கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பூமிக்கு அப்பால் பிரம்மாண்டமான கடலுடன் உள்ள ஒரு கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வெகுதொலைவில் உள்ள இந்தக் கோளில் இருக்கும் வேதிப்பொருள் இங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ (Leo) நட்சத்திர மண்டலத்தில் உள்ள இதை ஜேம்ஸ் வெஃப் (James Webb) தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
ஹைசியன் கோள்
ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கிக்கு முன்பு இந்த மண்டலத்தை ஹப்பிள் மற்றும் கெப்லர் தொலைநோக்கிகள் ஆராய்ந்தன. குறிப்பிடத்தக்க பல சிறப்புகள் உடைய இதற்கு நாசா விஞ்ஞானிகள் கே2-18 பி (K2-18 b) என்று பெயரிட்டுள்ளனர். பூமியை விட சுமார் ஒன்பது மடங்கு அதிக நிறையுடைய இது ஒரு ஹைடிரஜன் செறிவுள்ள வளி மண்டலத்தையும், நீர் நிறைந்த கடல் மேற்பரப்பையும் கொண்டுள்ளது. இது போன்ற அமைப்பு பூமிக்கு அப்பால் இருக்கும் ஹைசியன் கோள் (Hycean exoplanet) என்று அழைக்கப்படுகிறது.இந்தக் கோளில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் கடலுடன் கூடிய ஓர் உலகிற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்று நாசா கூறுகிறது. ஏராளமான மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு, குறைவான அம்மோனியா ஆகியவை ஹைடிரஜன் செறிந்துள்ள வளி மண்டலத்திற்குக் கீழ் நீர் நிறைந்த ஒரு கடல் இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூமியில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டை மீத்தைல் சல்பைடு (Dimethyl Sulphide DMS) என்ற வேதி மூலக்கூறு கே2-18 பி கோளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இங்கு உயிர்கள் வாழும் சூழல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பூமியில் இந்த வேதிப்பொருள் கடற்சூழலில் பைட்டோ மிதவை உயிரினங்களால் (phytoplankton) உமிழப்படுகிறது. இந்த வேதிப்பொருள் இங்கு இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
வருங்காலத்தில் ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி அனுப்பும் தரவுகளைப் பயன்படுத்தி இந்தப் பொருள் கே2-18 பியில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளதா என்பதை அறிய முடியும் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விண்வெளியியலாளரும் நாசா ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான நிக்யூ மாத்யூஸஃபன் (Nikku Madhusudhan) கூறுகிறார்.
மற்ற கோள்களில் நீர் இருப்பதை நாசா முதல்முறையாக இப்போது கண்டுபிடிக்கவில்லை. முன்பு பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ் (Cygnus) நட்சத்திர மண்டலத்தில் நெப்டியூன் அளவிற்கு இருக்கும் ஹெச் ஏ டி-பி-11பி (HAT-P-11b) என்ற சிறிய கோளை நாசா கண்டுபிடித்தது. இங்கு நீர் ஆவிவடிவில் உள்ளது. கே2-18 பி கோளில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளதா என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றன.
அண்டவெளியில் உயிர்கள் தேடலில் இது ஒரு முக்கிய திருப்புமுனை. வழக்கமாக பூமிக்கு அப்பால் இருக்கும் கோள்களில் உயிர்த்தேடலில் விஞ்ஞானிகள் சிறிய பாறைக்கோள்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால் பெரிய ஹைசியன் உலகங்கள் வளி மண்டல ஆய்வுகளுக்கு உகந்தது. இந்தக் கோள் குளிர்ச்சியான கே2-18 (K2-18) என்ற குள்ள நட்சத்திரத்தைச் (dwarf star) சுற்றிவருகிறது.
வாழிட மண்டலத்தில் இருக்கும் கோள்
பூமியின் சுற்றளவை விட 2.6 மடங்கு அதிகமுடைய இந்தக் கோள் வாழிட மண்டலத்தில் (habitable zone) உள்ளது என்று நாசா கூறுகிறது. அண்டவெளியில் வாழிட மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி திரவ வடிவில் இருக்கும் நீர் நிறைந்த கோள்கள் உள்ள பகுதியைக் குறிக்கிறது. இந்தக் கோள்களின் மேண்டில் பகுதியில் உயர் அழுத்தத்துடன் நெப்டியூனில் உள்ளது போல பனிக்கட்டிகள் இருக்கலாம்.
இவற்றில் அடர்த்தி குறைவான அதிக செறிவுடைய ஹைடிரஜனைக் கொண்ட வளி மண்டலமும் கடற்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் இருக்கலாம். ஹைசியன் உலகங்கள் நீர் உள்ள கடல்களைக் கொண்டதாக உள்ளவை என்று கருதப்படுகின்றன. ஆனால் இந்தக் கோளில் இருக்கும் கடல் உயிர்கள் வாழ இயலாத அளவு வெப்பம் அதிகமுடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இக்கோள் முதல்முதலாக 2015ல் நாசாவின் கே2 திட்டப் பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் வெஃப் தொலைநோக்கியின் உயர்ந்த தொழில்நுட்பத்திறன் இங்கு கடற்பரப்பு இருப்பதை உறுதியாகக் காட்டுகிறது. பூமிக்கு அப்பால் இருக்கும் சிறிய நட்சத்திரங்களின் வளிமண்டலத்தின் சிறிய பகுதிகளைக் கூட இந்தத் தொலைநோக்கி கடந்து செல்லும்போது தெளிவாகப் படம் பிடித்து அனுப்புகிறது. ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கியின் விரிவுபடுத்தப்பட்ட அலை நீளம், உயர்ந்த உணரி தொழில்நுட்பம் மூலம் இந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகியுள்ளன என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த ஹப்பிள் தொலைநோக்கி குறுகிய அலை நீளம் உடையது. இது அனுப்பிய படங்களின் ஒரு மடங்கு துல்லியத் தன்மையுடன் ஒப்பிடும்போது ஜேம்ஸ் வெஃப் அனுப்பும் தகவல்கள் எட்டு மடங்கு அதிக துல்லியத் தன்மையுடன் அமைந்துள்ளன. ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி ஏவப்பட்டதன் ஓராண்டு நிறைவை ஜூலை 2023ல் நாசா பூமிக்கு அருகில் ஒரு நட்சத்திரம் உருவாவதை அந்த தொலைநோக்கி உற்றுநோக்கி அனுப்பிய படங்களை வெளியிட்டுக் கொண்டாடியது.
இந்த தொலைநோக்கி முன்பு எப்போதையும் விட இப்போது வெகு தொலைவில் இருக்கும் உலகங்கள், அவற்றைச் சுற்றி வரும் புதிரான அமைப்புகளின் உயர் தரப் படங்களை அனுப்புவதன் மூலம் மனித குலம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை நெருக்கமாகக் காண உதவியுள்ளது.
வானியலில் இரண்டு அடுத்தடுத்த பொருட்களுக்கு இடையில் வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடு (cusp of death) பகுதியில் இருக்கும் அரிய, இரத்தச் சிவப்புடன் கூடிய நட்சத்திரத்தின் அமைப்பு, 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு தோன்றுவதற்கு முன்பு உருவான நட்சத்திர மண்டலங்கள், விஞ்ஞானிகள் நினைத்திருந்ததை விட பிரபஞ்சத்தைப் பிளக்கும் அளவில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் இருப்பதற்கான சான்று போன்றவற்றின் தகவல்கள் இந்தத் தொலைநோக்கி அனுப்பியவற்றில் அடங்கும்.
இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்தில் அண்டவெளியியல் கோட்பாடுகளையே மாற்றி எழுதக் கூடியவை என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உயிர்கள் வாழ்வதற்கான சூழலை அண்டவெளியில் ஆராயும் மனிதனின் தீவிர முயற்சிகள் என்றும் தொடரும்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/11/nasa-planet-ocean-life-james-webb-telescope?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள விண்கலன் வாயேஜர்1 மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 46 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட கலனில் ஏற்பட்ட பிரச்சனையை பூமியில் இருந்து சரிசெய்ய நாசா பொறியாளர்கள் நடத்திய தீவிர முயற்சிகள் இப்போது வெற்றி பெற்றுள்ளன. நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடம் (JPL) இந்த கலனை உருவாக்கி இயக்கி வருகிறது.
சூரிய குடும்பத்திற்கும் அப்பால்
15 பில்லியன் மைல்கள் அல்லது 24 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் விண்வெளியில் பயணிக்கும் வாயேஜர்1 முதலில் டிசம்பர் 2023ல் பயனில்லாத தகவல்கள் அடங்கிய சமிஞ்ஞைகளை நாசாவிற்கு அனுப்பியது. கலனின் ஆரோக்கியம் மற்றும் அதன் பொறியியல் செயல்பாடுகள் பற்றிய பயனுள்ள விவரங்களை அறிய நாசா ஆய்வாளர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்தனர். கலனில் இருந்து அறிவியல் தரவுகளை மீண்டும் பெறும் தீவிர முயற்சியில் ஆய்வுக் குழுவினர் ஈடுபட்டனர்.கோளாறு ஏற்பட்டிருந்தாலும் இந்த கலன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில் இருந்து இயல்பாக இயங்குகிறது. 1977ல் இது வியாழன் மற்றும் சனி கோள்களை அருகில் சென்று ஆராயும் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. என்றாலும் ஐம்பதாண்டுகள் கடந்த பிறகும் இதன் பயணம் தொடர்கிறது. ஆகஸ்ட் 2012ல் வாயேஜர்1 விண்வெளியில் ஒரு நட்சத்திரத் திரளில் உள்ள இரு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடத்திற்குள் (interstellar space) நுழைந்தது.
சூரிய குடும்பத்திற்கும் அப்பால் பயணிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் ஆய்வுக்கலன் இதுவே. இப்போது இந்த கலன் மணிக்கு 37,000 மைல் அல்லது மணிக்கு 60,821 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.
பழுது சரி செய்யப்பட்ட பின் இது “Hi, it's me. - V1” என்ற செய்தியை விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது. கலனில் இருக்கும் மூன்று கணினிகளில் அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான தரவுகளை பூமிக்கு அனுப்பும் முன்பு தொகுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையே கோளாறுக்குக் காரணம்.
பயனில்லாத விவரங்களை அனுப்பிய, உடைந்த ஒரு சிப் (chip)-ஐ நீக்க முடியாமல் போன போது ஆய்வாளர்கள் குழு அதனை வேறு இடத்திற்கு மாற்றியது. பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை சரிசெய்வது கடினமாக இருந்தது. வாயேஜர்1 மற்றும் அதன் சகோதரி கலன் வாயேஜர்2 ஆகியவற்றில் இருக்கும் கணினிகள் 70 கிலோபைட்டுகளுக்கும் குறைவான நினைவாற்றலை மட்டுமே கொண்டவை.
இது கணினி வெளியீட்டுக் கருவிகள் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் படங்களின் நினைவாற்றலுக்கு சமமானது. தரவுகளைப் பதிவு செய்ய பழைய டிஜிட்டல் நாடாக்களையே இவை பயன்படுத்துகின்றன.
மகத்தான கண்டுபிடிப்புகள்
சமீபத்தில் (ஏப்ரல் 18 2024 அன்று) கலனில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான விவரங்கள் கலனுக்கு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து ஒரு ரேடியோ சமிஞ்ஞை வாயேஜருக்கு சென்றடைய 22.5 மணி நேரமாகிறது. வாயேஜரில் இருந்து வரும் செய்தி பூமியை வந்து அடைய இதே அளவு நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏப்ரல் 20, 2024 அன்று கலனில் இருந்து தகவல்கள் வர ஆரம்பித்தது. இதன் மூலம் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றது என்பதை ஆய்வுக்குழுவினர் உணர்ந்தனர்.
வாயேஜர்1 திட்டத்தின் இந்த வெற்றி பழங்கால கார் ஒன்றில் தொலைதூரத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கு ஒப்பானது. 1977ல் தயாரிக்கப்பட்ட காரில் உள்ள ஒரு சிப் செயல்படாமல் போகிறது. அந்த கார் இப்போது விண்வெளியில் ஒரு நட்சத்திர திரளில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள இடத்தில் 15 பில்லியன் மைல் தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த சூழ்நிலையில் பழுதை சரிசெய்து பயணத்தை தொடரச் செய்வது நாசா மென் பொருள் பொறியாளர்களின் மகத்தான சாதனை என்று விண்வெளிக்கு இரண்டு ஆய்வுக்கலன்களுடன் சென்றவரும், முன்னாள் கனடா விண்வெளியியலாளரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முன்னாள் கமாண்டருமான க்றிஸ் ஹேட்ஃபீல்டு (Chris Hadfield) கூறுகிறார்.
வாயேஜர்1 மற்றும் 2 கலன்கள் சனிக் கோள் பற்றிய விரிவான பதிவுகள், வியாழன் கோளிற்கும் வளையங்கள் உள்ளன, அதன் பல நிலவுகளில் ஒன்றான இயோவில் (Io) செயல் திறனுள்ள எரிமலை செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற விண்வெளி மண்டலத்தில் இருக்கும் கோள்களில் 23 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்தது போன்ற பெரும் பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது.
வாயேஜர்1 மற்றும் 2 ஆகிய கலன்களின் பாதை சூரியனிடம் இருந்து வெகுதொலைவுக்கு விலகிச் சென்று விட்டதால் இவற்றால் சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்தி இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற முடியாது. இதற்குப் பதில் இவை சிதையும் தன்மையுடைய புளூட்டோனியத்தின் இயற்கை ரேடியோ கதிரியக்கத்தில் இருந்து கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு மின்னாற்றலைத் தயாரித்து அதன் மூலம் இயங்குகின்றன.
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
இவை தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் பணிகள் சுமார் பத்தாண்டு காலம் தொடரும் என்று நாசா நம்புகிறது. உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவைப் பொறுத்து இன்னும் பத்தாண்டில் இவற்றுடன் தொடர்பு கொள்ள முடியாத தொலைதூரத்திற்கு இவை சென்றுவிடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறிது மெதுவாக செல்லும் வாயேஜர்2, வாயேஜர்1 கலனுக்குப் பின்னால் பயணிக்கிறது.
சுமார் 40,000 ஆண்டுகளில் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று அருகில் செல்லும். வானியல்ரீதியாக வாயேஜர்1 எர்சா மைனொர் (Ursa Minor) என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு 1.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் பயணிக்க ஆரம்பிக்கும். வாயேஜர்2 இதற்கு சமமான தொலைவில் இருக்கும் ஆண்ட்ரோமீட்டா (Andromeda) என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ராஸ் ராஸ் 248 (Ross 248) என்ற நட்சத்திரத்திற்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது.
நம்மை விட்டு வெகுதூரத்திற்குச் சென்றாலும் மனித குலத்திற்கு இவை ஆற்றிய அரும் பணிகள் என்றும் நினைவுகூரத் தக்கது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/apr/23/voyager-1-transmitting-data-again-after-nasa-remotely-fixes-46-year-old-probe?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
விண்வெளியில் இருந்து அரிய, மிக உயர் ஆற்றலுடைய துகள்கள் பூமியில் வந்து விழுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமட்டராசு ((Amaterasu) என்று பெயரிடப்பட்டுள்ள இத்துகள்கள் விண்வெளியின் வெறுமையான பகுதியில் இருந்து வருவது ஆய்வாளர்களை குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிய புராணத்தில் வரும் அமட்டராசு என்ற சூரிய தேவதையின் பெயரில் அழைக்கப்படும் இத்துகள்கள் இது வரை கண்டறியப்பட்டதில் மிக அதிக ஆற்றலுள்ள காஸ்மிக் கதிர்களில் ஒன்று.
அதிக ஆற்றல் உடைய காஸ்மிக் நிகழ்வுகள் ஏற்படும்போது உண்டாகும் ஆற்றல் ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறும்போது உருவாகும் ஆற்றலை விட அதிகமாக இருக்கும் நிலையில் மட்டுமே இது போன்ற உயர் அளவு துகள்கள் தோன்றுகின்றன என்று கருதப்படுகின்றது. ஆனால் அமட்டராசு துகள்கள் பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் அருகாமை விண்வெளி வெற்றிடத்தில் (local Void) இருந்து உருவாகின்றன.
“இவற்றின் மூலம் (source) மற்றும் துகள்களின் பாதையைக் கண்டறிந்தபோது அப்பகுதியில் இருந்து இது போன்ற உயர் ஆற்றல் துகள் உருவாகத் தேவையான உயர் ஆற்றல் அங்கு எதுவும் இல்லை என்பது புதிராக உள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும் யூட்டா (Utah) பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜான் மாத்யூஸ் (Prof John Matthews) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சயன்ஸ் ஆய்விதழில் வெளிவந்துள்ளது.இந்தத் துகள்கள் 240 எக்ஸா எலக்ட்ரான் வோல்ட்ஸ் (exa-electron volts EeV) ஆற்றல் உடையவை. இவை மணிக்கு 95 மைல் வேகத்தில் பயணிக்கும் ஒரு கோல்ஃப் பந்தின் வேகத்திற்கு சமமானது. பூமியில் இது வரை கட்டப்பட்டதில் உயர் ஆற்றல் உடைய துகள்களை உருவாக்கும் லார்ஜ் ஹைடிரான் கொலைடர் கருவியில் இருந்து வெளிப்படும் துகள்களின் ஆற்றலை விட இவை பல மில்லியன் மடங்கு அதிக ஆற்றல் உடையவை.
1991ல் கண்டுபிடிக்கப்பட்ட, 320 எக்ஸா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் உடைய ஓ-மை-காட் (Oh-My-God) துகளே அதிக ஆற்றலுடைய காஸ்மிக் கதிர் துகள்கள். ஒரு சூப்பர்நோவாவில் இருந்து வெளிவிடப்படும் ஆற்றலை விட இது பல மடங்கு அதிகம். தூண்டப்படும்போது இத்துகள்களைக் கட்டுப்படுத்த அதிக அளவு ஆற்றல், மிக உயர்ந்த காந்த மண்டலம் அவசியம்.
“இந்த உயர் ஆற்றல் காஸ்மிக் கதிரை முதல்முதலாக கண்டுபிடித்தபோது இது தவறான கண்டுபிடிப்பாக இருக்கலாம் என்று நம்ப முடியாமல் இருந்தது. கடந்த முப்பதாண்டில் இந்த அளவு உயர் ஆற்றல் உள்ள துகள்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. மற்றொரு நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் மிக அதிக நிறையுடைய சூப்பர் கருந்துளை இதற்குக் காரணமாக இருக்கலாம். பரந்த வெளிப்பரப்பில் பொருட்கள் அவற்றின் துணை அணு அமைப்புகளாக மாற்றப்படுகின்றன. புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், அணுக்கருக்கள் பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தில் வீசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன” என்று ஜப்பான் ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் ஆய்வாளருமான டாஷிஹிரோ ஃபுயூஜியை (Toshihiro Fujii) கூறுகிறார்.
விண்வெளியில் நடக்கும் அதிதீவிர நிகழ்வுகளின் எதிரொலிகளாக காஸ்மிக் கதிர்கள் நிரந்தரமாக பூமிக்கு மழை போல வந்து கொண்டிருக்கின்றன.
அமட்டராசு துகளைக் கண்டுபிடித்த யூட்டா அதிநவீன வானியல் தொலைநோக்கி (Array observatory) போன்ற கருவிகளின் உதவியுடன் இது போன்ற துகள்களைக் கண்டுபிடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஆற்றல் அளவிற்குக் கீழ் இத்துகள்களின் பாதை ஒரு பின் பந்து இயந்திரத்தில் உள்ள பந்தின் செயல்பாட்டை ஒத்துள்ளது. பின் பால் இயந்திரம் (a pinball machine) என்பது சரிவான பரப்பில் பின்கள் மற்றும் இலக்குகளுக்கு இடையில் உருளும் பந்தைக் கொண்ட ஒரு பொழுதுபோக்கு கருவி.
காஸ்மிக் நுண்னலைகளின் பின்புலத்தில் இவை வளைந்து நெளிந்த பாதையில் பயணிக்கின்றன. நட்சத்திர மண்டலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓ-மை-காட் மற்றும் அமட்டராசு துகள்கள் போன்றவை நட்சத்திரத் மண்டல காந்தப்புலங்களால் பாதிக்கப்படுவதில்லைஎன்பதால் இவற்றின் மூலத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இத்துகள்களின் பாதை வந்த வழியை ஆராய்ந்தால் அது வெற்றிடத்தில் இருந்து தோன்றியதாக உள்ளது.
இது போல ஓ-மை- காட் துகள்கள் உருவான இடத்தை அறியக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. கணிக்கப்பட்டதை விட பெரிய காந்த சிதறலால் இவ்வாறு நிகழலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“விண்ணில் இருந்து பூமிக்கு வந்து விழும் இது போன்றவற்றின் உயர் ஆற்றல் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. விண்வெளியின் வெவ்வேறு இடங்களில் இருந்து இவை வரலாம். இத்துகள்களுக்கு ஒரே ஒரு புதிரான மூலம் மட்டும் இல்லை” என்று ஆய்வுக் கட்டுரை இணை ஆசிரியர் மற்றும் யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஜான் பெல்ஸ் (Prof John Belz) கூறுகிறார்.
யூட்டாவின் மேற்குப் பாலைவனப் பகுதியில் 1,200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆற்றல் தொலைநோக்கி இது போன்ற காஸ்மிக் கதிர்களை அவை உருவாகும் மற்றும் அழியும் நிலைக்கு முன்பே கண்டுபிடிக்கும் திறனுடையது.
இப்பகுதியில் வறண்ட காற்று உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் அமட்டராசு போன்ற துகள்களைக் கண்டுபிடிக்க அவசியமான புற ஊதாக்கதிர் ஒளியை உறிஞ்சிவிடும். ஒளி மாசுள்ள இடங்களில் அதிக ஒலி ஏற்படுகிறது. இது காஸ்மிக் கதிர்களை தெளிவற்றவையாக்குகிறது. மேம்படுத்தப்படும் இத்தொலைநோக்கியில் அமெரிக்கா ரோட் தீவிற்கு சமமான பரப்பில் கதிரியக்கத்தை அயனியாக்கும் சிண்டிலேட்டர் என்று அழைக்கப்படும் ஐநூறு புதிய கருவிகள் பொருத்தப்படும்.
இதன் மூலம் அமட்டராசு துகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். வருங்காலத்தில் அண்டவெளியில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளைக் கண்டறிய இந்த தொலைநோக்கி பெரிதும் உதவும். இதன் மூலம் அண்டவெளியின் ஆழ்பரப்பில் மறைந்திருக்கும் பல இரகசியங்களுக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos), ரிச்சர்ட் ப்ரான்சன் (Richard Branson) போன்ற பெரும் பணக்காரர்கள் தங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க, மகிழ்ச்சியாக இருக்க ஏவுவாகனங்களில் ஏறிச் சென்று விண்வெளியில் சிறிது நேரம் சுற்றி வருவதையே இன்று உலகம் விண்வெளியில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பமாக காண்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் விண்வெளியை வேறுவிதத்தில் பயன்படுத்துவது பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
விண்வெளியில் உற்பத்தி
இந்நிறுவனங்களும் வேறு சில தொழில் முனைவோர் நிறுவனங்களும் கணினி உதிரி பாகங்கள், குருத்தணு செல்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை விண்வெளியில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகின்றன. இது பற்றிய ஆய்வுகள் ஆய்வக நிலையில் இப்போது நடைபெறுகிறது. ஈர்ப்பு விசையற்ற நிலையில் விண்வெளியில் புதிய குருத்தணு செல்கள், மரபணு சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு நாசா இரண்டு மில்லியன் டாலர் நிதி உதவி அளித்துள்ளது.
நார்த்ராப் க்ரமன் (Northrop Grumman) என்ற பாதுகாப்புப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் விண்வெளியில் குறை கடத்திகளை உற்பத்தி செய்ய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தப் பத்தாண்டிண் இறுதிக்குள் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஏதேனும் ஒன்று பூமிக்கு அப்பால் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.“கனரக மற்றும் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் பூமிக்கு வெளியில் இருந்தே இயங்க வேண்டும். இப்போது கேட்க இது ஆச்சரியமானதாக இருந்தாலும் விரைவில் இது நிகழும்” என்று ஜெஃப் பெசோ சி பி எஸ் என்னும் புகழ்பெற்ற செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கேல் கிங்கிடம் (Gayle King) தெரிவித்துள்ளார்.
ஈர்ப்பு விசையற்ற நிலை, குறைவான வெப்பநிலை, துல்லியமான வெற்றிடம் உள்ளிட்ட காரணங்களால் படிகங்கள் போன்ற பொருட்களை பூமியை விட விண்வெளியில் தரமுடையதாக உற்பத்தி செய்ய முடியும்.
“எந்த ஒரு தொழிற்துறை செயல்பாட்டிற்கும் விண்வெளி பூமியை விட சிறந்தது. எல்லாப் பொருட்களையும் எடை உடையதாக மாற்றும் ஈர்ப்பு விசையுடைய ஒரு கோளில் நாம் வாழ்கிறோம். பூமியில் நுண்ணலை அடுப்பு, குளிர்சாதனப்பெட்டி, வெற்றிட பம்புகள் போன்றவை தொழிற்சாலை உற்பத்திக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் வின்வெளிக்குச் சென்றால் இந்த வசதிகள் அனைத்தும் நமக்கு இலவசமாகக் கிடைக்கும்” என்று வேல்ஸில் செயல்படும் விண்வெளி உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான ஸ்பேஸ் ஃபோர்ஜ் (Space Forege) நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் ஜாஷுவா வெஸ்ட்டர்ன் (Joshua Western) கூறுகிறார்.
விண்வெளியில் புதிய மருந்து பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று பல நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன. மெர்க் (Merck) என்ற நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) இணைந்து சுழிநிலை ஈர்ப்புவிசையில் புரதங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்கள் உருவாக்கியுள்ள கிட்யூட்டா (Keytruda) போன்ற புற்றுநோய்க்கான சில மருந்துகளில் பயன்படும் படிகங்கள் பூமியில் உருவாக்கப்படுவதை விட விண்வெளியில் அளவில் சிறியவையாக, சீரானவையாக உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.
பூமிக்கு வெளியில் உருவாக்கப்படும் வளங்களைப் பயன்படுத்தி மருந்துகளை சுலபமாக சேகரித்து வைத்தல், நோய் எதிர்ப்பாற்றல், ஃப்பிப்ரோசிஸ் (fibrosis), இதயக்கோளாறுகள், நரம்பியல் போன்ற பல்வேறு சிகிச்சைப்பிரிவுகளில் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன என்று ப்ரிஸ்ட்டல் மையர்ஸ் ஸ்க்விஃப் (BMS Bristol Myers Squibb)) நிறுவனத்தின் பொருளியல் மற்றும் பொறியியல் துறை இணை இயக்குனர் ராபர்ட் கார்மைஸ் (Robert Garmise) கூறுவதாக ஃபார்மா வாய்ஸ் (Pharma Voice) வணிக நிறுவனத்தின் வெளியீடு தெரிவித்துள்ளது.
“நாசா 2016 முதல் மற்ற வணிக நிறுவனங்களுடன் இணைந்து அருகாமை புவி சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு வெளியில் பொருட்களை உற்பத்தி செய்வது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பூமிக்கு வெளியில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க முடியும்” என்று நாசா விண்வெளி உற்பத்திப் பிரிவின் மேலாளர் கெவின் ஏஞ்சல்பெர்ட் (Kevin Engelbert) கூறுகிறார்.
விண்வெளியில் ஹெச்.ஐ.விக்கு மருந்து
கலிபோர்னியாவைச் சேர்ந்த வார்டா (Varda) விண்வெளி தொழில் நிறுவனம் ரிட்டனாவியா (ritonavir) என்னும் ஹெச் ஐ வி சிகிச்சையில் பயன்படும் வைரஸ் எதிர் பொருள் மருந்தின் படிகங்களை விண்வெளியில் தானியங்கி முறையில் வளர்க்கும் திறன் பெற்ற மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை (capsule) ஜூலை 2023ல் புவி சுற்றுவட்டப்பாதையில் ஏவியது என்று கிஸ்மோடோ (Gizmodo) என்ற தொழில்நுட்ப இணையதளம் கூறுகிறது. இந்த முயற்சிகள் ஒரு தொடக்கம் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2031ல் சர்வதேச விண்வெளி நிலையம் காலாவதியாகி விடும். அப்போது வெறும் ஒரு நீர்க்கல்லறையாக அது பசுபிக் பெருங்கடலில் விழும். அதன் பிறகு நாசா தனியார் விண்கலன்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தத் தொடங்கும். இதன் மூலம் 2031ல் மட்டும் நாசா 1.3 பில்லியன் டாலரை மிச்சப்படுத்த முடியும். “ஆய்வு விண்கலங்கள் அதிக அளவில் விண்வெளிக்குச் செல்வதால் சுற்றுவட்டப்பாதை பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். 2030ம் ஆண்டிற்குப் பிறகு இதற்காக நான்கைந்து தொழிற்பூங்காக்கள் உருவாகும். அந்த காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் சுழிநிலை ஈர்ப்புவிசையில் உற்பத்திக்கு உதவும் வசதிகளை உருவாக்க சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்து செயல்படும் ஸ்பேஸ் டேங்கோ (Space Tango) நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் எஸ் சீட்டா சாண்ட்டி (s Sita Sonty) கூறுகிறார்.
தனியார் நிறுவனங்கள் கலன்களை அனுப்ப சர்வதேச விண்வெளி நிலையத்தை மட்டும் இனி சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. விண்வெளித் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைப் பெருகப் பெருக பூமிக்கு வெளியில் உற்பத்தியாகும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விண்வெளியில் நிலவும் சூழலை பூமியில் செயற்கையாக மனிதனால் உருவாக்க முடியும். நாசா இத்தகைய ஒரு சுழிநிலை ஈர்ப்பு விசை வசதியை ஒஹாயோ க்ளீவ்லாந்தில் அமைத்துள்ளது.
ஆனால் இது போன்ற உட்கட்டமைப்பை நிறுவ ஏராளமான பொருட்செலவு ஆகிறது. “அதிக நிலையங்கள் அமைக்கப்படுவதால் விண்வெளிக்குச் செல்ல ஆகும் செலவு குறையும். சுற்றுவட்டப் பாதையில் குருத்தணு செல்கள், மருந்துப்பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய முடியும்” என்று சாண்ட்டி கூறுகிறார். ஆறு மாதங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வார்டா நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் வில் எக்ஸ் ப்ரூயி (Will X Bruey) கூறுகிறார்.
விண்வெளியை மனிதகுல நலத்திற்காக பயன்படுத்த இத்தகைய புதிய முயற்சிகள் மகத்தான பங்காற்றும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/25/space-manufacturing-zero-gravity?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்த பார்க்ஸ் தொலைநோக்கி
- நிலவில் வீதிகள்
- சைக்கியை நோக்கி ஒரு பயணம்
- உலகின் காடுகளைக் காக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு - ஜெடி
- வியாழனின் நிலவில் கார்பனின் கடல்
- இரும்பு நிலா
- உயிரின் தோற்றத்தை அறிய உதவுமா பெனு?
- நிலவின் கண்ணாடி மணிகளில் நீர்த்திவலைகள்
- பூமிக்கு வந்த 'பெனு'
- பிரபஞ்சத்தின் 'இருண்ட பக்கங்களை' ஆராயும் 'யூக்லிட்'
- கூரை ஏறி வானம் படிக்கும் விஞ்ஞானிகள்
- காணாமல் போன பூமியின் பயணி
- ஒரு நட்சத்திரம் இரண்டு முகங்கள்
- விண்வெளியில் உயிர்களைத் தேடி பயணிக்கும் 'ஜூஸ்'
- புதிய ஆடையுடன் ஒரு நிலவுப் பயணம்
- விண்வெளியில் தூசுப் புயல்
- விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்
- பூமியை சூடாக்கும் நிலா
- கதை சொல்லும் மேகங்கள்