1980 முதல் 1990 வரை தமிழ் சினிமா
80க்கு முன்...

1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான். சட்டைப்பையில் சொற்பச் சில்லறை. வயிற்றில் பசி. கண்களில் தொலைதூர நம்பிக்கை. ஆனால் அவனது தலையிலோ பாரம் கொள்ளாத கனவு. சட்டென எதிர்வருகிறது ராஜகுமாரி திரையரங்கம். வெறுமையை விரட்டும்விதமாக அந்த இளைஞன் அந்த வளாகத்தினுள் நுழைகிறான். ஏதோ ஒரு கன்னடப்படம் இயக்குனர் ‘புட்டன்னா கனகல்’ என எழுதப்படிருக்கிறது. பொழுதைப்போக்க வேண்டி அந்த இளைஞனின் கண்கள் முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட அட்டைகளின் மேல் படர்ந்து செல்கின்றன. சட்டென அவனது மூளைச் செல்கள் புத்துயிர்ப்பு கொள்கின்றன. தமிழ்ச் சினிமா தன்னுள் புதிய மறுமலர்ச்சியை கண்டுணர்ந்து கொண்ட கணம் அது என்பது அந்த இளைஞனுக்கே கூட அப்போது தெரியாது. அந்த சதுர அட்டைகளில் காட்சிக் கோணங்கள் அவனுக்குள் இதுவரை அனுபவிக்காத புது உணர்வை உண்டாக்குகின்றன.

உள்ளுக்குள் ஒரு புதிய இசை, பெயர் தெரியாத இசை, மனசு படபடக்கிறது. உடனே டிக்கட் வாங்கிக்கொண்டு இருட்டினுள் நுழைகிறான்.

நான்கு வருடங்கள் கழித்து அவன் வெளியே வந்தபோது எண்ணற்ற காமிராக்கள் அவனை மையமிட்டன. அன்று வெறும் சின்னச்சாமியாக இருட்டினுள் நுழைந்த அந்த இளைஞன் இப்பாது பாரதிராஜாவாக வெளிச்சத்தின் முன்னே வந்து நின்றான். அவன் இயக்கி அந்த வருடம் வெளியான ‘பதினாறு வயதினிலே’ திரைப்படம்தான் அவனுக்கான அந்த வெளிச்சத்தை உருவாக்கி தந்திருந்தது. திரையுலகம் என்பதோடு நில்லாமல் தமிழக பண்பாட்டுத் தளத்திலும்கூட பல மாறுதல்களை உருவாக்கிய அப்படத்தின் புதிய திரைமொழிக்கும் 70-களின் துவக்கத்தில் இந்திய சமூகப் பொருளாதார சூழலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று நான் சொன்னால் அனேகம் பேர் எப்படி என கேள்வியை எழுப்பலாம். தொடர் ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக நகரமயமாதல், வேலையில்லா திண்டாட்டம், நடுத்தரக் குடும்பங்களின் எண்ணிக்கை பெருக்கம் ஆகியவை காரணமாக இந்தி திரைப்பட உலகில் புதுவகை சினிமாக்கள் தோன்றின. சினிமாக்கள் என அடையாளமிடப்படும் இத்தகைய திரைப்படங்கள் இதற்குமுன் இருந்துவந்த கலைப்படங்களின் தீவிரத்தன்மையிலிருந்து வாழ்கையை மிகவும் நெருக்கமாக பார்த்து அதன் நுண்மைகளையும் அழகையும் பார்வையாளனோடு பகிர்ந்துகொள்ளும் விதமாக செயல்பட்டன்.

ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பட்டீல், நஸ்ருதீன்ஷா, அமோல் பலேகர், ஓம்புரி போன்ற சாதாரண முகம் கொண்ட மனிதர்கள் நாயகர்களாகவும், நாயகிகளாகவும் உருவெடுத்தனர். ஷியாம் பெனகல், மிருணாள்சென், கோவந்த் நிகலானி, ரிஷிகேஷ் முகர்ஜி, மணி கவுல் போன்ற இயக்குனர்கள் அக்காலகட்டத்தின் சிற்பிகளாக உருவெடுத்தனர். அந்த அலை கன்னடம், மலையாளம் என தெற்கிலும் பரவத் துவங்கியது. கன்னடத்தில் கிரீஷ், காசரவள்ளி போன்ற இயக்குனர்கள் தோன்றி இந்த புதிய ரசனைக்கு தங்களது மக்களை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில்தான் ‘புட்டண்ணா கனகல்’ எனும் இயக்குனரின் வழியாக அந்த அலை பாரதிராஜாவையும் தொட்டது.

1977ல் வெளியான பதினாறு வயதினிலே வெளியாவதற்கு முன்பே தேவராஜ் மோகனின் ‘அன்னக்கிளி’ திரைப்படம் ஓரளவு இந்த அலையின் குணக்கூறுகளை, கதைக்களம், திரைக்கதை போன்றவற்றில் காண முடிந்தது. காட்சி மொழி மற்றும் நடிகர் தேர்வு, கதை நகர்த்தப்பட்ட பாங்கு மற்றும் கறுப்பு வெள்ளையை முழுவதுமாக ஒழித்துக் கட்டியதில் அதன் பங்களிப்பு ஆகியவை காரணமாக ‘பதினாறு வயதினிலே’ (1977) இந்தப் பெருமைகளை முழுவதுமாக தன் வசம் தக்க வைத்துக் கொண்டது.

பதினாறு வயதினிலேவை தொடர்ந்து 80க்கு முன் பல திரைப்படங்கள் ஏறக்குறைய இதே பாணியில் வெளிவரத் துவங்கின. ஆனாலும் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரய்யா தன் எழுத்தாள நண்பர்களான வண்ணநிலவன் மற்றும் சோமசுந்தரேஸ்வர் (இயக்குனர் கே.ராஜேஸ்வர்) ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ (1978) மற்றும் வசனகர்த்தாவாக இருந்து இயக்குனராக அறிமுகமான மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘முள்ளும் மலரும்’ (1978) ‘உதிரிப்பூக்கள்’ (1979), ஒளிப்பதிவில் அலையை உண்டாக்கி பின் இயக்குனராகவும் வடிவம் கண்ட பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ (1979), துரை இயக்கிய ‘பசி’ (1979), தேவராஜ் மோகனின் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ (1979) போன்ற திரைப்படங்களும், பாரதிராஜாவின் அடுத்தடுத்த படங்களான ‘கிழக்கே போகும் ரயில்’ (1978), ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘புதிய வார்ப்புகள்‘ (1979) போன்ற படங்களுமே இந்த புதிய அலையின் வெற்றிச்சரடை தொடர்ந்து கையெடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டன. மேற்சொன்ன அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பியவை என்பதுதான் கவனிக்க வேண்டிய சேதி.

