கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
ஆழ்கடலில் இத்தாலி சிசிலிக்கு அருகில் மூன்று புதிய எரிமலைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் விஞ்ஞானிகளால் அறியப்படாத பல அதிசயங்கள் இன்னும் உள்ளன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இதனால் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வுகள் ஒரு வார காலம் நடந்தன. முடிவில் உலகின் பல பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து சிசிலிக்கு தென்மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் செயல்படும் இந்த மூன்று எரிமலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவை இன்னும் தீவிரமாக செயல்படுகின்றனவா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. இந்த எரிமலைகள் குறைந்தபட்சம் 6 கிலோமீட்டர் அகலம் உடையவை. சுற்றுப்புற கடற்படுகையில் இருந்து இவை 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.
புதிய கண்டுபிடிப்பும் பழைய எரிமலைக் கூம்புகளும்
இவை 2019ல் ட்ரெப்பானி (Trapani) என்ற சிசிலி பிரதேசத்தில் உள்ள மசார டெல் வாலோ (Mazara del Vallo) என்ற பகுதிக்கும், Agrigento என்ற பிரதேசத்தில் உள்ள சயக்கா (Sciacca) என்ற சிறிய நகரத்திற்கும் இடையில் தேசிய கடல்சார் ஆய்வுக்கழகம் மற்றும் புவி இயற்பியலுக்கான பரிசோதனை மையத்தைச் (National Institute of Oceanography & Experimental Geophysics OGS) சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட எரிமலைக் கூம்புகளுக்கு அருகில் உள்ளன.
The expedition onboard the Meteor was conducted by the University of Malta and OGS. Photograph: M191 (SUAVE)
மத்திய தரைக்கடல் பகுதி பல மில்லியன் ஆண்டுகளாக மனிதர்களால் ஆராயப்படுகிறது. என்றாலும் இப்பகுதியின் ஆழ்கடல் பரப்பு பற்றி மிகச் சிறிதளவு மட்டுமே இன்றும் நம்மால் அறிய முடிந்துள்ளது.
இதனால் இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளின் ஆழ்கடல் ஆய்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று கடல்சார் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாரியோ சிவைல் (Dario Civile) கூறுகிறார்.
இதுவரை ஆராயப்படாத சிசிலியின் ஆழ்கடற்பகுதியில் இந்த ஆய்வுகள் மீட்டியர் (Meteor) என்ற ஜெர்மன் ஆய்வு வாகனத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது எரிமலையில் இருந்து பாறை மாதிரிகள், லார்வா எரிமலைக்குழம்பு படிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த எரிமலைகளில் இப்போது நீரியல் வெப்ப வினைகள் (hydrothermal activities) நடைபெறவில்லை என்றாலும் இவற்றின் வெடிக்கும் இயல்பு பற்றி இப்போதே எதையும் உறுதியாக அறிய முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாறை மாதிரிகள் முதலில் பகுப்பாய்வு செய்யப்படும். எரிமலைகளின் புவி அதிர்வு விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும். இந்த ஆய்வின்போது 100X17 மீட்டர் அளவுள்ள கப்பலின் உடைந்த பகுதியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இது கடலின் 110 மீட்டர் ஆழத்தில் லினோசா (Linosa) என்ற எரிமலையால் உருவான தீவிற்கும் சிசிலிக்கும் இடைப்பட்ட பாதி தொலைவில் பெயரில்லாத கரைப் பகுதி (nameless bank) என்று அழைக்கப்படும் (Banco Senza Nome) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உடைந்த பகுதி பற்றி இப்போது எதுவும் தெரியவில்லை. இதன் காலம் குறித்த விவரங்களை இப்போது அறிந்து கொள்வது கடினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல உலகப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு
இந்த ஆழ்கடல் ஆய்வுகள் மால்ட்டா (Malta) பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் ஆய்வுக்கழகம் மற்றும் ஜெர்மனி கீல் (Kiel) ஜியோமார் ஹெல்ம்ஹோல்ட்ல்ஸ் கடல் ஆய்வு மையம் (Geomar Helmholtz Centre for Ocean Research;MBARI), அமெரிக்காவின் மாண்ட்டரே வளைகுடா நீரியல் ஆய்வுக்கழகம் (Monterey Bay Aquarium Research Institute), நியூசிலாந்து வெலிங்க்டன் விக்டோரியா பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் பர்மிங்ஹாம், ஆக்ஸ்போர்டு, எடின்பரோ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜெர்மனி கீல் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
கடலுக்கு அடியில் நிகழும் எரிமலை வெடிப்புகள் பற்றி அதிகம் அறியப்படுவதில்லை. என்றாலும் நீருக்கடியில் ஒரு மீட்டருக்கும் கூடுதலான உயரத்துடன் இருக்கும் எரிமலைகளின் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவையே உலகம் முழுவதும் நிகழும் 80% எரிமலை வெடிப்புகளுக்குக் காரணமாக உள்ளன.
