கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றத்தின் விளைவாக பூமியில் அண்டார்க்டிக்கா மிகப் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. இது போதாதென்று பல ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் அதன் சூழலை மேலும் மோசமாக்குகிறது. இந்த நிலநடுக்கங்களுக்கு புவி வெப்ப உயர்வுடன் நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும் இவை அங்கு உள்ள மிக முக்கியமான பனிப்பாறைகளை மேலும் ஆபத்தான நிலைக்கு ஆளாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
விழித்துக் கொண்ட எரிமலை
பல நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு எரிமலை வெடித்துச் சிதறியதால் இந்த நிலநடுக்கங்கள் ஏற்படத் தொடங்கின. அண்டார்க்டிகாவின் அடிப்பகுதியில் இந்த எரிமலை அமைந்துள்ளது. இதனால் எரிமலை வெடிப்பின் காட்சிகள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் எரிமலை அண்டார்க்டிகாவை அதன் அதிர்வுகளால் பாதித்துள்ளது. இது 2020 ஆகஸ்ட் முதல் தொடங்கி இதுவரை சுமார் 85,000 அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது 2020 நவம்பரில் முடிவிற்கு வந்தது.
பூமியில் இது போன்ற எரிமலைகள் பல பகுதிகளில் காணப்படுகின்றன என்றாலும் இப்பகுதியில் ஒரு எரிமலையுடன் தொடர்புடைய தொடர் அதிர்வுகள் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் முதல்முறையாக அங்கு நிகழ்ந்துள்ளன. பூமியின் மேலோட்டுடன் சேர்ந்தே இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலையில் இருந்து லார்வா வலிமையுடன் மேற்பரப்பிற்கு வருவதே இத்தொடர் அதிர்வுகளுக்குக் காரணம்.
பூமி தோன்றியதில் இருந்து அதன் சரித்திரத்தில் அதிஅபூர்வமாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதனால் மனித ஆயுளில் அண்டார்க்டிக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள இந்நிகழ்வைக் காண்பது ஓர் ஆய்வாளர் என்ற நிலையில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று இது பற்றி ஆராயும் ஆய்வுக்குழுவின் தலைவர் சிமோன் சிஸ்கா கூறுகிறார். ஜி எஃப் எஸ் என்ற ஜெமன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே அண்டார்க்டிகாவில் நில அதிர்வுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
கடலின் அடித்தட்டில் இருந்து கணக்கிட்டால் ஏறக்குறைய 900 மீட்டர் உயரமுடைய எரிமலையே ஓர்க்கா சீ மவுண்ட். இந்த எரிமலை இப்போதுதான் முதல்முறையாக செயல்படத் தொடங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்டார்க்டிக்காவின் வடமேற்கு முனையில் டிரான்ஸ்ஃபீல்டு ஸ்ட்ரைட் என்ற பகுதியில் இது அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் இந்த எரிமலை மீண்டும் விழித்துக் கொள்ளக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஃபோனிக்ஸ் என்ற புவியின் தட்டு அண்டார்க்டிக்கா தட்டுடன் சேரும் பகுதியில் இது அமைந்துள்ளது. புவித்தட்டுகள் ஒன்று சேர்வதால் இப்பகுதியில் எண்ணற்ற விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இப்பிளவுகளே எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட லார்வாவை அதிக அளவில் வெளியில் கொண்டு வந்தது. இதனால் நில அதிர்வுகள் உருவாகின்றன. மூன்று மாத நீண்ட தொடர் அதிர்வுகளுக்குப் பிறகு அதிர்வுகள் மெல்லக் குறையத் தொடங்கி பின்னர் மறைந்து போயின.