இப்படியான புத்தெழுச்சியுடன் ஒரு உயர்ந்த தளத்தை நோக்கி தன் சிறகுகளை விரித்து பறக்கத் துவங்கிய தமிழ் சினிமா அடுத்த பத்து வருடத்தில் தடதடவென பெரும் பாதாளத்தை நோக்கி சரிந்து உருண்டது என்று சொன்னால் கூட மிகையில்லை.. இந்தி சினிமாவைப் போலவே தமிழ் சினிமாவும் தான் தீட்டிய கத்தியாலேயே குத்துபட்டு குற்றுயிராக சரிந்தது. அதுவரையிலான நாயகனுக்குண்டான எந்த முக அம்சம் எதுவும் இல்லாத அமிதாப் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட காரணமே அங்கு எழுந்த இடைநிலை சினிமாக்களின் அலைதான்.

புவன் ஷொம், அபிமான், குட்டி போன்ற கிட்டதட்ட இருபது இடைநிலை சினிமாக்களின் மூலமாக கதாநாயகனாக கட்டியமைக்கப்பட்ட அமிதாப் எனும் அதே நடிகர்தான் பிற்பாடு தனது டான், தீவார் போன்ற படங்களின் மூலமாக கடந்து வந்த பாதையை முழுவதுமாக சிதறடித்தார். தொடர்ந்து குர்பானி, ஷான் போன்ற வெத்து பிரமாண்டங்களும் வந்து இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது தனிக்கதை.. அமிதாப் அங்கு செய்த அதே காரியம் இங்கு கமல் மற்றும் ரஜினியால் நிகழ்த்தப்பட்டது. இதில் என்ன வேதனை என்றால் இருவருமே நல்ல சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டிருந்தவர்கள். ‘அவள் அப்படித்தான்’ உருவாக கமல் தன்முனைப்பாக இருந்து ரஜினியையும், ஸ்ரீப்ரியாவையும் வற்புறுத்தி அதில் நடிக்க வைத்தவர். பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான் என அவர்கள் உருவக்கிய பாதை, முரட்டுக் காளை, சகலகலா வல்லவன் போன்ற படங்களின் மூலமாக அவர்களாலேயே முடித்து வைக்கப்பட்டது. சாதாரண மனிதனை மக்கள் ஒன்றுகூடி கைகளைத் தட்டி அவனை நட்சத்திரமாக மாற்றி விட்டபின் வானத்தில் சென்று ஒட்டிக் கொள்வது இயல்பான ஒன்றுதான். அமிதாப், கமல், ரஜினியின் இந்த மாற்றத்திற்கு சமூகமும் ஒரு முக்கியமான காரணம்.

எண்பதுகளின் துவக்கத்தில் நிகழ்ந்த இந்த முக்கிய தடமாற்றத்தை தவிர்த்து விட்டு 1990 வரையில் வெளியான தமிழ் திரைப்படங்களை பொதுவாக பார்க்கும் போது ஆச்சர்யமூட்டக் கூடிய பல அதிசய மாற்றங்கள் திருப்பங்கள் நிகழ்ந்திருப்பதை நம்மால் கண்டுணர முடியும். கமல் ரஜினியின் விஸ்வரூப வளர்ச்சி ஒருபுறமிருக்க இன்னொரு புறம் அவர்களையே மிரட்டும் வகையில் இயக்குனர் – நடிகர்களாக அவதாரமெடுத்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் மற்றும் மெல்லியல்பும், பெண் தன்மைகளும் நிரம்பிய மோகன், ராமராஜன் போன்ற நாயகர்களின் திடீர் எழுச்சி, இளையராஜாவின் இசை அரசாட்சி, தொழில் நுட்பங்களோடு களமிறங்கிய திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படையெடுப்பு, குறைந்த வெளிச்சத்துடனான மணிரத்னத்தின் வருகை போன்றவை இக்காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள். திரையுலகின் உள்ளீடாக நிகழ்ந்த இப்படியான மாற்றங்கள் ஒருபுறமிருப்பினும் மேற்சொன்ன பத்து வருடங்களை பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தை அடிப்படையாக வைத்து ஒருவசதிக்காக 1. 1980 - 1982, 2. 1982-1986 3. 1986-1989 இப்படிப் பிரித்து பார்க்கலாம்.

1. 1980 - 1982 பொற்காலத்தின் நீட்சி

தமிழ் சினிமாவின் பொற்காலம் என வகைபடுத்த முடியுமானால் அதனை 1977லிருந்து 82க்கு இடைப்பட்ட காலமாகத்தான் கருத முடியும். துரதிர்ஷ்டவசமாக இக்கட்டுரை எண்பதுக்கு பிறகான படங்களை பற்றிமட்டுமே அலசவேண்டிய நிர்ப்பந்தங்களை கொண்டிருப்பதால் எண்பதுக்கும் 82க்கும் இடையிலான் காலத்தை பொற்காலத்தின் நீட்சி என்றுகூட குறிப்பிடலாம். முந்தைய மூன்று வருடங்களில் இருந்த எழுச்சி அலை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தனது சரிவை நோக்கிய பயணத்திற்கு ஆட்படுத்திக் கொண்டாலும் சில குறிப்பிடும்படியான படைப்புகளும் வெளியாகின. இவற்றுள் 1980ல் வெளியான ஒரு தலை ராகம் கிட்டதட்ட பதினாறு வயதினிலேவுக்கு சரிசமமான பாதிப்பை தமிழ்ச் சூழலில் உண்டாக்கி திரையுலகிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அலையை உருவாக்கியது.

நாயகனை புறக்கணித்த இந்த கதையிலும் உள்ளும் புறமுமாக சமூகம் அசலாக உரித்து வைக்கப்பட்டிருந்தது. பெல்பாட்டம், பாபி காலர், அதிரும் டிரம்ஸ் வாத்தியங்கள், வேலையில்லா திண்டாட்டம் என அக்காலத்திய இளைஞர்களின் உலகத்தை முதல் முறையாக இப்படம் திரையில் வெளிப்படுத்தியிருந்த காரணத்தால் அரங்குகளனைத்தும் திருவிழா போல களைகட்ட துவங்கின. படத்தில் பாதியில் வந்து போன ஒரு தாடிக்கார இளைஞர்தான் இயக்குனர் என்பது பிற்பாடு தெரியவந்தது. அடுத்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் அவர் குச்சி சுழற்றி கமர்ஷியல் வீடு கட்டியது தனிக்கதை. இப் படத்தினை தொடர்ந்து நகரத்து இளைஞர்களின் பாடுகளை கதைக்களனாக கொண்டு பாலச்சந்தரின் இயக்கத்தில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ (1980), ராபர்ட் ராஜசேகரின் ‘பாலைவனச் சோலை’ (1981) போன்ற படங்கள் யதார்த்தத்துடன் காவிய சோகத்தை பிரதிபலித்தன. அதே சமயம் இதன் தொடர்ச்சியாக இதே பிரச்சனையை மையமாகக் கொண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘நிழல்கள்’ அவருக்கு தோல்விப் படமாக அமைந்து அதுவரையிலான அவரது தீவிரத் தன்மையிலிருந்து விலக்கி இளைஞர்களை வைத்து ஜனரஞ்சக படத்திற்கு தாவ வைத்தது. தனது குருநாதர் பாரதிராஜாவின் மூலமாக ‘புதியவார்ப்புகள்’ (1979) படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பாக்யராஜ் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ (1979), ‘ஒரு கை ஓசை’ (1980), ‘பாமா ருக்மணி’ போன்ற தனது துவக்க கால படங்களின் மூலம் அக்காலத்தில் பலரது கவனிப்புக்கு ஆளானர்.