இப்போது எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் கடந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் சிறு தீவுகள் போல வெளிப்படும். சில சமயங்களில் இவை திடீரென்று கடலின் மேற்பகுதியில் தோன்றி குறுகிய காலத்திற்குள் மீண்டும் கடலுக்கு அடியில் மூழ்கி மறைந்து விடும். இந்த போக்கு இவற்றைத் தீவிரமாக ஆராய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எரிமலை ஏற்படுத்திய போர்ச்சூழல்
இப்போது எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மத்திய தரைக்கடலின் இந்த பகுதிக்கு அருகில் 1831 ஜூலை 18ல் சயக்கா (Sciacca) நகரிற்கு 30 மைல் தொலைவில் ஓர் எரிமலை தீவு ஏற்பட்டது. இதையறிந்த சர் ஹம்ப்ரி லெ ப்ளெமிங் செண்ஹவுஸ் (Sir Humphrey Le Fleming Senhouse) என்ற பிரிட்டிஷ் கடற்படைத் தலைவர் தலைமையில் ஒரு கப்பல் படை இங்கு படையெடுத்து வந்தது. இந்த எரிமலை இருந்த பகுதியைக் கைப்பற்றியது. இதற்கு சர் ஜேம்ஸ் ராபர்ட் ஜார்ஜ் க்ரெயம் (Sir James Robert George Graham) என்ற ப்ரிட்டிஷ் பிரபுவின் பெயரைச் சூட்டியது.
சிசிலியின் அரசராக அப்போது இருந்த இரண்டாவது பெர்டினாண்டு (Ferdinand II) இதை அறிந்து தங்கள் நாடு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை இழந்து விட்டதாக உணர்ந்தார். கோபம் கொண்ட அவர் பிரிட்டிஷார் கைப்பற்றிய பகுதியில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் கொடியை அகற்ற ஒரு படையை அனுப்பினார். அதே நேரத்தில் பிரெஞ்சு படை ஒன்று அப்பகுதிக்கு வந்து அதற்கு ஜியூலியா (Giulia) என்று பெயர் வைத்தது.
இந்த நிகழ்வுகள் மூன்று நாடுகள் ஒரு எரிமலைத் தீவிற்காக போரிடும் சூழலை ஏற்படுத்தியது. ஆனால் இயற்கையே இந்த சச்சரவை சில மாதங்களுக்குள் தீர்த்து வைத்தது. 1831 டிசம்பரில் சிசிலியர்களால் ஐசோலா பெர்டினாண்டியா (Isola Ferdinandea) என்று இரண்டாம் பெர்டினாண்டு அரசரைப் போற்றும் வகையில் பெயரிட்டு அழைத்த இந்த தீவு கடலிற்குள் மூழ்கி காணாமல் போனது.
நவம்பர் 2000ம் ஆண்டில் சிசிலியர்கள் வருங்காலத்தில் பிரிட்டிஷார் இப்பகுதிக்கான இறையாண்மையைக் கோருவதில் இருந்து பாதுகாக்க நீருக்கடியில் மூழ்கிய இந்த எரிமலைப் பகுதியில் இதனுடன் தொடர்புடைய நேப்பிள் பர்பன் (Bourbon) அரச வம்சத்தினரை அழைத்து அவர்கள் முன்னிலையில் ஒரு நினைவுப் பட்டயத்தை நிறுவினர். அதில் “இந்த எரிமலை என்றும் சிசிலியர்களுக்கே சொந்தமானது” என்று பொறிக்கப்பட்டிருந்தது.