எதிர்பாராமல் திடீரென்று வெடிக்கத் தொடங்கி பின்னர் மெதுவாக எரிமலையின் அதிர்வுகள் நின்று போனதன் பின்னால் இருக்கும் காரணங்களை ஆய்வாளர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர். லார்வாவின் சக்தி வாய்ந்த வெளியேற்றத்தினால் வெளியில் இருக்கும் பிளவுகள் பெரிதாகி விட்டன. இதனால் லார்வா பூமியின் மேலோடு பகுதியில் உருவாக்கிய பாதிப்பின் தாக்கம் குறைந்தது. படிப்படியாக அதிர்வுகளும் நின்றுபோயின என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ரிக்டர் அளவுகோலில் 6 வரை பதிவான நில அதிர்வுகள் எரிமலை திடீரென்று செயல்படத் தொடங்கியதால் உண்டானது என்று கருதப்படுகிறது. புவிவெப்ப உயர்வினால் ஆர்க்டிக் அண்டார்க்டிக் பனிக்கண்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் அண்டார்க்டிக்காவில் நிலநடுக்கம் அதிர்வுகள் மேலும் பூமியை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது.
துருவப்பகுதியில் பனிப்படலங்கள் உருகும் செய்திகள் அதிகரித்துவரும் சமயத்தில் எரிமலை என்ற பேராபத்தும் சூழலைக் காக்க மனிதன் உடனடியாக செயல்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
இயற்கையைக் காக்க பூமியின் 1.2% நிலப்பரப்பை பாதுகாத்தால் போதும். இதன் மூலம் உலகின் அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. நிலப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட நிலங்களை இலக்குடன் விரிவடையச் செய்தால் பூமியில் இருந்து முற்றிலும் மறையும் அபாயத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், இரு வாழ்விகள், தாவரங்களை அழியாமல் பாதுகாக்கலாம்.
அர்ஜெண்டினா முதல் பாப்புவா நியூ கினி வரை உள்ள 16,825 இடங்களை ஆய்வுக்குழுவினர் ஆராய்ந்தனர். வேறெங்கும் காணப்படாத தாவரங்கள், விலங்குகள் வாழும் இந்த இடங்களை வரும் ஐந்தாண்டுகளில் திட்டமிட்டு பாதுகாத்தால் அவை அழிவதில் இருந்து அவற்றை மீட்கலாம். “வட அமெரிக்காவில் உள்ள சிவாவன் பாலைவனத்தில் காணப்படும் பேயோடு கேப்டஸ் (peyote cactus) என்ற பூக்கும் தாவரம் வாழிடம் சுருங்கிய நிலையில் வாழ்கிறது. வாழிடப் பரப்பின் குறைவு, அல்லது எண்ணிக்கை குறைவு போன்றவற்றால் பூமியில் இன்று காணப்படும் பெரும்பாலான உயிரினங்களும் மிக அரிதானவையே” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் ரிசால்வ் (Resolve) என்ற சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளருமான டாக்டர் எரிக் டைனஸ்ட்டைன் (Dr Eric Dinerstein) கூறுகிறார்.
இயற்கையின் எல்லா அம்சங்களையும் மனிதர்கள் பாதுகாக்க வேண்டியதில்லை. அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் சூழல் மண்டலங்களை மேலாண்மை செய்தல், உயிர் பன்மயத் தன்மையை அழியாமல் காப்பது மனிதன் வாழ இன்றியமையாதது. இது பூமியில் உள்ள பாதி நிலப்பகுதியை பாதுகாத்தால் உயிர் பன்மயத்தன்மை அழிவை தடுத்து நிறுத்தலாம். பூமி மீண்டும் வளம் பெறும்.
கார்பன் சேமிப்பு அதிகமாகும் என்று 2020ல் நடந்த ஆய்வுகள் கூறின. இத்தகைய பகுதிகள் கண்டிப்பாக சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் (Conservation imperatives) என்று சூழலியலாளர்கள் அழைக்கின்றனர். இத்தகைய 38% இடங்கள் இப்போடுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
பாதுகாக்கப்பட்ட இடங்களின் விரிவாக்கம்
இவற்றில் பாதி பிலிப்பைன்ஸ், பிரேசில், இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் கொலம்பியாவில் உள்ளன என்று அந்த ஆய்வு கூறியது. உலகின் 16.6% நிலப்பரப்பு மற்றும் உள்நாட்டு நீர்வழிகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த பத்தாண்டிற்குள் இயற்கையின் அழிவை பெருமளவு குறைக்க முடியும் என்று ஐநா சூழல் அமைப்பு கூறுகிறது. 7% பாதுகாக்கப்பட்ட இடங்களை முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால் மிக ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் வாழிடம் அழிவில் இருந்து தப்பிக்கும்.
