ilayaraja 375அது ஓர் 
இரவுப் பயணம்...
வழி நெடுக
இளையராஜா பாடல்கள். 

முதல் பாடல் எனக்கு 
பிடித்தது.
இரண்டாவது பாடல் உனக்கு 
பிடித்தது.
மூன்றாவது பாடல் நமக்கு
பிடித்தது.
 
அடுத்தடுத்து வந்த பாடல்களில் 
நம் முதல் சந்திப்பிலிருந்து 
இதோ நாளை காலை உனக்கு 
ஆகவிருக்கும் 
திருமணம் வரை இளையராஜா 
நம்மோடு பயணித்துக் 
கொண்டிருக்கிறார்...

தேனீர்க்காக  
ஏதோ ஒரு காட்டுப் பகுதியில் 
பேருந்து நின்றபோது 
சாலையில் நின்று 
ஓர் இல்லாமையின் நிகழ்வோடு 
வெறித்துக் கொண்டிருந்தேன்...

சட்டென எனைக் கடந்த 
இன்னொரு பேருந்து என் மீது 
ஏறி போனதாகவே 
தோன்றியது...

அந்தப் பேருந்தில் 
நொடிகளில் 
கேட்ட ஒலி அலையில்
அதே இளையராஜா பாடல் 
மிதப்பதாக நம்பினேன்...

நாளை உனக்கு 
தாலி கட்டவிருக்கும் 
அந்த எவனோ ஒருவனுக்கு 
பிடித்த பாடலாககூட 
அது இருக்கலாம்....

நம் காதலின் முடிவும் உன் 
வாழ்வின் தொடக்கமும்  
ஒன்றாக ஆரம்பிக்கும் நேரம் 
இன்னும் சற்று நேரத்தில் 
வர போகிறது... 
அப்போதும் உங்களை எல்லாம் 
எழுப்பி விட வைத்திருக்கும் 
அலாரத்தில் அதே இளையராஜா 
சிணுங்கத் தொடங்கலாம்...

அவர் இன்றி எதுதான் அசையும் 
என்பதாக தொடங்குகிறது 
விடிந்த பிறகும் 
எனது அரூபப் பயணம்.

- கவிஜி

Pin It