அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஓர் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 ஆயிரம் டன் பாதரசம் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் இன்று பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பாதரசம் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. ஆனால் பாதரசம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச் சூழலில் மட்டுமல்ல, உடல் நலனிலும் தலைமுறை தலைமுறையாய் தொடர்பவை ஆகும் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.
நீர்ம நிலையில் உள்ள ஒரே கன உலோகம் பாதரசம் ஆகும். பாதரசம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. இது பளுமானி, அழுத்தமானி, தெர்மாமீட்டர் ஆகியவற்றால் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி மருந்துகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பல்புகள் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
பாதரசம் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் குளோரைடு கரைசலுடன் பொட்டாசியம் அயோடைடை சேர்க்க மெர்க்குரிக் அயோடைடு உருவாகின்றன.
பாதரசம் புற ஊதாக்கதிரின் மூலமாக செயல்படுகின்றது. பாதரச ஆவி விளக்கின் குமிழில் உள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீல நிற ஓளியைத் தருகின்றது. இந்த விளக்கு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றது. மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் பாதரசம் விஷத்தன்மை மிக்கது. பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன.
பாதரசம் போன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் நன்மையும் தீமையையும் கொண்டுள்ளன என்பதில் விஞ்ஞான உலகம் குழம்பிப் போய் உள்ளது.
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
அரும்பொருள் காட்சியகத்திற்குள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு நுழைந்ததும் அழகிய இளவயது ஜப்பான் பெண் வந்து "நான் உதவட்டுமா? நான் இந்த மியூசியத்தின் வழிகாட்டி" என்றாள்.
அவளைக் கவனிக்கும்போது பேசுகிறாள். கவனிக்காமல் இருந்தாலும், முகத்தை திரும்பிக் கொண்டாலும் பேச்சை நிறுத்திவிடுகிறாள். குறும்புத்தனமாக யாராவது அவளைத் தொட்டுவிட்டால் முகம் சுளிக்கிறாள்.
இவள் பெயர் ஈவ்-1 (Eve-1). கொரியா ரோபாடாலஜிஸ்டுகள் தயாரித்துள்ள பெண் ரோபாட். மனித தலைமுடி, சருமம், நேர்த்தியான உடை... சட்டென்று யாருக்கும் அது எந்திரம் என்பது தெரியாது. முகத்தில் 15 வகையான பாவங்களை இவள் வெளிப்படுத்துகிறாள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இவளை வீட்டுக்கு வாங்கிச்செல்லலாம்.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நிலத்தில் வாழும் மரங்களின் திசுக்களிலும் நானோ பிளாஸ்டிக்குகள் கலந்துள்ளன என்று சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள் கூறுகின்றன. மரங்களின் வேர்களும், வேர்தூவிகளும் நானோ பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சி வைத்திருப்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால் மரங்களின் அடிப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுத்துகள்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடல்கள், துருவப்பகுதிகள் முதல் எவரெஸ்ட் மலைச்சிகரம், வளிமண்டலத்தின் ட்ரோப்போஸ்பியர் வரை பூமியில் இன்று நுண் மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் பரவியுள்ளன.
இப்போது மரங்களின் திசுக்களில் நானோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் செய்தி என்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆம்ஹெஸ்ட் (Amherst) ஸ்டாக்பிரிட்ஜ் (Stockbridge) விவசாயப் பள்ளி (UMASS) சூழல் விஞ்ஞானி பௌஷன் ஷிங் (Paoshan Xing) மற்றும் ஷாண்டாங் (Shandong) பல்கலைக்கழக ஆய்வுக்குழு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேறுபட்ட சூழ்நிலையில் நானோ பிளாஸ்டிக்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி இன்னும் தெளிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. குறிப்பாய் இவை விவசாய நிலங்கள் மற்றும் மண் பரப்புகளில் செயல்படும் விதம் பற்றி அதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஷிங் தலைமையிலான சீன ஆய்வுக் குழுவினர் கருதுகின்றனர்.
இதுவரை தாவரங்கள் நானோ பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சி எடுப்பது பற்றிய ஆய்வுகள் எவையும் தீவிரமாக நடைபெறவில்லை.
நிலத்தில் இருக்கும் பொருட்களின் பண்புகளுக்கு ஏற்றவாறு பிளாஸ்டிக் துகள்கள் தாவரங்களில் காணப்படுகின்றன. இவ்வாறு தாவரங்கள் பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சுவது உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
பொதுவாக ஆய்வகங்களில் ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் அரபிடாப்சிஸ் தல்யானா (Arabidopsis Thaliana) என்ற தாவரத்தில் நேர் மின்சுமை மற்றும் எதிர் மின்சுமை நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கட்டுப்பாடற்ற வகையில் உலகளாவிய பிளாஸ்டிக்குகளின் பயன்பாடு, ஒவ்வொரு ஆண்டும் பூமியில் இவை கோடிக்கணக்கில் கழிவுகளாக உருவாகக் காரணமாகிறது.
ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தாவர பரிசோதனைகளில், தாவரங்கள் நானோ பிளாஸ்டிக்குகளை உறிஞ்சி அவற்றைச் தன் திசுக்கள் மற்றும் மூலக்கூறு நிலைகளில் சேகரிப்பது நவீன நுண்ணோக்கி மற்றும் மரபணு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று ஷிங் கூறுகிறார். நானோ துகள்களைத் தாவரங்கள் வேர் முதல் தளிர்கள் வரை உறிஞ்சுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கட்டுரை “இயற்கை - நானோ தொழில்நுட்பம்” (Nature Nanotechnology) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. நானோ பிளாஸ்டிக் துகள்கள் புரதம் அல்லது வைரைஸ் போல மிக நுண்ணியவை. வானிலை மற்றும் சிதைவு இத்துகள்களின் பண்புகளை மாற்றமடையச் செய்கிறது.
இதனால் இயற்கையில் காணப்படும் நுண் துகள்கள் (environmental particles) ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் தூய நிலை பாலிஸ்டைரீன் (pristine polystyrene) நானோ பிளாஸ்டிக் துகள்களில் இருந்து வேறுபட்டவை என்று ஷிங் கூறுகிறார். இதனால் ஆய்வகப் பரிசோதனைகளின்போது இவை நேர் அல்லது எதிர் மின்னேற்றம் செய்யப்படுகின்றன.
சீனாவில் ஷாண்டங் பல்கலைக்கழகத்தில் ஷையன் ஜெங் யுயென் (Xian-Zheng Yuan) மற்றும் ஷு ஷ்வாங் வெங் (Shu-Zhuang Wang) ஆகியோர் தலைமையில் பல விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்விற்காக அரபிடாப்சிஸ் தாவரங்கள் வேறுபட்ட மின்சுமைகள் உடைய, ஒளிர்தன்மை உடைய நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்பட்ட மண்ணில் வளர்க்கப்பட்டன. சோதனைகளுக்கு முன்னும் பின்னும் தாவரங்களின் எடை, உயரம், குளோரோபில் எனப்படும் பச்சையத்தின் அளவு மற்றும் வேர் வளர்ச்சி ஆகியவை ஆராயப்பட்டன.
ஏழு வாரங்களுக்குப் பிறகு நானோ பிளாஸ்டிக்குகள் கலந்த மண்ணில் வளர்ந்த தாவரங்களின் தாவரத்தன்மையின் நிறை (plant’s biomass) மற்றும் தாவரங்களின் உயரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. நானோ துகள்கள் தாவர நிறையைப் பாதிக்கிறது. அவற்றின் உயரம் குறைவதுடன் வேர்கள் குட்டையாகின்றன. தாவரத்தின் நிறை குறையும்போது அது அதன் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. இதனால் தாவரங்களில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துகள் பெருமளவில் குறையும்.
நேர்மின் சுமையுடைய பிளாஸ்டிக் துகள்கள் அதிக தீங்கு தருபவை. இதனால் இவற்றைத் தாவரங்கள் அதிகமாக உறிஞ்சி எடுத்துக்கொள்ளவில்லை. அவை ஏன் இவ்வாறு செய்கின்றன என்பது பற்றித் தெரியவில்லை என்று ஷிங் கூறுகிறார். நேர் மின்சுமை துகள்கள் நீர், ஊட்டச்சத்துகள் மற்றும் வேருடன் அதிக வினைபுரியும் தன்மையுடையவை.
மேலும் இத்துகள்கள் வேறுபட்ட மரபணு வெளிப்பாடுகள் (gene expressions) ஏற்படத் தூண்டுதலாக அமைகின்றன. செல்லில் உள்ள ஒரு மரபணுவில் இருந்து புரதம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும்போது அதனுள் நிகழும் தகவல் பரிமாற்றமே மரபணு வெளிப்பாடு எனப்படுகிறது. இது குறித்து பெருமளவில் பயிரிடப்படும் பயிர்களில் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர்.
வயல்வெளிச் சூழலில் இது எந்த அளவிற்கு உணவு விளைச்சல் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பது இப்போது தெரியவில்லை. சிறிய கன்றுகளிலும் நானோ துகள்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராயப்பட்டது. 10 நாட்களுக்குப் பிறகு செய்யப்பட்ட ஆய்வில், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவற்றைக் காட்டிலும் இந்த கன்றுகளின் வளர்ச்சி நானோ துகள்களால் தடுக்கப்பட்டது தெரியவந்தது.
