிப்பு பாடப்பட்டபின் விடப்படும் நிசப்தமான இடைவெளியைப் போல ஒரு மணி நேரத்தில் ஐம்பது பாப் சத்தங்களை எழுப்புகின்றன. இவற்றை அருகில் இருக்கும் உயிரினங்கள் கேட்டு பதில்வினை புரிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு தாவரத்தின் வாழ்க்கையில் அதன் தலை தாழும் நிலை வரும். இலைகள் பழுப்பு நிறமடையும் கட்டம் ஏற்படுகிறது. அப்போது, சரமாரியாக குமிழ்கள் உருவாகி ஏற்படுத்தும் சத்தத்தைப் போன்ற அல்ட்ரா சானிக் ஓசைகளை அவை எழுப்புகின்றன. அல்ட்ராசானிக் ஒலி என்பது மிக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலை வடிவத்தைக் குறிக்கிறது. தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நீர்ப் பற்றாக்குறை அல்லது உடலில் காயம் ஏற்பட்டால் அவை இத்தகைய ஓசைகளை எழுப்புகின்றன.

தாவரங்களின் உலகம் நிசப்தமானது இல்லை

இந்த கண்டுபிடிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது, சிந்திக்கத் தூண்டுகிறது. நாம் காண்பது போல தாவரங்களின் உலகம் நிசப்தமானது இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த சத்தங்கள் அவை வாழும் சூழல் மண்டலத்தை வடிவமைப்பதில் அவற்றுக்கு உதவுகின்றன. தாவரங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது அவை ஒரு மணி நேரத்தில் ஒரே ஒரு ஓசையை மட்டுமே எழுப்புகின்றன.forest 700ஆனால் அதே தாவரம் அழுத்தத்திற்கு உள்ளாகும்போது ஒரு மணி நேரத்தில் முப்பது முதல் ஐம்பது அல்ட்ராசானிக் ஒலிகளை எழுப்புகிறது என்று டெல் அவிவ் பல்கலைக்கழக பரிணாம உயிரியலாளர் மற்றும் உயிரியல் கோட்பாட்டாளர் பேராசிரியர் லீலாச் ஹேடனி (Prof Lilach Hadany) கூறுகிறார். இந்த ஓசைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் திறனை மற்ற உயிரினங்கள் பெற்றிருக்கலாம் என்பதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

உருளைக்கிழங்கு செடியும் புகையிலைச்செடியும்

இந்த ஒலிகளுக்கு எல்லாவகை தாவர விலங்குகளும் பதில்வினை புரிகின்றனவா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் புகையிலைச் செடிகளில் நடத்தப்பட்டது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தாவரங்கள் க்ளிக் மற்றும் பாப் சத்தங்களை விரைவாக வெளியிடுகின்றன.

ஆனால் அவற்றிற்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் அல்லது அவற்றின் தண்டுகள் வெட்டப்பட்டால் இந்த ஒலிகள் மூன்று முதல் ஐந்து மீட்டர் தொலைவில்கூட பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. இவை 40 முதல் 80 கிலோஹர்ட்ட்ஸ் அளவு அதிர்வெண்ணுடன் வெளியிடப்படுகின்றன. மனிதக் காதுகளால் 20 கிலோஹர்ட்ஸ் அளவு வரை உள்ள ஒலி அலைகளை மட்டுமே கேட்க முடியும். இதனால் தாவரங்கள் எழுப்பும் ஒலியை நம்மால் கேட்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உரத்த குரலில் பேசும் தாவரங்கள்

என்றாலும் விட்டில் பூச்சிகள், சுண்டெலி போன்ற சில உயிரினங்கள் இந்த உயர் அதிர்வெண் ஒலியைக் கேட்கும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன. இது அவற்றின் நடத்தையில் தாக்கம் செலுத்தலாம் என்று நம்பப்படுகிறது. செல் (Cell) என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில் தாவரங்கள் மனிதர்களின் பேச்சைப் போலவே எவ்வாறு உரத்த ஒலியை எழுப்புகின்றன என்பது பற்றி ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் நீர் இல்லாமல் போனால் இவை அடிக்கடி ஒலி எழுப்புகின்றன. ஐந்து அல்லது ஆறாவது நாளில் தாவரங்கள் வாடத் தொடங்கும்போது இந்த பாப் சத்தங்கள் மெல்ல மெல்ல குறைந்து விடுகின்றன. ஒலிப்பதிவிற்காக விஞ்ஞானிகள் ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறைத்தீர்வுக் கருவியை உருவாக்கினர். இதன் உதவியுடன் தாவரங்கள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் அழுத்தத்திற்கான காரணத்தை ஆராய்ந்தனர்.