கடல் என்னும் அற்புத உலகின் ஆழ்பகுதியில் உயிரினங்கள் மட்டும் இல்லாமல் எரிமலைகள் போன்ற எத்தனையோ இயற்கையின் அதிசயப் படைப்புகள் உள்ளன. இவற்றின் கண்டுபிடிப்பு கடலையும் நிலத்தையும் மனிதன் அறிய, பாதுகாக்க உதவும் பல வியப்பூட்டும் தகவல்களைத் தரும் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
நஞ்சுள்ள புல்வகைப் பட்டாணி (Grass pea) காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைத் தாக்குப் பிடித்து நாளைய உலகின் உணவாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மரபணு எடிட்டிங் அல்லது தேர்ந்தெடுத்த கலப்பின செயல்முறை மூலம் புரதம் நிறைந்த, வறட்சியை சமாளித்து வளரும் நஞ்சற்ற பட்டாணி ரகத்தை உருவாக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் புவி வெப்ப உயர்வால் உலகில் ஏற்படும் பெரும் பட்டினியைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
லாத்திரஸ் சாட்டிவஸ் (Lathyrus sativus) என்ற அறிவியல் பெயருடைய இந்த செடி, உலகின் மிக மோசமான வறண்ட நிலப்பகுதிகளில் வளர்கிறது. கடினமானது , சத்துகள் நிறைந்தது என்றாலும் குணப்படுத்த முடியாத பக்கவாதத்தை குறிப்பாக பலவீனமானவர்களிடம் இந்தப் பயிர் ஏற்படுத்துகிறது. இதனால் இப்பயிர் மற்ற பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும்போது ஒரு தற்காப்புப் பயிராக மட்டுமே வளர்க்கப்படுகிறது. என்றாலும் இதன் நஞ்சினால் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எத்தியோப்பியா மற்றும் அல்ஜீரியாவில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் இப்போது இப்பயிரை ஆராய்ந்து வரும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவால் இதன் நஞ்சிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வெப்பமடைந்து வரும் பூமியில் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு பாதுகாப்பான மதிப்புமிக்க பயிரை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதில் இருந்து கொடுக்க முடியும் என்று நார்ஃபக் (Norfolk) ஜான் இன்னஸ் (John Innes) ஆய்வு மையத்தின் திட்ட விஞ்ஞானி டாக்டர் ஆன் எட்வர்ட்ஸ் (Anne Edwards) கூறுகிறார்.
நஞ்சிற்குக் காரணமானவை
நஞ்சை ஏற்படுத்தும் முக்கிய உயிரி வேதிப்பொருட்கள் பல படிகள் மூலம் கண்டறியப்பட்டன. இதன் சிக்கலான மரபணு வரிசையில் உள்ள பொருட்கள் ஆராயப்பட்டது.
நச்சுத் தன்மையை உருவாக்கும் பொருட்களை அகற்றும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தாவரத்தில் நஞ்சு உண்டாகும் வழிமுறைகள் எவை என்பது தெரிய வந்தது.
புதிய ரகம் நஞ்சு இல்லாமல் உருவாக்கப்பட்டால், அது வறட்சியைத் தாக்குப் பிடிக்க இயலாத பயிராக மாறிவிடக் கூடாது என்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர். உருவாக்கப்பட்ட புதிய ரகம் முற்றிலும் அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே நஞ்சு உடையவையாக இருந்தன. சரிவிகித உணவின் ஓர் அம்சமாக உண்ணப்படும்போது இப்பயிர் பாதுகாப்பானது. ஆனால் மற்ற பயிர்களின் விளைச்சல் குறையும்போது இது மட்டுமே நன்றாக வளர்கிறது. அப்போது இதை முக்கிய உணவாக எடுத்துக் கொண்டால் லாத்தரிஸம் (Lathyrism) என்ற நோய் ஏற்படுகிறது.