குறிப்பிட்ட இடங்களைப் பாதுகாக்க வரும் ஐந்தாண்டில் 29 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணித்துள்ளனர். இந்த இடங்களின் மொத்த பரப்பு 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர். நிலப்பகுதிகளை வாங்குதல், ஆதிவாசிகளின் உரிமைகளை விரிவாக்குதல், அரசுக்கு சொந்தமான இடங்களில் பாதுகாக்கப்பட்ட இடங்களை உருவாக்குதல் போன்ற பல கூட்டு நடவடிக்கைகள் மூலம் இந்த இலட்சியத்தை அடையலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செயற்கைக்கோள் மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இரு வாழ்விகள், தாவரங்களின் உலகளாவிய தரவுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உயிரினங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் வெப்ப மண்டல பகுதிகள், புல்வெளிப் பிரதேசங்கள், மித வெப்ப மண்டல பகுதிகள், அகண்ட இலையுள்ள மரக் காடுகள் மற்றும் துந்திரப் பகுதிகளில் உள்ளன.
“இந்த ஆய்வு உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பற்றி அறிய பெரிதும் உதவும். 30% நிலப்பகுதியை பாதுகாத்தால் மட்டும் போதாது. அப்பகுதிகளின் தரம், இருக்கும் இடம் போன்றவையும் முக்கியமானது” என்று உலகளவில் பாதுகாக்கப்பட்ட இடங்களின் கண்காணிப்புக்கு பொறுப்பான ஐநா சூழல் திட்டத்தின் உலகளாவிய சூழல் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் நீல் பெர்ஜஸ் (Prof Neil Burgess) கூறுகிறார்.
நம்மை வாழ வைக்கும் உயிரினங்களை பாதுகாப்போம். பூமியை காப்போம். அதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
கென்யாவின் டர்க்கானா மக்கள் மரபணு ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் மோசமான சூழலிலும் தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. இவர்களில் காணப்படும் மரபணு மாற்றங்கள் குறைந்த அளவு நீர் மற்றும் இறைச்சி நிறைந்த உணவுடன் எவ்வாறு வாழ்கின்றனர் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
தீவிர காலநிலை நிலவும் வடக்கு கென்யாவில் ஆப்பிரிக்க, அமெரிக்க ஆய்வாளர்கள் டர்க்கானாவில் செயல்படும் ஒரு சமூக அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட ஆய்வில் முக்கிய மரபணு ரீதியான தகவமைப்பின் மூலம் அதி தீவிர வெப்பநிலை, நீர்ப் பற்றாக்குறை, குறைவான பயிர் வளர்ப்பு உள்ள இப்பகுதியில் மேய்ச்சலை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த மக்கள் இங்கு வாழ்கின்றனர் என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த சூழல் நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் இவர்களிடம் ஏற்படுத்திய இயற்கைத் தேர்வால் இத்தகைய மரபணு தகவமைப்பு காணப்படுகிறது என்று சயன்ஸ் (Science) இதழில் இது பற்றி வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை விவரிக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளில் மனித மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றம் பற்றி இந்த ஆய்வு விளக்குகிறது.
“டர்க்கானா மற்றும் சஹாரா பாலைவனத்தின் தெற்கில் உள்ள துணை சஹாரா பகுதியில் வாழும் மக்களின் மரபணு ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. வரலாற்று ரீதியாக ஆதிவாசி மக்கள் இந்தத் துறையில் குறைவாகவே பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றனர்” என்று ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரும் கென்யா மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (Kenya Medical Research Institute (Kemri)) முனைவர் பட்ட மாணவருமான சார்ல்ஸ் மியானோ (Charles Miano) கூறுகிறார்.
