கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
நிலவின் ஒரு துண்டு என்று கருதப்பட்ட, பூமிக்கு வந்த மினி நிலா பூமியை விட்டு மறைகிறது. சூரியனை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியுள்ள, ஸ்கூல் பஸ் அளவுக்கு இருக்கும் 2024 பிடி5 (2024 PT5) என்ற விண்கல் இப்போது பூமியில் இருந்து 2 மில்லியன் மைல் / 3.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பூமியின் மினி நிலா என்று வர்ணிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகே மறையும் இயல்புடைய விண்கல் இது.
விண்கல் மோதிய நிலவு
கடந்த 2024 செப்டம்பர் முதல் விண்வெளியில் உள்ள இது, சூரியனை நோக்கிய தன் மீள் பயணத்திற்கு இப்போது தயாராகி வருகிறது. மீண்டும் இது 2055ல் பூமிக்கு வருகை தரும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலவில் ஒரு ராட்சத விண் பாறை மோதியதால் உருவான இது ஒரு பெரிய பாறைத்துண்டு என்று விண்வெளியியலாளர்கள் கருதுகின்றனர். இது இப்போது நிலவில் இருந்து ஒன்பது மடங்கு தொலைவில் உள்ளது.
இதுவரை இந்த விண்கல் பூமியின் ஈர்ப்புவிசை மண்டலத்திற்கு அருகில் வரவில்லை. என்றாலும் விடைபெற்றுச் செல்லும் இதன் பயணத்தின்போது இது பூமிக்கு நெருக்கமாக 1.1 மில்லியன் மைல் தொலைவுக்கு அருகாமையில் வருகை தரும். ஜனவரி 2025ல் சூரியனின் ஈர்ப்பு விசை ஆழ் விண்வெளிப் பரப்பிற்கு இதை வலிந்து இழுக்கும் முன் இதை ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
33 அடி அகலம் உள்ள இதன் சிறிய அளவும் தொலைவும் இதை ஒருபோதும் வெறும் கண்களால் மனிதரால் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. வலிமை வாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே இந்த வான் பொருளை பார்க்க முடியும். இதை முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் 2024ல் தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹவாய் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கி கண்டுபிடித்தது.
நாசா இதை தனது ஆழ் விண்வெளி வலையமைப்பின் (Deep Space Network) உதவியுடன் கண்காணித்து வருகிறது. அப்போது முதல் இது பூமியின் ஒரு பங்காளியாக உள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளில்லை என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
“பூமி மற்றும் இதன் இயக்கத்தை ஒப்பிட்டு பார்த்து ஒற்றுமைகளை ஆராய்ந்ததில் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு விண்கல் மோதி ஏற்பட்ட தாக்கத்தால் நிலவின் மேற்பரப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு ராட்சத பாறை இது என்று நாசாவின் புவி அருகு பொருட்கள் மைய (NEOs) விஞ்ஞானிகள் கருதுகின்றனர்” என்று விண்வெளி நிறுவனத்தின் கோள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத் திட்டப் பகுப்பாய்வாளர் ஜாஷ் ஹாண்டல் (Josh Handal) குறிப்பிடுகிறார்.
பூமியை விட்டு அகலும் மினி நிலா
“வரலாற்று நிகழ்வுகளாக கருதப்படும் ஏவு வாகனங்களின் பகுதிகள் பூமியின் சுற்றுவட்டப்பாதை போன்ற இத்தகைய பாதைகளில் காணப்படுகின்றன. ஆனால் இந்த விண்கல்லின் இயக்கம் பற்றிய பகுப்பாய்விற்குப் பிறகு 2024 பிடி5 இயற்கையாகத் தோன்றியதே என்று நம்பப்படுகிறது. இது கடந்த இரண்டு மாதங்களாக பூமியை குதிரை லாட வடிவ வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
"சூரியனின் ஈர்ப்புவிசை முழுமையான தாக்கம் செலுத்தும்போது இதன் விசை அதிவேகமாக மாறும். கடந்த 2024 செப்டம்பரில் இருந்ததை விட இதன் வேகம் ஜனவரி 2025ல் இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என்று மாட்ரிட் கம்ப்ளூட்டன்ஸ் (Complutense) பல்கலைக்கழக விண்வெளி இயற்பியலாளர் ரவுல் டெ லாஃப் வெண்டே மார்க்கோஸ் (Raul de la Fuente Marcos) அசோசியேட்டட் ப்ரஸ் நிறுவனத்திடம் கூறினார்.
