அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சூறாவளி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தத் தொடரின் கடந்த இரு பகுதிகளில் நெடுவாசலில் எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான எதிர்ப்பு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் என்பதையும், அது உலகமயத்தின் குறிப்பாக அமெரிக்க அரசின் எரிபொருள் மற்றும் டாலர் சார்ந்த கொள்கைகளின் தொடர்ச்சி என்பதையும், தற்போது மாறிவரும் உலக அரசியலில் இந்திய ஆளும் வர்க்கம், இந்திய விவசாயிகளை அடகு வைத்து தனக்கான ஆதாயத்தை பெற காத்திருப்பதையும், எரிபொருளின் அடிப்படை அறிவியல் குறித்தும் விரிவாக கண்டோம்.
அதிக பாய்வுத்திறன் கொண்ட கடினபாறைகளின் கீழ் தேங்கியிருக்கும் எரிபொருட்களை மரபுசார்ந்த முறையில் எடுப்பதை போன்று அல்லாமல், எண்ணெய் மற்றும் எரிவாயு உருவாக காரணமான மூலப்பாறைகளில் சிக்கியிருக்கும் குறைவான பாய்வுத்திறன் கொண்ட எரிபொருட்களை தூண்டப்பட்ட முறையில், புதிய முறையான நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி அந்த மூலப்பாறைகளை வெடிக்க செய்து எரிவாயு எடுக்கும் திட்டதை இந்த அரசு முனைப்பாக செயல்படுத்த முனைந்துள்ளது. அதன் ஒருபகுதியே சமீபத்திய தமிழக எரிபொருள் திட்டங்கள் ஆகும். விவசாய உற்பத்தி நடைபெறும் பகுதியை சிதைக்கும் எரிபொருள் திட்டங்கள் விவசாய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் என்றால், இந்த நீரியல் விரிசல் முறையை அந்த பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் அனைவரையும் அங்கிருந்து விரட்டும். இப்படி பேசினாலே, அறிவியலுக்கு புறம்பாக வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பதாக சில அறிவாளிகள் வாதிட்டு வருகிறார்கள். இதனால் அறிவியல் ஆய்வுகள், மற்ற வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப வல்லுனர் குழுக்களை அமைத்து கண்டறிந்த முடிவுகளின் அடிப்படையில், இந்த நீரியல் விரிசல் முறையை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி பெருமளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் அமெரிக்காவில் அது ஏற்படுத்தி இருக்கும் நேரடி பாதிப்புகளை பற்றி இங்கே விரிவாக முன்வைக்கிறோம். இது அறிவாளிகளுக்கு பதில் சொல்வது மட்டுமல்லாமல், இது மற்றவர்களின் போராட்டம் என கூடங்குளம் போராட்டத்தில் விலகி இருந்ததைப் போன்று நாம் ஒதுங்கி நிற்க கூடாது என்ற உண்மையை நம் அனைவருக்கும் உணர்த்தும் என்று நம்புகிறோம்.
நீரியல் விரிசல் முறை செயல்படுத்தப்படும் இடத்தின் தோற்றம். (geology.com)
இந்த நீரியல் விரிசல் முறை எனப்படும் hydraulic fracturing method அமெரிக்காவில் நிலடுக்கத்தையும் அதிக அளவு நீர் பயன்பாட்டின் காரணமாக கடும் வறட்சியையும் ஏற்படுத்தியதோடு, நிலத்தடிநீர் மாசுபடுதல், பயன்படுத்தப்படும் வேதிபோருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மீத்தேன் எரிவாயு கசிவினால் காற்றுமண்டலம் மாசுபடுதல், 60௦௦ மீட்டர்களுக்கு கீழே துளையிடுவதால் கதிரியக்க தனிமமான ரேடான் வெளியேறுதல், இவை அனைத்தின் காரணமாக மனிதர்களுக்கு கொடிய உடல்நல கேடுகளையும் உருவாக்கி இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த முறையை பயன்படுத்துவதைப்பற்றி ஆய்வு செய்த அறிவியல் வல்லுநர் குழு, இதுவரை வெளிவந்துள்ள அறிவியல் ஆய்வுகள், செய்திகள் ஆகியவற்றை தொகுத்து ஆய்வு செய்தது. (இதன் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ள இது போதுமானதாக இருக்கும் என்பதால் அனைவரும் தவறாமல் இதனை வாசிக்க கோருகிறோம்- http://publications.jrc.ec.europa.eu/repository/bitstream/111111111/26691/1/lbna25498enn.pdf) இதில் குறிப்பிடும் மிக முக்கிய இரு பிரச்சனைகள் 1. மக்கள் அடர்த்தி 2. அதிக அளவிலான நீர் பயன்பாடு.ஆகியவைப்பற்றியதாகும். இந்திய, தமிழக பகுதிகள் உலகிலேயே மிகஅதிக மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகள் (படம் காண்க) என்பதையோ, நீர்தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் என்பதையோ சொல்லி தெரிய வேண்டிய தேவை இல்லை. மேற்சொன்ன பிரச்சனைகளோடு, இதில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்கள் குறித்து நிலவும் மர்மமும், இதுவரை செய்யப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுகள் அனைத்தும், எண்ணெய் நிறுவனங்களின் உதவித்தொகையில் நடைபெற்று உள்ளதால், அதன் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியது என்பதையும், அவற்றின் முடிவுகள் அறிவியலுக்கு எதிரானது என்பதையும், அமெரிக்காவின் நியூயார்க் மாகாண அரசு அமைத்த அறிவியல் வல்லுனர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
(உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இந்தியா (ஐரோப்பிய அறிவியல் ஆய்வு அறிக்கை))
நியூயார்க் மாகாண அரசு அமைத்த வல்லுநர் குழுவும், இந்த நீரியல் விரிசல் முறை சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முழுமையற்றதாகவும், இதுவரை இந்த முறையை பயன்படுத்திய பகுதிகளில் கதிரியக்க பொருட்களின் தாக்கத்தால், மக்களுக்கு பெருமளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அறிக்கை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த மாகாணம் நீரியல் விரிசல் முறைக்கு தடை விதித்துள்ளது. இதேபோன்று ஸ்காட்லாந்து, பிரான்சு, நெதர்லாந்த், ஜெர்மனி போன்ற நாடுகளும் தனித்தனியாக வல்லுனர் குழுக்களை அமைத்து, அதன் அடிப்படையில் தடை செய்துள்ளன. இனி இந்த நீரியல் விரிசல் முறை நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுப்படுத்தியதால் மனிதர்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை பற்றிய அறிவியல் ஆய்வு முடிவுகளை இனி தொகுத்து பார்ப்போம்.
நீரியல் விரிசல் முறையால் நிலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தொகுப்பு
-
பாறையை வெடிக்கச் செய்ய, மிக அதிக அழுத்தத்தில் நீரையும் வேதிக்கரைசல்களையும் பூமிக்கடியில் 3000 மீட்டருக்கு கீழே இந்த முறையில் செலுத்துவதால் நில அமைப்பியலில் மாற்றம் ஏற்பட்டு நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இந்த முறையை பயன்படுத்தி அமெரிக்காவில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்கும் மாகாணங்களில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான, 3.8 ரிக்டர் வரையிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
-
ஒஹியோ மாகாணத்தில் 400 சிறு நிலநடுக்கங்களை நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியதாகவும், அது 3 கிலோமீட்டர்களுக்கு கீழே பாறையை உடைப்பதில் இருந்து 29 மணி நேரத்திற்குள்ளாக பலபத்து நில அதிர்வுகளை ஏற்படுத்தியுருப்பதாகவும் அறிவியல் ஆய்விதழில் (Seismology Research Letters) ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒக்லஹாமா (oklahama) மாகாணத்தில் பாறையை உடைக்க ஆரம்பித்த வருடமான 2008 ஆம் ஆண்டிலிருந்தே நூற்றுக்கும் மேற்பட்ட 3 ரிக்டர் அளவுக்கும் மேலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் மட்டும் 4 ரிக்டர் அளவுக்கும் அதிகமான 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் (Science Advances) வெளியிடப்பட்டுள்ளது.

Ref: Science Advances 2015.
-
டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு 120 நிலநடுக்கங்களும், 2015 ஆம் ஆண்டு 4 ரிக்டர் அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பிற்கும் பாறையை உடைப்பதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி அறிவியல் துறையில் பெரிதும் மதிக்கப்படும் நேச்சர் குழும ஆய்விதழில் (Nature Communications) ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
அலபாமா (Alabama) மாகாணத்தில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க தொடங்கிய பிறகு 3.8 ரிக்டர் வரையிலான நில நடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
ஒஹியோ, ஒக்லஹாமாவில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்கும் கிணறுகளில் செலுத்தும் திரவங்களின் காரணமாக சமீப வருடங்களில் நூற்றுக்கணக்கான 3 ரிக்டருக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதையும், அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி அறிவியல் உலகின் உயரிய தரமதிப்பீடு வைத்திருக்கும் சயன்ஸ் (science) ஆய்விதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

-
பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க பாறைகளை உடைப்பதற்கும், கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக அம்மாகாண புவியியல் ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார்.
-
இந்த ஆய்வுகளும், செய்திகளும் இந்த பாறை எரிவாயு- மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கும், தொழில்நுட்பதிற்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பிருப்பதை காட்டுகின்றன. மேலும் திட்டம் ஆரம்பம்பித்த வருடங்களில் குறைவான ரிக்டர் அளவில் ஏற்பட்டு வந்த நிலநடுக்கம், ஆண்டுகளும், கிணறுகளும் அதிகமாகும் போது, பல நூறு எண்ணிக்கையில் 3 ரிக்டருக்கும் அதிகமான நிலநடுக்கம் ஏற்படுவதை காட்டுகிறது.
-
தமிழகத்தில் காவிரி படுகையில் பாறை எரிவாயு-மீத்தேனை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டிருக்கும் ONGC, மூலப்பாறைகள் இருப்பதையும், அங்கு எரிவாயு எடுப்பது வர்த்தக ரீதியில் பயனளிக்ககூடியது என்பதையும், உறுதி செய்த இடங்களில் உற்பத்தி தொடங்க அனுமதி கோரியுள்ளதோடு, 25 ஆண்டுகளுக்கு எரிவாயு எடுக்க போவதாக மும்பை பங்கு சந்தையில் தனது பங்குகளையும் வெளியிட்டுள்ளது.
-
25 ஆண்டுகளுக்கு எரிவாயு எடுக்கும் போது, அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பதை போன்று தமிழகத்திலும் நீடித்த உற்பத்தியின் காரணமாக, நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியகூறுகள் மிக அதிகம். தமிழக அரசு அமைத்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவும், நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பை சுட்டிக்காட்டி உள்ளது.
-
அவ்வாறு நிலநடுக்கம் ஏற்படும் போது, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய நான்கு மாவட்ட குடியிருப்புகளின் நிலநடுக்க தாங்குதிறன், அந்த பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவைகளை குறித்து, உற்பத்தியை தொடங்கும் முன்பு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.
-
மிக முக்கியமாக, பாறை எரிவாயு- மீத்தேன் உற்பத்தி செய்ய ONGC அனுமதி கோரியுள்ள புவனகிரி பிளாக், நெய்வேலி நிலக்கரிசுரங்கத்திற்கு மிக அருகில் உள்ளதால், அதன் நிலைத்தன்மை குறித்தும் விரிவான ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும்.
-
ஆனால் இதுவரை ONGC சோதனைக்கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய சுற்றுசூழல் ஆய்வறிக்கையிலும் அல்லது உற்பத்திக்கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ள ஆவணங்களிலும், கிணறுகள் தோண்டுவதற்கு செய்யப்படும் சுற்றுசூழல் ஆய்வையும், அதனால் ஏற்படும் விளைவுகளை தணிக்கும் நடவடிக்கைகளை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
-
அதில் ONGC, பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க பயன்படுத்த போகும் தற்போது உள்ள ஒரே முறையான நீரியல் விரிசல் முறைக்கு, பயன்படுத்த போகும் நீரின் அளவு, வேதிப்பொருட்கள், அதன் விளைவுகள் குறித்த தகவல்கள், அது தமிழகத்தில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இடம்பெறசெய்யாமல் முற்றிலுமாக மூடிமறைக்கப்பட்டுளது.
-
மேலும், மத்திய, மாநில சுற்று சூழல் துறைகள் எந்த கேள்வியும் எழுப்பாமல், அது குறித்த எந்த ஆய்வும் இதுவரை செய்யாமல், இது குறித்து மத்திய சுற்றுசூழல், வனத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளிலும் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நீரியல் விரிசல் முறை நீரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு.
-
இந்த நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி மீத்தேனை உற்பத்தி செய்ய, ஒரு கிணறை துளையிடவும், வேதிக்கரைசல்களை கொண்ட நீரைக்கொண்டு அதிக அழுத்தத்தில் பாறையை உடைக்கவும் ~1.1 முதல்1.5 கோடி லிட்டர்கள் வரை (~11,000 முதல் 15,000 கன மீட்டர்கள்) நீர் தேவை.
-
இவ்வாறு துளையிட்டு, உடைத்து உற்பத்தியை ஆரம்பிக்கும் கிணறுகள், மரபான உற்பத்தி கிணறுகளை போலல்லாமல், ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளாக 60% முதல் 70% வரை தனது உற்பத்தி திறனை இழந்துவிடுகின்றன. (மரபான உற்பத்தி கிணறுகள் 2 வருடங்களில் 45-50% உற்பத்தி திறன் வீழ்ச்சி). எனவே, அதிகளவு தொடர்ந்து கிணறுகள் அமைப்பது இன்றியமையாததாகிறது.
-
இந்த அதிக நீர் தேவையின் காரணமாகவும், கிணறுகளின் குறைந்த ஆயுட்காலம் காரணமாகவும், தொடர்ந்த உற்பத்தி பெருக்கத்தின் காரணமாகவும், பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க கிணறுகள் அமைத்த அமெரிக்க மாகாணங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிகளவு பாறை எரிவாயு-மீத்தேன் உற்பத்தி செய்யும் டெக்சாஸ், கலிபோர்னியா மாகாணங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இது அரசு ரேசன் முறையில் நீரை குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பங்கிடும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கிறது.
-
சனவரி 2011 முதல் மே 2013 வரை 36718 கோடி லிட்டர் தண்ணீர் செலவு செய்து 39294 புதிய கிணறுகள் அமைக்கப்பட்டதால், இந்த புதிய கிணறுகள் தோண்டிய 55% அமெரிக்க பகுதிகள் கடும் வறட்சியை சந்தித்திருக்கின்றன.
-
சோதனை செய்வதற்கே சில நூறு கிணறுகள் தோண்டியுள்ள ONGC, 25 வருடங்கள் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், பாறை எரிவாயு-மீத்தேன் கிணறுகளின் குறைந்த ஆயுட்காலம் காரணமாக, பல நூறு முதல் சில ஆயிரம் கிணறுகள் தோண்டப்போவது உறுதி.
-
அவ்வாறு தோண்டும் போது, அங்குள்ள குடும்பங்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயம் செறிவாக நடைபெறும் அந்த பகுதிகளின் விவசாய தேவைக்கும் நீரின்றி வறண்டுவிடும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே, பருவமழை பொய்க்கும் காலங்களிலும், அண்டை மாநிலங்களுடனான நீர்பங்கீட்டு சிக்கல் ஏற்படும் காலங்களிலும் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கபடுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை இந்த அதிக நீர் பயன்பாடு மேலும் மோசமாக்கும்.
-
இந்தளவு உற்பத்திக்கிணறுகளில் பூமிக்கடியில் செலுத்தப்படும் மிக அதிகளவு நீர், மீண்டும் கழிவாக புவிபரப்பிற்கு மேலே கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்டு சேகரிக்கப்படும் பெரும் கழிவுநீர் கிணறுகள், ஒக்லஹாமா மாகாணத்தில் நிலநடுக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
கலிபோர்னியாவில் இந்த கழிவுநீரை மீண்டும் பூமியில் செலுத்தி நிலத்தடிநீர் மாசுபடுத்தப்பட்டுள்ளது.
-
அதோடு, உற்பத்தி கிணறுகள் புவிபரப்பிற்கு மிக அருகிலுள்ள நிலத்தடி நீர் வழியாகவே அதிக ஆழத்திற்கு தோண்டப்படுகிறது. அப்போது, நிலத்தடிநீர் மீத்தேன் மற்றும் கழிவுநீர் கலந்து மாசுபடாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள் (cement casing) அமைக்கபடுகிறது. ஆனால், அது உடைந்து விபத்து ஏற்படும் போது மொத்த நிலத்தடி நீரும் மாசுபட்டு பயன்படுத்த தகுதியற்றதாகிப்போகிறது.
-
டெக்சாஸ், பென்சில்வேனியாவில் அவ்வாறான விபத்து ஏற்பட்டு மீத்தேன் நிலத்தடிநீரில் கலந்து, வீட்டு கிணறுகளில் எடுக்கும் நீர் தீப்பிடித்து எரியும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
-
அது மட்டுமல்லாமல், இந்த கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் மிக அதிகளவு கழிவுநீர் திறந்தவெளியில் தேக்கி வைக்கப்படுகிறது. கடற்கரைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இந்த உற்பத்தி கிணறுகள் அமைய போவதால், இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில், அது நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகளையும், நிலப்பரப்பையும் நிச்சயம் மாசுபடுத்தும்.
-
டெக்சாஸில் இவ்வாறு தேக்கி வைத்த கழிவுநீர் வீடுகளை சூழ்ந்ததால் அந்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே இங்கிலாந்தில் இந்த கழிவுநீரை மூடிய கழிவுநீர் தேக்க தொட்டிகளில் வைக்க வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மீத்தேனை உற்பத்தி செய்ய இருக்கின்ற நீர் அனைத்தையும் உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் இந்த தொழில்நுட்பம், நிலத்தடிநீர், நீர்நிலைகள், நிலப்பரப்பு என அனைத்தையும் மாசுபடுத்தும் ஆபத்தை இந்த திட்டம் கொண்டுள்ளது. அவ்வாறன சூழலில், அங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்வதை தவிர வேறு வழியேதும் இல்லை.
-
ஆனால், ONGC இதுவரை சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அமெரிக்காவை போன்று கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டம் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை. (அமெரிக்கவிலேயே இந்த சுத்திகரிப்பு, முறையாக நடைபெறவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன)
-
அதோடு மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் செய்தியாக, இந்த கழிவுநீரில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்களும், கதிரியக்க பொருட்களும் இருப்பதாக சுற்றுசூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க தொடங்கிய ஆண்டிற்கு பிறகு கதிரியக்க தனிமமான ரேடானின் (Radon) அளவு அதிகரித்துள்ளதாக அறிவியல் ஆய்விதழில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
-
இதுவரை நிறுவனங்கள் வெளியிட்ட பாறை உடைப்பிற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களை ஆய்வு செய்த வேதியியல் அறிஞர்கள், அதில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் இருப்பதாகவும், அவை குறித்த வெளிப்படைத் தன்மை வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
-
ஜெர்மனியில் இந்த திட்டத்தை செயல்படுத்தவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும், இதுவரை இந்த தொழில்நுட்பம் மற்றும் திட்டம் குறித்த ஆய்வுகள் முழுமையற்றதாகவும், நிறுவனங்களின் நிதியிலேயே அனைத்து ஆய்வுகளும் நடைபெறுவதால், சார்புநிலையற்ற சுதந்திரமான ஆய்வுகள் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளது.
நீரியல் விரிசல் முறை காற்று மண்டலத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் தொகுப்பு.
-
இந்த திட்டம் சுற்றுசூழலை மாசுபடுத்தாத தூய்மையான புவிக்குகந்த திட்டம் என கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் மீத்தேன் கசிவை கண்காணித்த அமெரிக்காவின் சுற்றுசூழல் கட்டுபாட்டு நிறுவனம் (Environmental Protection Agency) குறைவான மீத்தேன் கசிவே இருப்பதாக பதிவு செய்திருந்தது. ஆனால், ஒரு கிலோமீட்டருக்கு மேலே பறந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கிணற்றுப் பகுதிகளில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பதிவு செய்த மீத்தேன் அளவை விட, மிக மிக அதிகளவு இருப்பதை கண்டறிந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
-
பசுமைக்குடில் வாயுவான இந்த மீத்தேன், புவி வெப்பத்தை அதிகரிக்க செய்யும். உலகமெங்கும் தற்போது பெரும் அளவு எங்கும் காணப்படும் கார்பன் டைஆக்சைடு வாயுவை விட நீண்ட கால நோக்கில் மிக அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் நீரியல் விரிசல் முறையை கையாளும் நிறுவனங்கள் கடும் விமர்சனதிற்குள்ளாகி வருகின்றன.
-
இந்த திட்டமும், தொழில்நுட்பமும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதோடு, பல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்களையும் பயன்படுத்துகிறது. அதோடு, இந்த கிணறுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் கதிரியக்க தனிமங்களும் இருப்பதால், இந்த திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசகுழல் கோளாறு, புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கபடுகின்றனர்.
இப்போது சொல்லுங்கள், நீரியல் விரிசல் முறையில் பயன்படுத்தி எடுக்கப்போகும் எரிபொருள் நம்மை வாழவைக்கவா, அழிக்கவா என்பதை? தற்போது இரண்டாவது கட்டமாக நெடுவாசலில் தொடங்கியுள்ள போராட்டத்தின் முடிவுதான் நெடுவாசலை, மற்றும் நெடுவாசலை சுற்றியுள்ள மக்களின் வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கப்போகிறது என்பது மிகையல்ல.
References
-
http://www.bssaonline.org/content/early/2015/01/01/0120140168.abstract
-
https://www.chemistryworld.com/news/audit-of-fracking-fluids-highlights-data-deficiencies/7648.article
- https://www.ceres.org/resources/reports/hydraulic-fracturing-water-stress-water-demand-by-the-numbers
- https://www.ceres.org/issues/water/shale-energy/investor-guide-to-fracking-water-risk/investor-guide-to-hydraulic-fracturing-water-stress
- http://droughtmonitor.unl.edu/data/png/20160927/20160927_CA_date.png
- http://www.ewg.org/research/toxic-stew
- http://science.sciencemag.org/content/347/6224/830
- https://www.nature.com/articles/ncomms7728
- https://www.biologicaldiversity.org/news/press_releases/2014/fracking-10-06-2014.html
- https://www.bloomberg.com/news/articles/2013-10-10/u-dot-s-dot-shale-oil-boom-may-not-last-as-fracking-wells-lack-staying-power
- http://www.pnas.org/content/111/17/6237.abstract
- http://pubs.acs.org/doi/abs/10.1021/es506095e
- https://www.nature.com/jes/journal/v27/n1/full/jes201581a.html
- http://www.sciencedirect.com/science/article/pii/S0048969716322392
- https://ehp.niehs.nih.gov/EHP281/
- http://www.comingcleaninc.org/assets/media/documents/When%20the%20Wind%20Blows.pdf
- https://ehp.niehs.nih.gov/1307732/
- https://www.health.ny.gov/press/reports/docs/high_volume_hydraulic_fracturing.pdf
- http://www.dec.ny.gov/docs/materials_minerals_pdf/findingstatehvhf62015.pdf
- https://www.bloomberg.com/news/articles/2015-06-29/n-y-officially-bans-fracking-with-release-of-seven-year-study
- https://www.government.nl/documents/reports/2014/10/15/structural-vision-for-shale-gas-extraction
- http://www.reuters.com/article/netherlands-energy-shale-idUSL8N0ZQ2S720150710
- http://www.reuters.com/article/us-germany-fracking-idUSKCN0Z71YY
- https://www.theguardian.com/politics/2016/jun/01/scottish-parliament-votes-narrowly-in-favour-of-ban-on-fracking-snp
- http://www.cedelft.eu/publicatie/support_to_the_identification_of_potential_risks_for_the_environment_and_human_health_arising_from_hydrocarbons_operations_involving_hydraulic_fracturing_in_europe/1274
- https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/296949/LIT_8474_fbb1d4.pdf
- http://www.teriin.org/policybrief/index.php?a=8
- சூறாவளி
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நதி என்பது தேக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என நம் பொதுப்புத்தியில் பதிந்து போயிற்று. நதி என்பது மனித பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற சுயநலச் சிந்தனை நம் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஊடகங்களால் போதிக்கப்படுகிறது.

நதிகள் இணைப்பைப் பற்றி பேசும் முன்னர் நதிகளைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாகப் பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்குப் பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடைக் காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை.
முதலில் நம் சுய நலத்திற்காக அணைகளைக் கட்டினோம். நதிகளின் உயிரோட்டத்தை தடுத்து நிறுத்தினோம். காடுகளில் உள்ள நதிகள் கூட வறண்டு போனது. விலகினங்கள் யாவும் தேங்கிய நீரில் நீர் அருந்துகின்றன. இது நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது. தமிழக காடுகளில் அதிக அளவு யானைகள் இறந்து போவது குறிப்பிடத்தக்கது. நதிகள் யாவும் வறண்டு போனது யாரால்? அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால்? நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள்? ஏரிகள், குளங்கள் எல்லாம் என்ன ஆயின? நம்மிடம் இருந்த இயற்கை வளங்களைத் தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக? நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழலில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.
சாதாரண குளங்களையும், குட்டைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாதபோது, நதிகளை இணைத்து என்ன செய்யப் போகிறோம்? அண்டை மாநிலங்களைக் குறை சொல்லும் நாம், நம்முடைய நதிகளை என்ன செய்தோம்? காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன? மற்ற மாநிலங்களைக் குறை சொல்வது நமக்கு எளிதான வழி. நம்முடைய குறைகளை நாம் மறைத்துக் கொள்ள இது வசதியாக இருக்கிறது. ஆனால் இயற்கையும், காலமும் நமக்கு பதில் சொல்லும். அது கற்றுக் கொடுக்கபோகும் பாடம் வரலாற்றில் இருக்கும்.
- பா.சதீஸ் முத்து கோபால்
- விவரங்கள்
- எஸ்.யோகேந்திரகுமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்திய கிராமப்புறங்களில் அதிக அளவு மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கக் காரணம் என்ன? மற்ற நாடுகளில் உள்ளவாறு, எளிய செலவு குறைந்த மலக்குழி கழிவறைகளைக் கட்டிப் பயன்படுத்த ஏன் தயங்குகிறார்கள்? இந்திய கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகமாய் உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய கிராமங்களில் 70% வீடுகளில் கழிப்பறை இல்லை. எனவே மலம் கழிப்பு திறந்தவெளியில் தான். இதுவே சஹாரன் ஆப்ரிக்க உட்பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்போர் வெறும் 35% ஆகவே உள்ளனர். பங்களாதேஷில் 5% மற்றும் சீனாவில் 2% மக்களே திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். சஹாரன் ஆப்ரிக்கப் பகுதிகளோடு ஒப்பிடும்போது இந்திய கிராமங்கள் கல்வியிலும், பொருளாதார நிலையிலும், நீர் வளத்திலும் மேம்பட்டே உள்ளன. இருந்தும் இங்கு திறந்த வெளியில் மலம் கழிப்போர் எண்ணிக்கை மிக அதிகமாய் உள்ளதன் காரணம் அறிய வேண்டும்.
| INDICATOR [2012] | OPEN DEFECATION % | RURAL OPEN DEFECATION % | RURAL DRINKING WATER ACCESS % |
GDP/PER CAPITA $ |
| INDIA | 48.3 | 65.0 | 90.7 | 5,050 |
| ALL SOUTH ASIA | 38.1 | 52.5 | 89.3 | 4,666 |
|
PAKISTAN |
23.1 | 34.3 | 89.0 | 4,360 |
| BANGLADESH | 4.0 | 5.0 | 84.4 | 2,364 |
| SUB-SAHARAN AFRICA | 24.9 | 34.4 | 52.5 | 3,263 |
| NIGERIA | 23.0 | 31.5 | 49.1 | 5,291 |
| INDONESIA | 21.9 | 30.7 | 76.4 | 8,855 |
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடு ஏராளம். அதுவும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகு நாடுகளில் மக்களின் உடல் நல பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். காலரா, போலியோ, சீதபேதி , கொக்கிப் புழு போன்ற நோய்களும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் சிசு மரணங்களும் வளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன.
திறந்த வெளியில் மலம் கழிப்பதன் காரணத்தை அறிய முற்பட்ட இந்த ஆய்வில் சுகாதாரம் குறித்த உலக நாடுகளின் புள்ளி விபரங்கள், நேபாள் மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட நேர்காணல்கள், வட இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களின் 32000 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், உத்தர் பிரதேஷ், பீஹார், ஹரியானா, மத்தியப் பிரதேஷ், ராஜஸ்தான் , குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல ஆண்டு கள ஆய்வுகளும் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.
இந்திய கிராமப்புற மக்கள் எளிய செலவு குறைந்த மலக்குழிகளைக் கொண்ட கழிவறைகளையும் கூட விரும்புவதில்லை. அதற்கான காரணம் கல்வியறிவு குறைவோ பொருளாதரா நிலையோ அல்ல. திறந்த வெளியில் மலம் கழித்தலை மக்கள் தேர்ந்தெடுப்பதன் காரணம் மக்களின் நம்பிக்கை, சுத்தம் சார்ந்த மதிப்பீடுகள், மாசு, சாதியமைப்பு மற்றும் தீண்டாமையே ஆகும். எளிய மலக் குழி கழிப்பறையில் மலம் கழித்தலை மக்கள் சுத்தமற்ற ஒன்றாகவும், மாசு ஏற்படுத்துவதாகவும் கருதுகின்றனர். மாறாக திறந்த வெளியில் மலம் கழிப்பதை சுத்தம் தரும் ஒன்றாகவும், வலிமை தரும் ஒன்றாகவும் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவதில் முதன்மையானவர்கள் ஆண்களே. கழிவறை கட்ட பணம் வேண்டும். கிராமங்களில் எதற்குப் பணம் செலவு செய்வது என்று முடிவெடுப்பது ஆண்களே என்பதையும் குறிப்பிட வேண்டும்.
எளிய கழிப்பறைகளைக் கட்டிப் பயன்படுத்துவதற்கு முதல் தடையாக இருப்பது தீண்டாமையின் வரலாறும் இன்றும் தொடரும் அதன் புனர்வடிவுமே. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் எளிய மலக் குழி கழிப்பறைகள் செலவு குறைந்தவை. அதை அமைக்க அரசு மானியமும் உண்டு. ஆனால் அதில் உள்ள சிக்கல் மலக்குழி நிறைந்ததும் அதை சுத்தப்படுத்தும் பணியை மனிதக் கைகளே செய்ய வேண்டியுள்ளது. காலம் காலமாய் இந்தப் பணியைச் செய்பவர்கள் தலித்துகளே. எனவே தலித் அல்லாதவர்கள் இத்தகைய பணிக்கு வருவதில்லை. தொன்மைக் காலம் தொட்டு, வன்முறையாலும், வறுமையாலும், தலித்துகள் இத்தகைய பணிகளில் கட்டாயப்படுத்தப் பட்டனர். ஒடுக்குமுறைக்கும், அவமானத்திற்கும், ஒதுக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பாய் தலித்துகளும் இன்று வேறு பணி நாடிச் செல்கின்றனர்.
சஹாரா ஆப்ரிக்க உட்பகுதிகளில் உள் நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு இந்தியாவோடு ஒப்பிடும் போது 65% ஆக உள்ளது. ஆனால் திறந்தவெளி மலம் கழிப்பில் நம்மில் பாதியாகவே அங்கு உள்ளனர். பங்களாதேஷின் உள் நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு இந்தியாவோடு ஒப்பிடும் போது பாதியாக உள்ளது. ஆனால் பங்களாதேஷில் திறந்த வெளியில் மலம் கழிப்போர் வெறும் 5 % மக்கள் மட்டுமே. கல்வி ரீதியில் ஒப்பிடும் போதும் முடிவுகள் இது போன்றே உள்ளன.
கழிப்பறைகள் இல்லாமால் இருப்பதற்கு நீர் ஆதாரம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாய்ச் சொல்லப்படுகிறது. இது ஆதாரமற்ற காரணம். மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது நீர் ஆதாரத்திலும் இந்தியா மேம்பட்டே உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, குழாய் நீர் வசதி கொண்ட கிராமப்புற வீடுகளில், பாதிக்கும் மேல் திறந்த வெளியிலேயே மலம் கழிக்கின்றனர்.
கழிவு நீர் குழாய்களை பதித்தல், சுத்திகரித்தல் போன்றவற்றை கிராமப் புறங்களில் அமைத்தல் மிகுந்த செலவு மிக்கது. தீர்வாக மற்ற வளரும் நாடுகளில் உள்ளது போன்ற எளிய செலவு குறைந்த மலக்குழி கழிப்பறைகளைக் கட்டலாம்.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்பது 60 கன அடி கொள்ளளவு கொண்ட மலக் குழி கழிப்பறைகள். இரண்டு பெரியவர்கள் நான்கு குழந்தைகள் பயன்படுத்தினால் அது சராசரியாய் ஐந்து ஆண்டுகள் பயன்படும். அது நிறைந்த பின் அந்த மலக் குழியை சுத்தப்படுத்த வேண்டும் அல்லது புதிய குழி அமைக்க வேண்டும்.
இந்த எளிய செலவு குறைந்த மலக் குழி கழிப்பறை குறித்து நமது மக்களின் பார்வை என்ன என்பதும் மிக முக்கியமானது. இத்தகைய கழிப்பறைகளை இந்திய கிராமப்புற மக்கள் சுத்தமற்ற ஒன்றாகவும் சடங்கு ரீதியில் புனிதமற்றதாகவும் கருதுகின்றனர். பெரும்பாலான மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் கிராமங்களில் அதை வெட்கப்படத்தக்கதாகவோ வருந்தக் கூடியதாகவோ பார்ப்பதில்லை. அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொது நிகழ்வு. வெளியில் மலம் கழிப்பது சுத்தமானதாகவும், வலு தருவதாகவும், உடல் நலம் மற்றும் ஆண்மையோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது.
சுத்தம் அசுத்தம் போன்றவை பொருள் சார்ந்த ஒன்றாக பார்க்கப்படும் அதே வேளையில் அவை மதம் சார்ந்த சடங்கு ரீதியிலும் விளக்கப்படுகின்றன. இந்த ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட சில மக்கள் கழிப்பறைகளை சடங்கு ரீதியான அசுத்தமான ஒன்றாகவே பார்த்தனர். அவை எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் சடங்கு ரீதியில் அசுத்தமானவையே.
ஹரியானாவைச் சார்ந்த பார்ப்பனர் ஒருவர் கழிப்பறைகள் ஏன் கூடாது என்பதற்குச் சொன்ன காரணம் “வீட்டில் கழிப்பறை இருந்தால் கெட்ட நாற்றம் வரும், கிருமிகள் வளரும். வீட்டில் கழிப்பறை என்பது நரகத்தை ஒத்தது. சுற்றுச் சூழல் முற்றிலும் மாசுபடும். வீட்டில் விளக்கு வைப்பதால் எந்தப் பயனும் இல்லாது போகும்.“
இதில் கெட்ட நாற்றம் என்று அவர் குறிப்பிடுவது இங்கு ஒரு சிறப்பு பொருள் கொள்ளப்படுகிறது. நாற்றத்தின் சாதாரண பொருளுடன் அது சடங்கு ரீதியான அசுத்தமாகவும் காணப்படுகிறது.
குஜராத்தைச் சார்ந்த ஒரு நடுத்தர வயதுக்காரர், இடைச் சாதியைச் சார்ந்தவர், கழிப்பறை குறித்து குறிப்பிடும் போது “கழிப்பறை வீட்டில் இருந்து 25 - 30 அடி தொலைவில் இருக்க வேண்டும். நகரங்களில் மக்கள் உண்பதும், கழிவதும் ஒரே இடத்தில். கிராமங்களில் மக்கள் அவ்வாறு வாழ்வதில்லை. நாங்கள் இரண்டையும் வெவ்வேறாக வைத்துள்ளோம், அது நல்லது தானே?”
வீடுகளில் கழிவு குறித்த கிராம மக்களின் பார்வை சற்று குழப்பமான ஒன்று. குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மதில் சுவரின் உள்ளேயோ மலம் கழிக்கின்றனர். அவை பெண்களால் சுத்தப்படுத்தப் பட்டு வீட்டிற்கு வெளியில் வீசப்படுகிறது. இந்த மலம் புனிதத்தைக் கெடுக்கவில்லை. ஆனால் கழிப்பறைகள் புனிதத்தைக் கெடுக்கின்றன. எளிய கழிவறைகள் கட்டும் அளவு பொருளாதார வசதி கொண்டவர்களும் “சுத்தம்“ என்ற காரணம் காட்டி கழிவறை கட்டுவதில்லை. சமூகவியலாளர் டமரியாஸ் லூதி, தமிழ் நாட்டில், கோட்டார் பகுதியில் ஆய்வு செய்து மக்கள் மனப்பாங்கு குறித்து எழுதினார் “குப்பையை வீட்டில் எங்கும் சேர்த்து வைக்கக் கூடாது, அதனால் குப்பைத் தொட்டி வைப்பதில்லை. குப்பையை நாங்கள் வீட்டினுள் தரையில் அங்கங்கே போட்டு விடுவோம். பிறகு பெருக்கி சுத்தப்படுத்தி விடுவோம்.”
எளிய செலவு குறைந்த மலக்குழி கழிப்பறைகளை மக்கள் விரும்புவதில்லை. மற்ற வளரும் நாடுகளில் அதுவே தீர்வாக இருக்கும் போது இங்கு அது முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. முதல் காரணம் அது சில மாதங்களிலேயே நிறைந்து விடும் என்ற தவறான கருத்து. உண்மையிலும் அவை பல ஆண்டுகள் நீடிக்கக் கூடியவை. அவை நிறைந்தவுடன் அவற்றை சுத்தப்படுத்துவதில் உள்ள சிக்கல். யார் செய்வது என்ற கேள்வி? மற்ற நாடுகளைப் போல் அல்லாது இங்கு மலக் குழி சுத்தம் செயல் சாதிய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாய் உள்ளது. மலக் குழி சுத்தம் செய்தல் சபிக்கப்பட்ட தலித்துகளின் செயல் என்பதும், அது இழிவானது என்பதும் இங்கு பொதுப் புத்தியில், சாதியப் புத்தியில் நன்றாகப் பதியப்பட்டுள்ளது. நமது கழிவறைகளை நாமே சுத்தம் செய்வோம் என்பதிலும் சாதியத்தின் மனத் தடை உள்ளது. எளிய மலக் குழி கழிப்பறை கொண்டு மற்ற வளரும் நாடுகள் இந்த சிக்கலை எளிதில் கடந்து செல்லும் போது நமது சாதிய சமூகம் நமக்கு இதில் தொடர்ந்து தடை விதித்துக் கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகள் நீடிக்கும் பெரிய தொட்டிகள் கொண்ட கழிவறைகளை மக்கள் விரும்புகின்றனர். சொல்லப் போனால் அத்தகைய கழிவறைகள் செல்வத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. அதில் கழிவு நீக்கம் பல பல ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதால் அதை விரும்புகின்றனர். தீண்டாமையின், சாதிய அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ஆழமான புரிதலுடன் அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு தொலை நோக்குப் பார்வையும் வேண்டும்.
உத்தர் பிரதேசில் கழிப்பறைகளின் நன்மைகள் குறித்து அரசு சுவர் விளம்பரம் செய்துள்ளது. அவற்றில் ஒன்று “உங்களுடைய மகள்களும், மருமகள்களும் வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது. எனவே வீட்டில் கழிப்பறை கட்டுங்கள்.“
இதில் அரசின் தொலை நோக்குப் பார்வை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை. மாறாக பெண் குறித்த அரசின் மதிப்பீடாகவே உள்ளது.
சரி என்ன தீர்வு?
இதில் சரியான துவக்கமாய் என்ன செய்யலாம்? முதலாவதாய் மனிதக் கழிவை மனித கைகளால் அகற்றுவதற்குத் தடை செய்யும் சட்டத்தை முழுமையாய் அமல்படுத்துவது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ எட்டு லட்சம் வீடுகளில் உலர் கழிவறைகள் உள்ளன. உலர் கழிவறைகள் என்றால் மனிதக் கழிவை மனிதரே நீக்க வேண்டும். உட்காருபவர் ஒருவர். அதை வழித்துச் செல்பவர் இன்னொருவர். அந்த இன்னொருவர் தலித் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தடை செய்யப்பட்ட உலர் கழிப்பறைகள் கொண்ட வீட்டு உடைமையாளர்களில், கழிவு நீக்கத்துக்கு தலித்தை வேலைக்கு அமர்த்தும் ஒருவர் கூட இது வரையிலும் கைது செய்யப்பட்டதில்லை. தனி வீடுகள் மட்டுமல்ல பஞ்சாயத்துகளும், நகராட்சிகளும், மாநகராட்சிகளும், ரயில்வே துறையும் தொடர்ந்து இத்தகைய பணிகளில் சட்டத்தை மீறியே செயல்படுகின்றனர். தண்டவாள மனிதக் கழிவுகள் மனிதக் கைகளாலேயே சுத்தப் படுத்தப் படுகின்றன.
இன்னொரு தீர்வாய் இரட்டைக் குழி கழிவறைகள் சொல்லப்படுகின்றன. முதல் குழி நிறைந்ததும் இரண்டாவது குழி பயன்பாட்டுக்கு வரும். முதல் குழியின் கழிவு ஆறு மாதங்களில் மக்கி விடும். பின்னர் அதை சுத்தப்படுத்துவது எளிது. இது குறித்த பிரசாரத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் முழு தீர்வாகாது. புதிய தொழில் நுட்பங்கள் புதிய கழிப்பறை வடிவுகளைக் கொண்டு வரலாம். ஆனால் அவை முழுத் தீர்வாகாது. சிக்கல் தொழில் நுட்பம் சார்ந்தது அல்ல. அது சமூகம் சார்ந்தது. மலக் குழி சுத்தம் செய்யும் செயல் சாதிய ஒடுக்குமுறையின் ஒரு கருவியாகப் பயன்பட்டு, சாதி இந்துக்களால் தங்களது மேலாண்மையையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்தும் ஒரு வழி முறையாக இருக்கும் வரை விடிவில்லை.
ஆங்கில மூலக் கட்டுரை: EPW, Diane Coffey, Aashish Gupta, Payal Hathi, Dean Spears, Nikhil Srivastav, Sangita Vyas
தமிழில் சுருக்கி எழுதியது
- எஸ்.யோகேந்திரகுமார்
- விவரங்கள்
- உமா கார்க்கி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பல்லுயிர்ப் பெருக்கத்தில் உயிர்மச் சமநிலையானது இயற்கையாகப் பாதுகாக்கப்படுகிறது. உயிரிகள் ஒன்றுக்கொன்று உணவாகி இந்தச் சமநிலையானது பாதுகாக்கப்படுகிறது. இதில் ஏகாதிபத்திய முதலாளிகள் லாபநலனுக்கான செயல்திட்டங்களின் குறுக்கீட்டின் காரணமாக இயற்கையான உயிர்மச்சுழற்சியில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இவை இயற்கையின் பண்புகளைச் சிதைத்து, இயற்கையைச் சார்ந்துள்ள உயிரிகளின் வளர்ச்சியை அழிக்கின்றன.

இந்த உயிர்மச்சுழற்சியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனால் தற்போது புயலில் நிகழும் பாதிப்புகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். அதாவது இந்தியத் துணைக்கண்டம் போன்ற இடங்களில் திடீர் மழைப்பொழிவும், தொடரும் வறட்சியும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக தற்போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், உயிர்மைச் சுழற்சியில் ஏற்பட உள்ள மிகப்பெரிய மாற்றங்களையும் பற்றி ஜ.நா உறுப்பு நாடுகளின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட 800 அறிவியலாளர்களைக் கொண்ட குழு, பருவநிலை தப்புதல் குறித்து 2012-ல் ஏறத்தாழ 30,000 ஆய்வறிக்கைகளைத் தொகுத்து உருவாக்கிய ஒருங்கிணைந்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஜ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கிமூன் இதை வெளியிட்டார். இது குறித்து விளக்கமளித்த பருவநிலை ஆய்வுக்குழுவின் தலைவர் இராஜேந்திர பச்சௌரி, இதில் சொல்லப்பட்டுள்ளதைத் தவிர நமக்கு வேறு மாற்றுவழிகள் என்பது கிடையாது (no plan B because no planet) என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் 30,000 ஆய்வறிக்கைகளின் தொகுப்போ, முக்கிய பிரச்சினையும், அதனால் ஏற்படவுள்ள விளைவுகள் அனைத்தும் மனிதனின் குறுக்கீட்டினால் ஏற்பட்ட பாதிப்பே என்கிறது. இதில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து ஜ.நாவின் நடுநிலைத் தன்மையை அறிந்து கொள்ளலாம். உண்மையில் புவிவெப்பமாதல் அதிகரிப்பதற்கு யார் காரணம், அப்பாவி மக்களா..?
ஆதாரங்களுடன் சற்று ஆராய்வோம்..!
வளிமண்டலத்தில் கடந்த 1,400 ஆண்டுகளைவிட 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வு மிக அதிகமானதாக இருக்கட்டும். 1880இலிருந்து 1012-க்கு இடையில் மட்டும் வெப்பமாதல் காரணமாக புவியின் வெப்பம் 0.850 செல்சியஸ் அளவு உயர்ந்து, துருவப் பனிமலைகள் உருகி 30 ஆண்டுகளில் 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவு குறைந்து, கடல்மட்டம் 32 மில்லி மீட்டர் உயர்ந்து அதன் விளைவாகக் கடலோர கிராமங்கள் (சென்னை போன்ற நகரங்களில் சில பகுதிகள்) கடல்நீரில் மூழ்கி அங்கு வசித்த மக்கள் அனைவரும் சூழியல்அகதிகளாக இடம்பெயர்ந்ததாகட்டும்...
கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரித்தது, கடல்நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தது, மேற்குலக நாடுகளில் பனிப்பொழிவு குறைந்தது, பல நாடுகளில் மிச்சமுள்ள காடுகளில் மட்டுமீறிய காட்டுத்தீ உருவாவது, பல வெப்பமண்டல நாடுகளில் வேளாண்மை செய்யவியலாத நிலை உருவாகியது என அனைத்திற்கும் உண்மையான காரணம், ஏகாதிபத்திய முதலாளிகளின் நலன்களை மட்டும் மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஏகாதிபத்திய எடுபிடி அரசுகள்தான் என்றால் மாற்றுக்கருத்து இல்லை.
இத்தகைய சூழலியல் மாற்றத்தின் விளைவாக உண்மையான இழப்பும் பாதிப்பும், அடித்தட்டு மக்களுக்கே! வெள்ளம், புயல், கடல்சீற்றம் என இயற்கையின் எதிர்வினைகள் ஒரு நாளும் எந்த ஏகாதிபத்திய முதலாளிக்கும் எதிராக மாறியது இல்லை.
புவிவெப்பமாதலுக்கு முக்கிய காரணம், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற நச்சு வாயுகள் அதிகம் வெளியேற்றப்படுவதே! கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஏகாதிபத்திய முதலாளிகளின் தொழில்துறை நடவடிக்கையால் வெளியிடப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடின் அளவு மட்டும் 40 கோடி டன் ஆகும்.
இது இயற்கையை அனைத்து நிலைகளிலும் முதலாளித்துவம் தங்களின் தொழில்துறை நலனுக்காகச் சூறையாடி மாசுபடுத்தத் தயங்கியது இல்லை. மாசுபடுத்தலின் அளவைக் குறைக்க மாற்றுவழிகள் பல இருந்தபோதும் ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசுகள் ஒருநாளும் சரிவர செயல்படுத்தியது இல்லை. சரியான மாற்று வழிமுறைகளை மேற்கொள்ள மக்கள் போராடினால் ஆட்சியாளரின் நலனுக்காக இன்றுவரை அவர்களை அரசு ஒடுக்குமுறைகளைச் செலுத்தாமல் இருந்ததும் இல்லை.
இத்தகைய நிலையில் மக்களின் நலனைப் பற்றி சிறிதளவேனும் சிந்திக்கத் தவறிய இந்திய அரசு போன்றவை, இயற்கைப் பேரழிவு போன்றவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றன. இந்த அரசுகள் ஏகாதிபத்திய முதலாளிகளுடன் கூட்டுச்சேர்ந்து திட்டமிட்டு மக்களைச் சூழல் அகதிகளாக மாற்றிவருகிறது. இத்தகைய கையாளாகாத அரசு தான் திடீர் மழைப்பொழிவு, நீண்டகால தொடர்வறட்சி, கடலரிப்பு, மழைவெள்ளம் ஆகியவற்றுக்கு மக்களே காரணம் என தங்களின் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்புகின்றன.
கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தாலும், இந்த ஆண்டு கடுமையான சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயலினாலும் ஏற்பட்ட பாதிப்புகளால், சூழல் அகதிகளாக மாற்றப்பட்ட மக்களிடம், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டுவர அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டோமானால், 'ஏகாதிபத்திய முதலாளிகளின் நலனுக்காக சூழல்அகதியாக மாற்றப்படுகிறோமா' என்பதற்கான விடை கிடைக்கும்.
- உமா கார்க்கி
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!
- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்
- அணுத் தீமையற்ற தமிழக நாள் - டிசம்பர் 21, 2013
- மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?
- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்
- கொல்லத் துளை(டி)க்கும் அரசு
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.