முழுமையான 366 மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு இயற்கைத் தேர்வின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழு மில்லியன் மரபணு வேறுபாடுகள் ஆராயப்பட்டன.
டர்க்கானா ஆரோக்கியம் மற்றும் மரபணுவியல் திட்டத்தின் (THMP) கீழ், கெம்ரி, டர்க்கானா வடிநிலப் பகுதி கழகம் (Turkana Basin Institute (TBI), டென்னஸி வாண்டர்பில்ட் (Vanderbilt) பல்கலைக்கழகம், கலிபோர்னியா பெர்க்லி (Berkeley) பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வுகள் நடத்தின. இதில் எட்டு டிஎன்ஏ பகுதிகளில் இயற்கைத் தேர்வு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் சிறுநீரகங்களில் வெளிப்பட்ட எஸ்டிசி1 (STC1) என்ற மரபணு மனிதர்கள் அதி தீவிர சூழலில் வாழத்ட் தேவையான தகவமைப்பைத் தருகிறது. இறைச்சி, இரத்தம் ஆகியவற்றில் அதிகம் உள்ள புயூரின் (Purine) அடங்கிய உணவுகள் பதப்படுத்தப்படுவதால் இந்த மரபணு நீரிழப்பை ஏற்படுத்துகிறது. புயூரின் என்பது டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ-வின் கட்டுமானத் தொகுதிகளாக உள்ள ஒரு கரிம வேதிப்பொருள்.
பியூரின் அதிகமுள்ள உணவுகளும் மக்களின் வாழ்வும்
இது இயற்கையாக நம் உடலில் உற்பத்தியாகிறது. இறைச்சி, கடல் உணவுகள், பீர் போன்ற சில உணவுப் பொருட்களிலும் இது காணப்படுகிறது. மரபணு உருவாக்கத்திற்கு உதவுகிறது. அடினோசின் ட்ரைபாஸ்பேட், குவானோசின் ட்ரைபாஸ்பேட் போன்ற மூலக்கூறுகளில் இது உள்ளது. செல் ஆற்றள் வழங்குதல், சமிக்ஞை பரிமாற்றம், வளர்சிதை மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடலில் உருவாகும் யூரிக் அமிலம் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு, சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், அல்லது சிறுநீரகங்களால் போதுமான அளவு வெளியேற்றப் படவில்லையென்றால் அதன் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது. அதிகப்படியான யூரிக் அமிலம் மூட்டுகளில் ஊசி போன்ற படிகங்களாகப் படிந்து, வீக்கம், சிவத்தல் மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இதனால் முடக்குவாதம் உண்டாகிறது.
இது பெரும்பாலும் பெருவிரலில் தொடங்குகிறது. சிறுநீரகங்களில் படிந்து தீவிர நிலையில் சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்துகிறது. புயூரின் அதிகமுள்ள இறைச்சி, இரத்தம் மக்களின் முக்கிய உணவு. உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றான இப்பகுதி வடக்கு கென்யாவின் பெரும் பரப்பில் அமைந்துள்ளது. டர்க்கானாவில் மர நிழல்கள் அரிது. நீர் என்பது அதை விட அரிது.
கணிக்கமுடியாத குறுகிய கால மழை, குடிநீர், கால்நடை, ஒட்டகங்கள், ஆடுகளுக்கு நீர் தேடியலைவது மக்களின் அண்றாட வேலை. நீருக்காக பசுமைப் பரப்புகளற்ற பகுதிகள் வழியாக பல மைல் தேடல். 70 முதல் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு விலங்குகளின் பால், இரத்தம், இறைச்சி ஆகியவையே முக்கிய உணவு மூலம். மேய்ச்சல் தொழில் செய்பவர்களின் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க இந்த உணவுகளே உதவுகின்றன.
பயிர்கள் வளராத, கால்நடையாக நடந்து சென்று உணவைப் பெற இயலாத அளவு தொலைதூரத்தில் சந்தைகள் அமைந்துள்ள இத்தகைய சூழலுள்ள இடங்களில் உலகம் முழுவதும் வாழும் மக்கள் சமூகங்களில் இந்நிலை பொதுவாக காணப்படுகிறது. என்றாலும் பல ஆண்டுகளாக ஆரோக்கியத்தை மதிப்பிட டர்க்கானா மக்களின் வாழ்க்கை முறை, இரத்தம், சிறுநீர் மாதிரிகள் ஆவணப்படுத்தப்பட்டன. பியூரின் அதிகமுள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் முடக்குவாதம் இவர்களிடையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.
தகவமைப்பு என்ற பாதுகாப்பு கவசம்
“மதிப்பிடப்பட்ட சுமார் 90% மக்கள் நீரிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆரோக்கியத்துடன் இருந்தனர். இந்த மக்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றிவருவதால் மிக அசாதாரணமான மனித பறிணாமத்தை இவர்களை ஆராய்வதன் மூலம் அறிய முடிகிறது” என்று திட்டத்தின் இணைத் தலைமை ஆய்வாளர்களில் ஒருவரும் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக பேராசிரியருமான ஜூலியன் ஏரோல்ஸ் (Prof Julien Ayroles) கூறுகிறார்.
இப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மரபணு ரீதியான தகவமைப்பு தோன்றியது. இதனால் வடக்கு ஆப்பிரிக்கா வறண்ட பகுதியாக மாறியது. இதனுடன் இணைந்து நிகழ்ந்த இயற்கைத் தேர்வு இத்தகைய சூழலில் வாழ சாதகமான நிலையை இங்கு வாழும் மக்களிடம் உருவாக்கியது என்று நம்பப்படுகிறது.
காலநிலை மாற்றத்திற்கேற்ப எமது மூதாதையரில் ஏற்பட்ட மரபணு பரிணாமம் இத்தகைய சூழலில் அவர்களை எவ்வாறு தகவமைத்துக் கொண்டு வாழ வைத்தது என்பதை இந்த ஆய்வு விவரிக்கிறது” என்று ஆரோக்கியம் மற்றும் கழிவு மேலாண்மைக்கான டர்க்கானா கவுண்டி பொறுப்பாளர் டாக்டர் எப்பம் எசக்கன் (Dr Epem Esekon) கூறுகிறார்.
ஆனால் இங்கு வாழும் மக்களில் பலர் சிறிய மற்றும் பெரிய நகரங்களை நோக்கி இடம்பெயர்வதால் அவர்களை நாட்பட்ட நோய்களில் இருந்து இதுவரை காப்பாற்றி வந்த தகவமைப்பு கவசம் அழியும் ஆபத்தில் உள்ளது. இந்த நிகழ்வு பரிணாம பொருத்தமின்மை (evolutionary mismatch) என்று அழைக்கப்படுகிறது. பரிணாம மாற்றத்தால் ஏற்படும் தகவமைப்பு மாற்றத்தால் இது ஏற்படுகிறது. ஆழமான பரிணாம வரலாறு விரைவான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
மரபணுவில் பொதிந்துள்ள தகவல், செயலாக மாற உதவும் மரபணு வெளிப்பாடுகள், உயிரி அடையாளங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது நகரங்களில் வாழும் மக்களிடையில் முன்கூட்டியே உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கான மரபணு வெளிப்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மரபணு சமநிலையின்மை இவர்களுக்கும் கிராமங்களில் வாழும் இவர்களின் உறவினர்களுக்கும் இடையில் உள்ளதை இது காட்டுகிறது.
நகர வாழ்க்கை தரும் நோய்கள்
நகரச் சூழ்நிலையில் உணவு, நீர் இருப்ப்பு, செயல்பாடுகள் முற்றிலும் வேறானது. பாரம்பரியமான மேய்ச்சல் வாழ்வில் இருந்து நகர வாழ்விற்கு மாறிய மக்களைப் புரிந்துகொள்வது இவர்களுக்கான வருங்கால நலத் திட்டங்களை உருவாக்க உதவும். வேகமான சூழல் மாற்றங்களை சந்தித்துவரும் உலகில் இந்த மக்களின் கதை உள்ளுணர்வு மற்றும் நடைமுறையிலான கண்ணோட்டத்தை உலகில் உள்ள மற்ற தலைமுறைகளுக்கு உருவாக்க உதவும்.
காலநிலை மாற்றம் வாழ்விற்கான புதிய சவால்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த மக்கள் வளர்த்து உருவாக்கி வைத்துள்ள வழிமுறைகள் இன்றைய மாறிவரும் சூழ்நிலையில் மதிப்புமிக்க அறிவைத் தரும். ஒரு பத்தாண்டு கால அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டம் அறிவு, மரபணுவியல், சூழலியல், மானுடவியல் விஞ்ஞானிகளின் நிபுணத்துவத்துடன் நடந்தது.
“டர்க்கானா மக்களுடன் திறந்த மனதுடன் இணைந்து செயல்பட்டது பரவசமூட்டும் ஒரு அனுபவம்” என்று கெம்ரி சமூக ஆய்வுத் துறையின் இணை இயக்குனரும் இணை தலைமை விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் சாஸ்பெட்டர் என்கோஸா என்ஜெரு (Dr Sospeter Ngoci Njeru) கூறுகிறார். இவர்களின் சூழல், வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் பற்றி அறியப்பட்ட விவரங்கள் நம் உண்மையான உலக உயிரியல், வாழ்வியல் கோட்பாடுகளை இணைத்து வகுக்க உதவும்.
“ஆழமான சூழல் மற்றும் பூமியின் மிக வெப்பமான, வறண்ட பகுதிகளில் வாழ உதவும் தகவமைப்பை பற்றி இந்த ஆய்வின் மூலம் கிடைத்த பாடங்கள் காலநிலை மாற்றம் எவ்வாறு தொடர்ந்தும் மனித உயிரியலையும் ஆரோக்கியத்தையும் வடிவமைக்கிறது என்பதை அறிய உதவுகிறது” என்று டர்க்கானா வடிநிலப் பகுதி கழக இயக்குனர் டாக்டர் டினோ மார்ட்டின்ஸ் (Dr Dino Martins) கூறுகிறார்.
இதே சூழல் உள்ள கிழக்காப்பிரிக்காவின் ரெண்டில் (Rendille) , சாம்புரு (Samburu), பொரானா (Borana), மெரில் (Merille), கரமொஜாங் (Karamojong), டொப்போஸா (Toposa) உள்ளிட்ட இடங்களும் இதே போன்ற தகவமைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஆய்வுக் குழுவினர் டர்க்கானா மொழியில் தங்கள் கண்டுபிடிப்புகளை பகிர ஒரு போட்காஸ்ட் (Podcast) ஒலிபரப்பை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
போட்காஸ்ட் என்பது இணையத்தில் பதிவிறக்கம் செய்தால் டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும் ஒரு நிரல். இதில் டிஜிட்டல் ஆடியோ கோப்புகளின் தொடர்கள் இருக்கும். இதை பயனர்கள் தனிப்பட்ட சாதனத்தில் பதிவிறக்கம் செய்து கேட்கமுடியும். அதி விரைவாக நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றத்தால் உருவாகிவரும் நடைமுறை ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் வகையில் அமைந்த வழிகாட்டு ஆலோசனைகளை டர்க்கானா மக்களுக்கு வழங்க ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
காலநிலை மாற்றம் கண் முன் நிகழ்ந்து வரும் இன்றைய சூழலில் டர்க்கானா மக்களின் கதை நமக்கு வழிகாட்டியாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- இயற்கையின் ஆடம்பர விளைவு
- எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மரங்களின் இலைகளும் செயற்கைக்கோள் படங்களும்
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்