பெரியம்மா வீட்டில் அண்ணனின்
நிச்சயத் தாம்பூலத்தில் அமங்கலமென
சாடையாக சீண்டியதும்...
தங்கையின் மஞ்சள் நீராட்டு விழாவில்
“கோபுரமென வளரணும் பொண்ணு
முன்னால நிக்குறா மூளியெனவும்”...
தீபாவளிக்கென நானெடுத்த புடைவையில்
புதுப்பெண்ணென மினுக்குகிறாளெனவும்....
வீட்டில் மற்றுமொரு உறவாகிவிட்ட
தங்கராசு அண்ணனுடன் நெடுநாளாகத்
தொடர்பெனவும்....
நாவைத் தேளின் கொடுக்காக்கிக் கொட்டிய
ஒன்று விட்ட அத்தையும்
ஏதோ ஒரு முறையில் பெரியம்மாவும்
எதிர்வீட்டு அண்டைவீட்டு அக்காக்களும்தான்
மாரில் அடித்துக்கொண்டு கதறினர்....
கோவிலில் தாலி கட்டி
வீடு திரும்பும் வழியில்
விபத்தில் மாமாவை பறிகொடுத்த
அக்காவுக்காக.

- தர்மராஜ் பெரியசாமி

Pin It