கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மேகப் பால் தொழில்நுட்பம் (Cloud milking) என்றழைக்கப்படும் சுழிநிலை ஆற்றல் தொழில்நுட்பம் இளம் மரங்களை உயிர் வாழ வைக்கிறது. ஸ்பெயின் கனேரி (Canary) தீவில் கரஜோனே (Garajonay) தேசியப் பூங்காவில் உள்ள காடுகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம் இலைகள் மூடுபனியில் இருந்து நீர்த்துளிகளை பிடித்தெடுக்கும் அதே முறையில் செயல்படுகிறது.
காட்டுத் தீ, வறட்சியால் அழிந்த காடுகளை இத்திட்டம் புரட்சிகரமான முறையில் மீட்க உதவுகிறது.நீர் வழங்கும் மூடுபனி
கடல் போல உள்ள மேகங்களில் (Sea of clouds) இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சியெடுத்து காட்டை மீட்பதே இதன் நோக்கம். இம்முறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இத்திட்டம் பல நாடுகளில் குடி நீர், வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பெற விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. “கனேரி தீவுகள் சமீப காலத்தில் பெருமளவிலான பாலைவனப் பரவலால் வன அழிவை சந்தித்தது. வேளாண்மைக்காக நடந்த வன அழிப்பு, வழக்கமாக ஈரத் தன்மையுடன் இருக்கும் காடுகளில் காலநிலை மாற்றத்தால் 2007, 2009ல் பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டது போன்றவற்றால் இயற்கை வளங்கள் அழிந்தன. இதை சரி செய்ய தொலைதூர, மலைப்பகுதிகளுக்கு புதிய உட்கட்டமைப்பு, புதைபடிவ எரிபொருட்கள் இல்லாமல் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் வழங்கப்பட்டது” ” என்று கனேரி தீவில் உள்ள பொதுமக்கள் நிதியுதவியுடன் செயல்படும் அமைப்பின் தொழில்நுட்ப இயக்குனர் கஸ்ட்டாவோ வியரா (Gustavo Viera) கூறுகிறார்.
ஐரோப்பிய யூனியன் ஆதரிக்கும் இத்திட்டத்திற்கு மூடுபனி என்று ஸ்பானிஷ் மொழியில் பொருட்படும் நீப்லா (Niebla) என்பதை குறிக்கும் வகையில் லைஃப் நீப்லா (Life Niebla) என்று பெயரிடப்பட்டுள்ளது.
புன்னையின் உள்ளூர் இன இலைகள் இயற்கையில் பயன்படுத்தும் அதே முறையில் காற்றடிக்கும் பாதையில் பிளாஸ்டிக் வலைகள் விரிக்கப்பட்டு மூடுபனியில் இருந்து நீர்த்துளிகள் சேகரிக்கப்படுகின்றன.
வலையின் வழியாக சென்று காற்று மூடுபனியைக் கலைக்கும்போது நீர்த்துளிகள் கீழிருக்கும் கலன்களில் விழுகின்றன, சேகரிக்கப்படுகின்றன. இது புதிய இளம் கன்றுகளில் இலைகள் போதுமான அளவுக்கு வளர்ந்து சுயமாக நீரை சேகரிக்கும்வரை விநியோகிக்கப்படுகிறது. இதற்கு காற்று முக்கியமானது. ஆனால் இது போன்ற சிறிய அமைப்புகள் தவிர மற்ற பெரிய அமைப்புகளை இது அழிக்கிறது. இதற்கு தீர்வாக பைன் மர ஊசிகள் நீரை சேகரிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது.
காற்றை தன் வழியே செல்ல அனுமதிப்பதுடன் இந்த ஊசிகள் நீரையும் சேகரிக்கின்றன. இம்முறை மற்ற இடங்களில் எளிதாகப் பின்பற்றக் கூடியது. தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடியது. புதிய மாதிரியில் மெல்லிய உலோக இலைகளில் நீர் சுருங்குகிறது. பின் இது விரிவடைந்து நீராக மாறி சேகரமாகிறது.
ஆற்றல் விநியோகம், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, இயந்திரங்கள் இல்லாமல் இம்முறையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நீர் தானியங்கி முறையில் விநியோகிக்கப்படுகிறது. இதில் எந்த மின்னணு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதில்லை. நீர் நிலைகள், நதிகள் சுரண்டப்படாததால் இம்முறையில் ஏற்படும் கார்பன் கால்தடம் (Carbonfootprint) மிகக் குறைவு. சேகரிக்கும் கலன்களை உரிய இடங்களில் அமைப்பது மட்டுமே இதற்காகும் செலவு.