இந்த நோயைப் பற்றி முதல்முதலாக கிரேக்க மருத்துவர் ஹிப்பாக்கெரட்டிஸ் (Hippocrates) கூறினார். ஸ்பெயின் ஓவியர் கோயாவின் (Goya) அக்வாட்டின் (aquatin) படம் மாட்ரிட் நகரை நெப்போலியன் கைப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கிறது. இதில் லாத்தரிஸத்தால் ஒரு பெண் நடக்க முடியாமல் அவதிப்படுவதையும், அவளைச் சுற்றி பசியால் வாடும் மக்கள் கூட்டம் நஞ்சுள்ள பட்டாணிக்காகக் காத்திருப்பதையும் காட்டுகிறது.
இருவித்திலை தாவரத்தின் பயன்கள்
இது ஒரு இருவித்திலை தாவரம். இதன் வேரில் வாழும் பாக்டீரியாக்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி அம்மோனியம் கூட்டுப்பொருட்களாக மாற்றுகிறது. இது பிறகு மண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.
இப்பயிர்களின் எண்ணற்ற வேர்கள் அடங்கிய வேர்த்தொகுப்பு மண்ணை ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன. அதனால் இவற்றை மேற்கத்திய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வறண்ட நிலப்பகுதிகளில் வளர்த்தால் பூமியில் மண்ணின் விளைச்சல் திறன் அதிகமாகும்.
நம்பிக்கையூட்டும் பயிர்
வரும் நாட்களில் காலநிலை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வறட்சி, வெள்ளப்பெருக்கு, உப்பு நீரில் பயிர்கள் மூழ்குதல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வளரும் புதிய ரகங்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும்போது, இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாதுகாப்பான புல்வகை பட்டாணி ரகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள நிபுணரும் நாரிஜ் (Norwich) நீடித்த நிலையான வளர்ச்சி மையத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் பீட்டர் எம்ரிச் (Dr Peter Emmrich) கூறுகிறார்.
வெப்ப உயர்வால் இயற்கைப் பேரிடர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பூமியில் பட்டாணியின் இந்த புதிய ரகம் நாளை உலக மக்களின் பசி போக்க உதவும் பயிராகலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
மரங்களால் உருவாக்கப்பட்ட பவளப் பாறைகள் உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிரமிடு வடிவத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரி மரங்களால் ஆக்கப்பட்ட செயற்கை பவளப்பாறை அமைப்புகள் சில கடல்வாழ் உயிரினங்களின் வாழிடத்தை மீட்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. வளமிழந்த கடல் வாழிடங்களை கடலாழத்தில் அமைக்கப்படும் இந்த மர அமைப்புகள் மூலம் உயிர் பெறச் செய்ய முடியும்.
கடல்வாழ் உயிரினங்களில் 25% உயிரினங்களை பவளப் பாறைகள் காப்பாற்றுகின்றன; இந்த உயிரினங்களுக்கு வீடு, உணவு மற்றும் அவை இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்க்க பரந்து விரிந்த வாழிடத்தை கொடுக்கின்றன. பவளப் பாறைகளே நீர்வாழ் சூழலியல் சுழற்சியின் முதுகெலும்பு. 1950களில் இருந்து காலநிலை மாற்றத்தினால் பாதிக்கும் மேற்பட்ட இயற்கை பவளப் பாறைகள் அழிந்து விட்டன. இது கடல்சார் உயிர்ப்பன்மயத் தன்மையை வெகுவாகப் பாதித்துள்ளது.
உயிர்ப் பன்மயத் தன்மையில் நிகழும் இந்த பேரிழப்பைத் தடுக்க உடனடியாக எதுவும் செய்யாவிட்டால் உலகளவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க கடல்வாழ் உயிரின சமூகங்களை மீட்க விஞ்ஞானிகள் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். கடலின் அடித்தட்டில் மரங்கள் மூழ்குமாறு செய்யப்பட்டு செயற்கையான பவளப்பாறை திட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
நெதர்லாந்து கடலில்
இதில் ஒன்று, நெதர்லாந்து வாடன் (Wadden) கடற்பகுதியில் கீழே விழுந்த பேரி மரங்களால் பிரமிடு வடிவில் உருவாக்கப்பட்டு கடலின் அடித்தட்டில் மூழ்கச் செய்யப்பட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட செயற்கை பவளப்பாறை திட்டுகள்.