எப்படி இந்தி இணை சினிமாவில் நாயக அம்சமே இல்லாத அமோல் பலேகர், நஸ்ருதீன்ஷா போன்றவர்கள் நாயகர்களாக வலம் வந்தார்களோ, தமிழிலும் அது போல சந்திரசேகர், பிரதாப் போத்தன், விஜயன் போன்றவர்கள் இக்காலகட்டத்தின் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றனர். மேலும், நாயகர்களைப் போலவே இக்காலத்தில் நாயகிக்கும் புற அழகு இரண்டாம் பட்சமாக கருதப்பட்டது. ஷோபா, சுஹாசினியைத் தொடர்ந்து சரிதா போன்றவர்களும் நாயகிகளாக அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களுக்குள் நீங்கா இடம் பிடித்தனர். பிரதாப் நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகளை பெற்ற மகேந்திரனின் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ (1980), பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’ (1980) போன்றவை தமிழ் சினிமாவின் அந்தஸ்தை உலகத் தரத்திற்கு அழைத்து சென்றன என்றாலும் மிகையில்லை. மேற்சொன்ன எண்பதுக்கு முந்தைய படங்களில் இருந்த சமூக யதார்த்தம் இப்படங்களில் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு காட்சி ரூபமான ஒருவித கவித்துவ அழகியல் இதில் பிரதானமாக கையாளப்பட்டன.

பாலுமகேந்திராவால் துவக்கப்பட்ட இந்த கவித்துவ காட்சி அழகியல் அசோக்குமார், நிவாஸ் (எனக்காக காத்திரு - 1981) போன்ற ஒளிப்பதிவாளர்களால் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டன. ஒளிப்பதிவுக்கு முக்கியம் தந்து இவர்கள் உருவாக்கிய இந்த அழகியல் அலைதான் பின்னாளில் மணிரத்னம் எனும் அழகியலின் இந்திய பிரதிநிதி உருவாக தூண்டுகோளாகவும், பாலமாகவும் அமைந்தது.. காட்சி அழகியலின் வரவேற்பு காதல் படங்களுக்கும் தோரணம் கட்டத் துவங்கியது. பாரதி வாசு இயக்கத்தில் வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ (1981) படம் கடைசி வரை தொட்டுக் கொள்ளாத காதலர்களை காண்பித்தது. ஏறக்குறைய இப்படம் வெளியான அதே காலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981) அதற்கு நேர்மாறாக பாலியல் துடிப்பு மிக்க காட்சி அமைப்புகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து பல உன்னத காதல் படங்கள் வந்தாலும் அவற்றுள் துரையின் இயக்கத்தில் வெளியான ‘கிளிஞ்சல்கள்’ யதார்த்த பின்புலத்துடனான காதலை சித்தரித்து மக்கள் மனத்தை கொள்ளையடித்தது.

இது போன்ற காதல் படங்களின் திடீர் வருகைக்கு பாலசந்தரின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி சென்னையில் சக்கை போடு போட்ட ‘மரோ சரித்ரா’வும் ஒரு காரணம். காதலைப் போலவே அக்காலகட்டத்தில் புரட்சிக்கும் ஒரு அதீத முக்கியத்துவம் சூழலில் வந்து சேர்ந்தது. மக்கள் பிரச்சனைகளைப் பேசும் ‘தண்ணீர் தண்ணீர்’ (1981), ‘ஏழாவது மனிதன்’ (1982), ‘சிவப்பு மல்லி’ (1982), ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ (1983) போன்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாவில் எப்போதும் நிகழ்ந்திராத ஆச்சர்யமான ஒன்று. ‘சட்டம் ஒரு இருட்டறை’(1981) மூலம் அறிமுகமான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்து சட்டத்தை பின்புலனாக கொண்ட படங்களாக கொண்டு வந்தார். அதே போல தொழில் நுட்பம், இயக்கம் போன்றவற்றில் ஆளுமை குறைவாக இருந்தாலும் வித்தியாசமான கதைகள் பல இக்காலத்தில் தொடர்ந்து வெற்றி தோல்வியை பொருட்படுத்தாது வந்துகொண்டிருந்தன என்பது இக்காலத்தின் விசேஷம்.

எச்சில் இரவுகள் (1982), சுமை (1981) போன்ற தீவிரத்தன்மை கொண்ட படங்களும், எம்.ஏ.காஜா எனும் இயக்குனரின் குறைந்த நிதியில் எடுக்கப்பட்ட படங்களும் இப்பங்களிப்பை செய்தன. இப்படியாக யதார்த்தம் அழகியல், காதல் மற்றும் புரட்சியை பேசும் வித்தியாசமான படங்கள் முன்னூறாவது நாள், நானூறாவது நாள் என தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரங்களுடன் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த அதே வேளையில் ரஜினி, கமல் இருவரும் இதற்கு இணையாக கமர்ஷியல் வெற்றிகளை ஈட்டி வந்தனர். 1980ல் வெளியான கமலஹாசனின் ‘குரு’ மற்றும் ரஜினியின் ‘பில்லா’ ‘முரட்டுக்காளை’ போன்ற படங்கள் அபார வெற்றியினால் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் ஹீரோ யுகம் ஆரம்பமானது. மக்களை திருப்திப்படுத்தும் விதமான சண்டை மற்றும் கேளிக்கை நடனக் காட்சிகளின் திணிப்பு. அதே யுகம் இப்போது வேறுவிதமான வடிவத்திற்கு மாறியிருந்தது.

அழுத்தமான கதைப்படங்களாக தந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கூட தனது ‘திரிசூலம்’ (1979) அடைந்த இமாலய வெற்றிக்கு பிறகு ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’வாக மாறி ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து கொண்டு வயதுக்கு மீறிய குத்தாட்டங்களை போடத் துவங்கினார். கைப்படியான வணிக சினிமாக்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியா ஆகிய இருவர் மட்டும் ஜோடிகளை கைமாற்றிக் கொண்டு தொடர்ந்து நாயகிகளாக வலம் வந்தனர். நகைச்சுவையில் சுருளிராஜனின் அங்க அசைவுகள் அரங்குகளில் சிரிப்பலைகளை உருவாக்கின. புது வரவுகளில் கார்த்திக், விஜயகாந்த், பிரபு ஆகியோர் தாக்கு பிடித்தனர். சண்டை முகபாவம் ஆகியவற்றில் ரஜினியை சாயலாக கொண்டு ‘சட்டம் ஒரு இருட்டறை‘ மூலம் பரபரப்பாக பேசப்பட்ட விஜயகாந்த் கண்களில் மட்டுமல்லாது கருத்துகளிலும் சிவப்பு காட்டி பயமுறுத்தினார். இத்துடன் 1979ல் வெளியான ஜெகன் மோகினி, லஷ்மி பூஜை போன்ற டப்பிங் பேய்ப் படங்கள் வேறு சக்கை போடு போட்டன.

இப்படங்களின் பிரதான நாயகியான ஜெயமாலினி தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு தமிழகத்தின் மூலை முடுக்குகள் தோறும் அனைத்து சிகை அலங்கார கடைகள் மற்றும் தையல் கடைகளின் சுவர்களில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். பின் ஒரு சுபயோக சுபதினத்தில் அவரது படம் கிழிக்கப்பட்டு அந்த இடத்தில் இன்னொரு புதிய நடிகை இடம் பிடித்தார். அவரது போதையூட்டும் விழிகளும் உதட்டுச் சுழிப்பும் தமிழ்நாட்டையே ஒட்டு மொத்தமாக தர்ம பரிபாலனம் செய்து வழிநடத்தியது. ‘வண்டிச் சக்கரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய சில்க் எனும் அந்த நடிகைக்கு குழந்தை மற்றும் குடும்பபெண்கள் வாலிபர்கள், வயோதிகர்கள் மட்டுமல்லாது பராசரன் முதல் பராரி வரை வித்தியாசமே இல்லாமல் ரசிகர்களாக இருந்தனர். அவரது காலத்தின் உச்சமாக இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டிலுமே நாயகன் கமலஹாசன்.

1982ல் வெளியான இந்த இரண்டு படங்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ பல ஒற்றுமைகள் இருந்தன. அதில் ஒன்று சகலகலா வல்லவன், மற்றொன்று மூன்றாம்பிறை. கமர்ஷியல் பாதி கலை பாதியாக தடுமாறிக் கொண்டிருந்த கமல்ஹாசனின் அன்றைய மனோநிலையை இப்படங்களின் வெற்றி உறுதிப்படுத்துகிறது. ‘ராஜ பார்வை’ (1981) எனும் இக்காலத்தின் அழகான தோல்வி கமலிடம் உருவாக்கிய அழுத்தம் மூலமாக வெளிவந்த படம் சகலகலா வல்லவன். ஒருவேளை சகலகலா வல்லவன் முன்பாக வந்து மூன்றாம்பிறை (1982) அடுத்தாக வெளியாகியிருந்தால்கூட தமிழகம் ஓரளவுமாற்றத்தை அனுபவித்திருக்கும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் ‘மூன்றாம்பிறை‘ உருவாக்கிய மகத்தான அலையை அடுத்து ஆகஸ்டில் வெளியான சகலகலா வல்லவனின் வெற்றி தவிடு பொடியாக்கியது என்பதுதான் உண்மை. கலர் கலாரன ஆடைகள், ஜிகினா செட்டுகள், பாட்டு, கூத்து, பைட்டு என புதிய கமர்ஷியல் சூத்திரம் உருவாக்கப்பட்டு யதார்த்தம், அழகியல் போன்ற வார்த்தைகள் தமிழ்த் திரையுலகிலிருந்து ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டன.

2. 1982 - 1986 டிஸ்கோ யுகம்

82ஆம் ஆண்டில் வெளியான படங்களின் பட்டியலைப் பார்க்கும்போது தமிழ் சினிமாவின் காட்சி மாற்றத்தை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். கமர்ஷியல் காதல் படங்கள் என்று ஒட்டு மொத்தமாக இக்காலகட்டத்தில் வெற்றி பெற்ற படங்களை அடையாளப்படுத்த முடியும். ‘தூறல் நின்னு போச்சு’ (1982), ‘டார்லிங் டார்லிங்’ (1982) என பாக்யராஜின் இரண்டுபடங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. ‘தூறல் நின்னு போச்சு’ வெளியானபோது அப்படத்தில் வரும் நாயகனைப் போல கழுத்தில் மப்ளர் சுற்றிக் கொள்வது இளைஞர்களிடம் பேஷனாக இருந்தது. பெல்ஸ் பெல்பாட்டம் போய் பின்பக்கம் நாய்க்காது வைத்த பாக்கெட்டுகளுடன் நேரோ பேண்டுகளுடன் கமலஹாசன் தன் ‘சட்டம்’ ‘சவால்’ போன்ற படங்களில் உலாவந்தார். அவரது தூக்கி வாரப்பட்ட ஹேர் ஸ்டைலுக்கு டிஸ்கோ என பெயர் சூட்டப்பட்டது. அவர் சகலகலா வல்லவனில் ஆடிய ஆட்டத்தை அனைவரும் டிஸ்கோ நடனம் என அழைத்து மகிழ்ந்தனர். இந்தக் கலாச்சரத்தின் முழு பிரதிபிம்பமாக கமலஹாசன் திகழ்ந்தார்.

பெண்களைப் போல பாதி கைகள் வெளித்தெரியும் மெகா ஸ்லீவ்ஸ் டி.ஷர்ட்டும், ஜீன்ஸுமாக பெரும்பாலான நாயகர்கள் வலம் வந்தனர். சொல்லி வைத்தார்போல பல்புகள் அணைந்து அணைந்து எரியும் ஜிகினா செட்டுகளுடன் கூடிய நடனக் காட்சிகள் கமர்ஷியல் சூத்திரங்களில் ஒன்றாக இடம்பெற்றது. இந்தியில் வெளியான டிஸ்கோ டான்சரை தொடர்ந்து தமிழில் ஆனந்த்பாபுவின் ரப்பர் நடனத்துடன் ‘பாடும் வானம்பாடி‘ எனும் படம் மூழ்வதும் டிஸ்கோவை மையாக கொண்டு வெளியானது. ஆனந்த்பாபுவின் இந்த புதிவித நடனத்தை கமலஹாசன் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அந்தபடம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சட்டம், சவால், வாழ்வே மாயம், தூங்காதே தம்பி தூங்காதே என தொடர்வெற்றிகளை தந்து கொண்டிருந்த கமல் அவ்வப்போது இந்திக்கும் சென்று நடனமாடி வந்தார்.

ர ஜி னி யி ன் வெற்றி காலமாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்தது. பாயும் புலி, தாய் வீடு, தங்க மகன், அடுத்த வாரிசு என அவரும் தன் பங்குக்கு டிஸ்கோ சகிதம் சண்டையும் போட்டு வந்தாலும் மூன்றுமுகம், நல்லவனுக்கு நல்லவன், எங்கேயோ கேட்ட குரல், புதுக்கவிதை, நெற்றிக்கண் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட கமர்ஷியல் சண்டை படங்களிலும் நடித்து சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து ஜொலித்தார். கமலஹாசன் கூட எனக்குள் ஒருவன் போன்ற தோல்விப் படங்களை சந்திக்க வேண்டியிருந்தது ஆனால் ரஜினியின் எந்த படத்திற்கும் தோல்வி முகம் காட்டவில்லை. ஒருபுறம் கமல், ரஜினியின் வணிக சூத்திரங்களுடனான படங்கள் தொடர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த இதே வேளையில் பாலுமகேந்திராவின் ‘கோகிலா‘ கன்னட படத்தின் மூலம் அறிமுகமான ஒரு நடிகரின் வருகை தமிழ்ச்சூழலை ஒரு ஆச்சர்யமான பாதிப்புக்கு உள்ளாக்கியது.

சொல்லி வைத்தார்போல அவர் நடித்த அனைத்துப் படங்களும் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாகவே அமைந்தன. அவர் மேடையில் மைக் பிடித்து பாடுவதில் தமிழ் கூறும் நல்லுலகம் அப்படி என்ன அதிசயத்தை கண்டு வியந்ததோ தெரியவில்லை. சொல்லி வைத்தார்போல சிம்பாலிக்காக பயணங்கள் முடிவதில்லை (1982) என்பதில் ஆரம்பித்த நடிகர் மோகனின் மைக் பயணம் கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக் காலங்கள், உதய கீதம், இதய கோயில், விதி, குங்குமச் சிமிழ், தென்றலே என்னை தொடு, மெல்லத் திறந்தது கதவு, பிள்ளை நிலா என தொடர்ந்து சிக்ஸர் மழைகளாக பொழிந்து தள்ளியது. ஆர்.சுந்தர்ரராஜன், மணிவண்ணன், கே.ரங்கராஜ், மனோபாலா போன்ற இயக்குனர்கள் இவ்வகைப் படங்களின் இயக்குனர்களாக பிராகாசித்தனர்.

உறுத்தாத ஒரு காதல் கதை, ப்ளஸ் கவுண்டமணி செந்தில் காமெடி, ப்ளஸ் இளயராஜாவின் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இது தான் இவர்களது பார்முலா. பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களின் மிச்ச சொச்ச மென்னுணர்வுகளின் நீட்சியாக இருந்த இவ்வகைப் படங்களில் கோவைத்தம்பி எனும் தயாரிப்பாளர் கொடிகட்டி பிராகாசித்தார்.. மேற்சொன்ன அனைத்து படங்களின் பாடல்களுமே வெற்றி எனும் வார்த்தைகளைக் கடந்து தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இன்றும் பல ரேடியோ சேனல்களின் மூலம் இரவு நேர தமிழகத்தை தாலாட்டிக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையில் உண்டான மாற்றத்தின் காரணமாக தமிழ் நாட்டுக்குள் வந்த திரைப்படங்களில் சுசுகி, யமாகா போன்ற பைக்குகள் தமிழ் சினிமாவுக்குள்ளும் ஓடத்துவங்கின. அதிலும் முதன் முதல் எனும் பெருமையை கமல் புன்னகை மன்னன் மூலம் தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்த அவரது விக்ரம் ஒரு தோல்விப் படமானாலும் அது காலமாற்றத்தை பிரதிபலிப்பதில் முக்கிய பங்காற்றியது. கமலின் காக்கிசட்டையில் ‘தகடு தகடு‘ எனப் பேசிய சத்யராஜ் எனும் வில்லன் நடிகர் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கினார். தூர்தர்ஷனில் அப்போது வெளியான அவரது பேட்டி அவரை காலத்தின் பிம்பமாக மக்களிடையே உயர்த்தியது.

காதல் ஓவியம் (1982) படத்திற்கு பிறகு வாலிபமே வா வா (1982) எனத் தடுமாறிய பாரதிராஜா ‘மண் வாசனை‘ (1983), ‘முதல் மரியாதை‘ (1985), ‘கடலோரக் கவிதைகள்‘ (1986) எனும் மூன்று அழகான முத்துக்களைத் தந்து இரண்டாவது சுற்றிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். பாக்யராஜின் சிஷ்யரான பாண்டியராஜன் கன்னிராசி, ஆண் பாவம் என ஒரே வருடத்தில் (1985) இரண்டு ஹிட்டுகளை தந்து பரபரப்பை உண்டாக்கினார். அம்பிகா, ராதா சகோதரிகளுக்குள் கனவுக்கன்னி யுத்தம் நடந்தது. உடன் இப்போட்டியில் பிற்பாடு ரேவதியும் சேர்ந்து கொண்டார். எப்போதும் போல ராதிகா, சுகாசினி ஆகியோர் தங்களுக்கேற்ற பாத்திரத்தில் முத்திரைகளை பதித்தனர். இக்காலட்டத்தில் திடுமெனப் பெருகிய வீடியோ எனும் புது வரவு பலரையும் பயமுறுத்தியது. முந்தானை முடிச்சு (1983) இக்காலக்கட்டத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் வைத்தியம் மக்களை பெருமளவு பாதித்து, பின்  ருங்கைக்காய் தமிழ்நாட்டின் ‘குழுவுக்குறி‘யாகவும் மாறிப்போனது.

பூவிலங்கு படத்தின் மூலம் தமிழுக்கு இன்னுமொரு கறுப்பு நடிகராக முரளி வந்தார். சிவக்குமார் தண்டிக்கப்பட்ட நியாயங்கள், நான் பாடும் பாடல், தீர்ப்புகள் திருத்தப்படலாம், ஒரு இந்தியக் கனவு போன்ற படங்களின் மூலம் தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடர்ந்து கொண்டிருந்தார். கே.பாலசந்தரின் இயக்கத்தில் இக்காலகட்டத்தில் உருவான சிந்துபைரவி இசை, தமிழ் இசைக்கு கவுரவம் தந்தது. சில தோல்விகளுக்கு பின் பாலசந்தருக்கு மீண்டும் வெற்றியையும் புகழையும் தந்த படம் இது.

இவைகளல்லாது நான்கு வருடங்களுக்கு முன்பிருந்த யதார்த்த வகைப்படங்களில் ஒன்றுகூட தலைகாட்டவே இல்லை என்பதுதான் ஆச்சர்யபடத்தக்க நிகழ்வு. அதே போல பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற சென்ற தலைமுறையின் காட்சி மொழி அறிந்த படைப்பாளுமை மிக்க இயக்குனர்கள் அவர்களுக்கு பின் தோன்றவே இல்லை. அந்த குறை 'மவுன ராகம' படத்தின் மூலமாக தீர்ந்தது, அத்தோடு தமிழ்சினிமாவில் புதிய மாற்றங்களின் வரத்தும் நிகழத் துவங்கியது.

03. 1986 - 1989 துவங்கியது தொழில்நுட்ப அலை

அதுவரை திரைப்படக் கல்லூரி என்றால் அது எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத் தமிழர்களுக்கு அதன் முகவரியை சொல்லும் விதமாக 86ல் ஊமைவிழிகள் வந்தது. முழுவதும் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தன் முன் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் அதுவரையிலான திரை அனுபவங்களையெலாம் ஒரே நாளில் ஓரங்கட்டி அவர்களை நவயுகத்தின் மனிதர்களாக புதுப்பித்தது.

தூரத்து இருட்டில் ஒரு புள்ளியாக வந்து பின் அதே ஷாட்டில் அருகாமையில் ஒரு மேட்டிலிருந்து வரிசையாக கார்களின் ஹெட்லைட் வெளிச்சம் சரமாரியாக வந்து பெரும் இரைச்சலுடன் கடந்து போகும் காட்சியின் போது தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி அரங்குகளில் கூட கைதட்டல் அதிர்ந்தது. அது போல படத்தில் இடம்பெற்ற பரபரப்பான காட்சியொன்றில் இரும்புகதவு திறக்கும் க்ரீச் சத்தம், கோச்வண்டியின் சலங்கை அதிரும் தனித்தனியான சத்தம் போன்றவற்றை அதுவரை ஆங்கிலப் படங்களில் மட்டுமே அனுபவித்திருந்த மக்களுக்கு அகண்ட திரையில் இப்படம் புது அனுபவத்தை உருவாக்கி கொடுத்தது. பாடல்களின் வரிகள் முதற்கொண்டு பாடல் பதிவு, இசை என அனைத்திலுமே புதுமை அலையை பரவ விட்ட இப்படத்திற்குப்பின் குறை காலம் ஆபாவாணன் என்ற பெயரே தமிழர்களுக்கு மிகப்பெரிய பிரமிப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கித் தந்தது... விஜயகாந்த் இறுதியாக தனக்கான பாணியை இப்படத்தின் மூலம் கண்டுகொண்டார்.

இப்படி திடுமென மாறிய தமிழ் மக்களின் ரசனைக்கு சரியான தீனியாக அமைந்தது அடுத்ததாக வந்த மவுன ராகம். படத்தின் இயக்குனரான மணிரத்னம் ஏற்கனவே பகல் நிலவு, இதய கோயில் போன்ற படங்களின் மூலம பரவலாக தமிழ்நாட்டில் தலை காட்டியிருந்தாலும் தான் ஸ்ரீதர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா வரிசையிலான கவித்துவ அழகியல் இயக்குனர் என்பதை இப்ப்டத்தில்தான் அழுத்தம் திருத்தமாக முத்திரையை பதித்திருந்தார். அதிகம் பேசாத இப்படத்தின் நாயகனான மோகன், அதிகம் பேசும் நாயகி ரேவதி, இளமை துள்ளும் கார்த்திக்க்கின் உடல் மொழி மற்றும் உரையாடல் என அனைத்துமே மேட்டிமை பாவனைகளுடன் தமிழ் ரசிகர்களுக்கு ஓருவித அன்னியத் தன்மையை உணர்த்திய போதும் அதன் வசீகரத்தில் அனைவரும் தங்களை இழந்தனர் என்பதுதான் உண்மை. இப்படம் பார்த்துவிட்டு வெளியேவரும் இளைஞர்கள் பலரும் தங்களை கார்த்திக்காக உணர்ந்து படத்தில் அவர் பேசுவதை போல சந்திரமவுலி.. மிஸ்டர் சந்திரமவுலி என கையை உயரே தூக்கி கூவிக்கொண்டனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலிருந்த கவர்ச்சியும், பில்டரின் ஜாலமும் அனைவரையும் வசீகரித்தது. கலை இயக்குனர் என ஒருவர் திரைத்துறையில் இருக்கிறார் என்பதை இப்படத்தின் மூலம் தோட்டாதரணி கோடம்பாக்கத்திற்கு உணர்த்தினார்.

இதே கூட்டணியின் மூலம் அடுத்த ஆண்டே வெளியான நாயகன் காட்சியமைப்பு மற்றும் படப்பதிவு படத்தொகுப்பு என அனைத்து வகையிலும் ஓரளவு உலகத்தரத்தை நெருங்கியது. உடை, அலங்காரம் போன்றவையின் முக்கியத்துவம் இப்படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றது.

படத்தில் சிறுவயது கமலஹாசனின் தழும்பு வளர்ந்த நிலையிலும் காணப்பட்டதை கவனித்த பார்வையாளர்கள் கலைக்கு உண்மையாக இருந்த இயக்குனரின் திறமையை கண்டு வியந்தனர். பிற்பாடு இத்திரைப்படம் பிராண்டோ நடித்து 72ல் வெளியான காட்பாதர் படத்தின் தழுவல் என தெரியவந்தபோது அதன் மீதான மயக்கங்கள் நீங்கியது என்றாலும் மணிரத்னத்தின் மிகச்சிறந்த படமாக இன்றுவரை மதிப்பிடப்படுவது நாயகன் மட்டுமே. தொடர்ந்த அவரது அக்னி நட்சத்திரம், இதயத்தைத் திருடாதே போன்ற படங்கள் இளைஞர்களை சுண்டி இழுத்தன. இப்படங்களில் அழகும் இளமையுமான நாயகிகள் சிகரெட் பிடிப்பதும் 'ஓடிப்போலாமா' என துணிச்சலாக ஒரு ஆணைப் பார்த்து கேட்பதும் கலாச்சார அதிர்ச்சிகளை உண்டாக்கி மதிப்பீடுகளை கலைத்துப் போட்டன. அதேசமயம் தமிழகத்தின் சாதாரண மனிதனுடைய வாழ்வுக்கும் இத் திரைப்படங்களுக்கும் இடையிலான இடைவெளி பாரதூரமானது. இப்பபடங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு கையில் மெழுவர்த்தியுடன்தான் போகவேண்டும் என பத்திரிக்கைகளும் வெகு ஜனமக்களும் தொடர்ந்து பகடி செய்தனர்.

அதேநேரம் அக்னி நட்சத்திரத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் கடற்கரை மணலில் கன்னத்தில் ஓட்டிக் கிடக்கும் மணல் துகள்களுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி நாயகி நிரோஷா திரும்பிப் படுக்கும் ஒரு க்ளோசப் ஷாட்டுக்குக்காக அரங்கமே கைதட்டி மகிழ்ந்த சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன. அதே படத்தின் இன்னொரு பாடலில் இளைஞர்கள் ரயில் பெட்டிகளை தாண்டும் லோஆங்கிள் ஷாட்டுக்கும் நகர அரங்குகளில் ரசிகர்களின் விசில் பறந்ததை மறப்பதற்கில்லை. தமிழ்நாட்டில் பாலுமகேந்திராவுக்கும் பி.சி.ஸ்ரீராமுக்கும் கிடைத்திருக்கும் இத்தகைய கைதட்டல் பெருமை இந்தியாவின் மற்ற மாநில ஒளிப்பதிவாளர்கள் எவருக்கும் கிடைத்திருக்காது என அடித்துக் கூறலாம். பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம் பிரிந்த அடுத்தபடமான அஞ்சலி தோல்விப்படமாக அமைந்த போது இதுவும் கூட ஒரு காரணமாக மக்கள் கதைக்கப்பட்டது தனிக்கதை.