கார்பன் உமிழ்வற்ற காடு வளர்ப்பு
தெற்கு பார்சலோனாவில் காரஃப் (Garraf) என்ற கரடுமுரடான இடத்தில் உள்ள காடுகளை மீட்க இதே தொழில்நுட்பம் சிறிய மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
“இங்கு தாவர உண்ணிகள் இளம் செடிகளை உண்ணும் முறையில் தனித்தனியான நீர் சேகரிப்பான்கள் பயன்படுகின்றன. கோடை காலத்தில் காலைவேளைகளில் மழை, கடும் மூடுபனியின்போது உருவாகும் நீரை தாவரங்களுக்கு நிழல் தரும் இந்த சேகரிப்பான்கள் ஒன்றுதிரட்டி சேகரித்து வழங்குகின்றன. சில மூடுபனிகள் போதுமான ஈரத்தன்மையுடன் இருப்பதில்லை. இதனால் எல்லா வகை மூடுபனிகளும் இம்முறையில் பயன்படுவதில்லை. பல மத்திய தரைக் கடற்பகுதிகள், வடக்கு போர்ச்சுகல்லில் காணப்படும் ஓரோகிராபிக் (Orographic ) என்ற மலைப் பனியே இதற்கு சிறந்தது” என்று பார்சலோனா தன்னாட்சி பல்கலைக்கழக சூழலியல் மற்றும் வன ஆய்வு அமைப்பின் (Centre for Ecological Research and Forestry Applications (CREAF) திட்ட தலைமை விஞ்ஞானி வைசன்ஸ் கரபாஸா (Vicenç Carabassa) கூறுகிறார்.
கனேரி தீவே இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்க மிகச் சிறந்த ஆய்வுக்கூடம். சிலி மற்றும் மொராக்கோவில் சூழ்நிலை சரியாக இருக்கும் இடங்களில் மூடுபனியில் இருந்து பாரம்பரிய முறைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. இம்முறை சிலி கக்க்விம்போ (Coquimbo) மாகாணத்தின் (சங்கங்கோ (Chungungo) கடலோர கிராமத்தில் செயல்படுகிறது. கேப் வெர்ட் (Cape Verde) தீவுக்கூட்டத்தில் உள்ளூர் மர சேகரிப்பான்களில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் ஆயிரம் லிட்டர் நீர் பாசனம், கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இது பற்றிய விவரங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு திட்ட இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இதன் பலன்கள் தெளிவாக உள்ளன. கிராண்ட் கனேரியாவில் (Gran Canaria) உள்ள பாரங்கோ டெல் (Barranco del) மற்றும் யேன் ரவீன் (én ravine)ஆகிய இடங்களில் 15,000 புன்னையின் பல்வேறு இன மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு 35.8 ஹெக்டேர்/96 ஏக்கர் பரப்பில் காடுகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டன. பாரம்பரிய காடு வளர்ப்பை விட இம்முறையில் 82% மரங்கள் கூடுதலாக உயிர் பிழைத்தன.
இதனால் ஆண்டுக்கு 175 டன்கள் கார்பன் பிடித்தெடுக்கப்பட்டுள்ளது. இம்முறை மலிவானது. பாரம்பரிய காடு வளர்ப்பை விட குறைவான அளவு நீரை பயன்படுத்துகிறது. “வறட்சியான காலத்திலேயே நாம் வாழ்கிறோம். அதனால் ஒவ்வொரு துளி நீரும் மதிப்புமிக்கது. அதனால் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி வாழ பழகிக் கொள்ள வேண்டும். உவர் நீரில் இருந்து நன்னீர் பெறும் முறைக்கு இது ஒரு மாற்று இல்லை. ஆனால் நீர் விநியோகம் செய்ய கடினமாக உள்ள, செலவு அதிகமாக ஆகும் இடங்களில் இம்முறை மிகப் பயனுடையது” என்று கரபாஸா கூறுகிறார்.
பாசனம், கால்நடைத் தேவை, குடி நீர் விநியோகத்திற்கும் மனிதனுக்கு இயற்கை கற்றுத் தரும் இந்த முறை பூமியை வாழ வைக்க பெரிதும் உதவும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதன் இரும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி இறைச்சியை வெட்டுவது போல கமோடோ டிராகன் (Komodo Dragon) என்ற ராட்சச பல்லியினத்தின் பற்கள் செயல்படுகின்றன. இவை மற்ற ஊர்வனவற்றை விட சுலபமாக தன் இரையைப் பிடித்து உண்கின்றன. இரையை இரண்டு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்து கடித்து இழுத்து பெரிய துண்டுகளாக்கி உணவு உண்ண இவற்றின் வாயில் இருக்கும் சுமார் அறுபது பற்கள் உதவுகின்றன. நீண்டு கூர்மையான இந்தப் பற்களின் கூர்மைக்கு அதன் முனையில் காணப்படும் இரும்புப் பூச்சே காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் வாழும் மிகப் பெரிய பல்லியினம் இவையே. இவற்றின் நீளம் மூன்று மீட்டர். சராசரி எடை 80 கிலோகிராம். பாதுகாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் மிக மெதுவாக பரிணாம மாற்றம் அடைகின்றன.
