கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்றுகள் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது நாளைய உலகின் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தைப் பாதிக்கும். உலகில் பயிர் செய்யப்படும் ஐந்து முக்கிய பயிர்களின் விளைச்சல் இதனால் குறையும். பெரும்பாலான கட்டுப்பாட்டு முறைகளுக்கு எதிரான ஆற்றல் பெற்று வரும் பூஞ்சைகள், காற்றின் மூலம் மிக நீண்ட தூரம் பயணம் செய்து, ஒற்றைப் பயிர் (mono crop) விளைவிக்கப்படும் வயல்களை ஆக்ரமிக்கின்றன.
எங்கும் வாழ்பவை
இந்த உயிரினங்கள் உலகின் எந்த ஒரு இடத்திலும் அங்கு உள்ள சூழ்நிலையை சமாளித்து வாழும் தகவமைப்பைப் பெற்றவை. இன்று பொதுவாக பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகளுக்கு எதிராக வாழ்பவை. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்ந்து கொண்டிருப்பதால் இவற்றால் ஏற்படும் தொற்றுகள் அதிகரிக்கின்றன. 1990களில் இருந்து இக்கிருமிகள் ஒவ்வொரு ஆண்டும் முன்பை விட 7 கி மீட்டர் அதிக உயரமான இடங்களுக்குப் பரவுகின்றன.
முன்பு வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே வழக்கமாகக் காணப்பட்ட பூஞ்சைகளால் கோதுமையில் ஏற்படும் தண்டு அழுகல் (Wheat stem rust) நோய் இப்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் காணப்படுகிறது. உயர் வெப்பநிலையால் இக்கிருமிகளில் மரபணு வேறுபாடுகள் கூடுதளாக ஏற்படுகின்றன. அதிதீவிரப் புயல்கள் இவற்றின் ஸ்போர்களை வெகுதொலைவிற்குப் பரவச் செய்கின்றன.
உலக மக்களிடையில் இவை பற்றிய அதிக விழிப்புணர்வு சமீபத்தில் வெளிவந்த “கடைசியில் நாம்” (The last of Us) என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் ஏற்பட்டுள்ளது.
மனித மூளையைத் தாக்கும் பூஞ்சை பற்றி சொல்லப்பவது ஒரு அறிவியல் புனைக்கதையே என்றாலும், இதனால் பூஞ்சைகள் பற்றி அதிக அக்கறையுள்ளவர்களாக மக்கள் மாறியுள்ளனர் என்று யு.கே. எக்சிடர் (Exeter) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் பேராசிரியர் சேரா கர் (Prof Sarah gurr) கூறுகிறார்.
சாம்பிகளும் பூஞ்சைகளும்
சோம்பிகள் (Zombies) போல அச்சுறுத்தாவிட்டாலும் பூஞ்சைகள் பூமியில் பசி பட்டினியை தலைவிரித்தாடச் செய்யும். சோம்பி என்பது இறவா வரம் பெற்ற பயங்கரத்தைக் கட்டவிழ்த்துவிடும் புராண கால கற்பனை கதாபாத்திரம். ஹேட்டி நாட்டின் நாட்டுபுறக் கலைகளில் இந்த கற்பனை உயிரினங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. புவி வெப்ப உயர்வு, பூஞ்சைகள் அதிக வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். இதனால் இந்த உயிரினங்கள் மனிதன் உட்பட உள்ள வெப்ப இரத்த விலங்குகளில் நோய்த்தொற்றை மிக அதிக அளவிற்கு ஏற்படுத்தும்.
மக்கட்தொகைப் பெருக்கம்
அதிகரித்து வரும் மக்கட்தொகைப் பெருக்கத்தால் ஏற்கனவே மனித குலம் உணவு உற்பத்தியில் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. பூஞ்சைத் தொற்றால் பெருமளவு பயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினிக்கு ஆளாகின்றனர். உயரும் வெப்பநிலை இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும் என்று ஜெற்மனி கீல் (Kiel) பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஈவா ஸ்டூக்கன்ப்ராக் (Prof Eva Stukenbrock) கூறுகிறார்.
பூஞ்சைத் தொற்றுகளால் விவசாயிகள் ஏற்கனவே 10 முதல் 23% உற்பத்தி இழப்பிற்கு ஆளாகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சோளம், சோயா பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய உலகின் ஐந்து முக்கிய பயிர்களில் தொற்றுகளால் ஏற்படும் இழப்பு ஆயிரமாயிரம் மில்லியன் மக்களின் உணவைப் பறிக்கிறது. இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளின் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளன என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஸ்போர்கள்
இவை மண்ணில் 40 ஆண்டு உயிர் வாழக் கூடியவை. இவற்றின் காற்றினால் சுலபமாகப் பரவக்கூடிய ஸ்போர்கள் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கக் கூடியவை. அமெரிக்காவில் டோர்னேடோ (tornadoe) புயல்கள் ஏற்படும் சமயத்தில் வீசும் காற்றின் மூலம் ஸ்போர்கள் உறிஞ்சப்பட்டு வெகுதொலைவு பயணம் செய்வதைப் பார்க்கலாம். ஒரு செல் செயல்முறை (single cellular process) கட்டுப்பாட்டிற்கு எதிராக இவை வேகமாகப் பரிணாம மாற்றமடைகின்றன.
இப்போது நடைமுறையில் இருக்கும் பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் பாரம்பரிய நோய்க்கட்டுப்பாட்டு முறைகள் தொற்றுகளைக் குறைக்கப் போதுமானதாக இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பயிர் முறையை விட பூஞ்சைகளுக்கு எதிரான ஆற்றலை உடைய மரபணுக்கள் கொண்ட பல விதைகளை ஒன்றாகக் கலந்து பயன்படுத்துதல் இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு. 2022ல் டென்மார்க்கில் விளைவிக்கப்பட்ட கோதுமையில் கால்பகுதியும் விதைக்கலவைப் பயிரிடல் முறையில் உற்பத்தி செய்யப்பட்டது.
கை கொடுக்கும் தொழில்நுட்பம்
ஆளில்லா பறக்கும் விமானங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் பூஞ்சைத்தாக்குதல் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடித்து கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம். பூஞ்சைக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பாற்றலைப் பெறாமல் தடுக்கும் வகையில் பல வேதிப்பொருட்களை இவற்றின் உடலில் உருவாக்க உதவும் கூட்டுப்பொருட்களை எக்சிடர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப்பொருட்கள் அரிசி, கோதுமை, சோளம், வாழைப்பயிர்களில் பலனளிக்கக் கூடியதாக இருந்தது.
பூஞ்சைத்தொற்று குறித்த ஆய்வுகளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. 2020-2022ல் யு.கே. ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்பு கவுன்சில் கொரோனாவிற்கு எதிரான ஆய்வுகளுக்கு 550 மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கியது. ஆனால் இதே காலத்தில் பூஞ்சைத்தொற்று ஆய்வுகளுக்கு வெறும் 24 மில்லியன் பவுண்டு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
உண்ண உணவில்லாமல் போனால் உயிர் வாழ்வது எப்படி?
போதிய உணவு உண்பதற்கு இல்லாமல் போகும்போது - சத்து பற்றாக்குறையாலேயே - கோவிட்19 போன்ற மற்றொரு கொள்ளைநோய் தாக்குவதற்கு முன்பே நாம் இறந்து விடுவோம். மற்ற மருத்துவ ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது இப்போதும் இந்த ஆய்வுகள் காசில்லாமலேயே நடந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் பூஞ்சைத்தொற்றுகளே நாளை மனிதனை அழிக்கும் ஆபத்தாக மாறிவிடலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றம் கூடுதல் வானவில்களை உருவாக்கும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பூமியின் மேற்பரப்பில் இருந்து முதன்மை வானவில்லை பகலில் மட்டுமே பார்க்க முடியும். அதற்கு சூரியனின் கோணம் 42 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நேராக விழும் சூரிய ஒளி மேகக்கூட்டங்களால் மறைக்கப்படக் கூடாது. அப்போது மழைநீர்த்துளி சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு வானவில் தோன்றும்.
சூரியனின் கோணம் வானில் வானவில்லின் உயரத்தை தீர்மானிக்கிறது. 42 டிகிரிக்கும் கூடுதலாக இருந்தால், ஒளி பிரதிபலிப்பு அடிவானத்திற்குக் கீழிருந்தால், தரைமட்டத்தில் இருந்து வானவில்லைப் பார்க்க முடியாது. பார்ப்பவரின் பின்பக்கமாக 4 டிகிரி கோணத்தில் சூரியன் இருந்தால் வானவில்லைப் பார்க்கலாம். ஆனால் பார்ப்பவரின் தலை உச்சியில் சூரியன் 90 டிகிரியில் இருந்தால் வானவில் தெரியாது.
சூரியனின் உதயத்திற்கு முன் இந்த கோணம் சுழிக்கும் குறைவாக இருந்தால், பார்ப்பவருக்கு நேராக சூரியன் இருந்தால் வானவில் தெரியாது. இவை வானவில்லைப் பார்க்கத் தேவையான நிபந்தனைகள். மழை மற்றும் மேகங்களின் நிலை வானவில்லைக் காண உதவுகின்றன. மேகங்களின் நிலை, தூசுகளின் அளவு போன்ற மனிதக் குறுக்கீடுகளால் வானவில் தோன்றுவது பாதிக்கப்படுகிறது.
சூழல் மாசினால் பாதிக்கப்படும் வானவில்
மனிதச் செயல்களால் வளி மண்டலத்தில் அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு வானவில் தோன்றுவதைப் பாதிக்கிறது. மனோவா (Manoa) ஹவாயி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வுகளில் இருந்து 21ம் நூற்றாண்டில் இருந்ததை விட 2100ல் வானவில்கள் தரையில் தோன்றுவது 5% அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
எங்கு தோன்றும் புதிய வானவில்கள்?
வட அட்சரேகைப் பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் புவி வெப்ப உயர்வினால் அதிக உறைபனி மற்றும் அதிக மழை ஏற்படும் என்பதால் அங்கு கூடுதல் வானவில்கள் தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய தரைக்கடல் போன்ற, காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு மழைக்குறைவு ஏற்படும் இடங்களில் இவை தோன்றும் எண்ணிக்கை குறையும்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு
சூரிய ஒளியை மழைத்துளிகள் பிரதிபலிக்கும்போதே இவை தோன்றுகின்றன. அதனால் சூரிய ஒளியும், மழைப்பொழிவும் இவை ஏற்பட அவசியம். பசுமைக்குடில் வாயுக்கள் வளி மண்டலத்தில் அதிகமாக உமிழப்படும்போது அது மேகங்கள் தோன்றுவதையும், மழைப்பொழிவையும் பாதிக்கிறது.
வருங்காலத்தில் வானவில்கள் வாழ்நாளின் அன்றாட சிறப்பாக மாறப்போகும் இயற்கையின் நன்மையை நினைத்து நான் மகிழ்கிறேன் என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும், இப்போது நியூயார்க் பல்கலைக்கழக சூழலியல் துறை ஆய்வாளருமான கிம்பர்லி கார்ல்சன் (Kimberly Carlson) கூறுகிறார்.
சூழலின் அழகு சம்பவம் வானவில்லின் தோற்றம்
இவற்றிற்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயும் முதல் உலகளாவிய ஆய்வு இது. வெப்ப அதிர்ச்சி, வெப்ப அலைத்தாக்குதல்கள் போன்றவை மூலம் காலநிலை மாற்றம் மக்கள் வாழ்வு, உடல் நலத்தை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கிறது என்பது பற்றியே அதிகம் ஆராயப்படுகிறது. ஆனால் வெகு சில ஆய்வுகளே சூழலின் அழகு நிகழ்வான வானவில் போன்ற இயற்கையின் அற்புதங்களுக்கும் மனிதன் ஏற்படுத்தும் சூழல் சீரழிவுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயப்படுகிறது என்று மனோவா சூழலியல் துறை ஆய்வு மாணவர் கமிலோ மோரா (Camilo Mora) கூறுகிறார்.
வானவில் வரைபடங்கள்
காலநிலை மாற்றம் நிகழும் இவ்வேளையில் வானவில் வரைபடங்கள் உருவாக்கப்படவேண்டும் என்கிறார் மோரா. ப்ளிக்கர் (Flickr) என்ற சமூக ஊடகத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அனுப்பிய வானவில் படங்கள் மனோவா ஹவாயி பல்கலைக்கழக மாணவர்களால் பதிவேற்றப்பட்டு ஆராயப்பட்டது. ரைன்போ என்று லேபிளிடப்பட்டு அனுப்பப்பட்ட இந்த படங்கள் மூலம் அவை உருவான விதம், உருவான இடம் போன்ற விவரங்கள் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
வானவில்களின் மாயாஜால உலகம்
கலைவடிவம், கொடி, யூகலிப்டஸ் மரம், விதவிதமான உணவு வகைகளாக வெவ்வேறு வடிவங்களில் படமெடுக்கப்பட்டிருந்த வானவில் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரும், மனோவா ஹவாயி பல்கலைக்கழக கடல், புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் (SOEST) முன்னாள் ஆய்வுமாணவருமான அமாண்டா வொங் (Amanda Wong) கூறுகிறார்.
வானவில் மாதிரி
மேக அடர்வு, படமெடுக்கப்பட்ட இடம், மேகங்களின் தோற்றம் மற்றும் நிலை, சூரிய கோணம் போன்றவற்றைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் வருங்காலத்தில் வானவில் உருவாகக் கூடிய மாதிரியை (rainbow prediction model) உருவாக்கினர். உலக நிலப்பரப்பில் இன்றுள்ள நிலையுடன் ஒப்பிடப்பட்டு வருங்காலத்தில் வானவில்கள் எங்கு எந்த எண்ணிக்கையில் தோன்றும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
தீவு நாடுகள்
தீவு நாடுகளில் வானவில்கள் வருங்காலத்தில் அதிகம் தோன்றும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வானவில்லைப் பார்க்க தீவு நாடுகளே சிறந்த இடங்கள் என்று மனோவ பள்ளி (SOEST) பேராசிரியர் ஸ்டீவன் ப்யூசிங்கர் (Steven Businger) கூறுகிறார். தீவுநாடுகளில் கடற்காற்று வீசும்போது மழைத்துளிகள் உயரமான இடத்தில் உருவாகி அந்தந்தப் பகுதியில் சாரலை ஏற்படுத்துகிறது. இதனால் தெளிந்த வானில் சூரியன் மகத்தான வானவில்லை உருவாக்குகிறது.
வானவில்லின் உலகத் தலைநகரம்
ஹவாய் தீவுகள் வானவில்கள் அதிகம் தோன்றும் இடம் என்பதால் சமீபத்தில் அது வானவில்லின் உலகத் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது. இங்கு வருங்காலத்தில் மேலும் சில நாட்கள் கூடுதலாக வானவில் தோன்றும். வானவில் ஏற்படுவதால் மனித உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி ஆய்வில் எதுவும் கூறப்படவில்லை.
ஒலியும் ஒளியும் வானவில்லும்
என்றாலும் வானவில் மனித வரலாறு, கலாச்சாரம், அழகியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் காலநிலை மாற்றம் பூமியில் மனிதன் பெறும் இயற்கையின் அனுபவங்களில் சூழல் சீரழிவுகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. ஒலி, ஒளி போன்றவை சூழல் சீர்கேட்டினால் மாற்றமடைகிறது. இவை போன்றவற்றை பற்றி மேலும் அதிக ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்று கார்ல்சன் கூறுகிறார்.
இந்த ஆய்வுக்கட்டுரை உலகளாவிய சூழல் மாற்றம் (Global Environmental Change) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
** ** **
மேற்கோள்கள்:
https://www.mathrubhumi.com/environment/news/climate-change-may-increase-rainbows-1.8008937
&
https://thedailyguardian.com/more-rainbows-will-be-seen-due-to-climate-change-suggests-study/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
புதிய உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பது குறித்த செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இதில் இருந்து வித்தியாசமாக பூமியின் வட கோடியில் விஞ்ஞானிகள் ஒரு புதிய தீவைக் கண்டுபிடித்துள்ளனர். உலகின் வடமுனையில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள உலகின் மிகப் பெரிய தீவு. இங்குதான் உலகின் மிகப் பெரிய தேசிய சரணாலயம் அமைந்துள்ளது. பல ஆராய்ச்சி நிலையங்களும் இங்கு உள்ளன.
இங்கு புதியதொரு தீவைக் கண்டுபிடித்ததாக நார்வேயில் இருந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று கூறுகிறது. டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதுவே உலகின் வடமுனை. புதிய நிலப்பகுதியைக் கண்டுபிடிப்பது தங்கள் நோக்கமில்லை என்று ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கிரீன்லாந்து ஆர்க்டிக் ஆய்வு நிலையத்தின் (Arctic station research facility) தலைவர், துருவப்பகுதி ஆய்வாளர் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானி மார்ட்டின் ராஷ் (Morten Rasch) கூறுகிறார்.
புதிய உயிரினங்கள் தீவிர பருவநிலை மாறுதல்களுக்கு அடிக்கடி ஆளாகும். பூமியின் வடதுருவத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றன என்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட, அதற்கான மாதிரிகளைச் சேகரிக்க தாங்கள் சென்றதாக அவர் கூறுகிறார். ஆறு விஞ்ஞானிகள் அப்போது ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஊடாக் தீவு இருந்த இடத்திற்கு அருகில் சென்றபோது அந்தத் தீவு அங்கு காணப்படவில்லை என்பதை உணர்ந்தனர்.
உலகின் இப்பகுதியில் வரைபடங்கள் தெளிவாக இருக்காது என்று மார்ட்டின் கூறுகிறார். ஒரு சில நிமிடங்கள் 'ஊடாக்' தீவைத் தேடிக் கொண்டிருந்த பிறகு அந்த புதிய இடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்த புது இடம் மண் குவியல்கள், கடல் கொண்டு வந்து சேர்த்த படிமங்கள், சரளைக் கற்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. நான்கு புறமும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டு, காட்சி தந்தது. முதல் பார்வையிலேயே நட்பிற்கு உகந்த ஓர் இடமாக அது தெரியவில்லை.
1978ல் டேனிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஊடாக் (Oodaaq) என்ற தீவிற்கே தாங்கள் சென்றதாக முதலில் விஞ்ஞானிகள் கருதினர். இந்தத் தீவே இன்றுவரை உலகின் வடமுனையாகக் கருதப்படுகிறது. பிறகு தாங்கள் வந்து சேர்ந்த இடத்தை சரிபார்த்தபோதே உலகின் வடகோடியில் அமைந்துள்ள புதியதொரு பகுதிக்கு தாங்கள் வந்தது அவர்களுக்குத் தெரிந்தது. இத்தீவு ஊடாக்கில் இருந்து வடமேற்கில் 780 மீ தொலைவில் அமைந்துள்ளது.
குழுவில் இருந்த அணைத்து விஞ்ஞானிகளும் தாங்கள் ஊடாக்கிற்கு வருகை தருவதற்குப் பதில் புதியதொரு தீவிற்கு வந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர் என்று சுவிட்சர்லாந்து ஆய்வாளர் கிறிஸ்டியென் லைஸ்ட்டர் (Christiane Leister) கூறுகிறார். இவரே லைஸ்ட்டர் அறக்கட்டளையை நிறுவியவர். இந்த ஆய்வுகளுக்கு நிதியுதவியையும் இந்த அறக்கட்டளையே அளித்து வருகிறது.
முன்காலத்தில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டறியச் சென்ற ஆய்வாளர்கள் தாங்கள் ஒரு பகுதிக்குச் சென்றதாகக் கருதும்போது, அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய இடத்திற்கு வந்திருப்பதை பின்னர் அறிந்து கொள்வது போல விஞ்ஞானிகளுக்கு இது அமைந்திருந்தது.
