மலைகளின் ஆண்டாக தனியாக ஒரு ஆண்டை அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் சபை. மக்களிடமிருந்து எப்படியாவது மலைகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற அவசியத்தின் விளைவாகவே இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மலைத் தொடர்களும், அவற்றின் அழகும் கம்பீரமும் நாள் கணக்கில் நின்று ரசிக்கத்தக்கவை. நீளமான கடற்கரையைப் போலவே, நீளமான மலைத் தொடர்களையும் கொண்ட சிறப்பு நமது தமிழகத்திற்கு உண்டு.

அழகும் வளமும் நிறைந்த ஏராளமான மலைப் பகுதிகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை எந்த அளவிற்குத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் எனும் கேள்வி இன்று நம் முன்னே எழுந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டு வரை மலைகளையும், நிலப்பரப்புகளையும், கடல்களையும் காப்பாற்றியது ஒரு பெரிய காரியமே அல்ல. அது இயந்திரங்கள் இல்லாத காலம். இன்றைய காலமோ இயந்திரங்களின் காலம். மனிதகுலத்தின் நன்மைக்காகத் தான் இயந்திரங்கள் என்றாலும் அவை இயற்கைக்கு விரோதமாகவே பெரிதும் அரங்கேறி வருகின்றன.

தமிழகத்து மலைப்பகுதிகள் அனைத்தும் மிகவும் அடர்ந்த அல்லது ஓரளவு அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. அடர்ந்து உயர்ந்த மரங்கள் நிறைந்த மலைப் பகுதிகளில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் வாழ்கின்றன. சிறு சிறு மலைக் காடுகளிலும் பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. விலங்குகளுக்குச் சொந்தமானவை காடுகள். ஆனால் பல்வேறு விதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. மலைப்பகுதிகளுக்கும் மனிதர்கள் புழங்கும் பகுதிகளுக்கும் இடையிலான மலையடிவாரப்பகுதி, மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதைத் தமிழகத்தின் பெரும்பாலான மலைப்பகுதிகளில் காணமுடிகிறது.

யானைகளின் காட்டிற்கும் மனிதர்களின் வயல்வெளிகளுக்கும் இடைவெளியின்றிப் போய்விட்டதன் விளைவாகவும் மலைப்பகுதிகளின் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றாலும் காட்டு விலங்குகள் - குறிப்பாக யானைகள் - காட்டைவிட்டு வெளியேறி வயல்வெளிகளைத் துவம்சம் செய்வதும் சில நேரங்களில் மின் கம்பிகளில் சிக்கி மாண்டு போவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அடர்ந்த காடுகளுக்கான மலையடிவாரப்பகுதிதான் அதிகமாகக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டிய, மரங்களையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டிய பகுதியாகும். ஆயினும், நமது மலையடிவாரங்களில் நடப்படும் மரங்களைவிட மலைப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். இன்றைய இயந்திர உலகில் ஒரு மரம் இரண்டே நாளில் கதவாகவும், சன்னலாகவும் மாறி விடுகிறது. ஆனால் ஒரு விதையை மரமாக்க இயற்கை எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க நமக்கு நேரம் இருப்பதில்லை.

விளைய வைத்து அறுத்துக் கொள்ளும் அவகாசமும் திட்டமும் இல்லாமற் போய்விட்டதன் காரணமாகவே பலநூறு ஆண்டுகளாக விளைந்திருக்கும் காடுகளின் மீது நாம் கை வைக்க ஆரம்பித்து விட்டோம். மிகப் பெரிய மலைத் தொடர்களை நாம் பெற்றிருப்பது போல் தெரிந்தாலும் நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றின் மலைப்பகுதிகளை விட நமது மலைவளப் பகுதி குறைவானதே யாகும். தொலைநோக்குப் பார்வையில், இந்தக் குறைவான மலைப் பகுதிகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

குளிர் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் வசதி மிக்கவர்கள் நிலம் வாங்கிப் போடும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் அப்பகுதிகள் மாளிகைகள் நிறைந்த மண் மேடுகளாகக் காட்சியளிக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இது ஒருபுறம் இருக்க சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் கூளங்களால் - குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் - மேற்குறிப்பிட்ட மலைப்பகுதிகள் மாசடைந்து வருகின்றன. தன்னார்வ அமைப்புகளும் அரசும் எவ்வளவோ முயன்று பணி செய்தும், மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் அதிக அளவு சென்றடைந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களே அதிக அளவில் கரை ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.

