கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
1969 ஜூலை 16. அப்போலோ11 திட்டத்தின்கீழ் விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோர் முதல்முறையாக நிலவில் கால் பதித்து அதன் தரையில் நடந்த நிகழ்வை மனித குலம் வியப்புடன் பார்த்தது. அன்று நடந்த விண்வெளிப் போட்டியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதத்தை நாசா இதற்காக செலவிட்டது. ஆனால் அப்போலோ11 வெற்றிக்கு முன் நிலவுக்கு மனிதரை அனுப்பும் முயற்சியில் அந்நிறுவனம் தோல்வி மேல் தோல்வி கண்டது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பும் இப்போதும்
ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட நிலவுக்கு நேரடியாகச் செல்வதும் தரையிறங்குவதும் இப்போது ஏன் கடினமாக உள்ளது என்பதற்கான சான்றுகளை இதுவரை நடந்துள்ள நிலவுத்திட்டங்களின் தகவல்கள் அளிக்கின்றன. சமீபத்தில் கேப் கெனாப்ரல் ஏவுதளத்தில் இருந்து வல்கன் செண்ட்டா ஏவுவாகனம் (Vulcan Centaur rocket) அதிகாலை இருளைக் கிழித்துக் கொண்டு பெரக்ரீன் (Peregrine) கலனை துல்லியமான பாதையில் செலுத்தியது. இது அதன் கன்னிப் பயணம்.
ஆரம்ப நொடிகளில் இந்த வெற்றி ஏவுதலுக்கு பொறுப்பான United Launch Alliance நிறுவனத்தின் தலைமை அலுவலர் டோரி புருனோ (Tory Bruno) குழுவினரிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் கலனை உருவாக்கிய அஸ்ட்ரோபாட்டிக் (Astrobotic) நிறுவனம் என்ஜினில் எரிபொருள் கசிவதைக் கண்டுபிடித்ததால் கலன் நிலவில் தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் சுழியமாயின.இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி ராக்கெட் விஞ்ஞானமே இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பயணங்களுக்கான அடிப்படையாக இன்றும் உள்ளது. பெரக்ரீன் தோல்விக்கு முன்பு தானியங்கி ஊர்திகளை நிலவுக்கு அனுப்பிய சீனா, இந்தியா, அறுபதாண்டுகளுக்கு முன்பு லூனா9 கலனை வெற்றிகரமாக நிலவில் மென்மையாக தரையிறக்கிய ரஷ்யாவின் 2023 லூனா25, இஸ்ரேலின் பெரிஷீட் (Beresheet), 2023 ஜப்பானின் இஸ்பேஸ் (Ispace போன்ற தனியார் நிறுவனங்கள் மேற்கொண்ட நிலவுப் பயணங்களும் தோல்வியிலேயே முடிந்தன.
“அதிக எடையுடன் இருந்தால் கலன் வெகுதூரம் விண்ணில் பறந்து செல்ல முடியாது. திட்டத்தின் பாதுகாப்பை இது குலைக்கிறது. கலிலியோ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வரிசை போன்ற ஒரு சில அரிய கலன்கள் தவிர பெருவாரியாக உற்பத்தி செய்யப்படாத மற்றவை ஒரே வடிவமைப்புடன் அடிப்படையில் ஒரே மாதிரியான பரிசோதனை முறைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு அவை தானியங்கி முறையில் செயல்படுகின்றன. காரில் பழுது ஏற்பட்டால் நம்மால் அதை சரி செய்துவிட முடியும். ஆனால் விண்வெளியில் இந்த வாய்ப்பு இல்லை” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் ஜேன் வெர்னர் (Jan Wörner) கூறுகிறார்.
“விண்வெளி என்பது வித்தியாசமான தளம். நிலவு அதற்கென்று சொந்தமாக பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. அங்கு பூமியில் இருப்பது போல ஆறில் ஒரு பங்கு வலிமையான ஈர்ப்பு விசை உள்ளது. ஆனால் அதற்கு வளிமண்டலம் இல்லை. குறிப்பிட்ட இலக்கை அடைந்து பாராசூட்டைப் பயன்படுத்தி செவ்வாயில் தரையிறங்குவது போல இல்லாமல் நிலவில் கலன்கள் தரையிறங்க அவற்றின் என்ஜின்களையே அவை முழுமையாக நம்பியுள்ளன. ஒற்றை என்ஜினுடன் சிறிய கலன்கள் நிலவிற்கு அனுப்பப்படும்போது அவற்றின் வேகம் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். என்ஜினில் எரிபொருளை வழங்குவதை ஒழுங்குபடுத்தும் வால்வு உந்துவிசையை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் திறனுள்ளதாக வடிவமைக்கப்பட வேண்டும். வழக்கமான முறையில் என்ஜின் எரியூட்டப்படும்போது நிலையான உந்துவிசையைக் கொடுக்கிறது” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் நிலவு ஆய்விற்கான குழுவின் தலைவர் நீக்கோ டெட்மேன் (Nico Dettmann) கூறுகிறார்.
இயக்கத்தின்போது உந்துவிசையை மாற்றுவது சிக்கல் நிறைந்தது. முதல் நிலவுப் பயணம் 60களில் நிகழ்ந்தது. ஆனால் மனிதன் செல்வதற்கு நிலவு என்பது இன்றும் கடினமான ஒரு இடமாக உள்ளது. இது ஏன் என்பது இன்றும் ஒரு புரியாத புதிர்.
அப்போலோ பயணங்களுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கும் கலன்களின் புகழ் மங்கத் தொடங்கின. 1976ல் சோவியத்தின் லூனா 24 திட்டத்திற்குப் பிறகு 2013ல் சீனாவின் சாங்3 (Chang’e 3) கலன் நிலவில் மென்மையாகத் தரையிறங்கியது. தரை இறங்கும் கருவிகள் பல பத்தாண்டுகளாக உற்பத்தி செய்யப்படவில்லை. மற்றவர்களிடம் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை சுலபமாகக் கற்க முடியாது. பரிசோதனைகள் முக்கியமானவை.
ஏவுவாகனங்கள் திடீர் மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடியவை. அந்நிலையில் விண்கலன்களால் சுயமாக செயல்பட முடியாது. ஆற்றல், உந்துவிசை, வழியறியும் திறன், தகவல் பரிமாற்றம் மற்றும் கருவிகளின் செயல்திறன் மற்றும் ஆய்வுக்கலன்களின் ஆரோக்கிய நிலை போன்றவை ஒரு ஏவுதல் நிகழ்வின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள். என்றாலும் நிலவில் தரையிறங்குவதை உறுதியாக வெற்றி பெறச் செய்யும் தொழில்நுட்பம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மற்ற விண்வெளி செயல்முறைகளைக் காட்டிலும் ஒரு நிலவுப் பயணத்தின் வெற்றிகரமான தரையிறங்கும் நிகழ்வைத் துல்லியமாக தரப்படுத்தி மதிப்பிடுவது கடினம். விண்வெளிப் போட்டி நடந்த காலத்தில் நாசா 25 பில்லியன் டாலர்களை அப்போலோ திட்டங்களுக்காக செலவிட்டது. நிலவை அடையும் முன்பு வரை அதன் பல முயற்சிகளும் தோல்வியைத் தழுவின.
ஆனால் இன்று நிலவுப் பயணங்களில் விண்கலன்களின் வடிவமைப்பு, கட்டமைப்பு, பரிசோதனைகள் போன்ற பல பிரிவுகளில் நாசாவிற்கு எழுபதாண்டு அனுபவம் உள்ளது. வணிகரீதியில் நிலவிற்கான பணிச்சுமை சேவைகள் திட்டத்தின் (Commercial Payloads Services Scheme CLPS) என்ற புதிய திட்டத்தின் கீழ் நாசா தன் செலவைக் குறைத்து கருவிகளை தயாரித்து நிலவிற்கு அனுப்ப அஸ்ட்ரொபாட்டிக், ஹூஸ்ட்டனில் செயல்படும் Intuitive Machines போன்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது.
“இந்த தனியார் நிறுவனங்கள் புதியவை. அனுபவமற்றவை. இதனால் இவற்றின் ஆரம்பகால பயணங்கள் தோல்வியில் முடியும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இவை தோல்வி தரும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கின்றன. அதனால் முதலில் ஏற்படும் ஒரு சில தோல்விகள் காலப்போக்கில் வெற்றிகளைத் தரும்” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வு நிபுணர் டாக்டர் ஜாஷ்வா ரஸரா (Dr Joshua Rasera) கூறுகிறார்.
இந்த வெற்றிகள் நாளை நிலவுப் பயணங்களை சுலபமாக்கும். அப்போது அண்டவெளிக்கு செல்லும் வழியில் மனிதன் ஓய்வெடுத்துத் தங்கிச் செல்லும் இன்ப இடமாக நிலவு மாறும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
சூரிய குடும்பம் இருக்கும் பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் இதயப் பகுதியில் வயதான, புதிரான ராட்சச நட்சட்திரக் கூட்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை சூரியக் குடும்பம் அளவிற்கு தூசுக்களையும் வாயு மேகங்களையும் உமிழ்கின்றன. இக்கண்டுபிடிப்பிற்கு முன்பு பல ஆண்டுகளாக இவை இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக பார்வைக்குப் புலப்படாமல் மறைந்திருந்தன.
ஒரு பில்லியன் நட்சத்திரங்களின் ஆய்வு
கடந்த பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் இரவு வானத்தில் அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி ஒரு பில்லியன் நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தக் கண்டுபிடிப்பு இப்போது நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு வரை இந்த நட்சத்திரக் கூட்டம் புகை மேகங்களாக தூசுக்களையும் வாயுக்களையும் உமிழ்ந்து கொண்டிருந்தது. “ஒரே இடத்தில் நிசப்தமாக இருந்த இவை திடீரென்று பொருட்களை வீசியெறிகின்றன. இவை புதிய வகை நட்சத்திரங்கள். இவை அனைத்தும் விண்வெளியில் ஒரே இடத்தில் திரளாக நமது பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதிக்கு வெகு அருகில் அமைந்துள்ளன” என்று உற்றுநோக்கல் ஆய்வுக்குழுவின் தலைவரும் ஹெர்ட்ஃபெர்ஷெர் (Hertfordshire) பல்கலைக்கழக பேராசிரியருமான பிலிப் லூக்கஸ் (Prof Philip Lucas) கூறுகிறார். அரிதாகக் காணப்படும் புரோட்டோ நட்சத்திரங்களை (Protostar) ஆய்வாளர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்த விண்மீன் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.புரோட்டோ நட்சத்திரங்கள் எனப்படும் நட்சத்திரங்கள் அவற்றின் பெற்றோர் மூலக்கூறு மேகங்களில் இருந்து உருவாகும் இயல்புடைய இளம் நட்சத்திரங்கள். இவை ஸ்டெல்லர் வளர்ச்சி (stelllar growth) என்று அழைக்கப்படும் வளர்ச்சி நிலையை அடைகின்றன. இது ஒரு நட்சத்திரம் உருவாகும் காலத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கிறது. துடிப்புகளுடன் கூடிய இந்த வளர்ச்சி நிலையில் இளம் நட்சத்திரங்கள் சுற்றியுள்ள விண்மீன் உருவாக்கத்திற்கு உதவும் வாயுப் பொருட்களை உரசுதல் மூலம் பெறுகின்றன.
இதனால் இவை திடீரென்று பெரும் ஒளியுடன் பிரகாசிக்கின்றன. ஆய்வின்போது வெடித்தலுடன் கூடிய 32 புரோட்டோ நட்சத்திரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் சில வழக்கத்தை விட நாற்பது மடங்கு அதிக ஒளியுடனும் வேறு சில முன்னூறு மடங்கு அதிக ஒளியுடனும் பிரகாசித்தன. பிரம்மாண்டமான மற்றொரு சிவப்பு நட்சத்திரக் கூட்டத்தை பகுப்பாய்வின்போது ஆய்வாளர்கள் எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடித்தனர். ஆனால் இவற்றில் ஏழு புதிய சிவப்பு பிரம்மாண்ட நட்சத்திரங்கள் (Red giant stars) உள்ளன என்பது மேலும் அவற்றை மிகப்பெரிய ஐரோப்பிய தென்மண்டல தொலைநோக்கியை (European Southern Observatory’s Very Large Telescope) பயன்படுத்தி தீவிரமாக ஆராய்ந்தபோது தெரிய வந்தது. ஆய்வாளர்கள் இவற்றிற்கு ஓல்டு ஸ்மோக்கர்கள் “old smokers” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த விண்மீன்களுக்குள் காணப்படும் நிலையில்லாத தன்மையும் வெப்பச் சலன நீரோட்டங்களும் இவை பெருமளவில் புகையை வெளியிடத் தூண்டுதலாக அமைகிறது. இதனால் இவை ஓல்டு ஸ்மோக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றன. தூசுக்கள் நிரம்பிய இந்த புகை ஒரே திசையில் உமிழப்படுவதாக கருதப்படுகிறது. இது சூரியக் குடும்பம் அளவு பிரம்மாண்டமானது.
மரணமடையும் நட்சத்திரங்களில் இருந்து வெளியிடப்படும் பொருட்கள் உயர் ஆற்றல் கதிரியக்கம் கொண்ட நியூட்ரினோக்கள், அணுக்கள், கரும்பொருட்கள், மின்னூட்டம் பெற்ற துகள்கள், மூலக்கூறுகள், போட்டான்கள் போன்றவற்றை பெருமளவில் நெருக்கமாக அல்லது பரவலாக காணப்படும் பகுதியில் (interstellar space) உமிழப்படும்போது அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகும் விதம் பற்றி அறிய முடியும். இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்று கருதப்படுகிறது.
இவ்வகை நட்சத்திரங்கள் உலோக வளம் அதிகம் உள்ள மற்ற நட்சத்திரக் கூட்டங்களுக்கு கன உலோகங்களை பரவச் செய்ய உதவுகின்றன. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை ராயல் விண்வெளியியல் சங்கத்தின் மாதாந்திர ஆய்விதழில் (the Monthly Notices of the Royal Astronomical Society) வெளியிடப்பட்டுள்ளது.
பூமி மற்றும் சூரிய குடும்பத்தின் தோற்றம், அதன் அமைப்பு மற்றும் வரலாறு போன்றவற்றை நாம் மேலும் சிறந்தமுறையில் புரிந்து கொள்ள, மனிதனின் நாளைய விண்வெளிப் பயணங்களுக்கும் இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பூமிக்கு அப்பால் பிரம்மாண்டமான கடலுடன் உள்ள ஒரு கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வெகுதொலைவில் உள்ள இந்தக் கோளில் இருக்கும் வேதிப்பொருள் இங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ (Leo) நட்சத்திர மண்டலத்தில் உள்ள இதை ஜேம்ஸ் வெஃப் (James Webb) தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
ஹைசியன் கோள்
ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கிக்கு முன்பு இந்த மண்டலத்தை ஹப்பிள் மற்றும் கெப்லர் தொலைநோக்கிகள் ஆராய்ந்தன. குறிப்பிடத்தக்க பல சிறப்புகள் உடைய இதற்கு நாசா விஞ்ஞானிகள் கே2-18 பி (K2-18 b) என்று பெயரிட்டுள்ளனர். பூமியை விட சுமார் ஒன்பது மடங்கு அதிக நிறையுடைய இது ஒரு ஹைடிரஜன் செறிவுள்ள வளி மண்டலத்தையும், நீர் நிறைந்த கடல் மேற்பரப்பையும் கொண்டுள்ளது. இது போன்ற அமைப்பு பூமிக்கு அப்பால் இருக்கும் ஹைசியன் கோள் (Hycean exoplanet) என்று அழைக்கப்படுகிறது.இந்தக் கோளில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் கடலுடன் கூடிய ஓர் உலகிற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்று நாசா கூறுகிறது. ஏராளமான மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு, குறைவான அம்மோனியா ஆகியவை ஹைடிரஜன் செறிந்துள்ள வளி மண்டலத்திற்குக் கீழ் நீர் நிறைந்த ஒரு கடல் இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூமியில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டை மீத்தைல் சல்பைடு (Dimethyl Sulphide DMS) என்ற வேதி மூலக்கூறு கே2-18 பி கோளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இங்கு உயிர்கள் வாழும் சூழல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பூமியில் இந்த வேதிப்பொருள் கடற்சூழலில் பைட்டோ மிதவை உயிரினங்களால் (phytoplankton) உமிழப்படுகிறது. இந்த வேதிப்பொருள் இங்கு இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
வருங்காலத்தில் ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி அனுப்பும் தரவுகளைப் பயன்படுத்தி இந்தப் பொருள் கே2-18 பியில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளதா என்பதை அறிய முடியும் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விண்வெளியியலாளரும் நாசா ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான நிக்யூ மாத்யூஸஃபன் (Nikku Madhusudhan) கூறுகிறார்.
மற்ற கோள்களில் நீர் இருப்பதை நாசா முதல்முறையாக இப்போது கண்டுபிடிக்கவில்லை. முன்பு பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ் (Cygnus) நட்சத்திர மண்டலத்தில் நெப்டியூன் அளவிற்கு இருக்கும் ஹெச் ஏ டி-பி-11பி (HAT-P-11b) என்ற சிறிய கோளை நாசா கண்டுபிடித்தது. இங்கு நீர் ஆவிவடிவில் உள்ளது. கே2-18 பி கோளில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளதா என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றன.
அண்டவெளியில் உயிர்கள் தேடலில் இது ஒரு முக்கிய திருப்புமுனை. வழக்கமாக பூமிக்கு அப்பால் இருக்கும் கோள்களில் உயிர்த்தேடலில் விஞ்ஞானிகள் சிறிய பாறைக்கோள்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால் பெரிய ஹைசியன் உலகங்கள் வளி மண்டல ஆய்வுகளுக்கு உகந்தது. இந்தக் கோள் குளிர்ச்சியான கே2-18 (K2-18) என்ற குள்ள நட்சத்திரத்தைச் (dwarf star) சுற்றிவருகிறது.
வாழிட மண்டலத்தில் இருக்கும் கோள்
பூமியின் சுற்றளவை விட 2.6 மடங்கு அதிகமுடைய இந்தக் கோள் வாழிட மண்டலத்தில் (habitable zone) உள்ளது என்று நாசா கூறுகிறது. அண்டவெளியில் வாழிட மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி திரவ வடிவில் இருக்கும் நீர் நிறைந்த கோள்கள் உள்ள பகுதியைக் குறிக்கிறது. இந்தக் கோள்களின் மேண்டில் பகுதியில் உயர் அழுத்தத்துடன் நெப்டியூனில் உள்ளது போல பனிக்கட்டிகள் இருக்கலாம்.
இவற்றில் அடர்த்தி குறைவான அதிக செறிவுடைய ஹைடிரஜனைக் கொண்ட வளி மண்டலமும் கடற்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் இருக்கலாம். ஹைசியன் உலகங்கள் நீர் உள்ள கடல்களைக் கொண்டதாக உள்ளவை என்று கருதப்படுகின்றன. ஆனால் இந்தக் கோளில் இருக்கும் கடல் உயிர்கள் வாழ இயலாத அளவு வெப்பம் அதிகமுடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இக்கோள் முதல்முதலாக 2015ல் நாசாவின் கே2 திட்டப் பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் வெஃப் தொலைநோக்கியின் உயர்ந்த தொழில்நுட்பத்திறன் இங்கு கடற்பரப்பு இருப்பதை உறுதியாகக் காட்டுகிறது. பூமிக்கு அப்பால் இருக்கும் சிறிய நட்சத்திரங்களின் வளிமண்டலத்தின் சிறிய பகுதிகளைக் கூட இந்தத் தொலைநோக்கி கடந்து செல்லும்போது தெளிவாகப் படம் பிடித்து அனுப்புகிறது. ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கியின் விரிவுபடுத்தப்பட்ட அலை நீளம், உயர்ந்த உணரி தொழில்நுட்பம் மூலம் இந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகியுள்ளன என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த ஹப்பிள் தொலைநோக்கி குறுகிய அலை நீளம் உடையது. இது அனுப்பிய படங்களின் ஒரு மடங்கு துல்லியத் தன்மையுடன் ஒப்பிடும்போது ஜேம்ஸ் வெஃப் அனுப்பும் தகவல்கள் எட்டு மடங்கு அதிக துல்லியத் தன்மையுடன் அமைந்துள்ளன. ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி ஏவப்பட்டதன் ஓராண்டு நிறைவை ஜூலை 2023ல் நாசா பூமிக்கு அருகில் ஒரு நட்சத்திரம் உருவாவதை அந்த தொலைநோக்கி உற்றுநோக்கி அனுப்பிய படங்களை வெளியிட்டுக் கொண்டாடியது.
இந்த தொலைநோக்கி முன்பு எப்போதையும் விட இப்போது வெகு தொலைவில் இருக்கும் உலகங்கள், அவற்றைச் சுற்றி வரும் புதிரான அமைப்புகளின் உயர் தரப் படங்களை அனுப்புவதன் மூலம் மனித குலம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை நெருக்கமாகக் காண உதவியுள்ளது.
வானியலில் இரண்டு அடுத்தடுத்த பொருட்களுக்கு இடையில் வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடு (cusp of death) பகுதியில் இருக்கும் அரிய, இரத்தச் சிவப்புடன் கூடிய நட்சத்திரத்தின் அமைப்பு, 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு தோன்றுவதற்கு முன்பு உருவான நட்சத்திர மண்டலங்கள், விஞ்ஞானிகள் நினைத்திருந்ததை விட பிரபஞ்சத்தைப் பிளக்கும் அளவில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் இருப்பதற்கான சான்று போன்றவற்றின் தகவல்கள் இந்தத் தொலைநோக்கி அனுப்பியவற்றில் அடங்கும்.
இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்தில் அண்டவெளியியல் கோட்பாடுகளையே மாற்றி எழுதக் கூடியவை என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உயிர்கள் வாழ்வதற்கான சூழலை அண்டவெளியில் ஆராயும் மனிதனின் தீவிர முயற்சிகள் என்றும் தொடரும்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/11/nasa-planet-ocean-life-james-webb-telescope?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள விண்கலன் வாயேஜர்1 மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 46 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட கலனில் ஏற்பட்ட பிரச்சனையை பூமியில் இருந்து சரிசெய்ய நாசா பொறியாளர்கள் நடத்திய தீவிர முயற்சிகள் இப்போது வெற்றி பெற்றுள்ளன. நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடம் (JPL) இந்த கலனை உருவாக்கி இயக்கி வருகிறது.
சூரிய குடும்பத்திற்கும் அப்பால்
15 பில்லியன் மைல்கள் அல்லது 24 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் விண்வெளியில் பயணிக்கும் வாயேஜர்1 முதலில் டிசம்பர் 2023ல் பயனில்லாத தகவல்கள் அடங்கிய சமிஞ்ஞைகளை நாசாவிற்கு அனுப்பியது. கலனின் ஆரோக்கியம் மற்றும் அதன் பொறியியல் செயல்பாடுகள் பற்றிய பயனுள்ள விவரங்களை அறிய நாசா ஆய்வாளர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்தனர். கலனில் இருந்து அறிவியல் தரவுகளை மீண்டும் பெறும் தீவிர முயற்சியில் ஆய்வுக் குழுவினர் ஈடுபட்டனர்.கோளாறு ஏற்பட்டிருந்தாலும் இந்த கலன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில் இருந்து இயல்பாக இயங்குகிறது. 1977ல் இது வியாழன் மற்றும் சனி கோள்களை அருகில் சென்று ஆராயும் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. என்றாலும் ஐம்பதாண்டுகள் கடந்த பிறகும் இதன் பயணம் தொடர்கிறது. ஆகஸ்ட் 2012ல் வாயேஜர்1 விண்வெளியில் ஒரு நட்சத்திரத் திரளில் உள்ள இரு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடத்திற்குள் (interstellar space) நுழைந்தது.
சூரிய குடும்பத்திற்கும் அப்பால் பயணிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் ஆய்வுக்கலன் இதுவே. இப்போது இந்த கலன் மணிக்கு 37,000 மைல் அல்லது மணிக்கு 60,821 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.
பழுது சரி செய்யப்பட்ட பின் இது “Hi, it's me. - V1” என்ற செய்தியை விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது. கலனில் இருக்கும் மூன்று கணினிகளில் அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான தரவுகளை பூமிக்கு அனுப்பும் முன்பு தொகுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையே கோளாறுக்குக் காரணம்.
பயனில்லாத விவரங்களை அனுப்பிய, உடைந்த ஒரு சிப் (chip)-ஐ நீக்க முடியாமல் போன போது ஆய்வாளர்கள் குழு அதனை வேறு இடத்திற்கு மாற்றியது. பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை சரிசெய்வது கடினமாக இருந்தது. வாயேஜர்1 மற்றும் அதன் சகோதரி கலன் வாயேஜர்2 ஆகியவற்றில் இருக்கும் கணினிகள் 70 கிலோபைட்டுகளுக்கும் குறைவான நினைவாற்றலை மட்டுமே கொண்டவை.
இது கணினி வெளியீட்டுக் கருவிகள் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் படங்களின் நினைவாற்றலுக்கு சமமானது. தரவுகளைப் பதிவு செய்ய பழைய டிஜிட்டல் நாடாக்களையே இவை பயன்படுத்துகின்றன.
மகத்தான கண்டுபிடிப்புகள்
சமீபத்தில் (ஏப்ரல் 18 2024 அன்று) கலனில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான விவரங்கள் கலனுக்கு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து ஒரு ரேடியோ சமிஞ்ஞை வாயேஜருக்கு சென்றடைய 22.5 மணி நேரமாகிறது. வாயேஜரில் இருந்து வரும் செய்தி பூமியை வந்து அடைய இதே அளவு நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏப்ரல் 20, 2024 அன்று கலனில் இருந்து தகவல்கள் வர ஆரம்பித்தது. இதன் மூலம் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றது என்பதை ஆய்வுக்குழுவினர் உணர்ந்தனர்.
வாயேஜர்1 திட்டத்தின் இந்த வெற்றி பழங்கால கார் ஒன்றில் தொலைதூரத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கு ஒப்பானது. 1977ல் தயாரிக்கப்பட்ட காரில் உள்ள ஒரு சிப் செயல்படாமல் போகிறது. அந்த கார் இப்போது விண்வெளியில் ஒரு நட்சத்திர திரளில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள இடத்தில் 15 பில்லியன் மைல் தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த சூழ்நிலையில் பழுதை சரிசெய்து பயணத்தை தொடரச் செய்வது நாசா மென் பொருள் பொறியாளர்களின் மகத்தான சாதனை என்று விண்வெளிக்கு இரண்டு ஆய்வுக்கலன்களுடன் சென்றவரும், முன்னாள் கனடா விண்வெளியியலாளரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முன்னாள் கமாண்டருமான க்றிஸ் ஹேட்ஃபீல்டு (Chris Hadfield) கூறுகிறார்.
வாயேஜர்1 மற்றும் 2 கலன்கள் சனிக் கோள் பற்றிய விரிவான பதிவுகள், வியாழன் கோளிற்கும் வளையங்கள் உள்ளன, அதன் பல நிலவுகளில் ஒன்றான இயோவில் (Io) செயல் திறனுள்ள எரிமலை செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற விண்வெளி மண்டலத்தில் இருக்கும் கோள்களில் 23 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்தது போன்ற பெரும் பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது.
வாயேஜர்1 மற்றும் 2 ஆகிய கலன்களின் பாதை சூரியனிடம் இருந்து வெகுதொலைவுக்கு விலகிச் சென்று விட்டதால் இவற்றால் சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்தி இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற முடியாது. இதற்குப் பதில் இவை சிதையும் தன்மையுடைய புளூட்டோனியத்தின் இயற்கை ரேடியோ கதிரியக்கத்தில் இருந்து கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு மின்னாற்றலைத் தயாரித்து அதன் மூலம் இயங்குகின்றன.
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
இவை தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் பணிகள் சுமார் பத்தாண்டு காலம் தொடரும் என்று நாசா நம்புகிறது. உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவைப் பொறுத்து இன்னும் பத்தாண்டில் இவற்றுடன் தொடர்பு கொள்ள முடியாத தொலைதூரத்திற்கு இவை சென்றுவிடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறிது மெதுவாக செல்லும் வாயேஜர்2, வாயேஜர்1 கலனுக்குப் பின்னால் பயணிக்கிறது.
சுமார் 40,000 ஆண்டுகளில் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று அருகில் செல்லும். வானியல்ரீதியாக வாயேஜர்1 எர்சா மைனொர் (Ursa Minor) என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு 1.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் பயணிக்க ஆரம்பிக்கும். வாயேஜர்2 இதற்கு சமமான தொலைவில் இருக்கும் ஆண்ட்ரோமீட்டா (Andromeda) என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ராஸ் ராஸ் 248 (Ross 248) என்ற நட்சத்திரத்திற்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது.
நம்மை விட்டு வெகுதூரத்திற்குச் சென்றாலும் மனித குலத்திற்கு இவை ஆற்றிய அரும் பணிகள் என்றும் நினைவுகூரத் தக்கது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/apr/23/voyager-1-transmitting-data-again-after-nasa-remotely-fixes-46-year-old-probe?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்த பார்க்ஸ் தொலைநோக்கி
- நிலவில் வீதிகள்
- சைக்கியை நோக்கி ஒரு பயணம்
- உலகின் காடுகளைக் காக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு - ஜெடி
- வியாழனின் நிலவில் கார்பனின் கடல்
- இரும்பு நிலா
- உயிரின் தோற்றத்தை அறிய உதவுமா பெனு?
- நிலவின் கண்ணாடி மணிகளில் நீர்த்திவலைகள்
- பூமிக்கு வந்த 'பெனு'
- பிரபஞ்சத்தின் 'இருண்ட பக்கங்களை' ஆராயும் 'யூக்லிட்'
- கூரை ஏறி வானம் படிக்கும் விஞ்ஞானிகள்
- காணாமல் போன பூமியின் பயணி
- ஒரு நட்சத்திரம் இரண்டு முகங்கள்
- விண்வெளியில் உயிர்களைத் தேடி பயணிக்கும் 'ஜூஸ்'
- புதிய ஆடையுடன் ஒரு நிலவுப் பயணம்
- விண்வெளியில் தூசுப் புயல்
- விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்