அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கப்பல் உடைப்பது இன்று ஒரு மிகப் பெரிய தொழில். ஆனால் இது கடுமையான சூழல், ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கப்பலின் அடிப்பகுதியில் உடைப்பதற்குரிய அறைகளில் நச்சு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிய உயிருடன் இருக்கும் ஒரு கோழியின் காலில் கயிற்றைக் கட்டி கீழ்நோக்கி இறக்கி பார்க்கப்படுகிறது. கோழி சாகவில்லை என்றால் ஆபத்தில்லை என்று பொருள். உலகம் முழுவதும் ஒரு இலட்சம் அளவு கப்பல்கள் உள்ளன. ஒரு கப்பலின் ஆயுள் 20-25 ஆண்டுகள்.
ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 700 கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. பலவகை கப்பல்களைக் கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும். இதில் 90% கப்பல்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் உடைக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கப்பல் உடைக்கும் மையம் உலகில் மூன்றாவது பெரிய மையம்.
சுற்றுச்சூழல் நாசம்
இத்தொழிலில் வேலை செய்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் இது கடுமையான சூழல் நாசத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளுக்குக் காரணமாகும் பாதரசம், சல்புரிக் அமிலம், ஆஸ்பெட்டாஸ் போன்றவை உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் ஒவ்வொரு கப்பல் உடைக்கப்படும்போதும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.
ஒரு நடுத்தர கப்பல் உடைக்கப்படும்போது அதனால் 7 டன் ஆஸ்பெஸ்டாஸ் மாசு ஏற்படுகிறது. இது பிராந்திய சந்தைகளைச் சென்றடைகிறது. பெரும்பாலான மையங்களில் மாசு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதில்லை. இதனால் இந்த மாசுக்கள் விவசாயம் மற்றும் மீன் வளத்தை அழித்து எல்லா இடங்களிலும் பரவுகிறது. பயிற்சி வழங்கப்படாத தொழிலாளிகளே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
நச்சுத்தன்மை அதிகமுள்ள வேதிப்பொருட்கள் கையாளப்பட வேண்டிய இத்தொழிலில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. உரிய பயிற்சி வழங்கப்படாததால் தொழிலாளர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர்.
உடைக்கப்படும் கப்பலில் இருந்து அதிக அளவில் கிடைக்கும் எஃகு, தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எஃகில் 10% கப்பல் உடைக்கும் தொழிலில் இருந்தே பெறப்படுகிறது. பங்களாதேஷில் இது 20%. 1930களில் கப்பல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பங்களே இன்றும் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே கப்பல்கள் அதிகமாக உடைக்கப்பட்டன. 1960ல் வீசிய ஒரு புயற்காற்றில் பங்களாதேஷ் சிட்டகாங் துறைமுகத்திற்கு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பல் அடித்து வரப்பட்டது. கரை தட்டிய கப்பலை பலமுறை முயற்சி செய்தும் கடலில் இறக்க முடியவில்லை. இவ்வாறு நான்கைந்து ஆண்டுகள் கரையில் கிடந்த கப்பலை அங்கு இருந்த ஒரு எஃகு நிறுவனம் விலைக்கு வாங்கியது; உடைத்தது.
இதற்கு பல ஆண்டுகள் ஆயின என்றாலும் அந்நாட்டில் கப்பல் உடைக்கும் தொழிலிற்கு இந்த சம்பவம் காரணமாக அமைந்தது. சூழல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டபோது உடைக்கப்பட வேண்டிய கப்பல்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வரத் தொடங்கின. கடுமையான சூழல் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் உடைந்த கப்பலுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது. பங்களாதேஷில் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 69% புதிய கப்பல் வாங்கவே செலவிடப்படுகிறது.
ஆனால் அந்நாட்டில் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் வருமானத்தில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைகள் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் 2003ல் உருவாக்கப்பட்ட பேசில் உடன்படிக்கைபடி இத்தொழில் நடைபெறுகிறது. உடைக்கும்போது கிடைக்கும் 98% பொருட்கள் அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
உடைக்கப்படுவதற்கு முன்
ஆபத்தான பொருட்களின் பட்டியல் உருவாக்கப்பட்ட பிறகே அங்கு கப்பல் உடைக்கும் வேலை ஆரம்பிக்கிறது. வாயுக்கள் வெளியேற கப்பலில் இருக்கும் எல்லா துளைகளும் திறந்து வைக்கப்பட வேண்டும். சில வேலைகள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்துபவை என்றாலும் கப்பலை முழுமையாக உடைக்க வேண்டும். தீங்கு விளைவிக்கக் கூடிய மற்றும் தீங்கற்ற பொருட்களை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்.
ஆஸ்பெஸ்டாஸை பிளாஸ்டிக்கில் பொதிந்து எஃகால் ஆன பெட்டகங்களில் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியும் சரியான முறையில் முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவில் கப்பல்கள் இந்த முறையில் உடைக்கப்படுகின்றன. ஆனால் கப்பல் உடைக்கும் தலைநகரங்கள் என்று வர்ணிக்கப்படும் இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதற்கு முற்றிலும் மாறான விதத்தில் இது நடைபெறுகிறது.
உடைக்கப்படும் கப்பலில் இருந்து கிடைக்கும் மின் கம்பிகள், இருக்கைகள், இயந்திரங்கள் உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்கப்படுகின்றன. மின் கம்பிகள் எரிக்கப்பட்டு அதில் இருந்து செம்பு எடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள் மற்றும் காலணிகள் அணிவதில்லை. செலவு அதிகமாகும் என்று மின் தூக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை.
கடற்கரையில் குவிக்கப்படும் கழிவுகள்
பிளாஸ்டிக் அடங்கிய வண்ணப்பூச்சு பூசப்பட்ட எஃகு பலகைகள், லாபம் தராத கழிவுகள் கடற்கரையில் போட்டு எரிக்கப்படுகின்றன. பங்களாதேஷில் கப்பல் உடைக்கும் மையங்களில் 79,000 டன் ஆஸ்பெஸ்டாஸ், மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 240,000 பாலி குளோரினேட்டட் பை பீனைல், ஓசோன் அடுக்கைப் பாதிக்கும் 210,000 மற்ற கழிவுகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
1980களில் கப்பல்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுவது பல வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டது. இப்பொருளைக் கையாள அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. இதனால் அங்கு லாபகரமாக கப்பல்களை உடைக்க முடிவதில்லை. அதனால் முன்பு கட்டப்பட்ட பழைய கப்பல்கள் ஆசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு உடைக்கப்படுகின்றன.
ஆபத்தான நச்சுப்பொருட்களைக் கையாளுதல், காயங்கள், வெட்டுக்காயங்கள், ஆபத்தான வாயுக்களை சுவாசிப்பது, தீக்காயங்கள், மூச்சுத்திணறல், புற்றுநோய் உட்பட பல பாதிப்புகள் ஆசியா கப்பல் உடைக்கும் மையங்களில் காணப்படுகின்றன. ஆனால் ஐரோப்பாவில் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படும் விபத்துகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். இது இத்தொழிலை அங்கு லாபம் இல்லாத ஒரு தொழிலாக மாற்றியது.
அங்கு கப்பலை உடைத்து விற்றால் கிடைக்கும் தொகையைவிட அதை உடைப்பதற்கு ஆகும் செலவு அதிகம். பங்களாதேஷில் ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளியேனும் இதில் ஈடுபடும்போது மரணமடைகிறார். ஏற்படும் காயங்கள் இதைவிட மிக அதிகம். அங்கு இதில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 சதவிகிதத்திற்கும் கூடுதலானவர்கள் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே.
அலாங்
குஜராத் அலாங் துறைமுகமே உலகில் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் மையம். இதன் மூலம் 15,000 முதல் 20,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், பல லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஒரிசா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் வந்த தொழிலாளர்களே அதிகமாக வேலை செய்கின்றனர். இவர்கள் பரிதாபகரமான சூழலில் வாழ்கின்றனர். மருத்துவமனை வசதி பாவ்நகர் என்ற இடத்தில் 50 கி மீ தூரத்திலேயே உள்ளது.
அலையாத்திக் காடுகளின் அழிவு
பங்களாதேஷில் 2009ல் கப்பல்களை உடைக்கும் மையங்களில் கடலில் இருந்து கப்பல்களை கரைக்கு அருகில் கொண்டு வர வசதியாக அங்கிருந்த 40,000 அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தக் காடுகளே கடல் பேரிடர்களில் இருந்து இப்பகுதியை காப்பாற்றி வந்தன. கடலில் கலக்கும் நச்சுப்பொருட்கள் 21 வகை மீனினங்களை அழித்துள்ளன. ஆசியாவில் இந்த நச்சு மாசினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை.
தங்கள் சூழல் மற்றும் குடிமக்களை பாதுகாக்க வளர்ந்த நாடுகள் கப்பல்களை ஆசியாவிற்கு கொண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு. இது இங்கு உள்ள தொழிலாளர்கள் மற்றும் சூழலை அழிக்கிறது. இதையெல்லாம் ஆள்பவர்கள் எவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்?
&
https://en.wikipedia.org/wiki/Alang_Ship_Breaking_Yard
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
2022 டிசம்பர் 19ல் கனடா, மாண்ட்ரீலில் நிறைவடைந்த காப்15 ஐநா உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டிற்குப் பிறகு இயற்கையைப் பாதுகாக்க உலக நாடுகள் வாக்களித்தது போல நடந்து கொண்டனவா? அடுத்த காப்16 மாநாடு கொலம்பியாவில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 1, 2024 வரை நடக்கவுள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் சுசானா முகம்மது (Susana Muhamad) அறிவித்துள்ளார். இந்நிலையில் காப்15 மாநாட்டின் தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அம்சங்களை முழுமையாக நிறைவேற்ற அரசுகள் தயாராகவில்லை என்றால், மீண்டும் அழிவிற்கான ஒரு பத்தாண்டு காலத்தை ஆட்சியாளர்கள் உலக மக்கள் மீது திணிக்க வேண்டியிருக்கும் என்று ஐநா உயிர்ப் பன்மயத் தன்மைக்கான செயல் தலைவர் டேவிட் கூப்பர் (David Cooper) எச்சரித்துள்ளார். அடுத்த மாநாட்டிற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது, வரலாற்றுச் சாதனை என்று போற்றப்பட்ட மாண்ட்ரீல் கூட்டத்தின் உடன்படிக்கை இப்போது உறுதித் தன்மை இழந்துள்ளது.
உலகிற்கு எடுத்துக்காட்டாகுமா கொலம்பியா மாநாடு?
கொலம்பியா மாநாடு, காலநிலை அவசர நிலையை சரிசெய்ய உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்பதையும், உயிரினங்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் என்று சூசன் முகம்மது கூறுகிறார். புவியில் வாழ்வை நிலைநிறுத்தும் சூழல் மண்டலங்களின் பாதுகாப்பு பற்றி மாண்ட்ரீல் மாநாட்டிற்கு முன்பு எந்த ஐநா மாநாடும் எந்த உடன்படிக்கையையும் நிறைவேற்றவில்லை.
காப்15 மாநாட்டின் 23 இலக்குகளில் பூமியின் 30% நிலப்பகுதியை இயற்கை பாதுகாப்பிற்கு ஒதுக்குதல், சூழலை சேதப்படுத்தும் திட்டங்களுக்கு வழங்கப்படும் பில்லியன் கணக்கான மானிய சலுகைகளை மறுசீரமைத்தல் மற்றும் வளமிழந்த சூழல் மண்டலங்களை மீட்டெடுத்தல் போன்றவை அடங்கும். கன்மிங்-மாண்ட்ரீல் ஒப்பந்தம் (Kunming-Montreal framework) என்று அழைக்கப்படும் உடன்படிக்கை சமீபத்தில் துபாயில் முடிந்த காலநிலை மாநாட்டின் இறுதி அறிக்கையில் இடம் பெற்றதால் புது உத்வேகம் அடைந்துள்ளது.
2025 பிரேசில் காலநிலை மாநாட்டில்
2025 பிரேசில் காப்30 மாநாட்டிற்கு முன்னதாக, மாண்ட்ரீல் உடன்படிக்கையை கருத்தில் கொண்டே நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். 2025 பிரேசில் காப்30 மாநாட்டில் ஒவ்வொரு நாடும் அவை இயற்கைப் பாதுகாப்பிற்கு மேற்கொண்ட செயல்கள் பற்றிய விவரங்களை (NDC) சமர்ப்பிக்க வேண்டும். உயிர்ப் பன்மயத் தன்மையும் காலநிலையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை ஆட்சியாளர்கள் உணர இது ஓர் அரிய வாய்ப்பு.
துபாய் மாநாட்டின் இறுதி அறிக்கையில் 2030ம் ஆண்டிற்குள் வன அழிவை நிறுத்துதல், இயற்கைப் பாதுகாப்பில் ஆதிவாசி சமூகங்களின் முக்கியப் பங்கு ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. தீமை தரும் மானிய உதவிகள், மாசுபடுதல் போன்றவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பூமியின் 30% நிலப்பகுதியை இயற்கைக்காக ஒதுக்குதல் என்பது மீண்டும் ஒரு தோல்விக்கே வழிவகுக்கும் என்று டேவிட் கூப்பர் கூறுகிறார்.
அழியும் ஆபத்தில் இரண்டு மில்லியன் உயிரினங்கள்
வாழிட இழப்பு, மாசுபடுதல், ஆக்கிரமிப்பு உயிரினங்கள், காலநிலை மாற்றம் மற்றும் நேரடி சுரண்டலால் இரண்டு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமி தொடந்து சூடாவது உயிரினங்களின் வாழ்விற்கு முதன்மை அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தவில்லை என்றால் இழந்த உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்டு அதன் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.
மண், தாவரங்கள், புல்வெளிப் பகுதிகள் மற்றும் காடுகளில் கார்பன் சேமிப்பு என்பது சூழல் மண்டலங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே உள்ளது. 2023ல் பிரேசில் மற்றும் கொலம்பியாவில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதும், மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் வன அழிவின் வேகமும் முதல்முறையாகக் குறைந்துள்ளது.
நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்
காப்15 மாநாட்டில் இயற்கைப் பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இயற்கை வளங்கள் மூலம் மருந்துகள் கண்டுபிடிப்பு, தடுப்பூசிகள், உணவுப் பொருட்கள் உருவாக்கப்படுதல் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை நாடுகளுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளுதல் பற்றி காப்15ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. “நாகரீக மனித சமூகம் உருவாக வேண்டும் என்றால் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்.
"1.5 டிகிரிக்குள் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு சமமான உடன்படிக்கையே 30% நிலப்பகுதியை இயற்கைப் பாதுகாப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்ற மாண்ட்ரீல் ஒப்பந்தம்” என்று முன்னணி காலநிலை ஆய்வாளரும் பாட்ஸ்டம் (Potsdam) காலநிலை ஆய்வுக்கழகத்தின் இயக்குனருமான ஜோஹன் ராக்ஸ்ட்ரம் (Johan Rockström) கூறுகிறார்.
"படிப்படியாக நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருட்களைத் தடை செய்யும் உடன்படிக்கைக்காக மற்ற நாடுகளுடன் இணைந்து கொலம்பியா வலியுறுத்துகிறது” என்று அதன் அதிபர் கஸ்ட்டாவோ பெட்ரோ (Gustavo Petro) காப் 28 மாநாட்டில் கூறினார்.
116 நாடுகள் தற்போது கையெழுத்திட்டுள்ள நிலையில் சீனா தன் கடல் மற்றும் நிலப்பகுதியின் 30 சதவிகிதத்தை இயற்கை பாதுகாப்பிற்காக ஒதுக்கியது. இதன் மூலம் இதற்கான குழுவில் சீனா புதிதாக சேர்ந்துள்ளது என்று இயற்கைப் பாதுகாப்பிற்கான உயர் குறிக்கோள் கூட்டமைப்பின் இயக்குனர் ரீடர் எல் சாக்ஃப்லாவ்ல் (Rita El Zaghloul) கூறுகிறார்.
எதிர்பார்ப்புகளுடன் கொலம்பியா மாநாடு
“போதுமான நிதியுதவி, உண்மையான அக்கறை மற்றும் உலகின் 80% உயிர்ப் பன்மயத்தன்மை செழுமையுள்ள இடங்களின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்கு காப்16 மாநாட்டில் நல்ல முடிவுகள் ஏற்படும்” என்று பன்னாட்டு இயற்கை வளச்சங்கத்தின் (IUCN) தலைவரும் காப்28 மாநாட்டின் காலநிலை சாம்பியனுமான ராஸன் அல் முபாரக் (Razan Al Mubarak) நம்பிக்கை தெரிவிக்கிறார்.
நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டதால் 2023ல் துருக்கியில் நடைபெற வேண்டிய உயிர்ப் பன்மயத் தன்மை மாநாடு நடக்கவில்லை. சரியான இலக்கு, போதுமான கவனம், நடைமுறைப்படுத்துவதில் அரசியல்பூர்வமான அக்கறை, நிதி ஒதுக்கீடு போன்றவற்றின் மூலம் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்பதை பிரேசில் அதிபர் லூலா (Lula ) நிரூபித்துள்ளார். இந்தோனேஷியா இதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. ஆள்வோர் தங்கள் சுய நல நோக்கங்களை கைவிட்டு இயற்கையைப் பாதுகாக்க இந்நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட முன்வர வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
** ** **
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/dec/18/cop15-montreal-has-world-lived-up-to-promises-aoe?
&
https://en.m.wikipedia.org/wiki/2024_United_Nations_Biodiversity_Conference
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க, நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை இரண்டு வார காலம் துபாயில் நடந்த காப்28 மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதில் இருந்து மாறி, மற்ற ஆற்றல் எரிமூலங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வரலாற்று உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள், சூழல் போராளிகள், சூழல் இயக்க அமைப்புகள் கோரியபடி புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாகக் குறைப்பது அல்லது முற்றிலும் தடுப்பது பற்றி இந்த அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
என்றாலும் ஆற்றல் செயல்முறைகளில் இருந்து புதைபடிவ எரிபொருட்களை நீதிப்பூர்வமாக, ஒழுங்குமுறையுடன் அகற்றுவதன் மூலம் அறிவியல்பூர்வமாக கார்பன் உமிழ்வை 2050ல் சுழிநிலைக்குக் கொண்டுவர இந்த அறிக்கை இலட்சியமிட்டுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் இதுவரை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க தங்கள் நாடுகள் என்ன செய்தது என்பதை விவரிக்கும் உலகளவிலான ஒவ்வொரு நாட்டின் செயல்திட்டங்கள் (GST) பற்றி வரும் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் காலநிலை மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் குறைக்க இது வழிவகுக்கும்.
முப்பதாண்டு கனவு
கடந்த 30 ஆண்டுகளின் கனவாக இருந்து வரும் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பது பற்றிய சொல் இந்த மாநாட்டின் உடன்படிக்கையில்தான் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது பற்றி பேச விரும்பாத சௌதி அரேபியா, அமெரிக்கா, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் (OPEC) போன்றவை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல நாடுகளின் வற்புறுத்தலால் இது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்பட்டது. நிறைவேற்றப்படுவதற்கு நான்கு மணி நேரம் முன்பு மட்டுமே வரைவு அறிக்கையின் நகல் பேச்சுவார்த்தைக் கூடத்தில் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.
39 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட சிறிய தீவு நாடுகளின் கூட்டமைப்பு உடன்படிக்கை நிறைவேற்றப்படுவதை தாங்கள் தடுக்கவில்லை என்றாலும், இறுதி அறிக்கையின் அம்சங்கள் போதுமான அளவிற்கு வலுவாக இல்லை. உடன்படிக்கை பல ஓட்டைகளுடன் உள்ளது என்று கூட்டமைப்பின் தலைமைப் பேச்சாளரும், சமோவா (Samoa) நாட்டைச் சேர்ந்தவருமான ஆன் ராச்மசன் (Anne Rasmussen) கூறுகிறார். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதைபடிவ எரிபொருட்களைத் தவிர்க்கும் காலம் வந்து விட்டது என்று ஐநா தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டரஸ் கூறுகிறார்.
அடுத்த மாநாட்டில் ஒவ்வொரு உலக நாடும் தங்களின் தேசிய பங்களிப்பில் 1.5 டிகிரிக்குள் புவி வெப்ப உயர்வை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்று துபாய் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா சீனாவுடன் மாற்று எரிபொருட்கள் பற்றி ஒருங்கிணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க காலநிலைப் பிரதிநிதி ஜான் கெரி (John Kerry) கூறுகிறார். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைத்து உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை 2030ல் மும்மடங்காக அதிகரிக்க உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள்
புதிய தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுவது, கார்பன் ஹைடிரஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது பற்றி இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி பயன்பாட்டைத் தவிர்ப்பதால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய போதுமான நிதியுதவி செய்யப்பட வேண்டும் என்று காலநிலைப் போராளிகள் கோரினர். பல நாடுகள் எண்ணெய்ப் பயன்பாட்டை நிறுத்த வலியுறுத்தின.
“கடந்த 30 ஆண்டில் ஒரு காப் மாநாட்டின் இறுதி அறிக்கையில் புதைபடிவ எரிபொருட்கள் பற்றிப் பேசப்படுவது இதுவே முதல்முறை. பெட்ரோலியப் பொருட்கள் என்ற பூதம் பாட்டிலிற்குள் திரும்பிப் போகவில்லை. அதனால் வரும் மாநாடுகளில் இந்த அழுக்கு ஆற்றலை (dirty energy) நிறுத்த உதவும் திருகுகளைப் பயன்படுத்தி பாட்டிலை இறுக்க அடைத்து மூடவேண்டும். கார்பனைப் பிடித்து சேமித்துப் பயன்படுத்தல் போன்றவை அதிக செலவு பிடிக்கும் தோல்வியடைந்த திட்டங்கள்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இப்படிப்பட்ட ஒரு உடன்படிக்கை பெட்ரோல் உற்பத்தி செய்யும் ஒரு நாட்டில் இருந்து ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. புதைபடிவ எரிபொருட்கள் இல்லாத ஓர் உலகை நோக்கி நாம் செல்கிறோம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது" என்று ஆப்பிரிக்க சக்தி அமைப்பின் (Power Shift Africa) முகமது அடோ (Mohamed Adow) கூறுகிறார்.
ஏழை நாடுகளுக்கு இறப்பு சான்றிதழா?
காடுகள் அழிக்கப்படுவதை 2030ம் ஆண்டிற்குள் குறைப்பது பற்றி உடன்பாடு எட்டப்பட்டது. ஆதிவாசிகளின் பாரம்பரிய அறிவுகளை அழியாமல் பாதுகாத்து, பயன்படுத்த காப்28 உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய மாதிரி அறிக்கை புதைபடிவ எரிபொருட்கள் பற்றிய சர்ச்சைகளை எழுப்பியது. அந்த வரைவறிக்கை சிறிய தீவு, பலவீனமான நாடுகளுக்கு பணக்கார நாடுகள் வழங்கும் இறப்பு சான்றிதழாகவே கருதப்பட்டது.
இந்த வரைவறிக்கைக்கு பல வளரும் நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடைசி நிமிடத்தில் காப்28 மாநாட்டின் தலைவர் சல்ட்டர்ன் அல் ஜேபர் (Sultan Al Jaber) பல நாடுகள், குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டது. புதைபடிவ எரிபொருட்கள் தவிர்ப்பு பற்றிய அம்சம் சேர்க்கப்பட்டது. இதன் பலனாக தோல்வியடையுமோ என்ற அச்சத்தில் இருந்த மாநாடு இறுதியில் எண்ணெய்ப் பொருட்கள் பற்றிய உடன்பாட்டுடன் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றது.
துபாய் காப் 28 மாநாட்டின் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கை புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவுமா? மாநாட்டின் நோக்கம் வெற்றி அடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெப்ப அலைத் தாக்குதல்கள் இயற்கை உயிரினங்களுக்கு உணவு தரும் திறனை அச்சுறுத்தலிற்கு உள்ளாக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்ப அலை ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் இந்தியா உட்பட பல பகுதிகளையும் தொடர்ச்சியாக பாதித்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட சாதனையளவாக உயர்கிறது.
நம் உணவுமுறை உலகளாவியது. உலகின் பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பல முக்கிய உணவுப் பயிர்களின் விளைச்சலில் இதனால் பாதிப்பு ஏற்படும். இது உணவுப் பற்றாக்குறைக்கும் அதன் மூலம் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும். இது இப்போது உடனடியாக நிகழவில்லை என்றாலும் வரும் ஒரு சில பத்தாண்டுகளில் நிகழும் என்று லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழக வளி மண்டல அறிவியல் துறை பேராசிரியர் ஜான் மார்ஷம் (Prof John Marsham) கூறுகிறார்.
வசதி இருந்தால் கொளுத்தும் வெய்யிலில் இருந்து தப்ப வீட்டுக்குள் போய் நீங்கள் ஏசியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் இயற்கையான மற்றும் விவசாயம் சார்ந்த சூழல் மண்டலங்கள் இவ்வாறு செய்ய முடியுமா? ஐரோப்பாவில் 2018ல் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் மத்திய மற்றும் வட ஐரோப்பாவில் பல பயிர்களைப் பாதித்தது. 50% பயிரிழப்பை ஏற்படுத்தியது.
2022ல் ஏற்பட்ட உயர் வெப்பம் இங்கிலாந்தில் விளைந்த எல்லா வகை காய், பழங்களையும் அழித்தது. முந்தைய பதிவுகளுடன் ஒப்பிடும்போது 2040ல் வெப்ப அலைத் தாக்குதல்கள் இப்போது உள்ளதை விட 12 மடங்கு அதிகமாக அடிக்கடி ஏற்படும். ஒரே ஒரு வெப்ப அலைத் தாக்குதல் ஒரு சூழல் மண்டலத்தையே அழித்துவிடாது.
ஆனால் நீண்ட காலம் நீடிக்கும், அடிக்கடி நிகழும் வெப்ப அலைகளை சரிசெய்ய இயற்கைக்குப் போதுமான அவகாசம் கிடைக்காது.
விவசாயிக்குத் தெரியும்
நாம் இயல்பாக வாழ உதவும் வானிலை பற்றி பொதுவாக மக்கள் கவலைப்படுவதில்லை. நமக்கு வேண்டியதை வாங்க நாம் கடைக்குச் செல்கிறோம். நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்வதில்லை. ஆனால் உலகில் எந்தப் பகுதியில் இருக்கும் எந்த ஒரு விவசாயிடம் நீங்கள் பேசினாலும் வானிலையும் காலநிலை மாற்றமும் அவர்களின் விவசாயத்திற்கு ஏற்படுத்தும் நன்மை, தீமைகள் பற்றி அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர்.
காலநிலை மாற்றம் வளி மண்டல வெப்பநிலையை மட்டும் அதிகரிப்பதில்லை. கடல் வெப்பநிலையையும் அதிகரிக்கிறது. இது கடலோர சூழலைப் பாதிக்கிறது. மனித குலத்தின் மற்றொரு முக்கிய உணவு மூலத்தையும் அழிக்கிறது. மிக உயர் வெப்பநிலை உயிரினங்களை ஒட்டுமொத்தமாகக் கொல்கிறது. எடுத்துக்காட்டு ஒரு பில்லியன் கடல்வாழ் விலங்குகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த 2021 கனடிய பசுபிக் வெப்ப அலைத் தாக்குதல் நிகழ்வு மற்றும் இராக் அஷ்மான் (Ashman) நதியில் வெப்ப அலைத் தாக்குதலால் ஜூலை 2023ல் பெருமளவில் இறந்து கரையொதுங்கிய மீன் கூட்டம்.
நிசப்த மரணங்கள்
சுலபமாகப் பார்க்க முடிகிறது என்பதால் நாம் நிலப்பகுதியில் நிகழும் மாற்றங்களையே காண்கிறோம். வெப்பம் அதிகரித்தால் தாவரங்கள் சூடாகின்றன, விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் பற்றி யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழிவது ஒருவகையில் நிசப்த மரணங்கள் என்று பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழக புவி அறிவியல் பேராசிரியர் டானியல்லா ஸ்மிட் (Daniela Schmidt) கூறுகிறார்.
வெப்ப மண்டலம் போன்றவை ஒருகாலத்தில் ஆண்டு முழுவதும் நிலையான வெப்பநிலை நிலவும் கடல் சூழல் பகுதிகளாக இருந்தன. 2 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு உலகில் இருக்கும் எல்லா பவளப் பாறைகளையும் அழித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. உலகில் உள்ள மற்ற எல்லா சூழல் மண்டலங்களையும் விட இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன.
இப்பகுதிகள் பெரும்பாலும் ஏழை நாடுகளைச் சேர்ந்த ஐநூறு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. நாம் உடனடியாக செயல்படாவிட்டால் இவை பூமியில் இருந்தே மறையும் அபாயம் உள்ளது என்று மார்ஷம் கூறுகிறார்.
தாவரங்கள் தரும் ஆக்சிஜனைதான் நாம் சுவாசிக்கிறோம்!
ஆள்பவர்களுக்கு பவளப்பாறைகள் அழிவது பற்றி கவலையில்லை. ஆனால் எந்த ஒரு சூழல் மண்டலமும் இவை இல்லாமல் அதிக நாட்கள் நீடித்து நிலைத்திருக்க முடியாது. இன்றுள்ள நிலையில் உலகின் எந்த ஒரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்து வரும் பாதிப்புகளில் இருந்து தப்பமுடியாது. உலகில் எல்லாவற்றிற்கும் பணரீதியான மதிப்பு இல்லை. உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சுக்காற்றுக்கும் தாவரங்கள் அவசியம். அவை தரும் ஆக்சிஜனையே நாம் சுவாசிக்கிறோம்! இதை நாம் மறந்து விடுகிறோம்.
நிலப்பகுதி வெப்பம் சூழல் மண்டலங்களைப் பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் இப்போதே தொடங்கியுள்ளன. 4.4 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வில் பூமியில் இன்று வாழும் 41% நில வாழ் முதுகெலும்பிகள் 2099ல் அதி வெப்ப நிகழ்வுகளால் பாதிக்கப்படும் என்று சமீபத்தில் நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளிவந்த ஆய்வு எச்சரிக்கிறது. வெப்ப உயர்வு உயிரினங்களின் வளர்ச்சி, இனப்பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் நடத்தை போன்ற பலவற்றில் அச்சமூட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குளிர்ச்சியான இடங்களை தேடிச் செல்லும் உயிரினங்கள்
இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 40% முதுகெலும்புள்ள உயிரினங்கள் அழிந்துவிடும். சகிக்க முடியாத வெப்பத்தில் இருந்து தப்ப உயிரினங்கள் மலைப்பகுதிகளுக்கும் துருவப் பகுதிகளுக்கும் இடம்பெயர்கின்றன. இதன் விளைவாக பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும். வெப்பமான பூமியில் இயற்கை மெல்ல மெல்ல நிலப்பகுதிகளையும், ஏரி குளம் போன்ற நீர்நிலைகளையும் அந்த சூழ்நிலைக்கேற்ப தகவமைக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நகரப்பகுதி வெப்ப உயர்வு 2 டிகிரி செல்சியஸ் அளவிற்குக் குறையக் காரணமாக இருந்த கொலம்பியாவில் மெடலின் (Medellin) பகுதியில் உள்ள பசுமை பெருவழிப்பாதை போன்ற திட்டங்கள் மூலம் வெப்பம் மிகுந்த வருங்கால உலகில் நிலம், நீர்நிலைகள், மரங்கள் போன்றவை பூமியைக் குளிரச் செய்ய உதவும் என்று 'பூமியின் வருங்காலக் குளிர்ச்சியடையும் போக்கு' பற்றி ஆராயும் ஆக்ஸ்போர்டு மார்ட்டின் திட்ட மூத்த ஆய்வாளர் பேராசிரியர் நிக்கோல் மிராண்டா (Prof Nicole Miranda) கூறுகிறார்.
பசுமைப் போர்வை போர்த்தப்பட்ட நிலப்பரப்பும் இயல்பான சூடுடைய கடலும் இருந்தால் மட்டுமே நாளை மனிதன் என்ற உயிரினமும் பூமியில் வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்
- மரம்
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.