கலிபோர்னியா மொஹாவி (Mojave) பாலைவனத்தில் செயல்படும் கோல்டு ஸ்டோன் சூரிய மண்டல ரேடார் ஆண்டெனாவின் (Goldstone solar system radar antenna) உதவியுடன் நாசா ஜனவரி 2025ல் ஒரு வார காலம் இந்த விண்கல்லின் பாதையைக் கண்காணிக்கும். சூரியனை வலம் வந்த பிறகு 2055ல் இந்த விண்கல் திரும்பி வரும்போது மீண்டும் ஒரு முறை இது பூமியை தற்காலிகமாக பகுதியளவு மடிப்புடன் சுற்றி வரும்.
விண்வெளியின் ஆழ் பரப்பில் இருந்து வரும் இத்தகைய அதிசய வான் பொருட்கள் சூரியன் மற்றும் பூமியின் வரலாற்றை அறிய நமக்கு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/nov/25/earth-mini-moon-to-disappear?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
தரைப்பரப்பின் மேற்பகுதியில் காணப்படும் பெரும் தாக்கத்தால் உண்டான பள்ளத்தைக் கொண்டிருப்பதால் சனியின் நிலவுகளில் ஒன்று, ஸ்டார் வார்ஸ் படங்களில் ஒன்றில் வரும் இறந்த நட்சத்திரம் போல காணப்படுகிறது. அதன் உடைக்கப்பட்ட மேலோட்டிற்கு கீழ் ஒரு கடல் மறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
(Photograph: Frédéric Durillon/Animea Studio/Observatoire de Paris/IMCCE)
சனியின் நிலவில் கடல்
எதிர்பாராத இந்த கண்டுபிடிப்பு 250 மைல் அகலமுடய பனிக்கட்டி பந்து போன்ற மிமாஸ் (Mimas) என்ற சனியின் இந்த சிறிய நிலவு சனிக்கோளின் டைட்டன் (Titan), என்சலாடஸ் (Enceladus) மற்றும் வியாழனின் ஈரோப்பா (Europa), கனிமீட் ( Ganymede) ஆகிய தனிச்சிறப்பு மிக்க நிலவுகளின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது.
இந்நிலவுகளின் தரைப்பரப்பிற்கு கீழ் கடல்கள் உள்ளன. “இக்கண்டுபிடிப்பு வியப்பூட்டும் ஒன்று. மிமாஸ் நிலவின் பரப்பிற்கு கீழ் ஒரு கடல் மறைந்துள்ளது தெரியாத விதத்தில் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்பை உடைய நிலவு மிக அரிது” என்று பிரான்ஸ் வானியல் மையத்தின் (Observatoire de Paris) விஞ்ஞானி வலேரி லேனி (Valéry Lainey) கூறுகிறார்.
இதன் தனித்துவமான இந்த பண்பிற்கு பனியால் மறைக்கப்பட்ட நீளமான மேலோட்டை பெற்றிருப்பது அல்லது இதனுள் அமைந்திருக்கும் ஒரு உட்கடல் அதன் வெளிப்பகுதியை சுதந்திரமாக மாற அனுமதித்திருப்பது காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாசாவின் கசினி (Cassini) ஆய்வுக்கலனால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பிம்பங்களை பகுப்பாய்வு செய்தபோது ஆய்வுக்குழுவினர் ராட்சச வாயுக் கோளான சனியை வளையமிட்டு சுற்றி வரும் இந்நிலவின் துல்லியமான சுழலும் வேகத்தையும் சுற்று வட்டப் பாதை இயக்கத்தையும் மறுகட்டமைப்பு செய்து ஆராய்ந்தனர்.
