வேற்றுமையில் ஒற்றுமையெனல் வாய்க்கொள்கை
வேறுபாட்டை உள்சுரக்கும் நச்சுப் பொய்கை.
நூற்றுவகை ஆரியத்தின் சூழ்ச்சிப் போர்வை
நுண்டமிழின் பெருமைகண்டு பொறாமைப் பார்வை
போற்றுவார் போல் காட்டிக் கீழறுக்கும் கொல், கை
பொதுமகள் போல் ‘ஒரே’என்னும் மயக்கக்கூட்டில்
மேற்கல்வி, ‘நீட் தேர்வு’ மொழி, மதங்கள்
பிறவுமடைக்க அலையும் ஆரியத்தின் மாயை.
ஒரேகுடைக்கீழ் ஒரே இந்து மதத்தைச் சாற்றும்
உள்நோக்கம் வேர்பிடித்து வலைவிரிப்பாய்
சரேலென்ற அதிகார அம்பு பாய்ச்சித்
தமிழரென்ற அடையாளம் குலையச் செய்வாய்
அரோகராவும் (அரே)ராமாவும் அய்யப்பாவும்
அனைவராலும் உரத்தொலிக்க எதிர்பார்க்கின்றாய்
கரேலென்ற உடை அணிந்தார் (தி.க.) உண்மைசொன்னால்
கருத்துவளப் பெரியாரின் சிலை உடைப்பாய்?
கீதைக்கண்ணன் “நானே நான்குவர்ணக்
கிளைகளையும் படைத்தேன்காண்; உழைக்கும் பாவப்
பாதைப்பட்ட பெண்கள் ஆண்கள் (சூத்திரர்) எல்லாம்
பிறப்பினாலே இழிந்தவர்கள்” என்று சொன்னான்.
(கீ.4-13); (கீ.9-32)
வாதைவிஞ்சும் அடிநெஞ்சில் மேற்சொல் கேட்டால்.
மானுடத்தின் வெற்றிநூல் குறளென்று கூறு
பேதை நாய், கீதைச் சாரம், குறளே என்று
பேரூளை (பேர்ஊளை) இடுகையில் சான்றெடுத்து வீசு.
செருப்பெடுக்கப் பெரியார்தாம் இல்லை என்று
சொரி நாய்கள் குறள்கோவை இந்துவாக்கும்.
கருப்புஆடு நமக்குள்ளே இருக்கும் போது
கண்டவனும் கழிசடையாய்க் கருத்துரைப்பான்.
மருப்புடைய களிற்றுமுக விநாயகர்க்குப்
பட்டைநாமம் சாத்தினால் ‘பூணூல்’ ஆடாதா?
திருக்காஞ்சி ‘ஆச்சாரி’ கருப்பு ஆடை
தரித்த காட்சி நாம் வரைந்தால் போர்மூளாதா?
விடியட்டும் இருட்டிரவு என்று காத்தோம்
விடியாமை யார்குற்றம்? சாதியத்தின்
முடிமுட்டும் இருள்தூக்கி எறியும்போது
முதிர்ந்திட்ட மதவெறியை வீழ்த்தும் போது
அழமுட்டாள் அடிமையிருள் உடைக்கும் போது
அரும்பெரியார் விதைத்திட்ட புதுநெல் நாற்றைப்
படிமுறையாய் வளர்த்து அறுவடையின் போது
புதுமறவன் வாளெடுத்தால், விடியல் தோன்றும்.