இப்படியான தொழில்நுட்ப படங்களுக்கான வரவேற்பு ஒரு புறமிருக்க இன்னொரு புறம் வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன. மேற்சொன்ன படங்களுக்கு தன் கணிசமான பங்களிப்பை செலுத்தியிருந்த இளையராஜா மசாலாப் படங்களுக்கும் பாரபட்சம் சுருதி பேதமில்லாமல் தன் மடை திறந்த இசைவெள்ளத்தை வழிய விட்டார். இக்கால கட்டத்தின் முடிசூடா மன்னர்களாக ரஜினிகாந்த், இளையராஜா இருவருமே இருந்தனர். படிக்காதவன், மிஸ்டர் பாரத், மாவீரன், வேலைக்காரன், மனிதன், குருசிஷ்யன் தர்மத்தின் தலைவன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை என வெற்றி வரிசை ஏற ஏற ரசிகர்களின் எண்ணிக்கை படங்களின் வசூல் ஆகியவை ரஜினியின் படங்களுக்கு மழைக்கால ஏரி போல ஏறிக் கொண்டேயிருந்தன. ராஜாதி ராஜா படம் வெளியான போது ஆக்ஷன், காமெடி போன்ற இமேஜ்களுடன் வசீகரமான கிளாமர் இமேஜும் சேர்ந்து கொண்டு இளைஞர்களை அலைக்கழித்தது.

அதுநாள் வரை கமலிடம் இருந்துவந்த பேஷன் முன்னோடி என்ற இமேஜ் இப்படத்தின் மூலம் ரஜினிக்குத் தாவியது. இதற்கு முன்பே மாவீரன் படத்தில் ரஜினியும், அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் விஜயகாந்தும் தத்தமது ஹேர்ஸ்டலை நேர் வகிடு எடுத்து புதிய தோற்றத்தில் வந்து விட்டிருந்தாலும் ராஜாதி ராஜா படத்தில்தான் ‘பங்க்‘ எனப்படும் இந்த புதுவித ஹேர் ஸ்டைல் மக்களிடையே தீயாகப் பற்றிப் பரவியது. ரஜினியின் இயல்பான வழுக்கை போல பலர் தாங்களாக ப்ளேடால் முன்நெற்றி மயிரை எடுத்துக்கொண்டு கிறுக்குத்தனமாக அலைந்தனர். இதே படத்தில் ரஜினி அணிந்து வந்த தொளதொள பேகி பேண்டு தமிழ் இளைஞர்களின் தேசிய உடையாக மாறியது. முதன் முதலாக நடிகரின் ரசிகர்களுக்கென புதியதாக பத்திரிக்கை வந்ததும் இக்காலத்தில்தான். ராஜபாளையத்திலிருந்து வெளியான ரஜினி ரசிகன் எனும் பத்திரிக்கையின் வெற்றியைக்கண்டு பிரபல பத்திரிக்கைகள் அதனை அதிக விலை கொடுத்து வாங்கி தானே வெளியிடத் துவங்கியது.

நடிகர்களின் போஸ்டர்களுக்கு மதிப்பு கூடியது. இக்காலகட்டத்தில் மக்களின் வாழ்வும் சினிமாவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்பட்டது. அதுவரை ரஜினியோடு கமர்ஷியல் படங்களில் சரிக்கு சரியாக போட்டியிட்டு வந்த கமல் நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு தனது பார்வையை பேசும்படம் (1987), சத்யா (1988) என பரிசோதனை முயற்சிகளின் பக்கம் திருப்பிக் கொண்டார். இக்காலகட்டத்தில் தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆஸ்கார் என்ற வார்த்தை புழங்க துவங்கியது. தானே எழுதிய கச்சிதமான திரைக்கதையுடன் காலத்துக்கு ஏற்ப தொழிநுட்ப கூட்டணியுடன் ‘அபூர்வ சகோதரர்‘களில் மீண்டும் கமர்ஷியலில் களமிறங்கிய கமல் வெற்றி வாகை சூடினார்.

இவர்களைத் தவிர பாக்யராஜ், டி ராஜெந்தர், சத்யராஜ், பிரபு, முரளி, அர்ஜுன் போன்றவர்கள் தத்தமது பாணியில் அவ்வபோது ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தாலும் மவுனராகத்தின் மூலம் இரண்டாவது ரவுண்டு வந்த கார்த்திக் இக்காலத்தின் இளவரசரhகாவே கவுரவிக்கப்பட்டார். நல்ல குரல், அலட்டலான நடிப்பின் மூலம் ரகுவரன் குணச்சித்திர பாத்திரங்களில் பிரகாசித்தார். பாக்யராஜின் உதவியாளராக இருந்து பின் அதே பாணியில் இயக்கம் மற்றும் நாயகனாக அறிமுகமான பார்த்திபன் தன் புதியபாதை (1989) மூலம் தமிழுக்கு முதல் முறையாக ஒரு லும்பனை நாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே வருடத்தில் பாசில் இயக்கத்தில் வெளியான வருஷம் பதினாறு, தொழில் நுட்பமும் நல்ல திரைக்கதையும் இணைந்த நேர்த்தியான ஒரு வணிக சினிமாக்களுக்கு பாதை போட்டது. இந்தப் பாதையில் பிற்பாடு கிழக்குவாசல், கேளடிகண்மணி, புதுவசந்தம் போன்ற திரைப்படங்கள் ஆண்டுக்கு ஒன்றாக தொடர்ச்சியாக வந்து ஆச்சர்யத்தை உண்டாக்கின.

இதேசமயத்தில் தமிழில் இன்னொரு அதிசயம் மெல்ல அரங்கேறிக் கொண்டிருந்தது. கிராமத்து வெள்ளந்தி மனிதனாக ஓரிரு படங்களில் நாயகனாக நடித்த ராமராஜன் எனும் நடிகரை துவக்கத்தில் அனைவரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை ஆனால் மெல்ல நம்ம ஊரு நாயகன், செண்பகமே செண்பகமே, எங்க ஊரு பாட்டுக்காரன் என அவர் தொடர் வெற்றிகளாக குவிக்க குவிக்க ஒருபக்கம் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். ஒருபக்கம் ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள் கோட்டும் சூட்டுமாக கலக்கிக் கொண்டிருக்க அதற்கு முற்றிலும் தலைகீழாக வெறும் டவுசர் மட்டுமே அணிந்தபடி பாட்டுபாடி நயமாக மாட்டிடம் பால் கறக்கும் பாத்திரங்களில் நடித்து முன் சொன்ன நட்சத்திரங்களைவிட அதிகமாகவும் கை தட்டல்களை ரசிகர்களிடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ராமராஜனின் வெற்றியை கண்டு கோடம்பாக்கமே ஒட்டு மொத்தமாக மூக்கில் விரல் வைத்து வேடிக்கை பார்த்தது.

மக்களின் இந்த வினோத ரசனை பத்திரிக்கையாளர்களையே ஆச்சர்யப் படுத்தியது. ஒரு கட்டத்தில் அவர் அரசியலில்லும் குதிக்க அடுத்ததாக வெளியாகவிருந்த படமொன்று அனைவரையும் மிகுந்த அளவில் எதிர்பார்க்க வைத்தது. இந்தப் படத்தோடு இவர் காலி என அனைவரும் அந்தபடத்தின் ரீலீசுக்காக காத்திருந்தனர். அப்போது வெளியான படம்தான் கரகாட்டக்காரன். தமிழ் சினிமா அதுவரை இப்படி ஒரு வெற்றியை கண்டதில்லை. அதில் அதிர்ந்த மரபான இசையானது, தமிழ்நாட்டையே தொன்மங்களில் அதிர வைத்தது. கரகாட்டக்காரனின் வெற்றிக்குப் பிறகு ராமாராஜன் ரஜினிக்கு போட்டியா என்றுகூட சிலபத்திரிக்கைகள் எழுதுமளவிற்கு அன்று அவரது நிலை உச்சத்தில் கொடிகட்டி பறந்தது. உண்மையில் கரகாட்டக்காரனின் வெற்றி என்பதற்குபின் பல உள்ளடுக்குகள் ஒளிந்திருப்பதை இன்றுவரை எவரும் கவனிக்கவில்லை. அவற்றுள் மிக முக்கியக் காரணம் தமிழர்களின் மரபான அடையாளத்தை அது வெகுஜன ஊடகத்தின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ததுதான்.

ஒரு சமூகத்தின் மூளை அடுக்குகளில் காலம்காலமாக படிந்திருந்த ஒரு ஓசையை, தன் இசையின் மூலம் தட்டி எழுப்பி அவனது உடலுக்குள் ஒரு களிப்பை ஏற்படுத்தியது. கங்கை அமரன் தெரிந்தோ தெரியாமலோ ராமராஜனுடன் சேர்ந்து இயக்குனராக பரிணமித்த இக்காலகட்ட திரைப்படங்களில் தமிழ் அடையாளங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார். கனகாவின் அசலான தமிழ் முகம் கரகாட்டகாரனில் பெருமளவு இதனை சாத்தியபடுத்தி தந்தது.

அமலா, குஷ்பு, ரேகா, சீதா போன்றவர்கள் இக்காலத்தின் டூயட்டுகளை பகிர்ந்துகொண்டனர். பாரதிராஜாவுக்கு இக்காலகட்டம் ஒரு இறங்கு முகம் என்றுகூட சொல்லலாம். கமலஹாசனை வைத்து அவர் இயக்கிய கமர்ஷியல் படமான ‘ஒரு கைதியின் டைரி’ வெற்றிப்படமாக அமைந்தாலும் அவருடைய தனித்தன்மையை அது முழுவதுமாக இழந்திருந்தது. பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் அவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த தொய்வை சரிசெய்தன. எம்.ஏ.காஜாவின் தொடர்ச்சியாக இராமநாராயணன் ஒரே ஆண்டில் பத்து படங்களை மேஸ்திரி போல இயக்கி ஆச்சர்யபடுத்தினார். இவரது சொல்லுக்கு குழந்தைகளும் பிராணிகளும் கட்டுபட்டு வேலை செய்தன. இச்சூழலில் இயக்குனர் பாலுமகேந்திரா மட்டும் வீடு (1988) என்ற படு சீரியசான படத்தை இயக்கி தமிழில் வணிக சினிமாவுக்கு மாற்றான ஒரு கலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 80 முதல் 89 வரையிலான மேற்சொன்ன இந்த மூன்று காலத்தையும் ஒன்றிணைத்து பார்த்து ஒரே வரியில் குறிப்பிடுவதாக இருந்தால் இந்த பத்து வருடங்களை இளையராஜாவின் யுகம் என ஒரே சொல்லில் அடையாளப் படுத்திவிட முடியும்.

வணிக ரீதியான அவரது தொடர் வெற்றியை கடந்து திரைப்படம் எனும் ஊடகத்தின் மூலமாக அவர் உருவாக்கிப் பரவவிட்ட இசை அலைகள் எண்ணற்ற கோடி தமிழர்களின் மூளைக்குள் அவர்களுக்கு மட்டுமேயான நிலப்பரப்பை வரைந்து தந்திருக்கிறது. இதுநாள்வரை உபரி உணவாக இருந்து வரும் சாஸ்திரிய இசை மற்றும் மேற்கத்திய இசையுடன் வலியோடும் வாழ்வோடும் கலந்த தொன்மங்களின் ஓசையையும் நிலப்பரப்பின் இசையையும் ஒன்றிணைத்து அதனை திரைப்பட பாடல்களின் வாயிலாக ஊட்டித் தந்திருக்கும் அவரது இச்சாதனை வேறெந்த மொழியிலும் இதுவரை நடைபெறாதது. இப்படியாக ஒரு மொழி சார்ந்த சமூகத்தின் ஆன்ம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அவரது இசை இருந்துவந்த காரணத்தினால்தான் இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒருவன் கூட அவரது பெயரை திரையில் கண்டதும் கைதட்டி மகிழ்ந்தான். ஒரு நல்ல இலக்கியப் படைப்பு மனித மனதினுள் புகுந்து செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் அவரது இக்காலத்திய திரை இசை பாடல்கள் செய்து காட்டியிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக காதல் ஓவியம், சிந்துபைரவி, இதய கோயில், முதல் மரியாதை, கரகாட்டக்காரன், தாய் மூகம்பிகை போன்ற திரைப்படங்களின் பாடல்கள் மூலமாகவும், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, முதல் மரியாதை, மவுன ராகம், நாயகன் போன்ற படங்களின் பின்னணி இசை மூலமாகவும் அவர் செய்திருக்கும் இந்த சாதனை ஆழமும் அடர்த்தியும் கொண்டது. இதனைக் கடந்து பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம் ஆகியோர் தங்களது இயக்கத்தின் மூல்மாக தமிழ் சூழலுக்கு இக்காலத்தில் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.

1980 துவங்கி 1989 வரையிலான பத்து வருடங்களில் வெளியான ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில சிலவற்றை கால மாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டு விளங்கும் சிறந்த படங்களாக நான் இங்கே தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

1. நெஞ்சத்தைக் கிள்ளாதே 2. ஒரு தலைராகம் 3. தண்ணீர் தண்ணீர் 4. பாலைவனச் சோலை 5. பன்னீர் புஷ்பங்கள் 6. கிளிஞ்சல்கள் 7. மூன்றாம் பிறை 8. மண்வாசனை 9. மலையூர் மம்பட்டியான் 10. முதல் மரியாதை 11. கடலோரக் கவிதைகள் 12. சிந்து பைரவி 13. வருஷம் பதினாறு 14. மவுன ராகம் 15. நாயகன் 16. வீடு 17. புதிய பாதை 18. கிழக்கு வாசல்

- அஜயன் பாலா

Pin It