காலங்காலமாக மலைக்காடுகளில் வாழ்ந்து வரும் மக்களால் மலைகளுக்கும் அதன் காடுகளுக்கும் எந்த இடையூறும் நேர்ந்ததில்லை. காராளக் கவுண்டர்கள், முடுகர்கள், சோளகர்கள், இருளர்கள், புலையர்கள் போன்ற மலைவாழ்ப் பழங்குடி மக்கள் தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்தின் எந்தச் சுவடும் இன்று வரை அவர்களுக்குத் தெரியாது என்பது கசப்பான உண்மையாகும். கோவை மாவட்டத்தின் அட்டுக்கல் மலைப்பகுதி இருளர்களையும், கல்கொத்தி மலைப்பகுதி முடுகர்களையும், திருமூர்த்தி மலைப்பகுதி புலையர்களையும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியின் தொங்கலூத்து, கலசப்பாடி, கருக்கம்பட்டி ஆகிய கிராமங்களின் காராளக் கவுண்டர்களையும் இவர்களைப் போன்ற இன்னும் பல்வேறு மலைவாழ் மக்களையும் பார்க்கிற எவருக்கும் இந்த உண்மை புரியவரும்.

தாம் வாழும் மலைகளே மலைவாழ் மக்களின் உலகமாக இருக்கிறது. பாறைகளும் மரங்களும் ஓடைகளுமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட மலைமக்கள் அப்பகுதிகளுக்கு, கரட்டியூர் அம்மன் படுகை, கோம்புத்துறை, குமரிப்பாறை, தங்கவலச கருப்புசாமி கோயில், பூதநாச்சித் தேருமலை என்றெல்லாம் பெயர்களைச் சூட்டி தங்களுக்குள் அடையாளம் காட்டிக் குறிப்பிட்டு அங்கெல்லாம் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்தந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது, உலகின் தட்பவெப்ப நிலையைப் பாதுகாப்பது, அருகிக் கொண்டே வரும் வன உயிர்களைப் பாதுகாப்பது, வனங்களில் வாழ்ந்தே பழகிப் போன, வனங்களிலேயே வாழ விரும்புகிற மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது, பல கோடிக்கணக்கான மரங்களைப் பாதுகாப்பது என்கிற கோணத்தில்தான் மலைகளைப் பாதுகாப்பது என்கிற ஐ.நா. சபையின் பிரகடனத்தை ஒவ்வோர் அரசும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்ள வேண்டும்.

- ஜெயபாஸ்கரன்

Pin It

தரைவாழ் உயிரினங்களில் மிகப் பெரியதும், பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகி நாளுக்கு நாள் அழிந்து வருவதுமான யானைகளைப் பற்றிய செய்திகள் மனிதகுல வரலாறு நெடுகிலும் மண்டிக் கிடக்கின்றன. மன்னராட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கில் போர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது முதல், இன்றைய கணிப்பொறி காலம் வரை யானைகள் மனித குலத்துக்குப் பல்வேறு வகையில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றன.

யானைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும் அவற்றை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பிழைக்கலாம் என்பதே மனிதர்களின் சிந்தனையாக இருக்கிறது. ஆசி வழங்கும் கோயில் யானைகள்; வித்தை காட்டும் சர்க்கஸ் யானைகள்; வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைத் தூக்கிக் கொண்டு வந்து அதை லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கும் முகாம் யானைகள்; முகாம் யானைகளுக்குப் பயிற்சி கொடுக்கவும், அடங்காத யானைகளை அடக்கவும் பயன்படுத்தப்படுகிற ‘கும்கி’ யானைகள்; மனிதர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்கிற கவலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டு யானைகள் என்று யானைகளில் எத்தனையோ பிரிவுகள்!

மனிதர்களின் கைகளில் சிக்காத காட்டு யானைகள் எந்த அளவுக்கு நிம்மதியாக வாழ்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால் பல்வேறு விதங்களில் மனிதர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான யானைகளில், எந்த யானையும் நிம்மதியாக இல்லை என்பது கண்கூடான உண்மை. முகாம்களில் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யானைக்கும், ஒரு நாள் உணவாக 100 கிராம் வெல்லம், 5 கிலோ கொள்ளு, 15 கிலோ ராகி ஆகியன உணவாக வழங்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதில் பெண் யானைகள், கருவுற்ற யானைகள், மற்றும் குட்டி யானைகளின் உணவு தொடர்பான அளவு விவரங்கள் மாறுபடுகின்றன. ஆனால் முகாம்களில் இல்லாமல் மனிதர்களுக்கிடையில் பல்வேறு தொழில் செய்து ஒடுங்கிக் கிடக்கும் எல்லா யானைகளுக்கும் இந்த அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அடர்ந்த காடுகளில் விருப்பம்போல் கூட்டம் கூட்டமாக நடமாடி, மரங்களின் பசுந்தழைகளைத் தின்று, பெரிய பெரிய காட்டாறுகளில் நீர் குடித்து அங்கேயே விளையாடி மகிழும் உடல் அமைப்பு கொண்ட யானைகள், அருகம்புல்லும் முளைக்க வாய்ப்பில்லாத நகரத்துச் சூழலில் எப்படி வாழ முடியும் என்பது சமூகத்தின் கவலைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது.

காடுகளில் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு காட்டைவிட்டு வெளியேறுகிற பல யானைகள் அருகில் உள்ள விளைநிலங்களைத் துவம்சம் செய்து பயிர்களைத் தின்று பசியாறிச் செல்கின்றன. காடுகள் அழிக்கப்படுவது; யானையின் வாழிடங்கள் காப்பி, தேயிலை போன்ற விளை நிலங்களாக மாற்றப்படுவது; தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் காட்டு யானைகளின் வாழ்வுரிமை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. ஆசிய யானைகளில் 50 விழுக்காடு தென்னிந்தியாவில் வாழ்கின்றன. இத்தகைய இயற்கையின் கொடை நமக்கு வாய்த்திருந்தாலும் இது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியவில்லை.

1998ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 28 யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் செத்துப் போயின. இவற்றில் 15-11-2001ஆம் நாள் அசாம் மாநிலம் தின்சூக்கியா மாவட்டத்தில் ஒரே ரயிலில் 7 யானைகள் அடிப்பட்டு மாண்டன; 1980 முதல் 1986 வரை ஆறு ஆண்டுகளில் 100 ஆண் யானைகள் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட யானைகள் விஷ உணவை உண்டு மாண்டுபோய் விட்டன என்று வனத்துறையின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது தவிர காடுகளின் ஓரம் அமைக்கப்படுகிற மின்சார வேலியில் சிக்கிப் பல யானைகள் மாண்டு கொண்டிருக்கின்றன. யானை வாழிடங்கள் பல்வேறு வகையில் ஆக்கிரமிக்கப்படுவதை வசதியாக மறந்துவிட்டு, யானைகளின் அட்டகாசம் பற்றியே மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1977ஆம் ஆண்டு மேலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, யானைகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் யானைகள் பல்வேறு வகையில் அழிக்கப்பட்டு வருவதைக் கருத்திற் கொண்டு 1992ஆம் ஆண்டு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அத்திட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இப்பத்தாண்டுத் திட்டம் (1992 - 2002) நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தியபோது யானைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக வனத்துறை பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி 1991இல் 3260ஆக இருந்த தமிழக யானைகளின் எண்ணிக்கை 2001இல் 3635 ஆக உயர்ந்துள்ளது. முகாம் யானைகளும், சர்க்கஸ் மற்றும் கோயில் யானைகளும் காட்டு யானைகளின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

யானைகள் பாதுகாப்பில் 1977ஆம் ஆண்டு சட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்். ஆனால் எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் யதார்த்தம் அவ்வளவு நிறைவாக இல்லை. யானையை வைத்து மனிதர்கள் பல்வேறு விதங்களில் பிழைக்கும் நிலைக்கு முதலில் தடைவிதிக்கப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது, மனிதர்களுக்காக உழைக்கும் யானைகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் முழுமை பெறும். மனிதர்களால் கைது செய்யப்பட்டவை போல வாழ்ந்து கொண்டிருக்கும் யானைகளை விடுதலை செய்து மீண்டும் அவற்றை இயற்கையின் வனச் சூழலிலேயே வாழ வைப்பதுதான் உண்மையிலேயே யானை நலச் சட்டங்களை மதிப்பதாக அமையும்.

யானைகள் வாழ்வதற்கேற்ற வெப்ப மண்டலக்காடுகளை நாம் பெற்றுள்ளதால் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இயற்கை நமக்கு அளித்திருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

யானை என்பது நமது இயற்கை வளத்தின் அடையாளமாகும். இயற்கையான வனவெளிகளில் யானைகளைப் பல்லாயிரக் கணக்கில் வளர்ப்பது எனத் திட்டமிட்டுச் செயலாற்றினால், அதன் விளைவாகக் காடுகள் செழிக்கும். வளமான காடுகள்தான் மழை உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கொடைகளை நமக்கு வழங்கும்.