மற்ற உயிரினங்களுக்கு உதவும் பாப் ஒலிகள்

இது 100% துல்லியமானதாக இல்லை என்றாலும் இந்த பாப் ஒலிகளில் அடங்கியிருக்கும் தகவல்கள் அதே சூழல் மண்டலத்தில் வாழும் உயிரினங்களுக்கு உதவுகின்றன. இந்த ஒலிகள் தகவல் பரிமாற்றத்திற்காக எழுப்பப்படுவது பற்றி இன்னும் உறுதியாக எதுவும் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது நெருப்பில் எரியும் ஒரு மரக்கட்டை வெளிப்படுத்தும் ஓசைகளைப் போன்றவையே என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எந்த தாவரத்தை விலங்குகள் உண்கின்றன, எந்த பறவை எந்த தாவரத்தின் இலையில் முட்டையிடுகிறது போன்ற விவரங்களை மற்ற உயிரினங்கள் அறிய இந்த சத்தங்கள் உதவுகின்றன என்று ஹேடனி கூறுகிறார். இந்த ஒலிகள் எழுப்பப்படுவதற்கான சரியான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் நீரிழப்பு ஏற்பட்டு தண்டுகள் செயலிழக்க நேரும் குழிவுறுதல் (cavitation) என்ற நிகழ்வின்போது உருவாகும் காற்றுக்குமிழ்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர்.

இந்த சத்தங்களை வேறெந்த உயிரினம் கேட்கிறதோ இல்லையோ இந்த கண்டுபிடிப்பு வேளாண்மை மற்றும் தோட்ட வளர்ச்சியில் மற்ற உணரிகளுடன் மைக்ரோ போன்களைப் பொருத்தி தாவரங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை எப்போது ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் நீர்ப்பாசனத்தை மேம்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நீருக்காக குரல் கொடுக்கும் தாவரங்கள்

அழுத்தம் ஏற்படும்போது தாவரங்கள் குரல் கொடுக்கின்றன என்பது மகத்தானது. நினைத்துப் பார்க்க முடியாதது என்று பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழகத்தின் உணரி உயிரியல் துறைப் பேராசிரியர் மார்க் ஹோல்டரிட் (Prof Marc Holderied) கூறுகிறார். இந்த ஒலிகள் தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டவையாக இல்லாமல் தாவரங்களில் ஏற்படும் உடலியக்கச் செயல்களின்போது உருவாகும் ஒலிகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

தாவரங்களுக்கும் காதுகள் உண்டா?

இந்த ஒலிகளை மற்ற உயிரினங்கள் கேட்பதை எதுவும் தடுக்க இயலாது. தாவரங்களுக்கு காதுகள் உள்ளன என்று இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவை இயக்கவியல்ரீதியாக ஏற்படும் பல தூண்டல்களுக்கு பதிலளிக்கின்றன. அதனால் இத்தகையவற்றில் அல்ட்ரா ஒலியைக் கண்டுபிடிக்கும் கருவிகளைப் பொருத்தி இது பற்றி இன்னும் தீவிரமாக ஆராய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

வறட்சியைத் தாங்கும் திறன்

அதிக சத்தத்தை பல மணி நேரம் ஏற்படுத்தும்போது வறட்சியைத் தாங்கி வளரும் திறனை தாவரங்கள் பெறுகின்றன என்று பார்சலோனா வேளாண் மரபணுவியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் கார்லோஸ் விஷன்ட் (Carlos Vicient) 2017ல் நடத்திய ஆய்வின் முடிவில் கண்டுபிடித்தார். ஆனால் அவை இயற்கையில் சத்தம் அதிகமாக இருக்கும் சூழலில் மெதுவாக எழுப்பப்படும் ஓசைகளுக்கு பதில்வினை புரிவதில்லை என்று அறியப்பட்டது. இத்தகைய ஒலிகள் தாவரங்களில் இருக்கும் ஆவியாகும் தன்மையுடைய பொருட்களால் ஏற்படலாம் என்று அவர் கருதுகிறார்.