வேர் பாதிப்பை ஆராய விஞ்ஞானிகள் 'ஆர்.என்.ஏ மரபணு வரிசை டிரான்ஸ்க்ரிப்டாமிக் பகுப்பாய்வுக் கருவியை' (RNA-seq transcriptomic analyser) பயன்படுத்தினர். இதன் மூலம் வேர், தளிர்களில் இருக்கும் மூலக்கூறுகளின் நிலையை அறியலாம். முடிவுகள் 'பாலிமரைஸ் தொடர்வினை பரிசோதனை' (Quantitative PCR) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இத்தாவரம் 200 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் துகள்களையும் உறிஞ்சுவது கண்டறியப்பட்டது.
நிலவாழ் யானை, புலி, ஆடு, மாடு போன்றவற்றின் உணவுப் பாதையில் நுழைந்த பிளாஸ்டிக்குகள் அவற்றின் உயிரைப் பறிக்கின்றன. கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை உயிரினங்களின் உயிருக்கே உலை வைக்கின்றன. சமீபத்தில் மனித ரத்தத்திலும் நுண் பிளாஸ்டிக்குகள் நுழைந்த செய்தி வெளிவந்தது. பிளாஸ்டிக் துகள்கள் கலந்த மண், காற்று, நீர் மூலமே மனிதன் பாதிக்கப்படுகிறான் என்று கருதியிருந்த சமயத்தில் இது பேரதிர்ச்சி தரும் செய்தி.
இப்படியே போனால் தூய நீரையும் சத்துக்களையும் பயன்படுத்தி வளர்ந்து பலன் தர வேண்டிய தாவரங்கள், நாம் விவேகமில்லாமல் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகள் சிதைந்து உண்டாகும் நுண் நானோ துகள்களை உறிஞ்சி, அவை கலந்த காய்கனிகளையே தரும். இந்நிலை தொடர்ந்தால் விரைவில் மனிதன் பிளாஸ்டிக் துகள்கள் கலந்த உணவையே சாப்பிடும் நிலைக்கு ஆளாவான் என்பது நிச்சயம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தெற்காசிய நகரங்களில் காற்றுமாசு, நூறாயிரக்கணக்கானோரின் முன்கூட்டிய மரணங்களுக்கு (Pre-mature deaths) காரணமாகிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. நாளுக்குநாள் அதிகரிக்கும் காற்றுமாசு, கடந்த 14 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துவரும் வெப்பமண்டல நாடுகளின் நகரங்களில் 1,80,000 பேர் அகால மரணமடையக் காரணமாக இருந்தது என்று பெர்மிங்ஹாம் மற்றும் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் காற்றுமாசினால் 2.4 மில்லியன் மனிதர்கள் முற்றிலும் தவிர்க்கக்கூடிய அகால மரணங்களுக்கு இரையாகின்றனர். மாசுப்பொருட்கள் திட, திரவத் துளிகள் அல்லது வாயு நிலையில் காணப்படுகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் உடனடியாகத் தெற்காசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆண்டுதோறும் இந்தியாவில் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, சூரத், புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் காற்றுமாசினால் நூறாயிரக்கணக்கானோர் முன்கூட்டியே இறக்கின்றனர். தரவுகளில் இருக்கும் பழுதுகளை அகற்றி, உலகளவில் 46 பெருநகரங்களில் ஆய்வுக்குழுவினர் மாசின் தரத்தை ஆராய்ந்தனர். ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய முகமையின் செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளிலிருந்து 2005 முதல் 2018 வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கனக்ரி (Conakry), தாரெஸ் சலாம், இபாடன் (Ibadan), கடுனா (Kaduna), கம்பாலா, கானோ (Kano), கார்டூம் (Khartoum), கிகாலி (Kigali), கின்ஷாசா (Kinshasa), லாகோஸ், லிலாங்வே (Lilongwe), லுவாண்டா (Luanda), லுபும்பாஷி (Lubumbashi), லுசாக்கா, மொம்பாசா (Mombasa), என்ஜமினா (Ndjamena), நைரோபி, நியாமி (Niamey), வாகாதூகு (Ouagadougou) ஆகிய ஆப்பிரிக்க நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சூரத், புனே ஆகிய இந்திய நகரங்களுடன், வங்கதேசத்தில் சிட்டகாங், டாக்கா மற்றும் பாகிஸ்தானில் கராச்சி நகரங்களில் காற்றுமாசு மனிதர்களின் உயிர் பறிக்கும் அளவிற்குப் பீதியூட்டும் வகையில் உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா, மணிலா, நாம் பென் மற்றும் யாங்கூன் (Yangon); மத்திய கிழக்கில் ரியாத், சனா நகரங்கள் மாசினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
'சயன்ஸ் அட்வான்சஸ்' (Science Advances) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, காற்றின் தரம் குறைவதால் இந்நகரங்களில் வாழ்பவர்கள் அதிக நச்சுக்காற்றிற்கு ஆளாகி அகால மரணம் அடைகின்றனர் என்று கூறுகிறது. இந்த இறப்புகள் கிராமப்புறங்களை விட நகரங்களிலேயே அதிகம் சம்பவிக்கின்றன. ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் அதிக அளவில் ஆபத்தான நேரடி மாசிற்கு ஆளாகின்றனர்.
இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கிறது. 14% நைட்ரஜன் டை ஆக்சைடு, 8% பி.எம் 2.5 (PM 2.5 - Particulate matter) நுண்துகள்கள், 12% அமோனியா, 11% அதிவிரைவு வினைபுரியும் தன்மையுடைய ஆவியாகும் வேதிப்பொருட்கள் போன்றவை இப்பகுதிகளில் ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகரிக்கும் மாசிற்கு, பெருகும் தொழிற்சாலைகள் வெளிவிடும் ரசாயனப் பொருட்கள், பெருகி வரும் போக்குவரத்து, கரி மற்றும் விறகு எரித்தல் மற்றும் கழிவுகளை எரித்தல் ஆகியவை காரணமாகின்றன.
முன்பு வேளாண் கழிவுகளை எரித்தல், காடு அழிப்பு போன்றவை காற்றுமாசிற்கு முக்கியக் காரணமாக இருந்தன என்றாலும், இப்போது வெப்பமண்டல நாடுகளின் நகரங்களில் பெருகிவரும் போக்குவரத்து அகால மரணங்களுக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது என்று கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானியும், பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு விஞ்ஞானியும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான கார்ன் வோரா (Karn Vohra) கூறுகிறார்.
தெற்காசிய நகரங்களில் காற்று மாசிற்கான முக்கியக் காரணம் போக்குவரத்தால் உருவாகும் நச்சுப்புகை மற்றும் அதில் கலந்துள்ள பொருட்களே. உலகின் மற்ற பல நகரங்களில் பத்தாண்டுகளில் அதிகரிக்கும் காற்றுமாசு, இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நிகழ்கிறது. இந்நகரங்களில் ஆய்வுக்காலத்தில் மக்கள் தொகை 1.5 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 46 நகரங்களில், 40 நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடும், 33 நகரங்களில் பி.எம் 2.5 நுண்துகள்களும் அதிகரித்துள்ளன. தெற்காசிய நகரங்களில், குறிப்பாக டாக்காவில் 24,000 பேர், இந்திய நகரங்களில் 1,00,000 பேர் காற்றுமாசினால் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர்.
ஆப்பிரிக்க நகரங்களில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பணிகள் காற்றுமாசினால் நிகழும் மரணங்களைக் குறைக்க உதவியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாகக் கருதப்பட்டிருந்தது போல இல்லாமல், விரைவான தொழிற்துறை வளர்ச்சியால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை உணர்ந்ததால் இப்பகுதியில் இன்று காற்றுமாசிற்கு அது காரணமாக அமையவில்லை என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும், கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானியுமான இலாய்ஸ் மேரைஸ் (Eloise Marais) கூறுகிறார்.
மாறிவரும் உலகச் சூழ்நிலையில் காற்றுமாசிற்கான காரணங்களும் மாறுவதையே இது எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வுகள் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக முனைவர் திட்ட உதவித்தொகை நிதியுதவியுடன் நடத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் வெப்பமண்டல நகரங்களில் காற்றுமாசைக் குறைக்க நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உலகில் மூன்றில் ஒருவரை பாதிக்கும் புவி வெப்ப உயர்வு
- ஐம்பதாண்டில் அழியப் போகும் இந்தியப் பெருங்கடல் பவளப் பாறைகள்
- ஒளிச்சேர்க்கை செய்யாமல் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்
- இனி பேசிப் பயன் இல்லை
- "நம்மைக் கொல்ல நாமே காசு கொடுக்கிறோம்!!"
- மனிதனின் வயதை அதிகரிக்கும் அதி தீவிர வெப்பநிலை
- காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள்
- கலவர பூமியில் இருந்து மீண்டு வந்த ஒரு காட்டின் கதை
- உயிரி பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.