ஒரு காலத்தில் செழுமையான, வனவிலங்குகள் வாழ்ந்த இடம். போர் வெறியில் அனைத்தும் அழிந்தபோது அது இயற்கை மற்றும் சமூக வாழ்வின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாடு முழுவதும் ஒன்று சேர்ந்து அதனால் உண்டான துயரத்தை அனுபவித்தது. பத்து இலட்சம் பேர் கூட்டக் கொலை செய்யப்பட்டனர். ஐம்பது இலட்சம் பேர் அகதிகளாயினர், இடம்பெயர்ந்தனர். மனிதர்களுடன் சேர்ந்து இயற்கை வளங்கள், வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டன.
1977 முதல் 1992 வரை நீண்டு நின்ற மொசாம்பிக்கின் உள் நாட்டு கலவரம் ஒரு மக்கள் கூட்டத்தின் மீது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. மொசாம்பிக் கொரொங்கோசா (Corongosa) தேசியப் பூங்கா இதற்கு வரலாறு கூறும் சான்று. என்றாலும் இந்த பெரும் துயரத்தில் இருந்து மக்கள், பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதில்லை என்ற பாடத்தைக் கற்றனர்.
கலவர பூமியாக இருந்த ஒரு பூங்கா மீண்டு வந்த கதைதான் இது! 1975ல் போர்ச்சுகீசியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து அங்கு உள் நாட்டுக் கலவரம் வெடித்தது. இது ஆப்பிரிக்காவின் மிக மோசமான இரத்தக்களறி என்று வர்ணிக்கப்படுகிறது. மனிதன் உட்பட சகலமும் இதன் துயரங்களை அனுபவிக்க நேரிட்டடு. இது 1977 முதல் 1992 வரை பதினைந்து ஆண்டுகள் நீண்டது. அந்த காலம் முழுவதும் இப்பூங்காவே யுத்த பூமியாகப் பயன்படுத்தப்பட்டது.
இது மனித உயிரிழப்புகள், பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. இலட்சக் கணக்கான ஆட்கள் உயிரிழந்ததுடன் அகதிகளாகவும் மாறினர். ஜோலியும் கூலியும் இல்லாத ஒரு சமூகமாக மொசாம்பிக் மக்கள் சமுதாயம் மாறியது. செழுமை மிகுந்த இடமாக இருந்த கொரொங்கோசா பூங்காவிற்குள் ஆட்கள் நுழைந்தனர்.
யானை, சிங்கம், சிறுத்தைப் புலி, நீர் யானை, கலை மான் போன்ற பாலூட்டி விலங்குகளின் வாழிடமாக இருந்த இந்த இடம் போர்க் காலத்தில் வேட்டை பூமியாக மாறியது. கலவரக் காரர்கள், அதை எதிர்கொள்ள வந்தவர்கள், பிரதேசவாசிகள் அனைவரும் பூங்காவிற்குள் நுழைந்தனர். இதன் விளைவு பெரும் அழிவு.
உணவு, பணத்தைக் கண்டுபிடிக்க ஒரு வழியாக பூங்காவின் இயற்கை வளங்கள் மாறின. பெரிய விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
மரங்களும் மற்ற இயற்கை வளங்களும் மனம் போன போக்கில் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு காலத்தில் வளமான இடமாக இருந்த பூங்கா தரிசு பூமியாக மாறியது. பூங்காவின் உட்புறம் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் நிறைந்தன. வாழிடங்கள் முழுமையாக அழிந்தது. வீடு கட்டுமானம், விறகுக்காக மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன. இது பூங்காவின் சூழல் மண்டலங்களை முற்றிலுமாக அழித்தது.
கிரெகரி காரும் போருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களும்
90% பெரிய விலங்குகள் போரின் இறுதி நாட்களில் இங்கிருந்து காணாமல் போயின. 2,500 யானைகள் 250 ஆகக் குறைந்தது. தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இது பூங்காவின் உயிர்ச் சூழலைப் பாதித்தது. வேட்டையாடி உண்ண விலங்குகள் கிடைக்காமல் போனதால் ஊண் உண்ணும் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இயல்பான சூழல் அழிந்து போனதால் வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்கள் சாதாரண நிகழ்வுகளாயின.
