கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மா.செ.வெற்றிச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இந்திய யூனியனில், மாட்டின் மூத்திரத்தைப் பிடித்து அதனை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்ப்போம்.
கசிவுகளை சரிசெய்யும் ரோபோ
தண்ணீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவு காரணமாக கிட்டத்தட்ட 40% நீர் வீணாக்கப்பட்டு பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனைத் தடுக்க சிறு அளவிளான ரோபோ இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆம், தோழர்களே, அமெரிக்கவில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனம், இந்த இறகுப் பந்தைவிட சற்று பெரிதாக இருக்கும் ரோபோவை (MIT Leak Detector) கண்டுபிடித்துள்ளது. மனிதன் புகவே முடியாத இடங்களில் கூட, இந்த சிறிய ரோபோவை செலுத்திவிட்டால் போதும், அது, தானாக, அடைப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அடைத்து விடும். சமையல் எரிவாயு அடைப்புகளைக் கூட இந்த சிறிய ரோபோ மூலம் சரி செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், மிகச் சிறிய அளவிளான கசிவுகளைக் கூட சரிசெய்து விடலாம்.
ரோபோவின் மாதிரிப் படம்
நடமாடும் நீர் சுத்திகரிப்பு நிலையம்
வெள்ளம், நில நடுக்கம், புயல், பெரும் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் நிவாரணப் பணிகளின் போது, இருக்கும் மிகப்பெரிய சவால், உணவு மற்றும் குடிநீர். உணவு கிடைக்கா விட்டாலும் பராவயில்லை, குடிநீர் கிடைத்தால் போதும், அதைக் குடித்து கொண்டு சில நாட்கள் தாக்கு பிடிக்கலாம். அனால், பெருவெள்ளம் மற்றும் புயல் அடிக்கும் போது, கண் முன்னே நீர் இருந்தாலும், அதனைப் பயன்படுத்த முடியாது. கழிவுகள் மற்றும் சேறு கலந்து, குடிக்க பயன்படுத்த முடியாத அளவில் இருக்கும். இதற்கு, தற்போது ஒரு விடிவு வந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிறுவனம், நடமாடும் கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளது. குட்டியானையை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும், இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானலும் கொண்டு செல்லலாம். ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் கடல் நீரையும், 80,000 லிட்டர் கழிவு நீரையும், இந்த இயந்திரத்தைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கும் தர அளவில் சுத்திகரிப்பு செய்யலாம்.
நடமாடும் சுத்திகரிப்பு நிலையத்தின் மாதிரிப் படம்
ஞெகிழியில்லா ஞெகிழி
பிளாஸ்டிக் எனப்படும் ஞெகிழியின் தீமைகள் மற்றும் அதனால் எற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து தனியாக ஏதும் சொல்ல வேண்டியதில்லை. இந்தோனேசியாவைச் சேர்ந்த அவனி என்ற நினுவனம் மட்கும் நான் ஞெகிழி அல்ல என்னும் ஞெகிழியைத் தயாரித்துள்ளது. பிளாஸ்டிக்கை போலவே இருக்கும் இந்தத் தயாரிப்பு, 3- 6 மாதங்களுக்குள் மண்ணோடு மண்ணாக மட்கி விடும், எரித்தாலும், குறைந்த அளவில் மட்டும் சாம்பலைக் கொடுக்கும். ஸ்டாரச், சமையல் எண்ணெய் மற்றும் ஆர்கானிக் ரெசின்களைக் கொண்டு இந்த பிஸாஸ்டிக் தயாரிக்கப் படுகிறது.
- மா.செ.வெற்றிச் செல்வன்
- விவரங்கள்
- ஜோசப் பிரபாகர்
- பிரிவு: தொழில்நுட்பம்
மனித வாழ்வில் எக்காலத்திலும் அழகான ஒன்று “வானம்”. மிகச்சிறு வயதில் வானத்தை பார்த்து தினந்தோறும் வியந்திருக்கிறேன். அந்த பிரம்மாண்ட நீலப் போர்வையை பார்க்கும் போது மனம் விரிவடைவதை உணர்ந்திருக்கிறேன். வளர வளர அந்த ஆச்சர்ய உணர்வு மழுங்கி விட்டது. உண்மையில் அந்த சிறு வயதில் வானத்தைப் பற்றி எத்தனையோ கேள்விகள் என் மனதில் எழுந்திருக்கின்றன. ஆனால் பள்ளியில் மேல் வகுப்பு போக போக என் எல்லா கேள்விகளும் தொலைந்தே போய்விட்டன. பள்ளிகளில் விடைகள் மட்டுமே இருக்கின்றன. அந்த விடைகளுக்கான கேள்விகளைத்தான் நாம் கேட்க வேண்டும். நம் கேள்விகளுக்கான விடைகளை அங்கே கேட்க அனுமதியுமில்லை. அதற்கான சூழலும் இருந்ததில்லை. அந்தக் கேள்விகளையெல்லாம் இப்போது மறுபடியும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அப்போது அடிக்கடி ஒரு கேள்வி எழும். இந்த வானம் நாலாபுறமும் வெகு தூரத்தில் பூமியை குடை போல தொட்டுக்கொண்டிருக்கிறதே உண்மையில் எவ்வளவு தூரத்தில்தான் இது பூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது?. தமிழில் இதைத் “தொடுவானம்” என்று அழைப்பார்கள். சில நேரங்களில் இதை “அத்து வானம்” என்றும் அழைப்பார்கள். “அத்து” என்றால் எல்லை முடியும் இடம். நம் கண்களுக்கு வானம் முடிவதைப் போலத் தோன்றுவதால் அப்படி அழைப்பார்கள்.
அதிகாலையும் அடிவானமும் அற்புதமானது. அதுவும் நீங்கள் கடற்கரையில் இருந்தால் அதை விட ஜென் நிலை வேறோன்றுமில்லை. சூரியன் கடலிலிருந்து உதயமாகும் காட்சி இந்த உலகத்தின் முக்கியமான, அழகான நிகழ்வுகளுள் ஒன்று. எங்கள் ஊரில் கடல் இல்லையென்றாலும் வெகு தூரத்தில் அடிவானத்தில் மரங்களுக்கிடையில் உதித்து மேலே வருவது தெரியும். உண்மையில் இந்த சூரியன் கிழக்கு வானில் எவ்வளவு தூரத்தில்தான் உதித்து எழுகிறது? மேற்கு வானில் எவ்வளவு தூரத்தில்தான் மறைகிறது? என்று அடிக்கடி நினைப்பதுண்டு. நம் கண்களை பொறுத்தவரை தொடுவானத்தின் தூரமும், சூரியன் உதிக்கும் தூரமும் ஒன்றுதான். சிறுவனாக இருந்த போது ஒரு தடவை எங்கள் வீட்டருகில் இருக்கும் அதிகம் படித்த(?) தாத்தா ஒருவரிடம் கேட்டேன். “தாத்தா! இந்த வானம் எங்கு தான் முடிகிறது? அவர் சொன்ன பதில் “இந்த வானம் லண்டனில் முடிகிறது”. நானும் அப்போது நம்பி விட்டேன். அது மட்டுமில்லாமல் லண்டன்தான் உலகத்தின் கடைசி என்றும் அப்போது நினைத்துக் கொண்டேன். உலகம் உருண்டை என்று அப்போது எனக்குத் தெரியாது. பின்னாளில் தான் தெரிந்தது “வானம் எங்கு முடிகிறது?” என்ற கேள்விக்கும் உலகம் உருண்டை என்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று.
பிறகு பள்ளியில் படிக்கும் போதும் “தொடுவானத்தின் தூரம் என்ன?” என்பது ஒரு அழகியல் சார்ந்த கேள்வியாக இருந்ததே ஒழிய அது அறிவியல் கேள்வியாக(scientific question) மாறவில்லை என்பது இப்போது புரிகிறது. பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கும் இந்த மாதிரி கேள்விகளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று அப்போது தோன்றவே இல்லை. நம் கல்வி முறை தோற்கும் இடம் இதுதான். நம் மனதில் இயல்பாக எழும் இது போன்ற கேள்விகளும் பள்ளியில் படிக்கும் பாடங்களும் ஒன்றோடு ஒன்று கலத்தல்தான் உண்மையான கற்றலின் அடையாளம். ஆனால் தாமரை இலைத் தண்ணீர் போல நாம் படிக்கும் பாடங்களும் நம் மனதின் கேள்விகளும் ஒன்றை ஒன்று ஒட்டாமல் இருப்பதுதான் இன்றைய கல்விச் சூழலின் எதார்த்தம்.
சரி நம் கேள்விக்கு வருவோம். உண்மையில் தொடுவானத்தின் தூரத்தை எப்படி அளவிடுவது? . இந்த தூரத்தை அளவிடுவதற்கு முன் நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வானம் என்றால் என்ன? உண்மையில் வானம் என்ற போர்வை ஒன்று நம் பூமிக்கு மேலே இருக்கிறதா? உண்மையில் இந்த அழகான வானம் ஒரு மாயை. சூரிய ஒளியும், பூமிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயு மூலக்கூறுகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுதான் இந்த வானம். இந்த வாயுக்களின் மூலக் கூறுகள்(gas molecules) சூரியனிடமிருந்து பூமியை நோக்கி வரும் ஒளிக்கதிர்களை நாலா புறமும் சிதறடிக்கிறது. ஆனால் இந்த வாயு மூலக்கூறுகள் எல்லா நிற ஒளிக்கதிர்களையும் சமமான அளவில் சிதறடிப்பதில்லை. சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் என்பது நம் கண்களால் பார்க்கக் கூடிய ஏழு விதமான நிறங்களையும் (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு), புற ஊதாக் கதிர்களையும் (Ultra violet rays), அகச்சிவப்பு கதிர்களையும் (infrared )உள்ளடக்கியதுதான். இதில் புற ஊதாக்கதிர்களையும், அகச்சிவப்பு கதிர்களையும் நம் கண்களால் காண முடியாது. நம் கண்களால் காண முடிந்த இந்த ஒவ்வொரு நிற ஒளிக்கதிர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அலை நீளம்(wave length) உண்டு. குறைவான அலை நீளம் உடைய ஒளிக்கதிர்கள் வாயு மூலக்கூறுகளால் அதிக அளவில் சிதறடிக்கப் படுகிறது. அதிக அலைநீளம் உடைய ஒளிக்கதிர்கள் குறைவாக சிதறல் அடைகிறது. (இதை முதலில் கண்டறிந்தவர் ராலே (Rayleigh) என்ற இயற்பியல் அறிஞர்). இதன்படி பார்த்தால் ஊதா நிற ஒளிக்கதிர்கள்தான் குறைவான அலைநீளம் உடையது. சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் மிக அதிக அலை நீளம் உடையது. அப்படி என்றால் ஊதா நிற ஒளிக்கதிர்கள் மிக அதிக ஒளிச் சிதறல் அடைந்து வானம் நீல நிறமாக இல்லாமல் ஊதா நிறமாக அல்லவா நம் கண்களுக்கு தெரிய வேண்டும்? நீல நிற ஒளிக்கதிர்கள் ஊதா ஒளிக்கதிர்களை விட குறைவாகத் தான் சிதறல் அடைகிறது. பிறகு ஏன் வானம் நீல நிறமாக இருக்கிறது? அதற்கு காரணம் நம் கண்களின் நிறங்களை உணரும் திறன் நீல நிறத்திற்குத் தான் மிக அதிகம். அதனால்தான் நம் கண்களுக்கு வானம் நீல நிறமாகத் தெரிகிறது.