மிகப் பெரிய உடலளவு, நச்சுத் தன்மையுள்ள கடி மற்றும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த உயிரினத்தின் பெயர் கேட்பவர் மனதில் ஒரு ராட்சசனின் கம்பீரத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பால் கமோடோ டிராகனின் புகழ் மேலும் உயர்ந்துள்ளது. கூர் முனையுடைய பற்களின் கூர்மையை அதிகரிக்க இந்த இரும்புப் பூச்சு அவற்றிற்குப் பெரிதும் உதவுகிறது. இது போன்ற இரும்புப் பூச்சு ஒரு விலங்கின் பற்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
ஏற்கனவே பல வினோதமான பண்புகளுடன் வாழும் இந்த உயிரினத்தைப் பற்றி ஆய்வுகள் பல நடந்துள்ளன என்றாலும் பற்களில் காணப்படும் இரும்புப் பூச்சு இந்த விலங்கைப் பற்றி அறியப்பட்டதில் பரவசமூட்டும் ஒன்று. கமோடோக்களின் இரை பிடிக்கும் முறை பற்றிய ஆய்வில் இது ஒரு முக்கிய திருப்புமுனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு வண்ண நிறமிகளால் இவற்றின் பற்களின் கூர் முனை காணப்படுகிறது. பல்லின் முனைப்பகுதிக்கு வரும்போது எனாமலுடன் இரும்பின் ஒரு அடுக்கும் சேர்ந்து வருகிறது. ஆழமாக ஆராய்ந்தபோது இரும்பு அடர்த்தியாகக் காணப்படுகிறது. பற்களுக்கு கடினத் தன்மையைக் கொடுக்கிறது. இரையைக் கிழித்து வெட்டி துண்டுகளாக்கி உண்ண இது உதவுகிறது. இருபது கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல் பெற்ற இவை நான்கு மீட்டர் உயரம் வரை தாவக்கூடியவை.
இந்த விலங்குகள் இந்தோனேஷியாவின் பல தீவுகளில் வாழ்கின்றன. எலிகள், சிறிய பறவைகள், முயல்கள், மான்கள், ஆடுகள், நீர் எருமைகள் மற்றும் இறந்த கமோடோ டிராகன்களை உணவாக உண்கின்றன. மனிதர்களும் இவற்றால் கொல்லப்பட்டுள்ளனர். 2007ல் கமோடோ தீவில் ஒரு குழந்தை ஒரு டிராகனால் கொல்லப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழங்களை பொறுக்குபவர் ஒருவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தபோது இரண்டு கமோடாக்களால் கொல்லப்பட்டார்.
டைனசோரின் பல் அமைப்பு
2010ல் மற்றொரு இந்தோனேஷிய தொழிலாளி ஒரு கமோடாவால் தாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக அதன் தாடையின் அசுரப் பிடியில் இருந்து தன்னை விடுவித்து உயிர் தப்பினார். இந்தப் பற்கள் மாமிசம் உண்ணும் டைனசோர்களின் பல் அமைப்பை ஒத்துள்ளது. இவற்றின் இணை சேரும் செயல்கள் சுற்றுலா வருவோரால் பாதிக்கப்படுகிறது. வருவோர் சத்தமில்லாமல் உணவுகளைக் கொடுப்பது இவற்றின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குகிறது.
வாழிட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டையாடலால் இவை அழியும் ஆபத்தில் உள்ளன. இப்போது இந்தோனேஷிய வனங்களில் 3,500 கமோடோக்கள் மட்டுமே வாழ்கின்றன.
வேதியியல், இயந்திரவியல் பகுப்பாய்வுகளுடன் பிம்பமாக்கும் நவீன முறைகளைப் பயன்படுத்தி டிராகன்களின் மாதிரிகள், இப்போது வாழும் மற்றும் அழிந்த மானிட்டர் பல்லிகள், முதலைகள், முதலை இனத்தின் வேறு குடும்பத்தைச் சேர்ந்த அலிகேட்டர்கள் (alligators), டைனசோர்கள் போன்ற பல்லி இன ஊர்வன விலங்குகளின் பற்கள் ஆராயப்பட்டது. பிற ஊர்வனவற்றில் இதே போன்ற பல் அமைப்பு காணப்படுகிறது என்றாலும் டிராகன் பற்களில் இரும்புப் பூச்சு வெளிப்படையாகத் தெரியும் வகையில் காணப்படுகிறது.
"ஊர்வனவற்றின் பல் அமைப்பில் இது பரவலாக உள்ள ஒரு சிறப்புப் பண்பு என்றாலும், இந்த உயிரினத்தின் பல் அமைப்பு தனித்துவம் வாய்ந்தது” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் லண்டன் கிங்ஸ் கல்லூரி பல் உயிரி அறிவியல் துறை பேராசிரியருமான டாக்டர் அரொன் லெஃப்லாங்க் (Dr Aaron LeBlanc) கூறுகிறார். இந்த விலங்கின் வளைந்த, கூர்மையான பல் அமைப்பு டிரனசோரஸ் லெக்ஸ் (Tyrannosaurus rex) என்ற மாமிச உண்ணி டைனசோரின் பல் அமைப்புடன் ஒத்துள்ளது.
இந்த ஆய்வுக்கட்டுரை Nature Ecology & Evolution என்ற இதழில் வெளிவந்துள்ளது. அழிவதற்கு முன்பு வரை டைனசோர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இரும்புப் பூச்சுடன் கூடிய பற்களுடன் வாழ்ந்தன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. பல இனங்களைச் சேர்ந்த ஊர்வனவற்றில் இரும்புப் பூச்சுள்ள பல் அமைப்பு காணப்படுகிறது.
என்றாலும் இன்று கிடைத்துள்ள டைனசோர் மாதிரிகளில் இரும்புப் பூச்சு பல் அமைப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. விலங்குண்ணி டைனசோர்களில் பற்களில் இரும்புப் பூச்சு இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். என்றாலும் இந்தப் பூச்சு கமோடோக்களின் நெருங்கிய உறவினர்களான ஊர்வனவற்றின் புதைபடிவ மாதிரிகளில் காணப்படவில்லை என்பதால் இது காலப்போக்கில் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
“மனிதர்களின் பல் ஆரோக்கியத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய, மனிதப் பற்களில் எனாமலை மறு உருவாக்கம் செய்ய இது உதவும்” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரி வாய் ஆரோக்கியப் பிரிவு பேராசிரியரும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவருமான Owen Addison கூறுகிறார்.
உயிரினங்களின் உலகில் பயங்கர விலங்கு என்று பெயரெடுத்திருந்தாலும் இவற்றின் விசித்திர பல் அமைப்பு மனிதனின் பல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எனாமலில் புதிய வகையை உருவாக்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்கள்
https://www.theguardian.com/environment/article/2024/jul/24/komodo-dragons-iron-coated-teeth?
&
&
https://www.nature.com/articles/s41559-024-02477-7
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதன் பயன்படுத்தும் மருந்துகளால் விலங்குகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை அதிர்ச்சி தரும் வகையில் மாற்றமடைகிறது. சூழல் மண்டலங்களை மாசுபடுத்தும் இவற்றால் அடிமையாதல், பதற்றம் மற்றும் பாலின மாறுபாடு போன்ற மாற்றங்கள் விலங்குகளிடம் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மெத்தம் பெட்டமீன் (methamphetamine) என்ற மருந்துப் பொருளுக்கு அடிமையான பழுப்பு நிற டிரவுட் (Brown drout) என்ற மீனினம் அந்த மருந்து அதன் உடலில் இருந்து நீக்கப்பட்டபோது இயல்பு நிலைக்குத் திரும்பியது.இனச்சேர்க்கையின்போது வன்முறையில் ஈடுபடும் ஸ்டார்லிங் (starling) என்ற சிறிய பறவையினம், மன அழுத்த சிகிச்சைக்கு மருந்துகளால் எதிரிகளைக் கண்டு அஞ்சும் பண்பை இழந்த ஐரோப்பிய பெர்ச் (European perch) என்ற நன்னீர் மீனினம், காபினுக்கு (Coffin) அடிமையான மினோஸ் (Minnows) என்ற நன்னீர் மீனினம் போன்ற விலங்குகள் மருந்துப் பொருள் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.
நவீன மற்றும் சட்ட விரோத மருந்துகளின் மாசு வன உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது குறிப்பிடத்தக்க, எதிர்பாராத மாற்றங்களை சில விலங்குகளின் நடத்தை மற்றும் உடல் உள்ளுறுப்பு அமைப்பில் ஏற்படுத்துகிறது.
