அன்றாடம் வான் தாக்குதல், வாரம் சராசரியாக 40 பழங்குடியினர் பலி. 3 இலட்சம் பேர் அகதிகளாக காடுகளில் தஞ்சம்... இதுதான் இன்று மைய இந்திய மாநிலங்களில் உள்ள நிலைமை. இதற்கு ஆட்சியாளர்கள் வைத்துள்ள பெயர், “பச்சை வேட்டை’ என்பதாகும்.

       தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை தேடுகிறோம் என்ற பெயரில் இந்திய அரசின் ஒருங்கிணைப்பில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநில அரசுகள் இந்த வேட்டையை நடத்துகின்றன.

       இந்திய விமானப்படையின் கருடா என்ற போர் விமானமும் பல்லாயிரம் தரைப்படையினரும் இணைந்த ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் கொண்ட ஒருங்கிணைந்த இந்திய, மாநிலப்படை இக்கொடுந் தாக்குதலை நடத்தி வருகிறது.

       சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்து பழங்குடி மக்கள் வாழ்கிற பகுதிகளிலிருந்து அம்மக்களை மன்மோகன் சிங் ஆட்சி வெளியேற்றி வருகிறது. காட்டு வளங்களையும், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, வைரம், நிலக்கரி, பாக்சைட், ஸ்டெர்லைட் போன்ற கனி வளங்களையும் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறது தில்லி அரசு.

       இதனை எதிர்த்து தங்கள் வாழ்வா தாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தனித்தோ அல்லது மாவோயிஸ்டுகள் தலைமையிலோ போராடுகின்ற பழங்குடி இன மக்கள் மீது ஈவிரக்கமற்றப் போரை கட்டவிழ்த்துள்ளது இந்திய அரசு. மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பழங்குடியினக் காவலர்கள் என்று வேடங்கட்டிய அனைத்து முதலமைச்சர்களும் இந்தப் போரில் இந்திய வல்லரசோடு இணைந்து நிற்கின்றனர்.

       சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஸ்டர் மண்டலம் என்றழைக்கப்படும் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்குள் 26 ஆயிரம் படையாட்கள் குவிக்கப் பட்டு இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

       சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், குழந்தை காப்பகங்கள் ஆகியவை படைமுகாம் களாக மாற்றப்பட்டுள்ளன. தங்களது அன்றாட தேவைகளுக்காக காட்டுப் பழவகைகளை சேகரித்து உண்பதற்காக குடியிருப்பை விட்டு வெளியில் வரும் பழங்குடியினர் பச்சை வேட்டையில் பலியாகின்றனர். பெண்களும், குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் கேள்வி முறையின்றித் தொடர்கிறது.

       “இப்பகுதிகளில் பழங்குடியினர் அரசு அமைக்கும் கண் காணிப்பு முகாம்களில் தங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சொந்த வீட்டில் வாழ்வதே தீவிரவாதக் குற்றமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. பள்ளிக் கட்டிடங்கள் படையினரின் பாசறையாக மாற்றப் பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகள் படிப்பதற்கான மரத்தடிகளில் தான் அங்கு கல்வி கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் கூட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக குற்றம் சுமத்தப்படுகிறார்கள். முற்றமுழுதான பொருளியல் முற்றுகையில் அப்பழங்குடி மக்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிடுவது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.     

       ஈராக் போரில் ஜார்ஜ் புஷ் கொக்கரித்தது போல இந்திய வல்லரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “தேடுதலின் போது கொல்லப் படுபவர்களின் எண்ணிக் கை குறித்து நாங்கள் கணக்கில் பதிவு செய்து கொள்வதில்லை’’ என்று ஆணவமாய் கொக்கரிக்கிறார்.

       ஈழத்தில் தமிழர்களை இனக்கொலை செய்ய சிங்களத்தோடு சேர்ந்து ‘ஆபரேசன் பெக்கான்’ திட்டம் தீட்டியதைப் போலவே சாட்சியற்ற படுகொலை செய்ய இங்கேயும் தில்லி ஆட்சியாளர்கள் திட்டமிட்டி ருக்கின்றனர். ‘மாவோயிஸ்ட் அபாயத்தை 2013க்குள் முற்றிலும் ஒழிப்போம்’ என்று மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் கூட்டணி அறிவித்துள்ளது.

       ஈழத்தில் செய்தது போலவே இங்கேயும் பழங்குடியினரிடையே ஆள்காட்டிகளை இந்திய உளவுத் துறை உருவாக்கியது. சால்வாஜூடும், சிறப்புக் காவல்படை, சாந்தி சேனா, ஹர்மத் வாஹினி போன்ற பல பெயர்களில் இவ்வாறான ஆள்காட்டி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர் களுக்கு ஆயுதம், பணம், வாகனம், பாதுகாப்பு ஆகியவற்றை அரசுகள் வழங்கு கின்றன.

       இது குறித்து இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2009ஆம் ஆண்டு வரைவறிக்கை கூறுவது இந்திய வல்லரசின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலவும் வேளாண் உறவுகள் மற்றும் நிலச்சீர்திருத்தம் குறித்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் நான்காம் துணைக்குழு கீழ் வருமாறு கூறுகிறது:

       “சல்வாஜூடும், சட்டீஸ் கர் மாநில அரசால் உருவாக்கப் பட்டு ஆயுதபாணி யாக வளர்த் தெடுக்கப்பட்டது. இதற்கு நடுவண் அரசின் ஆயுத உதவியும் அமைப்புவகை வழி காட்டலும் அளிக்கப்பட்டது”.

       அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர், அன்றாட கண்காணிப்புக்கும் சோதனையிடலுக்கும் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். படை யாட்களின் அத்துமீறலுக்கு இப் பழங்குடியின பெண்களும், குழந்தை களும் கேள்வி முறையின்றி ஆளாக்கப்படுகின்றனர். இடை விடாத உளவியல் அச்சறுத்தலுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள்.          அல்ஜீரியாவில் பிரான்சும், வியட்நாமும், அமெரிக்காவும், வன்னியில் சிங்கள இந்தியக் கூட்டணியும் கையாண்ட அதே உத்தி பழங்குடி மக்களிடையேயும் இன்று தொடர்கிறது.

       ‘வேதாந்தா ரிசோர்சஸ்’ என்ற ஸ்டெர்லைட் குழுமத்தின் பங்குதாரராக ப.சிதம்பரம் 2004வரை இருந்தவர். இன்றும் மறைமுகமாக அந்த உறவு தொடர்கிறது. அமைச்சராவதற்கு முன் அவரும், அதற்குப் பின் அவரது மனைவியும் இந்நிறுவனத்தின் நிரந்தர வழக்கறிஞர்களாக இருக்கின்றனர். டாட்டா, எஸ்ஸார், பாஸ்கோ, மிட்டல், ஜிண்டால் குழுமங்களுடன் சோனியா - மன்மோகன் சிங் கும்பலுக்கு இருக்கும் பணஉறவு ஊரறிந்த ஒன்று.

       பச்சை வேட்டையை இவர்கள் வேகமாக நடத்துவதற்கு இந்த பணஉறவும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.

       படையாட்களால் கொல்லப் பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை மக்களுக்கும், தொடர்புடைய குடும்பங்களுக்கும் இந்திய, மாநில அரசுகள் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனித உரிமை அமைப்பினர் தாக்கல் செய்த இந்தப் பொதுநல மனு விசாரிக்கப் படாமலேயே 2007ஆம் ஆண்டி லிருந்து உச்சநீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

       மேற்கு வங்காளத்தில் லால்கார், கிழக்கு சிங்கூர், மேற்கு சிங்கூர், குந்தி, கும்லா, பொக்காரோ அசாரிபாக் ஆகிய பகுதிகளும் ஒட்டு மொத்தமாக இராணுவக் கட்டுப் பாட்டில் வைக்கப் பட்டுள்ளது.

       இந்தப் பகுதிகளில் மட்டும் பாஸ்கோ, மிட்டல், டாடா, வேதாந்தா முதலான 200 நிறுவனங்களுடன் தில்லி அரசும், மாநில அரசுகளும் தொழில் முனைவு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளன. கிழக்கிந்திய வெள் ளைக்கார கம்பெனிக்கு அடியாட் களாக பிரித்தானியப் படைகள் காலனி நாடுகளில் செயல்பட்டதைப் போல இந்த கொள்ளைக்கார கம்பெனிகளுக்கு அடியாள் படையாக இந்தியப் படைகள் பச்சை வேட்டையில் ஈடுபடுகின்றன.

       எடுத்துக்காட்டாக, சோட் டா நாக்பூர் மண்டலத்தில் கடந்த ஜூலை 2009லிருந்து நடைபெற்று பச்சை வேட்டையில், மாவோயிஸ்டு களும் அவர்களுக்கு ஆதரவான பழங்குடி மக்களும் வெளியேற்றி விடபட்டுவிட்டனர் என்று அரசு அறிவித்த உடனேயே பன்னாட்டு எஃகு பகாசுர கம்பெனியான பாஸ்கோ சோட்டா - நாக்பூரில் 54 ஆயிரம் கோடி முதலீட்டில் இரும்புத் தொழிற்சாலை தொடங்கப் போவதாக அறிவித்தது.

தங்கள் சொந்த மண்ணில் அமைதியாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் வளர்ச்சி என்ற பெயரால் வாழிடங்களை விட்டு தொகைத் தொகையாக வெளியேற்றப் படுகின்றனர். வாய்பேச வழியில்லாத அரசியல் அநாதைகளான இந்த மக்களுக்கு உற்ற அரணாக மாவோயிஸ்டுகள் போராடி வருகிறார்கள்.

       கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இதனை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் காட்டி தொடர் அடக்குமுறையை இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டாலும், மாவோயிஸ்டுளை ஒழித்து விட முடியவில்லை. இது அடிப்படையில் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. மாறாக ஆழமான சமூகப் பொருளியல் பிரச்சினையாகும். மக்களைச் சார்ந்த அரசியல் திசை வழியில் தீர்க்கப் படாமல் போனால் இது மீண்டும் மீண்டும் தலையெடுக்கவே செய்யும்.

       எனவே, இந்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும். அவ்வமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும். சிறையில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர்களை விடுதலை செய்து அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பழங் குடியினரின் அவரவர் வாழிடங் களுக்கு செல்ல அனுமதித்து அவர்களின் இயல்பான வாழ்க்கை யை அனுமதிக்க வேண்டும். அடக்கு முறையின் மூலமாக இச்சிக்கலைத் தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டும்.

       இறையாண்மை பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு என்று பெயர் சூட்டி மனித வேட்டையில் ஈடுபடும் இந்திய அரசுக்கு இது தெரியாத தல்ல.

       சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் வாழும் கோல்டு, கோயா, தோர்லா ஆகிய பழங்குடி மக்கள் தங்கள் தாய் நிலத்தைப் பாதுகாக்க வெள்ளைக் காரர்கள் முயன்ற போது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே வீரஞ் செறிந்த போராட்டம் நடத்தி யவர்கள். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்று அவர்களுக்கு அரணாக இருந்து மாவோயிஸ்டுகள் அவர்களது வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

       இப்பகுதிகளில் மாவோ யிஸ்டுகள் தலைமையில் தொடக்க நிலையிலான மாற்று நிர்வாக ஏற்பாடுகள் பழங்குடி மக்களின் மரபுகளை உள்வாங்கி செய்யப் பட்டுள்ளது. 3 முதல் 5 கிராமங்களை உள்ளடக்கிய புரட்சிகர மக்கள் குழு உள்ளூர் நிர்வாகமாக செயல்படு கின்றது. இது போன்ற 15 புரட்சிகர மக்கள் குழுக்கள் இணைந்தது பிரதேச புரட்சிகர மக்கள் குழு ஆகும்.

       ஆயினும், பல்லாயிரக் கணக்கில் போராளிகளை ஈகம் செய்து கடந்த நாற்பது ஆண்டுகளாக போராட்டத் தீயிலேயே பயணம் செய்து வரும் மாவோயிஸ்டுகள் தங்கள் இலக்கை இன்னும் அடையமுடியாமல் இருப்பதற்கான காரணத்தை தன்னாய்வுச் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

       போர்க்களமாகக் காட்சி யளிக்கிற பழங்குடி மலையக பிரதேசங்களைத் தாண்டி அவற்றிற்கு அருகிலுள்ள சமவெளிப் பகுதியில் மக்கள் ஆதரவை அமைப்பு வழியில் திரட்ட முடியாததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

       இந்தியா என்ற கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு அதில் புரட்சிகர மக்கள் போர் மூலம் புதிய சனநாயக அரசை நிறுவி விடலாம் என்று கருதுவது பிழையானது.

       இந்தியா என்ற கட்டமைப்பில் பழைய சனநாயகமோ, புதிய சனநாயகமோ எதற்கும் இடமில்லை.

       இந்திப் பகுதியில் கூட வெவ்வேறு மொழி களைக் கொண்ட பழங்குடியினரே பெருமளவில் திரட்டப்படுகின்றனர் என்பது தற்செயலானதல்ல.

       இந்தியத் தேசியம் என்ற புதை சேற்றிலிருந்து விடுபட்டு பல்வேறு தேசியப் போராட்டங்களாக மறுவார்ப்பு செய்யப்படுவதே அம்மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கும். மாவோயிஸ்டுகளின் ஈகமும் வீணாகாமல் இலக்கை எட்டும்.

- கி.வெங்கட்ராமன்

Pin It