நஞ்சுள்ள புல்வகைப் பட்டாணி (Grass pea) காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைத் தாக்குப் பிடித்து நாளைய உலகின் உணவாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மரபணு எடிட்டிங் அல்லது தேர்ந்தெடுத்த கலப்பின செயல்முறை மூலம் புரதம் நிறைந்த, வறட்சியை சமாளித்து வளரும் நஞ்சற்ற பட்டாணி ரகத்தை உருவாக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் புவி வெப்ப உயர்வால் உலகில் ஏற்படும் பெரும் பட்டினியைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

லாத்திரஸ் சாட்டிவஸ் (Lathyrus sativus) என்ற அறிவியல் பெயருடைய இந்த செடி, உலகின் மிக மோசமான வறண்ட நிலப்பகுதிகளில் வளர்கிறது. கடினமானது , சத்துகள் நிறைந்தது என்றாலும் குணப்படுத்த முடியாத பக்கவாதத்தை குறிப்பாக பலவீனமானவர்களிடம் இந்தப் பயிர் ஏற்படுத்துகிறது. இதனால் இப்பயிர் மற்ற பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும்போது ஒரு தற்காப்புப் பயிராக மட்டுமே வளர்க்கப்படுகிறது. என்றாலும் இதன் நஞ்சினால் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எத்தியோப்பியா மற்றும் அல்ஜீரியாவில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆனால் இப்போது இப்பயிரை ஆராய்ந்து வரும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவால் இதன் நஞ்சிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வெப்பமடைந்து வரும் பூமியில் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு பாதுகாப்பான மதிப்புமிக்க பயிரை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதில் இருந்து கொடுக்க முடியும் என்று நார்ஃபக் (Norfolk) ஜான் இன்னஸ் (John Innes) ஆய்வு மையத்தின் திட்ட விஞ்ஞானி டாக்டர் ஆன் எட்வர்ட்ஸ் (Anne Edwards) கூறுகிறார்.grass peaநஞ்சிற்குக் காரணமானவை

நஞ்சை ஏற்படுத்தும் முக்கிய உயிரி வேதிப்பொருட்கள் பல படிகள் மூலம் கண்டறியப்பட்டன. இதன் சிக்கலான மரபணு வரிசையில் உள்ள பொருட்கள் ஆராயப்பட்டது.

நச்சுத் தன்மையை உருவாக்கும் பொருட்களை அகற்றும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தாவரத்தில் நஞ்சு உண்டாகும் வழிமுறைகள் எவை என்பது தெரிய வந்தது.

புதிய ரகம் நஞ்சு இல்லாமல் உருவாக்கப்பட்டால், அது வறட்சியைத் தாக்குப் பிடிக்க இயலாத பயிராக மாறிவிடக் கூடாது என்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர். உருவாக்கப்பட்ட புதிய ரகம் முற்றிலும் அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே நஞ்சு உடையவையாக இருந்தன. சரிவிகித உணவின் ஓர் அம்சமாக உண்ணப்படும்போது இப்பயிர் பாதுகாப்பானது. ஆனால் மற்ற பயிர்களின் விளைச்சல் குறையும்போது இது மட்டுமே நன்றாக வளர்கிறது. அப்போது இதை முக்கிய உணவாக எடுத்துக் கொண்டால் லாத்தரிஸம் (Lathyrism) என்ற நோய் ஏற்படுகிறது.

இந்த நோயைப் பற்றி முதல்முதலாக கிரேக்க மருத்துவர் ஹிப்பாக்கெரட்டிஸ் (Hippocrates) கூறினார். ஸ்பெயின் ஓவியர் கோயாவின் (Goya) அக்வாட்டின் (aquatin) படம் மாட்ரிட் நகரை நெப்போலியன் கைப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கிறது. இதில் லாத்தரிஸத்தால் ஒரு பெண் நடக்க முடியாமல் அவதிப்படுவதையும், அவளைச் சுற்றி பசியால் வாடும் மக்கள் கூட்டம் நஞ்சுள்ள பட்டாணிக்காகக் காத்திருப்பதையும் காட்டுகிறது.

இருவித்திலை தாவரத்தின் பயன்கள்

இது ஒரு இருவித்திலை தாவரம். இதன் வேரில் வாழும் பாக்டீரியாக்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி அம்மோனியம் கூட்டுப்பொருட்களாக மாற்றுகிறது. இது பிறகு மண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.

இப்பயிர்களின் எண்ணற்ற வேர்கள் அடங்கிய வேர்த்தொகுப்பு மண்ணை ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன. அதனால் இவற்றை மேற்கத்திய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வறண்ட நிலப்பகுதிகளில் வளர்த்தால் பூமியில் மண்ணின் விளைச்சல் திறன் அதிகமாகும்.