இதைத் தொடர்ந்து பூங்காவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் வலுப்பெற்றது. 2,000ம் ஆண்டிற்கு முன்பே அமெரிக்க சமூக செயல்பாட்டாளரான க்ரெகரி சி கார் அவர்கள் (Gregory C Carr) தலைவராக இருந்த அறக்கட்டளை மொசாம்பிக் அரசுடன் இணைந்து பூங்காவின் இயற்கைச் சூழலை மீட்பது, நீடித்த நிலையான வளர்ச்சியை நடைமுறைப்படுத்துவது, பிரதேச மக்களின் பங்களிப்பு போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு பூங்காவின் மீட்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
அமெரிக்க தொழில் முனைவர், சூழல் பாதுகாவலர், மனித உரிமைப் போராளி கிரெகரி கார் 1959ல் இடாஹோ ஃபால்ஸ் இடாஹோவில் பிறந்தார். யூட்டா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். அல்மமேட்டா ஹார்வோர்டு கென்னடி பள்ளியில் (Alma mater Harvard Kennedy School) பொதுக் கோட்பாட்டு அறிவியலில் 1986ல் முனைவர் பட்டம் பெற்றார். தந்தை டைலர் ஏஜ் (Taylor H). தாய் பெட்டி ஓ கார் (Betty O. Carr).
அதே ஆண்டு ப்ரேக் அப் ஆஃப் அட் அண்ட் டி (breakup of AT&T) என்ற அமைப்பினால் உள்ளுணர்வு பெற்று ஸ்காட் ஜோன்ஸ் (Scott Jones) என்பவருடன் இணைந்து பாஸ்ட்டன் டெக்னாலஜி (Boston Technology) என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இது குரல் மின் அஞ்சல்களை தயாரித்து தொடக்க கால தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்று வந்தது. 1998ல் இந்நிறுவனம் கன்வெர்ஸ் தொழில்நுட்பம் என்ற கம்பெனியால் வாங்கப்படும் வரை கிரெகரி கார் இதன் தலைவராக இருந்தார்.
1996 முதல் 1998 வரை அவர் புராடிஜி (Prodigy) என்ற ஆரம்ப கால சர்வதேச இணைய வசதி வழங்கும் அமைப்பின் தலைவராக செயல்பட்டார். 1996ல் ஆப்பிரிக்கா ஆன் லைன் ( Africa Online) என்ற அமைப்பின் இணை தோற்றுநரானார். 1998 வரை அதன் தலைவராக இருந்தார். 1998ல் இலாபம் தரும் நிறுவனங்களில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். மனித நல செயல்பாடுகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
1999ல் ஹார்வோர்டு பல்கலைக்கழகத்தில் மனித கோட்பாடு மையத்தின் (Carr Center) அடிப்படை கொடையாளியாக செயல்பட்டார். கற்பித்தல் மற்றும் ஆய்வின் மூலம் இந்த மையம் யு எஸ் மட்டும் உலகம் முழுவதும் நல்ல பொது நலக் கோட்பாட்டை மையமாகக் வைத்து மனித உரிமை நல பணிகளை அடிப்படை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
1999ல் அவர் கிரெகரி சி கார் அறக்கட்டளை (Gregory C. Carr Foundation) என்ற இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் அவர் 35 ஆண்டுகளுக்கான கொரொங்கோசா மீட்பு திட்டத்தை செயல்படுத்தினார். அறக்கட்டளையின் மீட்புக் குழு அரசுடன் இணைந்து பூங்காவின் எல்லையை கொரொங்கோசா மலைப் பகுதி வரை விரிவாக்கி மலையில் மூன்று மில்லியன் மரக்கன்றுகளை நட்டது. அவை வளர்ந்து பெரிய மரங்களாக இன்று காட்சி தருகின்றன.
பூங்காவில் பன்னாட்டு சூழல் மீட்பிற்கான அறிவியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. சூழல் சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பூங்காவின் எல்லையில் வாழும் உள்ளூர் மக்களுக்கு ஆரோக்கியம், கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நேஷனல் ஜியோக்ராபிக் தொலைக்காட்சி (National Geographic Television) பூங்காவின் மீட்புக் கதையை ஆப்பிரிக்காவின் இழக்கப்பட்ட ஏடன் (Africa's Lost Eden) என்ற தலைப்பில் 2008 அக்டோபர் 26 அன்று ஒளிபரப்பானது. சி பி எஸ் 60 நிமிட செய்தி என்ற நிகழ்ச்சியில் இந்த வெற்றிக் கதை 2022 டிசம்பர் 4 அன்று திரைப்படமாக ஒளிபரப்பப்பட்டது.