- ஜெயபாஸ்கரன்

Pin It

மனிதர்களின் இன்றைய வாழ்க்கைமுறை இயற்கையோடு இயைந்ததாக இல்லை. விளைவாக புவிமாசுபடுதல், புவிவெப்பமடைதல் போன்ற ஆபத்துகளிடையே நாம் தளர்ந்த நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மை இன்னுமொரு ஆபத்தும் எதிர்நோக்கியிருப்பதாக அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களை தொற்றக்கூடிய நோய்களின் அச்சுறுத்தல் உச்சத்தில் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள்.

வனவிலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்கள் மற்றும் நோயூக்கிகளினால் உருவாகக்கூடிய புதிய நோய்களைத் தடுக்கும்பணியில் U.S.Agency for International Development (USAID) என்னும் அமைப்பு இயங்கிவருகிறது. விஞ்ஞானிகளின் பார்வையில் முழுசுகாதாரம் என்பது மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. உலகநாடுகள் அனைத்திலும் நோய்க்கிருமிகளின் பரவலை கண்காணித்து கட்டுப்படுத்தும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. தென் அமெரிக்காவின் அமேசான் வடிநிலம், ஆப்பிரிக்காவின் காங்கோ வடிநிலம், அதனை ஒட்டிய ரிஃப்ட் பள்ளத்தாக்கு, தெற்கு ஆசியாவின் கங்கை சமவெளி, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகள் இந்த உலகளாவிய நிறுவனத்தின் கண்காணிப்பில் உள்ளன. இங்கெல்லாம் விலங்குகளிடையே தோன்றி மனிதர்களிடம் பரவக்கூடிய நோயூக்கிகள் கண்காணிக்கப்படுகின்றன.

பெருவாரியான மக்களை அழித்தொழிக்கும் கொள்ளை நோய்கள் ஒவ்வொரு 30 முதல் 40 ஆண்டுகளில் தோன்றுவதாக வரலாறு கூறுகிறது. நவீன உலகத்தில் இதுவரை தோன்றியிராத புதிய நோய்கள் மனிதர்களைத்தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. நம்முடைய வாழ்க்கை முறை மாறிக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதையும் விட மனிதர்கள் இப்போது அதிகமாக பயணம் மேற்கொள்கிறார்கள். நம்முடைய குடியிருப்புகளும் சாலைகளும் காடுகளை அடுத்தும், பல இடங்களில் காடுகளுக்குள்ளும் அமைந்திருக்கின்றன. நாம் வளர்க்கும் விலங்குகளும், பறவைகளும் வனவிலங்குகளுடன் நெருங்கி வருவதால் நாம் இதுவரை அறிந்திராத வைரஸ்களும், பாக்டீரியாக்களும் வெகுவேகமாக மனிதர்களிடம் பரவுகின்றன. மனிதர்களிடம் நோயை உண்டாக்குபவை என்று இதுவரை சுமார் 1,461 நோயூக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏறத்தாழ 60 சதவீதம் நோயூக்கிகள் விலங்குகளிடமிருந்து தோன்றியவைதான். இவ்வாறு மனிதகுலம் தாக்குதலுக்குள்ளான நோய்களின் பட்டியல் நீளமானது.

1918ல் உலகை உலுக்கிய இன்புளூயன்சா என்னும் கொள்ளைநோய் ஏறத்தாழ 50 மில்லியன் மக்களை பலிவாங்கியது. இந்த நோய்க்குக்காரணமான வைரஸ் பறவைகளிடமிருந்துதான் மனிதருக்குப் பரவியது. The human immunodeficiency எனப்படும் HIV வைரஸ் உலகில் மில்லியன் மக்களை பீடித்திருக்கிறது. சிம்பன்ஸி குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு தாவின. 2003ல் சீனாவின் தெற்குப்பகுதியில் SARS எனப்படும் Severe acute respiratory syndrome நோய் தாக்கியது. அந்தப்பகுதியில் சேறுநிறைந்த சந்தைகளில் உணவிற்காக விற்கப்பட்ட வன விலங்குகளிடமிருந்துதான் இந்த நோய் தொற்றியது. இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஃப்ளூ நோய்க்கு காரணமான H5N1 வைரஸ் தோன்றிய இடம் பறவைகள்தான்.

உலகம் முழுவதிலும் பரவும் இத்தகைய கொள்ளை நோய்களால் மொத்தமக்கள் தொகையில் கால்பகுதியினர் பாதிக்கப்படுவார்கள். இவர்களுள் 51 மில்லியன் முதல் 81 மில்லியன் மக்கள் மரணத்தை சந்திப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் 4,00,000 உயிரிழப்புகள் ஏற்படும். உலகின் பொருளாதார இழப்பை கணக்கிட்டால் அது நான்கு டிரில்லியனை தாண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தகவல்: மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க:

http://www.sciencedaily.com/releases/2009/10/091026180207.htm

Pin It

உலகிலேயே போதை மருந்து கடத்தலுக்கு அடுத்ததாக அதிகப்படியான பழம் புழங்கும் தொழில் விலங்குகளை கள்ள வேட்டையாடி கடத்துவதுதான். அரசின் அலட்சியம், நிர்வாகத்தின் பொறுப்பின்மை, மக்களின் விழிப்புணர்வு குறைவு காரணமாக நமது காட்டுயிர்கள் கணக்கு வழக்கின்றி அழிகின்றன. இந்தக் கூற்று எவ்வளவு தூரம் உண்மை? கீழே உள்ள விவரங்களைப் படியுங்கள்:

இந்தியாவில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த புலிகளின் எண்ணிக்கை சராசரியாக 40,000. 70களில் புலி பாதுகாப்பு செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகும்கூட, தற்போது புலிகளின் எண்ணிக்கை 1500க்கும் குறைவு என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா, மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா போன்ற புலி சரணாலயங்களிலேயே அவை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. புலிகளின் அழிவுக்குக் காரணம் அவற்றின் தோலுக்கு சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலை. புலித் தோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ. 10 லட்சம். சீன மருத்துவ முறையில் புலியின் உறுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. –

சர்வதேச சந்தையில் சிறுத்தைப் புலி தோலின் விலை ரூ. 3 லட்சம். நேபாளத்தில் ரூ. 30,000. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கும், அங்கிருந்து மற்ற ஊர்களுக்கும் சிறுத்தைகள் கொல்லப்பட்டு கடத்தப்படுகின்றன. –

ஒரு காலத்தில் மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள ஈரான் வரை பரந்த பரப்பில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் இன்றைக்கு குஜராத்திலுள்ள கிர் என்ற ஒரே ஒரு காட்டுப் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 360 வரை எஞ்சியுள்ளன. உள்ளன இனப்பெருக்கத்தால் இவை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. –

இந்தியாவில் யானைத் தந்தம் ஒரு கிலோ விலை ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை. அதே நேபாளத்தில் ரூ. 25,000. இதற்காக யானைகள் நாடு முழுவதும் கொல்லப்படுகின்றன. –

சர்வதேச சந்தையில் இந்திய காண்டாமிருக கொம்பு ஒன்றின் விலை ரூ. 4 முதல் 7 லட்சம். சீன மருத்துவம், பாரம்பரிய மருத்துவத்தில் மூடநம்பிக்கை காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாநில காடுகளில் பெருகிக் கிடந்த இவை, இன்றைக்கு அவை அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் காசிரங்கா சரணாலயத்தில் 1855 காண்டாமிருகங்களே உள்ளன. –

இந்தியாவில் 78 பறவை வகைகள் அழியும் ஆபத்தில் உள்ளன. அவற்றில் 13 அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவை: இமாலய காடை, பிங்க் ஹெடட் டக், வெள்ளை வயிற்றுக் கொக்கு, மஞ்சள் திருடிக் கழுகு, வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகு, இந்திய பிணந்தின்னிக் கழுகு, சிறிய அலகு பிணந்தின்னிக் கழுகு, வங்க வரகுக் கோழி, சைபீரிய கொக்கு, (சோஷியபிள்) ஆள்காட்டி, கரண்டி மூக்கு உள்ளான், ஜெர்டான் கல்குருவி, காட்டு ஆந்தை –

நாம் பயன்படுத்தும் அனைத்து மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை குரங்கு, முயல், எலி போன்றவற்றிடம் முதலில் பரிசோதிக்கப்பட்ட பிறகே நமது பயன்பாட்டுக்கு வருகின்றன.

- ஆதி

(பூவுலகு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Pin It