பொருள் முதல்வாதமும் கருத்து முதல்வாதமும் 

பொருள் முதல்வாதம் சொல்கிறது மனிதனின் சிந்தனையும் கருத்துக்களும் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல், சமூகம் அவற்றில் நடக்கும் இயக்கங்கள், நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களின் பிரதிபலிப்பே என்று. அதாவது நான் என்ற பொருளாளாகிய ஒருவன் அவனிடம் இருக்கும் மூளை என்கிற பொருளாளாகிய ஒன்றைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள சூழலை மையமாக வைத்து பிரதிபலிப்பதே சிந்தனை என்பது பொருள் முதல்வாதிகளின் வாதம். ஆனால் கருத்து முதல்வாதிகளோ நான் சிந்திக்கிறேன் அதனால்தான் நான் இருக்கிறேன்; அதாவது நான் என்பதைவிடவும் என் சிந்தனைதான் முதன்மையானது என்று கூறுவர். 

சமூகத்தில் மதத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை மானசீகமாக ஆட்படுத்தி ஆளும் வர்க்கங்கள் அடக்குமுறைப் போக்குகளையும் அதர்மமான சுரண்டலையும் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆளும் வர்க்கத்திற்கு இக்கருத்து முதல்வாதம் பேருதவி செய்தது. அதனை உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் சமூக மாற்றம் விரும்பியோர் இருந்தனர். 

அந்தக் கடமையை வரலாறு காணாத வீரத்துடனும் தர்க்க ஞானத்துடனும் கருத்து முதல்வாதம் முன்வைத்த அனைத்துக் கேள்விகளையும் நேருக்குநேர் எதிர்கொண்டு அசைக்க முடியாத வாதங்களின் மூலம் அக்கேள்விகளுக்கு விடையளித்து கருத்து முதல்வாதத்தை அதன் அரணிலேயே சந்தித்து முறியடித்தவர்கள் மாமேதைகள் மார்க்ஸ் , எங்கெல்ஸ் , லெனின் ஆவர். 

அறியுமுன் கருத்து (Pre Conception ) 

ஆனால் மனித மனதில் அவர்களை அறியாமலேயே ஒன்றை பகுத்தாய்வு மூலம் அறியும் முன்பாகவே நிறைந்திருக்கும் கருத்து என்பது உண்டு. இடைவிடாத பிரச்சாரம்,  பாரம்பரியமாகத் தொடரும் நம்பிக்கைகள் ஆகியவை அந்த அந்த அறியுமுன் கருத்து மனித மனதில் நிறைந்திருப்பதற்கான முக்கியக் காரணமாகும். 

மார்க்ஸ் முதல் லெனின் வரையிலான முதல் தரப் பொருள் முதல்வாதிகளின் தலையாய பணி கருத்து முதல்வாதப் பிதற்றல்களை எதிர் கொள்வதிலேயே மிகப்பெரிதும் செலவிடப்பட்டதால் இந்த அறியுமுன் கருத்து மனித மனதில் உருவாக்கும் பொய்த்தோற்றம் குறித்து ஓரளவு கருத வேண்டிய அவசியம் அம்மேதைகளுக்கு அவ்வப்போது ஏற்பட்டதே தவிர மிகப்பெரிதாக ஏற்படவில்லை. பின்னாளில் இந்த அறியுமுன் கருத்து அவர்கள் சாதிக்க விரும்பிய சமுதாய மாற்றப் போருக்கு எத்தனை எதிராக இருக்கப்போகிறது என்பதை அம்மேதைகள் அறிந்திருக்கவில்லை.

ஆம். இன்று நமது நாட்டில் இடதுசாரிகள் என்று செயல்படுவோர் பலரிடமும் ஒரு சிந்தனைப் போக்கு உள்ளது. அதாவது இந்த நாட்டின் பெரிய முதலாளிகள் மற்றும் அந்நிய முதலாளிகள் நமது எதிரிகள்; நமது போராட்டம் அடிப்படையில் அவர்களை எதிர்த்ததாகவே இருக்க வேண்டும். அந்தப் போராட்டத்தில் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ற ரீதியில் நமது நாட்டின் தேசிய மற்றும் சிறு முதலாளிகள் நம்மோடு இணைவதற்கான வாய்ப்புள்ளது. அந்த வகையில் அவர்கள் நம் நேச சக்திகள் என்ற விடுதலைப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட எண்ணம் ஒரு அறியுமுன் கருத்தாக அவர்களிடம் மிகப் பெரும்பாலும் இப்போதும் நிலவுகிறது. 