ஸ்டார்லிங் பெண் பறவைகள் கழிவுநீரில் கலந்திருந்த மன அழுத்தத்திற்கு எதிரான ப்ரோசாகட் (Prozacat) என்ற மருந்துப் பொருளால் ஆண் இனத்துடன் இணை சேர்வதில் ஆர்வம் காட்டுவது குறைந்து விட்டது.
இதனால் சிறிய முதல் நடுத்தர அளவு உள்ள ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி மற்றும் வட அமெரிக்காவில் வாழும் இந்தப் பறவைகளின் ஆணினம் இணை சேர்வதில் வன்முறையைப் பின்பற்றுகின்றன.
பெண் இனத்தைக் கவர குறைவான பாடல்களையே ஆண் பறவைகள் பாடுகின்றன. மனிதர் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளால் சில மீனினங்களில் பாலின மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஆண் மீனின் இனப்பெருக்க உறுப்பு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பாக மாறுகிறது. இது இந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறைய காரணமாகிறது, உள்ளூர் இனங்கள் அழிகின்றன.
இந்தியாவில் காணாமல் போன கழுகுகள்
இது மனித குலத்திற்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். “செயல் மிகு மருந்துப் பொருட்களில் சேர்க்கப்படும் செயல்மிகு உள்ளடக்கப் பொருட்கள் (Active pharmaceutical ingredients (Api)) உலகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கலந்துள்ளன. இப்பொருட்களால் மாசடைந்த நீர் வாழ் உயிரினங்களையே நாம் உண்கிறோம். சமீபத்திய சில பத்தாண்டுகளில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது.
"உயிர்ப் பன்முகத் தன்மையின் பாதுகாப்பிற்கு இது அச்சுறுத்தலாகிறது. இதுஉலகளாவிய பிரச்சனை” என்று ஸ்வீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான மைக்கேல் பேர்ட்ரம் (Michael Bertram) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இயற்கை (Nature Sustainability) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக பசுமை முறையுடன் அமைய வேண்டும். உற்பத்தியின் போது வெளியேற்றப்படும் இந்தப் பொருட்கள் மறு சுத்திகரிப்பு செய்யப்படாதபோது இவை நீருடன் கலக்கின்றன. மனிதன் உட்கொள்ளும் மருந்து அவனது உடலில் முழுமையாக சிதைவடைவதில்லை. அது கழிவாக வெளியேற்றப்படுகிறது. சூழலில் நேரடியாக சென்று சேர்கிறது.
கொக்கேன் (cocaine), காஃபின் போன்ற சட்ட விரோதப் பொருட்கள், மெத்தம்பெட்டமின் போன்ற மருந்துப் பொருட்கள், பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனநலப் பிறழ்வைக் குறைக்க உதவும் மருந்துகள் சூழலில் கலக்கின்றன. தெற்காசியாவில் கால்நடைகளுக்கு வீக்க நிவாரணியாக டிக்ளோஃபினாக் (Diclofenac) என்ற மருந்து கொடுக்கப்பட்டது.
நச்சு மருந்தை உட்கொண்டு பின் இறந்த கால்நடைகளின் உடல் எச்சங்களை கழுகுகள் உண்டு அதன் பாதிப்பால் உயிரிழந்தன. இதனால் இந்தியாவில் 1992-2007 காலத்தில் கழுகுகளின் எண்ணிக்கை 97% குறைந்தது. இறந்த கால்நடைகளின் உடல் எச்சங்களை உணவாக உட்கொள்ள போதிய எண்ணிக்கையில் கழுகுகள் இல்லாமல் போனது. ரேபிஸ் வெறி நாய்க்கடி நோய் பெருவாரியாகப் பரவியது.
செயல்மிகு உள்ளடக்கப் பொருட்கள்
குறைவான அளவே காஃபினை உட்கொண்டாலும் ஃபேட் தலை மினோஸ் (fathead minnows) என்ற வட அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சிறிய அளவுடைய மீன்கள் போதையில் வாழ்ந்தன. நுண்ணுயிரி எதிர்ப்பொருட்கள் நுண்ணுயிரிகளையும் மனித உடல் நலத்தையும் பாதிக்கின்றன.
குறைந்த அளவில் கலந்திருந்தாலும் மருந்துகள் உயிரியல்ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் வகையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. 104 நாடுகளில் 1052 இடங்களில் ஓடும் ஆறுகளில் குறைவான அளவுடன் 61 மருந்துகள் கலந்திருப்பது சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இதில் 43.5 இடங்களில் சூழல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது என்று வரையறை செய்யப்பட்ட அளவை விட ஒரு மருந்தேனும் இருப்பது தெரியவந்தது.