இந்த ஒலிகள் தங்கள் கூட்டாளிகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது. என்றாலும் இது பற்றிய தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது இதுவரை நாம் அறியாத தாவர உலகில் நிகழும் பல நிசப்த வாழ்வியல் செயல்களுக்கு நம்மால் விடை காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்:

https://www.washingtonpost.com/nation/2023/04/04/plants-make-noises-sounds-ultrasonic/

&

https://www.wsaz.com/2023/03/30/plants-make-sounds-similar-bubble-wrap-popping-study-says/

&

https://www.nature.com/articles/d41586-023-00890-9

&

https://newatlas.com/science/stressed-plants-noises/

&

https://www.theguardian.com/environment/2023/mar/30/plants-emit-ultrasonic-sounds-in-rapid-bursts-when-stressed-scientists-say?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

துல்லியமான ஆய்வுகள், விளக்கங்கள் மற்றும் சரியான நடைமுறைப்படுத்துதலின் மூலம் இன அழிவில் இருந்து ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றிய கதை இது.

நீல வண்ணத்துப் பூச்சிகள்

இவற்றின் ஒரு இனம் நீல வண்ணத்துப் பூச்சிகள் (Large blues) என்று அழைக்கப்படும் லைக்கனிடே (lycaenidae) குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள். அளவிலும், வடிவத்திலும் இவை மிகச் சிறியவை. இறக்கைகளை விரிக்கும்போது பொதுவாக பளபளப்பான நீல நிறத்தில் காணப்படும்.

இக்குடும்பத்தில் ஐரோப்பாவில் காணப்படும் ஓர் இனம் பெங்காரிஸ் ஏரியோன் (Phengaris Arion) என்ற இந்த இனம். லைக்கனிடே குடும்பத்தில் மிகப் பெரிய வடிவமைப்பை உடைய வண்ணத்துப் பூச்சி இனம் இதுவே. தும்பைப் பூவின் குடும்பத்தைச் சேர்ந்த டைம் (Thyme) என்ற ஒரு செடியில் இவை முட்டையிடுகின்றன. இதனுடன் மியமிர்கா ஸபுலேட்டி (Myrmica Sabuleti) என்ற ஒரு எறும்பினத்தின் உதவியும் இவை வாழ அவசியமாகிறது.Blue Butterflyஜூலையில் முட்டை பொரிந்து வெலியில் வரும் இதன் புழுக்கள் மூன்று வார காலம் டைம் செடியைத் தின்று வளர்கிறது. இதன் பிறகு அந்த செடியில் இருந்து பிடியை விட்டு கீழே விழும் புழுவின் உடலின் வெளிப்பகுதியில் தேன் போல ஒரு திரவம் ஊறி வருகிறது. இதனால் கவரப்பட்ட எறும்பு பக்கத்தில் வரும்போது காற்றை உட்பக்கமாக இழுத்து பெரிதாகும் புழு பிறகு அதை வெளிவிடுகிறது.

அப்போது ஏற்படும் சத்தம் எறும்பின் ராணி ஆபத்தில் இருக்கும்போது உண்டாகும் சப்தம் போல இருக்கிறது. தேன் துளியைக் குடித்து போதையேறிய எறும்பு புழுவைத் தன் ராணி என்று நினைத்து அதைக் காப்பாற்ற நேராக தன் கூட்டிற்குக் கொண்டு செல்கிறது. கூட்டில் இருக்கும் மற்ற எறும்புகளும் அதைத் தங்கள் ராணி என்று கருதி அதற்கு முழு சுதந்திரம் அளிக்கின்ற்ன. அடுத்த ஆறுமாத காலம் இப்புழு எறும்புகளின் லார்வாக்களையும் முட்டைகளையும் தின்று வளர்கிறது.