‘இடதுசாரி’ மனதில் நின்று நிலவும் அறியுமுன் கருத்து முன்னிறுத்தும் சிக்கல் 

ஆனால் மேலோட்டமாக  விமர்சனப் பூர்வமின்றி நிகழ்வுகளை அதன் ஓட்டத்தில் பார்க்காமல்  பார்க்கும் போது சரியானதாகப்படும் இந்த விஞ்ஞான பூர்வமாகப் பகுத்தாய்வு செய்யப்படாத கருத்து நடைமுறையில் இதனை மையமாக வைத்து இயக்கம் கட்டும்போது பல சிக்கல்களை தோற்றுவிக்கிறது. 

அதாவது இவர்கள் கூறக்கூடிய அந்நிய முதலாளிகள் பெரிய முதலாளிகள் ஆகியோர் நேரடியாக நடத்தும் தொழிற்சாலைகளில் பொதுவாகத் தொழிலாளரை அணிதிரட்டப் பயன்படும் கூலி மற்றும் சம்பளப் பிரச்னைகளை மையமாக வைத்து தொழிலாளரை அணிதிரட்ட முடிவதில்லை. ஏனெனில் மற்ற சிறு தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படுவதைக் காட்டிலும் கூட இத்தொழிற்சாலைகளில் கூடுதல் சம்பளம் இதன் நிரந்தரத் தொழிலாளருக்கு வழங்கப்படுகிறது. 

ஆனால் சமீப காலங்களில் இந்நிறுவனங்கள் உயர்தொழில் நுட்பம் கற்ற ஒரு சிலரைத் தவிர வேறுயாரையும் தங்களது தொழிற்சாலையின் நிரந்தரத் தொழிலாளர் சம்பளப் பட்டியலில் வைப்பதில்லை. முடிந்த அளவிற்கு தங்களது மையமான உற்பத்திப் பொருளுக்குத் தேவைப்படும் அனைத்து உதிரிகளையும் ஒப்பந்த அடிப்படையில் சுதேசிச் சிறுமுதலாளிகளுக்கு தயாரிக்கக் கொடுத்து விடுகின்றனர். 

இதற்கான காரணம் மிகமிகக் குறைந்த கூலி கொடுத்து ஒட்டஒட்டத் தொழிலாளரைச் சுரண்டி வேலை வாங்கி தாங்கள் அந்த உதிரி உறுப்புகளை நேரடியாகச் செய்தால் எவ்வளவு செலவாகுமோ அதைக் காட்டிலும் குறைந்த செலவிலேயே அவற்றைப் பெரும் முதலாளிகளும் , அந்நிய முதலாளிகளும் சிறு முதலாளிகளிடமிருந்து பெற்றுவிட முடிகிறது என்பதே.

அதே சமயத்தில் குறைந்த கூலியை மையமாக வைத்து பெரிய அளவில் தொழிலாளரை அணிதிரட்டும் வாய்ப்பு சிறு தொழிற்சாலைகளிலேயே உள்ளது. ஆனால் இங்கு சிறு முதலாளிகள் நேச சக்திகள் என்று கருதும் தற்போது  இடதுசாரிகளை ஆதிக்கம் செலுத்தும் கண்ணோட்டம் தொழிலாளரை அணிதிரட்டுவதை மந்தப்படுத்துகிறது.

எவன் சுரண்டுகிறான் என்பதல்ல  பார்க்கப்பட வேண்டியது சுரண்டல் உள்ளதா என்பதே 

அதாவது சிறு முதலாளி பெருமுதலாளியால் சுரண்டப்படுகின்றானா இல்லையா என்பது பிரதானமல்ல. பிரதானமானது தொழிலாளி எத்தனை தூரம் சுரண்டப்படுகின்றானோ அதனை அடிப்படையாகக் கொண்டு அவனை அணிதிரட்டி போராடுவதுதான். ஏனெனில் சிறுமுதலாளிகளின் உள்ளகிடக்கை ஒருபோதும் தொழிலாளியாக வேண்டும் என்பதல்ல. மாறாக பெருமுதலாளியாக வேண்டும் என்பதுதான். 

