அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலக தலைவர்கள் பூமியில் வாழும் உயிரினங்களின் நிலை பற்றி விவாதிக்க கூடுகின்றனர். உயிர்ப் பன்மயத் தன்மையை காப்பதும் இயற்கையின் அழிவை தடுப்பதும் இதன் முக்கிய நோக்கம். 196 நாடுகளின் பிரதிநிதிகள் கொலம்பியா காலி (Cali) நகரில் நடைபெறும் ஐநாவின் இந்த மாநாட்டிற்காக (COP16-Conference Of the Parties) கூடியுள்ளனர். 2022ல் நடந்த மாநாட்டிற்கு பிறகு கூடும் முக்கிய உச்சி மாநாடு இது.
இம்மாநாடுகள் பெரிய, பல்நாட்டு ஒப்பந்தங்களால் முக்கியத்துவம் பெறுகின்றன. 2015 காலநிலை உச்சிமாநாடு (ClimatteCOP) தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவில் புவி வெப்பநிலையை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரலாற்று உடன்படிக்கையுடன் நிறைவடைந்தது. 2022 கனமிங் மாண்ட்ரீல் உயிர்ப் பன்மயத் தன்மை மாநாடு 23 இலக்குகள், நான்கு குறிக்கோள்களுடன் இந்த பத்தாண்டில் இயற்கையை காக்க உதவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இலட்சியத்துடன் முடிந்தது.
மோசமாகும் சூழல் நிலைபற்றி விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தாலும் பெரும்பாலான உலக நாடுகள் வாக்குறுதி அளித்த இலக்குகளை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளன. காலியில் அரசுகள் தேசீய உயிர்ப் பன்மயத் தன்மை திட்டங்களை (NBSAPS) அடையும் செயல்முறைகளை இம்மாநாட்டில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்மயத் தன்மை செழுமை மிக்க பிரேசில் போன்ற நாடுகள் அவை செயல்படுத்தவிருக்கும் பல பத்தாண்டு பயனளிக்கும் திட்டங்களை கூட்டத்தில் வெளியிடப் போவதாக கூறியுள்ளன.
சூழல் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும் என்பது மிகப் பெரிய வினாவாக உள்ளது. 2022 மாநாட்டில் நாடுகள் இந்த பத்தாண்டின் இறுதிக்குள் 23-30 பில்லியன் டாலர் நிதியை இயற்கையை பாதுகாக்கும் பணிகளுக்காக செலவிடப் போவதாக வாக்குறுதி கொடுத்தன.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதில் 20 பில்லியன் டாலர் நிதியை வழங்குவதாக அந்நாடுகள் கூறின. நிதி வழங்கலில் யு கே, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பணக்கார மேற்கித்திய நாடுகள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது பற்றி இம்மாநாட்டின் இறுதியில் தெரிய வரும்.
உலகின் பவளப்பாறைகள், மழைக்காடுகள், மற்ற செழுமையான சூழல் மண்டலங்கள் வருங்கால வணிகப் பயன்பாடுகளுக்காக பந்நாட்டு பண்நாட்டு பணக்கார கம்பெனிகளால் சூறையாடப்பட காத்துக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் மரபணு குறியீடுகள் மருந்துப் பொருட்கள், உணவு, பொருளியல் கண்டுபிடிப்புகள் குறித்த புள்ளியியல் மாதிரிகளை உருவாக்க இயற்கையை சுரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழிற்துறை சூழல் வளங்களை புதிய புரட்சிக்கான தளங்களாக மாற்ற தயாராகி வருகின்றன.
ஆனால் பூமியின் தென் கோளத்தில் உள்ள நாடுகள் இயற்கையில் இருந்து கண்டுபிடிக்கப்படும் மருந்துப் பொருட்கள், உணவுகள் போன்றவற்றை பற்றிய தகவல்கள் மூலம் கிடைக்கும் இலாபத்தை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளாத மேற்கித்திய உலகுடன் கடும் சினத்தில் உள்ளன. காப்16ல் இது பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. மதிப்புமிக்க இந்த உயிரி மூலங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்று வெளியிடாத பந்நாட்டு நிறுவனங்களின் போக்கு உயிரிக்கொள்ளை (Biopiracy) என்று அழைக்கப்படுகிறது. கொலம்பியா மாநாட்டில் இது பற்றிய உலகின் முதல் ஒப்பந்தம் ஏற்படும் என்று விஞ்ஞானிகல் நம்புகின்றனர்.
பழங்குடியினர் நிலை
சூழல் பாதுகாப்பு திட்டங்களில் பழங்குடியினர் பங்கு பற்றி இந்த பத்தாண்டின் இலக்குகளில் 18 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் முடிவெடுக்கும் வன வாழ் மக்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்பது சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மற்றும் பழங்குடியின சமூகங்களின் முக்கிய முழக்கமாக உள்ளது. பல பழங்குடியின சமூகங்கள் நடைமுறையில் இது குறித்து உருவாகக்கூடிய உடன்படிக்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்று அறிய காத்திருக்கின்றன.
இலக்குகள் தங்கள் நில உரிமை, கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய அச்சத்துடன் இவர்கள் இம்மாநாட்டை எதிர்நோக்குகின்றனர். கொலம்பியாவின் முதல் இடது சாரி அரசு கஸ்ட்டாவோ பெட்ரோ (Gustavo Petro) தலைமையில் இம்மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. பல ஆண்டுகளாக இருந்த கொரில்லா போரை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது.
“காப்16 மாநாட்டின் மையக்கருத்து இயற்கையுடன் இணைந்து அமைதியாக வாழ்வது என்பதே (Peace with Nature)” என்று கொலம்பியாவின் சூழல் அமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சூசானா முகமது (Susana Muhamad) கூறுகிறார். நில பாதுகாப்பு, நிதி போன்றவற்றை அளவிடுவது எளிது. இவற்றை பொருளாதாரம் மற்றும் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கான ஐநா அமைப்பு கண்காணிக்கும். ஆனால் உயிரினங்களின் இழப்பு, உயிர்ப் பன்மயத்தன்மையின் செறிவு, நீடித்த நிலையான வளர்ச்சியை மேலாண்மை செய்வது கடினம் என்று ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநாட்டின் முதல் அமர்வில் ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், கொலம்பிய தலைவர் கச்ட்டாவோ பெட்ரோ, சூழல் அமைச்சர் சூசானா முகமது உட்பட பல தலைவர்கள் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை பற்றி பேசினர்.
இது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. தென்னமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான காலியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 12 நாடுகளின் தலைவர்கள், 103 அமைச்சர்கள், 15,000 சூழல் போராளிகள் மற்றும் செயற்பாட்டாளர்கல், விஞ்ஞானிகள், நிதி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மனிதன் என்ற ஒற்றை உயிரினமே இன்று பூமியில் உள்ள அணைத்து உயிரினங்களையும் அழித்துவருகிறான். நம்மை வாழவைக்கும் இயற்கையே நம் வரலாறு. இயற்கையை அழிக்கும் வேலையை தொடர்ந்தால் நாளை இந்த பூமியில் மனிதன் வரலாறு இல்லாதவனாகவே வாழ வேண்டும். இதை உணர்ந்து உருப்படியான உடன்படிக்கைகளுடன் காப்16 மாநாடு தரும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பசுமைக் குடில் வாயுக்களில் மிக மோசமானதாகக் கருதப்படும் மீத்தேனை உணவாக உண்ணும் பாக்டீரியாக்கள் புவி வெப்ப உயர்வின் தீவிரத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். அதிக சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் வாயு - ஆற்றல், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, தொழிற்துறை, வேளாண்மை, வளமான மண்ணின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மையின்போது உருவாகிறது.
மெத்தனாட்ராப்ஸ் (methanotrophs) என்ற வகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி இயற்கையான வழியில் சூழலில் இருக்கும் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடு மற்றும் உயிரி வளத்தொகுப்பாக (biomass) மாற்றும் முறையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாங் பீச் (Long Beach) ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த எல்லா பாக்டீரியாக்களும் மீத்தேனை உண்கின்றன. இவை காற்றில் இருந்து மீத்தேனை அகற்றி அதன் ஒரு பகுதியை செல் புரதத்தின் நீடித்த நிலையான பயனுடைய புரதமாக மாற்றுகின்றன என்று ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளர் மேரி இ லிவ்ஸ்ட்ராம் (Mary E Lidstrom) கூறுகிறார். இதே பாக்டீரியா குழுவில் உருமாற்றம் அடைந்த மெதைலாடுவிமைக்ரோபியம் பரியேட்டன்ஸ் 5ஜிபி1சி (methylotuvimicrobium buryatense 5GB1C) என்ற பாக்டீரியாவைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பாக்டீரியா மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் மீத்தேனை திறம்பட அகற்றும் ஆற்றல் உடையது.
பெருவாரியாக இது நடைமுறைக்கு வந்தால் இத்தொழில்நுட்பம் புவி வெப்பம் உயர்வதை திறம்பட குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியாக்கள் வாழும் சுற்றுப்புற காற்று மண்டலத்தில் மீத்தேன் வாயு 5,000-10,000 பி பி எம் (parts per million) அளவில் உள்ளது.
பி பி எம் என்பது ஒரு மில்லியனில் ஒரு பங்கு. வளி மண்டலத்தில் 1.9 பி பி எம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே மீத்தேனின் அடர்வு உள்ளது. ஆனால் குப்பைக் கிடங்குகள், நெல் வயல்கள், எண்ணைக் கிணறுகள் போன்றவை உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் மீத்தேன் 500 பி பி எம் என்ற அதிக அடர்வில் உமிழப்படுகிறது. கால்நடைப் பண்ணைகள், வெப்ப மண்டல விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் பொதுவாக மீத்தேன் உறிஞ்சும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.
மீத்தேன் உமிழ்வு என்ற சூழலைப் பாதிக்கும் மிகப்பெரும் பிரச்சனையை இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறம்பட குறைக்க முடியும் என்று லண்டன் பல்கலைக்கழக ராயல் ஹாலோவே (Royal Holloway) ஆய்வுக்கூடத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் யூவன் நிஸ்பிட் (Euan Nisbet) கூறுகிறார்.
இந்த வகை பாக்டீரியாக்கள் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடாக மாற்ற குறைந்த ஆற்றலையே பயன்படுத்துகின்றன. மீத்தேன் வாயுவின் மீது இந்த வகை பாக்டீரியாக்களுக்கு கவர்ச்சி மற்ற பாக்டீரியாக்களை விட ஐந்தாயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் இவை பெருமளவில் மீத்தேனை உண்கின்றன என்று கருதப்படுகிறது. இவை மீத்தேனை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து மிகக் குறைந்த பாதிப்பை உண்டாக்கும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றுகின்றன.
இந்த செயல்முறையின்போது வெளிவரும் கார்பன் டை ஆக்சைடை உயர் வேக உறிஞ்சு குழாய்களைப் பயன்படுத்தி உறிஞ்சி எடுத்து உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிர் செய்து வளர்க்கலாம். இப்போதுள்ளதை விட இருபது மடங்கு அதிகமாக மீத்தேனை மறு பயன்பாட்டிற்குரிய பொருளாக மாற்ற வேண்டும். இந்த இலக்கு எட்டப்பட்டால் இத்தொழில்நுட்பத்திற்கான முதலீடு அதிகரிக்கும். இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் இது வணிகப் பயன்பாட்டிற்கு வரும் என்று ஆய்வுக்குழுவினர் நம்புகின்றனர்.
விவசாயத்தில் பண்ணைக் கால்நடைகளின் கழிவுகள், கால்நடைகளின் உணவு செரித்தலின்போது (gastroenteric releases) ஏற்படும் உமிழ்வினாலேயே அதிக மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. வளி மண்டலத்தை அடைந்த முதல் இருபது ஆண்டுகளில் கார்பன் டை ஆக்சைடை விட 85 மடங்கிற்கும் கூடுதலாக மீத்தேன் பூமியை சூடாக்குகிறது. வளி மண்டலத்தில் இருக்கும் மீத்தேன் கடந்த 15 ஆண்டுகளில் வேகமாக சாதனையளவில் அதிகரிக்கிறது. இன்றுள்ள நிலையில் 30% புவி வெப்ப உயர்விற்கு இதுவே காரணம். அரசுகள் மற்றும் தனியார், பொது நிறுவனங்களின் மெத்தனப் போக்கால் வரும் ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழக மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் மேரி ஆன் ப்ரண்ட்ஸ் (Prof Mary Ann Bruns) கூறுகிறார்.
2021ல் காப்26 காலநிலை உச்சி மாநாட்டில் பல பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகள் இந்த வாயு உமிழ்வின் அளவைக் கட்டுப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவதாக வாக்குறுதி அளித்தன. என்றாலும் மீத்தேன் உமிழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்க ஆயிரக்கணக்கான உயர் செயல்திறனுள்ள உற்பத்திக் கூடங்கள் நிறுவப்பட வேண்டும்.
இதற்கான செலவு அதிகமாக இருக்கலாம். ஆனால் நாம் இந்த பூமியில் உயிர் வாழ வளி மண்டல மீத்தேனைக் குறைப்பது மட்டுமே ஒரே வழி என்ற நிலையை அடையும்போது செலவு பெரிதாகத் தோன்றாது. இயற்கைச்சூழலில் சரியான தொழில்நுட்பத்தின் உதவியில்லாமல் பாக்டீரியாக்களை பயன்படுத்தி உமிழ்வை குறைத்தால் மீத்தேனை விட பூமியை பத்து மடங்கு அதிகமாக வெப்பமடையச் செய்யும் ஆற்றலுள்ள நைட்ரஸ் ஆக்சைடின் (N2O) உமிழ்வு அதிகரிக்கும். ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் (methanotrophic bacteria-based technology) மூலம் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு ஏற்படுவது இல்லை.
2050ம் ஆண்டிற்குள் 0.3 முதல் 1 பெட்டாகிராம் (petagram) வரை மீத்தேனை அகற்றினால் புவி வெப்ப உயர்வை 0.21 முதல் 0.22 டிகிரி வரை குறைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டாகிராம் என்பது 1,000 டிரில்லியன் அல்லது 1015 கிராமின் நிறைக்கு சமமான அளவிற்கான அலகு. இந்த அலகின் குறியீடு Pg. இந்த வெப்பநிலை குறைப்பு மற்ற உமிழ்வுகளின் குறைப்புடன் சேர்த்து கணக்கிடும்போது பூமியின் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பூமியை அச்சுறுத்தும் மீத்தேனின் உமிழ்வு குறையும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலகக் கடல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல், ஏற்கனவே கடல்நீர் மட்ட உயர்வு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கடல்சார் சூழல் மற்றும் கடலோர சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று உலகளவில் இது பற்றி முதல்முறையாக நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. மணல் அகழ்வுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச தரவு தளத்தின் மூலம் அதிர்ச்சி தரும் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
ஐநாவின் சூழல் அமைப்பால் (UNEP) ஏற்படுத்தப்பட்ட இந்தத் தளம் தானியங்கி அடையாளம் காணும் (Automatic Identification System AIS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் சூழலில் மணல் அகழ்ந்து எடுக்கப்படும் இடங்களை கப்பல்களைக் கொண்டு கண்டறிந்து, இந்தத் தரவுகள் பெறப்பட்டன.
ஆண்டிற்கு ஆறு பில்லியன் டன்
கடல் மணல் கண்காணிப்பு அமைப்பு (Marine Sand Watch) 2012-19 தரவுகளை இதற்காக ஆராய்ந்தபோது உலகம் முழுவதும் மணல் எடுப்பதில் ஈடுபட்டுள்ள தொழிற்துறை ஆண்டிற்கு 6 பில்லியன் டன்கள் மணலை கடல்களில் இருந்து அகழ்ந்தெடுப்பது தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு ஆண்டு இந்த அளவு அபாய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இழக்கப்படும் அளவை ஈடு செய்ய 10 முதல் 16 பில்லியன் டன்கள் மணல் ஆறுகளில் இருந்து அடித்து வரப்பட்டு கடலில் சேர்க்கப்படுகிறது. கடலோரக் கட்டமைப்புகள் மற்றும் கடற்சார் சூழலைப் பேணிப் பாதுகாக்க அவசியமான இயற்கை எல்லையை, அகழ்வுகள் தொடும் அளவிற்கு மணல் எடுத்தல் நடக்கிறது என்று ஐநா சூழல் பாதுகாப்புத் திட்டம் எச்சரிக்கிறது.
வட கடல், தென் கிழக்கு ஆசியா, யு எஸ்ஸின் கிழக்குக் கடற்கரைப்பகுதி ஆகிய இடங்களில் இது கவலை தரும் அளவில் உள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஆசியப் பகுதிகள் உட்பட மணல் எடுத்தல் தீவிரமாக நடக்கும் பல இடங்களில் ஆறுகள் கொண்டு வந்து நிரப்பும் அளவை விட அதிக அளவில் மணல் எடுக்கப்படுகிறது.
கடலுக்கு அடியில் நடைபெறும் இந்த சட்டவிரோத சுரண்டல் உயிர்ப் பன்மயத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவோடு, அடித்தட்டில் சேறு படிந்துள்ள பகுதி வரை மணல் வாரப்பட்டு உருவாக்கப்படும் நீர் அற்ற நிலை (water turbidity), கடல்வாழ் உயிரினங்கள் ஒலி மாசால் பாதிக்கப்படுதல் போன்ற சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது என்று ஐநா சூழல் அமைப்பின் ஜெனீவா கிரிட் (GRID) பிரிவு இயக்குனர் பாஸ்கல் பெடூசி (Pascal Peduzzi) கூறுகிறார்.
இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் குறைக்கப்பட வேண்டும். கடலின் மணல் வளம் சூழல் நட்புடைய விதத்தில் மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்று பெடூசி கூறுகிறார். கடல் மணல் மதிப்புமிக்க முக்கியப் பொருளாகக் கருதப்பட வேண்டும். ஐநாவின் ஜெனீவா பகுப்பாய்வு மையத்தால் உருவாக்கப்பட்டு மணல் கண்காணிப்பு அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தானியங்கி முறை தரவுகளைப் பயன்படுத்தி உலகக் கடல்களில் மணல் எடுக்கும் கலன்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தது.
மணல் மற்றும் சரளைக்கற்களே பூமியில் இருந்து எடுக்கப்படும் பொருட்களில் பாதி இடத்தைப் பிடிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 50 பில்லியன் டன் மணல் மற்றும் சரளைக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது 27 மீட்டர் நீளமும் 27 மீட்டர் அகலமும் உடைய நிலநடுக்கோட்டைச் சுற்றிலும் எழுப்பப்படும் சுவருக்கு சமமான அளவு. மணல் கான்க்ரீட் மற்றும் இயற்கையான தரைப்படுகை அல்லது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் கசடைப் பயன்படுத்தி உண்டாக்கப்படும் மண் பொருட்களுக்கான (asphalt) முக்கிய மூலப்பொருள்.
நாம் குடியிருக்கும் வீடுகள், கட்டிடங்கள், ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகள், சாலையில் போடப்பட்டுள்ள சரளைக் கற்கள் என்று பல வகைகளில் மனித சமூகம் மணலால் கட்டப்பட்டுள்ளது. பசுமை வழிக்கு மாற உதவும் காற்றாலைகளை அமைப்பது முதல் மற்ற பல தேவைகளுக்கும் நமக்கு கான்க்ரீட் அவசியமாக உள்ளது.
கடலோரப் பகுதிகளில் இர்ருந்து மணல் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும், கடலில் இருந்து மணல் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும், நிலப்பகுதியில் குவாரிகளில் இருந்து மணல் எடுப்பதை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா பரிந்துரை செய்கிறது. மணல் மற்றும் மற்ற பொருட்களை கடல் மற்றும் நதிச்சூழலில் இருந்து தொடர்ந்து எடுப்பது நதி அல்லது கடலோரப் பகுதியின் கட்டமைப்பை மாற்றிவிடும். கடலின் ஆழ்பகுதியை வளமற்றதாக்கி விடும். இது மிக ஆபத்தானது.
கடலில் மணல் எடுக்கும் கலன்கள் ஆழ்கடலில் வெற்றிடச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் போல செயல்படுகின்றன. அடித்தட்டு மணலில் வாழும் அனைத்து வகையான நுண்ணுயிரிகளும் நசுக்கி அழிக்கப்பட்டு அங்கு உயிரற்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இந்த மணல் தரிசான பூமிக்கு எடுத்துச் செல்லப்படும்போது அங்கு எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால் ஆழ்கடலில் 30-50 செண்டிமீட்டர் மணல் அங்கேயே விடப்பட்டால் அங்குள்ள உயிரினங்கள் உயிர் பிழைத்துக் கொள்ளும்.
வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட சுரண்டல்
இந்த ஆய்வுகள் மிதமிஞ்சி மணல் எடுக்கும் நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட அல்லது அவற்றை அவமானப்படுத்த நடத்தப்படவில்லை. ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத ஆழ்கடல் பகுதியில் இருந்து எடுக்கப்படும் சூழல் சுரண்டலை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே ஐ நாவின் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மறைக்கப்படும் இந்தப் பிரச்சனையை இந்த ஆய்வுகள் இப்போது உலகறியச் செய்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து கடலில் மணல் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் சர்வதேச சங்கம் (IADC) இது தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இத்தொழிற்துறை பில்லியன் கணக்கான டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் வருமானமாக ஈட்டுகிறது. விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்றாலும் இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவை கடல் மணல் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன.
சமீபத்திய ஐ நா பொதுச்சபை தீர்மானத்தின்படி மணல் எடுத்தல் தொடர்பான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை அறிவை விரிவுபடுத்தி அதன் மூலம் சூழலுக்கு நட்புடைய விதத்தில் கடல் மணலை எடுத்தல் மற்றும் அதை பயன்படுத்துவதற்கான உலகளாவிய செயல்களை வலுவூட்ட ஜெனீவாவில் இதற்கான ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டது.
மணல் இல்லாத கடலும் கடற்கரைப்பகுதியும் பூமியை உயிர்களற்ற கோளாக மாற்றிவிடும். இந்த நிலை தொடர்ந்தால் நாளை கடலில் மட்டும் இல்லாமல் கரையிலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் அழியும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மனித ஆரோக்கியம் மற்றும் சூழலைக் காக்க உலக நாடுகள் முதல்முறையாக பிளாஸ்டிக் உற்பத்தியை வரும் பதினைந்து ஆண்டுகளில் 40% குறைக்கும் தீர்மானத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. கனடா ஒட்டாவா நகரில் ஏப்ரல் 23 முதல் 30, 2024 வரை நடந்த மாநாட்டில் ஐநா பன்னாட்டு அரசுகளுக்கு இடையில் பிளாஸ்டிக் மாசு குறைப்பிற்கான கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகள், உற்றுநோக்கர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிளாஸ்டிக் உற்பத்தியின்போது பெருமளவில் உமிழப்படும் கார்பனைக் குறைக்கும் இலட்சியத்தில் முன்னேற்றத்துடன் இது பற்றிய இந்த நான்காவது மாநாடு முடிந்தது.
இம்மாநாட்டில் ஒன்றுபட்ட கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்றாலும் உடன்படிக்கைக்கான ஒப்புதல் மொழியுடன் நிறைவடைந்துள்ளது. வரும் கூட்டங்களில் உடன்படிக்கையாக மாறவிருக்கும் ஆவணம் பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான பிளாஸ்டிக்குகளும் புதை படிவ எரிபொருட்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி நாடுகள், நிறுவனங்கள், வாயு ஏற்றுமதியாளர்கள் குறைப்பை கடுமையாக எதிர்த்தபோதிலும் அதற்கான இலக்கு இறுதி ஆவணத்தில் சேர்க்கப்பட்டது.
உடன்படிக்கை மொழியுடன் ஒரு மாநாடு
ஒட்டாவா கூட்டம் முடிவடைந்தாலும் உடன்படிக்கை பற்றி இந்த ஆண்டு கடைசியில் தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்று கூட்டத்திற்கு முன்பு , இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆவணத்தை செயல்படுத்தும் பணிகளில் கமிட்டியினர் தொடர்ந்து செயல்படுவர். தென்கொரியா கூட்டத்தில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தேவையான நிதி மற்றும் பிளாஸ்டிக்குகளில் உள்ள வேதிப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த கணிப்பு, அவற்றின் வடிவமைப்பு பற்றி விவாதிக்கப்படும்.
ருவாண்டா (Rwanda) மற்றும் பெரு ஆகிய நாடுகளின் உலகளவிலான குறைப்பிற்கான இலக்குடன் கூடிய பரிந்துரை இந்த கூட்டத்தில் ஏற்கப்பட்டது. இது பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு விடிவெள்ளி என்று கருதப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் தயாரிப்பில் 2025ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு முதன்மை பாலிமர்களின் உற்பத்தியை வரும் பதினைந்து ஆண்டில் நாற்பது சதவிகிதம் குறைக்க முடியும். “யானையை அறைக்குள் வைத்திருப்பது (Elephant in the room) போல இது வரை ஆட்சியாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தி குறைப்பு பற்றி பேசவில்லை” என்று ருவாண்டா பிரதிநிதி கூறினார்.
பிளாஸ்டிக் கூட்டமைப்பு (Plastic Co allition) இயக்கத்தைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் இவற்றால் உண்டாகும் மாசு பற்றிய தங்கள் ஆய்வறிக்கைகளை பிரதிநிதிகளிடம் சமர்ப்பித்தனர். “கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உடன்படிக்கையை உருவாக்கும் செயல்முறையில் பொதுவான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். இந்த கூட்டங்களின் முடிவுகள் மனித குலத்தின் எதிர்காலம், பூமியின் வருங்கால நல வாழ்வை தீர்மானிக்கக் கூடியது” என்று ஈக்குவெடோர் பிரதிநிதி வால்ட்டர் ஷல்ட் (Walter Schuldt) கூறினார்.
பிளாஸ்டிக் கட்டுப்பாடு பற்றிய உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2022ல் ஆரம்பித்தன. மார்ச்சில் உருகுவேயில் ருவாண்டா மற்றும் பெரு நாடுகளின் பரிந்துரைகளுடன் தொடங்கின. மே 2023 பாரிஸ் பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் காணவில்லை. நவம்பரில் நைரோபியில் நடந்த கூட்டம் உடன்படிக்கைக்கான விதிமுறைகள் பற்றி விவாதித்தது. “தீவிர இரண்டாண்டு விவாதங்களைத் தொடர்ந்து உடன்படிக்கைக்கான ஒரு இறுதி ஆவணம் இப்போது உருவாகியுள்ளது” என்று சர்வதேச மாசு நீக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர் பியேர்ன் பீலர் (Björn Beeler) கூறுகிறார்.
பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மாசால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களில் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் வாழும் பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவோம் (Breakfree from Plastic) என்ற இயக்கத்தின் மக்கள் சமூக பிரதிநிதிகள் அமெரிக்க அரசை உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தபால் அட்டைகளைக் கொடுத்தனர். தாங்கள் அனுபவிக்கும் காற்று, நீர் மாசு பற்றி நேரில் வந்து பார்க்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
நியூசிலாந்தில் இருந்து வந்த ஆதிவாசி குழுவினர் இப்பிரச்சனையால் நுண் பிளாஸ்டிக்குகள் உணவு விநியோகத்திலும் கலந்து விட்டது என்று கூறினர். “இது குறித்து பேச எங்களுக்கு உரிமையுண்டு. நாங்கள் பங்கேற்பாளர்கள் இல்லை. பிரச்சனைக்கு காரணமாக இருப்பவர்களை விட இது பற்றி பேசவும், முடிவெடுக்கவும் எங்களுக்கு முழு உரிமை தரப்பட வேண்டும். நியூசிலாந்தின் வடக்கு கடலோரத்தில் கடலடி மண்ணில், மீன்களில் ஏராளமான நுண் பிளாஸ்டிக்குகள் உள்ளன” என்று அந்நாட்டின் ஆதிவாசி சமூகப் பிரதிநிதி ஜூரசா லீ (Juressa Lee) கூறினார்.
வருங்காலத் தலைமுறையை காக்க
”உருவாகவிருக்கும் உடன்படிக்கை ஆதிவாசி சமூகங்களின் வருங்காலத் தலைமுறைகளை பாதுகாக்க வேண்டும். உலக மக்களின் மனசாட்சின் பிரதிநிதியாகவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்று அலாஸ்கா ஆர்க்டிக் ஆதிவாசி மக்கள் பிரதிநிதி வி வாக்கியி (Vi Waghiyi) கூறினார்.
விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றின் பலன்கள் இந்த தீர்மானத்தின்படி மதிப்பிடப்படும். ஒட்டுமொத்தமாக முதண்மை பாலிமர்களின் உற்பத்தி நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் வருங்காலத்தில் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி செய்யப்படுவது பற்றி ஆராயப்படும். மேலும் இந்த தீர்மானத்தின்படி பாலிமர்களின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும்.
இலக்குடன் கூடிய இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும்போது புவி வெப்ப உயர்வை பந்நாட்டு சட்ட அங்கீகாரத்துடன் 1.5 டிகிரி செல்சியர்ஸிற்குள் கட்டுப்படுத்துவது பற்றிய 2015 பாரிஸ் காலநிலை உச்சி மாநாட்டின் தீர்மானம் போல இந்த உடன்படிக்கை மாறும். பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்விற்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம் பிளாஸ்டிக்கின் வட்டப் பொறுளாதாரத்தை (circular economy) பாதுகாப்பான அளவிற்கு மாற்ற முடியும் என்று ருவாண்டா மற்றும் பெரு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வட்டப் பொருளாதாரம் என்பது உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகியவற்றில் மறுசுழற்சி, மறு பயன்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டது. 1950ல் உலக பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி 2 மில்லியன் டன்கள். இது 2017ல் 348 மில்லியன் டன்களாக உயர்ந்தது. 2040ல் பிளாஸ்டிக் தொழிற்துறையின் உற்பத்தித் திறனை இரு மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சென்று சேர்கின்றன. 2040ல் இந்த அளவு மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவை சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணம். 2050ல் 21-31% கார்பன் உமிழ்வுக்கு இவற்றின் உற்பத்தி காரணமாக இருக்கும் என்று யு எஸ் லாரன்ஸ் பெர்க்லி (Lawrence Berkeley) ஆய்வுக்கூட விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.
நிலக்கரியும் பிளாஸ்டிக்குகளும்
அமெரிக்காவில் 2030ல் நிலக்கரி பயன்பாட்டை விட பிளாஸ்டிக் உற்பத்தியே அந்நாட்டின் சூழல் சீரழிவுக்கு முதன்மைக் காரணமாக இருக்கும் என்று பிளாஸ்டிக்குகளுக்கும் அப்பால் (Beyond Plastics) என்ற சூழல் அமைப்பு 2021ல் நடத்திய ஆய்வு கூறுகிறது. 2022 நைரோபி கூட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பது பற்றி உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இதற்கான உடன்படிக்கை இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உருவாகும் என்று நம்பப்படுகிறது.
175 நாடுகள் பங்கேற்ற ஒட்டாவா மாநாடு பிளாஸ்டிக் பாலிமர்களின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு நிலையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறைவு பெற்றுள்ளது. “40% குறைப்பு என்பது நல்லதொரு இலக்கு இல்லை. என்றாலும் உலக பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பதில் இது ஒரு முக்கிய முதல் நடவடிக்கை. இப்பொருட்களின் உற்பத்தியை சுருக்கி குறைத்து கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது” என்று உலக பிளாஸ்டிக் திட்ட பசுமை இயக்கத்தின் அமெரிக்க பிரிவைச் சேர்ந்த கிரஹாம் ஃபோர்ப்ஸ் (Graham Forbes) கூறுகிறார்.
பூமியையும் மனித குலத்தையும் பாதுகாக்க விரைவில் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டிற்கான ஒரு உடன்படிக்கை விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2024/apr/29/countries-reduce-plastic-production?
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்
- மரம்
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.