விருகம்பாக்கம் அரங்கநாதன்

virukambakkam aranganathanகோடம்பாக்கம் சிவலிங்கம் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தச் சென்ற அரங்கநாதன், தானும் களப்பலியாக அப்போதே தீர்மானித்து விட்டார்.

தமிழ் அழிவதைப் பற்றி கவலைப்படாமல் தமிழர்கள் இருக்கிறார்களே எனக் கலங்கியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொலைபேசிக் கிடங்கில் பணியாற்றி வந்தவர் அரங்கநாதன். ஒய்யாலி - முனியம்மாள் இருவரின் மகனாக 27.12.1931 இல் பிறந்தவர்.

மனைவி மல்லிகா, அமுதவாணன், அன்பழகன், இரவிச் சந்திரன் எனக் குழந்தைகள் மூவர்.

சிலம்பாட்டம், சுருள் கத்தி வாசல், மான் கொம்பு சுழற்றல் முதலிய வீர விளையாட்டுகளில் வல்லவராய்த் திகழ்ந்தார். உடற்பயிற்சிக் கூடம் ஒன்றையும் நடத்தி வந்தார். விருகம்பாக்கத்தில் அனைவரும் இவரைக் 'குரு' என்றே அழைப்பார்கள்.

இந்தியைத் திணிக்கும் நடுவணரசின் நடவடிக்கை இவரைக் கொந்தளிக்க வைத்தது . தன்னை எரித்துக் கொண்டாவது தமிழை வாழ வைக்க விரும்பினார்.

விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகே உள்ள மாமரத்தினடியில் 27.1.1965 புதன் கிழமை இரவு 2  மணிக்குத் தன்னுடலில் தீயிட்டுக் கொண்டார்.

எரிந்த உடலுக்கு அருகில் கிடந்த அட்டைப் பெட்டியில் இந்தித் திணிப்பைக் கண்டித்து நடுவணரசுக்கும் தமிழக அரசுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் இருந்தன. அவற்றின் நகல்களை பதிவஞ்சலில் அனுப்பி யதற்கான பற்றுச் சீட்டுகளும் இருந்தன.

அமெரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலக நாடுகள் ஒன்றிய (ஐ. நா) அவைக் கூட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி விவாதிக்கப்பட்டது.

அரங்கநாதன் பெயர் தாங்கிய சுரங்கப்பாதை சென்னையில் இப்போதும் அவரை நினைவுபடுத்தியபடி உள்ளது.

வழிகாட்டும் திவேலரா

அயர்லாந்து வாழ் அய்ரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள் என்று தி. வேலரா (Éamon de Valera) கூறியதை நீ உவகை பொங்கும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய். தம்பி! அந்த ஆற்றல் மிக்கோன் கூறிய அறிவுரை "மொழியை இழந்திடாதீர். பிறகு விடுதலைக் காண வழி அழிந்துவிடும்.."

'கடைசிச் செய்தி யாது தருகிறீர்?' என்று கேட்டபோது தி.வேலரா (Éamon de Valera) "அய்ரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போது தான் அயர்லாந்து நாடு நிலைக்கும்" என்று கூறினார்.

- அறிஞர் அண்ணா (26.6.1960 தம்பிக்குக் கடிதம்)

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It