ஆய்வாளர்கள் இந்த அமைப்புகளை ஆறு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து கண்காணித்தனர். ஆழ்கடலில் ஜெராசிக் காலத்தில் மூழ்கியதாகக் கருதப்படும் மரபாகங்கள் பற்றிய செய்திகள் கிடைத்துள்ளன.
மரங்கள் விலை மலிவானவை. கழிவாக கைவிடப்படுபவை. கான்க்ரீட் அல்லது மூழ்கிய கப்பல் பாகங்களைப் பயன்படுத்துவதை விட மலிவானவை என்பதால் பவளப்பாறை உயிரினங்களை வளர்க்க இவை தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கடல்சார் ஆய்வுக்கான ராயல் நெதர்லாந்து ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும் முனைவர் பட்ட மாணவருமான ஜான் டிக்சன் (Jon Dickson) கூறுகிறார்.
புது வீட்டிற்கு வந்து குடியேறிய உயிரினங்கள்
ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆய்வுக்குழுவினர் இவற்றை ஆராய்ந்தபோது அதில் ஆல்காக்கள், மீன்களின் முட்டைகள் மற்றும் பதினைந்திற்கும் மேற்பட்ட பார்னக்கிள்கள் (Barnacles) போன்ற இடம்பெயராத, ஒரே இடத்தில் நிலையாக வாழும் கடல்வாழ் உயிரினங்கள் (sessile organisms) வாழ்வதைக் கண்டுபிடித்தனர். மர பவளப்பாறை வீடுகள் அமைக்கப்பட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகளில் இருப்பதை விட மூன்று மடங்கு அதிக மீனினங்கள் வாழ்வது தெரிய வந்துள்ளது.
மரபாகங்களால் அமைக்கப்படும் ஆழ்கடல் பவளப்பாறை அமைப்புகளின் உதவியுடன் சில குறிப்பிட்ட பவளப்பாறை உயிரினங்களை மீட்க முடியும் என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளன என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். இத்திட்டத்தை வட கடல் போன்ற உலகின் மற்ற கடற்பகுதிகளில் அமைத்து அழிந்து வரும் உயிரினங்களைக் காப்பாற்றலாம்.
2017ல் மரக்கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை பவளப்பாறை அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டது பற்றிய செய்திகள் வெளிவந்தன. கடலின் அடித்தட்டில் போடப்பட்ட இடத்திற்கேற்ப மரப்பகுதிகளால் பல உயிரினங்கள் கவரப்பட்டன. நெதர்லாந்து மற்றும் வட கடலில் தெளிவான நீர் அமைந்துள்ள கடற்பகுதிகளில் இந்த ஆய்வுகள் விரிவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 200 மீட்டர் ஆழத்திற்கும்
அத்தகைய இடங்களில் கடலின் மேற்பகுதியில் இருந்தே கீழ்பகுதியில் மர அமைப்புகளில் வாழும் மீன் மற்றும் இதர உயிரினங்களுக்கு இவை எவ்வாறு வாழிடத்தை ஏற்படுத்தித் தருகின்றன என்பதை விரிவாக அறிய முடியும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். ஒவ்வொரு 200 மீட்டர் ஆழத்திற்கும் கடலில் வாழும் தாவர விலங்குகள் வேறுபடுகின்றன. இதனால் இந்த முறையை உலகின் எல்லா இடங்களிலும் அமைக்கப்படுவதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் உயிரினங்கள் அழிவில் இருந்து மீட்கப்படும் என்று ஜான் டிக்சன் கூறுகிறார்.
நீர்நாய்கள் உருவாக்கும் பவளப்பாறை அமைப்புகள்
உலகளவில் கடல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நீர்நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றால் உருவாக்கப்படும் பவளப்பாறை அமைப்புகள் (Oister reefs) கடற்சூழலில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து செயல்படுகின்றன. இவை சுற்றியுள்ள நீரை வடிகட்டி சுத்தப்படுத்துகின்றன. பவளப்பாறை உயிரினங்களுக்கு வாழிடம் மற்றும் உணவளிக்கின்றன. சில இடங்களில் புயல்கள், உயரமான அலைகளில் இருந்து உயிரினங்களைக் காப்பாற்றுகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றன. வளமான கழிமுகத் துவாரங்களை பாதுகாக்க உதவுகின்றன.