ஆனால் முதலாளித்துவச் சுரண்டலின் ஏகபோகக் கட்டத்தில் ஏகபோகங்களுடனான போட்டியினைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிறுமுதலாளிகளில் ஒருசிலர் தொழிலாளிவர்க்க அணிகளுக்குத் தள்ளப்படுகின்றனர். அப்படித் தள்ளப்படுபவர்களும் மனநிலையில் பல முதலாளித்துவ குணாம்சங்களைக் கொண்டவர்களாகவே இருந்து கொண்டு தொழிலாளிவர்க்க இயக்கத்திற்குள் முதலாளித்துவ சிந்தனைப் போக்கை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். அதாவது அக்குணங்களை அவர்கள் சரிசெய்து கொள்ளாவிட்டால் பட்டாளிவர்க்க இயக்கத்தின் முக்கிய ஊழியர்களாக அவர்களால் ஆகமுடியாது என்ற நிலையே அவர்களைப் பொறுத்தவரையில் உள்ளது.

சிறு முதலாளிகள் பெருமுதலாளிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதனை எதிர்த்து அவர்கள் போராடட்டும்; அதனைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொழிலாளர் போராட்டத்தை மந்தப்படுத்த வேண்டுமென்பதில்லை.

சிறுமுதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டலை எதிர்த்து பொங்கி எழ உருவாகும் வாய்ப்பினைப் பயன்படுத்தி நாம் தீரமிக்க தொழிலாளிவர்க்கப் போராட்டங்கள் கட்டினால் அவற்றின் விளைவாக சிறுமுதலாளிகள் தொழிலாளருக்குத் தரவேண்டிவரும் கூடுதல் கூலியும் மேலான வேலைச் சூழ்நிலையுமே அவர்களுக்கு நெருக்கடியினைத் தோற்றுவிக்கும்; அதனால் எந்தப் பெருமுதலாளிகளுக்காக அவர்கள் வேலை செய்கிறார்களோ அவர்களை எதிர்த்த போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை சிறுமுதலாளிகளுக்கு உருவாகும்.

இந்திய உழைக்கும் வர்க்க இயக்கத்தில் உள்ள இந்த மையமான அம்சத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நல்ல வாய்ப்பினை நமக்கு தந்துள்ளது தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரு. வசந்தபாலன் அவர்களின் அங்காடித் தெரு திரைப்படம் 

எந்தவொரு வகையான செயற்கைத் தன்மையும் , மிகைப்படுத்துதலுமின்றி காலங்காலமாக சென்னை ரங்கநாதன் தெரு போன்ற இடங்களில்  பெரிய கடைகளில் வேலை செய்யும் வறட்சி பாதித்த பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு சுரண்டப்படும் இளம் தொழிலாளரின் அவலநிலையின் தத்துரூபமான படப்பிடிப்பாக இது உள்ளது.

காட்டுச் சுரண்டலைச் சாஸ்வதமாக்கக் கடைப்பிடிக்கப்படும் யுக்திகள்

தொழிலாளரை பணியமர்த்துவதில் அதாவது அவர்கள் எந்தவகை பின்பலமும் அற்றவர்களாக தாங்கள் சம்பாதித்துத்தான் குடும்பத்தைக் காத்தாக வேண்டும் என்ற முழுமையான நிராதரவான நிலையில் இருப்பவர்ளாக உள்ளார்களா என்று பார்ப்பதில் தொடங்கி அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிமிர்ந்து எழுந்து விடாமல் இருக்கச் செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் அடக்குமுறை யுக்திகள் வரை முதலாளிகளால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து யுக்திகளும்  மிகவும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கட்டுப்பாட்டை நிலைநாட்டுகிறேன் என்ற சாக்கில் நடத்தப்படும் பாலியல் பலாத்காரமும் வெளியில் யாருக்கும் தெரியாமல் காலங்காலமாக நடந்து கொண்டிருப்பது வெளிக் கொணரப்பட்டுள்ளது. 

தானாகவும் கடிக்கும் கண்காணி நாய் 

நாய் பல சமயங்களில் எஜமான் ஏவினால் கடிக்கும்; ஆனால் கடித்து ருசிகண்ட பின்பு அதாகவும் கூட சிலரைக் கடிக்கும். அதுபோல்தான் இந்திய ‘இடதுசாரி’களால் செல்லமாக நேச சக்திகள், சிறு உடமையாளர்கள் என்று அழைக்கப்படும் இப்படத்தில் வரும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்களில் முதலாளிகளால் கண்காணிகளாக நியமிக்கப் படுபவர்களின் நடைமுறைகளும் உள்ளன.

கட்டுப்பாட்டை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் தனது மன விகாரங்களை இஷ்டத்திற்குப் பிரதிபலிக்கவும் சபல சிந்தனைகளைத் தணித்துக் கொள்ளவும் அவர்களுக்கு முதலாளியால் தரப்படும் வாய்ப்பும் ஒரு கருதற்பொருளாக முதலாளிகளால் பாவிக்கப்படுகிறது. அதாவது இந்தக் கண்காணிகள் சம்பளத்திற்காக மட்டுமல்ல; சிறு வயது இளம் பெண்களிடம் அரசல் புரசலாகத் தவறாக நடந்து கொள்ள அவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பையும் மனதிற்கொண்டே இப்பணியில் நீடிக்கின்றனர்.     

‘மாடர்ன் டைம்ஸ்’ சுரண்டலைக் காட்டிலும் கொடூரமான சுரண்டல் 

நூற்றுக் கணக்கானோர் உட்காருவதற்கு கூட இடம் போதாது என்ற இடத்தில் உறங்கியாக வேண்டிய நிலையில் வேலையாட்கள் வைக்கப்பட்டிருக்கும் போக்கு , அதைப்போல் அவர்கள் குளிப்பதற்கு , மல ஜலம் கழிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அறவே போதாத வசதிகள் அதாவது அவர்களை அவர்களே நாங்களும் மனிதர்கள் தான் என்று எண்ண முடியாது , தாங்கள்  எப்படியாகிலும் வாழ்ந்தாக வேண்டிய ஜென்மங்கள் என்று கருதும் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை நாம் நாகரீக உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்கச் செய்கிறது. மிகக் குறைந்த சாப்பாட்டு நேரம் அதில் நூற்றுக் கணக்கனோருடன் முண்டியடித்து சுகாதாரக் கேடான சூழ்நிலையில் சாப்பிட்டுவிட்டு வந்து பணியில் சேரவேண்டிய கட்டாயநிலை காட்டப்பட்டுள்ள விதம் சார்லி சாப்ளினின் மார்டன் டைம்ஸ் ஐ நினைவுப்படுத்தும் ஒரு அற்புதப் படப்பிடிப்பு. ஆனால் மாடர்ன் டைம்ஸ் எடுக்கப்பட்ட காலத்தில் கூட நிலவாத பெருங்கொடுமை , இச்சூழ்நிலையில் சாப்பிட்டுவரும் போது தவிர்க்க முடியாமல் ஏற்படும் தங்களது ஒவ்வொரு நிமிடத் தாமதத்திற்கும் ரூபாய் ஒன்று என்று தண்டம் செலுத்தவேண்டிய கோர நியதி. 

முதலாளிகளின் எலும்புத் துண்டுகளுக்கு இரையாகும் காவல்துறை 

உடமையாளர்களுக்கும் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறைக்குமுள்ள நெருங்கிய தொடர்பு; கொலையே நேர்ந்தால் கூட அதனை மூடிமறைக்க இடைவிடாமல் கிடைக்கும் கையூட்டைக் கருத்தில் கொண்டு இரையாகும் , துணைபோகும் காவல்துறை. எப்போதாவது இந்தக் கொடும் கொத்தடிமை சூழ்நிலையில் ஒரு ஸ்பார்டகஸ் உருவாகிவிட்டால் அவன் திருடன் என நிறுவனத்தால் முத்திரை குத்தப்பட்டு அதற்குக்  காவல்துறையால் ஒப்புதலும் வழங்கப்பட்டு தெருவில் நிறுத்தப்படும் கொடுமை; இலவு காத்த கிளியாக எந்த இந்தத் தேசிய , குட்டி முதலாளிகளின் நேசத்திற்காக இந்திய

‘இடதுசாரி’களும் ‘கம்யூனிஸ்ட்’களும்” காத்துக் கிடக்கின்றனவோ அந்த நேசம் அங்கு கடை வைத்திருக்கும் அனைத்து முதலாளிகளிடமும் அதுவாகவே நன்கு மலர்ந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளரை யாரும் வேலைக்கு சேர்க்காமல் அல்லாட விடும் அவலம்;  

கொடும் சுரண்டல் , கடுமையான அடக்குமுறைகளாலும் கருகிப் போகாத மனிதம் 

இத்தனைக்கும் மத்தியிலும் கூட அந்த உழைப்பாளிகளிடம் ஊறித்ததும்பும் ஒரு வாழ்க்கை; நகைச்சுவையான கலந்துரையாடல்கள். மத்தியதர வர்க்க நொண்டி ஒழுக்க நெறிமுறைகளிலிருந்து விலகி நின்று தன் பழைய காதலனையும் தன் பழைய காதலியையும் தற்போதைய காதலர்கள் அசைபோட்டுக் கொள்ளும் அழகு அதாவது வாழ்க்கை தான் எதையும் தாக்குபிடித்து நிமிர்ந்து நிற்கும் தன்மைகளை எவ்வளவு கொண்டிருக்கிறது என்பதை உயர்த்திக் காட்டும் உன்னதம்.

நகரங்களில் நிலவும் இரவு நேரக் கிரிமினல் நடவடிக்கைகளால் பெண்கள் தனியாக மட்டுமல்ல தாங்கள் விரும்பியவர்களோடு கூட நடமாட முடியாதவையாக ஆகிவருவதும் , வாகனங்கள் மனிதர்களை அற்பப் புழுக்களாகக் கருதி ஓட்டப்படுவதால் நிகழும் கோர விபத்துக்களும் எந்த சினிமாத்தனமான மிகைப் படுத்துதல்களுமின்றி எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

விடுமுறை குறித்த தொழிலாளர் சட்டங்கள்  தொழிலாளர் துறையிருந்தும் அதற்கான அலுவலகங்கள் பெயர்ப்பலகைகள் ஆயிரக் கணக்கான அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தண்டச் சம்பளம் ஆகியவையிருந்தும்  இதுபோன்ற நிறுவனங்களில் அறவே அமலாவதில்லை. அதனால் முறையாக விடுமுறை எடுத்து ஊர்வந்து வேண்டியவர்களைக் காணமுடியாத நிலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் தள்ளப்படுகின்றனர். 

அச்சூழ்நிலையை தன் அண்ணனைப் பார்க்க ஆசை ஏராளம் இருந்தும் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் கதாநாயகனின் தங்கை தன் அண்ணன் வேலை செய்யும் கடையில் பொருள் வாங்கியதற்காக வழங்கப்பட்ட பையை பொருள் வாங்கியவர்களிடம் இருந்து இரவலாகக் கெஞ்சிப் பெற்று அதனைப் பார்த்து ஆறுதலடைவது; காலொடிந்த நிலையில் இனிமேல் செயலிழந்த தனக்கு பணம் அனுப்பும் வாய்ப்பற்றவளாக மகள் ஆகிவிட்டாள் என்று தெரிந்தவுடன் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும் விதத்தில் இரக்கமற்ற காரியவாதியாக அவளைக் கைவிட்டுக் கிளம்பும் தந்தை; ஆனால் நெருங்கிப் பேசிப் பார்க்கையில் அப்படிப்பட்ட ஒரு வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவரே இவர், அதனால் தான் இது குறித்துத் தனக்குள்ளேயே தேங்கிக் கிடக்கும் வெறுப்புணர்வை தயங்காது வெளிப்படுத்துகிறார் என்று இவருக்குள்ளும் நிறைந்திருக்கும் மனிதத்தை வெளிப்படுத்தும் கதாநாயகியின் தந்தை குறித்த படப்பிடிப்பு எனச் சிறுசிறு காட்சி அமைப்புகள் மூலம் உழைக்கும் வர்க்கத்தில் ஊறித் ததும்பும் பாசமும் மனிதமும் வெளிப்படுத்தப்படுகிறது.

 இடையூடாக வீட்டுவேலை செய்யும் காதாநாயகனின் தங்கை மூலமாக வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு நிகழும் பிரச்னைகளும் மக்களின் பார்வைக்கு முன் வைக்கப் படுகின்றன. இயற்கையில் உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் பருவமாற்றங்களை தீட்டு என்று சித்தரித்து அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்குப் புறமாக வீட்டு நாய் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் அறையைக் காட்டிலும் நெருக்கமானதும் அசுத்தமானதுமான அறையில் தள்ளிவைக்கும் கொடுமையைச் சித்திரிப்பதன் மூலம் ஜனாதன ஹிந்து தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் மக்களின் மனிதத் தன்மையற்ற பழக்க வழக்கங்கள் உரிய விதத்தில் சாடப்படுகிறது. 

தலைமுறை இடைவெளி 

அதே சமயத்தில் கெளஹாத்தியில் தன் மகளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டதால் உதவிக்கென்று காதாநாயகியின் தங்கையை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் வீட்டு எஜமானி அனுப்பும் போது இதுபோன்றதொரு பருவம் எய்துதல் என்ற ஒரு இயற்கை நிகழ்வுக்காகத்தானே தன்னை ஒதுக்கி வைத்தார்கள் என்ற எண்ணம் சிறிதுமின்றி அந்த அக்கா நல்லவர்கள் அவர்கள் என்னை நன்றாக வைத்துக் கொள்வார்கள் என்று அப்பணியை விரும்பி ஏற்றுச்செல்லும்  தங்கை. இதன் மூலம் எஜமானத்துவம் மற்றும் சடங்குகள் சம்பிரதாயங்களில் ஊறி மனித நேயத்திற்கு எதிராக நிற்கும் பழைய தலைமுறையைப் பிரதிபலிக்கும் தாயும் அதிலிருந்து சற்றே மாறுபட்டு நிற்கும் புதிய தலைமுறையின் திரையில் காட்டப்படாத மகளும் முன்னிறுத்தப் படுகிறார்கள்.

இன்றைய முதலாளித்துவச் சுரண்டலின் தன்மையையும் அவலத்தையும் இந்தியாவில் இடதுசாரிகள் , கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் சிறு முதலாளிகள் நேசசக்திகள் , நிலவுடமைச் சூழல் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு நிலவுகிறது. என்றெல்லாம் கூறி மூடிமறைக்கின்றனர். அவர்கள் ஏற்படுத்தும் அனைத்துக் குழப்பங்களையும் , ஒரேயயாரு மணியான வசனத்தின் மூலம் இத்திரைப்படம் தெளிவு படுத்தி நாட்டில் ஒட்டுமொத்தத்திலும் நிலவுவது முதலாளித்துவச் சூழலே என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

விற்கத் தெரிந்தவனே வாழத் தெரிந்தவன் 

தாடியுடன் சாலையோரத்தில் அமர்ந்து பொருள் விற்கும் கண் தெரியாத பெரியவர்  கடையிலிருந்து வெளியேற்றப்பட்டு எந்தக் கடையிலும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாமல் அவரிடம் வந்து சோர்ந்து நிற்கும் படத்தின் கதாநாயகன் மற்றும் நாயகியிடம் கூறுவார் விற்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன் என்று. ஆம் தன்னிடமுள்ள எதையயல்லாம் சந்தைச் சரக்காக்கி விற்க முடியுமோ அதையயல்லாம் விலையாக்க முடிந்தவனே இச்சமூக அமைப்பில் வாழ முடிந்தவன். ஏனெனில் நிலவுடைமைச் சமூகச் சூழலின் உழைப்பாளியான பண்ணையடிமை தன் உழைப்பை அது விலைபோகுமிடத்தில் விற்க முடியாது.  அது சமூகக் கட்டுப்பாடு; இப்படத்தில் காட்டப்படுவது போல் கெட்ட பெயர் சுமத்தி வேலை வாய்ப்பைப் பறிப்பதல்ல. இதுதான் மையமானது என்று ஆகிவிட்ட இன்றைய சூழல் அப்பட்டமான முதலாளித்துவச் சூழலாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?

வேலை கேட்டுவந்த ஒருவன் பாரமரிப்பின்றி நாற்றமெடுத்துக் கிடக்கும் கழிப்பறையை நாசூக்காக கட்டணக் கழிப்பறையாக மாற்றி அதிகச் சிரமமின்றி சம்பாதித்து ஒரு அரைக் கனவான் போல் நடத்தும் வாழ்க்கை இதை நிறுவ படத்தில் காட்டப்படும் ஒரு பொருத்தமான காட்சி. 

இப்படத்திற்கு விமர்சனம் எழுதியிருந்த ஹிந்து நாளிதழ் ஒரு வியத்தைக் கோடிட்டுக் காட்டியிருந்தது. அதாவது இந்திய மக்களின் வறுமையையும் , அவலங்களையும் அன்னியநாட்டு இயக்குனர்கள் தான் படம் பிடித்துக் காட்ட முடியும் என்பதல்ல என்று வசந்த பாலன் இப்படத்தைத் தயாரித்ததன் மூலம் நிரூபித்திருக்கிறார் என்று அவ்விமர்சனம் கூறியிருந்தது. அனேகமாக ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்தை மனதில் நிறுத்தி இது சொல்லப்பட்டிருக்க வேண்டும். 

சுய இரக்கம் பச்சாதாபம் 

உண்மையிலேயே மேலைநாட்டு இயக்குனர்கள் அணுகுமுறைக்கும் நமது அணுகுமுறைக்கும் இடையிலான வேறுபாடு இப்படத்திலும் சிறிதளவு இருக்கவே செய்கிறது. வகுப்புக் கலவரத்தில் ஏற்பட்ட தாயின் மரணம் ,  தங்களிடமிருந்த அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை இவை போன்ற தாங்கொண்ணாக் கொடுமைகள் கூட ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் முக்கிய பாத்திரங்களான சகோதரர்களிடையே ஒரு சுய இரக்கப் போக்கினையும் , பச்சாதாபத்தையும் உருவாக்கவில்லை. அவர்களின் போக்கு இந்த உலகம் ஒரு போர்க்களம் அதை எதிர்த்து வாழ முடிந்தவரை வாழ வேண்டும் என்பது போலவே இருந்தது. ஆனால் இப்படத்தில் அந்த சுய இரக்க , பச்சாதாபப் போக்கு மற்ற தமிழ்ப் படங்களில் காட்டப்படும் குமட்டல் வரும் அளவிற்கு காட்டப்படாவிட்டாலும் சிறிதளவு இருக்கவே செய்கிறது. 

அரும்புவதாகவேனும் காட்டப்பட்டிருக்க வேண்டிய எதிர்க்கும் போக்கு 

பொதுவாக இதுபோன்ற ஈவிரக்கமற்ற சுரண்டலையும் அதனைத் தங்கு தடையின்றி நடத்துவற்காகக் கட்டவிழ்த்து விடப்படும் நிறுவன ரீதியான அடக்குமுறைகளையும் மையமாகக் கொண்டு படம் எடுக்கையில் சில காட்சியமைப்புகள் மூலம் இதனை எதிர்க்கும் போக்கும் அரும்பத் தொடங்கியிருக்கிறது என்று காட்டத் தவறக் கூடாது. அதனை யதார்த்தத்திற்குப் பொருத்தமின்றி கொடுமைகளுக்கு எதிரான பெரும் எழுச்சி உருவாகிறது என்று காட்டத் தேவையில்லை. ஆனால் ஒருபோதும் இதுதான் விதி இதனை மாற்றவே முடியாது என்ற விதத்திலும் இந்த அவலங்கள் காட்டப்படக் கூடாது. அவ்வாறு காட்டினால் படம் பார்ப்பவரிடையே ஒரு மனச்சோர்வும் , கசப்பும் தோன்றும். அதற்கு இடமளிக்காமல் இக்கொடுமைக்கெதிராக பாதிக்கப் பட்டுள்ளோர் திரள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்ற வகையில் ஒரிரு சம்பவங்களைச் சேர்த்திருந்தால் படம் பார்த்துத் திரும்பும் போது இப்படம் தோற்றுவிக்கும் சிறிதளவு கசப்புணர்வும் மனச்சோர்வும் கூட இல்லாதிருந்திருக்கும். ஆம் அந்த வகையில் சார்ல்ஸ் டிக்கன்ஸின் அப்பட்டமான சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் போக்கிலிருந்து சிறிதளவு தாண்டியிருந்தால் இத்திரைப்படம் இன்னும் கூட மெருகேறிய ஒன்றாக , ஒரு சமுதாய கடமையினை இன்னும் தெளிவாகச் செய்த ஒன்றாக இருந்திருக்கும்.  

                                                - ஆனந்தன்

(மாற்றுக்கருத்து மே 2010 இதழில் வெளியான கட்டுரை)
(மாற்றுக்கருத்து மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

 

Pin It