சரி அடுத்த கேள்வி. ஏன் வானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது மாதிரி தெரிகிறது? பூமி கோள வடிவத்தில் இருப்பதால்தான். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நீங்கள் பூமியின் மீது நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கண்களிலிருந்து நேராக ஒரு கோடு போட்டுக் கொண்டே சென்றால் அந்தக் கோடு பூமியின் மேற்பரப்பை எந்த இடத்தில் தொட்டுச் செல்கிறதோ அதுதான் பூமியை வானம் தொடும் இடம். நம் கண்களைப் பொறுத்தவரை அதுதான் தொடுவானம்.
ஏன் நேர் கோடு போட வேண்டும்?. ஏனென்றால் ஒளிக் கதிர்கள் நேர் கோட்டில் பயணிக்கிறது. சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தால் நாலாபுறமும் சிதறடிக்கப் படுகிறது. ஆனால் இப்படி சிதறடிக்கப் படும் எல்லா ஒளிக்கதிர்களும் நம் கண்களை வந்தடைவதில்லை. கீழே உள்ள படத்தை பாருங்கள்.
வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு நம் கண்களை வந்தடையும் ஒளிக்கதிர்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளி “1” க்கும் “2” க்கும் இடைப்பட்ட வளிமண்டலப் பகுதியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்களை வந்தடையாது. மேலே காட்டப்பட்ட படம் புரிதலுக்காக பெரியதாக வரையப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வளிமண்டலத்தின் அளவு(width) பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டதட்ட நூறு கிலோ மீட்டர் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனால் பூமியின் ஆரம்(Radius) 6300 கிலோ மீட்டர். கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் நம் கண்களுக்கு வானம் முடிவது மாதிரி தெரிகிறது என்று. ஆம். பூமி கோள வடிவமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால்தான் வானம் நம் கண்களுக்கு குடை கவிழ்த்தது மாதிரி தெரிகிறது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ஒருவேளை பூமி தட்டையாக இருந்தால் “தொடுவானம்” என்ற ஒன்றே இருந்திருக்காது. பூமி கோள வடிவம் என்பதற்கு “தொடுவானம்” தான் மிக எளிய நிரூபணம்.
சரி எப்படி தொடுவானத்தின் தூரத்தை அளவிடுவது? கீழே உள்ள படத்தில் தொடுவானத்தின் தூரம் என்பது என்ன என்று காட்டப்பட்டுள்ளது. புள்ளி “1” லிருந்து “2” வரை உள்ள தூரம் தான் தொடுவானத்தின் தூரம்.
நாம் பத்தாம் வகுப்பில் கற்ற பித்தாகரசுத் தேற்றத்தை பயன்படுத்தி இந்த தொடுவானத்தின் தூரத்தை அளவிடலாம். முதலில் பித்தாகரசுத் தேற்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
“ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகைக்கு சமம்”. இதுதான் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பித்தாகரசுத் தேற்றம்.
கீழே உள்ள படத்தில் செங்கோண முக்கோணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கோணத்தின் இரு கோடுகளுக்கும் இடைப்பட்ட கோணம் தொண்ணுறு டிகிரி இருந்தால் அந்த முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம். இங்கே “AB” என்ற கோட்டுக்கும் “BC” என்ற கோட்டுக்கும் இடைப்பட்ட கோணம் தொண்ணுறு டிகிரி.
பித்தாகரசுத் தேற்றத்தை கணித மொழியில் பின்வருமாறு எழுதலாம்.
AB2 + BC2 = AC2.
இங்கே “AC” என்ற கோட்டின் நீளம் கர்ணத்தை குறிக்கும். “AC2” கர்ணத்தின் வர்க்கத்தைக் குறிக்கும். அதைப் போல “AB” என்பது ஒரு பக்கத்தின் நீளம் மற்றும் “BC” என்பது மற்றொரு பக்கத்தின் நீளம். அதைப் போல “AB2” என்பது AB பக்கத்தின் வர்க்கம். “BC2” என்பது BC என்ற பக்கத்தின் வர்க்கம். பித்தாகரசுத் தேற்றத்தின் படி “AB2”யும் “BC2”யும் கூட்டினால் வருவது “AC2”. இப்போது கர்ணத்தின் நீளத்தை பின்வரும் சமன்பாட்டின் மூலம் AC=BC2+AB2 நாம் எளிதாகக் கண்டறியலாம். அதாவது இந்த பித்தாகரசுத் தேற்றத்தின் மூலம் ஒரு செங்கோண முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் நீளம் தெரிந்தால் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை நாம் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக கர்ணத்தின் நீளமும்(AC) ஒரு பக்கத்தின் நீளமும்(BC) நமக்கு தெரிந்தால் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை(AB) பின்வரும் சமன்பாட்டின் மூலம் கண்டறியலாம். BC = AC2-AB2.
நாம் இப்போது தொடுவானத்தின் தூரத்திற்கு வருவோம். தொடுவானத்தை தொட்டுக்கொண்டு உங்கள் கண்களை வந்தடையும் ஒரு ஒளிக் கீற்றை எடுத்துக் கொள்வோம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
பூமியின் மையத்திலிருந்து தொடுவானத்தின் ஒளிக்கீற்று தொடும் இடத்திற்கு நேர்கொடு வரைந்தால் அதுதான் பூமியின் ஆரம். அந்த தொடுகோட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று நேர்கோடாக வரையப்பட்டுள்ளது. அந்த இரண்டு கோடுகளுக்கும் உள்ள கோண அளவு 90°. பூமியின் மையத்திலிருந்து நேராக ஒரு கோடு உங்கள் கண்களுக்கு வரைந்தால் அதுதான் செங்கோணத்தின் கர்ணம்(R+h).
மேலே உள்ள படத்தில் “h” என்பது உங்களின் உயரம். புள்ளி B யில் இருந்து புள்ளி C க்கு போகும் கோடுதான் தொடுவானத்திலிருந்து உங்கள் கண்ணுக்கு வரும் ஒளிக் கீற்று. “AB” என்பது பூமியின் ஆரம். ஆரத்தின் நீளம் 6400 கிலோ மீட்டர்(AB=6300 Km). இங்கே “R+h” என்பது “பூமியின் ஆரத்தின் நீளமும் உங்களின் உயரத்தையும் சேர்த்தால் வரும் நீளம்.”(R+h= Radius of earth plus your height). இங்கே நமக்கு கண்டறிய வேண்டியது “BC” யின் நீளம். இதுதான் தொடுவானத்தின் நீளம். கர்ணத்தின் நீளம் நமக்குத் தெரியும். (R+h = 6300 km + 1.76m). இங்கே 1.76 மீட்டர் என்பது எனது உயரம்.
இப்போது BC = AC2-AB2. அதாவது
தொடுவானத்தின் நீளம் = (R+h)2-R2.
= (6300,000+1.76)2-(6300,000)2.
= 4.7 கிலோ மீட்டர்.
இந்த பரிசோதனையை நான் சென்னை மெரினா கடற்கரையில் செய்து பார்த்தேன். இந்த எளிய கணக்கிடுதலின் படி என் கண்களுக்கு வானம் வங்கக் கடலைத் தொடும் தூரம் என்பது 4.7 கிலோ மீட்டர். இதுதான் என் கண்ணுக்கெட்டிய தூரமும் கூட. நம் தமிழில் பேச்சு வழக்கில் “கண்ணுக்கெட்டிய தூரம்” என்று பயன்படுத்துவதை கேட்டிருப்போம். இந்த கண்ணுக்கெட்டிய தூரத்திற்கும் பித்தாகரசுத் தேற்றத்திற்கும் எவ்வளவு எளிய தொடர்பு இருக்கிறது பாருங்கள்!.
இந்த கணக்கிடுதலில் நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது “தொடுவானத்தின் தூரம்” அல்லது “கண்ணுக்கெட்டிய தூரம்” என்பது நமது உயரத்தை(h) சார்ந்துள்ளது. அதாவது உயரம் அதிகமானவர்களுக்கு தொடுவானத்தின் தூரம் அதிகம் அல்லது கண்ணுக்கெட்டிய தூரம் அதிகம். ஆனால் நன்றாக வளர்ந்த மனிதர்களின் உயரம் என்பது இரண்டு மூன்று அடிதான் வித்தியாசம் என்பதால் பெரிய அளவுக்கு தொடுவானத்தின் தூரம் மாறாது. ஆனால் ஒரு இரண்டு வயது குழந்தைக்கும் நன்றாக வளர்ந்த மனிதனுக்கும் தொடுவானத்தின் தூரம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். எடுத்துக்காட்டாக அரை மீட்டர் உயரம் உள்ள ஒரு குழந்தைக்கு தொடுவானத்தின் நீளம் என்பது தோராயமாக இரண்டரை கிலோ மீட்டர்தான். நீங்கள் உங்கள் உயரத்தை வைத்தும் உங்கள் மகன் அல்லது மகளின் உயரத்தை வைத்தும் இந்த எளிய கணக்கீடை நீங்களே செய்து பார்க்கலாம்.
ஆனால் ஒருவேளை நீங்கள் ஒரு மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து பார்த்தால் தொடுவானத்தின் தூரம் மிக அதிகமாக இருக்கும். உங்கள் கண்களால் பார்க்கக்கூடிய தொலைவு அதிகமாகும். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து பார்த்தால் தொடுவானத்தின் தூரம் கிட்டத்தட்ட 230 கிலோ மீட்டர். ஏனென்றால் இப்போது “h” என்பது உங்களின் உயரம் + மலையின் உயரம். இதன் மூலம் ஒரு சுவாரசியமான விசயத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது மலையில் இருப்பவர்களுக்கு சூரிய உதயம் என்பது தரையில் இருப்பவர்களை காட்டிலும் முன்னமே நிகழும். அதைப்போல மலையில் இருப்பவர்களுக்கு, தரையில் இருப்பவர்களை விட சிறிது நேரம் கழித்துதான் சூரியன் மறையும். ஒரு வேளை பூமி தட்டையாக இருந்தால் தொடுவானத்தின் தூரம் குள்ளமானவர்களுக்கு உயரமானவர்களுக்கும், மலையிலிருந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே தூரம்தான்.
இந்த எளிய பரிசோதனையிலும் சில பிழைகள்(errors) இருக்கின்றன.. ஆனால் அந்த பிழைகள் மிகப்பெரிய அளவில் நமது தொடுவானத்தின் தூரத்தை மாற்றப்போவதில்லை. இருந்தாலும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
முதலாவது, பூமி ஒரு முழுமையான கோள வடிவப் பொருள் கிடையாது. மாறாக அது ஒரு நீள் கோள வடிவம் கொண்ட பொருள். கீழே உள்ள படத்தில் நாம் காணலாம்.
அதனால் பூமியின் ஆரம் நில நடுக்கோட்டை விட துருவ பகுதியில் சிறிது குறைவு. அது மட்டுமில்லாமல் நாம் பூமியில் எந்த இடத்தில் நிற்கிறோமோ அந்த இடத்தில் பூமியின் ஆரம் சரியாக 6300 km இருப்பதில்லை. அதனால் என்ன விளைவு என்றால் தொடுவானத்திலிருந்து நம் கண்களுக்கு வரும் நேர்கோட்டிற்கும்(ஒளிக்கீற்று) பூமியின் மையத்திலிருந்து தொடுவானத்திற்கு செல்லும் நேர்கோட்டிற்கும் உள்ள கோணம் 90° இருக்காது. இதனை கீழே உள்ள படத்தில் காணலாம்.
மேலே உள்ள படத்தில் காட்டியபடி இந்த முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம் இல்லை. அதனால் பித்தாகரசுத் தேற்றம் நாம் இங்கே பயன்படுத்த முடியாது. இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி நீங்கள் நிற்கும் இடத்தில் பூமியின் ஆரத்திற்கும்(R), தொடுவானத்தில் செல்லும் பூமியின் ஆரமும்(R) ஒரே அளவு அல்ல. இதற்குக் காரணம் பூமி ஒரு முழுமையான கோள வடிவமில்லாததுதான்(It is not perfect sphere). ஆனால் நாம் தொடுவானத்தின் தூரத்தை கணக்கிடும்போது இரண்டு ஆரமும் சமம் என்று வைத்துதான் கணக்கிட்டோம். ஏனென்றால் அங்கே பூமி ஒரு முழுமையான கோள வடிவம்(perfect sphere) என்று எடுத்து கொண்டதால்தான். ஆனால் இந்த பிழை ஒன்றும் மிகப் பெரிய பிழையல்ல. ஏனென்றால் பூமியின் துருவப் பகுதி ஆரத்திற்கும் பூமியின் நிலநடுக்கோட்டு ஆரத்திற்கும் உள்ள வித்தியாசம் 42 கிலோ மீட்டர்தான். அதனால் நாம் அந்த முக்கோணம் கிட்டத்தட்ட செங்கோண முக்கோணமாக நாம் கருதலாம். இதனால் கணக்கிடுதலில் வரும் பிழை மிகவும் குறைவு(error is small).
அதைப் போல நாம் இன்னொரு முக்கியமான விளைவை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. அதாவது வளிமண்டலம் ஒளியின் மீது செலுத்தும் விளைவு. ஒளி வளிமண்டலத்தின் வழியாக நம் கண்களை வந்தடையும் போது ஒளி விலகல்(refraction) அடைந்துதான் வருகிறது. இதனால் என்ன விளைவு? நாம் இதுவரை என்ன கருதினோம் என்றால் தொடுவானத்தை தாண்டி உள்ள ஒளிக்கதிர்கள் நம் கண்களை வந்தடையாது. ஆனால் இந்த ஒளி விலகலால் தொடுவானத்திற்கு தாண்டி சிறிது தூரம் வரை உள்ள ஒளிக்கதிர்கள் நம் கண்களை வந்தடையும். இதனை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இதனால் தொடுவானத்தின் தூரம் சிறிது அதிகமாகும். ஒளி விலகலால் அதிகமாகும் இந்த தூரத்தை கணக்கிடுவது கடினமானது. ஏனென்றால் வளிமண்டலத்தின் ஒளிவிலகல் எண்(refractive index) உயரத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஒளிவிலகலால் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சூரிய உதயம் என்பது சூரியன் உண்மையான தொடுவானம் வருவதற்கு கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு முன்னாலேயே நம் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். அதைப் போல மேற்கில் சூரியன் தொடுவானத்திற்கு கீழே சென்றாலும் நம் கண்களுக்கு இரண்டு நிமிடங்கள் வரை தெரியும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
இங்கே “horizon” என்ற சொல் தொடுவானத்தை குறிக்கிறது.
இந்த பரிசோதனை மூலம் இரு முக்கிய விசயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பித்தாகரசுத் தேற்றம் எப்படி நம் நடைமுறை வாழ்வில் பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்வது. அதைப்போல யாரேனும் பூமி உருண்டை என்று எப்படி நிரூபிப்பது என்று கேட்டால் “தொடுவானம்” என்று நீங்கள் விளக்கலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட பித்தாகரசுத் தேற்றம் நடைமுறை வாழ்வில் எண்ணற்ற பயன்பாடுகளைக் கொண்டது. மாணவர்கள் பித்தாகரசு தேற்றத்தை வேறு என்ன வழிகளில் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தால் அதுவே மாபெரும் கணித மேதையான பித்தாகரசுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.
- விவரங்கள்
- வெற்றிச் செல்வன்.மா.செ.
- பிரிவு: தொழில்நுட்பம்
அரபு நாடுகளில் அபுதாபி, மஸ்கட் போன்ற இடங்களில் இருக்கும் வானூர்தி நிலையங்களில் (ஏர்போர்ட்) கழிவறைக்கு அருகிலேயே, அதை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் இருப்பார்கள். அவர்களின் தலையாய பணி, குறிப்பிட்ட இடைவெளியில் கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பன்னாட்டு விமான நிலையம் என்பதாலும், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருவார்கள் என்பதாலும், எவ்வளவு வேலை பளு மற்றும் அழுத்தம் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இந்தப் பணிச்சுமையை கூட தாங்கிவிடலாம், கழிவறைகளின் துர்நாற்றத்தில் நாள் முழுக்க இருக்க வேண்டும், என்ற உளவியல் ரீதியான தாக்குதலையும், ஏளனப் பார்வைகளையும் சமாளிக்க வேண்டும்.
ஆனால், ஆண்கள் சிறுநீர் கழிக்கும் தொட்டிகளை (urinals) இனிமேல் இப்படி மணிக்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் துர்நாற்றத்தை தாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை. இனி அந்த வேலையை ஒரு “பாக்டீரியா” செய்து விடும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், தோழர்களே. மும்பை சத்ரபதி விமான நிலையத்தின் சிறுநீர் தொட்டிகளை கடந்த மே-2017லிருந்து பாக்டீரியா தான் சுத்தம் செய்கிறது. தினமும் லெட்சம் பேர் வந்து செல்லும் பன்னாட்டு விமான நிலையமும் துர்நாற்றம் இல்லாமல் இருக்கிறது.
பசுமை ரசாயனங்கள் எனப்படும் என்சைம்கள் மற்றும் பாக்டீரிய கலவை (mix of enzymes and bacteria) , யுரினல் எனப்படும் சிறுநீர் தொட்டியில் போடப்படும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும், சிறுநீரில் இருக்கும் அம்மோனியாவை, நைட்ரஜனாக இந்த பாக்டீரியக் கலவை மாற்றிவிடும். எனவே, துர்நாற்றம் எனபது அறவே இருக்காது. மேலும், சுத்தம் செய்ய தேவைப்படும் தண்ணீரையும் சேமிக்க முடியும். தரைத்தளங்களை சுத்தம் செய்யவும், இதே பாக்டீரியாக கலவையை மும்மை விமான நிலைய நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதன் மூலம், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒர் லெட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், அதாவது 30,000 பேர் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க முடியும்.
இந்த முறையை நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் நடைமுறைப்படுத்தும் போது, இந்தத் தொழிலை செய்யத் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, இந்தத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலையையும் வழங்க வேண்டியது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கடமை. இன்னும் எத்தனை தலைமுறைகள், கழிவறைகளில் காலத்தைத் தொலைக்க வேண்டும்?
- வெற்றிச் செல்வன்.மா.செ.
- விவரங்கள்
- சூறாவளி
- பிரிவு: தொழில்நுட்பம்
கடந்த பகுதியில் நெடுவாசல் போராட்டத்தின் உலகளாவிய, உள்ளூர் அரசியல் குறித்து விரிவாக கண்ணோட்டத்தைப் பார்த்தோம். நெடுவாசல், வடகாடு, கோட்டைகாடு மக்கள் மத்திய, மாநில அமைச்சர்களின் வாக்குறுதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ‘மக்களின் விருப்பத்தை மீறி திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்’, என்ற வாக்குறுதியை ஏற்று, தாங்கள் நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முன்னிலையில் நெடுவாசல் உட்பட இந்திய முழுக்க 31 இடங்களில் எரிபொருள் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 27.03.2017 அன்று டெல்லியில் செய்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தாங்கள் எந்த அளவிற்கு நேர்மையற்றவர்கள், மக்கள் விரோதிகள் என்பதை நிரூபித்துள்ளனர். மக்களாகிய நாம் நமது வாழ்வை பாதுகாத்துக் கொள்ள ஒருங்கிணைந்து போராடுவது ஒன்றே வழி என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவாகியுள்ளது. நாம் நமது போராட்டத்தை மேலும் வலிமையாக்குவதற்கு இத்திட்டம் பற்றிய அறிவியல்பூர்வமான நமது புரிதல் மட்டத்தை உயர்த்திக் கொள்வதற்கு, எரிபொருள் அறிவியல் குறித்து விரிவாக காண்போம்.
மக்களிடம் உள்ள எரிபொருட்கள் குறித்த அறியாமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மீத்தேன் திட்டம், இயற்கை எரிவாயுத் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் என வெவ்வேறு பெயர்களைச் சொல்லி ஏமாற்றி செயல்படுத்தப் பார்க்கிறார்கள். எந்தப் பெயரில், என்ன வகையான எரிபொருளை உற்பத்தி செய்தாலும், அங்கு ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். அது, அங்கு விவசாயத்தை நம்பி வாழும் தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் என்பதை நடைமுறை சாத்தியமாக உணர்ந்து தன்னெழுச்சியாகப் போராடி மக்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து தஞ்சை மாவட்ட விவசாயி திரு.பி.ஆர்.பாண்டியன் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், ONGC நிறுவனம் தாக்கல் செய்த பதில்மனுவில், நாங்கள்காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் பணி எதிலும் ஈடுபடவில்லை, மரபான எண்ணெய், எரிவாயு (conventional petroleum and natural gas) எடுப்பதற்கான சோதனையில்தான் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறியது. ஆனால் எரிபொருளுக்கான தலைமை நிர்வாக இயக்குனர் (Directorate General of Hydrocarbons) பக்கத்தில் காவேரிப் படுகையில் ஷேல் எண்ணெய், எரிவாயுப் பணிகள் நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது.1 மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீத்தேன் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வெளியிட்ட ONGC அறிக்கையில், ஹைட்ரோகார்பன்கள் மிகுந்த மூலப்பாறைகள் (source rocks or shale) இருப்பதையும், வெற்றிகரமாக நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி, மரபான (conventional) முறையிலல்லாமல், தூண்டப்பட்ட முறையில் (unconventional) இயற்கை எரிவாயுவான மீத்தேனையும், எண்ணையையும் வர்த்தக ரீதியில் பயனளிக்கும் அளவு வெளியேற செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது. அப்படியானால், மரபான முறைக்கும், தூண்டப்பட்ட முறைக்கும் என்ன வேறுபாடு? எந்த முறையைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை எவ்வாறு கண்டறிவது?
மேலும் ஷேல் காஸ் எடுக்கப் போகிறோம் என முதலில் கூறினார்கள். அதனை எடுக்க நீரியல் விரிசல் முறை (hydraulic fracturing method) மட்டுமே தற்போது உள்ளது. அது நிலடுக்கம், வறட்சி, நிலத்தடிநீர் மாசுபடுதல், பயன்படுத்தப்படும் வேதிப்போருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மீத்தேன் கசிவினால் காற்று மாசுபடுதல், 60௦௦ மீட்டர்களுக்கு கீழே துளையிடுவதால் கதிரியக்கத் தனிமமான ரேடான் வெளியேறுதல், உடல்நலக் கேடுகள் ஆகிய பிரச்சனைகளைக் கொண்டு வரும் என எதிர்ப்பு கிளம்பியதால், இல்லையில்லை நாங்கள் நிலக்கரி படிம மீத்தேன் தான் எடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள். உண்மையில் இவர்கள் குறிப்பிடுவது போல எல்லாம் வெவ்வேறு எரிபொருளை எடுக்கும் வெவ்வேறு திட்டங்களா?என்ன வகையான மீத்தேனை எடுக்கப் போகிறார்கள் என்பதை எவ்வாறு கண்டுகொள்வது? உண்மையில் மேற்சொன்ன பிரச்சனைகள் வரும் என்பது ஊகமா? அல்லது உண்மையா? ஆதாரம் என்ன?
ஹைட்ரோகார்பன்கள் (அ) கரிமச் சேர்மங்கள்
கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆன வேதிப்பொருட்கள் கரிமச் சேர்மங்கள் (அ) ஹைட்ரோகார்பன்கள் (Hydrocarbons) எனப்படுகின்றன. இந்த ஹைட்ரோகார்பன்களில், கார்பன் எண்ணிக்கை 1 முதல் 4 வரை கொண்டவை வாயுநிலையிலும், 5 முதல் 16 கார்பன் எண்ணிக்கை கொண்டவை நீர்ம நிலையிலும், 17 கார்பன் எண்ணிக்கைக்கு மேல் கொண்டவை திட நிலையிலும் இருக்கும்.
ஹைட்ரோகார்பன்கள் உருவாதல்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் புதையுண்ட உயிரினங்கள், பல்வேறு வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு, புதையுண்ட உயிரினங்களை பொருத்தும், நிலவும் வெப்பம் மற்றும் அழுத்தத்தைப் பொருத்தும், குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட வாயுவாகவும், அதிக கார்பன் எண்ணிக்கை கொண்ட திரவ நிலை எண்ணையாகவும், மிக அதிக கார்பன் எண்ணிக்கை கொண்ட நிலக்கரியாகவும் மாற்றமடைகிறது.
இயற்கை எரிவாயு
பூமிக்கடியில் அவ்வாறு உருவாகும் இயற்கை எரிவாயு என்பது தொண்ணூறு சதவீதத்திற்கு மேல் ஒரு கார்பன் எண்ணிக்கை கொண்ட வாயுநிலை ஹைட்ரோகார்பனான மீத்தேனையும்(CH4), குறைந்த அளவு ஒன்றிற்கும் மேற்பட்ட கார்பன் எண்ணிக்கை கொண்ட ஹைட்ரோகார்பன்களையும், நைட்ரஜன்(N2), கார்பன்டைஆக்சைடு(CO2), ஹைட்ரஜன் சல்பைடு(H2S) ஆகிய வாயுக்களை உள்ளடக்கியதாகும். ஆக மீத்தேனும், இயற்கை எரிவாயுவும் வேறுவேறு அல்ல, ஒன்றே. ஒரே எரிபொருளுக்கு வெவ்வேறு பெயரிட்டு செயல்படுத்த முனைவதுதான் பெரும் பித்தலாட்டமின்றி வேறில்லை.
மீத்தேன் | CH4 | 70-90% |
ஈத்தேன் | C2H6 | 0-20% |
புரப்பேன் | C3H8 | |
புயூட்டேன் | C4H10 | |
கார்பன்டைஆக்சைடு | CO2 | 0-8% |
ஆக்ஸிஜென் | O2 | 0-0.2% |
நைட்ரஜன் | N2 | 0-5% |
ஹைட்ரஜன் சல்பைடு | H2S | 0-5% |
மந்த வாயுக்கள் | Ar, He, Ne, Xe | Trace |
எரிபொருட்களின் வகைகள்
- நிலக்கரி (Coal)
- பெட்ரோலிய-எண்ணெய் (Petroleum)
- இயற்கை எரிவாயு-மீத்தேன் (Natural Gas-Methane)
இயற்கை எரிவாயுக்களின் வகைகள்
மேற்சொன்னவாறு உருவாகும் இயற்கை எரிவாயுக்கள் நான்கு வகைப்படும்.
- நிலக்கரி படிம மீத்தேன் (Coal Bed Methane CBM)
- பனிப்பாறைமீத்தேன் (Methane Hydrate)
- கடினப்பாறை மீத்தேன் (Tight Gas)
- பாறை-எரிவாயு மீத்தேன் (Shale Gas)
நிலக்கரி மற்றும் நிலக்கரி படிம மீத்தேன் (Coal and Coal Bed Methane-CBM)2
பூமியுள் புதையுண்டபெரும் தாவரங்கள் நிலக்கரியாக மாற்றம் அடையும் போது, அதனோடு மீத்தேன் வாயுவும் உருவாகி நிலக்கரி படிமங்களுக்குள் தங்கி இருக்கும். அந்த மீத்தேனே நிலக்கரி படிம மீத்தேன் என அழைக்கப்படுகிறது. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 1,000 முதல் 10,000 அடிகளுக்குள்ளாக இருக்கும்.
Source: Reference 2
பனிப்பாறை மீத்தேன் (Methane Hydrate)
ஆர்டிக் பனிப்பிரதேசத்திலும், கடலுக்கடியிலும் பனிக்கட்டிகளின் படிகங்களுக்குள்(crystals) சிக்கியிருக்கும் மீத்தேன் பனிப்பாறை மீத்தேன் ஆகும்.
ஷேல் பாறை (Shale Rock) அல்லது மூலப்பாறை
கடலின் அடிமட்டத்தில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மண் போன்ற மற்ற படிமங்களோடு புதையுண்ட பாசியினங்கள் (algaes), நுண்ணுயிர்கள் (microscopic organisms) மேற்சொன்ன வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு முதலில் கெரோஜென் (Kerogen) என்ற பொருளாகவும், பின்பு வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எண்ணையாகவும், எரிவாயுவாகவும் மாற்றமடைகிறது. இவ்வாறு எண்ணெய், எரிவாயுவை தன்னகத்தே கொண்ட வண்டல், கரிசல் மண்ணாலான இந்த பாறை ஷேல் பாறை (Shale Rock) அல்லது எரிபொருளின் மூலப்பாறை எனப்படுகிறது.இது புவிபரப்பிற்கு 3000 முதல் 16,000 அடிகளுக்கு கீழே காணப்படும்.
Source: Uncoverenergy.com
எண்ணெய், எரிவாயு தேக்கங்கள் (reservoirs) உருவாதல்
மேற்சொன்னவாறு மூலப்பாறைகளில் உருவாகும் எண்ணை மற்றும் எரிவாயு குறைந்த அடர்த்தி (density) காரணமாக மேல்நோக்கி இடம்பெயர்ந்து கடினமான பாறைகளுக்கு (caprock) கீழே அதிக நுண்துளைகள் (pores) கொண்ட மணற்பாறைகளின் (sandstone) தேங்கியிருக்கும் (reservoir).
கடினப்பாறை மீத்தேன் (Tight Gas)
ஷேல் பாறை(அ) மூலப்பாறையில் இருந்து வெளியேறி அடர்த்தியான நுண்துளைகளற்ற குறைவான மணல், சுண்ணாம்பு களிமண் தாதுக்களினால் ஆன பாறைகளில் சிக்கியிருக்கும், குறைவான பாய்வுத்திறன் கொண்டமீத்தேன் கடினப்பாறை மீத்தேன் ஆகும்.
Source: USGS, www.energy.usgs.gov
ஷேல் எண்ணெய் எரிவாயு (பாறை-எரிவாயு மீத்தேன்) (Shale oil & Gas)
ஷேல் பாறை(அ) மூலப்பாறையில் இருந்து வெளியேறாமல் அதிலேயே சிக்கியிருக்கும் மீத்தேன் இந்த வகையைச் சார்ந்தது. இந்த பாறைகளின் நுண்துளைகள் குறைவானதாகவும், ஒன்றோடொன்று இணைக்கப்படாமலும் இருக்கும். ஆதலால் அதிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பாய்வுத்திறன் மிகக் குறைவானதாக இருக்கும்.
Source: Fuel Journal, 2015, 153, 231
மரபான (conventional) எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி
நிலக்கரி படிமங்களுக்கு உள்ளாக தங்கியிருக்கும் மீத்தேனை செங்குத்தாக துளையிட்டு, எரிவாயுவை வெளிவராமல் அழுத்திக் கொண்டிருக்கும் நீரை வெளியேற்றி, தானாக மேல் எழும்பி வரச்செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் நீர் உப்புகள், பல்வேறு வேதிப்பொருட்கள், உலோகங்கள், கதிரியக்கத் தனிமங்கள் கொண்டது. அது நிலத்தினை மாசுபடுத்தும், மனிதர்களுக்கு நோய் விளைவிக்கும் தன்மை கொண்டதாகையால், சுத்திகரிக்கப்பட்டு வெளியற்றப்படும் அல்லது மீண்டும் பூமியில் செலுத்தப்படும்.
Source: Reference 2
இதனைப் போன்றே, கடின பாறைகளுக்கு கீழ் தேங்கியிருக்கும் (reservoir) எண்ணெய் மற்றும் எரிவாயுவை செங்குத்தாக துளையிட்டு தானாக மேலெழும்பி வரச்செய்து எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு நிலக்கரியினுள்ளும், மணற்பாறைகளினுள்ளும் தங்கியிருக்கும் மீத்தேனின் அதன் அதிக பாய்வுத்திறன் (permeability) காரணமாக எந்தத் தூண்டுதலும் இல்லாமல் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்தல் மரபான (conventional) உற்பத்தி ஆகும்.
தூண்டப்பட்ட (unconventional) எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி
குறைவான பாய்வுத்திறனை கொண்ட கடினப்பாறை மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எண்ணெய் ஆகியவற்றைசெங்குத்தாக துளையிட்டு வெளிக்கொண்டு வர இயலாது. மிக குறைவான அளவே துளையிட்ட இடத்திலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு தானாக மேலெழும்பி வரும். அது வர்த்தக ரீதியில் பலனளிக்கூடியது அல்ல. அதே போல, நிலக்கரி படிமங்களுக்கு உள்ளாக தங்கியிருக்கும் மீத்தேன் குறைவான பாய்வுத்திறனை கொண்டிருந்தாலும் மரபான முறையில் எரிவாயுவை உற்பத்தி செய்ய இயலாது. இதுபோன்ற இயல்பாக மேலெழும்பி வரும் அளவு பாய்வுத்திறன் கொண்டிராத எரிபொருட்களை வெளிக்கொண்டு வர புதிதாக கண்டறியப்பட்ட தொழில்நுட்பமே தூண்டப்பட்ட முறை (unconventional) என அழைக்கப்படும் நீரியல் விரிசல் முறை ஆகும்.
இம்முறையில் முதலில் மரபான முறையைப் போன்று செங்குத்தாக எரிபொருள் இருக்கும் 3000 முதல் 16,000 அடிகள் வரை தோண்டி பின்பு கிடைமட்டமாக எரிபொருள் பாறையுனுள் 1000 முதல் 26000 அடிகள் வரை துளையிட்டு, மணல், மண், வேதிப்பொருட்கள் நீர் ஆகியவற்றை அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்யப்படுகிறது. இவ்வாறு வெடிக்கச் செய்வதன் மூலம் பாறையுனுள் சிக்கியிருக்கும் எண்ணெய் மற்றும் மீத்தேனை தூண்டப்பட்ட முறையில் வெளியேறச் செய்வது புதிய நீரியல் விரிசல் முறையாகும் (hydraulic fracturing). இவ்வாறு கிடைமட்டத்தில் தோண்டி வெடிக்கச் செய்வதன் மூலம் குறைவான பாய்வுத்திறன் கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வெளயேற வழி ஏற்படுத்தித் தரப்படுகிறது. அது வர்த்தக ரீதியில் பலனளிக்கும் அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு வெளியேறுகிறது.
Source: energyindustryphotos.com
மொத்த எரிபொருள் வளங்கள், அவற்றின்அமைவிடங்களை குறிக்கும் படம். (Source: German Advisory Council on the Environment)
தொடரும்......
References
- http://www.dghindia.org/index.php/page?pageId=37
- https://pubs.usgs.gov/fs/fs123-00/fs123-00.pdf
- https://www.slb.com/~/media/Files/resources/mearr/wer16/rel_pub_mewer16_1.pdf
- சூறாவளி
- நியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்
- சூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்
- பயர்பாக்ஸ் தரும் பயனுள்ள குறுஞ்செயலிகள்
- ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்
- வாட்சப்பை முந்தும் டெலிகிராம்
- Compression Test என்றால் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது?
- இணையத் திருவிழா
- ஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்
- ஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம்
- ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா?
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?
- சாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்
- கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்
- விமானம் பறப்பது எப்படி?
- நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்
- இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா?
- ஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்?
- ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்
- இலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா?