கொதிக்கும் இந்து முன்னணி

தீபாவளியும், பொங்கலும் தமிழகத்தில் பெரும்பான்மை இந்து சமுதாய மக்கள் பிரதானமாக கொண்டாடும் பண் டிகைகளாகும். இந்த பண்டிகைகளில் மக்களுக்கு எந்த பயமும் இல்லை. மாநிலத்தில் எந்த பதற்றமுமில்லை.

இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற பண்டிகை காலங்களில் முஸ்லிம்களுக்கும் இந்து சமுதாய மக்களுக்கும் மத்தியில் பரஸ்பரம் விருந்தோம்பல் முறை கூட இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் நடப்பதை காணலாம். அந்த அளவுக்கு எவ் வித மோதலும், பேதமும் இன்றி இந்த பண்டிகைகள் நடந்தேற, மோதலுக்கென்றே உருவாக்கப்பட்டதோ என எண்ணும் வகையில், இந்துத்துவாக்கள் முனைப்புடன் கொண்டாடும் ஒரே விழாவான விநாயகர் சதுர்த்தி மட்டும் அமை ந்து விடுவதை பார்க்கிறோம்.

விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே அரசுக்கும் மக்களுக்கும் பதற்றம். காவல்துறை குவிப்பு; சொல்லி வைத்ததுபோல் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மோதல்கள். இவையாவும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா காட்சிகளாகும்.

இதற்கு காரணம் மாற்றுப்பாதை இருந்தாலும் அதை புறந்தள்ளி, முஸ்லிம்கள் வசிக்கும் தெரு வழி யாகவோ, அல்லது பள்ளிவாசல் அமைந்துள்ள தெரு வழியாகவோ தான் ஊர்வலம் செல்வேன் என அடம் பிடிப்பதும், "பத்து காசு முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு' போன்ற கோஷங்களை எழுப்புவதும், ஊர்வலத்தில் செல்பவர்கள் முஸ்லிம் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதும், தட்டிக் கேட்டால் முஸ்லிம்களையும் வீடுகளையும், கடைகளையும் தாக்குவதும் ஆங்காங்கே நடந்தாலும் முத்துப்பேட்டை இதற்கு முக்கிய முதல் சான்றாக திகழ்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விரல் வித்தை நடிகர் திரைப்படத்தை எதிர்த்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். திரைப்படத்தில் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஏதேனும் காட்சிகள் இருந்தாலோ, அல்லது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் காட்சிகள் இருந்தாலோ அதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடப்பதும், அந்த படத்தை தடை செய்ய கோருவதும் வழக்கமாக அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுதான்.

ஆனால் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்ததற்கு சொல்லும் காரணம், “படத்தில் ஒரு காட்சியில் விநாயகர் ஊர்வலத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் முஸ்லிம் குடும்பத்தை தாக்குவதுபோல் காட்சியமைக்கப்பட்டு உள்ளது. இந்த காட்சியால் இந்துக்கள் மனம் புண்பட்டுள்ளது. இரு மதத்து நல்லுறவையும் பாதிக்கும் நிலையிலும் இக்காட்சியமைந்துள் ளது. இதை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்கிறது.

படத்திலிருந்து ஒரு காட்சியை நீக்க வேண்டுமெனில் அக்காட்சி புனையப்பட்டதாக இருக்க வேண் டும். ஆனால் இந்து முன்னணி நீக்க சொல்லும் காட்சி என்பது அவர்கள் விநாயகர் ஊர்வலத்தில் இதுவரை செய்யாத ஒன்றா?

கடந்த 02.09.2009ல் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது, ஊர்வலப் பாதையில் இருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மசூதி மற்றும் கடைகளும் தாக்கப்பட்டன என்பதை மறுக்குமா இந்து முன்னணி?

இது சாம்பிள்தான்! விநாயகர் ஊர்வலத்தின் பெயரால் அமைதியான மாநிலமான தமிழகத்தில் இந்துத்துவாக்கள் செய்த அட்டூழியங்களின் பட்டியல்கள் அடுக்கடுக்காக உள்ளன. அவசியப்பட்டால் வெளியிடுவோம்.

ஆக இவர்கள் செய்த வன்முறையை படத்தில் காட்டினால் அதை எதிர்த்து போராட்டமாம். ஆனால் மும்பை கலவரத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்க, பால்தாக்கரேயின் எழுதுகோலே மும்பை கலவரத்திற்கு காரணம் என்று நீதியரசர் கிருஷ்ணா அவர்களின் விசாரணை அறிக்கை கூறிக்கொண்டிருக்க, இந்த உண்மையை மறைத்து முஸ்லிம்களே முன்னின்று கலவரத்தில் ஈடுபடுவதாக மணிரத்னம் எனும் அவாள் 'பம்பாய்' எனும் படத்தில் காட்டினாரே! அப்போது இரு சமுதாய நல்லிணக்கம் கெடும் என்று அக்காட்சியை நீக்க சொன்னதா இந்து முன்னணி?

இதன் மூலம் தெரிவது என்ன? நாங்கள் செய்ததாகவே இருந்தாலும் அதை படத்தில் காட்சியாக வைக்கக் கூடாது. ஆனால் முஸ்லிம் செய்யாத ஒன்றாகினும் அதை நாங்கள் காட்சியாக்கி காசாக்குவோம் என்பதுதானே. நல்ல கொள்கைதான் போங்கள்.

- முகவை அப்பாஸ்

Pin It