கார், பல்கலைக்கழகங்கள், மாநாடுகள், திரைப்பட விழாக்களில் சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பற்றிய முக்கியப் பேச்சாளராக உள்ளார். 2012ல் இருந்து அவர் பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு சூழல் விழிப்புணர்வு சொற்பொழிவு நடத்தி வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் 2014ன் சிறப்பு உரைத் தொடரில் பங்கேற்றார். 2000ல் அவர் ஐடாஹோ (Idaho) அருங்காட்சியகத்தை தோற்றுவித்தார்.
2001ல் அவர் மாசிசூசெட்ஸ் கேம்ப்ரிட்ஜ் ஹாவ்வோர்டு சதுக்கத்தில் சிறிய, பரிசோதனைரீதியிலான தயாரிப்புகளுக்காக மார்க்கெட் தியேட்டர் (Market Theater) என்ற அரங்கத்தைத் திறந்தார். 2001ல் ஆரிய நாடுகளின் வளாகம் (compound of the Aryan Nations) என்ற இடத்தை வாங்கி அதை பூங்காவாக மாற்றினார். இ ஓ வில்சன் (E. O. Wilson) என்ற உயிரியலாளரின் நெருங்கிய நண்பரான கார் மே 17 2014ல் கொரொங்கோசா பூங்கா மீட்பு பற்றி ஆர்வோர்டு பல்கலைக்கழகத்தில் டை இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் உரையாற்றினார்.
வில்சன் உயிர்ப் பன்மயத் தன்மை வாரியத்தில் வில்சன் இறக்கும் வரை பணி புரிந்தார். ஜூலை 23, 2024ல் பாய்சி (Boise) ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சிறந்த சேவைக்கான செனட்டர் ப்ராங்க் சர்ச் விருது, 2003ல் யூட்டா ஸ்டேட் பல்கலைக்கழக கௌரவ முனைவர் பட்டம், 2013ல் ஐடஹோ டெக்னாலஜி ஹால் ஆஃப் ஃபேம் விருது, 2015ல் பாய்சி ஸ்டேட் பல்கலைக்கழக கௌரவ முனைவர் பட்டம், 2024ல் சிறந்த பொது நல சேவைக்கான ப்ராங்க் சர்ச் மதிப்பு மிகு விருது போன்றவை கார் பெற்ற விருதுகளில் சில.
சூழல் மண்டலத்தின் மறு நிர்மானமே மீட்புத் திட்டத்தின் முக்கிய இலட்சியம். போரில் இல்லாமல் போன நீர் மூலங்கள் மீட்கப்பட்டன. சிறிய உயிரினங்கள், தாவரங்களின்வ் அளர்ச்சி உறுதி செய்யப்பட்டது. முன்பிருந்த வன உயிரினங்களை மீட்டுக் கொண்டு வரும் வகையில் அவற்றிற்கான வலசைப் பாதைகள் அமைக்கப்பட்டன. வேட்டையாடல் கட்டுப்படுத்தப்பட்டது. உள்ளூர் மக்கள் இதில் முக்கியப் பங்காளிகளாயினர்.
சட்ட விரோத வேட்டையாடலைத் தடுக்க பூங்காவை பயிரிடும் இடமாக பயன்படுத்தியிருந்த விவசாயிகளுக்கு வருமானத்திற்கான வேறு வழிகள் ஏற்படுத்தப்பட்டது. பூங்காவின் பல்வேறு திட்டங்களில் அவர்கள் பங்காளிகளாயினர். வருமானம் ஈட்டும் வழிகள் உருவானது. இந்த நடவடிக்கைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அழிக்கப்பட்ட மரங்கள், தாவரங்களுக்கு பதில் புதியவை நட்டு வளர்க்கப்பட்டது. பூங்காவின் இயற்கைச் சூழல் மீண்டு வந்தது.
மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் மதிப்பை உணர்த்தும்வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இயற்கையின் ஒரு அம்சமே மனிதன் என்பதை அவர்கள் உணர்ந்தனர். உழைத்து வருமானம் ஈட்டி வாழும் வழிகள் ஏற்பட்டன. பாதுகாப்பு பணிகளில் மக்கள் தாமே முன்வந்து செயல்படத் தொடங்கினர். கொரொங்கோசா மீண்டு வர ஆரம்பித்தது.
வன உயிரினங்களின் எண்ணிக்கை, சூழலை மீட்டெடுப்பது குறித்து நிரந்தரமாக கண்காணிக்க, ஆராய அறிவியல் பூர்வமான ஆய்வுக்கூடங்கள் தொடங்கப்பட்டன. இத்திட்டங்கள் உலகிற்கே ஒரு முன்மாதிரியாக மாறியது. இந்த மீட்புக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளூர் மக்களே. கிரெகரி கார் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் பூங்காவிற்கு மறுபிறப்பு கொடுப்பதில் முக்கியப் பங்காற்றின. சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. இது மக்களுக்கு புதிய வருமானம் ஈட்டும் வழியாக மாறியது. புல்வெளிகள், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன.
இதனால் அங்கு சூழல் மண்டலங்கள் துளிர் விட ஆரம்பித்தன. உணவும் குடி நீரும் கிடைக்கத் தொடங்கியதுடன் யானைகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இது மற்ற உயிரினங்களின் வரவிற்குக் காரணமானது. இப்போதுள்ள பூங்காவின் பரப்பு சுமார் 4,000 சதுர கிலோமீட்டர். அடர்ந்த மரங்கள், புல்வெளிகள், மழைக்காடுகளால் இன்று பூங்கா வளமாக உள்ளது.
ஒருகாலத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட யானைகள், சிங்கங்கள், சிறுத்தைப் புலிகள், நீர் யானைகள் போன்ற விலங்குகள் உள்ள ஆப்பிரிக்காவின் முதண்மை சரணாலயமாக இன்று கொரொங்கோசா திகழ்கிறது. ஊர்வன, பறவைகள், பாம்புகள் வாழும் முக்கிய மையமாக இந்த பூங்கா உள்ளது. இன்று பூங்காவிற்கு வருகை தருவோருக்கு விழிப்புணர்வு உள்ளூர் மக்கள் வகுப்புகளை நடத்துகின்றனர்.
மக்களின் பாரம்பரிய அறிவு இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. முன்பு பூங்காவிற்குள் வேளாண்மை, மீன் பிடி தொழில் மூலம் வருமானம் ஈட்டிய மக்களிடையில் மனித வனவிலங்கு மோதல்கள் மோசமாக இருந்தது. இது வன உயிரினங்களின் அழிவுக்கு காரணமானது. இதைத் தடுக்க மாற்றுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் ஒருகாலத்தில் வனச்செல்வங்களை கொள்ளையடித்தவர்கள் இன்று அதன் பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்.
மீண்டு வந்த கொரோங்கோசா
பூங்கா இன்று மீட்பின் வெற்றியை கொண்டாடுகிறது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் பூங்காவிற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். போருக்குப் பின் திரும்பி வந்த வன உயிரினங்கள் மகிழ்வுடன் உலாவுகின்றன. ஆப்பிரிக்காவின் க்ரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் (Africa’s great rift valley) அமைந்திருக்கும் பூங்காவின் உரேமா ஏரி (Lake Urema) நீர்ப் பறவைகள், முதலைகள், நீர் யானைகளுக்கு புகழ்பெற்றது. இங்கு படகு சவாரி நடைபெறுகிறது.
ஏரியில் சாம்பல் நிற மகுட கொக்குகள் (Grey-Crowned Cranes), நாரைகள் (storks), செங்கால் நாரைகள் அல்லது பூ நாரைகள் (flamingos) மற்றும் கூழைக் கடாக்கள் (pelicans) போன்ற பறவைகள் அதிக அளவில் வாழ்கின்றன. ஏரியில் சஃபாரி, சாகச சுற்றுலா பயனங்கள் நடைபெறுகின்றன. உள்ளூர் மக்களே இதில் சுற்றுலா ஊழியர்கள், வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர். வருமானத்திற்கு வழியாக சுற்றுலா மாறியுள்ளது.
கொரொங்கோசா உள்ளூர் மக்களின் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலாவிற்கு சிறந்த எடுத்துக்காட்டானது. சூழல் கல்வி, விழிப்புணர்வு வகுப்புகள் அடங்கியதே சுற்றுலாத் திட்டங்கள். விருப்பமுள்ளவர்கள் இதில் தன்னார்வலர்களாக சேர்ந்துகொள்ளலாம். இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய உதவியாக ஆய்வுக் கூடங்களும் உள்ளன.
காடும் மலையும் நதியும் விலங்குகளும் நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ உரிமையுள்ளவை. பூமி மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. தளராத தன்னார்வத்துடன் செயல்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வெற்றிக்கதையையே கொரொங்கோசா எடுத்துக் கூறுகிறது!
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்