கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆழ் விண்வெளிப் பரப்பில் கொதிக்கும் கடலுடன் உள்ள நீரின் உலகை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி (James Webb space telescope (JWST)) கண்டறிந்துள்ள இந்தக் கோளின் மேற்பரப்பின் நிலை பற்றி ஆய்வாளர்களிடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. முழுமையாக நீரால் சூழப்பட்ட இந்த தொலைதூர உலகம் உற்றுநோக்கி அறியப்பட்டது.

உயிர்கள் வாழ உதவும் அடையாளங்களான மீத்தேன், கார்பன் டை ஆக்சைடுடன் உள்ள வளி மண்டலம் மற்றும் நீராவி இந்தக் கோளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொலைதூரக் கோளின் சுற்றளவு பூமியைப் போல இரண்டு மடங்கு. இது 70 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த வேதிப்பொருட்களின் கலவை நீருள்ள உலகால் சூழப்பட்டுள்ளது. இது ஹைடிரஜன் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

என்றாலும் இந்த கடற்பரப்பு மென்மையானதாக இருக்காது என்று கருதப்படுகிறது. “மேல்நோக்கிய அமைப்புடன் உள்ள இந்த கடல் நூறு டிகிரி செல்சியர்ஸ் அல்லது அதற்கும் மேல் உள்ள வெப்பநிலையைக் கொண்டதாக இருக்கலாம்” என்று ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் நிக்கூ மதுசூதன் (Prof Nikku Madhusudhan) கூறுகிறார். மிக அதிக வளி மண்டல அழுத்தத்தில் உயர்ந்த வெப்பநிலையுடன் உள்ள இந்த கடல் நீர் திரவ நிலையில் இருக்கலாம்.

ஆனால் இங்கு உயிர்கள் வாழ இயலுமா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியல் கடிதங்கள் (Astronomy and Astrophysics Letters) என்ற இதழில் வெளிவந்துள்ளது. ஆனால் டி ஓ ஐ 270 டி (TOI-270 D) என்று பெயரிடப்பட்டுள்ள இதே கோளை ஆராய்ந்த கனடா ஆய்வுக் குழுவினர் இந்த கருத்தை மறுத்துள்ளனர். அவர்கள் அங்கு இதே வேதிப்பொருட்களின் கலவையைக் கண்டறிந்தனர்.

ஆனால் இந்தக் கோள் மிக வெப்பமான கடலைப் பெற்றிருப்பதால் இங்கு நீர் திரவமாக இருக்க முடியாது. மாறாக இந்த கடலில் பாறைகள் நிறைந்த அடிப்பகுதியும் அதற்கு மேல் நம்ப முடியாத அளவு அடர்த்தி மிகுந்த ஹைடிரஜன், நீராவி உள்ள மேற்பரப்புடன் கூடியதாக இருக்கலாம் என்று அந்த ஆய்வுக் குழுவினர் கருதுகின்றனர். இதில் எந்த கருத்து வெற்றி பெற்றாலும் நாசாவின் தொலைநோக்கி மூலம் நம் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் உள்ள கோள்களின் தன்மை பற்றிய வியப்பூட்டும் தகவலை இக்கண்டுபிடிப்பு தந்துள்ளது என்பது உறுதி.

இந்த தொலைநோக்கி ஆய்வாளர்களுக்கு நட்சத்திரத்தின் ஒளியை பிடித்து அனுப்பியது. இந்த ஒளி சுழலும் கோள்களின் வளி மண்டலங்கள் வழியாக பயணிக்கும்போது வடிகட்டப்பட்டது. இது வேதிப்பொருட்களின் கலவையில் உள்ள தனிமங்கள் பற்றிய விரிவான விவரங்களை அறிய உதவியது. இதைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிர்கள் இங்கு வாழ முடியுமா என்பது பற்றியும் கோளின் தரைப்பரப்பின் படத்தையும் உருவாக்க முடியும். அமோனியா வாயு இல்லாததால் இங்கு கடல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடல் சூழ் உலகம்

வழக்கமாக ஹைடிரஜன் செறிந்துள்ள வளி மண்டலத்தில் அமோனியா இயல்பாக உருவாகும் ஒரு வேதிப்பொருள் என்று அடிப்படை அறிவியல் கூறுகிறது. ஆனால் இந்த வாயு நீரில் அதிக அளவு கரையக்கூடியது. அதனால் இந்த வளி மண்டலத்திற்கு கீழ் கடல் இருந்தால் அமோனியா அதில் கரைந்திருக்கலாம். இந்தக் கோள் ஒரு கடல் சூழ் உலகம் (hycean world) என்ற கருத்தும் உள்ளது. ஹைசியன் உலகம் என்ற சொல் ஹைடிரஜன் செறிந்த நீருள்ள கடலுடன் கூடிய வளி மண்டலத்தைக் குறிக்கிறது.

அதனால் இங்குள்ள நிலை பூமியில் இருந்து மிக வேறானது. இந்தக் கோள் ஈர்ப்பு அலைகளால் தாய் விண்மீணால் ஈர்க்கப்பட்டுள்ளதால் இதன் ஒரு பக்கம் எப்போதும் தாய் நட்சத்திரத்தை நோக்கியும் இன்னொரு பக்கம் எப்போதும் முடிவில்லாத இருளிலும் மூழ்கியுள்ளது. இது இங்கு அதிதீவிர வெப்பநிலை வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. பகல் நேரத்தில் இங்கு மிக உயர்ந்த வெப்பநிலை நிலவுகிறது.

இரவு நேரம் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை இங்கு நிலவலாம். ஆனால் பூமியின் வளி மண்டல அழுத்தத்தைப் போல ஆயிரம் மடங்குக்கும் அதிகமான அழுத்தம் இங்கு உள்ளது. இதனால் கடலை விட்டு நீராவி வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள கடல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் ஆழமுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பாறைப் பரப்புகளுடன் உள்ள மேல் தோடு பகுதிக்கு மேல் அமைந்துள்ள கடலின் அடித்தட்டு மிகுந்த அழுத்தமுடையதாக காணப்படுகிறது.

“நீராவி இருப்பதாலும் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதாலும் இங்கு நீர் திரவநிலையில் இருக்க வாய்ப்பில்லை. அதனால் நீருள்ள கடலுக்கான வாய்ப்பு இங்கு இல்லை. கடலின் தரைப்பரப்பில் வெப்பநிலை 4,000 டிகிரி செல்சியர்ஸ் அளவுக்கு இருக்கலாம். அதனால் நீர் இங்கு மிக மோசமான நிலையில் காணப்படும். அதனால் திரவ மற்றும் வாயு நிலையை வேறுபடுத்தி காணும் வாய்ப்புகள் மிக மங்கலாக உள்ளன. இங்குள்ள கடல் அடர்த்தியான, சூடான நிலையில் காணப்படலாம்” என்று இதே கோளை கூடுதலாக ஆராய்ந்த கனடா மாண்ட்ரீல் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் பியெர்ன் பெனக் (Prof Björn Benneke) கூறுகிறார். இரண்டு குழுக்களும் இங்கு பூமியின் உயிரி செயல்முறைகளுடன் தொடர்புடைய கார்பன் டை சல்பைடு இருப்பதைக் கண்டறிந்தது. இந்த வாயு வேறு வழிகளிலும் உருவாக வாய்ப்பு உள்ளது.

ஆனால் உயிர்கள் வாழ்வதன் அடையாளமாகக் கருதப்படும் டை மீத்தைல் சல்பைடு (dimethyl sulphide) காணப்படவில்லை. “உயிரி செயல்முறைகளுடன் கார்பன் டை சல்பைடை தொடர்புபடுத்த முடியாது. ஹைடிரஜன் செறிந்த வளி மண்டலத்தில் இந்த வாயுவை உருவாக்குவது எளிது. இந்த மூலக்கூற்றை மதிப்பிட முடிந்தால் அது பூமிக்கு அப்பால் உயிர்கள் வாழத் தகுதியான கோள்களைக் கண்டறிவதில் பெரிதும் உதவும்” என்று மாத்யூ கூறுகிறார்.

“சூரிய மண்டலம் போன்ற ஒரு அமைப்பு இல்லாத இத்தகைய புதிய சூழலில் சிறிய கோள்கள் பற்றிய இந்த ஆய்வுகள் பரவசமூட்டுபவை. பல தொலைதூரக் கோள்களிலும் நீராவி இருப்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது. தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்த இரண்டு ஆய்வுக் குழுக்களும் இங்கு ஒரே வகை வேதிப்பொருட்கள் இருப்பதை உறுதி செய்துள்ளன” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக விண்வெளியியலாளர் டாக்டர் ஜோ பார்ஸ்ட்டோ (Dr Jo Barstow) கூறுகிறார்.

சூரிய மண்டலத்திற்கும், பூமிக்கும் அப்பால் உயிர் வாழத் தகுதியான இடத்தை கண்டுபிடிக்கும் இடைவிடாட மனித முயற்சியில் இந்த ஆய்வு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/mar/08/astronomers-detect-waterworld-with-a-boiling-ocean-in-deep-space?

சிதம்பரம் இரவிச்சந்திரன்