வட கடலின் தென்பகுதியில் முன்பு நீர்நாய்களால் உருவாக்கப்பட்ட 30% பவளப்பாறைகள் இருந்தன. ஆனால் இப்போது இது வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே உள்ளது. உலகளவில் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்துவரும் நிலையில் அதிக செலவில்லாத சூழலுக்கு நட்புடைய இது போன்ற திட்டங்கள் எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.
கண்ணெதிரில் ஆறாம் இனப்பேரழிவு நிகழும் இன்றைய நிலையில் பவளப்பாறை உயிரினங்களைக் காக்க இது போன்ற உயிர்ப் பன்மயத் தன்மை செயல்முறைகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வருங்காலத்தில் பூமி என்றொரு உயிர்க்கோளம் நீடித்து நிலைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
பார்வைக்கு வெள்ளி போல காணப்படும் லித்தியத்தின் அணு எண் 3. கல் என்று பொருள்படும் லித்தோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து இதற்கு லித்தியம் என்ற பெயர் ஏற்பட்டது. தனிம வரிசை அட்டவணையில் ஆல்கலைல் பிரிவில் உள்ள இது, எடை குறைவான ஓர் உலோகம். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் 5.9 லட்சம் டன் லித்தியம் சேகரம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் உலகில் மிக அதிக அளவில் இதன் சேகரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மின்கலங்களும் லித்தியமும்
பொலிவியா, அர்ஜெண்டினா, சிலி, யு எஸ், ஆஸ்டிரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. அயனி மின்கலங்களின் (ion battery) உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவில் இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில் காஷ்மீரில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சரியான விதத்தில் பயன்படுத்துவது என்பது சவாலான ஒன்று.
2030ல் 12.5 கோடி மின்சார வாகனங்கள் சாலைகளில் ஓடத் தொடங்கும் என்று சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கூறுகிறது. இது தவிர போன், மடிக்கணினி போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளில் இந்த லித்தியம் மின்கலங்கள் உள்ளன.
முந்தைய மின்கலங்களைக் காட்டிலும் இந்த மின்கலங்களைப் பயன்படுத்தி வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும். எடை மிகக் குறைவு. அதிக நேரம் மின்னேற்றம் நிற்கும்.
இந்த காரணங்களால் இவை இப்போது பிரபலமடைந்துள்ளன. மின் தண்டுகளின் (electrodes) உற்பத்தி, செல்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இவற்றின் சிறப்புப் பண்புகள்.
ஆற்றல் கிடைப்பது எவ்வாறு?
ஒரு லித்தியம் மின்கலத்திற்குள் பல செல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் நேர்மின் தண்டு (anode), எதிர்மின் தண்டு (cathode) மற்றும் மின் பகுளி (electrolyte) ஆகியவை உள்ளன. மின்பகுளிக் கரைசல் வழியாக எலக்ட்ரான்கள் நேர்மின் தண்டில் இருந்து எதிர்மின் தண்டிற்குப் பயணம் செய்யும்போது ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது போன்ற பல செல்களை ஒருங்கிணைத்து தேவையான வோல்டேஜை உண்டாக்குவதன் மூலம் இது இயங்குகிறது.
பிரித்தெடுக்கும் முறைகள்
பூமியில் இருந்து தாது மற்றும் உப்பு நீருள்ள குளங்களில் நீரை ஆவியாக்குதல் முறைகள் மூலம் லித்தியம் தோண்டி பிரித்தெடுக்கப்படுகிறது. தாதுவில் இருந்து இதைப் பிரித்தெடுப்பது சிக்கல் நிறைந்தது. உலகில் 145 வகையான தாதுக்களில் லித்தியம் உள்ளது. என்றாலும் இவற்றில் ஐந்து தாதுக்களில் இருந்து மட்டுமே வணிகரீதியில் இது பிரித்தெடுக்கப்படுகிறது.
