வலதுபக்கம் தென்படும் பெரிய பாறை மேட்டில் தேனடைபோல் பறவைகள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. இடதுபக்கமுள்ள மேட்டில் டப்பா படம் காட்டப்படும் சினிமா கொட்டையில் உட்கார்ந்திருக்கும் கூட்டம்போல ஏதோ கொஞ்சம் இருக்கிறது. இவை ஒதுக்கப்பட்டவை. இவை ஜோடி கிடைக்காத ஒண்டிக்கட்டைகள். காதலில் தோல்வியடைந்ததால் இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தகுதியையிழந்தவை. இந்த சோதாக்களுக்கு சந்ததிகள் இல்லாது போவது ஒருவகையில் நல்லதாகப் போய்விடுகிறது. மேலும் பல சோதாக்கள் உருவாகாமல் இருக்குமல்லவா.

Birdsமாதமொருமுறை சலூனுக்குப் போகாவிட்டால் தலைமுடி காடுபோல வளர்ந்துவிடுகிறதல்லவா. மக்கள்தொகையும் அப்படித்தான். கட்டுப்பாடு இல்லாவிட்டால் வச வசவென்று பெருகிவிடும். இதற்காகத்தான் குடும்பக்கட்டுப்பாடு அது இது என்று பல வரம்புகள் வைக்கப்படுகின்றன.

ஆனால் என்றைக்காவது காகங்கள் ஏன் பெருகுவதில்லை, குருவிகள் எப்போதும் ஒரே எண்ணிக்கையில் உள்ளன என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறதே தவிர அதிகரிப்பதாகக் காணோம்.

கரப்பான் பூச்சி, எலி, போன்றவை சிலநேரங்களில் பெருகி தொல்லை கொடுப்பதுண்டு. தானாகவே அவை ஒரு கட்டுக்குள் அடங்கிவிடுகின்றன. விலங்குகள் எப்படியோ தம் இனத்தொகையை எப்போதும் ஒரே சீராக வைத்துக் கொள்கின்றன.

மிருகங்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடாமல் எப்போதும் ஒரு அளவில் இருப்பதற்கு கிடைக்கும் தீனியின் அளவு, இயற்கையாக ஏற்படும் நோய், இன்னொரு விலங்கு அடித்துச் சாப்பிட்டுவிடுவது, அல்லது விபத்து போன்றவை காரணம் என்று நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.

சிங்கத்துக்கு மேலே ஒரு வேட்டை மிருகம் இல்லாதபோது அது எப்படி சாகிறது? புலி, சிறுத்தை, ராஜாளி, கழுகு, பருந்து போன்ற வேட்டையாடிப்பிழைக்கும் மிருகங்ககள் தாமாகவே செத்தால்தான் உண்டு. அவற்றை அடித்துக்கொல்ல வேறு எதற்கும் துணிச்சல் கிடையாது. பின் எப்படி அவற்றின் எண்ணிக்கையும் காடுகளில் மிகாமலிருக்கிறது?

சொல்லுவீர்கள்..... கிடைக்கின்ற தீனியின் அளவுக்கேற்ப அவற்றின் எண்ணிக்கை அமையும் என்று. அதாவது பசி, பட்டினியால் குறிப்பிட்ட அளவு செத்துப்போகின்றன என்று நினைக்கிறீர்கள். அதுவும் இல்லை. வேட்டை மிருகமோ, ஏன் பொறுக்கித் தின்று பிழைக்கும் மிருகம்கூட பட்டினியால் செத்ததாகச் சரித்திரமே இல்லை. தொடர் வறட்சி, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக வேண்டுமானால் பஞ்சம் ஏற்பட்டு பசியால் செத்திருக்கலாம். அது எப்போதாவதுதானே!

நோய் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லமுடியாது. மனிதர்கள் வளர்க்கும் கோழிப்பண்ணைகளில்தான் கொள்ளை நோய் ஏற்படுகிறது. ஆனால் காட்டில் கொள்ளை நோய்தாக்கி மொத்தமாக அழிவதென்பது கேள்விப்படாத விஷயம். எனவே மிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் கட்டுக்கோப்பாக இருப்பதின் இரகசியம் என்ன என்பதை புதிய கோணத்திலிருந்து பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

எல்லைப்போராட்டம்

உங்களுக்குத் தெரியுமா ஏன் நாய்கள் நிற்கின்ற பொருள் வாகனமாக இருந்தாலும் மரமாக இருந்தாலும் அதன் மேல் பின்னங்காலைத் தூக்கி சிறுநீர் கழிக்கின்றன என்று? ஒவ்வொரு நாய்க்கும் சொந்தமாக தெரு உண்டு அந்தத் தெருவில் வேறுநாய் அதன் அனுமதியில்லாமல் நடமாட முடியாது. நாய் தன் பேட்டையை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் இப்படி சிறுநீர் தெளித்த அடையாளம் செய்தாக வேண்டும். மிருகங்களும், பறவைகளும் இப்படி நில உரிமையைக் காப்பாற்றுவதில் பயங்கரமாகப் போராடினாலும் தேவைக்கு அதிகமாக நில வரம்பை அதிகரிப்பதில்லை. ஒவ்வொரு மிருத்திற்கும் அல்லது மிருகக் கூட்டத்திற்குமென்று வாழ்விட எல்லை உள்ளது. அதை அவை எப்பாடுபட்டாவது காப்பாற்றியாகவேண்டும். குட்டிகளுக்கும் குஞ்சுகளுக்கும் போதிய தீனி கிடைக்கவேண்டுமானால் அதற்கான வேட்டைத் திடலும் வேண்டுமல்லவா!

கடற்கரையில் பறந்து திரிந்து கடலில் மீன்பிடித்து வாழும் பறவைகள், கடல் மணலிலேயே பள்ளம் பறித்து கூடுகளைக் கட்டுகின்றன. ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் மணலைக் குவித்து கோபுரமாக்கி நடுவே பள்ளமிட்டு அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஒரு பறவையின் மணல் குவியலுக்கு சற்றுத் தள்ளித்தான் மற்றது கூடுகட்டுகிறது. நெரிசல் மிகும்போது கூடுகளுக்கிடையே உள்ள இடைவெளி கொஞ்சம் குறையலாம். ஆனால் நிச்சயமாக கூடுகளுக்கிடையே இடைவெளி இருந்தே தீரும்.

கூடுகட்ட இடம் பிடிப்பதில் பறவைகளிடையே போராட்டம் ஏற்படும்போது, வல்லமையுள்ளவை வெல்கின்றன. கூடுகட்ட இடம் கிடைக்காத பறவைகளுக்கு பிழைக்க தீனி கிடைத்தாலும், தமக்கென்று சந்ததிகளை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. உண்மையில் தீனி கிடைக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை, அங்கே கிடைக்கும் ‘ரியல் எஸ்ட்டேட்’ தான் விலங்கின் இனத்தொகையை நிர்ணயிக்கிறது.

கூட்டமாக வாழும் பழக்கமுடைய பறவைகளும், மிருகங்களும் தனித்தனியாக ரியல் எஸ்டேட் அமைப்பதில்லை. கூட்டமாகத்தான் இடம் பிடிக்கின்றன. எனவே கூட்டத்தில் அங்கத்தினராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஒரு மந்தை அல்லது கூட்டத்தில் இத்தனை உறுப்பினர்கள்மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு குழுதர்மம் பறவைகளிடம் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு கூட்டத்தில் 300 பறவைகள்தான் இருக்கமுடியும் என்று வைத்துக்கொண்டால், 301 ஆக வரும் பறவைக்கு அக்கூட்டத்திற்குள் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. அது கூட்டத்திற்குள் சேர முயலும்போது வேறொன்றை விரட்டியடிக்க வேண்டும். அப்போது போட்டி ஏற்படும். போட்டியில் தோற்றுப் போய் கூட்டத்தில் சேர இயலாவிட்டால் ஜோடிப்பறவை கிடைக்காது.

ஒவ்வொரு கூட்டத்திலும் தலைவர் ஒருவர் இருப்பார். அவருக்குக்கீழே இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்களும் இருப்பார்கள். மீதமுள்ள உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து வரையறை செய்யப்பட்ட எண்ணிக்கையுடைய குழு ஏற்படும். குழுவில் இடம்பிடிப்பதும் ஆட்சி வரிசையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடிப்பதும் திறமையைப் பொறுத்து அமைகிறது. இதை பெக்கிங் ஆர்டர் (Pecking Order) என்கிறார்கள்.

குழுவில் தனது அந்தஸ்த்து என்ன, வரிசையில் எங்கிருக்கிறோம் என்கிற நினைப்பும் அறிவும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கும். இந்த அமைப்பு எப்போதும் குழுவின் அளவை ஒரே சீராக வைக்கிறது. குழுவுக்குள் சேர்க்கப்படாமல் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களுக்குத் தனி குழு அமைக்க வாய்ப்பிருக்கிறது. அது காட்டின் அளவுவைப் பொருத்தது. காடு பெரிதாக இருந்தால் இன்னொரு என்ன எத்தனை குழு வேண்டுமாலும் அமையலாம். இது குரங்குகள், மான்கள், சிங்கங்கள், மீன்கள், பறவைகள் போன்ற சகல உயிரிகளனைத்துக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு விலங்குக்கும் அனைத்து உறுப்பினர்களின் அடையாளமும் அத்துப்படி. அடிக்கடி உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டுக் கொள்கின்றன.

காகங்கள், தவிட்டுக்குருவிகள் சில சமயம் தந்திக்கம்பிகளில், அல்லது புதர்களில் மாநாடு போட்டுக்கொண்டு சள சளவென்று கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ‘காக்கா ஸ்கூல்’ என்று தாத்தா சொல்லுவார். அவை பள்ளிக்கூடம் படிப்பதில்லை தமது குழுவின் கூட்ட நெரிசலை எடை போடுகின்றன.

காலை அல்லது மாலை போன்ற சந்திநேரங்களில் மரங்களில் பறவைகளின் ஒலி பேரிரைச்சலாகக் கேட்கும். ஏன் இப்படி சத்தம் போடுகின்றன என்று நான் நினைத்ததுண்டு. அவை தம் குழுவின் அடர்த்தியைக் கணித்துக் கொள்ள இப்படி சத்தம் செய்கின்றன. உண்மையில் நிலத்தகராறுகள் அங்கு நடைபெறுகின்றன. குழுவிலிருந்து வெளியேற்றம், அல்லது ஆள் சேர்ப்பு ஆகியவை அப்போது நடைபெறுகின்றன.

விலங்குகள் ஆண்டு முழுவதும் இப்படி நிலத்தகராறில் இறங்குவதில்லை. சுமுகமாக சுதந்திரமாக வாழ்ந்து வந்தாலும் இனப்பெருக்கத்திற்கென்று ஒதுக்கப்படும் ஒரு சில மாதங்களில் மட்டுமே ரியல் எஸ்ட்டேட் பிரச்சனை தலைதூக்குகிறது.

கிடைக்கும் வாழ் ஆதார நிலஅளவே உயிரினங்களின் இனவிருத்தியின் அளவைக் கணிக்கிறது. நில ஆதாரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதால் உயிரினங்களின் எண்ணிக்கையும் இயற்கையில் சீராகவே பராமரிக்கப்படுகிறது. ஜனநெரிசல், பார்க்கிங் பிரச்சனை, பட்டா கேட்டு சாலை மறியல், தர்ணா, தொற்று நோய், கலாச்சார கேடுகள், லா ஆண்டு ஆர்டர் பிரச்சனைகள் ஏதுமில்லை. கோர்ட்டுமில்லை, வழக்குகளுமில்லை.

Birdsஇயற்கை ஒரு தானியங்கி இயந்திரம் போன்றது. தன்னைத்தானே சமச்சீராக காத்துக்கொள்கிறது. மனிதன் வேட்டையாடி வாழ்ந்தபோது, அவனது ஜனத்தொகை ஒரே சீராக இருந்தது. என்றைக்கு மனிதன் வேளாண்மை, மாட்டுப் பண்ணை போன்றவற்றை ஏற்படுத்திக்கொண்டானோ அன்றிலிருந்து இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து அவன் விலகிவிட்டான். அதன் விளைவாக கட்டுப்பாடற்ற மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுகிறான்.

மாலை வேளைகளில் ஸ்டார்லிங் என்ற பறவைகள் இப்படி வானத்தில் திருவிழா நடத்துகின்றன. சொந்தங்கள் சந்தித்துக்கொள்ளும் நேரம். ஒவ்வொரு பறவையும் தன் இனத்தின் அங்கத்தினரைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. நெரிசல் அதிகமாக இருக்கும்போது இனப்பெருக்க ஆசை அவற்றிடையே குறைகிறது. நெரிசல் குறையும்போது இனப்பெருக்க ஆவல் அவற்றிடையே மீதூறுகிறது. இதன் மூலம் இப்பறவைகள் ஜனத்தொகையை கிடைக்கும் தீனியின் அளவுக்கு ஏற்றாற்போல் காப்பாற்றிக் கொள்கின்றன.

‘பிளாக் பக்’ எனப்படும் மான்களில் இரண்டு காளைகள் ஒத்தைக்கு ஒத்தை என்று பலப்பரிட்சை நடத்துகின்றன. வென்ற மானுக்கு இடம் சொந்தமாகிறது. தோற்றது இடத்தை காலிபண்ணிவிடுகிறது. சொந்தமாக இடமில்லாத மானுக்கு பெண்மான் கிடைப்பதும் அரிது. இதன் மூலம் இனப்பெருக்க வாய்ப்புகள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது.

பிளாக் கிரௌஸ் என்ற காட்டுக்கோழிகளில், ஆண்கள் அடிக்கடி இப்படி சடங்கு முறையில் முறைத்துக் கொள்கின்றன. இதில் தோல்வியுறும் ஆண்கள் விரட்டப்படுகின்றன. அவை ஒதுங்கியிருப்பதால் சந்ததிகளை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பினை இழக்கின்றன. 

- முனைவர் க.மணி
பயிரியல்துறை, பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

Pin It

 

snakeநஞ்சு துப்பும் பாம்புகள் எதிரியின் கண்களைக் குறிவைத்தே நஞ்சைத் துப்புகின்றன. இந்த பாம்புகளின் செயலைக் குறித்த ஆய்வில், எதிரியின் கண்களை நிச்சயமாகத் தாக்கிவிடும் வகையில் இவை தலையையும் கழுத்தையும் அசைப்பது தெரிய வந்துள்ளது. இவை விஷத்தைத் துப்பிவிடுகின்றன என்பதைக் காட்டிலும் எதிரியின் முகத்தை நோக்கி விஷத்தை விசிறி விடுகின்றன என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவு. மசாசூஸட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புரூஸ் யங் அண்மையில் நஞ்சு துப்பும் பாம்புகளைக் குறித்த ஆய்வில் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நஞ்சு துப்பும் பாம்பின் நஞ்சுச்சுரப்பி விசையுடன் சுருங்குவதால் பாம்பின் நாக்குகள் வழியாக நஞ்சு பீச்சியடிக்கப்படுகிறது. எதிரியின் கண்களின்மீது நஞ்சு விழவேண்டும் என்பதே பாம்பின் நோக்கமாக இருக்கும். ஆறு அடி தொலைவுவரை பீச்சியடிக்கப்படும் இந்த நஞ்சு கண்களில் எரிச்சலை உண்டு பண்ணுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடும். இரண்டு அடி தொலைவில் இருந்து பீச்சியடிக்கப்படும் நஞ்சு நிச்சயமாக எதிரியின் கண்களைத் தாக்கிவிடுமாம்.

இந்த வகைப் பாம்புகள் எதிரியின் முகத்தில் கண்களை மட்டும் குறிவைத்து நஞ்சை துப்புவதில்லை. பாம்பின் கழுத்துத் தசைகள் தலையுடன் பொருத்தமாக இயங்கி எதிரியின் கண் இருக்கும் பிரதேசத்தில் நஞ்சை விசிறி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

 

ricelandநெல்வயல்கள் மீதேனை வெளியிடும் என்று பணக்கார நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்கிறது இந்திய விஞ்ஞானிகள் புதிதாக மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி. புவி வெப்பமடைதலுக்கு பசுமையில்ல வாயுக்களே காரணம். கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை பசுமையில்ல வாயுக்கள் எனப்படுகின்றன. மனித செயல்பாடுகளே இந்த வாயுக்களை உருவாக்குகின்றன. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு முறை பசுமையில்ல வாயுக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகளை வலியுறுத்தும்போதும், அவை பதிலுக்கு இந்தியா, சீனாவை கைகாட்டுகின்றன. இங்குள்ள நெல்வயல்களும், கால்நடைகளும் பெருமளவு மீதேனை வெளியிடுவதே முக்கிய காரணம் என்று அவை குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இது எந்த அளவு உண்மை?

நெல்வயல்கள் பெருமளவு மீதேனை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, நெல் வயல்களை கார்பன் கிரகிப்பான்களாகச் செயல்படுகின்றன என்ற புதிய ஆராய்ச்சி முடிவை இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். நெல் வயல்கள் வளிமண்டலத்தில் இருந்து கரிம கார்பனை கிரகித்துக் கொண்டு புவி வெப்பமடைதலை குறைக்கின்றன என்று இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஹெக்டேரில் நெல் பயிரிடுவதன் மூலம் 5.5 டன் கரிம கார்பன் நிலத்தில் சேகரிக்கப்படுகிறது என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பிதிஷா மஜும்தார் மற்றும் கொல்கத்தாவிலுள்ள கல்யாணி பல்கலைக்கழகத்தின் விஸ்வபதி மண்டல் தெரிவிக்கின்றனர். ஒரிசா நெல் வயல்களில் சேகரித்த மண்ணில் அவர்கள் சோதனை நடத்தினர்.

நெல்வயல்கள் வளிமண்டலத்தில் பெருமளவு மீதேனை வெளியிடுகின்றன என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது. இதற்கு மாறாக, மீதேனை உருவாக்க மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கார்பனைவிட பெருமளவு கார்பன் மண்ணில் சேகரமாகிறது. நெல் வயல்கள் மண்ணில் சேகரிக்கும் கார்பனில் வெறும் 2.5-5 சதவிகிதம் மட்டுமே மீதேனாக மாறுகிறது, எஞ்சியது முழுவதும் மண்ணில் சேருகிறது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் கார்பன் ஆக்சிஜனேற்றம் அடைந்து வெளியேறாமல் மண்ணில் சேகரிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

''இது உண்மைதான். வயல்கள் உருவாக்கும் மீதேனில் 90 சதவிகிதம் வேரால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது'' என்கிறார் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவைக்கான (யு.என்.எப்.சி.சி.சி.) இந்தியாவின் தேசிய தொடர்பு அதிகாரி மகாதேஸ்வர சாமி.

''வளரும் நாடுகளில் உள்ள நெல்வயல்களில் இருந்து வெளியாகும் மீதேனின் அளவை மேற்கத்திய விஞ்ஞானிகள் அதிகப்படியாக காட்டிவிட்டார்கள்'' என்று 1998ம் ஆண்டிலேயே வளிமண்டல விஞ்ஞானி ஏ.பி. மித்ரா தெரிவித்திருக்கிறார். நெல்வயல்களில் நடந்துள்ள புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக் குழு (ஐ.பி.சி.சி.), மீதேன் வெளியிடும் அம்சங்கள் எவை என்பதை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

''கொல்கத்தா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இன்னும் அதிக ஆதாரங்கள் தேவை. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடில் இருந்து நிலத்தில் சேகரமாகும் கார்பனின் அளவை மதிப்பிடுவது தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.

மேலும் கார்பன் தற்காலிகமாக மண்ணில் சேகரமாகலாம். வெயில் காலத்தில் வெப்பநிலை மிக அதிகரிக்கும்போது, அவை ஆக்சிஜனேற்றம் அடைந்து கார்பன் டைஆக்சைடாக வெளியேறலாம். 'தேசிய வேளாண் புதுப்பித்தல் திட்ட'த்தின் கீழ் இதேபோன்று இன்னும் சில ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன'' என்கிறார் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் பிஜய் சிங்.

எப்படியோ, காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் வாதத்தை வலுப்படுத்த புதிய ஆராய்ச்சி உதவும் என்று நம்புவோம்.

அனுப்பி உதவியவர்: ஆதி

Pin It

 

maskittoகாதல் வயப்பட்டு இனச்சேர்க்கைக்குத் தயாராகவுள்ள Aedes aegypti எனப்படும் டெங்கு கொசுக்கள் தங்களின் துணையை இசைமூலம் தேர்ந்தெடுக்கின்றன எனும் செய்தி வியப்பானது. டெங்குவையும், மஞ்சள் நோயையும் பரப்பும் இந்த வகையான ஆண்-பெண் கொசுக்கள் ஒத்திசை மூலம் தங்களுடைய இணையைத் தேர்ந்தெடுக்கின்றன.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானி டேனியல் ராபர்ட் உயிரினங்களில் காணப்படாத விந்தை இது என்கிறார். இந்த ஆராய்ச்சியின் பயனாக கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திசையில் ஆராய்ச்சிகளைத் தொடர முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

காற்றில் பறக்கும் ஒரு பெண் கொசுவின் இறக்கைகள் சுமார் 400 ஹெர்ட்ஸ் அதிர்வுகளை உண்டாக்குகிறன. ஒர் ஆண் கொசுவின் இறக்கைகள் சுமார் 600 ஹெர்ட்ஸ் அதிர்வுகளை உண்டாக்க வல்லவை.

ஆண், பெண் டெங்கு கொசுக்களை மிக நுணுக்கமான இழைகளால் கட்டி பறக்கச்செய்தனர். அவை நெருங்கி வரும்போது கொசுக்களின் இறக்கைகள் உண்டாக்கிய கீதத்தை பதிவு செய்தனர்.

பெண்கொசுக்கள் எழுப்பிய சுரம் 400...800...1200 என்று அதிகரித்தபோது, ஆண்கொசுக்களின் சுரம் 600...1200 என்று அதிகரித்தது. காதல் வயப்பட்ட கொசுக்கள் எழுப்பிய சுரத்தின் அதிர்வெண் 1200 ஹெர்ட்ஸ்ல் ஒருங்கிணைந்தது.

இந்த ஒலியை விஞ்ஞானிகள் பதிவு செய்தனர். கொசுக்களின் காதல் கீதத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It