காலநிலை மாற்றம், வாழிட இழப்பு, மிதமிஞ்சிய பயன்பாடு போன்றவை ஏற்கனவே உயிர்ப் பன்மயத் தன்மையின் மீது அழுத்தம் செலுத்தும் நிலையில் மருந்துகளில் சேர்க்கப்படும் உள்ளடக்கப் பொருட்களால் ஏற்படும் மாசு தொடர்ந்து நிகழ்கிறது. சூழலில் இப்பொருட்களின் வாழ்க்கைச் சுழற்சி பசுமை நிறைந்ததாக மாற்றப்பட வேண்டும். இப்பொருட்களால் மருந்தியலாளர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், கால்நடை மருத்துவர்கள் சூழலில் உருவாகும் தாக்கத்தை அறிய வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட பின் மருந்துகள் சுலபமாக சிதையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். சூழலில் இந்த மாசு கலப்பதைத் தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு விரிவாக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் இவ்வகை மாசு ஏற்படுவதைத் தடுக்க பசுமை மருந்துகளின் மூலக்கூறு வடிவமைப்பை சூழலுக்கு நட்புடையதாக மாற்ற வேண்டும்.
“இவ்வகை மருந்துகள் அவற்றின் வாழ்நாள் சுழற்சி முழுவதும் அவை ஏற்படுத்தும் சூழல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. மருந்துகள் பயனுள்ள விதத்தில், பாதுகாப்பானதாக உருவாக்கப்படுவதுடன் சூழலுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். இதனால் வன உயிரினங்களும் மனித நலமும் பாதுகாக்கப்படும்” என்று ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும் பாஸ்க் கண்ட்ரி (Basque Country) பல்கலைக்கழக மருத்துவப்பிரிவு பேராசிரியருமான கோர்க்கா ஆரி (Gorka Orive) கூறுகிறார்.
நவீன அறிவியல் தொழில்நுட்பம் நோய்களின் பிடியில் இருந்து மனிதர்களை காக்க உதவுவதற்கு பதில் சூழலையும் விலங்குகளையும் அழிக்கும் ஆயுதமாக மாறி விடக்கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/article/2024/jun/06/drug-pollution-wildlife-threat-aoe?
&
https://en.m.wikipedia.org/wiki/Fathead
&
https://en.m.wikipedia.org/wiki/Starling
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆண் பூவும் பெண் பூவும் உள்ளபோது மகரந்த சேர்க்கைக்கு குளவிகளை எதற்காக அழைக்க வேண்டும்? அத்திப் பழம் பூவா? காயா? அத்தி மரத்தில் அத்திப் பழங்கள் எப்போதும் காய்களே. அப்படியென்றால் பூக்கள் இல்லையா? எங்கே அவை காணப்படுகின்றன? எவ்வாறு அவை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன? நம் நாட்டில் சுலபமாக எல்லா இடங்களிலும் வளரும் ஒரு மரமே அத்தி (Fig tree). சந்தையில் பல அமைப்பு, வடிவங்களில் பல வகை கலப்பின ரகங்கள் உள்ளன. இதன் பழங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.ஹைப்பாந்தோடியம்
சாதாரண நாட்டு அத்தி ரகங்கள் ஐந்தாறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே காய்க்கின்றன. புதிய கலப்பின ரகங்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் வளர்ந்து குலை குலையாக காய்க்கின்றன. இதன் பூக்கள் எங்கே உள்ளன? இவை ஆல் குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள். ஆலின் காய் போலவேதான் இதன் இனப்பெருக்க சுழற்சியும் நடைபெறுகிறது. அத்தி உட்பட உள்ள ஆல் குடும்பத்தைச் சேர்ந்த மரங்களின் இனப்பெருக்கம் குறித்து சுவாரசியமான ஒரு கதை உண்டு.
உண்மையில் அத்திக் காய் சிறிதாக இருக்கும்போதே வளர்ச்சியடைந்த பூங்கொத்தை நாம் காணலாம். இதில் ஆல் மரத்தில் இருப்பது போல பார்ப்பதற்கு காய் போலத் தோன்றும் ஹைப்பாந்தோடியம் (Hypanthodium)) என்ற சிறப்பு மிக்க பூங்கொத்தில்தான் உள்ளன. பூவின் மேற்பகுதிகள் சேர்ந்தே காயின் மேலோடாக மாறுகிறது. இது ஒரு குடம் போல காணப்படுகிறது. இதனுள் ஏராளமான ஆண் பெண் பூக்கள் தோன்றுகின்றன.
இது அத்தியின் காய் பக்குவமடைவதற்கு முன்புள்ள நிலை. இவை உருண்டை முதல் முட்டை போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. குடம் போன்ற அமைப்பை உடையது இது. இதன் உட்பகுதி வெறுமையாக இருக்கும். ஒரு சிறிய வாய்ப்பகுதி வெளிப்பக்கமாகத் திறந்து குடத்தின் மேற்பகுதியில் காணப்படும். உள் பக்கமாகத் திரும்பி நிற்கும் ஏராளமான உரோமங்கள் வாய்ப்பகுதியில் உள்ளன.
ஹைப்பாந்தோடியத்தின் உள்ளே அதன் அடியில் ஏராளமான பெண் பூக்களும் வாய்ப்பகுதியில் ஏராளமான ஆண் பூக்களும் காணப்படுகின்றன.
அத்தி உட்பட உள்ள ஆல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்ய ஃபிக் குளவிகளால் (Fig wasps) மட்டுமே முடியும். இந்த இனக் குளவிகள் மட்டுமே ஹைப்பாந்தோடியத்தின் வாய்ப்பகுதி வழியாக உள்ளே நுழைய பரிணாமம் அடைந்துள்ளன. ஒவ்வொரு ஆல் குடும்ப தாவரத்தின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவ வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த குளவி இனங்கள் உள்லன.
உள்ளே நுழையும் பெண் குளவி மற்றொரு மரத்தின் ஹைப்பாந்தோடியத்தில் இருந்து வருகிறது. வரும்போது அவை அந்த மரத்தின் ஆண் பூவின் மகரந்தத் தூளை கொண்டு வருகிறது. அப்போது ஹைப்பாந்தோடியத்தில் பெண் பூக்கள் மட்டுமே முழு வளர்ச்சி அடைந்திருக்கும். ஆண் பூக்கள் வளர் நிலையில் இருக்கும். வெளியில் இருந்து பெண் குளவியால் கொண்டு வரப்பட்ட மகரந்தத் தூளைப் பயன்படுத்தி அது சில பெண் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தும்.
கூட்டு வாழ்க்கை
பிறகு குளவி மீதி இருக்கும் பூக்களில் முட்டையிடும். ஒரு முறை உள்ளே நுழைந்தால் பிறகு பெண் குளவியால் வெளியில் வரமுடியாது. ஹைப்பாந்தோடியத்தின் வாய்ப்பகுதியில் பின்னோக்கி வளைந்து வளர்ந்திருக்கும் உரோமங்களே இதற்குக் காரணம். இதனால் முட்டையிட்டு முடிந்த பின் பெண் குளவிகள் ஹைப்பாந்தோடியத்திற்குள் இருந்து உயிரிழக்கின்றன.
சில பூக்களில் நடந்த மகரந்தச் சேர்க்கை மூலம் ஹைப்பாந்தோடியம் வேகமாக முதிர்ச்சியடைந்து பழுக்க உதவும் வேதிமாற்றங்கள் நிகழத் தொடங்கும். முட்டை விரிந்து உண்டாகும் இளம் புழுக்கள் மீதமிருக்கும் பெண் பூக்களைத் தின்று வளரும். ஹைப்பாந்தோடியம் பழுக்கும்போது முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் ஆண் பெண் குளவிகளாக மாறும். இதில் பெண் குளவிகளுக்கு மட்டுமே இறக்கைகள் உண்டு.
இறக்கைகள் இல்லாத ஆண் குளவிகள் பெண் குளவிகளுடன் இணை சேர்ந்த பிறகு ஹைப்பாந்தோடியத்திற்குள் இருந்து உயிரை விடுகின்றன. அப்போது ஹைப்பாந்தோடியத்தில் ஆண் பூக்கள் மலரும். அதன் மகரந்தத் தூள்கள் வெளிவரும். இணை சேர்ந்த பெண் குளவிகள் இந்த மகரந்தத் தூளை சேகரித்து காயைத் துளைத்து இன்னொரு மரத்தின் ஹைப்பாந்தோடியத்தை நோக்கிச் செல்லும். இந்த வாழ்க்கைச் சுழற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கும். மகரந்தச் சேர்க்கை நடந்த காயில் புதிய விதைகள் தோன்றும்.
வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய மரத்திற்கும் குளவிக்கும் இடையில் நிலவும் இந்த கூட்டுயிரி வாழ்க்கை உதவுகிறது. மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு பெண் பூக்கள் சிறிய விதைகளாக மாறுகின்றன. மேல் தோடு ஒரு பழமாக உருமாற்றம் அடையும். பழமாவதுடன் அதன் நிறம், சுவை, மணத்தில் பெரிய வேறுபாடுகள் ஏற்படும். பல சமயங்களிலும் நாம் பறித்து எடுக்கும் அத்திப் பழத்தில் ஆண் குளவிகளின் உடற்பகுதிகளும் குடத்தைவிட்டு வெளியேறாத பெண் குளவிகளின் உடற்பகுதிகளும் இருக்கலாம்.
