பிலேம் காப்30 காலநிலை மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களின் யுகத்தை முடிவிற்குக் கொண்டுவர நடந்த முயற்சிகள் சில அங்குல முன்னேற்றங்களுடன் நிறைவடைந்தது. காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு வழங்கும் நிதியை மும்மடங்கு அதிகரிக்க பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் இறுதி உடன்படிக்கையில் காடுகளின் அழிவு, முக்கிய தாதுக்களின் சுரண்டல் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
வளர்வதை நிறுத்தச் சொல்லும் பணக்கார நாடுகள்
காலநிலை கெடுதிகளின் கூர்முனையில் நிற்கும் உலகம் பாதுகாப்பாக கால் பதிக்க ஒரு சிறிய இடத்தை மட்டுமே இம்மாநாடு தந்தது. தொடங்கும்போதே தாமே முன்வந்து புதைபடிவ எரிபொருட்களின் பயனை சிறிது சிறிதாகக் குறைக்க மட்டுமே அரபு நாடுகள் ஒப்புக் கொண்டன. நவம்பர் 21 2025 அன்று முடிய வேண்டிய மாநாடு முழுத்தோல்வி அடையாமல் காக்கப்பட பெரும் போராட்டம் நடந்தது. இரவு முழுவதும் நீண்டு பிறகு விடிய விடிய நடந்த கூட்டத்தின் முடிவில் மிகச் சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டது.
80 வளரும் நாடுகளுக்கும் சௌதி அரேபியா, அதன் தோழமை நாடுகளுக்கும் இடையில் பெரும் இழுபறி நிலவியது. புதிய ஒப்பந்தத்தின்படி 2035 முதல் காலநிலை தகவமைப்புக்காக செல்வந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஆண்டிற்கு 120 பில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. மழைக்காடுகளின் சொர்க்கபூமியான பிரேசிலில் அமேசான் நதியின் முகத்துவாரப் பகுதிக்கு சிறிது தூரத்தில் நடந்த இந்த மாநாட்டில் வன அழிவைத் தடுக்க முன்வைக்கப்பட்ட ஒரு திட்டமும் ஏற்கப்படவில்லை.
நிறைவு நேரத்திற்குப் பிறகு 12 மணி நேரம் தாமதமாகவே முடிந்த மாநாட்டுக் கூடத்தில் உயர் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். “மாநாட்டின் முன்னேற்றம் அர்த்தமுள்ள ஒன்று” என்று முன்னாள் ஜெர்மன் பிரதிநிதி ஜெனிஃபர் மோர்கன் (Jennifer Morgan) கூறினார். “வேறுபட்ட புவி, அரசியல் பின்னணிகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் பஞ்கேற்ற மாநாட்டின் முடிவுகள் குழந்தை நடையில் சில அடிகளை எடுத்துள்ளது” என்று அதிகார மாற்றத்திற்கான ஆப்பிரிக்க திங்டாங்க் (Power Shift Africa thinktank) அமைப்பின் இயக்குனர் மொஹமது அடோ (Mohamed Adow) கூறினார்.
சூழலைக் காக்கும் பெருந்தலைவர்கள் என்று பேசிக் கொள்ளும் பலரும் தங்கள் நாட்டின் தேசீய அளவிலான தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுடன் (NDCs) வரவில்லை. “வளர்ந்த நாடுகள் சர்வாதிகார முறையில் நடந்து கொண்டன. இயற்கையின் எல்லா வளங்களையும் கடந்த 200 ஆண்டுகளாக சுரண்டி முழு தொழிற்வளர்ச்சியை அடைந்துவிட்டு இப்போது எங்களை நோக்கி வளர்வதை நிறுத்தச் சொல்கின்றன. வளர்ச்சி என்பது எல்லா நாடுகளுக்குமான அடிப்படை உரிமை” என்று பாகிஸ்தான் பிரதிநிதிக் குழுவின் தலைவர் ஏஷியா ஹ்யூமேரா (Aisha Humaira) கூறினார்.
இனி பேசிப் பயனில்லை
பலவீனமான நாடுகள் நம்பியதை விட வலிமையற்ற விதத்தில் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் குறைப்பதற்கான முயற்சி பற்றி பெயரளவுக்கு மட்டுமே இறுதி அறிக்கையில் இடம் பெற்றது. அடுத்த ஆண்டு காப் மாநாடு ஆஸ்திரேலியாவால் துருக்கியில் நடத்தப்படும். பிரேசில் அதிபர் உட்பட ஐம்பது நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் பங்கேற்றனர். கடந்த வியாழனன்று பிரதிநிதிகளின் அலுவலகங்களுக்கு அருகில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது என்றாலும் இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கூடத்தின் மையப் பகுதியில் இருந்து பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு முக்கியப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. “சூழலிற்கு சேதம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றாலும் காலநிலைக் கெடுதிகளை தெற்கு நாடுகள் அனுபவிக்கின்றன. இதை சமாளிக்க பணக்கார நாடுகள் நிதியுதவி செய்யவில்லை என்றால் இனி பொறுப்புகள் எதையும் நாங்கள் ஏற்கப் போவது இல்லை” என்று உலகளாவிய காலநிலைக்கான பன்னாட்டு செயல்பாடுகளுக்குரிய (global lead on climate justice at ActionAid International) அமைப்பின் டெரிசா ஆண்டர்சன் (Teresa Anderson) கூறுகிறார்.
“மாநாட்டின் முடிவுகள் வெறுமையானவை. காலநிலை பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பேச்சுவார்த்தைகளில் இல்லை என்பதை காப்30 மாநாடு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியுள்ளது. நீதியான, சமத்துவமான, புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விடுதலை பெறப்போராடும் மக்கள் மற்றும் போராளிகளின் போராட்டத்திலேயே உலகின் நலமான எதிர்காலம் உள்ளது” என்று பன்னாட்டு சூழல் சட்ட மையத்தின் (Center for International Environmental Law) நிக்கி ரைஸ்ச் (Nikki Reisch) கூறுகிறார். 2026 காப்31 மாநாட்டிலேனும் நல்ல முடிவுகள் ஏற்படும் என்று நம்புவோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்