எதிர்பார்க்கப்பட்டதை விட காடுகள் வெப்ப உயர்வால் ஆபத்தான நிலைக்கு வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. அதிதீவிர வெப்பத்தால் வெப்பமண்டலப் பகுதி காடுகளில் மரங்களின் இலைகள் கூட்டமாக மரணமடைகின்றன. இதனால் சில இன மரங்களின் இலைகள் ஒளிச்சேர்க்கை செய்யும் திறனை இழந்து விட்டன. பூமியில் காலநிலை மாற்றம் கணிக்கமுடியாத பாதிப்புகளை உயிர்ப் பன்மயத் தன்மைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மரங்களின் இலைகளின் ஒளிச்சேர்க்கை செய்யும் செயல்முறை சராசரியாக 46.7 டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலையில் மரண நிலையை அடைந்தன என்று நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது குறித்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. தென்னமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகள் கணிக்கப்பட்டதைவிட விரைவாக அதிதீவிர வெப்பத்தாக்குதல்களால் அழிகின்றன. கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரைப் பயன்படுத்தி சூரிய ஒளியின் முன்னிலையில் ஒளிச்சேர்க்கை செய்யும் இலைகள் வெப்ப உயர்வால் இறந்து உதிர்ந்துவிழுகின்றன.

பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் செயல்படும் சர்வதேச வின்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் வெப்ப பிம்பமாக்குதல் கருவிகள் (thermal imaging instruments) மற்றும் உலகம் முழுவதும் மழைக்காடுகளில் பொருத்தப்பட்டுள்ள தரைவழி சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது சிறு அளவு 0.01% எல்லா வகை மர இலைகளும் வெப்ப உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெப்ப உயர்வு 3.9 டிகிரியை விட கூடுதலாகும்போது இலைகள் ஒட்டுமொத்தமாக உயிரிழக்கின்றன.

இதனால் பூமியின் 12% பரப்பில் உள்ள வெப்பமண்டலக் காடுகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியில் பாலூட்டிகளில் 62%, பறவைகளில் 72%, ஊர்வனவற்றில் 76% இனங்கள் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்கின்றன. இதனால் நிலப்பகுதி வாழ் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

சூடாகும் இலைகள்

இலைகள் சூடாவது இப்போது மிகச்சிறிய அளவில் மட்டுமே உள்ளது என்றாலும் “இருண்ட நிலக்கரி சுரங்கத்தில் வழிகாட்டும் கனரி பறவை (Canary in a a coalmine) போல வனச்சூழல் மண்டலத்தின் ஆபத்தான நிலையை இது அடையாளப்படுத்துகிறது என்று யு எஸ் வட அரிசோனா பல்கலைக்கழக இகாயின் ஃபார்மேட்டிக்ஸ் பிரிவு பேராசிரியர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆய்வாளர் கிறிஸ் டவுட்டி (Chris Doughty) கூறுகிறார். இலைகள் சூடாவது பற்றிய இந்த பரிசோதனைகள் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரிப்பதை எடுத்துக்காட்டின.

இரண்டு முதல் நான்கு டிகிரிகள் வரை இலைகள் சூடாக்கப்பட்டபோது அவை உண்மயில் எட்டு டிகிரிகள் சூடாயின. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலைகள் வெப்பமடைவது சீரற்றமுறையில் நிகழ்வதையே இது சுட்டிக் காட்டுகிறது என்று கிறிஸ் கூறுகிறார். இப்பிரச்சனையைத் தீர்க்க நாம் எதையும் செய்யாமல் இருந்தால், வெப்பமண்டலக் காடுகளில் வெப்ப உயர்வு நான்கு டிகிரியைவிட அதிகமாகும்போது இலைகளின் இறப்பு விகித மிக அதிகமாக இருக்கும். பெருமளவில் மரங்கள் மரணமடையும். உயிரினங்கள் வாழ வழி தேடி காடு முழுதும் அலையும்.

மீளமுடியாத அழிவு நிலையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பதன் ஒரு சிறு அறிகுறியே இலைகள் இறப்பது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கார்பன் உமிழ்வு அதிகமாகும்போது இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். காடுகள் சவான (savana) எனப்படும் புல்மேடுகளாக மாறும் என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த தொலை உணரி துறை பேராசிரியர் மேட் டிஸ்னி (Prof Mat Disney) கூறுகிறார்.