நம்பிக்கையூட்டும் பயிர்

வரும் நாட்களில் காலநிலை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வறட்சி, வெள்ளப்பெருக்கு, உப்பு நீரில் பயிர்கள் மூழ்குதல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வளரும் புதிய ரகங்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும்போது, இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாதுகாப்பான புல்வகை பட்டாணி ரகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள நிபுணரும் நாரிஜ் (Norwich) நீடித்த நிலையான வளர்ச்சி மையத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் பீட்டர் எம்ரிச் (Dr Peter Emmrich) கூறுகிறார்.

வெப்ப உயர்வால் இயற்கைப் பேரிடர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பூமியில் பட்டாணியின் இந்த புதிய ரகம் நாளை உலக மக்களின் பசி போக்க உதவும் பயிராகலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/jul/08/uk-scientists-could-make-poisonous-grass-pea-a-valuable-food-crop?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

மரங்களால் உருவாக்கப்பட்ட பவளப் பாறைகள் உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிரமிடு வடிவத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரி மரங்களால் ஆக்கப்பட்ட செயற்கை பவளப்பாறை அமைப்புகள் சில கடல்வாழ் உயிரினங்களின் வாழிடத்தை மீட்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. வளமிழந்த கடல் வாழிடங்களை கடலாழத்தில் அமைக்கப்படும் இந்த மர அமைப்புகள் மூலம் உயிர் பெறச் செய்ய முடியும்.

கடல்வாழ் உயிரினங்களில் 25% உயிரினங்களை பவளப் பாறைகள் காப்பாற்றுகின்றன; இந்த உயிரினங்களுக்கு வீடு, உணவு மற்றும் அவை இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்க்க பரந்து விரிந்த வாழிடத்தை கொடுக்கின்றன. பவளப் பாறைகளே நீர்வாழ் சூழலியல் சுழற்சியின் முதுகெலும்பு. 1950களில் இருந்து காலநிலை மாற்றத்தினால் பாதிக்கும் மேற்பட்ட இயற்கை பவளப் பாறைகள் அழிந்து விட்டன. இது கடல்சார் உயிர்ப்பன்மயத் தன்மையை வெகுவாகப் பாதித்துள்ளது.

உயிர்ப் பன்மயத் தன்மையில் நிகழும் இந்த பேரிழப்பைத் தடுக்க உடனடியாக எதுவும் செய்யாவிட்டால் உலகளவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க கடல்வாழ் உயிரின சமூகங்களை மீட்க விஞ்ஞானிகள் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். கடலின் அடித்தட்டில் மரங்கள் மூழ்குமாறு செய்யப்பட்டு செயற்கையான பவளப்பாறை திட்டுகள் உருவாக்கப்படுகின்றன.artificial reefநெதர்லாந்து கடலில்

இதில் ஒன்று, நெதர்லாந்து வாடன் (Wadden) கடற்பகுதியில் கீழே விழுந்த பேரி மரங்களால் பிரமிடு வடிவில் உருவாக்கப்பட்டு கடலின் அடித்தட்டில் மூழ்கச் செய்யப்பட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட செயற்கை பவளப்பாறை திட்டுகள்.

ஆய்வாளர்கள் இந்த அமைப்புகளை ஆறு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து கண்காணித்தனர். ஆழ்கடலில் ஜெராசிக் காலத்தில் மூழ்கியதாகக் கருதப்படும் மரபாகங்கள் பற்றிய செய்திகள் கிடைத்துள்ளன.

மரங்கள் விலை மலிவானவை. கழிவாக கைவிடப்படுபவை. கான்க்ரீட் அல்லது மூழ்கிய கப்பல் பாகங்களைப் பயன்படுத்துவதை விட மலிவானவை என்பதால் பவளப்பாறை உயிரினங்களை வளர்க்க இவை தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கடல்சார் ஆய்வுக்கான ராயல் நெதர்லாந்து ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும் முனைவர் பட்ட மாணவருமான ஜான் டிக்சன் (Jon Dickson) கூறுகிறார்.

புது வீட்டிற்கு வந்து குடியேறிய உயிரினங்கள்

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆய்வுக்குழுவினர் இவற்றை ஆராய்ந்தபோது அதில் ஆல்காக்கள், மீன்களின் முட்டைகள் மற்றும் பதினைந்திற்கும் மேற்பட்ட பார்னக்கிள்கள் (Barnacles) போன்ற இடம்பெயராத, ஒரே இடத்தில் நிலையாக வாழும் கடல்வாழ் உயிரினங்கள் (sessile organisms) வாழ்வதைக் கண்டுபிடித்தனர். மர பவளப்பாறை வீடுகள் அமைக்கப்பட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகளில் இருப்பதை விட மூன்று மடங்கு அதிக மீனினங்கள் வாழ்வது தெரிய வந்துள்ளது.

மரபாகங்களால் அமைக்கப்படும் ஆழ்கடல் பவளப்பாறை அமைப்புகளின் உதவியுடன் சில குறிப்பிட்ட பவளப்பாறை உயிரினங்களை மீட்க முடியும் என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளன என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். இத்திட்டத்தை வட கடல் போன்ற உலகின் மற்ற கடற்பகுதிகளில் அமைத்து அழிந்து வரும் உயிரினங்களைக் காப்பாற்றலாம்.

2017ல் மரக்கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை பவளப்பாறை அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டது பற்றிய செய்திகள் வெளிவந்தன. கடலின் அடித்தட்டில் போடப்பட்ட இடத்திற்கேற்ப மரப்பகுதிகளால் பல உயிரினங்கள் கவரப்பட்டன. நெதர்லாந்து மற்றும் வட கடலில் தெளிவான நீர் அமைந்துள்ள கடற்பகுதிகளில் இந்த ஆய்வுகள் விரிவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 200 மீட்டர் ஆழத்திற்கும்

அத்தகைய இடங்களில் கடலின் மேற்பகுதியில் இருந்தே கீழ்பகுதியில் மர அமைப்புகளில் வாழும் மீன் மற்றும் இதர உயிரினங்களுக்கு இவை எவ்வாறு வாழிடத்தை ஏற்படுத்தித் தருகின்றன என்பதை விரிவாக அறிய முடியும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். ஒவ்வொரு 200 மீட்டர் ஆழத்திற்கும் கடலில் வாழும் தாவர விலங்குகள் வேறுபடுகின்றன. இதனால் இந்த முறையை உலகின் எல்லா இடங்களிலும் அமைக்கப்படுவதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் உயிரினங்கள் அழிவில் இருந்து மீட்கப்படும் என்று ஜான் டிக்சன் கூறுகிறார்.

நீர்நாய்கள் உருவாக்கும் பவளப்பாறை அமைப்புகள்

உலகளவில் கடல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நீர்நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றால் உருவாக்கப்படும் பவளப்பாறை அமைப்புகள் (Oister reefs) கடற்சூழலில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து செயல்படுகின்றன. இவை சுற்றியுள்ள நீரை வடிகட்டி சுத்தப்படுத்துகின்றன. பவளப்பாறை உயிரினங்களுக்கு வாழிடம் மற்றும் உணவளிக்கின்றன. சில இடங்களில் புயல்கள், உயரமான அலைகளில் இருந்து உயிரினங்களைக் காப்பாற்றுகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றன. வளமான கழிமுகத் துவாரங்களை பாதுகாக்க உதவுகின்றன.

வட கடலின் தென்பகுதியில் முன்பு நீர்நாய்களால் உருவாக்கப்பட்ட 30% பவளப்பாறைகள் இருந்தன. ஆனால் இப்போது இது வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே உள்ளது. உலகளவில் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்துவரும் நிலையில் அதிக செலவில்லாத சூழலுக்கு நட்புடைய இது போன்ற திட்டங்கள் எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.

கண்ணெதிரில் ஆறாம் இனப்பேரழிவு நிகழும் இன்றைய நிலையில் பவளப்பாறை உயிரினங்களைக் காக்க இது போன்ற உயிர்ப் பன்மயத் தன்மை செயல்முறைகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வருங்காலத்தில் பூமி என்றொரு உயிர்க்கோளம் நீடித்து நிலைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/aug/25/reefs-made-from-trees-could-help-restore-biodiversity-study-finds?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

பார்வைக்கு வெள்ளி போல காணப்படும் லித்தியத்தின் அணு எண் 3. கல் என்று பொருள்படும் லித்தோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து இதற்கு லித்தியம் என்ற பெயர் ஏற்பட்டது. தனிம வரிசை அட்டவணையில் ஆல்கலைல் பிரிவில் உள்ள இது, எடை குறைவான ஓர் உலோகம். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் 5.9 லட்சம் டன் லித்தியம் சேகரம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் உலகில் மிக அதிக அளவில் இதன் சேகரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மின்கலங்களும் லித்தியமும்

பொலிவியா, அர்ஜெண்டினா, சிலி, யு எஸ், ஆஸ்டிரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. அயனி மின்கலங்களின் (ion battery) உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவில் இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில் காஷ்மீரில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சரியான விதத்தில் பயன்படுத்துவது என்பது சவாலான ஒன்று.

2030ல் 12.5 கோடி மின்சார வாகனங்கள் சாலைகளில் ஓடத் தொடங்கும் என்று சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கூறுகிறது. இது தவிர போன், மடிக்கணினி போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளில் இந்த லித்தியம் மின்கலங்கள் உள்ளன.

முந்தைய மின்கலங்களைக் காட்டிலும் இந்த மின்கலங்களைப் பயன்படுத்தி வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும். எடை மிகக் குறைவு. அதிக நேரம் மின்னேற்றம் நிற்கும்.

இந்த காரணங்களால் இவை இப்போது பிரபலமடைந்துள்ளன. மின் தண்டுகளின் (electrodes) உற்பத்தி, செல்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இவற்றின் சிறப்புப் பண்புகள்.

ஆற்றல் கிடைப்பது எவ்வாறு?

ஒரு லித்தியம் மின்கலத்திற்குள் பல செல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் நேர்மின் தண்டு (anode), எதிர்மின் தண்டு (cathode) மற்றும் மின் பகுளி (electrolyte) ஆகியவை உள்ளன. மின்பகுளிக் கரைசல் வழியாக எலக்ட்ரான்கள் நேர்மின் தண்டில் இருந்து எதிர்மின் தண்டிற்குப் பயணம் செய்யும்போது ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது போன்ற பல செல்களை ஒருங்கிணைத்து தேவையான வோல்டேஜை உண்டாக்குவதன் மூலம் இது இயங்குகிறது.

பிரித்தெடுக்கும் முறைகள்

பூமியில் இருந்து தாது மற்றும் உப்பு நீருள்ள குளங்களில் நீரை ஆவியாக்குதல் முறைகள் மூலம் லித்தியம் தோண்டி பிரித்தெடுக்கப்படுகிறது. தாதுவில் இருந்து இதைப் பிரித்தெடுப்பது சிக்கல் நிறைந்தது. உலகில் 145 வகையான தாதுக்களில் லித்தியம் உள்ளது. என்றாலும் இவற்றில் ஐந்து தாதுக்களில் இருந்து மட்டுமே வணிகரீதியில் இது பிரித்தெடுக்கப்படுகிறது.lithium extractionஇதன் தாதுக்கள் ஸ்போடுமின் (spodumene) லெப்பிடோலைட் (lepidolite மற்றும் பெட்டலைட் (petalite) போன்றவை. என்றாலும் பரவலாக ஸ்போடுமின் தாதுவே இதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா உலகில் முதலிடத்தில் உள்ளது. தாதுவில் இருந்து பிரித்தெடுக்கும் முறையைக் காட்டிலும் உப்பு வயல்களில் இருந்து பிரித்தெடுக்கும் முறையே எளிமையானது; பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.

உப்பு வயல்களில் இருந்து லித்தியம்

பூமிக்கடியில் இருந்து உவர் நீர் தரையின் மேற்பகுதிக்கு பம்ப் செய்து நிறைக்கப்படுகிறது. ஆவியாக்குவதற்காக அமைக்கப்படும் ஏரிகளில் சேகரித்து வைக்கப்படும் இந்த நீர் சூரியனின் வெப்பத்தால் நீராவியாக மாறுகிறது. அப்போது நீரில் இருக்கும் லித்தியம் உட்பட உள்ள உப்புகள் பிரிந்து வருகின்றன. கால்சியம் ஹைடிராக்சைடின் உதவியுடன் உப்பு நீரில் இருந்து தேவையற்ற பொருட்கள் பல கட்டங்களில் அகற்றப்படுகின்றன.

படிப்படியாக லித்தியத்தின் அளவு அதிகமாகிறது. அப்போது தொடர் வினைகள் மூலம் இந்த உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது.

மதிப்பு

இதன் மதிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. 2021 இறுதியில் ஒரு டன் லித்தியத்தின் விலை 14,000 டாலர். 2022 மார்ச்சில் இது 76,700 டாலராக உயர்ந்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட அர்ஜெண்டினாவிற்கு இந்த உலோகத்தின் சேகரம் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. பிரித்தெடுப்பதற்காக இந்நாட்டிற்குப் படையெடுத்து வந்த வெளிநாட்டுக் கம்பெனிகளை அர்ஜெண்டினா வரவேற்றது. இவை லித்தியம் உற்பத்திக்காக இங்கு 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

வருமானம் ஈட்டித் தரும் லித்தியம்

கடந்த பத்தாண்டில் இந்நாட்டின் லித்தியம் ஏற்றுமடி வருமானம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. லித்தியம் அயனி மின்கலம் மற்றும் அதன் ஏற்றுமதியில் தென்கொரியா முன்னணியில் உள்ளது. மின்கலங்கள் ஏற்றுமதி மூலம் தென்கொரியாவின் வருமானம் கடந்த பத்தாண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2018ல் மட்டும் மின்கல ஏற்றுமதித் தொழிலின் மூலம் மட்டும் இங்கு 2000 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டன. விரைவில் இது இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரிச்சலுகை, பிற சலுகைகள் மற்றும் அயல்நாட்டு ஒத்துழைப்புக் கொள்கையின் மூலம் தென்கொரியா 2030ம் ஆண்டிற்குள் லித்தியம் மின்கலங்களின் உற்பத்தித் தலைநகரமாக மாறத் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2021-22ல் ஐந்து பில்லியன் டாலராக இருந்த லித்தியம் ஏற்றுமதி வருமானம் 2022-23ல் 16 பில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் என்று நம்பப்படுகிறது.

சூழல் பிரச்சனைகள்

பிரித்தெடுத்தல் பெருமளவில் நடக்கும் இடங்களில் வறட்சி அதிகமாக ஏற்படுகிறது. லித்தியத்தைப் பிரித்தெடுக்க நிலத்தின் அடியில் இருக்கும் ப்ரைன் (brine) என்ற உப்பு நீர் மட்டுமே பயன்படுகிறது. உப்பு நீர் நிலத்தின் அடியில் இருந்து மேற்பரப்பிற்கு பம்ப் செய்யப்படும்போது சுற்றிலும் இருக்கும் நன்னீர் அந்த இடத்திற்குச் சென்று நிறைவதே வறட்சி ஏற்படக் காரணம் என்று கருதப்படுகிறது.

ஒரு டன் லித்தியத்தைப் பிரித்தெடுக்க இரண்டு மில்லியனுக்கும் கூடுதலான நீர் தேவைப்படுகிறது. இதனால் மற்ற பல சூழல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

பிரித்தெடுக்கப்படும் இடங்களுக்கு அருகில் இருக்கும் நன்னீர் மூலங்களில் நச்சுத்தன்மையுடைய கழிவுகள் வந்து சேர்கின்றன. இது பிரதேசவாசிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதிக்கிறது. காலநிலை மாற்றம் மற்றும் உலோகத்தைப் பிரித்தெடுக்க பெருமளவில் நீர் ஆவியாக்கப்படுவதால் பெருத்த சூழல் நாசம் ஏற்படுகிறது. உப்பு நீர்த் தடாகங்களின் பரப்பு இதனால் சுருங்குகிறது.

உப்பு நிலங்களில் காணப்படும் டை ஆட்டம் போன்ற ஆல்காக்கள் இப்பகுதியில் வாழும் சிலியன், ஆண்டீஸ் மற்றும் ஜேம்ஸ் பூநாரைகளின் முக்கிய உணவுகளில் ஒன்று. ஆல்காக்கள் இல்லாமல் போவதால் இவற்றின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

பிரித்தெடுக்கப்படும்போது கார்பன் டை ஆக்சைடு உட்பட பல பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சாதாரணமாக மரங்கள் இருப்பதில்லை. இதனால் ஒளிச்சேர்க்கைக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. இது புவி வெப்ப உயர்வுக்கு வழிவகுக்கிறது.

அழியும் வயல்களும் ஆரோக்கியப் பிரச்சனைகளும்

இத்தொழிலிற்காக பெருமளவிலான நிலப்பகுதிகள் பறிக்கப்படுகின்றன. இதனால் வளமான வயல்வெளிகள் நஷ்டமடைகின்றன. இது அந்த நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பாதிக்கிறது. சுரங்கங்களுக்கு அருகில் வசிக்கும் மனிதர்கள், விலங்குகளுக்கு சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படுகின்றன. கந்தக அமிலம், யுரேனியம், மக்னீசியம் போன்ற நச்சு வேதிப்பொருட்கள் அடங்கும் பெருமளவிலான கழிவுகள் வெளித்தள்ளப்படுகின்றன.

இந்தியாவில் லித்தியம்

காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் சேகரத்தை இந்தியப் பொருளாதாரத்தின் பேட்டரி என்று பிரதேச ஊடகங்கள் கொண்டாடுகின்றன. ஆனால் இந்த சேகரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே எல்லாம் அமையும். லித்தியம் சேகரங்கள் பூமியில் அபூர்வமானவை இல்லை. ஒரு சேகரத்தை சுரங்கம் மூலம் எடுக்கும் வகையில் அந்த இடத்தை மாற்றி வணிகரீதியில் லாபகரமாக லித்தியத்தை பிரித்தெடுப்பது ஒரு நாட்டிற்கு முன்புள்ள பெரிய சவால்.

இந்தியாவை விட அதிக பரப்பில் லித்தியம் சேகரங்களைக் கண்டுபிடித்த பல நாடுகள் பிரித்தெடுக்கும் பணிகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. எடுத்துக்காட்டு ஜெர்மனி மற்றும் கனடா. ஆஸ்திரேலியா, சிலி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியையே ஜெர்மனி இப்போதும் நம்பியிருக்கிறது. பிரித்தெடுக்கும் இடங்களை முழுமையாக இயங்கச் செய்ய உள்ள நடைமுறைத் தடைகளே இதற்குக் காரணம்.

தொழில்நுட்பச் சிக்கல்கள் தவிர காஷ்மீரின் நில அமைப்பு, அரசியல் நிலை ஆகியவை அங்கிருந்து லித்தியம் பிரித்தெடுப்பதில் பெரும் சவால்களாக உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள பகுதியில் இருந்தே லித்தியம் சேகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகள்

மின்சார வாகன உற்பத்தித் துறையில் இதன் மூலம் இந்தியா முன்னணி இடத்தைப் பெற முடியும். இது காஷ்மீரில் இப்போது இருக்கும் வேலை வாய்ப்பின்மைக்கு ஒரு தீர்வாக அமையும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். சூழலுக்கும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் லித்தியம் உற்பத்தி செய்யப்பட்டால் இந்தியா வருங்கால உலகின் மின்சார வாகன உற்பத்தியில் தலைமையிடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/lithium-deposits-in-india-1.8574280

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இந்தியாவின் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் இருப்பது போல, தென்னமெரிக்காவில் ஆன்டீஸ் மலைத்தொடர் உள்ளது. கிழக்கில் உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகளில் பூமியின் மிகப் பெரிய அமேசான் நதி ஓடுகிறது. மேற்கில் பெரும் பரப்பில் அட்டகாமா (Atacama) பாலைவனம் அமைந்துள்ளது. அட்டகாமாவின் சிறப்புகள் அனைத்தும் அதன் தனித்தன்மையால் உலகப் புகழ் பெற்றவை.

சராசரி 600 மீட்டர் உயரமுள்ள இந்த பாலைவனத்தில் 4,000 மீட்டர் வரை உயரமுடைய பிரதேசங்கள் அமைந்துள்ளன. வடக்கு சிலி, பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் இப்பாலைவனம் பரவியுள்ளது. துருவப் பகுதிகளைத் தவிர உலகில் மிக வறண்ட பாலைவனமாக இது கருதப்படுகிறது. இந்த அளவு கடுமையான வறட்சி உள்ளபோதும், பல தாவரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பசுபிக் கடலோரம் அமைந்துள்ள இது கேரள மாநிலத்தின் பரப்பைப் போல இரண்டரை மடங்கு பெரியது.

ஹம்போல்ட் நீரோட்டம்

மிகக் குறைவான மழை மட்டுமே பெய்யும் இந்தப் பாலைவனத்தின் சில பகுதிகளில் வரலாற்றில் ஒரு முறை கூட மழை பெய்ததாகப் பதிவுகள் இல்லை.atacama desert chileதென்னமெரிக்காவின் மேற்கில் நிலநடுக்கோட்டுத் திசையில் அட்டகாமாவின் வட பகுதியில் கரையில் இருந்து 500 - 1,000 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு நோக்கி ஹம்போல்ட் அல்லது குளிர் நீரோட்டம் என்று அழைக்கப்படும் நீரோட்டம் செல்கிறது. குறைந்த உவர் தன்மையுடைய நீரால் ஆன இத்தகையவை ஹம்போல்ட் நீரோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இதில் அடங்கியிருக்கும் குளிர்ந்த நீரும் அதனுடன் வீசும் காற்றும் மழைமேகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதுவே இப்பகுதி ஒரு பாலைவனமாக மாறக் காரணம். இது தவிர அமேசான் கரையில் இருந்து ஈரப்பதம் உடைய வாயு இப்பகுதிக்கு வராமல் ஆண்டீஸ் மலைத்தொடர் தடுத்து நிறுத்துகிறது. இதனால் இப்பகுதி முழுமையான ஒரு பாலைவனமாக மாறியது.

ஆய்வுகளின் பரிசோதனைக்கூடம்

கடும் வறட்சி, மிகக் குறைவான தாவரங்கள், தாதுக்கள் அடங்கிய வளமான நிலப்பகுதி ஆகியவற்றால் இந்த இடம் செவ்வாய் கோளின் நில மேற்பரப்பை ஒத்துள்ளது. இதனால் நாசாவும், மற்ற விண்வெளி நிறுவனங்களும் இப்பாலைவனத்தை செவ்வாயில் பயணிக்கும் ஊர்தி வாகனங்கள் (rowers) மற்றும் பிற கருவிகளைப் பரிசோதித்துப் பார்க்கும் தளமாக பயன்படுத்துகின்றன. கடினமான வாயு மண்டலம் உள்ளதால் இது போன்ற இடங்களில் நிலவும் சூழ்நிலையை சமாளித்து வாழ உதவும் வாழ்க்கை முறை பற்றி ஆராயும் இடமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

வறண்ட நிலப்பகுதியாக இருந்தாலும் அட்டகாமாவில் பலதரப்பட்ட சூழல் மண்டலங்கள் காணப்படுகின்றன. இதில் உவர் நிலப்பரப்புகள், உப்பு தடாகங்கள், வெப்ப நீரூற்றுகள், தாவரங்கள் வாழவே முடியாத அளவு வறண்ட பகுதிகள் போன்றவை அடங்கும். கடற்கரைப் பகுதியில் உருவாகும் மூடுபனியில் இருந்து கிடைக்கும் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வளரும் சில தனிச்சிறப்புமிக்க தாவரங்கள் மற்றும் விலங்குகளை இங்குள்ள சில பகுதிகளில் காணலாம்.

வான் ஆய்வுகளின் சொர்க்கபூமி

தெள்ளத்தெளிவான வானம், குறைந்த ஈரப்பதம், குறைவான ஒளி மாசு போன்றவை உள்ளதால் இந்த இடம் வான் ஆய்வுகளுக்குப் புகழ் பெற்றது. இங்கு இருந்து இரவில் வானத்தை உற்றுநோக்கும்போது மிகச்சிறந்த வான் காட்சிகளைக் காணலாம். அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் அரே (ALMA) உள்ளிட்ட பல முக்கிய வான் ஆய்வு கண்காணிப்பு நிலையங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய இங்கு நிறுவப்பட்டுள்ளன.

கணிசமான அளவு செம்பு சேகரம் உள்ள இப்பகுதியில் இருந்து சோடியம் நைட்ரேட், லித்தியம், தங்கம், வெள்ளி, போரான் போன்றவை கிடைக்கின்றன. நட்சத்திரங்கள் இல்லாத வானம், கடினமான இடங்களில் உயிர் வாழும் உயிரினங்களின் திறன், தாதுவளம் போன்றவற்றைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

அட்டகாமாவின் வில்லன்

மனிதனின் கால்தடம் பதியாத தனிமைப்பட்ட அழகு பூமியாக இந்த இடம் உள்ளது என்று கருதினால் அது தவறு! பெருமளவில் உலகின் பல பகுதிகளில் இருந்தும், பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் துணிவகைகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. மனிதன் ஆடை பயன்படுத்தும் முறையில் கடந்த சில ஆண்டுகளில் அசுரவேக மாற்றங்கள் நிகழ்கின்றன.

மின்னல் வேகத்தில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபாஷன் எனப்படும் இந்த முறை ஆடை உற்பத்தியை, உடனடியாக மாற்ற வேண்டிய ஒரு முக்கிய சூழல் பிரச்சனை என்று ஐநா கூறுகிறது. 2000-2014ல் உலக ஆடை உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்தது. விற்பனையில் 60% உயர்வு ஏற்பட்டது. ஆனால் முன்பு பயன்படுத்தப்பட்டதில் பாதியளவு துணிகள் மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் ஐந்தில் மூன்று பகுதியும் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்குள் தூக்கி எறியப்படுகின்றன. இவை தேவையான முறையில் மறுசுழற்சி செய்ய, புதுப்பிக்கவோ சாத்தியம் இல்லாத இடங்களுக்குப் போய்ச் சேர்கின்றன. அங்கு இவை மலை போல குவிக்கப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியும் உலகில் ஒரு டிரக் நிறைய துணிகள் இவ்வாறு கைவிடப்படுகின்றன.atacama desert waste clothesஇது போன்ற துணிகள் மலை போல குவிக்கப்பட்டிருக்கும் பல இடங்கள் அட்டகாமாவில் உள்ளன. மிக அழகான இந்த நிலப்பரப்பு வளர்ந்த நாடுகளின் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் இடமாக மாறியுள்ளது. உள்நாட்டுத் தொழிற்துறை மற்றும் பொருளாதாரத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சிலி கரையோரம் அமைந்துள்ள இக்யுயிக் (Iquique) துறைமுகத்தை டியூட்டி ஃப்ரீ துறைமுகமாக மாற்றியது.

இறக்குமதி மற்றும் இறக்குமதி செய்பவற்றை புதுப்பித்து ஏற்றுமதி செய்து பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கத் திட்டமிடப்பட்டது. இந்த துறைமுகம் தென்னமெரிக்காவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய டியூட்டி ஃப்ரீ துறைமுகம். அந்த நாட்டு மக்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் துணிகள் அங்கு வந்து சேர்ந்தன. ஆனால் நினைத்தது ஒன்று. நடந்தது வேறொன்று.

லட்சக்கணக்கான டன் பயன்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட துணிவகைகள் துறைமுகத்தின் வழியாக உள்ளே நுழைந்தது. கடந்த 2022ல் மட்டும் நான்கரை கோடி டன் துணிகள் இங்கு வந்தன. ஆனால் வருவதில் பெரும்பகுதியும் பின்னர் ஒருமுறை கூட பயன்படுத்த முடியாத துணிகளே. நம் ஊர் குப்பைக் கிடங்குகளில் பயன்படக்கூடிய பொருட்களைப் தேடும் மனிதர்கள் போல நல்ல துணிமணிகள் ஏதேனும் உள்ளனவா என்று தேடும் மனிதர்களை இங்கு சர்வசாதாரணமாகக் காணலாம்.

தரம் பிரிக்கப்படும் பாழான துணிகள்

இறக்குமதி செய்யப்படுபவற்றைத் தரம் பிரித்து ஏற்றுமதி செய்வதே இதற்கான திட்டத்தைக் கொண்டு வந்தபோது இருந்த நோக்கம். இதனுடன் தொடர்புடைய தொழிற்பிரிவுகள் இங்கு ஏராளமாக செயல்படுகின்றன. இத்தகைய 2000 பிரிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை வெளிநாட்டு உரிமையாளர்களின் கைவசம் உள்ளவை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் துணிகளை ஊழியர்கள் அவற்றின் தரத்திற்கேற்ப வகைப்படுத்துகின்றனர்.

இவற்றில் சிறந்தவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரமற்றவற்றை டிரக் டிரைவர்கள் நகரப் பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். அவை அங்கு மறுபடி தரம் பிரிக்கப்பட்டு உள்ளூர் கடைகளில் விற்கப்படுகின்றன. ல வெஃப்ராடில்லா என்ற ஒரு கடைத்தெருவில் இத்தகைய துணிகளை விற்கும் ஏழாயிரம் கடைகள் உள்ளன. கடைகளில் விற்கப்பட முடியாதவை நேராக பாலைவன பூமியில் கொண்டு போய் மலை போல கொட்டப்பட்டு குவிக்கப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்படுபவற்றில் பெரும்பகுதி ஒருவிதத்திலும் பயன்படுத்த முடியாதவை. செயற்கை நூலிழைகளால் உருவாக்கப்பட்ட துணிவகைகள் ஒருபோதும் மக்காமல் ஆண்டுகள் கணக்கில் கொட்டப்பட்ட இடங்களிலேயே கிடக்கின்றன. இந்த பாழ் துணி மலைகள் அளவில் பெரிதாகும்போது எரிக்கப்படுவதும் உண்டு. பாலியெஸ்ட்டர் போன்ற பிளாஸ்டிக் நாரிழைகளால் ஆன துணிகள் அணையாமல் தொடர்ந்து எரியும்.

அழிவில் இருந்து மீட்கப்படுமா இந்த அழகு பாலைவனம்?

கடுமையான நச்சுவாயுப் புகை காற்று மண்டலத்தில் நிறையும். குப்பை போடுபவர்களுக்கு சிலி அரசாங்கம் அபராதம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போதும் அந்தப் பட்டியலில் தூக்கியெறியப்படும் துணிகள் சேர்க்கப்படவில்லை. புதிய சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே அட்டகாமா என்ற இந்த அழகு பூமி அழியாமல் பாதுகாக்கப்படும்.

** ** **

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/atacama-desert-fashion-pollutions-eco-story-by-vinay-raj-1.8568581

&

https://www.ecowatch.com/chile-desert-fast-fashion-2655551898.html

&

https://en.m.wikipedia.org/wiki/Iquique

&

https://www.aljazeera.com/gallery/2021/11/8/chiles-desert-dumping-ground-for-fast-fashion-leftovers

 

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It