இதன் தாதுக்கள் ஸ்போடுமின் (spodumene) லெப்பிடோலைட் (lepidolite மற்றும் பெட்டலைட் (petalite) போன்றவை. என்றாலும் பரவலாக ஸ்போடுமின் தாதுவே இதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா உலகில் முதலிடத்தில் உள்ளது. தாதுவில் இருந்து பிரித்தெடுக்கும் முறையைக் காட்டிலும் உப்பு வயல்களில் இருந்து பிரித்தெடுக்கும் முறையே எளிமையானது; பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
உப்பு வயல்களில் இருந்து லித்தியம்
பூமிக்கடியில் இருந்து உவர் நீர் தரையின் மேற்பகுதிக்கு பம்ப் செய்து நிறைக்கப்படுகிறது. ஆவியாக்குவதற்காக அமைக்கப்படும் ஏரிகளில் சேகரித்து வைக்கப்படும் இந்த நீர் சூரியனின் வெப்பத்தால் நீராவியாக மாறுகிறது. அப்போது நீரில் இருக்கும் லித்தியம் உட்பட உள்ள உப்புகள் பிரிந்து வருகின்றன. கால்சியம் ஹைடிராக்சைடின் உதவியுடன் உப்பு நீரில் இருந்து தேவையற்ற பொருட்கள் பல கட்டங்களில் அகற்றப்படுகின்றன.
படிப்படியாக லித்தியத்தின் அளவு அதிகமாகிறது. அப்போது தொடர் வினைகள் மூலம் இந்த உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது.
மதிப்பு
இதன் மதிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. 2021 இறுதியில் ஒரு டன் லித்தியத்தின் விலை 14,000 டாலர். 2022 மார்ச்சில் இது 76,700 டாலராக உயர்ந்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட அர்ஜெண்டினாவிற்கு இந்த உலோகத்தின் சேகரம் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. பிரித்தெடுப்பதற்காக இந்நாட்டிற்குப் படையெடுத்து வந்த வெளிநாட்டுக் கம்பெனிகளை அர்ஜெண்டினா வரவேற்றது. இவை லித்தியம் உற்பத்திக்காக இங்கு 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.
வருமானம் ஈட்டித் தரும் லித்தியம்
கடந்த பத்தாண்டில் இந்நாட்டின் லித்தியம் ஏற்றுமடி வருமானம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. லித்தியம் அயனி மின்கலம் மற்றும் அதன் ஏற்றுமதியில் தென்கொரியா முன்னணியில் உள்ளது. மின்கலங்கள் ஏற்றுமதி மூலம் தென்கொரியாவின் வருமானம் கடந்த பத்தாண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2018ல் மட்டும் மின்கல ஏற்றுமதித் தொழிலின் மூலம் மட்டும் இங்கு 2000 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டன. விரைவில் இது இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிச்சலுகை, பிற சலுகைகள் மற்றும் அயல்நாட்டு ஒத்துழைப்புக் கொள்கையின் மூலம் தென்கொரியா 2030ம் ஆண்டிற்குள் லித்தியம் மின்கலங்களின் உற்பத்தித் தலைநகரமாக மாறத் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2021-22ல் ஐந்து பில்லியன் டாலராக இருந்த லித்தியம் ஏற்றுமதி வருமானம் 2022-23ல் 16 பில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் என்று நம்பப்படுகிறது.
சூழல் பிரச்சனைகள்
பிரித்தெடுத்தல் பெருமளவில் நடக்கும் இடங்களில் வறட்சி அதிகமாக ஏற்படுகிறது. லித்தியத்தைப் பிரித்தெடுக்க நிலத்தின் அடியில் இருக்கும் ப்ரைன் (brine) என்ற உப்பு நீர் மட்டுமே பயன்படுகிறது. உப்பு நீர் நிலத்தின் அடியில் இருந்து மேற்பரப்பிற்கு பம்ப் செய்யப்படும்போது சுற்றிலும் இருக்கும் நன்னீர் அந்த இடத்திற்குச் சென்று நிறைவதே வறட்சி ஏற்படக் காரணம் என்று கருதப்படுகிறது.
ஒரு டன் லித்தியத்தைப் பிரித்தெடுக்க இரண்டு மில்லியனுக்கும் கூடுதலான நீர் தேவைப்படுகிறது. இதனால் மற்ற பல சூழல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
பிரித்தெடுக்கப்படும் இடங்களுக்கு அருகில் இருக்கும் நன்னீர் மூலங்களில் நச்சுத்தன்மையுடைய கழிவுகள் வந்து சேர்கின்றன. இது பிரதேசவாசிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதிக்கிறது. காலநிலை மாற்றம் மற்றும் உலோகத்தைப் பிரித்தெடுக்க பெருமளவில் நீர் ஆவியாக்கப்படுவதால் பெருத்த சூழல் நாசம் ஏற்படுகிறது. உப்பு நீர்த் தடாகங்களின் பரப்பு இதனால் சுருங்குகிறது.
உப்பு நிலங்களில் காணப்படும் டை ஆட்டம் போன்ற ஆல்காக்கள் இப்பகுதியில் வாழும் சிலியன், ஆண்டீஸ் மற்றும் ஜேம்ஸ் பூநாரைகளின் முக்கிய உணவுகளில் ஒன்று. ஆல்காக்கள் இல்லாமல் போவதால் இவற்றின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
பிரித்தெடுக்கப்படும்போது கார்பன் டை ஆக்சைடு உட்பட பல பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சாதாரணமாக மரங்கள் இருப்பதில்லை. இதனால் ஒளிச்சேர்க்கைக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. இது புவி வெப்ப உயர்வுக்கு வழிவகுக்கிறது.
அழியும் வயல்களும் ஆரோக்கியப் பிரச்சனைகளும்
இத்தொழிலிற்காக பெருமளவிலான நிலப்பகுதிகள் பறிக்கப்படுகின்றன. இதனால் வளமான வயல்வெளிகள் நஷ்டமடைகின்றன. இது அந்த நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பாதிக்கிறது. சுரங்கங்களுக்கு அருகில் வசிக்கும் மனிதர்கள், விலங்குகளுக்கு சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படுகின்றன. கந்தக அமிலம், யுரேனியம், மக்னீசியம் போன்ற நச்சு வேதிப்பொருட்கள் அடங்கும் பெருமளவிலான கழிவுகள் வெளித்தள்ளப்படுகின்றன.
இந்தியாவில் லித்தியம்
காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் சேகரத்தை இந்தியப் பொருளாதாரத்தின் பேட்டரி என்று பிரதேச ஊடகங்கள் கொண்டாடுகின்றன. ஆனால் இந்த சேகரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே எல்லாம் அமையும். லித்தியம் சேகரங்கள் பூமியில் அபூர்வமானவை இல்லை. ஒரு சேகரத்தை சுரங்கம் மூலம் எடுக்கும் வகையில் அந்த இடத்தை மாற்றி வணிகரீதியில் லாபகரமாக லித்தியத்தை பிரித்தெடுப்பது ஒரு நாட்டிற்கு முன்புள்ள பெரிய சவால்.
இந்தியாவை விட அதிக பரப்பில் லித்தியம் சேகரங்களைக் கண்டுபிடித்த பல நாடுகள் பிரித்தெடுக்கும் பணிகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. எடுத்துக்காட்டு ஜெர்மனி மற்றும் கனடா. ஆஸ்திரேலியா, சிலி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியையே ஜெர்மனி இப்போதும் நம்பியிருக்கிறது. பிரித்தெடுக்கும் இடங்களை முழுமையாக இயங்கச் செய்ய உள்ள நடைமுறைத் தடைகளே இதற்குக் காரணம்.
தொழில்நுட்பச் சிக்கல்கள் தவிர காஷ்மீரின் நில அமைப்பு, அரசியல் நிலை ஆகியவை அங்கிருந்து லித்தியம் பிரித்தெடுப்பதில் பெரும் சவால்களாக உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள பகுதியில் இருந்தே லித்தியம் சேகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகள்
மின்சார வாகன உற்பத்தித் துறையில் இதன் மூலம் இந்தியா முன்னணி இடத்தைப் பெற முடியும். இது காஷ்மீரில் இப்போது இருக்கும் வேலை வாய்ப்பின்மைக்கு ஒரு தீர்வாக அமையும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். சூழலுக்கும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் லித்தியம் உற்பத்தி செய்யப்பட்டால் இந்தியா வருங்கால உலகின் மின்சார வாகன உற்பத்தியில் தலைமையிடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/lithium-deposits-in-india-1.8574280
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்
- மண்ணிற்கடியில் புதையும் நாட்டின் தலைநகரம்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
- கொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா?