அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இரண்டு போராளிகளை சந்திப்போம், வாருங்கள்!
பிரேசில் பிலேம் (Belém ) நகரில் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் (காப்30) ஒன்று கூடி பேசி வருகின்றன. இந்நிலையில் மாநாட்டிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சாமான்ய மக்களில் இருவரின் சூழல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புள்ள வாழ்வு நம்மை அசர வைக்கிறது. அவர்கள் கூறும் கருத்துகளை அறிந்தால் புவி வெப்ப உயர்வில் இருந்து பூமி தப்பிப் பிழைக்கும், நலம் பெறும் என்ற நம்பிக்கை நமக்கும் ஏற்படும்.
காப் மாநாடுகளை விமரிசனம் செய்வது சுலபம். ஆனால் அந்தக் கூட்டங்களில் உள்ள ஓர் அதிசய அம்சத்தை நாம் அங்கீகரிப்பது இல்லை. பூமியின் பெரும்பாலான நாடுகளில் இருந்தும் மனிதநேயம் மிகுந்த சாதாரண மக்கள் இத்தகைய கூட்டங்களுக்கு வருகை தருகின்றனர். அவர்களின் முக்கிய குறிக்கோள் காலநிலை கெடுதிகளில் இருந்து பூமியைக் காப்பது என்பது மட்டுமே. அவர்களில் பலரும் அறிவாளிகள், காலநிலைக்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடுபவர்கள். இவர்கள் போன்றோரை அதிகமாக சந்தித்தால் வெப்பமயமாவதில் இருந்து புவியை நம்மால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் ஏற்படும்.
பனாமாவில் இருந்து தீப்பொறி கக்கும் செயல்களுடன் அந்த மங்கலான மாநாட்டுக் கூடத்தை தன் கூர்மையான பார்வையால் பிரகாசிக்கச் செய்த மாண்டரி கோமெஸ் (Monterrey-Gómez ) மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் போராளி ஆயிஷா சிடிகா (Ayisha Siddiqa ) ஆகியோரே பிலேம் மாநாட்டிற்கு வந்த அந்த இருவர்.
கோமெஸ் கூறும் உண்மைகள்
ஐ நா காலநிலை மாநாடுகளின் பசுமைக் குடில் வாயு உமிழ்வை நிலைப்படுத்துவது என்ற குறிக்கோளில் இருந்து நாம் தோல்வியடைகிறோம். ஆனால் கடந்த 33 ஆண்டுகளாக உமிழ்வை வெட்டிக் குறைப்பதற்குப் பதில் அதை இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக்கியுள்ளோம். உயிர்ப் பன்மயத் தன்மையைப் பராமரித்து மேம்படுத்துவதற்குப் பதில் வாழும் எல்லா உயிரினங்களையும் கொல்கிறோம். இது குறித்து இனி அதிக அறிக்கைகள், உரையாடல்கள், வட்டமேசைகள் தேவையில்லை, செயல்களே தேவை. புதைபடிவ எரிபொருட்கள் புவியை வெப்பமாக்குகின்றன. இதைக் குறைக்க ஒரே வழி அவற்றை ஒழிப்பது மட்டுமே என்று கூறும் அறிவியல் தெளிவாக இருக்கிறது.
காலநிலை, உயிர் பன்மயத் தன்மை, கடல், பிளாஸ்டிக் மாசு இவை எல்லாம் ஒரே பிரச்சனைகளே. இவை எல்லாம் முதலாளித்துவ பொருளாதாரம் பெற்ற குழந்தைகள். அது தடுத்து நிறுத்த இயலாத உற்பத்தியை நோக்கிச் செல்கிறது. அதன் பாதையில் உள்ள எல்லாவற்றையும் மாசுபடுத்தி மனிதனையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. நம்மைக் கொல்வதற்கு நாமே குற்றவாளிகளுக்கு காசு கொடுக்கிறோம். புதைபடிவ எரிபொருட்களுக்கு மான்ய உதவிகளை வழங்குகிறோம்.
அதன் தயாரிப்புகள் அனைத்தும் நம்மை நிதானமாகவோ வேகமாகவோ கொல்கிறது என்று தெரிந்தே இவ்வாறு செய்கிறோம். காலநிலை மாநாடுகள் உறுதியான நடவடிக்கைகளுடன் முடிய வேண்டும். பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் முட்டுக்கட்டைகளால் காலநிலை மாநாடுகளில் புதைபடிவ எரிபொருட்கள் என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள நமக்கு 28 ஆண்டுகளாகி விட்டன. காடுகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் எதற்காக நாம் வாழ்கிறோம்?
மிகச் சிறந்த பேச்சாளரான கோமெஸின் கருத்துகள் இவை.
ஆயிஷா என்ற அதிசயப் பெண்மணி
26 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டம் பயிலும் மாணவர். ஐநா பொதுச் செயலாளருக்கு ஆலோசகர். பன்னாட்டு ஆற்றல் முகமையின் கமிஷனர். வருங்காலத் தலைமுறைகளின் தீர்ப்பாயம் என்ற அமைப்பின் தோற்றுநர்.
சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் நிலையான காலநிலை ஒரு மனித உரிமை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. சூழல் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் பூமியில் இன்னும் பிறக்காதவர்களே. அதனால் அவர்களின் உரிமைகள் எவ்வாறு காக்கப்படும்? இது பற்றி பன்னாட்டு அரசுகள் சிறிதேனும் கற்பனை செய்து பார்க்க வேண்டும். வருங்காலத் தலைமுறைகளின் உரிமைகள் பற்றி பேசத் தொடங்க வேண்டும். அமேசான், நியூசிலாந்தில் உள்ள இனயட்டரோவா (in Aotearoa) ஆகிய இடங்களில் ஆறுகளுக்கு தனிமனித உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனால் இவை நீதிக்காகப் போராட நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும்.
இவை ஆயிஷாவின் கருத்துகள். ஆயிஷா ஆரோக்கியமான சூழல், மனித உரிமைகளில் காலநிலை மாற்றம் எவ்வாறு பறித்துச் செல்கிறது என்பதைப் பற்றிய விவரங்களை உலகம் முழுவதும் இருந்து சேகரித்து வருகிறார். இந்த கருத்துகள் வருங்காலத் தலைமுறைகளுக்கான உரிமைகள் குறித்த பன்னாட்டு அறிக்கையாக தயாரிக்கப்படும். புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விடுதலை பெற்ற உலகமாக வருங்கால தலைமுறைகளின் உலகம் இருக்க வேண்டும்.
சட்டப்பூர்வமான உரிமைகள் பெற்ற ஒரு இடமாக பூமி மாறும்போது கார்ப்பரேட்டுகளின் பிடியில் இருந்து உலகம் விடுபடும். பாகிஸ்தானில் வாழும் ஆதிவாசி மக்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் இப்போது உள்ளதைவிட அதிக துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆயிஷாவின் இந்த கருத்துகள் மனிதனாக இருக்கும் எவர் ஒருவரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல “பிரபஞ்சத்தின் நீண்ட வில் நீதியை நோக்கி வளையும்”. இந்த நம்பிக்கை இந்த இரு இளைஞர்களால் நமக்கு வலுப்படுகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வெப்ப அலை வீச்சுகள் மனிதர்களை முன் கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கிறது. அதிக நாட்கள் நீடிக்கும் உயர் வெப்பநிலை மில்லியன் கணக்கான மக்களிடம் நீண்ட நாள் ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உயர் வெப்பத்திற்கு அடிக்கடி ஆளாகும் மக்களிடம் இந்த பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது புகை பிடித்தல், மது அருந்துதல், குறைந்த அளவு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் உடல் நலத்திற்கு ஏற்படும் சேதங்களுடன் ஒப்பிடக்கூடியது.
வெய்யிலில் இருந்தால் ஆயுள் குறையும்
காலநிலை மாற்றத்தால் அதி உயர் வெப்பநிலை இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. அதி தீவிர வெப்பத்தின் நீட்டிப்பு மற்றும் அதன் தீவிரம், நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தாக்கம் போன்றவை பற்றிய புரிதலில் இந்த ஆய்வு முன் உதாரணமான ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. வெப்ப அலையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இங்கிலாந்தில் ஜூன் 2025ல் நிலவிய உயர் வெப்பத்தால் 600 பேர் முன்கூட்டியே உயிரிழந்தனர். உயர் வெப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை விரிவாக மதிப்பிட்டு பகுப்பாய்வு செய்த முதல் ஆய்வு இதுவே. ஆய்வாளர்கள் தைவானில் கடந்த 15 ஆண்டுகளில் 25,000 பேரின் வெப்ப அலையால் உண்டான பாதிப்புகளை அவர்களின் உயிரியல் வயதுடன் (Biological age) ஒப்பிட்டு ஆராய்ந்தனர். உயிரியல் வயது என்பது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காட்டும் ஒரு அடையாளம்.
இது உடலில் உள்ள செல்கள், திசுக்களுக்கு ஏற்படும் முதுமையைக் குறிக்கிறது. நான்கு நாட்கள் உயர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டோரின் உயிரியல் வயதில் ஒன்பது நாட்கள் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கிறது. வெளியில் அதிக நேரத்தை செலவிடும் உடல் உழைப்பவர்கள் இதனால் வலுவாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் உயிரியல் வயதில் 33 நாட்கள் இழப்பு ஏற்பட்டது.
ஒருவரின் உயிரியல் வயது குறையும்போது அவர் முன்கூட்டியே முதுமையடைகிறார் என்று பொருள். இந்த இழப்பு குறைவானது போலத் தோன்றினாலும் இந்த நிலை இரண்டாண்டுகள் வரை நீடிக்கிறது.
இதனால் வாழ்நாள் முழுவதும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். உலக மக்களில் இதனால் உருவாகும் பாதிப்பு மிகப் பெரியது. ஏனென்றால் உலகில் ஒவ்வொருவரும் உயர் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
உயிரியல் வயது அதிகமாவதால் உயிரிழப்புகளும் அதிகமாகின்றன. “இந்நிலை மேலும் பல பத்தாண்டுகள் நீடித்தால் இதனால் ஏற்படும் தாக்கம் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளதை விட மிக அதிகமாக இருக்கும்” என்று ஆய்வுக் குழுவின் தலைவரும் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் க்யூயி ஹியோ (Dr Cui Guo) கூறுகிறார். வெப்ப அலை அடிக்கடி ஏற்படுகின்றன, நீண்ட நாட்கள் நீடிக்கின்றன. இதனால் வருங்காலத்தில் ஆரோக்கியத்தில் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படும்.
குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் உயர் வெப்பம்
காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமான புதை படிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாடு 2024ல் சாதனையளவை எட்டியது. “நம்மில் பலரும் வெப்ப அலை பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறோம். அதனால் ஏற்படும் பாதிப்பை சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கவலைப்பட பெரிதாக எதுவுமில்லை என்று நினைக்கிறோம். ஆனால் இந்த ஆய்வு உயர் வெப்பம் நாம் முதுமையடையும் வேகத்தை அதிகரிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாழ்வின் ஆரம்ப நிலையில் உயர் வெப்பத்திற்கு ஆளாவதால் குழந்தைகளின் மூளையில் வெள்ளை நிறப் பொருளின் (white matter) வளர்ச்சியை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்று 2024ல் நடந்த ஆய்வு கூறியது. இந்த புதிய ஆய்வு வெப்ப உயர்வால் வயது வந்தோரின் முதுமை துரிதமடைகிறது என்று எடுத்துக் காட்டுகிறது. அதி தீவிர வெப்பத்தைப் பற்றிய நம் முந்தைய கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு முன் உதாரணமாக உள்ளது. இதனால் உருவாகும் ஆரோக்கிய பாதிப்பு வாழ்நாளில் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம். நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த பாதிப்புகள் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கலாம்” என்று ஆஸ்திரேலியா சிட்னி மாக்வெரி (Macquarie) பல்கலைக்கழக பேராசிரியர்பால் ஃபெக்ஸ் (Prof Paul Beggs) கூறுகிறார்.
நேச்சர் காலநிலை மாற்றம் (Nature Climate Change) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த கட்டுரையில் ஆய்வாளர்கள் ஆய்வில் பஞ்கேற்ற ஒவ்வொருவரின் உயிரியல் வயதைத் தீர்மானிக்க இரத்த அழுத்தம், வீக்கம், கொலஸ்ட்ரால் மற்றும் நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் உள்ளிட்ட பல தொடர் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை பயன்படுத்தி ஆராய்ந்தனர். பங்கேற்ற ஒவ்வொருவரின் உண்மையான வயதுடன் இந்த முடிவுகள் ஒப்பீடு செய்யப்பட்டது.
இந்த முடிவுகள் ஒருவரின் உண்மையான வயது, அதி தீவிர வெப்பநிலைக்கு உள்ளாவதற்கும் அவர் துரிதமாக வயதாவதற்கும் இடையில் இருக்கும் தொடர்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்தது. இதில் இருந்து அதி தீவிர வெப்பத்தால் பாதிக்கப்படுவோர் விரைவாக முதுமையடைவது தெரிய வந்தது. நீடிக்கும் உயர் வெப்பநிலை வயதாவதை ஏன் துரிதப்படுத்துகிறது என்று தெரியவில்லை. டிஎன்ஏவில் ஏற்படும் சேதம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
வெப்ப உயர்வை சமாளிக்க உதவும் வழிகள்
வெப்ப அலையால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறைந்து வருகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. நிழலான பகுதிகளில் அதிக நேரம் இருப்பது, வாய்ப்புள்ள இடங்களில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவது போன்ற உயர் வெப்பத்தை சமாளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மக்கள் எடுக்கின்றன என்பதை இது காட்டுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள்.
இவர்கள் சராசரியாக குறைந்த வயதுடையவர்கள். சாதாரண மக்களை விட அதிக கல்வியறிவு பெற்றவர்கள். முதியோர் மற்றும் நோயாளிகள் உயர் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளதை விட வெப்ப உயர்வால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பங்கேற்றவர்களின் உடல் எடை, புகை பிடிக்கும் பழக்கம், உடற்பயிற்சி செய்யும் பழக்கம் மற்றும் முன்கூட்டியே உள்ள சர்க்கரை நோய், புற்றுநோய், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குளிர்சாதன வசதியின் ஒட்டுமொத்த பயன்பாடு போன்றவையும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் வீட்டுக்கு வெளியில் செலவிடும் நேரம், வீட்டில் உள்ள குளிர்ச்சி, தனிநபர் குளிர்சாதன வசதி பயன் போன்றவை பற்றிய ஆய்வுடன் தொடர்புடைய முக்கியத் தரவுகள் கிடைக்கவில்லை.
அதனால் மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஆய்வின் முடிவுகள் வெளிப்புற வெப்பம் வயது வந்தோரிடம் முதுமையை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்த சமீபத்திய அமெரிக்க ஆய்வு முடிவுடன் ஒப்பிடக் கூடியது. கறுப்பின மக்கள் மற்றும் வறுமை உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடையில் உயர் வெப்பநிலை, அறிவாற்றல் குறைவுடன் தொடர்புடையது என்று 2023ல் வெளிவந்த மற்றொரு அமெரிக்க ஆய்வு கூறியது.
புவி வெப்ப உயர்விற்கு காரணமாக இருக்கும் நாம் மட்டுமே அதை குறைக்க முடியும். அதனால் இதுவே செயல்பட வேண்டிய சரியான நேரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இயற்கையுடனான வாழ்விற்கு திரும்புவோம்.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2025/aug/25/heatwaves-making-people-age-faster-study-suggests?
&
https://www.nytimes.com/2025/08/25/climate/heat-waves-aging.html
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நிசப்த கொலையாளி என்று அழைக்கப்படும் காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள், காற்று மாசு பற்றிய எண்ணத்தை மாற்றும். 1850 முதல் உலகில் இருந்த காற்றின் தரத்தை கண்களால் காண உதவும் இந்த புதிய முறை அரசுகளை மாசை குறைக்க உதவும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்கத் தூண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள காற்று மாசின் அளவில் ஏற்படும் வேறுபாடுகளை கண்களால் பார்த்து தெரிந்து கொள்ள இந்தக் கோடுகள் உதவும்.
பல நாடுகளிலும் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் உலக நகரங்கள் பலவற்றிலும் காற்று மாசு சமத்துவமற்ற நிலையில் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. உரிய செயல்கள் மூலம் சுத்தமான காற்றைப் பராமரிக்க முடியும் என்பதை சில அரசுகளின் நேர்மறை செயல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.
எட் ஹாஃப்க்கின்ஸ் (Ed Hawkins) அவர்களின் காலநிலைக் கோடுகள் கண்டுபிடிப்பால் உள்ளுணர்வு பெற்று உருவாக்கப்பட்ட இப்புதிய முறை 1850 முதல் இன்று வரை நிலவும் காற்றின் தரத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாசின் அளவு தனி செங்குத்துக் கோடின் வடிவத்தில் காட்டப்படுகிறது. நுண்துகள்களின் அளவைப் பொறுத்து கோடுகளுக்கு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவுகள்படி காற்றின் தரம் இருக்கும் இடங்களில் கோடுகள் வானின் நீல நிறத்தில் உள்ளன. மஞ்சள், பழுப்பு மற்றும் கறுப்பு நிறக் கோடுகள் மாசு அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் புகைமூட்டத்தைப் பிரதிபலிக்கும் 200 படங்களின் அடிப்படையில் இந்த நிறங்களின் பாணி அமைந்துள்ளது.
“கண்ணுக்குத் தெரியாத கொலையாளி என்னும் காற்று மாசை கண்ணுக்குத் தெரியும் வகையில் இந்த கோடுகள் நமக்கு அடையாளப்படுத்துகின்றன. இவற்றின் மூலம் பல பத்தாண்டுகளாக காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம். மாநகரங்களில் உள்ள காற்று மாசுக்கு ஏற்ப கோடுகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இணைய தளம் ஒன்று இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது” என்று திட்டத்தின் இணை இயக்குனரும் எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் கர்ஸ்ட்டி ஃப்ரிங்கல் (Dr Kirsty Pringle) கூறுகிறார்.
“இந்தக் கோடுகள் காற்று மாசு பற்றி நமக்கு எளிதில் புரிய வைக்கும். லண்டன் மற்றும் பீஜிங் நகருக்கான கோடுகள் பெருமளவிலான தர முன்னேற்றத்தை காட்டுகின்றன. சரியான நடவடிக்கை எடுத்தால் காற்றின் தரத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க முடியும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது” என்று லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழக ஆய்வாளரும் திட்டத்தின் மற்றொரு இணை இயக்குனருமான டாக்டர் ஜிம் மக்வேட் (Dr Jim McQuaid) கூறுகிறார். ஒரு நூற்றாண்டிற்கு மேல் லண்டன் நகரம் நிலக்கரி புகையால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது வானம் பட்டானியின் கறுப்பு நிற சூப் போல மாறியது.
1952ல் ஒரு வார காலம் நீண்டு நின்ற லண்டன் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. 12,000 பேர் உயிரிழந்தனர். இதனால் நடவடிக்கை எடுக்கத் தயங்கிக் கொண்டிருந்த அரசு கடைசியில் காற்று மாசைக் குறைக்க செயலில் இறங்கியது. தொடர்ந்து தூய காற்றுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில் வெப்பமூட்ட பயன்படும் எண்ணெய் (heating oil) மற்றும் பிறகு புதைபடிவ எரிபொருள் வாயு பயன்பாட்டின் மூலம் நிலக்கரி பயன்பாடு அகற்றப்பட்டது.
2008 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு வரை பீஜிங் நகரின் காற்று மாசு கவனிக்கப்படாமலிருந்தது. அதுவரை சீனாவில் காற்று மாசால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மில்லியன் பேர் உயிரிழந்தனர். ஆனால் அதற்குப் பின் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்து நெரிசலால் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது; பெரும் பயன் ஏற்பட்டது.
காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் விரைவான நகர மயமாக்குதல் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி நடக்கும் ஜகார்த்தா மற்றும் இஸ்லாமாபாத்தில் இப்போதும் காற்று மாசு மோசமான நிலையில் உள்ளது. இந்த இரு இடங்களும் உலகின் இன்றுள்ள வளரும் நாடுகளின் நிலையைப் பிரதிபலிக்கின்றன.
காற்று மாசு பற்றிய செயற்கைக்கோள் உற்றுநோக்கல் தரவு விவரங்கள் முதலில் 1998ல் கிடைத்தன. இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இங்கிலாந்து வானிலை ஆய்வு நிறுவனத்தின் உலகளாவிய காலநிலை மாதிரிகளில் இருந்து கோடுகளை உருவாக்குவதற்கான இறுதி விவரங்கள் திரட்டப்பட்டன. எரிபொருள் மற்றும் ஆற்றல் பயன்பாடு குறித்த புள்ளி விவரங்களைக் கணித்து 1850களில் நிலவிய காற்று மாசின் அளவு வரையறுக்கப்பட்டது. 2.5 அளவுள்ள நுண் துகள்கள் பற்றிய மிகச் சில வரலாற்று விவரங்கள் மட்டுமே கிடைத்தன.
கி பி 2000ம் ஆண்டிற்கு முந்தைய விவரங்கள் கணினி மாதிரிகள், செயற்கைக்கோள் உற்றுநோக்கல்கள் மூலம் பெறப்பட்டன. 2020-2021 ஆண்டுகளுக்கான மிக சமீபத்திய 2.5 அளவு நுண்துகள் காற்று மாசு பற்றிய விவரங்கள் வான் டாங்கிலாரட் அட் (Van Donkelaar et at (2021, V5 0.1 degree resolution) என்ற தளத்தில் இருந்து பெறப்பட்டன. இவை தரை நிலை மற்றும் செயற்கைக்கோள் உற்றுநோக்கல் விவரங்களை இணைத்து உருவாக்கப்பட்டவை.
உலகளாவிய மாதிரிகளின் ஆய்வு
உலகளாவிய மாதிரிகள் தொடர்ந்து மதிப்பிடப்படுகின்றன; மேம்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நகரத்தின் 2000-2022 ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளின் சராசரி மதிப்பிடப்பட்டது. அந்த நகரத்தின் காற்று மாசு அடர்த்தி மாதிரிகளின் சராசரி கணக்கிடப்பட்டது. இவற்றுக்கு இடையிலான விகிதத்தின் அடிப்படையில் மாசின் அளவு மதிப்பிடப்பட்டது.
இந்த கோடுகளில் காற்று மாசின் அளவுகளுக்கான கணிப்புகள் ஒவ்வொரு டிகிரி தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நகரத்திற்குள் நிலவும் மாசின் அளவை இந்தக் கோடுகள் முழுமையாகக் காட்டாது. என்றாலும் இவை நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் மாசில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் காட்டும்.
பூமியில் மக்களில் 99% பேர் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள தூய காற்றை இன்னும் சுவாசிக்க முடியவில்லை. ஐரோப்பாவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஆண்டுதோறும் காற்று மாசால் 400,000 பேர் அகால மரணமடைகின்றனர். இங்கிலாந்தில் இந்த அளவு 29,000 மில்லியனுக்கும் 43,000 மில்லியனுக்கும் இடையில் உள்ளது.
“சரியான விவரங்கள் கிடைக்கப் பெறும்படி செய்தால் காற்று மாசு என்ற மிகப் பெரிய உலகப் பிரச்சனையை சமாளிக்க முடியும். பல உலக நகரங்கள் இப்போதும் அசுத்தமான காற்றால் அவதிப்படுகின்றன.” என்று ரீடிங் (Reading) பல்கலைக்கழக ஆய்வாளரும் இந்தக் கோடுகளை உருவாக்கியவருமான பேராசிரியர் எட் ஹாஃப்க்கின்ஸ் கூறுகிறார்.
ஆட்சியாளர்களுக்கு போதிய அரசியல் உறுதி இருந்தால் காற்று மாசு என்னும் மிகப் பெரிய உலகளாவிய பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒரு காலத்தில் செழுமையான, வனவிலங்குகள் வாழ்ந்த இடம். போர் வெறியில் அனைத்தும் அழிந்தபோது அது இயற்கை மற்றும் சமூக வாழ்வின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாடு முழுவதும் ஒன்று சேர்ந்து அதனால் உண்டான துயரத்தை அனுபவித்தது. பத்து இலட்சம் பேர் கூட்டக் கொலை செய்யப்பட்டனர். ஐம்பது இலட்சம் பேர் அகதிகளாயினர், இடம்பெயர்ந்தனர். மனிதர்களுடன் சேர்ந்து இயற்கை வளங்கள், வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டன.
1977 முதல் 1992 வரை நீண்டு நின்ற மொசாம்பிக்கின் உள் நாட்டு கலவரம் ஒரு மக்கள் கூட்டத்தின் மீது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. மொசாம்பிக் கொரொங்கோசா (Corongosa) தேசியப் பூங்கா இதற்கு வரலாறு கூறும் சான்று. என்றாலும் இந்த பெரும் துயரத்தில் இருந்து மக்கள், பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதில்லை என்ற பாடத்தைக் கற்றனர்.
கலவர பூமியாக இருந்த ஒரு பூங்கா மீண்டு வந்த கதைதான் இது! 1975ல் போர்ச்சுகீசியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து அங்கு உள் நாட்டுக் கலவரம் வெடித்தது. இது ஆப்பிரிக்காவின் மிக மோசமான இரத்தக்களறி என்று வர்ணிக்கப்படுகிறது. மனிதன் உட்பட சகலமும் இதன் துயரங்களை அனுபவிக்க நேரிட்டடு. இது 1977 முதல் 1992 வரை பதினைந்து ஆண்டுகள் நீண்டது. அந்த காலம் முழுவதும் இப்பூங்காவே யுத்த பூமியாகப் பயன்படுத்தப்பட்டது.
இது மனித உயிரிழப்புகள், பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. இலட்சக் கணக்கான ஆட்கள் உயிரிழந்ததுடன் அகதிகளாகவும் மாறினர். ஜோலியும் கூலியும் இல்லாத ஒரு சமூகமாக மொசாம்பிக் மக்கள் சமுதாயம் மாறியது. செழுமை மிகுந்த இடமாக இருந்த கொரொங்கோசா பூங்காவிற்குள் ஆட்கள் நுழைந்தனர்.
யானை, சிங்கம், சிறுத்தைப் புலி, நீர் யானை, கலை மான் போன்ற பாலூட்டி விலங்குகளின் வாழிடமாக இருந்த இந்த இடம் போர்க் காலத்தில் வேட்டை பூமியாக மாறியது. கலவரக் காரர்கள், அதை எதிர்கொள்ள வந்தவர்கள், பிரதேசவாசிகள் அனைவரும் பூங்காவிற்குள் நுழைந்தனர். இதன் விளைவு பெரும் அழிவு.
உணவு, பணத்தைக் கண்டுபிடிக்க ஒரு வழியாக பூங்காவின் இயற்கை வளங்கள் மாறின. பெரிய விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
மரங்களும் மற்ற இயற்கை வளங்களும் மனம் போன போக்கில் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு காலத்தில் வளமான இடமாக இருந்த பூங்கா தரிசு பூமியாக மாறியது. பூங்காவின் உட்புறம் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் நிறைந்தன. வாழிடங்கள் முழுமையாக அழிந்தது. வீடு கட்டுமானம், விறகுக்காக மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன. இது பூங்காவின் சூழல் மண்டலங்களை முற்றிலுமாக அழித்தது.
கிரெகரி காரும் போருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களும்
90% பெரிய விலங்குகள் போரின் இறுதி நாட்களில் இங்கிருந்து காணாமல் போயின. 2,500 யானைகள் 250 ஆகக் குறைந்தது. தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இது பூங்காவின் உயிர்ச் சூழலைப் பாதித்தது. வேட்டையாடி உண்ண விலங்குகள் கிடைக்காமல் போனதால் ஊண் உண்ணும் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இயல்பான சூழல் அழிந்து போனதால் வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்கள் சாதாரண நிகழ்வுகளாயின.
இதைத் தொடர்ந்து பூங்காவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் வலுப்பெற்றது. 2,000ம் ஆண்டிற்கு முன்பே அமெரிக்க சமூக செயல்பாட்டாளரான க்ரெகரி சி கார் அவர்கள் (Gregory C Carr) தலைவராக இருந்த அறக்கட்டளை மொசாம்பிக் அரசுடன் இணைந்து பூங்காவின் இயற்கைச் சூழலை மீட்பது, நீடித்த நிலையான வளர்ச்சியை நடைமுறைப்படுத்துவது, பிரதேச மக்களின் பங்களிப்பு போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு பூங்காவின் மீட்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
அமெரிக்க தொழில் முனைவர், சூழல் பாதுகாவலர், மனித உரிமைப் போராளி கிரெகரி கார் 1959ல் இடாஹோ ஃபால்ஸ் இடாஹோவில் பிறந்தார். யூட்டா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். அல்மமேட்டா ஹார்வோர்டு கென்னடி பள்ளியில் (Alma mater Harvard Kennedy School) பொதுக் கோட்பாட்டு அறிவியலில் 1986ல் முனைவர் பட்டம் பெற்றார். தந்தை டைலர் ஏஜ் (Taylor H). தாய் பெட்டி ஓ கார் (Betty O. Carr).
அதே ஆண்டு ப்ரேக் அப் ஆஃப் அட் அண்ட் டி (breakup of AT&T) என்ற அமைப்பினால் உள்ளுணர்வு பெற்று ஸ்காட் ஜோன்ஸ் (Scott Jones) என்பவருடன் இணைந்து பாஸ்ட்டன் டெக்னாலஜி (Boston Technology) என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இது குரல் மின் அஞ்சல்களை தயாரித்து தொடக்க கால தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்று வந்தது. 1998ல் இந்நிறுவனம் கன்வெர்ஸ் தொழில்நுட்பம் என்ற கம்பெனியால் வாங்கப்படும் வரை கிரெகரி கார் இதன் தலைவராக இருந்தார்.
1996 முதல் 1998 வரை அவர் புராடிஜி (Prodigy) என்ற ஆரம்ப கால சர்வதேச இணைய வசதி வழங்கும் அமைப்பின் தலைவராக செயல்பட்டார். 1996ல் ஆப்பிரிக்கா ஆன் லைன் ( Africa Online) என்ற அமைப்பின் இணை தோற்றுநரானார். 1998 வரை அதன் தலைவராக இருந்தார். 1998ல் இலாபம் தரும் நிறுவனங்களில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். மனித நல செயல்பாடுகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
1999ல் ஹார்வோர்டு பல்கலைக்கழகத்தில் மனித கோட்பாடு மையத்தின் (Carr Center) அடிப்படை கொடையாளியாக செயல்பட்டார். கற்பித்தல் மற்றும் ஆய்வின் மூலம் இந்த மையம் யு எஸ் மட்டும் உலகம் முழுவதும் நல்ல பொது நலக் கோட்பாட்டை மையமாகக் வைத்து மனித உரிமை நல பணிகளை அடிப்படை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
1999ல் அவர் கிரெகரி சி கார் அறக்கட்டளை (Gregory C. Carr Foundation) என்ற இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் அவர் 35 ஆண்டுகளுக்கான கொரொங்கோசா மீட்பு திட்டத்தை செயல்படுத்தினார். அறக்கட்டளையின் மீட்புக் குழு அரசுடன் இணைந்து பூங்காவின் எல்லையை கொரொங்கோசா மலைப் பகுதி வரை விரிவாக்கி மலையில் மூன்று மில்லியன் மரக்கன்றுகளை நட்டது. அவை வளர்ந்து பெரிய மரங்களாக இன்று காட்சி தருகின்றன.
பூங்காவில் பன்னாட்டு சூழல் மீட்பிற்கான அறிவியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. சூழல் சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பூங்காவின் எல்லையில் வாழும் உள்ளூர் மக்களுக்கு ஆரோக்கியம், கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நேஷனல் ஜியோக்ராபிக் தொலைக்காட்சி (National Geographic Television) பூங்காவின் மீட்புக் கதையை ஆப்பிரிக்காவின் இழக்கப்பட்ட ஏடன் (Africa's Lost Eden) என்ற தலைப்பில் 2008 அக்டோபர் 26 அன்று ஒளிபரப்பானது. சி பி எஸ் 60 நிமிட செய்தி என்ற நிகழ்ச்சியில் இந்த வெற்றிக் கதை 2022 டிசம்பர் 4 அன்று திரைப்படமாக ஒளிபரப்பப்பட்டது.
கார், பல்கலைக்கழகங்கள், மாநாடுகள், திரைப்பட விழாக்களில் சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பற்றிய முக்கியப் பேச்சாளராக உள்ளார். 2012ல் இருந்து அவர் பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு சூழல் விழிப்புணர்வு சொற்பொழிவு நடத்தி வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் 2014ன் சிறப்பு உரைத் தொடரில் பங்கேற்றார். 2000ல் அவர் ஐடாஹோ (Idaho) அருங்காட்சியகத்தை தோற்றுவித்தார்.
2001ல் அவர் மாசிசூசெட்ஸ் கேம்ப்ரிட்ஜ் ஹாவ்வோர்டு சதுக்கத்தில் சிறிய, பரிசோதனைரீதியிலான தயாரிப்புகளுக்காக மார்க்கெட் தியேட்டர் (Market Theater) என்ற அரங்கத்தைத் திறந்தார். 2001ல் ஆரிய நாடுகளின் வளாகம் (compound of the Aryan Nations) என்ற இடத்தை வாங்கி அதை பூங்காவாக மாற்றினார். இ ஓ வில்சன் (E. O. Wilson) என்ற உயிரியலாளரின் நெருங்கிய நண்பரான கார் மே 17 2014ல் கொரொங்கோசா பூங்கா மீட்பு பற்றி ஆர்வோர்டு பல்கலைக்கழகத்தில் டை இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் உரையாற்றினார்.
வில்சன் உயிர்ப் பன்மயத் தன்மை வாரியத்தில் வில்சன் இறக்கும் வரை பணி புரிந்தார். ஜூலை 23, 2024ல் பாய்சி (Boise) ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சிறந்த சேவைக்கான செனட்டர் ப்ராங்க் சர்ச் விருது, 2003ல் யூட்டா ஸ்டேட் பல்கலைக்கழக கௌரவ முனைவர் பட்டம், 2013ல் ஐடஹோ டெக்னாலஜி ஹால் ஆஃப் ஃபேம் விருது, 2015ல் பாய்சி ஸ்டேட் பல்கலைக்கழக கௌரவ முனைவர் பட்டம், 2024ல் சிறந்த பொது நல சேவைக்கான ப்ராங்க் சர்ச் மதிப்பு மிகு விருது போன்றவை கார் பெற்ற விருதுகளில் சில.
சூழல் மண்டலத்தின் மறு நிர்மானமே மீட்புத் திட்டத்தின் முக்கிய இலட்சியம். போரில் இல்லாமல் போன நீர் மூலங்கள் மீட்கப்பட்டன. சிறிய உயிரினங்கள், தாவரங்களின்வ் அளர்ச்சி உறுதி செய்யப்பட்டது. முன்பிருந்த வன உயிரினங்களை மீட்டுக் கொண்டு வரும் வகையில் அவற்றிற்கான வலசைப் பாதைகள் அமைக்கப்பட்டன. வேட்டையாடல் கட்டுப்படுத்தப்பட்டது. உள்ளூர் மக்கள் இதில் முக்கியப் பங்காளிகளாயினர்.
சட்ட விரோத வேட்டையாடலைத் தடுக்க பூங்காவை பயிரிடும் இடமாக பயன்படுத்தியிருந்த விவசாயிகளுக்கு வருமானத்திற்கான வேறு வழிகள் ஏற்படுத்தப்பட்டது. பூங்காவின் பல்வேறு திட்டங்களில் அவர்கள் பங்காளிகளாயினர். வருமானம் ஈட்டும் வழிகள் உருவானது. இந்த நடவடிக்கைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அழிக்கப்பட்ட மரங்கள், தாவரங்களுக்கு பதில் புதியவை நட்டு வளர்க்கப்பட்டது. பூங்காவின் இயற்கைச் சூழல் மீண்டு வந்தது.
மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் மதிப்பை உணர்த்தும்வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இயற்கையின் ஒரு அம்சமே மனிதன் என்பதை அவர்கள் உணர்ந்தனர். உழைத்து வருமானம் ஈட்டி வாழும் வழிகள் ஏற்பட்டன. பாதுகாப்பு பணிகளில் மக்கள் தாமே முன்வந்து செயல்படத் தொடங்கினர். கொரொங்கோசா மீண்டு வர ஆரம்பித்தது.
வன உயிரினங்களின் எண்ணிக்கை, சூழலை மீட்டெடுப்பது குறித்து நிரந்தரமாக கண்காணிக்க, ஆராய அறிவியல் பூர்வமான ஆய்வுக்கூடங்கள் தொடங்கப்பட்டன. இத்திட்டங்கள் உலகிற்கே ஒரு முன்மாதிரியாக மாறியது. இந்த மீட்புக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளூர் மக்களே. கிரெகரி கார் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் பூங்காவிற்கு மறுபிறப்பு கொடுப்பதில் முக்கியப் பங்காற்றின. சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. இது மக்களுக்கு புதிய வருமானம் ஈட்டும் வழியாக மாறியது. புல்வெளிகள், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன.
இதனால் அங்கு சூழல் மண்டலங்கள் துளிர் விட ஆரம்பித்தன. உணவும் குடி நீரும் கிடைக்கத் தொடங்கியதுடன் யானைகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இது மற்ற உயிரினங்களின் வரவிற்குக் காரணமானது. இப்போதுள்ள பூங்காவின் பரப்பு சுமார் 4,000 சதுர கிலோமீட்டர். அடர்ந்த மரங்கள், புல்வெளிகள், மழைக்காடுகளால் இன்று பூங்கா வளமாக உள்ளது.
ஒருகாலத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட யானைகள், சிங்கங்கள், சிறுத்தைப் புலிகள், நீர் யானைகள் போன்ற விலங்குகள் உள்ள ஆப்பிரிக்காவின் முதண்மை சரணாலயமாக இன்று கொரொங்கோசா திகழ்கிறது. ஊர்வன, பறவைகள், பாம்புகள் வாழும் முக்கிய மையமாக இந்த பூங்கா உள்ளது. இன்று பூங்காவிற்கு வருகை தருவோருக்கு விழிப்புணர்வு உள்ளூர் மக்கள் வகுப்புகளை நடத்துகின்றனர்.
மக்களின் பாரம்பரிய அறிவு இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. முன்பு பூங்காவிற்குள் வேளாண்மை, மீன் பிடி தொழில் மூலம் வருமானம் ஈட்டிய மக்களிடையில் மனித வனவிலங்கு மோதல்கள் மோசமாக இருந்தது. இது வன உயிரினங்களின் அழிவுக்கு காரணமானது. இதைத் தடுக்க மாற்றுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் ஒருகாலத்தில் வனச்செல்வங்களை கொள்ளையடித்தவர்கள் இன்று அதன் பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்.
மீண்டு வந்த கொரோங்கோசா
பூங்கா இன்று மீட்பின் வெற்றியை கொண்டாடுகிறது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் பூங்காவிற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். போருக்குப் பின் திரும்பி வந்த வன உயிரினங்கள் மகிழ்வுடன் உலாவுகின்றன. ஆப்பிரிக்காவின் க்ரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் (Africa’s great rift valley) அமைந்திருக்கும் பூங்காவின் உரேமா ஏரி (Lake Urema) நீர்ப் பறவைகள், முதலைகள், நீர் யானைகளுக்கு புகழ்பெற்றது. இங்கு படகு சவாரி நடைபெறுகிறது.
ஏரியில் சாம்பல் நிற மகுட கொக்குகள் (Grey-Crowned Cranes), நாரைகள் (storks), செங்கால் நாரைகள் அல்லது பூ நாரைகள் (flamingos) மற்றும் கூழைக் கடாக்கள் (pelicans) போன்ற பறவைகள் அதிக அளவில் வாழ்கின்றன. ஏரியில் சஃபாரி, சாகச சுற்றுலா பயனங்கள் நடைபெறுகின்றன. உள்ளூர் மக்களே இதில் சுற்றுலா ஊழியர்கள், வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர். வருமானத்திற்கு வழியாக சுற்றுலா மாறியுள்ளது.
கொரொங்கோசா உள்ளூர் மக்களின் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலாவிற்கு சிறந்த எடுத்துக்காட்டானது. சூழல் கல்வி, விழிப்புணர்வு வகுப்புகள் அடங்கியதே சுற்றுலாத் திட்டங்கள். விருப்பமுள்ளவர்கள் இதில் தன்னார்வலர்களாக சேர்ந்துகொள்ளலாம். இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய உதவியாக ஆய்வுக் கூடங்களும் உள்ளன.
காடும் மலையும் நதியும் விலங்குகளும் நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ உரிமையுள்ளவை. பூமி மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. தளராத தன்னார்வத்துடன் செயல்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வெற்றிக்கதையையே கொரொங்கோசா எடுத்துக் கூறுகிறது!
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உயிரி பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.