பனி பொழியும் அழகிய தீவு
கிரீன்லாந்து, சுற்றுலா மற்றும் துருவப் பகுதி ஆய்வுகளுக்கு புகழ் பெற்ற இடம். ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்து, டென்மார்க்கிற்குச் சொந்தமான ஓர் சுயாட்சி நிலப்பரப்பு. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். நாட்டின் முக்கிய வருமானம் சுற்றுலா மூலம் கிடைக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் நிறைந்த கிரீன்லாந்து, வைக்கிங் வரலாறின் சமகால இன்யூட் கலாச்சாரத்தின் அற்புத உலகமாகக் கருதப்படுகிறது. தொலைதூரத்தில் அமைந்திருக்கும் இந்த தேசம் வியப்புகள் நிறைந்த ஒரு பனிக்கண்டத்தை திறந்து காட்டுகிறது.
இங்கு பனிபொழியும் காட்சிகளைக் கண்டு இரசிக்க உல்லாசப் படகுப் பயணம், ஹெலிகாப்டர் பயணம், ஆர்க்டிக் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டுகள், பனி நிறைந்த குறுகிய பாதைகள் (legoons) வழியே கயாக்கிங் பொழுதுபோக்குகள் போன்ற பல்வேறு சாகசம் நிறைந்த பொழுதுபோக்குகள் உள்ளன.
பூமியில் மிக அழகிய காட்சிகளில் ஒன்றான அரோரா போரியாலிஸ் எனப்படும் விடியல் மற்றும் அந்தி வெளிச்சம் ஆகிய அற்புத இயற்கை நிகழ்வைக் காண பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். புவி வெப்ப உயர்வினால் இங்கு உள்ள பனிப்படலங்கள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் செய்திகள் இங்கிருந்து அடிக்கடி வருவதுண்டு.
2019ல் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தப் பகுதியை தங்கள் நாடு விலைக்கு வாங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். உடனடியாக டென்மார்க் இந்த ஆலோசனையை நிராகரித்தது.
பனிக்கடலிற்கு நடுவில் புதிய தீவு
30மீ/150 முதல் 60 மீ/180 அடி வரை அகலம் உள்ள இந்த சிறிய தீவு கடல் மட்டத்தில் இருந்து 3 முதல் 4 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நகர்ந்து கொண்டிருக்கும் பனிப்படலப் பரப்புகளால் அடித்து வரப்பட்ட மண், பாறைக்கற்கள் மற்றும் கடலடி மண் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. சேறு சகதி, சரளைக்கற்கள் நிறைந்த குன்றுகள் இங்கு உள்ளன.
வலுவான ஒரு புயற்காற்றால் அடித்து வரப்பட்ட பொருட்களாக இவை இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்மைக் காலங்களில் இந்த கண்டத்தில் பனிப்படலங்கள் (glaciers) புவி வெப்ப உயர்வின் காரணமாக அதிக அளவில் உருகினாலும், இத்தீவு காலநிலை மாற்றத்தினால் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பெயர் சூடும் தீவு
இந்த புதிய தீவிற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. விஞ்ஞானிகள் இந்த தீவிற்கு கெக்கடெக் அவனாலக் (Qeqertaq Avannarleq) என்ற பெயரை வழங்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த சொல்லிற்கு கிரீன்லாந்து மொழியில் பூமியின் வடகோடி முனையில் உள்ள தீவு என்று பொருள்.
டென்மார்க் தேசிய விண்வெளிக் கழகத்தின் புவி இயக்கவியல் பிரிவின் (Geodynamics) பேராசிரியர் மற்றும் தலைவர் ரினெ போர்ஸ்பெர்க் (Rene Forsberg) கிரீன்லாந்தின் வடக்கில் இப்பகுதியில் சில இடங்களில் அடர்த்தி மிகுந்த துருவப் பனிப்படலங்கள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். இந்த இடங்கள் குளிர்காலத்தில் இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை கனம் உள்ளதாகக் காணப்படுகின்றன.
கோடையில் இவற்றின் அடர்வு மாறுபடலாம் என்று அவர் கருதுகிறார். 1978ல் ஊடாக் தீவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். அன்று இருந்ததை விட இன்று இந்தப் பகுதி பல மாறுதல்களை சந்தித்துள்ளதாக போர்ஸ்பெர்க் கூறுகிறார். இந்த புதிய நிலப்பரப்பு நீடித்திருப்பதைப் பொறுத்தே இதனைக் சொந்தம் கொண்டாட உலக நாடுகள் முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் பாய்ந்து வரும் கடல் அலைகளின் சீற்றத்தைத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்க வேண்டும். இந்த வரையறை இந்தப் புதுத்தீவிற்குப் பொருந்துமா? வலிமை மிக்க ஒரு புயற்காற்று வீசினால் இந்தத் தீவுப்பகுதி தோன்றியது போலவே மறைந்து போகுமா?
இப்போது இதுவே பூமியின் வடமுனையில் அமைந்துள்ள நிலப்பகுதி. இதுபோன்ற சிறு தீவுகள் வரும், போகும். இந்தத் தீவு உண்மையில் தீவா? இல்லை வெறும் ஒரு கரையா? காலம்தான் பதில் சொல்லும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றத்தில் பல செயற்கை வழிகளில் குறுக்கிட்டு புவி வெப்ப உயர்வைத் தடுக்க விஞ்ஞானிகள் நீண்ட காலம் முயன்று வருகின்றனர். பல ஆய்வாளர்கள் வளி மண்டலத்தில் ஸ்டேட்டோஸ்பியர் அடுக்கில் சல்பர் போன்ற தனிமங்களின் நுண் துகள்களைத் தூவும் முறையை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
விஞ்ஞானிகளின் திறந்த கடிதம்
சூரியனின் வெப்பம் மிகுந்த கதிர்களை நுண் துகள்களைத் தூவி தடுத்து நிறுத்துவது பற்றி தீவிரமாக ஆராய வேண்டும் என்று முன்னாள் நாசா நிறுவனத்தின் விஞ்ஞானியும் 1980களில் புவி வெப்ப உயர்வு பற்றி முன்னெச்சரிக்கை செய்தவருமான புகழ்பெற்ற காலநிலை ஆய்வாளர் மூத்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஹேன்சன் (James Hansen) தலைமையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த நிலையில் வெப்ப உயர்வை 2 டிகிரிக்கு கீழ் கட்டுப்படுத்த முடியவில்லை. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியைக் குளிர்ச்சியடையச் செய்ய புவிப் பொறியியல் (Geo engineering) அல்லது சூரியக்கதிர் மேலாண்மையை (solar Radiation Management SRM) நடைமுறைப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
வரும் ஒன்றிரண்டு பத்தாண்டுகளில் இந்த முறை பற்றிய முடிவு எடுக்கப்பட வேண்டும். சூரியனின் கதிர்களைத் திசை திருப்பிவிட மேகங்களை அதிக பிரகாசமுடையதாக்கி அதன் மூலம் கூடுதல் வெப்பத்தை சிதறடிக்கும் வழி பற்றியும் சிந்திக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானிகள் வளி மண்டலத்தில் சல்பர் போன்ற துகள்களைத் தூவி பூமியைக் குளிர வைக்கும் முறையே நன்மை பயக்கும் என்று நம்புகின்றனர். இதன் மூலம் சூரிய கதிர்களை சிதறடித்து ஒரு டிகிரி அல்லது அதற்கும் குறைவாக புவி வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.
இதனால் ஏற்படும் பலன் தற்காலிகமானது என்பதால் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எரிமலை வெடிக்கும்போது ஏற்படும் புகை மூட்டம் பூமியை மங்கச் செய்கிறது. இது போல இத்திட்டம் செயல்படுகிறது. ஆனால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. எல்லா அரசுகளும் இதை சரியான முறையில் மேற்கொள்வது பற்றி சந்தேகங்கள் உள்ளன. இதனால் இந்த முறை முழுமையாக இன்னும் ஆராயப்படவில்லை.
பல பில்லியன் டாலர் செலவு
என்றாலும் உலக அரசுகள் புவி வெப்ப உயர்வைக் குறைத்து காலநிலைப் பேரழிவு நிகழ்வதைத் தடுக்க இன்னமும் எதுவும் செய்யாமல் இருப்பதால் இந்த முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் பல விஞ்ஞானிகளிடையில் உருவாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் இம்முறையை ஆராய ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆண்டிற்கு பல பில்லியன் டாலர் செலவு பிடிக்கும் இத்திட்டம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா சூழல் அமைப்பு (UNEP) வலியுறுத்தியுள்ளது.
பாதிப்புகள்
புவி வெப்ப உயர்வை 1 டிகிரிக்கு கட்டுப்படுத்துவது என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் நுண் துகள்கள் தூவப்படுவதால் ஓசோன் அடுக்கு பாதிக்கப்படலாம். சூரியனின் மூலம் கிடைக்கும் புவி ஆற்றலில் வேறுபாடுகள் ஏற்படலாம். நாடுகளுக்கு இடையில் சண்டைகள் வரலாம். திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டால் பூமியின் வெப்பம் பல மடங்கு உயரலாம்.
குறுக்குவழிகள் எதுவுமில்லை
காலநிலைச் சீரழிவுகளைத் தடுக்க மனிதன் நினைப்பது போல குறுக்கு வழிகள் எதுவுமில்லை என்று ஐ நா சூழல் அமைப்பின் செயல் இயக்குனர் இங்கர் ஆண்டர்சென் (Inger Andersen) கூறுகிறார். வெப்பத்தைக் குறைக்க இப்போது உள்ள செயல்பாடுகள் எவையும் போதுமானதாக இல்லை. அதனால் மீள முடியாத வெப்ப உயர்வில் வெந்துருக ஆரம்பிப்பதற்கு முன் பூமியைக் குளிரச் செய்ய அவசரமாக எதையேனும் செய்தேயாக வேண்டும் என்று ஜேம்ஸ் ஹேன்சன் கூறுகிறார்.
மாற்று வழியில்லை
இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் காற்று மண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இது எந்த விதத்திலும் உதவாது. இதன் விளைவுகள் பற்றி அறியப்படாத நிலையில் இத்திட்டம் தார்மீகப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பசுமைக்குடில் வாயுக்களை உருவாக்கும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்துவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. சமீபத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதை மெக்சிகோ தடை செய்தது.
இத்திட்டத்திற்கு எதிராக நானூறிற்க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலகளவிலான சூரிய புவிப் பொறியியல் தடுப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இத்திட்டம் சூழலைக் காக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாமல் பூமியை மிகப்பெரிய அளவில் மாசுபடுத்தும் பணக்கார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கவர்ச்சிகரமான ஒண்று. உலகின் வெப்பநிலையை நம் விருப்பப்படி கட்டுப்படுத்தலாம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றே என்று சர்வதேச சூழல் சட்ட மையத்தின் (CIEL) காலநிலை மற்றும் ஆற்றல் பிரிவின் துணை இயக்குனர் லில்லி ஃப்யுயர் (Lili Fuhr) கூறுகிறார்.
நன்மை செய்யும் இயற்கையின் மீது மனிதன் தொடுக்கும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை என்றால் நாளை பூமியின் நிலை என்னவாகும்? வெய்யிலுக்கு நிழல் தரும் குடை போல சூரியனை மறைத்து அதன் கதிர்களைத் திசை திருப்பி விடுவது சுலபமானதில்லை. சூழலை சீரழிப்பதை மனிதன் உடனடியாக நிறுத்தாவிட்டால் அழியும் பூமியில் மனிதன் இது போன்ற தொழில்நுட்பங்களைத் தேடியே ஓட வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்
- மண்ணிற்கடியில் புதையும் நாட்டின் தலைநகரம்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
- கொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா?
- உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்
- அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா?
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு
- மனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்
- நிறையும் எடையும் ஒன்றா?
- ட்ரம்ப் குடும்பம் காலப்பயணம் செய்கிறார்களா?