கூட்டில் வந்தபோது இருந்ததை விட நூறு மடங்கு பெரிதாகும் புழு இதற்குள் அந்த எறும்பு காலனியை முழுவதும் தின்று முடிக்கிறது. தொடர்ந்து ஓராண்டு காலம் ப்யூப்பாவாகத் தொடர்கிறது. பின்னர் விரிந்து நீல வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது.

மர்மமான முறையில் மறைந்த பூச்சியினம்

1979ல் பிரிட்டனில் இந்த வண்ணத்துப் பூச்சி முற்றிலும் அழிந்தது. 1900 முதல் இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தீவிர ஆய்வுகள் நடந்தன. எறும்புடன் இருக்கும் சொந்தமே இவற்றின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியம் என்று தெரிய வந்தது. மேய்ச்சல் நிலங்கள், பிராந்திய தாவரங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அங்கு இந்த எறும்பிற்குப் பதில் மற்ற எறும்புகள் குடியேறத் தொடங்கின. இதனால் இவற்றின் வாழ்வு கேள்விக்குறியானது.

1930-1969 காலத்தில் இந்த உயிரினத்தை அழிவில் இருந்து மீட்க ஒன்பது இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. என்றாலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. 1972ல் வெறும் 325 ஆக இவற்றின் எண்ணிக்கை சுருங்கியது. தொடர்ந்து வந்த ஏழாண்டுகளில் இவை பிரிட்டனில் இருந்தே முற்றிலும் அழிந்து போயின.

பதினெட்டு காரணங்கள்

இந்த அழிவு தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஆய்வுகளில் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு 18 காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முட்டையிடும் இடங்கள், புழுவின் அளவு போன்றவை இதில் அடங்கும். இத்தரவுகளைப் பயன்படுத்தி இவற்றின் எண்ணிக்கை குறைவிற்கான காரணங்களைப் பற்றி அறிய ஒரு கணித மாதிரி உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதில் இருந்து வண்ணத்துப் பூச்சியின் வாழ்விற்கு எறும்புகளின் முக்கியத்துவம் உணரப்பட்டது. எறும்புகளுடன் தொடர்புடைய செயல்கள் மட்டுமே இவற்றின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது என்று கண்டறியப்பட்டது. எறும்புகள் கொண்டு செல்லும் புழுக்கள் பருவமடைந்து வண்ணத்துப்பூச்சிகளாக மாறுவதற்கு உள்ள சாத்தியக்கூறு ஐந்து மடங்கு அதிகரித்தது. டைம் செடிகள் இருக்கும் இடங்களில் இந்த எறும்புகள் வாழ வேண்டியது இன்றியமையாததாக இருந்தது.

செடிகள் இருக்கும் இடங்களில் எறும்புகளும், எறும்புகள் உள்ள இடங்களில் செடிகளும் இல்லாமல் இருந்த காலத்தில் இந்த வண்ணத்துப்பூச்சிகள் பிரிட்டனில் இருந்து காணாமல் போயின. இச்செடிகளைச் சுற்றியுள்ள செடிகளும் எறும்புகளின் வாழ்க்கையைப் பாதித்தது. சுற்றியுள்ள புற்செடிகள் 1.4 சென்டிமீட்டருக்கும் மேல் உயரமாக வளர்ந்தால் பெருக்கமடையும் புற்கள் அதைச் சுற்றி வாழும் எறும்புகளின் புற்றுகள் இருக்கும் நிலப்பகுதியின் வெப்பநிலையைக் குறைக்கிறது.

அப்போது குறைவான வெப்பநிலையில் மட்டுமே வாழும் மற்ற சில எறும்பு இனங்கள் அந்த நிலப்பகுதியைக் கைப்பற்றுகின்றன. இதனால் எறும்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. 1970களில் இதுவே பிரிட்டனில் நிகழ்ந்தது. இதனுடன் சேர்ந்து 1950களில் எதிர்பாராமல் ஐரோப்பாவில் மைசோமெட்டோசிஸ் என்ற தொற்றுநோய் பரவியது. எறும்புகள் வாழ்ந்து வந்த மலைச்சரிவுகளில் இந்நோய் புற்களை உணவாக உட்கொள்ளும் முயல்களை பெருமளவில் கொன்றது.

முயல்கள் இறந்ததால் சிக்கலான ஒரு தொடர்வினை ஏற்பட்டது. உண்பதற்கு முயல்கள் இல்லாமல் போனதால் புல்வெளிப் பரப்புகள் அதிகமானது. அங்கு இருந்த மண்ணின் வெப்பநிலை குறைந்தது. எறும்புகள் மறைந்தன. வண்ணத்துப் பூச்சிகளின் லார்வாக்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. காலநிலை மோசமானது. விளைவாக நீல வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 1974ல் நீண்ட மழைக்காலத்தில் முட்டையிடத் தேவையான நாட்கள் குறைந்தன. 1975ல் ஏற்பட்ட நீண்ட வறட்சி நிலைமையை மேலும் மோசமாக்கியது.

எண்ணிக்கைக் குறைந்து 1979 ஆனபோது பிரிட்டனில் இந்த பெரிய நீல வண்ணத்துப் பூச்சியினமே இல்லாமல் அழிந்து போனது. துல்லியமான கணிப்புகள், கணித மாதிரி மற்றும் சரியான தரவுகளின் ஆய்வு ஆகியவற்றின் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்பட்டது. பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அப்போது பல காரணங்கள் சொல்லப்பட்டன.

வலைகளைப் பயன்படுத்தி பூச்சிகளைச் சேகரிப்பவர்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களைத் தடுக்க மைதானங்களைச் சுற்றிலும் வேலிகள் எழுப்பப்பட்டன. உண்மையில் இது புல் மேய வந்த விலங்குகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்தது. புற்கள் வளர்ந்து பெருகி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. தவறான கணிப்புகள் எவ்வாறு பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

பாதுகாப்புத் திட்டம்

ஆய்வுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற அறிவு, தரவுகளின் உதவியுடன் நீல வண்ணத்துப் பூச்சி பாதுகாப்புத் திட்டம் (Project Large blue butterfly) தொடங்கப்பட்டது. டைம் செடிகள் வளரும் 52 இடங்கள் முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு எறும்புகள் வாழ்வதற்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வெகுவிரைவில் எறும்புகள் அவற்றின் வாழிடத்திற்குத் திரும்பி வந்தன. 1973-74ல் எறும்புகளே இல்லாத இடங்களில் ஒரு சில ஆண்டுகளில் அவை சூப்பர் காலனிகளாக பெருக்கமடைந்தன.

பூச்சிகளை திரும்பி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்த இடங்களுக்கு 1983ல் ஸ்வீடனில் இருந்து எறும்புகள் கொண்டு வரப்பட்டன. 2008ல் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்கள் வண்ணத்துப் பூச்சிகளால் நிறைந்தது. 2009ல் மிகப் பெரிய காலனிகளில் ஐயாயிரத்திற்கும் கூடுதலான வண்ணத்துப் பூச்சிகள் வாழத் தொடங்கின. இது அதற்கு முன்பு உலகம் முழுவதும் இருந்த இந்த பூச்சிகளின் என்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம்.

மற்ற ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனின் பாதையை பின்பற்றத் தொடங்கின. பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) இன அழிவைச் சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இருந்து இந்த வண்ணத்துப் பூச்சியினம் குறைவான ஆபத்தை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலிற்கு மாற்றப்பட்டது. இதே முறையைப் பின்பற்றி இன அழிவைச் சந்திக்கும் மற்ற வண்ணத்துப் பூச்சி இனங்களை அழியும் நிலையில் இருந்து மீட்கும் முயற்சிகள் தொடங்கின.

சரியான தரவுகளின் சேகரிப்பும் விளக்கங்களும் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் சூழல் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதற்கு மீண்டு வந்த இந்த வண்ணத்துப் பூச்சியினம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

மேற்கோள்https://www.mathrubhumi.com/environment/columns/extinction-story-of-large-blue-butterflies-and-their-comeback-eco-story-1.8488024

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It