தமிழகம் இழந்த, இழக்கப் போகிற அரிய உயிரினங்கள் - ஒரு பார்வை

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் மூலம் மரபணுவிலேயே தகவமைப்பைப் பெற்று தனித்துவம் மிக்க உயிரினங்கள் உருவாகின்றன. ஆனால் இயற்கை இப்படி பார்த்துப் பார்த்துச் செதுக்கிய உயிரினங்கள், மனிதர்களால் ஒரு சில ஆண்டுகளில் ஓர் இடத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்து போகின்றன. இப்படி நாம் இழந்தது அநேகம். இழக்கப் போவதன் எண்ணிக்கையும் குறைச்சலாக இல்லை. கடந்த 6.5 ஆண்டுகளில் ஆறாவது மிகப் பெரிய உயிரினப் பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது என்று உயிரின பாதுகாவலர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?...

இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நவீனமாகவும், நகர்மயமாகவும் உருமாறி வரும் அதன் வளர்ச்சிகள் இன்னும் 8 ஆண்டுகளில் நாட்டை வல்லரசாக்கி விடும் என்று சிலர் நம்பிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அதற்குள் நாம் எத்தனை உயிரினங்களை, மீண்டும் இயற்கையில் உருவாக்க முடியாத உயிரினங்களை, பறவைகளை, தாவரங்களை இழந்திருப்போம் என்று தெரியவில்லை.

ஒரு பக்கம் மக்கள்தொகை வளர்ச்சி, மற்றொரு பக்கம் அதைவிட வேகமாக வளர்ந்து வரும் நவீன வாழ்க்கை முறை, அத்துடன் நமது அரசுத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் முன்னெடுக்கும் வளர்ச்சி முறை ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக சின்னாபின்னமாவது நமது இயற்கைதான். கண்ணுக்குத் தெரியாத ஓர் இயந்திரம் போல, உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் உய்விக்க ஒவ்வொரு கணமும் உழைத்துக் கொண்டிருக்கும் இயற்கை முற்றிலுமாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“மனிதன் பேராற்றல் மிக்கவன்” என்ற அடைமொழியுடன் இயற்கையை கட்டுப்படுத்தி, துய்த்து, தனக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதை நவீனமயம் ஆதரிக்கிறது. ஆனால் இப்படிச் செய்யும்போது ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி, அது கவலைப்படுவதில்லை. மனிதகுல வரலாற்றில் இல்லாத வகையில் உயிரினங்களும், தாவரங்களும் நம் கண் முன்னாலேயே பெருமளவில் அழிந்து வருகின்றன.

வளர்ச்சி ஏற்படுத்தும் நெருக்கடிகள், காட்டில் பழங்குடிகள் அந்நியப்படுத்தப்படுதல், குறுகிய நோக்கம் கொண்ட கொள்கைகள், மக்களின் தேவை அதிகரிப்பு, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களின் சரிவு ஆகியவற்றுடன் மக்கள்தொகை வளர்ச்சி, அது சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கையை கபளீகரம் செய்து வருகின்றன.

சிவிங்கிப்புலி ஏற்கெனவே அற்றுப்போய்விட்டது. புலி, யானை, பனிச்சிறுத்தை, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), கடல்ஆமைகள், கானமயில், ஆசிய சிங்கம், செந்நாய்கள், இமாலய ஐபெக்ஸ் (காட்டாடு) போன்றவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் பல உயிரினங்கள் குறிப்பிட்ட ஒரு சூழல் அமைப்பின் வளத்தை வெளிப்படுத்துபவை. எனவே இவற்றின் அழிவு, ஒட்டுமொத்த சூழல் அமைப்பு அழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. வாழிட அழிவுதான் உயிரினங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது பல்வேறு காரணங்களால் நடைபெறுகிறது. எளிதில் சிதைந்துவிடக் கூடிய இந்த வாழிடங்கள் காப்பாற்றப்பட்டால்தான், மண்வளமும், தண்ணீரும் பாதுகாக்கப்படும், வேளாண் உற்பத்தி சரியாமல் தொடரும். சுருக்கமாகச் சொல்வெதென்றால் மனிதன் உயிர்வாழ இந்த வாழிடங்கள் மட்டுமின்றி, அந்த உயிரின வலைப்பின்னலின் முக்கிய அங்கமான உயிரினங்களும் அவசியம்.

உயிரினங்களின் அழிவுக்கு வாழிட அழிவுதான் முக்கிய காரணம் என்பதற்கு சிறுத்தையும், யானையும் சந்தித்து வரும் நெருக்கடி நேரடி உதாரணம். மனிதர்களைப் போல இவற்றின் எண்ணிக்கை எந்த வகையிலும் கட்டுப்பாடில்லாமல் உயரவில்லை, மாறாக சரிந்தே இருக்கிறது. ஆனால் முன்பு இருந்ததைவிட குறுகிய பரப்புக்குள் வாழ இவை நிர்பந்திக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே, அவை காட்டின் எல்லைப் பகுதிகளுக்கு வருவதும், அவற்றை ஏதோ எதிரிகள் போல மனிதர்கள் பாவிப்பதும் தொடர்கிறது.

“காட்டுக்குள் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், வெளியே இருக்கும் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் புலிகளையும் யானைகளையும் காப்பாற்றச் சொல்கிறீர்களே, இது என்ன நியாயம்?” என்று மனிதஉரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்கள். புலிகளும் யானைகளும் முந்தைய காலத்தில் இருந்த அதே எண்ணிக்கையில்தான் இன்றைக்கும் இருக்கின்றனவா, அல்லது குறைந்திருக்கின்றனவா? பழங்குடி மக்களின் எண்ணிக்கையும், அவர்களது வாழ்க்கை முறையும் பழையபடியேதான் தொடர்கின்றனவா என்ற கேள்விகளுடன் இணைத்தே இதைப் பார்க்க வேண்டும்.

பழங்குடிகள் அன்றைக்கு வாழ்ந்த அதே வாழ்க்கையை வாழ்கிறார்களா, எந்த நவீன அறிவியல் வளர்ச்சியையும் காட்டுக்குள் பயன்படுத்தவில்லையா என்பதையும் சேர்த்தே இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட முயற்சிக்க வேண்டும். “பழங்குடிகளுக்கு நல்ல காற்று கிடைக்கிறது, நல்ல சுற்றுச்சூழல் கிடைக்கிறது. அவற்றைத் தடுக்க வேண்டும்“ என்பதற்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று உயிரின பாதுகாவலர்கள் யாரும் வாதாடவில்லை. அவர்களது வாழ்வுரிமையை பறித்து, காட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறவில்லை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. இதில் உணர்ச்சிவசமாகவோ, மனித மதிப்பீட்டு ரீதியிலோ மட்டும் பேசுவது ஒட்டுமொத்த சமநிலைக்கு உகந்தது ஆகாது.

நமது காடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல், வகை பிரிக்கப்படாமல் எத்தனையோ உயிரின வகைகள், தாவர வகைகள் உள்ளன. இதற்கு நல்ல உதாரணம் வடகிழக்கு மாநிலங்கள். தவாங் மக்காக் என்ற குரங்கு இனம், கறுப்புக் கேளையாடு, புகுன் லியோசிக்லா என்றொரு பறவை, எண்ணிலடங்காத தவளை இனங்கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இப்படி பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே ஓர் இயற்கைச் சூழல் அழிக்கப்பட்டால், இது போல ஓர் உயிரினம் இருந்ததும், அந்தச் சூழலில் அது செலுத்தி வந்த தாக்கமும் சுத்தமாகத் தெரியாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.

இந்த இடத்தில் கேலபாகஸ் தீவுகளில் ஒரே வகை உயிரினங்களிடம் கண்ட வேறுபாடுகளை வைத்தே “உயிரினங்களின் தகவமைப்புக் கொள்கையை” (Adaptation Theory) சார்லஸ் டார்வின் முன்மொழிந்தார் என்பதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். பரிணாமவியல் கொள்கையின் உருவாக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே வகையான உயிரினம் வேறொரு சூழலில் வாழும்போது, அதற்கேற்ப தகவமைத்துக் கொள்கிறது. இல்லாதபட்சத்தில் அழிந்து போகிறது என்பதே தகவமைப்புக் கொள்கை. எனவே, இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும், முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

டைனோசர்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் உலகிலேயே பிரம்மாண்ட உயிரினமான அந்த டைனோசர்கூட தனக்குத் தேவையான உணவுக்காக இரைகளை மட்டும் கொன்றதே ஒழிய, உலகையோ, மற்ற உயிரினங்களையோ அழிக்கவில்லை.

நமது பாரம்பரிய வளம் என்று எதைஎதையோ சொல்லிக் கொள்கிறோம். வெப்பமண்டலப் பகுதி என்பதாலேயே இயற்கை நமக்கு வாரி வழங்கியுள்ள அரிய வளங்களையும், செல்வங்களையும் அழிப்பதும், அழிய விடுவதும் எப்படி அறிவுடைமை ஆகும்? கடந்த காலத்தில் நம்மிடம் இருந்த மரபுசார்ந்த விழுமியங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய நவீன உலகில் மறக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீட்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

பழங்குடிகளுக்கு காடு சார்ந்த, உயிரின நிர்வாகம் சார்ந்த பாரம்பரிய அறிவு குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது. அவர்களுடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் இணைத்து நமது காடுகளையும் உயிரினங்களையும் காப்பாற்றலாம். பழங்குடிகளுடன் ஒருங்கிணைக்காமல் காட்டையோ, உயிரினத்தையோ காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை. அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள், அவற்றுக்கு அருகே வாழும் பழங்குடிகள், இயற்கையான வாழிடங்கள் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு கொண்டவை, ஒன்றையன்று சார்ந்தவை என்பதை மறந்துவிடக்கூடாது.

அழிந்துபட்ட தமிழக உயிரினங்கள்:

பாலூட்டிகளில் நான்கில் ஒன்றும், பறவைகளில் எட்டில் ஒன்றும் இன்று அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் அநேகம்.

 “மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற அர்ஜுனன் தவம் சிற்பத்தில் ஒரு பெண் சிங்கம் 2 குட்டிகளுக்கு பால் கொடுப்பது போல் இருப்பதையும், சிங்கநல்லூர், சிங்கம்புணரி போன்ற ஊர் பெயர்களையும் குறிப்பிட்டு, ஆசிய சிங்கம் தென்னிந்தியாவில் இருந்தது” என்று சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் பற்றிய அவரது பதிவுகள்:

சென்ற நூற்றாண்டு நடுப் பகுதி வரை தமிழகத்தில் உலவிய சிவிங்கிப்புலி (Cheetah) இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் இல்லை. இதை ஆப்பிரிக்காவில் இருந்து மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்கிறது (இது சிறுத்தை (leopard) அல்ல). மோயாறும் பவானி நதியும் சேரும் இடத்திலுள்ள புதர்க்காடுகளில் சிவிங்கிப்புலி இருந்த விவரம் அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. 1876இல் மதராஸ் ராஜதானியில் 135 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக ஓர் ஆவணம் குறிப்பிடுகிறது. சிவிங்கியை எப்படிப் பிடிப்பது, அதை வேட்டைக்குப் பழக்கும் முறைகள், மருத்துவம் பார்க்கும் முறைகள் பற்றி படங்களுடன் விளக்கும் நூல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கிறது. 

சிவிங்கிப்புலிக்கும் தற்போதும் நம் காடுகளில் வசிக்கும் சிறுத்தைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிப்படை வேறுபாடு, சிவிங்கிப்புலிக்கு தோல்போர்வையில் புள்ளிகளே இருக்கும். ஆனால் சிறுத்தைக்கு கறுந்திட்டுகள் இருக்கும். சிவிங்கிக்கு கண்ணுக்குக் கீழே கறுப்புக்கோடு இருக்கும். கால்கள் நீண்டவை. உலகிலுள்ள இரைகொல்லிகளில் வேகமாக ஓடக்கூடியது. ஏறக்குறைய 100 கி.மீ. வேகத்தில் ஓடும். 1950களில் இது அற்றுப்போய்விட்டது.

ஒளவையார் எழுதியதாக கூறப்படும் மூதுரை பாடல் ஒன்றில்

“கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானுமதுவாகப் பாவித்து தானுந்தான்

பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கல்வி” மூதுரை 14

என்றொரு செய்யுள் இருக்கிறது. இதில் குறிப் பிடப்படும் கானமயில் ஆண் பறவை வாலை விசிறி போல விரித்து, இறக்கைகளைப் பரப்பி, ஆடுவதுண்டு. அது வான்கோழியை நினைவுபடுத்தும். இந்தப் பாடல் ஒளவையார் எழுதியது இல்லை என்றும் கூறப்படுகிறது. புகழ்பெற்ற இந்தச் செய்யுளில் கூறப்படும் கானமயில் (The Great Indian Bustard) என்ற பறவை ஒகேனக்கல் அருகேயுள்ள புதர்காடுகளில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு அருகேயும் இருந்ததாம். தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிட்ட இப்பறவை, இன்றைக்கு ராஜஸ்தானிலும் மகாராஷ்டிரத்திலும் ஆந்திரத்திலும் தென்படுகிறது. வறண்ட புதர்க்காடுகளில் தரையில் முட்டையிட்டு அடைகாக்கும் பறவை இது. அதேபோல வரகுக்கோழி (Lesser Florican) என்ற மற்றொரு தரைவாழ் பறவையும் தமிழகத்தில் இருந்து அழிந்துவிட்டது. செங்கம் அருகே சுடப்பட்ட ஒரு வரகுக்கோழி, பாடம் செய்யப்பட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தப் பறவை தமிழகத்தில் இருப்பதாக பதிவுகள் இல்லை. தமிழகம் ஏற்கெனவே இழந்துவிட்ட உயிரினங்கள் இவை. இது தியடோர் பாஸ்கரன் கூறும் செய்திகள்.

அதேபோல தமிழக பகுதிகளிலும், தேசிய அளவிலும் பிணந்தின்னிக் கழுகுகள் பெருமளவு அழிந்துவிட்டன. இதற்கு Diclophenac  என்ற வலிநிவாரணியே காரணம். இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து இந்த மருந்து கழுகுகளின் உடலுக்குள் சென்று, அவை அழியக் காரணமானது. இப்போது இந்த மருந்து தடை செய்யப்பட்டு விட்டாலும் கழுகுகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டன.

ஒரு காலத்தில் சிவிங்கிப்புலியின் இரையாக இருந்த, சென்னையிலும், தமிழகத்தின் பல வறண்ட காட்டுப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த வெளிமான் இன்றைக்கு ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் எஞ்சியிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், சென்னை ஐ.ஐ.டி. கிண்டி தேசிய பூங்காவின் ஒரு பகுதியை அழித்துத்தான் ஐ.ஐ.டி கட்டப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி வளாகத்துக்குள் இன்றைக்கு வெளிமான்கள் மிக மிகச் சொற்பம்.

இப்படி தற்போதும்கூட பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை சிங்கவால் குரங்கு என்று பரவலாக அறியப்படும் சோலை மந்தி. மற்றொன்று தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு.

உலகில் அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களை சிவப்புப் பட்டியல் (Red List) என்ற பெயரில் ஐ.யு.சி.என். (IUCN - International Union for Conservation of Nature) என்ற அமைப்பு பட்டியலிடுகிறது. ஒரு எச்சரிக்கையாகவே இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும் அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி முற்றிலும் அற்றுப்போகும் முன் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தப் பட்டியலின் நோக்கம். அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழக உயிரினங்கள்:

1. வரையாடு (Nilgiritragus hylocrius)

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் காடுகளின் 5 சதவீதப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. 1970&80களில் 2000& 2,500 வரை இருந்த இவற்றின் எண்ணிக்கை 2008 வாக்கில் 1,800&2,000 ஆகக் குறைந்துவிட்டது. மலை முகடுகள், புல்வெளிகள், திறந்த வெளிகளில் வாழும் இந்த ஆடு அதிகாலையிலும், பிற்பகல் நேரத்திலும் இரை தேடும். சராசரியாக 3.5 ஆண்டுகளே வாழும். வாழிட அழிவும், கள்ள வேட்டையும்தான் இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம்.

2. சோலை மந்தி (Macaca silenus)

சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்பட்டாலும் சோலை மந்தி என்பதே சரியான பெயர். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழ்கிறது. இவற்றின் எண்ணிக்கை 4,000 ஆக இருந்தாலும், முதிர்ந்த விலங்குகள் 2,500தான் எஞ்சியிருக்கின்றன. வாழிட அழிவு, வேட்டையாடல் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆனைமலை பகுதியில் சுமார் 500 சோலை மந்திகள் வாழ்கின்றன. இது வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடுகளின் தாவரவிதானப் பகுதியில் வாழக்கூடியது. அனைத்துண்ணி. வாழிடம் துண்டாதல் இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். வெட்டுமரத் தொழில், தேயிலை, காப்பி, தைல மரத் தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டதே இவற்றின் அழிவுக்கு முதன்மைக் காரணம்.

3. மலபார் புனுகுப் பூனை (Viverra civettina)

உலகின் அரிய பாலூட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவில் மட்டுமே வாழ்கிறது. இரவாடியான இந்த விலங்கு, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழும் உயிரினம். மரங்கள் அடர்ந்த சமவெளிகள், பசுமைமாறா மழைக்காடுகளின் மலைச்சரிவுப் பகுதிகளில் வாழும். காடழிப்பும், வணிகத் தோட்டங்களுமே இதற்கு மிகப் பெரிய எதிரிகள். இந்த உயிரினத்தின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.

4. பெரிய பாறை எலி (Cremnomys elvira)

இந்தியாவில் மட்டுமே வாழக்கூடியது பெரிய பாறை எலி அல்லது எல்விரா எலி. இடைப்பட்ட அளவு கொண்ட, வளை தோண்டி வாழும் இரவாடி விலங்கு இது. பாறைப் பகுதிகள் கொண்ட வெப்பமண்டல வறண்ட புதர்க்காடுகளில் வாழக்கூடியது. தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளில் இது வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழிட அழிவு, காட்டை சீர்திருத்துதல், விறகு சேகரிப்பு போன்றவை இதற்கு அச்சுறுத்தல்.

5. வெண்முதுகுக் கழுகு (Gypsbengalensis)

இந்தியாவில் மொத்தமுள்ள ஒன்பது பிணந்தின்னிக் கழுகு வகைகளில் வெண்முதுகுக் கழுகு White-backed Vulture (Gypsbengalensis), செந்தலைக் கழுகு - Slender-billed Vulture (Gyps tenuirostris), கோடாங்கிக் கழுகு - Long-billed Vulture (Gyps indicus) ஆகிய மூன்று வகைகளும் 99 % அழிந்துவிட்டன. சிவப்பு பிணந்தின்னிக் கழுகு (Sarcogyps calvus) சமீப காலத்தில் அதிவேகமாக அழிந்துவிட்டது. முன்பு இந்தியா முழுமையும் காடுகள், கிராமங்களில் இந்தக் கழுகுகள் சாதாரணமாக காணப்பட்டன. 

பிணந்தின்னிக் கழுகுகள்தான் இயற்கை துப்புரவாளர்கள், காட்டில் இறந்த விலங்குகளை உண்டு வாழ்வதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மையையும் பாதுகாப்பையும் இவை உறுதி செய்கின்றன. டைகிளோஃபெனாக் வலிநிவாரணி கால்நடைகளுக்கு வகைதொகை இல்லாமல் கொடுக்கப்பட்டது இவற்றின் அழிவுக்கு முதன்மை காரணம். கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக மாட்டு டாக்டர்களால் தரப்பட்ட டைகிளோஃபெனாக் என்ற மருந்து இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து, இந்த கழுகுகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியது. இவற்றின் ரத்தத்தில் டைகிளோஃபெனாக் அளவு அதிகரித்த நிலையில் கழுத்து சரிவது, கீல்வாதம் போன்ற நோய்கள் அதிகரித்து கடைசியில் கழுகுகள் கூட்டங்கூட்டமாக அழிந்து போயின.

இக் கழுகுகளின் அழிவு காரணமாக இறந்த விலங்குகள் சுத்தம் செய்யப் படாமல் போவதால் ரேபிஸ், ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது. அத்துடன் பார்சிகளின் அமைதி கோபுரத்தில் சடலங்கள் இடப்படும் சடங்கையும் இது பாதிக்கிறது.

6. கரண்டிவாய் உள்ளான் (Eurynorhynchus pygmeus)

இந்தியாவுக்கு வலசை வரும் பறவைகளுள் ஒன்று கரண்டிவாய் உள்ளான் Spoon Billed Sandpiper - (Eurynorhynchus pygmeus). இது உலகம் முழுவதுமே 150&320 ஜோடிகள்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைக்கு சிறப்புத்தன்மை கொண்ட இனப்பெருக்க மையங்கள் தேவை. இதன் காரணமாகவே இதன் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. குளிர்காலத்தில் வலசை வரும் இந்தப் பறவைக்கு தமிழகமும் ஒரு புகலிடம். ஓரளவு தாவரங்கள் உள்ள கடற்கரைப் பகுதிகளே இதன் இருப்பிடம். வாழிட சிதைவு, நிலச் சீர்திருத்தம், மனிதத் தொந்தரவுகளே இவற்றின் இனப்பெருக்கத்துக்கு அச்சுறுத்தல்.

7. சிஸ்பாரா மரப்பல்லி (Cnemaspis sisparensis)

இது காட்டில் இருக்கும் ஒரு வகைப் பல்லி. பூச்சியுண்ணியான இந்தப் பல்லி ஓர் இரவாடி. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே இருக்கும் இந்தப் பல்லி, நீலகிரிப் பகுதியில் உள்ள சிஸ்பாராவில் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்தப் பெயரே வைக்கப்பட்டது. வாழிடம் திருத்தப்படுதல், வாழிடம் மாற்றப்படுதல்தான் இவற்றுக்கு எதிரி. இதன் எண்ணிக்கை தொடர்பாக முறையான பதிவுகள் இல்லை.

8. அழுங்காமை (Eretmochelys imbricata)

கடலாமைகளில் அழுங்காமை - Hawksbill Turtle (Eretmochelys imbricata) மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் வலசை செல்லும் பண்பு கொண்ட இந்த ஆமை, உலகெங்கும் உள்ள 70 நாடுகளில் முட்டையிடக் கூடியது. இந்த ஆமை இனப்பெருக்க வயதை அடைவதற்கு காலதாமதம் ஆகும். 25&40 வயதுள்ள ஆமைகளே இனப்பெருக்கம் செய்ய முடியும். மேலும் தனித்த, மணல் நிரம்பிய கடற்கரைகளிலேயே முட்டையிடும். தமிழகத்துக்கும் இந்த ஆமை அவ்வப்போது வருவது உண்டு. ஓடு விற்றல், முட்டை சேகரிப்பு, இறைச்சிக்கு கொல்லப்படுதல், எண்ணெய் மாசு, முட்டையிடும் இடம் சிதைவு, தீவனம் அழிப்பு போன்றவை இவற்றுக்கு அச்சுறுத்தல்.

9. பாண்டிச்சேரி சுறா (Carcharhinus hemiodon)

இந்திய துணைக்கண்ட கடற்கரைகளிலும், திட்டுப் பகுதிகளுக்கு அருகிலும் வசிக்கக் கூடிய ஒரு கடல் மீன் இனம் இது. மேலும் மிகவும் அரிய, மிகக் குறைவாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஓர் உயிரினம். இந்தியக் கடல் பகுதிகளில் உள்ளது. கடற்கரை பகுதிகளிலும் அது வாழுமிடங்களிலும் முறைப்படுத்தப்படாத மீன்பிடி முறைகள் பெருகி வருவதே இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது வலையில் விழுந்தாலும், சந்தை ஆய்வுகளில் பதிவு ஆவதில்லை. வணிகரீதியில் முக்கியத்துவம் இல்லையென்றாலும், மற்ற மீன்களுடன் வலையில் சிக்கிக் கொள்வதாலேயே பெருமளவு அழிக்கப்பட்டது.

10. கூட்டி எட்டுக்கால் பூச்சி (Poecilotheria metallica).

உலோக எட்டுக்கால் பூச்சி அல்லது மயில் எட்டுக்கால் பூச்சி என்று பல பெயர்கள் கொண்ட இந்த எட்டுக்கால் பூச்சி இரும்பு நீல நிறத்தில், ஆரஞ்சு மஞ்சள், கறுப்பு வெள்ளை திட்டுகள் கொண்டது. இது முதன்முதலில் உதகமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாலேயே கூட்டி எட்டுக்கால் பூச்சி என்ற பெயர் வந்தது. ஊட்டிக்கு ரயில்பாதை போட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் செல்லப்பிராணிகள் விற்பனைக்கான கடத்தலில் இது முக்கிய இடத்தைப் பிடித்தது. இதன் குஞ்சுகள் மிகச் சிறியதாக இருப்பதாலும், மனிதர்கள் ஏற்படுத்தும் மற்ற நெருக்கடிகள் காரணமாகவும் அழியும் ஆபத்துக்குச் சென்றுள்ளது. தென்னிந்திய மலைக் காட்டுப் பகுதிகளில் வாழ்கிறது. இந்தியாவில் மட்டுமே இந்த எட்டுக்கால் பூச்சி இருக்கிறது. செல்லப்பிராணிகள் விற்பனைக்கான கடத்தலில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்படும் எட்டுக்கால் பூச்சி வகை இது. இவை வாழ்ந்த பெருமளவு காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது விறகுக்காக இவற்றின் வாழிடம் சிதைக்கப்பட்டுவிட்டது. ஆந்திராவில் இருப்பதாக பதிவு உள்ளது.

 11. தேரைத் தோல் தவளை-கேரள இந்தியத் தவளை (Indirana phrynoderma)

கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியில் வாழக்கூடியது. தோலின் மீது மரு, கழலை, சுரப்பிகளுக்கான மடிப்புகள் போன்றவற்றை முதுகுப் பகுதியில் பெற்றிருப்பதால், தேரைத் தோல் தவளை என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஆனைமலை பகுதியில் காணப்படுகிறது. தொடர்ச்சியான வெட்டுமரம், விறகு சேகரித்தல் காரணமாக ஏற்பட்ட வாழிட அழிவுதான் இந்த தவளைக்கு பெரும் அச்சுறுத்தல்

12. கிரெய்ட் புதர் தவளை (Raorchestes griet)

இந்த சிறிய புதர்த் தவளை, மூக்கு முதல் எச்சமிடும் பின்வாய் வரையிலான நீளம் 22.2 செ.மீ. இந்தத் தவளை கடல் மட்டத்தில் இருந்து 600& 1,800 மீட்டர் உயரத்தில்தான் வாழும். கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி, வால்பாறை பகுதியில் தென்படுகிறது. தேயிலை, தைலமரத் தோட்டங்களால் காடுஅழிவும், வாழிடம் துண்டாடப்பட்டதுமே இவற்றின் அழிவுக்குக் காரணம்.

13. பொன்முடி பெரிய புதர்த் தவளை (Raorchestes ponmudi)

இந்தியாவிலுள்ள புதர்த் தவளைகளில் பெரியது. மூக்கு முதல் எச்சமிடும் பின்வாய் வரையிலான நீளம் 4 செ.மீ. கோவை மாவட்டம் ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் வாழக் கூடியது. சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்கள் விரிவாக்கப்படுவதன் காரணமாக காடழிவு, வாழிட அழிவே இவற்றுக்கு முக்கிய அச்சுறுத்தல்.

14. சுஷில் புதர் தவளை (Raorchestes sushili)

2009ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் வால்பாறை அருகேயுள்ள ஆண்டிப்பாறை சோலைக்காடுகளில் இது கண்டுபிடிக் கப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்துக்கு மேல் இது வாழ்கிறது. வால்பாறை பகுதியில் மட்டுமே இந்தத் தவளை வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை பகுதியில் தேயிலை, காப்பி பயிரிடுதல் காரணமாக இதன் வாழிடம் பெருமளவு அழிந்துவிட்டது.

15. ஆனைமலை பறக்கும் தவளை (Rhacophorus pseudomalabaricus)

கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தெற்குப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே வாழ்கிறது. வால்பாறை பகுதியில் உள்ள ஆண்டிப்பாறை சோலைக்காடு, புதுத்தோட்டம், ஆனைமலை மலைப்பகுதிகளில் உள்ளது. இந்திரா காந்தி தேசிய பூங்காவுக்கு வெளியே காட்டைத் திருத்தி வயலாகவும், வெட்டுமரக் காடாகவும் மாற்றுவது, உள்ளூர் மக்கள் மரத்தை வெட்டுவதுதான் இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.

(கீழ்க்கண்ட புத்தகங்களில் இருந்து கருத்துகள், தகவல்கள் இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன: இன் டேஞ்சர், பவோலா மான்ஃபிரெடி, சு. தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகள், கிரிடிகலி என்டேஞ்சர்டு அனிமல் ஸ்பீசீஸ் ஆஃப் இந்தியா, மத்திய வனத்துறை அமைச்சக வெளியீடு - பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

 

Pin It