இதனால்தான் அ த்திப் பழத்தை பறித்து சாப்பிடும்போது உட்பகுதியைப் பரிசோதித்த பிறகு சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் ஏதேனும் ஒரு வகையில் மற்றொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு துணியின் நூலிழைகள் போல இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதில் ஒரு கண்ணி அறுந்தால் நூலிழைகள் அறுந்து போவது போல அதனுடன் பிணைக்கப்பட்டுள்ள எல்லாம் தகர்ந்து போகும்.
அத்தியின் அற்புத மகரந்தச் சேர்க்கை
இதனால்தான் உயிரினங்கள் இன அழிவைக் கண்டு அறிவியல் உலகம் அஞ்சுகிறது. குளவியினம் ஏதாவது ஒரு காரணத்தால் அழிந்து போனால் அது மகரந்த சேர்க்கை செய்து கொண்டிருந்த தாவர இனமும் கூடவே அழிந்துபோகும். அப்போது அந்த தாவரத்தை வேறு தேவைகளுக்காக நம்பி வாழும் மற்ற உயிரினங்களும் அழிந்து போகும். இது ஒரு சங்கிலித்தொடர் போலத் தொடரும்.
அத்தி மரங்கள் எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து குளவிகளை மகரந்தச் சேர்க்கைக்கு நம்புகின்றன? அதுவும் ஒரு ஹைப்பாந்தோடியத்தில் ஆண் பூவும் பெண் பூவும் இருக்கும்போது இவை எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு குளவிகளை மகரந்தச் சேர்க்கைக்குப் பயன்படுத்துகின்றன? தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு தாவரம் அதன் மகரந்தத் தூளை அதே தாவரத்தின் சூலகத்தைப் பயன்படுத்தி செய்யும் மகரந்தச் சேர்க்கை.
ஆனால் இதன் மூலம் உருவாகும் வாரிசுகளுக்கு புதிய பண்புகள் எதுவும் கிடைப்பதில்லை. ஒரு ஆண் பூவின் மகரந்தத் தூள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் பூவின் சூலகத்தைச் சென்றடைகிறது. இது அயல் மகரந்தச் சேர்க்கை. இதனால் புதிய வாரிசுகளுக்கு பல சிறப்பு பண்புகள் கிடைக்கின்றன. பரிணாமத்தின் இயக்கு விசை (driving force) தாவரத்தில் உருவாகும் மாறுபாடுகளால் (variation) ஏற்படுகிறது.
தாய் தந்தையிடம் இருந்து வாரிசுகள் சிறப்புப் பண்புகளாக பெறுபவை மாறுபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு பல வழிகள் உள்ளன. திடீர்மாற்றம் (mutation), மரபணுக்களின் மறு இணைப்பு genetic (recombination) போன்றவை இவற்றில் ஒரு சில. தாவரங்களில் மாறுபாடுகளை ஏற்படுத்த காரணமாக அமையும் வழியே அயல் மகரந்தச் சேர்க்கை.
இதனால் பெரும்பாலான தாவரங்கள் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு பல வழிகளைப் பின்பற்றுகின்றன, பூச்சிகளைப் பயன்படுத்துகின்றன. சில தாவரங்கள் முதலில் அயல் மகரந்த சேர்க்கை செய்ய முயற்சிக்கின்றன. அது இயலாவிட்டால் தன் மகரந்தச் சேர்க்கை செய்து இனம் அழியாமல் பாதுகாக்கின்றன. ஆனால் சில தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை மட்டுமே இனப்பெருக்கத்திற்கான ஒரே வழியாக உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டு அலங்காரத் தாவரங்கள். இயற்கையின் படைப்பில் அத்தி மரத்தின் மகரந்தச் சேர்க்கை ஓர் அற்புதமே!
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/fig-tree-flowers-pollination-symbiosis-1.10015893
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
- மண் வண்டுகள்
- பாடத் துடிக்கும் நகரத்துப் பறவைகள்
- ஈ… பறக்க முடியாத ஈ
- சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்த கொசுக்கள்
- பாம்புகள்: பாயும் பகுத்தறிவும் பதுங்கும் மூடநம்பிக்கைகளும்
- இலை வெட்டும் எறும்புகள்
- காடு காக்க உதவும் கறுப்பு மரங்கொத்தி