Oleanderஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக் கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது. தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக் கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப் பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு.

கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும், வளம் குறைந்த மண்ணிலும் வளரக் கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும், தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள், சிகப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.

வறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.

ஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

ஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

 

Plant1800 களில் ஒரு வதந்தி உலவியது. மடகாஸ்கர் காடுகளில் சுற்றித்திரிந்த கார்ல் லிச்சி என்ற ஜெர்மானியர் ஒரு பெண்ணை மரம் விழுங்கியதைப் பார்த்ததாக கட்டுரை வெளியிட்டார்.

1950 களில் வெளியான கட்டுரையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கார்ல் லிச்சி என்கிற பெயரில் யாரும் மடகாஸ்கர் காடுகளை ஆராயவில்லை என்பதுதான் அந்த கட்டுரையின் உள்ளடக்கம்.

மனிதர்களைச் சாப்பிடும் மரம் இல்லாமல் போனாலும், சிறிய பூச்சிகளை விழுங்கும் பூக்களைக் கொண்ட பிட்சர் தாவரம் இருப்பது அந்தக் கட்டுரையில் உறுதி செய்யப்பட்டது. பிட்சர் தாவரங்கள் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.

பிட்சர் தாவரத்தின் பூக்கள் ஒரு பெரிய ஜாடியின் வடிவத்தில் இருக்கும். இலைகளின் உதவியால் சுரக்கும் வாசனையான படலம் பூக்களின் உட்புறத்தில் படிந்து கொள்கிறது. வேர்களால் உறிஞ்சப்படும் நீரில் இந்த வாசனையுள்ள படலம் கரைந்து பூவின் அடியில் தங்கி விடுகிறது. சிறு பிராணிகள் வாசனையால் கவரப்பட்டு நீரைக் குடிப்பதற்காக ஜாடிவடிவப் பூவிற்குள் செல்லும்போது பூ மூடிக் கொள்கிறது. பிராணிகளின் உடல் சிதைக்கப்பட்டு பிட்சர் தாவரத்தால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.

- மு.குருமூர்த்தி

Pin It

 

இது ‘திட்டமிட்ட கொலை', எதிர்க்கட்சியினரின் ‘திட்டமிட்ட சதி' என்றெல்லாம் சொல்கிறோம். மனிதர்கள்தான் இப்படி செய்கிறார்கள். மிருகங்கள்? புழு, பூச்சிகளும்; பறவை பாம்புகளும் நடப்பது நடக்கட்டும் என்று எதிர்காலத்தை இயற்கைக்கே விட்டுவிடுகின்றன. நாளைய பொழுதை நாளையே பார்த்துக் கொள்ளட்டும் என்பது மிருக சித்தாந்தம். மனிதர்கள் அப்படியில்லை, காலை விடிந்தவுடன் என்னென்ன செய்வது என்பதை முதல்நாள் இரவிலேயே திட்டமிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்கூட டைம் டேபிளைப் பார்த்து நாளைக்குத் தேவையானபுத்தகங்களைப் பையில் அடுக்கி வைத்துவிட்டுத்தான் தூங்குகிறான்.

மனிதருக்கு மட்டும்தான் திட்டமிடத் தெரியும்; நேற்று, இன்று, நாளை என்கிற கால அறிவு மனிதருக்கு மட்டும்தான் உண்டு என்றும் நாம் நினைக்கிறோம். சிம்பன்ஸிகளும் அந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, வேண்டியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்கின்றன. ஸ்வீடனில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், சிம்பன்ஸியின் நடவடிக்கையில் மனிதரைப் போல திட்டமிடும் அறிவு காணப்பட்டது. தினமும் காலை 11 மணிக்கு ஒரு ஆண் சிம்பன்ஸி கடுங்கோபத்துடன் நிலைகொள்ளாமல் தவித்தது. யானைக்கு மதம் பிடிப்பதுபோல தலைமை பதவி வகிக்கும் ஆண் சிம்பன்ஸிகளிடம் இப்படி ஒரு தவிப்பு காணப்படும். அப்படி எல்லாம் கலாட்டா செய்யாவிட்டால் அதுதான் தலைவன் என்று மற்ற சிம்பன்ஸிகள் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த சிம்பன்ஸி தனது அதிகாரத்தை சக உறுப்பினர்களிடம் காட்டுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், பார்வையாளர்கள் மீதும் கல் வீசி தாக்குகிறது. நல்லவேளையாக அதன் குறி படு மோசமாக இருந்ததால் பார்வையாளர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். கல்வீசும் குரங்குத் தலைவனுக்கு, விடிந்ததும் விடியாததுமாக முக்கியமான வேலை, கல் பொறுக்குவதுதான். மத்தியானம் நடத்தவிருக்கும் கலாட்டாவுக்குத் தேவையான ஆயுதங்களை தயார் செய்ய வேண்டாமா? முன்ஆயத்தம் செய்யும் குணம் சிம்பன்சிகளிடம் காணப்படுவது புதிது.

- முனைவர் க.மணி

 

Pin It

 

பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதைப் பிடுங்கியதாம் அனுமார் என்பார்கள். அந்தக் கதையாக ஒரு ஆர்கிட் செடி தனக்குத் தேவையான சக்கரை உணவை பூஞ்சானக் கிருமிகளிடமிருந்து ஓசியில் பெற்றுக் கொள்கின்றன. அந்தப் பூஞ்சனங்களோ பக்கத்தில் வளரும் மரங்களின் வேர்களிலிருந்து சக்கரையைத் திருடுகின்றன. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் மண்ணுக்கடியில் வெளியே தெரியாமல் நடைபெறுகின்றன. உயிரியல் வல்லுநர்கள் அண்மையில் தாய்லாந்தில் பச்சையம் இல்லாத மூன்று ஆர்க்கிட் செடிகளைக் கண்டனர்.

பச்சை நிறம் இல்லாமல் எப்படி இந்தச் செடி ஒளிச்சேர்க்கை செய்து பிழைக்கிறது என்று பார்த்தபோதுதான் இந்த பூஞ்சனங்களின் உதவியுடன் பக்கத்தில் இருக்கும் மரங்களின் வேர்களிலிருந்து உணவைத் திருடி வாழ்வது தெரிய வந்தது. அடர்ந்த கானகத்தில் வாழும் இந்த ஆர்க்கிடுகள் மிகவும் அபூர்வமானவை மட்டுமல்லாமல் இவற்றின் வாழ்க்கை முறையும் அதிசயமாக இருக்கிறது.

பூஞ்சனங்கள் பொதுவாக மண்ணில் வாழும் கிருமிகள். காளான்கள்கூட பூஞ்சனங்கள்தான். செடிகள் இவற்றை சாதுர்யமாகப் பயன்படுத்தி செலவில்லாமல் காலங்கடத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

- முனைவர் க.மணி

Pin It