உலகளவிலான 50% கார்பன் பரிமாற்றம் காடுகளின் பசுமையான மேற்கவிகை அல்லது விதானம் (canopy) மூலமே நடைபெறுகிறது. இது பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெப்ப உயர்வால் வெப்ப மண்டலக் காடுகளில் மரங்களின் இலைகளில் ஒளிச்சேர்க்கை செயல்முறைக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி நடத்தப்பட்ட உலகளவிலான முதல் ஆய்வு இதுவே என்பதால் இதன் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

உமிழ்வு குறைந்தால் காடுகள் உயிர் பிழைக்கும்

உடனடியாக நாம் செயல்படாவிட்டால் அடுத்து வரும் காலத்தில் இப்பகுதி காடுகளுக்கு என்ன நிகழும் எந்பதை இந்த ஆய்வுகள் மூலம் அறிய முடிந்தது. வெப்பநிலையை சீர்படுத்த உமிழ்வைக் குறைப்பதே முதல் படி. வெப்ப உயர்வு குறைந்தால் இலைகள் உயிர் பிழைக்கும் என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உலகளாவிய மாற்றம் பற்றி ஆராயும் பிரிவின் பேராசிரியர் சைமன் லூயிஸ் (Prof Simon Lewis) கூறுகிறார்.

குறைந்த காலத்திற்கு வெப்ப அலை தாக்குதல்கள் நிகழும்போது கார்பன் உமிழ்வு குறைவாக இருந்தாலும் மரங்கள் மரணமடையும். மரங்கள் நீண்ட காலம் உயிர் வாழ்பவை. இதனால் ஒரு இடத்தில் நிகழும் இவற்றின் கூட்ட மரணம் இந்த வெப்ப மண்டலக் காடுகளில் உள்ள பெரிய மரங்கள் உருவாக்கியுள்ள விதானத்தைச் சார்ந்து வாழும் மற்ற எல்லா தாவர விலங்குகளையும் பெரிய அளவில் பாதிக்கும்.

ஒளிச்சேர்க்கை செய்யமுடியாமல் மரங்கள் அழிந்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். உற்பத்தி பாதிக்கப்பட்டால் உலகின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஒளிச்சேர்க்கை மூலம் வெளியேற்றப்படுவது ஆக்சிஜன். இந்நிகழ்வு நடக்காமல் நின்றுபோனால் அது பூமியின் ஆக்சிஜன் சுழற்சியை பாதிக்கும். இது அந்தந்த பிரதேசங்களில் வாழும் உயிரினச் செல்கள் அழியும் நிகழ்விற்கு (necronis) வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மனிதகுலத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல இந்த ஆபத்து உள்ள நிலையில் இப்போதும் காலம் கடந்துவிடவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாதிரிகள் கூறுவது இறுதித்தீர்ப்பு அல்ல. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க சில வழிமுறைகளை மேற்கொண்டால் வெப்ப மண்டலக் காடுகளைக் காப்பாற்றமுடியும். இந்த காடுகள் அதிகபட்சம் சமாளிக்கக்கூடிய வெப்பநிலை பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஓட்டு யாருக்கு?

மக்கள் செயலில் இறங்க வேண்டும். காலநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப்படும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே மக்கல் ஓட்டு போட வேண்டும். உலகப் பொருளாதாரம் மாற்றத்திற்குள்ளாக வேண்டும். உலகம் குறைவான கார்பன் உமிழ்விற்கு உதவும் பொருளாதாரமுறைக்கு மாற வேண்டும். வெப்ப மண்டலக் காடுகளை நம்பி வாழும் மக்கள் மற்றும் நாடுகளுக்கு பணக்கார நாடுகளும் மக்களும் எல்லா வகையிலும் ஆதரவு காட்டவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

இந்த மாற்றங்கள் நிகழ புதிய பொருளாதார முறைமை ஏற்பட வேண்டும். வெப்ப மண்டலக் காடுகள் அழிந்தால் அப்பகுதியில் அதை நம்பி வாழும் மக்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. இது உலகையே பாதிக்கும் பிரச்சனை. இலைகள் மரணமடைந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் மனிதனும் அழிவான்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்