மிமாஸின் கடினமான உள்ளமைப்பையும் இதன் வேகத்தையும் சரியான முறையில் விளக்க வழியில்லை என்று லேனி கூறுகிறார். 15 மைல் கனமுடைய பனிப்படலத்திற்கு கீழ் கடலின் அடித்தட்டுக்கு அருகாமை பகுதியில் பல டிகிரி செல்சியர்ஸ் வெப்பமுள்ள, 45 மைல் ஆழமுள்ள கடல் மறைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கடலின் கன அளவு மிமாஸின் கன அளவில் பாதிக்கும் மேல் உள்ளது.
மிமாசில் உயிரினங்கள்
இது குறித்த ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) இதழில் வெளிவந்துள்ளது. வானியல் அளவுகளின்படி மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிமாஸின் கடல், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்பதால் இது ஒரு இளம் வயதுடைய கடலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சனிக் கோளின் வலிமையான அலைகள் பெரும் வேகத்துடன் இந்த நிலவின் மேற்பரப்பை ஒரு ச்குவாஷ் பந்து போல மசாஜ் செய்து வெப்பமுடையதாக மாற்றியுள்ளது.
சூடான இப்பரப்பு அதற்கு மேலிருந்த பனிப்படலத்தால் உருக்கப்பட்டது. இது அங்கு ஒரு கடலை உருவாக்கியது. இதனால் மிமாஸ் நிலவின் மேற்பரப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக ஒரு ராட்சச பள்ளம் உருவானது. இது 1789ல் முதல்முறையாக இந்நிலவை அடையாளம் கண்ட வில்லியம் ஹெர்ஷல் என்ற விண்வெளியியலாளரின் நினைவாக ஹெர்ஷல் பள்ளம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சனி மற்றும் வியாழனின் நிலவுகளில் கடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படுவது விண்வெளியியலாளர்களிடையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலவுகளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை ஆராய பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. வியாழனின் என்சலாடஸ் நிலவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு நீராவி வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தரை மேற்பரப்பில் விரிசல்கள் உருவாகியுள்ளது. இந்த சின்னஞ்சிறிய நிலவில் முன்பு ஒருவேளை உயிரினங்கள் தோன்றியிருந்தால் அந்நிய இடங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய நுண்ணுயிரி இனங்கள் வெந்நீர் ஊற்றுகளில் இருந்து வரும் புகைப்படலத்தால் வெளியே தள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் மிமாஸ் நிலவுக்குச் செல்லும் ஆய்வுக்கலன்கள் அதைக் கண்டுபிடிக்கும்.
“வெப்பமான பாறைகளுடன் தொடர்புடைய நீர் இருப்பதால் மிமாசில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூற்றை மறுக்கமுடியாது. ஆனால் மறைந்திருக்கும் கடல் ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு மட்டுமே தோன்றியதாக இருந்தால் உயிரினங்கள் உருவாக வாய்ப்பில்லை. இதன் வயது பற்றி இன்னும் கண்டறிய முடியவில்லை என்று லேனி கூறுகிறார்.
நம்பிக்கையூட்டும் ஈரோப்பாவும் என்சலாடஸும்
“இந்நிலவில் கடல் தரைப்பரப்பிற்கு கீழ் உள்ளது என்றாலும் இது பூமிக்கு அப்பால் உயிர்களை தேட பெரிதும் உதவும். உயிர்கள் வாழ சாத்தியமான உட்கடலுக்கும் தரைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. என்சலாடஸில் கண்டுபிடிக்கப்பட்டது போல இங்கு உயிர்கள் உள்ளனவா என்று கண்டரியலாம். ஈரோப்பாவிலும் இது குறித்த ஆய்வுகள் நடக்கின்றன” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக புவிக்கோள் அறிவியல் பிரிவு பேராசிரியர் டேவிட் ராதரி (David Rothery) கூறுகிறார்.
இந்த நிலவில் உயிர்கள் வாழும் வாய்ப்பு இருந்தால் அது 20 கிலோமீட்டர் அளவுள்ள உடையாத பனிக்கட்டியால் மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த கடல் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே உருவானது என்றால் உயிர்கள் தோன்ற அது போதுமான காலமாக இருக்காது. ஈரோப்பா மற்றும் என்சலாடஸ் நிலவுகள் மிமாஸை விட நம்பிக்கையூட்டும் நிலவுகளாக உள்ளன என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பூமிக்கு அப்பால் சூரிய குடும்பத்தில் உள்ள பிற கோல்கள், நிலவுகளில் வாழ இயலுமா என்ற விஞ்ஞானிகளின் தேடலுக்கு மிமாஸ் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/feb/07/saturn-death-star-moon-mimas-hidden-ocean?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
இன்றைய ஹோமோசேப்பியன்ஸ் மனித இனத்திற்கு முன்பு பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால்கள் (Neanderthals) காலத்தில் விண்வெளியில் இருந்து வருகை தந்த (C/2023 A3) என்ற விண்கல் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு அருகில் வருகிறது. 2023ன் தொடக்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. சூச்சின்ஷென் அட்லஸ் (Tsuchinshan–Atlas) என்றும் இது அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு 80,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விண்கல் பூமிக்கு அருகில் வருகிறது. இது நீட்டிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுகிறது. நெப்ட்யூனின் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் இருக்கும் ஊர்ட் மேகத்திரளில் (Oort cloud) இருந்து இந்த விண்கல் வருகிறது என்று கருதப்படுகிறது. ஊர்ட் மேகத்திரள் பகுதியில் பனிக்கட்டியால் ஆன விண்கற்கள் நிறைந்துள்ளது. இது சூரியனிடம் இருந்து 2.5 – 2.8 விண்வெளி அலகுகள் தொலைவில் உள்ளது.ஒரு விண்வெளி அலகு என்பது (Au) 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் குறிக்கிறது. இப்பகுதி பனிக்கட்டிகளால் ஆன விண் குப்பைகளைக் கொண்ட பெரிய மலைகள் அளவு அடர்ந்த சுவர்களுடன் கூடிய குமிழ் போன்ற பகுதி. நீண்ட காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் இது போன்ற விண்கற்கள் ஊர்ட் மேகத்திரளில் இருந்தே வருகின்றன என்று நாசா கூறுகிறது.
“பரந்து விரிந்த இந்த விண்கல் ஏறக்குறைய வட்ட வடிவில் சூரியனை சுற்றுகிறது. சூரிய மண்டலம் தோன்றியபோது உருவான பனிக்கட்டிகளால் ஆன எச்சமே இந்த விண்கல்” என்று ராயல் கிரீன்விட்ச் வான் ஆய்வுமைய (Royal Observatory Greenwich) விஞ்ஞானி டாக்டர் க்ரகரி ப்ரவுன் (Dr Gregory Brown) கூறுகிறார். 2024 செப்டம்பர் கடைசியில் சூரியனுக்கு மிக அருகாமையில் வந்த இந்த விண்கல் அக்டோபர் 2024ல் பூமிக்கு அருகில் காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியில் இருந்து 99.4 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும்போது நாசா விஞ்ஞானி மாத்யு டொமினிக் பந்நாட்டு விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கல்லைப் படமெடுத்தார்.
இது போன்ற விண்கற்கள் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது பிரகாசமாகத் தோற்றமளிப்பது போல பூமிக்கு அருகில் வரும்போதும் காட்சியளிக்கின்றன. அதனால் அருகாமைப் பகுதிகளில் இருக்கும்போது மட்டுமே இவை பிரகாசமாகத் தோன்றுவதில்லை. 2024 அக்டோபர் 9ல் இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் தென்படும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியும். வெறும் கண்களால் பார்க்கக்கூடிய பிரகாசமான விண்கற்கள் பூமிக்கு வருவது மிக அரிது.
பூமியின் வட மற்றும் தென் கோளங்களில்
கடந்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகு இத்தகைய ஒன்று பூமிக்கு அருகில் வருகிறது. வெகுதொலைவில் இருந்து வருவதால் பூமிக்கு அருகில் வரும்போது இது எந்த அளவு பிரகாசமாகத் தோன்றும் என்று தெரியவில்லை. பூமியின் வட மற்றும் தென் கோளப்பகுதியில் வாழும் வான் ஆய்வாளர்கள் அக்டோபர் ஆரம்பத்தில் சூரிய உதயத்திற்கு முன்பு கிழக்கு திசையில் செக்ஸ்ட்டன்ஸ் (Sextans) விண்மீன் கூட்டம் இருக்கும் திசையை நோக்கிய பகுதியில் இதைப் பார்க்கலாம்.
சில நாட்களுக்குப்ப் பிறகு இது சூரியனின் மறுபக்கத்திற்கு நகரும். அதனால் அக்டோபர் 13க்குப் பிறகு மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு மேற்கில் போஓட்டீஸ் (Boötes) என்ற விண்மீன் திரளை நோக்கிய திசையில் இதைப் பார்க்கலாம். இது வானில் ஒரு அழுக்குத் தடம் போல காட்சி தந்தாலும் இதன் வால் பகுதியை பைனாகுலர்கள் அல்லது சிறிய வான் தொலைநோக்கிகள் மூலம் காணலாம் என்று ப்ரவுன் கூறுகிறார்.
இந்த விண்கல் பார்ப்பதற்கு அழகானதில்லை. ஆனால் கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் ஒரு வான் பொருளைப் பார்ப்பதன் மூலம் சூரிய மண்டலத்தின் தோற்றம், வரலாறு, பூமியின் கதை போன்ற பல அரிய தகவல்களை நாம் அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
** ** **
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
சூரிய குடும்பத்தில் பூமியை தவிர மற்ற இடங்களில் உயிர்கள் வாழ உகந்த சூழ்நிலை உள்ளதா என்று விஞ்ஞானிகள் பல காலங்களாக ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் சனியின் நிலவுகளில் ஒன்றான என்சலாடஸில் (Enceladus) நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய அங்கு ஆய்வுக்கலன் அனுப்பப்படவுள்ளது.
என்சலாடஸ் என்னும் அதிசய நிலவு
என்சலாடஸ் ஒரு சிறு உலகம். இதன் குறுக்களவு 310 மைல்கள் மட்டுமே. சமீபகாலம் வரை சூரிய குடும்பத்தில் இந்த நிலவு சுவாரசியம் குறைந்த இடமாக கருதப்பட்டது. ஆனால் சூரிய குடும்பத்தில் பூமி தவிர உயிர் வாழத் தகுதி மிக்க இடமாக இந்த நிலவு இப்போது மாறியுள்ளது. சனியைச் சுற்றும் 146 நிலவுகளில் ஒன்றான இங்கு, உயிர்கள் வாழ்வதற்குரிய சூழல் நிலவுவதால் இது விஞ்ஞானிகளை கவர்ந்திழுக்கும் இடமாக மாறியுள்ளது.
Maps of Saturn’s moon Enceladus (Photograph: NASA/JPL-Caltech/Space Science Institute/Cornell University)
பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து இதை ஆராய ரோபாட்டிக் தானியங்கி ஆய்வுக்கலனை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏராளமான பொருட்செலவாகும். ஆய்வுக்கலன் பிரம்மாண்ட தொலைவிற்கு பயணம் செய்ய வேன்டும். என்சலாடஸை சுற்றிவர கலனுக்கு பெருமளவு எரிபொருள் சேமிப்பு அவசியம். பனி மூடிய தரைப்பரப்பில் ஆய்வுக்கலனை இறக்க வேண்டும்.
1789ல் வில்லியம் ஹெர்ஷல் (William Herschel) என்ற விஞ்ஞானியால் என்சலாடஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் இருந்து எப்போதும் சூடான நீர் விண்வெளியை நோக்கி உமிழப்படுகிறது. இதைவிட விஞ்ஞானிகளை வியக்க வைப்பது தோகை போல அலங்கார அமைப்புடன் ஈத்தேன், புரொப்பேன் போன்ற கரிம வேதிப்பொருட்கள் உமிழப்படுவதே. என்சலாடஸின் வெவ்வேறு பரப்புகளில் பனிப்படலங்களின் அடர்த்தி வெவ்வேறாக உள்ளது. துருவப் பகுதிகளில் அடர்த்தி குறைவாக உள்ளது. பாறைப்பரப்புகளில் துளைகள் உள்ளன. இது உவர்தன்மை உள்ள கடல் நீரை உறிஞ்சுகிறது.
சனிக்கோளின் நிறையால் உருவாகும் வெப்ப அலையின் விளைவாக ஈர்ப்பு விசை உராய்வு ஏற்படுகிறது. கடல் நீர்ப் பரப்பில் வெப்பமான இடங்களில் சூடான நீரும் பாறைப் பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன. கடல் பரப்பில் உள்ள பனிக்கட்டிகள் உருகி நீண்ட குறுகலான வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த வெடிப்புகளில் இருந்து வெப்ப நீராவி மற்றும் பொருட்கள் ஆவியாக வெளியேறுகின்றன. என்சலாடஸில் உயிர்கள் வாழ நீர்ம நிலை நீர், கரிமப் பொருட்கள் மற்றும் வெப்ப ஆற்றலுக்கான மூலம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன என்று லண்டன் இம்ப்பீரியல் கல்லூரி விண்வெளியியலாளர் “பேராசிரியர் மிஷெல் டோவட்டி (Prof Michele Dougherty) கூறுகிறார். இது இந்நிலவை ஆராய ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
உயிர் வாழ உதவும் அம்சங்கள்
முன்பு அடுத்த கட்ட விண்வெளி ஆய்வுத்திட்டமாக வியாழன் அல்லது சனியின் ஒரு நிலவிற்கு ஆய்வுக்கலனை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி முகமை திட்டமிட்டது. வியாழனின் பனி மூடிய யூரோப்பா (Europa), ஹைடிரோகார்பன்கள் செறிந்த செவ்வாயின் டைட்டன் (Titan) மற்றும் என்சலாடஸ் நிலவுகளுக்கு கலனை அனுப்ப நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இவை அனைத்திலும் உயிர்கள் வாழ உதவும் துணை நீர்ப்பரப்பு கடல்கள் உள்ளன. நீர் மற்றும் உயிரினங்கள் வாழ அவசியமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்போது என்சலாடஸை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.
2040ல் என்சலாடஸில் தரையிறங்குதல் அல்லது நீர் மற்றும் கார்பன் வேதிப்பொருட்களை தெளிக்கும் வெந்நீர் ஊற்றுகள் வழியாகப் பறந்து செல்லும் இலக்குடன் ஆய்வுக்கலனை ஐரோப்பிய விண்வெளி முகமை ஏவவுள்ளது. “பனி படர்ந்த நிலவுகளில் உயிரினங்கள் வாழ்வது (Biosignatures) பற்றிய முக்கிய தகவல்கள் இதன் மூலம் கிடைக்கும்” என்று போர்ச்சுகல் லிஸ்பன் உயர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (Instituto Superior Técnico) விண்வெளி உயிரியலாளரும் நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் ஜீட்டா மார்ட்டின்ஸ் (Zita Martins) கூறுகிறார்.
என்றாலும் இந்த இலக்குகளை அடைவது சுலபமானது இல்லை. வலிமையான ஈர்ப்பு விசை உள்ள கோள் அல்லது நிலவில் விண்கலனைத் தரையிறக்குவதை விட இது கடினமானது. வலிமையான ஈர்ப்பு விசை இருக்கும் இடங்களில் அந்த விசை விண் கலனின் வேகத்தை குறைத்துவிடும். இதனால் கலனை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். ஆனால் என்சலாடஸ் சிறியது. பலவீனமான ஈர்ப்பு விசை கொண்டது. இதனால் கலனின் வேகத்தைக் குறைக்க ஏராளமான எரிபொருளை செலவிட வேண்டும்.
இல்லையெனில் கலன் ஆழ் விண்வெளிப்பரப்பிற்கு மிதந்து சென்று விடும். 2004-2017 காலத்தில் கசினி (Cassini) ஆய்வுக்கலன் காந்தமானியுடன் சென்று சனி மற்றும் அதன் நிலவுகளை ஆராய்ந்தது. “ஒரு கட்டத்தில் கசினி என்சலாடஸிற்கு மிக அருகில் பறந்தபோது. சனிக்கோளின் காந்தப்புலம் என்சலாடஸால் கவரப்பட்டது. இந்த சின்னஞ்சிறு நிலவுக்கு வளிமண்டலம் இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது” என்று காசினி திட்டத்தின் தலைமை ஆய்வாளராக அப்போது செயல்பட்ட மார்ட்டின்ஸ் கூறுகிறார். ஜூலை 2005ல் என்சலாடஸின் பரப்பில் இருந்து கசினி 173 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபோது அங்கு குறிப்பிடத்தக்க அளவு நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நீருள்ள நிலவு
நிலவின் தென் துருவப்பகுதியில் அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்ததால் ஏற்பட்ட விரிசலால் உருவான நிலவியல் பிழைக்கோடு (Geological fault line) பகுதியில் இருந்து மிகப்பெரிய வெந்நீர் ஊற்றுகள் ஊற்றெடுத்து வந்தன. சூரிய குடும்பத்தில் பூமியை தவிர நீர்ம நிலையில் தண்ணீர் உள்ள ஒரே இடம் என்சலாடஸ் நிலவு மட்டுமே என்பது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும். ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் கடின உழைப்பும், தீவிர முயற்சியும் கலனின் வெற்றிகரமான ஏவுதலை நிர்ணயிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலவை ஆராய கலனை அனுப்பும் முயற்சிகள் துரிதமாக நடைபெறுகிறது.
மற்ற நிலவுகளில் உயிர் வாழ்க்கை
டைட்டன்: டைட்டன் சனியின் நிலவுகளில் ஒன்று. சூரிய குடும்பத்தில் மிகப்பெரியது. இங்கு ஆதி உயிரினங்கள் உயிர் வாழ உதவும் ஏரிகள், ஹைடிரோகார்பன் கடல்கள், ஆற்று வழிகள், மிக நீண்ட தொலைவு செல்லும் குன்றுகள் போன்றவை உள்ளன. இங்கு மிகக்கடும் குளிர் நிலவுகிறது.
செவ்வாய்: பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த செங்கோள் வெதுவெதுப்புடன் நீர் நிறைந்த உலகமாக இருந்தது. உயிர் தோன்ற உகந்த சூழ்நிலை நிலவியது. ஆனால் பின்பு இது தன் காந்தப்புலம், நீர் மற்றும் வளிமண்டலத்தை இழந்தது. அதி தீவிர புற ஊதாக்கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு உயிரினங்கள் வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் நுண்ணுயிரி இனங்கள் நிலப்பரப்பிற்கு அடியில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
யூரோப்பா: வியாழனின் நிலவுகளில் முதண்மையான நிலவு இது. பனியால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் காணப்படும் திடப்பொருட்களில் மிக மிருதுவான பரப்பு உடையது. இதன் தரைப்பரப்பின் அடிப்பகுதியில் நீர் நிறைந்த கடல் காணப்படுகிறது. இங்கு பாக்டீரியா போன்ற ஆதிகால நில வாழ் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நாளை ஒரு நாள் மனிதன் சென்று குடியேறும் இடமாக என்சலாடஸ் மாறும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்த பார்க்ஸ் தொலைநோக்கி
- நிலவில் வீதிகள்
- சைக்கியை நோக்கி ஒரு பயணம்
- உலகின் காடுகளைக் காக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு - ஜெடி
- வியாழனின் நிலவில் கார்பனின் கடல்
- இரும்பு நிலா
- உயிரின் தோற்றத்தை அறிய உதவுமா பெனு?
- நிலவின் கண்ணாடி மணிகளில் நீர்த்திவலைகள்
- பூமிக்கு வந்த 'பெனு'
- பிரபஞ்சத்தின் 'இருண்ட பக்கங்களை' ஆராயும் 'யூக்லிட்'
- கூரை ஏறி வானம் படிக்கும் விஞ்ஞானிகள்
- காணாமல் போன பூமியின் பயணி
- ஒரு நட்சத்திரம் இரண்டு முகங்கள்