கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலையில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவதும், தொடர்ந்து புயல், பெருமழை பொழிவதும் இன்று அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் பல சமயங்களில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாகின்றன. வானிலை முன்னறிவிப்புகளில் இதை அடிக்கடி நாம் கேட்பதுண்டு.
பூமியில் உருவாகும் அழுத்த வேறுபாடுகளே காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணம். அழுத்தம் என்பது பூமியில் ஏற்படும் அதன் எடையையே குறிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பரப்பில் வாயு மண்டலத்தில் காற்று உருவாக்கும் எடை. இதுவே அந்த இடத்தின் காற்றழுத்தம். பூமியின் ஈர்ப்புவிசை காரணமாக இந்த அழுத்தம் பூமியுடன் சேர்ந்து செயல்படுகிறது. வாயு மண்டலத்தில் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளுக்கு வெப்பநிலை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
பூமத்திய ரேகைக்கு இரண்டு பக்கங்களிலும் நிலவும் வெப்ப மண்டலப் பகுதிகள் எப்போதும் உயர்ந்த வெப்பம் உள்ள பகுதிகள். இதனால் இந்த இடங்களில் காற்றின் அழுத்தம் குறைவாகக் காணப்படுகிறது. அதாவது காற்றின் எடை குறைவாக இருக்கிறது. இந்தப் பிரதேசம் பூமியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி. பூமத்திய ரேகையின் இரண்டு பக்கங்களிலும் 5 டிகிரி அட்சரேகை பரப்பில் உள்ள காற்றின் அழுத்தத்தை நிர்வகிக்கும் பகுதியாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.இப்பகுதி உட்பட பூமியில் ஏழு காற்றழுத்தப் பகுதிகள் உள்ளன. மூன்று லேசான காற்றழுத்தப் பகுதிகள், நான்கு உயர்ந்த அழுத்தம் உள்ள பகுதிகள் என்பவை அவை. 60 டிகிரிக்கும் 70 டிகிரிக்கும் இடையில் உள்ள பகுதியில் பூமியின் வட மற்றும் தென் கோளப் பகுதிகளில் காற்றழுத்தம் குறைவாகக் காணப்படும் பகுதிகள் உள்ளன. இவை துணைக் காற்றழுத்தக் குறைவுப் பகுதிகள் எனப்படுகின்றன. வட மற்றும் தென் கோளப் பகுதிகளில் 35 டிகிரி, 30 டிகிரி பரப்பளவில் இப்பகுதிகள் காணப்படுகின்றன. இவை துணை வெப்ப ஈர்ப்பு காற்றழுத்தப் பகுதிகள் எனப்படுகின்றன.
இந்தப் பகுதிகளில் இருந்தே பூமத்திய ரேகைப் பகுதிக்கு காற்றுகள் வீசிக் கொண்டிருக்கின்றன. இவையே வணிகக் காற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கிருந்து துணை காற்றழுத்தக் குறைவுப் பிரதேசங்களுக்கும் காற்று வீசுகின்றது. இவை மேற்கத்தியக் காற்று என்று அழைக்கப்படுகின்றது.
துருவப் பிரதேசங்கள் வெப்பநிலை மிகக் குறைவாக உள்ள இடங்கள். இங்கு காற்றின் எடை அதிகம். இந்தப் பிரதேசத்தில் இருந்து காற்று, குறைந்த அழுத்தம் உள்ள 60 டிகிரி அட்சரேகைப் பகுதிகளை நோக்கி வீசுகிறது. நீரோட்டம் போல அழுத்தம் அதிகம் உள்ள இடத்தில் இருந்து குறைவாக உள்ள இடத்திற்கு காற்று வீசுகிறது. அழுத்தத்தை அளவிட அழுத்தமானி (பாரோமீட்டர்) பயன்படுத்தப்படுகிறது. மில்லிபார் என்ற அலகால் இது அளக்கப்படுகின்றது. ஆனால் 1986ம் ஆண்டிற்குப் பிறகு அழுத்தத்தை அளக்க ஹெக்டோ பாஸ்கல் என்ற அலகே பயன்படுத்தப்படுகிறது.
கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 76 செ மீ. இது 1013.2 ஹெக்டோ பாஸ்கல். இத்தாலிய விஞ்ஞானி டாரிசெல்லி காற்றழுத்தமானியை உருவாக்கினார். கடலின் மேற்பரப்பில் காற்று ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு கண்ணாடிக்குழாயில் 76 சென்டி மீட்டர் உயரத்தில் பாதரசத்தை தாழ்வாக நிறுத்தப் போதுமானது என்று அவர் கண்டுபிடித்தார். வட மற்றும் தென் கோளப் பகுதிகளுக்கு இடையில் சூரியனின் பயணத்தின் காரணமாக பூமியின் மேற்பரப்பில் காற்றழுத்தப் பகுதிகள் லேசாக வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் வீசுகின்றன.
கடலோரப் பிரதேசங்களுக்கும், கடல்களுக்கும் இடையில் காணப்படும் இடமாற்றம் காற்றழுத்தப் பிரதேசங்கள் இடம் மாறக் காரணமாக அமைகிறது. ஜூலை மாதத்தில் வட கோளப் பகுதியிலும், ஜனவரி மாதத்தில் தென் கோளப் பகுதியிலும் கரையோரப் பகுதிகள் அதிக அளவில் வெப்பமடைகின்றன. இதற்கு ஜூன் 21 அன்று உத்தராயணக் கோட்டிற்கு மேல் பகுதியிலும், டிசம்பர் 22 அன்று தட்சனாயணப் பகுதிக்கு மேல் பகுதியிலும் சூரியன் இருப்பதே காரணம்.
அந்த சமயத்தில் இப்பகுதிகளுக்கு மேல் லேசான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகின்றன. வட கோளப் பகுதியில் கரைப்பகுதிகள் லேசான காற்றழுத்தப் பிரதேசங்களாக ஆகும்போது தென் கோளத்தில் கரைப்பகுதிகள் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அழுத்தப் பிரதேசங்களாக மாறுகின்றன. இந்நிகழ்வு எதிர்மாறாகவும் நிகழ்கின்றது. சுற்றிலும் உள்ள பிரதேசத்தைக் காட்டிலும் அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்.
இதனால் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியில் இருந்து அழுத்தம் குறைவாக உள்ள பகுதிக்கு காற்று வலிமையுடன் வீசுகிறது. இது மலைகளால் தடுக்கப்பட்டு கிழக்குப் பகுதியில் நல்ல மழைப் பொழிவு ஏற்படுகிறது. பூமியின் சுழற்சி, புவியின் மேற்பரப்பில் கானப்படும் இயற்கை அமைப்பு போன்றவை காற்றின் வலிமை மற்றும் அது வீசும் திசையில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. காற்றின் திசையைக் கட்டுப்படுத்தும் மறைமுக விசை ஒன்று பூமியில் செயல்படுகிறது. இது கோடியோலிஸ் விசை என்று அழைக்கப்படுகிறது.
பிரெஞ்சு கணித மேதை கஸ்டோ டிகோடியோலிஸ் என்பவரே இதைக் கண்டுபிடித்தார். பயணித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு பொருளின் பயண திசையும் வட கோளப் பகுதியில் வலது திசையிலும், தென் கோளத்தில் இடது திசை நோக்கியும் இருக்கும் என்பது இக்கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கை. இதைப் பற்றி ஆராய்ந்து தீவிரமாக சிந்தித்த ஃபெரல் என்ற அமெரிக்க விஞ்ஞானி இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தினார்.
பூமியின் சுழற்சியால் காற்றின் திசை, வட பகுதியில் வலது நோக்கி சாய்ந்தும், தென் பகுதியில் இடது நோக்கி சாய்ந்தும் வீசுகிறது என்று ஃபெரல் விதி கூறுகிறது. காற்று நிலையானது, நிலையற்றது, பிராந்திய ரீதியிலானது, அடிவானக் காற்று என்று பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வணிகக் காற்று, மேற்கத்தியக் காற்று போன்றவை எப்போதும் ஒரே திசையில் இருந்து மற்றொரு திசையை நோக்கி வீசும் நிலையான காற்றுகள். புயற்காற்றுகள் நிலையற்ற காற்றுகள்.
வாயு மண்டலத்தின் கீழ்பகுதியில் இருக்கும் டோப்போஸ்பியரில் உருவாகும் அதி தீவிரமான காற்றழுத்த நிலை அடிவானக் காற்றுக்கு எடுத்துக்காட்டு. வெப்ப மண்டலப் பகுதியில் உருவாகும் காற்றில் வங்காளக் கடலில் உருவாகும் காற்றுதான் மிகப் பெரியது. அக்டோபர் நவம்பர் மாதங்களிலும், ஏப்ரல் மே மாதங்களிலும் இவை தோன்றுகின்றன.
குறிப்பிட்டப் பருவங்களில் வீசும் இவை பருவக்காற்று என்றும் அழைக்கப்படுகின்றது. பகலில் வீசும் கடற்காற்றும், இரவில் வீசும் கரைக்காற்றும் குறைந்த நேரத்திற்கு வீசும் காற்றுக்கு உதாரணம். சராசரியாக நீண்ட நேரம் வீசும் காற்று, பருவமழைக் காற்று எனப்படுகின்றது. இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் முதல் பகுதி வரை தென்மேற்கில் இருந்து வீசும் காற்று மூலம் நல்ல மழை கிடைக்கிறது.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் வீசும் காற்று பிராந்தியரீதியில் வீசும் காற்று எனப்படுகின்றன. இவை மிகச் சிறிய நிலப்பகுதியில் மட்டுமே வீசும் இயல்புடையவை. இது அந்தக் குறிப்பிட்ட பகுதியின் அன்றாட வானிலை, காலநிலையைப் பாதிக்கிறது. லூ, ஃப்ப்ன்,சியூக், நார்வெஸ்ட்டர், மின்ஸ்ட்ரெல், டொனார்டு போன்றவை இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப் பகுதியில் வீசும் காற்றுக்கு எடுத்துக்காட்டு.
தென்றலாகவும், புயலாகவும் வீசும் காற்றின் கதை சுவாரசியமானது. இயற்கையின் படைப்பில் காற்றின் கதை வியப்பூட்டும் ஒரு விந்தையான நிகழ்வே!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியில் இதுவரை நடந்துள்ள கூட்டப் பேரழிவுகளில் மிகப் பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. பூமியில் 87% உயிரினங்கள் அப்போது அழிந்தன. இன்று பூமியில் நாம் காணும் உயிரினங்கள் அன்று மிச்சம் மீதியிருந்த 13% உயிரினங்களில் இருந்து உருவானவையே. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை பல ஆய்வுகள் நடந்தன.
கூட்ட மரணம்
மாபெரும் கூட்ட மரணம் (great dying) என்று அழைக்கப்படும் பெர்மியன் கால நிகழ்வு, வரலாற்றில் மிகக் கொடூரமான பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். இதனுடன் சைபீரியா பகுதியில் ஒரு எரிமலை வெடித்துச் சிதறி அதன் கரும்புகையும் சாம்பலும் பூமி முழுவதையும் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு மூடியது.
இதுவே அந்த காலநிலை மாற்றத்திற்கான காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவங்கள் உயிரினங்களின் மரணத்திற்கு எவ்வாறு காரணமானது என்று விவரிக்க ஆய்வாளர்களால் இதுவரை முடியவில்லை.வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்குப் பின் இருக்கும் இரகசியங்களை கண்டுபிடித்துள்ளனர்.
மீண்டும் சம்பவிக்குமா?
பூமி இன்னொரு அதி பயங்கரமான காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மிக மோசமான நுழைவாயிலில் கால் எடுத்து வைத்துள்ளது. இச்சூழ்நிலையில் பெர்மியன் காலகட்டத்தில் உண்டான கூட்டப் பேரழிவு பற்றிய விவரங்கள் வருங்காலத்தில் நேரிடப் போகும் அச்சுறுத்தல்களை சமாளித்து வாழ உதவும் என்று ஆய்வுக்குழு தலைவர்களில் ஒருவரான கடலியல் ஆய்வாளர் ஜஸ்டிஸ் பென் கூறுகிறார்.
எரிமலையில் இருந்து கிளம்பிய புகையும் சாம்பலும் பூமியில் வாயு மண்டலத்தின் வெப்பநிலையை திடீரென அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாக நிலவாழ் உயிரினங்கள் குறிப்பாக பெரிய வடிவமுடையவை மூச்சு முட்டி உயிரிழந்தன. கடல்வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் ஆக்சிஜன் குறைவே காரணம். ஆனால் இது மற்றொரு விதத்தில் சம்பவித்தது.
வெப்பநிலை உயர்ந்ததுடன் கடல்வாழ் உயிரினங்களின் பசி அதிகமானது. இதனால் இவற்றின் ஆக்சிஜன் பயன்பாடு அதிகரித்தது. படிப்படியாக கடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. கடல்வாழ் உயிரினங்களும் ஆக்சிஜன் கிடைக்காமல் பெருமளவில் கொல்லப்பட்டன. கரையிலும் கடலிலும் முக்கியமாக பெரிய உடலமைப்பு உடைய உயிரினங்களே இத்துயர சம்பவத்தில் கொல்லப்பட்டவை. பெர்மியன் ட்ரையாசிக் காலகட்டத்தில் இருந்த வெப்பநிலை விரைவில் வரவிருக்கும் வெப்பநிலையும் ஏறக்குறைய சமமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
இதை அடிப்படையாக வைத்து பூமியில் நிகழப் போகும் வெப்பநிலை உயர்வு மூலம் ஏற்படவுள்ள பிரச்சனைகளை கணினி மாதிரிகள் உதவியுடன் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். ட்ரையாசிக் காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களின் மாதிரிகள் மூலம் வரப் போகும் பூமியின் உயரும் வெப்பநிலையில் ஏற்படப் போகும் சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
25 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான அதே சூழ்நிலை வருங்காலத்தில் ஏற்படப் போகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ட்ரையாசிக் காலத்தில் சைபீரியா எரிமலையில் இருந்து உமிழப்பட்ட புகை சாம்பலுக்கு சமமான அளவில் புதைபடிவ எரிபொருட்கள் உமிழும் பசுமைக்குடில் வாயுக்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது. இன்று உள்ள நிலையில் கார்பன் டை ஆக்சைடு உட்பட உள்ள வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்தால் பூமியில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியர்ஸ் வரை உயரும்.
2100ல் பூமி
இது நிலம் மற்றும் கடலில் வாழும் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கடலில் உயிரினங்களின் ஆக்சிஜன் பயன்பாடு 70% அதிகரிக்கும். கடலின் அடித்தட்டில் 40% பகுதிகளில் ஆக்சிஜன் சிறிதும் இல்லாத நிலை உண்டாகும். பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள காலநிலையே இந்த நிலை உருவாகும்போது துருவப் பகுதிகளிலும் இதே சூழல் ஏற்படும். ட்ரையாசிக் யுகத்தில் இருந்தது போல கடலில் பூமத்திய ரேகைப் பகுதிகளில் வாழும் உயிரினங்களில் சில துருவப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்து நிலைமையை சமாளித்து வாழும்.
ஆனால் துருவப்பகுதி உயிரினங்கள் இந்த காலநிலையுடன் பொருந்தி வாழ முடியாமல் அழிவை சந்திக்கும். 2100 ஆகும்போது ட்ரையாசிக் காலத்தில் இருந்த புவி வெப்பநிலையின் 25% வெப்ப உயர்வை பூமி நேரிடும். 2300ல் இது 35 முதல் 50% வரை அதிகரிக்கும். இந்த சமயத்தில் ஆக்சிஜன் குறைவு உட்பட்ட பாதிப்புகளை உயிரினங்கள் அனுபவிக்க ஆரம்பிக்கும். அச்சமூட்டும் இந்த ஆய்வு முடிவுகள் மனிதன் திருந்த உதவுமா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
கண்ணெதிரே நிகழும் காலநிலை மாற்றம் மனிதர்களுக்கு பலவிதங்களில் முன்னெச்சரிக்கை விடுக்கிறது. அதில் ஒன்றே இந்த மூழ்கிக் கொண்டிருக்கும் குட்டித் தீவு.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் மேரிலாந்து கிறிஸ்பி துறைமுகத்தில் இருந்து 30 கி மீ தொலைவில் அமைந்துள்ள குட்டித் தீவு டான்ஜியர் தீவு (Tangier island).
1850 முதல் சமீபகாலம் வரை இத்தீவின் 67% நிலப்பரப்பும் கடல் நீரில் மூழ்கி விட்டது. 2010 அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அப்போது இங்கு 727 பேர் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று இத்தீவின் மக்கள்தொகை வெறும் 400 பேர் மட்டுமே. மணற்திட்டுகள் அதிகமுள்ள இத்தீவு 2051 ஆகும்போது கடலில் முற்றிலும் மூழ்கிவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.1967ம் ஆண்டிற்குப் பிறகு தீவின் உயரமான இடங்கள் அதிகரிக்கும் கடல் நீரில் அதிகமாக மூழ்கத் தொடங்கின என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. தீவின் மூன்றில் இரண்டு பகுதி குறைவான காலத்திற்குள் வேகமாக மூழ்கியது. இங்கு கடலோரப் பிரதேசங்களுடன் இணைந்துள்ள பகுதிகள் 2030 ஆகும்போது சதுப்புநிலங்களாக மாறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மீன் பிடித்தலை முக்கியத் தொழிலாகக் கொண்ட இத்தீவு மக்கள் இன்று வாழும் நிலப்பகுதி வரும் முப்பதாண்டுகளில் சதுப்பு நிலமாக மாறும்போது சொந்த வீடு வாசல்களை இழக்க நேரிடும். நாநூறு பேரை குடிபெயரச் செய்ய வேண்டும் என்றாலும் கூட இவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு தொழிலைத் தேட வேண்டும். கடல்நீர் மட்டம் உயர்வதைத் தடுக்க கடல் சுவர் எழுப்பி வீடுகளை உயரமாகக் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் விரைவாக உயரும் கடல்நீர் தீவை ராட்சச வேகத்தில் விழுங்குகிறது. இதனால் இத்திட்டம் நிறைவேற்ற இயலாத ஒன்றாகி விட்டது.
மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் தீவை கடல்நீரின் ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் நல்ல பலன் ஏற்படும் என்று வெர்ஜீனியா வனத்துறை (Virgenia Department of Forestry) அதிகாரிகள் நம்புகின்றனர்.
உவர் தன்மை உடைய கடலோரப் பிரதேசங்களை காக்க ஓக் உள்ளிட்ட மரங்களை நட்டு வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்காக 150 மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெறுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கடல்நீர் மட்டம் உயர்கிறது. காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை அனுபவிக்கிறோம். எங்கோ இருக்கும் டான்ஜியர் என்ற ஊர் பேர் தெரியாத இந்த குட்டித்தீவு மூழ்கினால் நமக்கென்ன என்று இனியும் நம்மால் இருக்க முடியாது. ஏனென்றால் இது இயற்கை மனித குலத்திற்கு விடுக்கும் அதிதீவிர முன்னெச்சரிக்கை. எல்லாவற்றையும் போல இதையும் நாம் அலட்சியம் செய்தால் பெரும் துயரங்களை சந்திக்க தயாராக வேண்டியிருக்கும். இப்போதும் சூழல் சீரழிவைக் குறைக்க உருப்படியாக எதுவும் செய்யாமல் இருந்தால் வரும் சில பல பத்தாண்டுகளில் உலகம் கடலிற்குள் மூழ்கிப் போய்விடும். எச்சரிக்கை!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
செயற்கைக்கோள் தரவுகளின் உதவியுடன் ஆய்வாளர்கள் டெல்லியில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பில் இடங்கள் பூமிக்கடியில் புதையும் ஆபத்து உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். மிதமிஞ்சிய நிலத்தடி நீரின் சுரண்டல் நகரத்தின் சில பகுதிகளை நிலத்திற்கடியில் அமிழ்த்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பகுதி டெல்லி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு வெறும் 800 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
நீரைச் சுரண்டினால் நிலம் தாழ்ந்து போகும்
நிலம் தாழ்ந்து போவது என்பது அதிக முக்கியத்துவம் தரப்படாத ஒரு புவியியல் நிகழ்வாகவே உலகம் முழுவதும் இன்றும் கருதப்படுகிறது. இது உலகளவில் பல நாடுகளிலும் காணப்படுகிறது. பூமியில் இருந்து தாதுக்கள், எண்ணை, வாயு மற்றும் நீரை மிதமிஞ்சிய அளவில் சுரண்டும்போது மண்ணிற்குள் ஏற்படும் மாற்றங்களால் இவ்வாறு நிகழ்கிறது. மண் வளமிழந்து சுருங்குதல், நிலநடுக்கம், மண்ணில் உள்ள படிமங்கள் மிகக் குறைவாக இருப்பது போன்ற இயற்கைக் காரணங்களாலும் இது நிகழலாம்.
உறிஞ்சி எடுக்கும் நீரால் உலகம் தாழ்ந்து போகிறது
உலகில் 80% இடங்களிலும் நீர் அளவிற்கு அதிகமாக பூமியில் இருந்து சுரண்டி எடுக்கப்படுவதால் நிலம் தாழ்ந்து மண்ணில் புதைகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் (U S Geological Survey) கூறுகிறது. மண்ணில் நீர் சேகரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் (aquiters) நீர்த்துளிகளுக்கு இடையில் இருக்கும் களிமண் துகள்கள் நெகிழ்ச்சி அடைகின்றன. மெல்ல மெல்ல இது நிலம் தாழ்ந்து போகக் காரணமாகிறது.விண்ணில் இருந்து ஆய்வு
பாம்பே இந்தியத் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் ஜெர்மனியின் புவி அறிவியல் ஆய்வு மையம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து நடத்திய ஆய்வுகளில் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பகுதி பூமிக்கடியில் வேகமாகப் புதைந்து கொண்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
ஆண்டிற்கு ஆண்டு புதையும் டெல்லி
2014-16 காலத்தில் இது ஆண்டிற்கு 11 செமீ என்ற அளவில் இருந்தது. அடுத்த இரண்டாண்டுகளில் இது 50% அதிகரித்தது. இது ஆண்டிற்கு 17 செமீட்டராக உயர்ந்தது. 2018-19 ஆண்டில் இந்நிலை அதிக மாற்றம் இல்லாமல் தொடர்ந்தது. இந்தப் பேராபத்தை எதிர்கொள்ளும் பகுதிகள் அணைத்திலும் டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் காப்பஷிரா (Kapashera) என்ற இடமே மிக ஆபத்தான நிலையில் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
விமான நிலைய நிலப் பாதுகாப்பு
விமான நிலையம் அமைந்துள்ள நிலப்பகுதியில் பூமிக்கு அடியில் ஏற்படும் இடையூறுகளால் அங்கு உள்ள நிலப் பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு வலுவான தரைப்பகுதி அமைய வேண்டியது அவசியம் என்று இ டி எஸ் ஆர் சி (ETSRC) எதிர்கால உட்கட்டமைப்பு மற்றும் சூழல் மாற்றங்களைத் தாக்குப் பிடிக்கும் வகையில் அமைந்த, மாறிவரும் உலகிற்கான கட்டிடக்கலை ஆய்வு மையத்தின் முனைவர் பட்ட விஞ்ஞானியும், ஆய்வுக்குழுவினரில் ஒருவருமான டாக்டர் ஷகான் கார்க் (Dr Shagun Garg) கூறுகிறார்.
கோலாலம்பூர் எடுத்துக்காட்டு
கோலாலம்பூர் விமான நிலையம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு டாக்சிகள் செல்லும் வழிகள் நிலத்திற்கடியில் புதைந்துள்ளன. மண் படிதல் ஒரு இடத்தில் தாழ்ந்து மற்றொரு இடத்தில் அதிகமானதால் நீர் தேங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் டெல்லி விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் சாலைகளின் நிலையை இடைவிடாமல் கண்காணிப்பது அவசியம் என்று ஆய்வுக்குழு பரிந்துரைக்கிறது.
மற்றுமொரு ஆபத்து
டெல்லி விமான நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்திருக்கும் மஹிபால்பூர் (Mahipalpur) என்ற இடத்தில் 2014-16 காலத்தில் ஆண்டிற்கு 15 செமீ என்ற அளவில் பூமி புதையுண்டது. இது 2016-18 காலத்தில் ஆண்டிற்கு 30 செ.மீட்டராக உயர்ந்தது. இதே அளவு ஆண்டிற்கு 50 செ.மீட்டர் என்ற அளவில் 2018-19 காலத்தில் அதிகரித்தது.
நீரின் தேவை
பெருகும் மக்கட்தொகை, நகரமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் ஆகியவை நீர்த்தேவையை அதிகரிக்கச் செய்கிறது. இது நீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. தேவைக்கும் பற்றாக்குறைக்கும் இடையில் ஒரு நாளைக்கு 750 மில்லியன் லிட்டர் என்ற அளவில் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பான குழாய் நீர் வசதி இல்லை. இதனால் இவர்கள் தங்கள் அன்றாட நீர்த்தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பி வாழ்கின்றனர்.
கட்டுப்பாடுகள் இல்லாத நகரமயமாக்கம்
சில இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் தரையில் இருந்து 120 மீட்டர் ஆழத்தில் தாழ்ந்து போயுள்ளது. இந்நிலை டெல்லியின் கட்டுப்பாடற்ற நகர விரிவாக்கத்தால் மேலும் சிக்கலடைகிறது. இதனால் நகரின் நீர் இருப்பு உள்ள இடங்கள் நீர் சேமிக்கும் ஆற்றலை இழக்கின்றன. இது தவிர கான்க்ரீட் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் நகரம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. மழைநீர் நிலத்திற்கடியில் இறங்க முடியாமல் போகிறது.
மழைநீர் அறுவடை
மழை நீர் அறுவடை இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லி ஜூலை முதல் செப்டம்பர் வரை சராசரியாக ஆண்டிற்கு 611 மிமீ மழை பெறுகிறது. இதை சேமிப்பதால் தேவைக்கும் பற்றாக்குறைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்க முடியும். தாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். நிலத்தடி நீரின் மட்டம் உயர்வதால் நிலம் தாழ்ந்து புதையும் ஆபத்து குறையும்.
நிலத்தடி நீருக்குக் கட்டணம்
இந்திய நீர்வள மையம் (Central Water authority) 2018 டிசம்பரில் நிலத்தடி நீரை வீட்டு மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்காக பூமியில் இருந்து பெற கட்டணம் விதித்தது. இது நீர்மட்டம் தாழ்ந்து மோசமாக இருக்கும், மோசமான மற்றும் சுமாராக நீர் வளமுள்ள இடம் என்று இடத்திற்கேற்றவாறு வசூலிக்கப்படுகிறது. என்றாலும் இதில் இருந்து சொந்த வீடு மற்றும் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் விவசாய நோக்கங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரத் தீர்விற்கு முக்கியத்துவம்
ஆட்சியாளர்கள் பிரச்சனை வந்த பின் சமாளிப்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நிலம் தாழ்ந்து அதனால் ஏற்படப் போகும் அபாயம் உள்ளபோது இதற்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. வீடும், வீதிகளும், இடங்களும், நகரமும் நிலத்திற்கடியில் புதைவது மெதுவாக நிகழ்கிறது என்றாலும் உலகம் முழுவதும் இது பில்லியன் கணக்கான டாலர் இழப்புகளை ஏற்படுத்துகிறது.
உட்கட்டமைப்பு, தெருக்கள், கட்டிடங்கள், பாதாள சாக்கடை போன்ற பூமிக்கடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வசதிகளை நாசமடையச் செய்கிறது. மழைக் காலத்தில் நீர் தேங்குதல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களையும் உருவாக்குகிறது. பூமிக்கடியில் நீர் சேமிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த விரிவான புவி நீரியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
மத்திய நீர்வள வாரியம், இந்திய புவி நிலவியல் கழகம், நகர்ப்புற அமைச்சரகம் ஆகியவை இணைந்து இதற்கு நிரந்தரத் தீர்வு காண விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். மண்ணிற்கடியில் தாழும் இடங்கள் குறித்த புரிதல் அவசியம். பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் இருக்கும் கட்டிடங்களின் உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர் சுரண்டலிற்கு எதிரான சட்டங்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பாதிப்பு அதிகமுள்ள இடங்கலில் உடனடியாக மழைநீர் அறுவடைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. நத்தை வேகத்தில் நிகழ்ந்தாலும் நாட்டின் தலைநகரிற்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்சனையை உடனடியாக கவனிக்காவிட்டால் நாளை டெல்லி என்றொரு நகரை பூமிக்கடியில் இருந்து அகழ்வாய்வு செய்தே கண்டுபிடிக்க வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
- கொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா?
- உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்
- அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா?
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு
- மனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்
- நிறையும் எடையும் ஒன்றா?
- ட்ரம்ப் குடும்பம் காலப்பயணம் செய்கிறார்களா?
- சீராகி விரும் ஓசோன் ஓட்டை
- உயிரின் தோற்றம் (அணு மரபணுவான கதை)
- ஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம்
- வெள்ள பாதுகாப்பு
- முதலாளித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டில் அறிவியல்
- ஆறாவது பேரழிவு
- இந்தியாவில் மழைப்பொழிவு
- நீர்வள மேலாண்மை
- மனித நாகரிகத்தின் முழுமையான அழிவைத் தவிர்ப்பது கடினமே