கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஜோசப் பிரபாகர்
- பிரிவு: தொழில்நுட்பம்
எங்கள் ஊர் அரியலூர் மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயம் தான் எங்கள் மக்களின் தொழில். ஆறுகள் ஏதும் எங்கள் ஊர் வழியாக பாயாததால் முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமி. விவசாயம் முழுக்க ஏரிகளையும், கிணறுகளையும் நம்பித்தான் இருக்கிறது. எங்கள் முன்னோர்கள் ஊருக்கு நாலைந்து ஏரிகளையும், எக்கச்சக்கமான கிணறுகளையும் வெட்டி வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட முப்பது அடிக்கு ஒரு கிணறு இருக்கும். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது இரண்டு கிணறு இருக்கும். வீட்டிற்கு அருகில் ஒன்று குடிதண்ணீர் பயன்பாட்டுக்காக. கொல்லையில் ஒன்று விவசாயப் பயன்பாட்டிற்காக. எங்கள் ஊர் பக்கம் விவசாய நிலத்தை ‘கொல்லை’ என்றும், கிணறை “கேணி” என்றும்தான் அழைப்பார்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்பு ஆண்டு முழுவதும் இந்தக் கேணிகளில் தண்ணீர் இருக்கும். அதுவும் மழைக் காலங்களில் கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர் மேலேயே கிடக்கும். வெயில் காலங்களில் அரைக் கேணிக்கும் கீழே கிடக்கும். என் சிறு வயதில் கிணற்றை எட்டிப்பார்ப்பது என்பது சாகசச்செயல். எட்டிப் பார்க்கும் போது அடிமனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உணர்வும், பய உணர்வும் ஒரு சேர வந்து மறையும். தூரத்தில் என் தாத்தா “டேய். கெணத்த எட்டிப் பாக்காத. உள்ள உழுந்துருவ” என்று துரத்துவார். அவருக்கு பயந்து கொண்டே சில நொடிகள் மட்டும் எட்டிப் பார்த்து விட்டு வேண்டா வெறுப்போடு தூர ஓடுவேன். தூர ஓடினாலும் கேணியைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பேன். ”இந்தக் கேணி எவ்வளவு ஆழம் இருக்கும்? தண்ணிக்கு அடியில் ஏதாவது வித்தியாசமான உயிரினங்கள் இருக்குமோ? அடி ஆழத்தில் ஏதாவது மரகதக் கல் கிடக்குமா?” இப்படி பல எண்ணங்கள் என் மனதில் ஓடும்.
கேணி என்பது எங்கள் கிராமத்து வாழ்க்கையின் ஓர் அங்கம். இன்னும் சொல்லப்போனால் கேணி என்பது எங்களைப் பொறுத்தவரை கொல்லையில் வாழும் ஒரு ஜீவன். என் தாத்தாவிடம் அடிக்கடி கேட்பேன் ”தாத்தா. இந்தக் கேணி எவ்வளவு ஆழம் இருக்கும்?”. “பதினாறு கஜம் இருக்குண்டா” என்று சில நேரங்களில் சொல்லுவார். சில நேரங்களில் “நாற்பது அடி இருக்கும்” என்று சொல்லுவார். ஆனால் எனக்கு இது புரிந்ததில்லை. பள்ளிகளில் “மீட்டர்” பற்றித்தான் சொல்லிக் கொடுப்பார்கள். கஜம் பற்றியோ அடி பற்றியோ பயன்பாட்டு ரீதியாக சொல்லிக் கொடுத்ததில்லை. எங்கள் ஊரில் கேணிகள் சில ஆயிரமாவது இருக்கும். எந்தக் கேணியின் அருகிலும் அது எவ்வளவு ஆழம் என்று எழுதி வைக்கப் பட்டது இல்லை. ஒரு வேளை எங்கள் முன்னோர்களுக்கு அது முக்கியத்துவம் இல்லாத விசயமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் எங்கள் பருவத்தில் இருக்கும் பசங்களுக்கு அது மிக முக்கிய விஷயம்.
பசங்களைப் பொறுத்தவரை அவர்களின் பாட்டன், முப்பாட்டனின் பலத்தை அவர்கள் வெட்டிய கேணியின் ஆழம்தான் தீர்மானிப்பதாக நினைத்துக்கொள்வோம். என் நண்பர்கள் பயங்கரமாக கதை விடுவார்கள். “டேய். எங்க கொல்லையில் இருக்கும் கேணி உங்க கேணிய விட செம ஆழம்” என்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக் கொள்வோம். ஆனாலும் யாருக்கும் உண்மையான ஆழம் தெரியாது. பல கிணறுகள் எந்தக் காலத்திலோ வெட்டிய கிணறுகள். புதர் மண்டி கிடக்கும். எங்கள் கொல்லையில் இருக்கும் கேணியின் ஆழம் கூட எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. அதை விட அதை எப்படி அளவிடுவது என்றும் யோசித்துப் பார்த்ததில்லை. தினந்தோறும் பள்ளிக்கு போவோம். பாடம் நடத்துவார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவோம். விளையாடுவோம். பள்ளியில் நடத்தும் பாடங்களுக்கும் எங்கள் கிராமத்து வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. இப்படியே பத்தாம் வகுப்பு வரை கழிந்தது.
பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் நியூட்டனின் விதிகள் பற்றிய பாடம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் அரைகுறையாக நடத்தப்படுகின்றன. அல்லது நடத்தப்படுவதே இல்லை. ஒரு வேளை நியூட்டனின் விதிகள் எனக்கு புரிந்திருந்தால் எங்கள் வீட்டு கிணற்றின் ஆழத்திற்கும் நியூட்டனின் விதிகளுக்கும் சம்பந்தமுண்டு என்று அப்போதே எனக்கு விளங்கியிருக்கும். நியூட்டனின் விதிகளை மனப்பாடம் செய்தோமே தவிர உணர வில்லை. நியூட்டனின் விதிகள் இயற்கையைப் பற்றிய பேருண்மைகள் என்று நான் புரிந்து கொள்ள வில்லை. அல்லது புரிய வைக்கப்பட வில்லை. இன்றைக்கு இருக்கும் கல்வி முறையின் பிரச்சினையே இதுதான். இந்தக் கல்வி முறை மாணவர்களின் மனதை விட்டு வெகு தூரம் விலகி இருக்கிறது. ஒரு வழியாக பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் இயற்பியல்தான் சேர்ந்தேன். எப்போதாவது ஊருக்குச் செல்லும் போது கிணற்றைப் பார்க்கும் சமயத்தில் அந்த பால்ய கால கேள்வி மனதில் எழும். “இந்தக் கேணி எவ்வளவு ஆழம் இருக்கும்?”
கல்லூரி படிப்பும் முடிந்தது. இயற்பியல் ஆசிரியரானேன். கடைசியில் நானே எனது மாணவர்களுக்கு நியுட்டனின் விதிகளை சொல்லிக்கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் புரிந்தது நியூட்டனின் விதிகளுக்கும் கிணற்றின் ஆழத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆம். நியூட்டனின் விதிகளைப் பயன்படுத்தி ஐந்தே நிமிடத்தில் கிணற்றின் ஆழத்தை கிட்டத்தட்ட துல்லியமாக அளவிடலாம். பதினொன்றாம் வகுப்பில் புரிய வேண்டிய விசயம் பத்து வருடம் கழித்துதான் புரிந்தது. ஒருவேளை ராணுவத்தை விட கல்விக்கு அதிகமாக செலவிடும் நாட்டில் நான் படித்திருந்தால் பதினொன்றாம் வகுப்பிலேயே இது எனக்கு புரிந்திருக்குமோ என்னமோ? பதினொன்றாம் வகுப்பில் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை மட்டும் நடத்த வேண்டும் என்று கடுமையான விதிகளைப் போடும் அரசாங்கம் இருந்திருந்தால் எனக்கு இது பதினொன்றாம் வகுப்பிலேயே புரிந்திருக்குமோ என்னவோ?
சரி விஷயத்துக்கு வருவோம். நியுட்டனின் இரண்டாம் விதி என்ன சொல்கிறது. “ஒரு பொருளின் நிறையையும்(mass)அந்த பொருளின் முடுக்கத்தையும் பெருக்கினால் நாம் அந்த பொருளின் மீது செயல்படும் விசையின் அளவைக் கண்டறியலாம். முடுக்கம் எந்த திசையில் இருக்கிறதோ அதே திசையில்தான் விசையும் இருக்கும்”. இதை இயற்பியலில் பின்வரும் சமன்பாட்டால் குறிப்பார்கள். “F = ma”. இங்கு ‘m’ என்பது பொருளின் நிறையைக் குறிக்கிறது. ‘a’ என்பது அந்தப் பொருளின் முடுக்கத்தை குறிக்கிறது. ‘F’ என்பது அந்த பொருளின் மீது செயல்படும் விசையின் அளவைக் குறிக்கிறது.
இது இயற்பியலில் மிக முக்கியமான விதி. இது வெறுமனே கணித சமன்பாடு அல்ல. இந்த நவீன அறிவியல் சிந்தனையின் தொடக்கப் புள்ளி. இன்னும் சொல்லப் போனால் நாம் இன்று அடைந்திருக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்த விதிதான் வித்திட்டது. இந்த விதியின் பயன்பாடுகள் எண்ணற்றவை.
இந்த விதியை நாம் பயன்படுத்தி ஒரு பொருள் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறது அல்லது எங்கே இருக்கிறது என்பதை கண்டறியலாம். எடுத்துக் காட்டாக ஒரு பொருளை நாம் மேலே தூக்கி எறிந்தால் அது எவ்வளவு தூரம் போகும், அந்தத் தூரம் போக எடுத்துக்கொள்ளும் காலம் போன்றவற்றை எளிதாக கணக்கிடலாம். தொகைக்கெழு(integration) மூலம் நியூட்டனின் இரண்டாம் விதியை பின்வரும் வடிவத்தில் எழுதலாம்.
“S = ut + ½ at2”
இது நியூட்டனின் இயக்கச் சமன்பாடு எனப்படுகிறது. எப்போதெல்லாம் ஒரு பொருள் மீது மாறா விசை(constant force) செயல்படுகிறதோ அப்போதெல்லாம் மேலே குறிப்பிட்ட இயக்க சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த பொருளின் இயக்கத்தை, குறிப்பிட்ட நேரத்தில் அந்த பொருள் கடந்த தொலைவை எளிதாக கணக்கிடலாம்.
இந்த s = ut + ½ at2என்ற சமன்பாடு பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் பாடப் புத்தகத்திலேயே இருக்கிறது.
“s” என்பது ஒரு குறிப்பிட்ட நேர இடைவேளியில் பொருள் நகர்ந்த தொலைவு(distance).
“t” என்பது அந்த குறிப்பிட்ட நேர இடைவெளி(time interval). இது பத்து வினாடிகளாகவும் இருக்கலாம் பத்து மணி நேரமாகவும் கூட இருக்கலாம்.
‘u’ என்பது அந்த பொருளின் ஆரம்பவேகம்(initial speed ).
“a” என்பது அந்த பொருளின் மாறா முடுக்கம்(constant acceleration).
இப்போது நாம் கிணற்றின் கதைக்கு வருவோம். ஒரு சிறு கல்லை கிணற்றின் மேலே இருந்து விட்டால் அது கிணற்றின் அடித்தரைக்கு சென்று மோதும். அது செல்வதற்கு காரணம் பூமியின் ஈர்ப்பு விசை. இந்த ஈர்ப்பு விசையினால் அந்த பொருள் முடுக்கம்(a) அடைகிறது. இந்த முடுக்கத்தை புவிஈர்ப்பு முடுக்கம் (acceleration due to gravity) என்று அழைக்கலாம். இதை இயற்பியலில் “g” என்ற எழுத்தால் குறிப்பர். அதன் அளவு
g= 9. 8 மீட்டர்/வினாடி2. இந்த புவிஈர்ப்பு முடுக்கம்(g) பூமியின் மேற்பரப்பில் மாறாத அளவைக்கொண்டது(constant acceleration). இந்த முடுக்கம்தான் நமது எடைக்கும்(weight) காரணம். கிணற்றின் ஆழத்திலும் இந்த முடுக்கம் கிட்டத்தட்ட மாறாது. இந்த மாறாத தன்மைதான் நாம் மேலே குறிப்பிட்ட சமன்பாட்டை பயன்படுத்த வழிவகுக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் நாம் அந்தக் கல்லை கிணற்றில் எறிய வில்லை. மாறாக கையில் எடுத்து அப்படியே விடுகிறோம். நாம் கல்லை எறியாததால் அதன் ஆரம்ப வேகம் “u” பூஜ்ஜியம்(initial speed “u” is zero). ஆரம்ப வேகம் இல்லாததால்(u=0) நியுட்டனின் இயக்க சமன்பாட்டில் உள்ள “ut” பூஜ்ஜியமாகி விடும். எனவே இந்த பரிசோதனைக்கு நமக்கு தேவையான சமன்பாடு S = ½ gt2. கல் நம் கையிலிருந்து விடுபட்ட கணத்திலிருந்து கிணற்றின் அடித்தரையைத் தொட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். இன்று எல்லோர் கைகளிலும் செல்போன் இருக்கிறது. அதிலுள்ள நிறுத்து கடிகாரத்தின் (stop watch) துணையுடன் இதை நாம் அளவிடலாம். எங்கள் வீட்டுக் கிணற்றில் நான் இதைச் பல முறை செய்து பார்த்தேன். கிணற்றின் அடித்தரையைத் தொட கல் சராசரியாக 2.37 நொடிகள் எடுத்துக் கொண்டது. அப்படி என்றால் அந்தக் கல் இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் கடந்த தொலைவு “s” தான் கிணற்றின் ஆழம்.
s = 1/2 * 9. 8 * (2. 37)2. நமக்கு கிடைக்கும் விடை 27. 52மீட்டர். எங்கள் வீட்டுக் கேணியின் ஆழம் இருபத்தியேழரை மீட்டர். அல்லது எண்பத்திரண்டு அடி. சிறு வயதில் எழுந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்து விட்டது. எங்கள் தாத்தா கிணற்றை வெட்டினார். நியூட்டன் தாத்தா அதன் ஆழத்தை அளக்க உதவினார். இப்போது நான் உரக்க சொல்லுவேன் எங்கள் வீட்டுக் கேணிக்கும் நியூட்டனுக்கும் சம்பந்தமுண்டு என்று. இது ஒரு எளிய இயற்பியல் பரிசோதனைதான். நீங்களும் செய்து பாருங்கள். இதைச் செய்து பார்ப்பதற்கு இயற்பியல் மாணவனாக இருக்க வேண்டியதில்லை. சாதாரமாண கூட்டல் கழித்தல் தெரிந்தாலே போதும்
எந்த இயற்பியல் பரிசோதனையிலும் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. இந்த பரிசோதனையில் என்னென்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்று பார்ப்போம். முதலாவது கல் கிணற்றின் அடித்தரையைத் தொடும் அந்த நொடியை இரண்டு வகையில் நாம் கண்டறியலாம். அந்தக் கல் தரையைத் தொடும்போது எழும் சத்தத்தை கேட்டவுடனே நாம் நிறுத்துக் கடிகாரத்தை நிறுத்தலாம். அல்லது அந்தக் கல் தரையைத் தொடுவதை நம் கண்ணால் பார்த்த உடனே நிறுத்து கடிகாரத்தை நாம் நிறுத்தலாம். இதில் கண்ணால் கண்டதும் நிறுத்தும் போதுதான் தவறு மிகக் குறையும். காதால் கேட்டு நிறுத்துக் கடிகாரத்தை நிறுத்தும்போது கணக்கிடும் நேரம் முன்னதை விட சிறிது அதிகமாக இருக்கும். ஏனென்றால் கல் தரையில் மோதும் சத்தம் அந்த நொடியிலேயே நம் காதுகளை வந்தடையாது. சத்தம் கிணற்றின் அடித்தரையிலிருந்து மேலே நம் காதுகளை வந்தடைய சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது (காற்றின் ஒலியின் வேகம் நொடிக்கு 331 மீட்டர். ஆனால் ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்). அப்படிஎன்றால் நாம் கணக்கிடும் நேரம் என்பது இதையும் சேர்த்துதான். இதனால் நாம் கணக்கிடும் கிணற்றின் ஆழத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு தவறு நிகழும். கிராமங்களில் சில பாழடைந்த கிணறுகள் புதர் மண்டி இருக்கும். அடித்தரை கண்ணுக்கு தெரியாது. அந்த மாதிரி கிணறுகளில் நாம் காதால் கேட்கும் சத்தத்தை வைத்துதான் கல் கிணற்றின் அடித்தரையை தொட்டதை கண்டறிய இயலும்.
அடுத்த முக்கியமான விஷயம் நாம் எடுத்துக் கொள்ளும் கல்லின் அளவு எலுமிச்சை காய் அளவுக்கு மிகாமல் இருந்தால் நல்லது. ஏனென்றால் கல்லின் நிறை அதிகமாக அதிகமாக காற்றின் உராய்வு விசையும் அதிகமாகும். உராய்வு விசை அதிகமானால் நாம் S = ½ gt2 என்ற சமன்பாட்டை பயன்படுத்த முடியாது. உராய்வு விசையினால் கல்லின் மீது ஏற்படும் முடுக்கத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அது சற்றுக் கடினமானது. அதனால் நிறை(mass) குறைந்த கல்லை பயன்படுத்துதல் தவறை குறைக்கும். அதைப் போல இன்னொமொறு தவறு நம் கையிலிருந்து கல் விடுபட்ட அந்த நொடியே நம்மால் நிறுத்துக் கடிகாரத்தை தொடங்கி விட முடியாது. ஏனென்றால் கல் நம் கையில் விடுபட்ட உடனே அந்தத் தகவல் நம் மூளைக்கு சென்று மூளை உடனே நிறுத்துக் கடிகாரம் உள்ள கைவிரல்களுக்கு தகவல் அனுப்பி நம் கை விரல்கள் நிறுத்துக் கடிகாரத்தை தொடங்குவதற்குஒரு நொடியோ இரு நொடியோ ஆகலாம். அதற்குள் கல் சில அடிகளாவது கிணற்றின் உள்ளே போயிருக்கும். அதைப்போல கல் கிணற்றின் அடித் தரையைத் தொட்டவுடனே வரும் தகவலும் நம் மூளைக்கு போய் மறுபடியும் நம் கை விரல்களுக்கு வந்து நம் கை விரல் நிறுத்து கடிகாரத்தை நிறுத்துவதற்குள் ஓரிரு நொடிகள் ஆகலாம். இதுவும் நம்மால் குறைக்க முடியாத தவறுதான். ஆனால் இந்த இரண்டு தவறும் ஒன்றை ஒன்று சமன் படுத்திக்(cancel each other) கொள்ளும்.
இந்த பரிசோதனையில் திருப்தியான விஷயம் என்னவென்றால் பதினொன்றாம் வகுப்பு முடித்து பத்து வருடம் கழித்து நான் தெரிந்து கொண்டதை என் மாணவர்களுக்கு அப்போதே சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் ஏன் பத்து வருடம் வீணாக்க வேண்டும்?. இயற்பியலின் விதிகளை நாம் கற்றுக் கொள்ளும்போது அதை எந்திரத்தனமாக மனனம் செய்தல் கூடாது. அது அறிவியலின் நோக்கத்தையே சிதைத்து விடும். மாறாக ஒவ்வொரு இயற்பியல் விதிகளையும் நாம் மனதில் இருத்தி அதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு இயற்பியல் சமன்பாட்டையும் கவிதையை வாசிப்பதைப் போல அனுபவித்து வாசிக்க வேண்டும். அந்த அனுபவித்தல்தான் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என்பதற்கான அடையாளம்.
பின்குறிப்பு:
நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் எப்போதுமே இருக்கும். ஆனால் தற்போது எல்லாக் கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. அதனால்தான் கிணற்றின் ஆழத்தை என்னால் அளவிட முடிந்தது. ஒரு வேளை தண்ணீர் உள்ள கேணியாக இருந்தால் இதே பரிசோதனையை வைத்து கிணற்றின் அடித்தரை வரை உள்ள ஆழத்தை அளவிட முடியாது. கிணற்றின் மேலிருந்து தண்ணீர் இருக்கும் வரை உள்ள ஆழத்தை அளவிடலாம். இந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஏரி, குளங்களை, ஆறுகளை, கிணறுகளை தண்ணீர் இல்லாமல் வற்ற வைத்து எனது பரிசோதனைக்கு உதவிய இந்த அரசாங்கங்களுக்கு மிக்க நன்றி.
- விவரங்கள்
- வெற்றிச்செல்வன்.மா.செ.
- பிரிவு: தொழில்நுட்பம்
“மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அறிவியலுக்கு நன்றாகப் பொருந்துகிறது. முன்னர், நெதர்லாந்து நாட்டில் அமைக்கப்பெற்ற சோலார் மிதிவண்டிச் சாலையை குறித்துப் பார்த்தோம். இந்தச் சாலையின் மூலம், ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்தில் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தற்போது, பிரான்ஸ் நாட்டில், இன்னும் ஒரு படி மேலே சென்று சோலார் தகடுகளைப் பயன்படுத்தி சாலையை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் கோடை காலங்களில் சராசரியாக அதிகபட்ச வெட்பநிலையே 20 டிகிரி செண்டிகிரேட் என்பது தான்.
(சமீபத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட சாலை)
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரெச்சே என்ற சிற்றூருக்கு 1 கிலோமீட்டர் அளவுக்கு சோலார் தகடுகளைப் பயன்படுத்தி 2800 சதுர மீட்டரில் சாலையை அமைத்துள்ளனர். இதில் செல்லும் மகிழுந்து (கார்) பயணத்தின் மூலம், 5,000 பேர் வசிக்கும் சிற்றூரின் தெருவிளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். சிறிய அளவு அடத்தியுள்ள போட்டோவோல்டிக் (photovoltaic cells) செல்களை சாலையில் பதித்து இந்தச் சாலையை உருவாக்கியுள்ளனர். இந்தச் செல்கள் பாலிமர் மற்றும் ரெசின்களால் (Polymer and resins) பாதுகாக்கப்பட்டிருக்கும். இதன் மேற்புறம் சாதாரண சாலைகளில் செல்வதைப் போல இருப்பதற்கு ஏதுவாக வழவழப்புத் தன்மையை நீக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
(சாலையின் சிறப்புகளை விளக்கும் படம்)
சிறிய அளவில் இப்போது துவங்கப்பட்டிருக்கும் சோலர் சாலையை, சுமார் 1,000 கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. ஆம், நீங்கள் கேட்பது புரிகிறது, அணு உலை எல்லாம் நமக்குதான்.
காற்றாலை மரம் (Wind Tree) – பாரிஸ், பிரான்ஸ்
மறுபடியும், பிரான்ஸ். ஆம், பாரிஸ் நகரில் “காற்றாலை மரத்தை” (Wind Tree) அமைத்துள்ளார், வின்ட் டிரீ (Wind Tree) என்ற நிறுவனத்தைச் சேந்த ஜெரோம் லாரிவிர். சுமார், 26 அடி உயரம் உள்ள இந்த காற்றாலை மரத்தில், இலைகளுக்கு இடையே சிறிய அளவிலான காற்றாலைத் தகடுகள் இருக்கும். காற்று அடிக்கும் போது இந்தச் சிறிய தகடுகள் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும். காற்றின் வேகம் மணிக்கு 4.5 கி.மீ இருந்தால் கூட இதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(காற்றாலை மரத்துடன் அதன் நிறுவனர் ஜேரோம்)
பெரிய பெரிய காற்றாலைகளின் செலவுகளைப் பார்க்கும் போது, இதற்கு ஆகும் செலவு குறைவுதான். இந்தக் காற்றாலை மரத்தின் மூலம், 15 தெருவிளக்குகளுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான மின்சாரத்தையோ அல்லது ஒரு பேட்டரி கார் 1360 கி.மீ செல்லத் தேவையான மின்சாரத்தையோ கொடுக்க முடியும்.
இறுதியாக, சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிக்கும் நிலக்கரி, பொது மக்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் நாசகார அணு உலைகளுக்கு முடிவு கட்டிவிட்டு, ஆரம்பச் செலவுகள் அதிகம் இருந்தாலும் யாருக்கும் பாதிப்பில்லாத நீர், காற்று மற்றும் சோலார் போன்ற இயற்க்கை சார்ந்த மின்சாரத்தை (Alternative Green Energy) நோக்கி பயணிப்போம். அதுவே, நம் வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் சிறந்த பரிசாக இருக்கும்.
- வெற்றிச் செல்வன்.மா.செ.
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இணையத்தைப் பயன்படுத்த மிக வேகமான பிரவுசர் எது தெரியுமா? பயர்பாக்ஸ் தான்! ‘ஸ்பீடு கிங்’ என்று பரவலாக அறியப்படும் பயர்பாக்ஸ் பிரவுசர் இனிமையாக இணையத்தில் உலாவ, பல்வேறு குறுஞ்செயலிகள் எனப்படும் ஆட்-ஆன்களைத் தருகிறது. அவற்றுள் நமக்கு மிகவும் பயன்படும் சில குறுஞ்செயலிகள் இதோ!
1.ஆட் பிளாக்கர் பிளஸ்
இணையத்தில் ஏதோ ஓர் இணையத்தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த இணையத்தளத்தில் இருக்கும் வீடியோ விளம்பரங்கள் உங்கள் அனுமதியை வாங்காமலேயே தன்னால் ஓடத் தொடங்கி விடுகின்றனவா? யூடியூபில் இருக்கும் வீடியோக்களில் விளம்பரங்கள் வருகின்றனவா? பேஸ்புக் விளம்பரங்கள் தொல்லையாக இருக்கின்றனவா? இவற்றைத் தடுக்கும் குறுஞ்செயலி தான். உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இதை நிறுவிக் கொண்டால் போதும். இதன் பிறகு தேவையற்ற விளம்பரங்களை ஆட்பிளாக்கர் பிளஸ்சே பதம் பார்த்து விடும். நீங்கள் விளம்பரத் தொல்லையில்லாமல் இணையத்தில் உலவலாம்.
2. வீடியோ டவுன்லோடு ஹெல்பர்
இணையத்தில் ஆன்லைன் வீடியோக்கள் பார்க்கிறீர்கள். அவற்றை டவுன்லோடு செய்ய உதவும் எளிமையான குறுஞ்செயலி தான் வீடியோ டவுன்லோடு ஹெல்பர். யூடியூப், ஃபேஸ்புக் என்று எந்தத் தளமாக இருந்தாலும் அவற்றில் இருந்து எளிதாக வீடியோக்களை இந்தக் குறுஞ்செயலி மூலம் இறக்கிக் கொள்ளலாம்.
3. டவுன்தெம் ஆல்
முன்பு நாம் பார்த்தது வீடியோக்களுக்கு என்றால், இந்த டவுன் தெம் ஆல் குறுஞ்செயலி இணையத்தில் இருந்து எதை வேண்டுமானாலும் தரவிறக்குவதற்கு! இந்தக் குறுஞ்செயலி, தரவிறக்கும் வேகத்தை 4 மடங்கு வரை அதிகப்படுத்துவதுடன், இடையில் இணையம் துண்டிக்கப்பட்டாலோ, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இணையம் இல்லாமல் போனாலோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கத்தைத் தொடரும். தேவைப்பட்டால் டவுன்லோடு ஆவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வசதியும் இதில் உண்டு என்பது இன்னொரு கூடுதல் சிறப்பு.
4. வெப் ஆஃப் டிரஸ்ட்
ஒவ்வொரு நாளும் எத்தனையோ இணையத்தளங்களைப் பார்க்கிறோம். எந்த இணையத்தளங்கள் நல்ல தளங்கள், எவை வைரஸ்களைப் பரப்பும் தளங்கள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை – இல்லையா? நல்ல தளங்களை அடையாளம் கண்டுபிடித்துத் தரும் ஒரு குறுஞ்செயலி தான் வெப் ஆஃப் டிரஸ்ட் ஆகும். உலகம் முழுக்க உள்ள இணைய வாசிகள் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஓர் இணையத்தளம் நல்ல தளமா சுமாரா, இல்லை மோசமான தளமா என்று பட்டியலிட்டுச் சொல்வது தான் வெப் ஆஃப் டிரஸ்டின் வேலை. நல்ல தளம் என்றால் பச்சை, சுமார் என்றால் மஞ்சள், வைரஸ் பரப்பத் தக்க தளம் என்றால் சிவப்பு என்று சொல்லிவிடும் வெப் ஆஃப் டிரஸ்ட் குறுஞ்செயலி.
5. லாஸ்ட் பாஸ்
ஜிமெயில் கணக்குக்கு ஒரு கடவுச்சொல், அலுவலகத்தில் இரண்டு மூன்று கடவுச்சொற்கள், பேஸ்புக் கடவுச்சொல், டிவிட்டர், லிங்க்டு இன் கடவுச்சொற்கள் என்று பல கடவுச்சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டப்படுகிறீர்களா? இருக்கவே இருக்கிறது லாஸ்ட் பாஸ் குறுஞ்செயலி. உங்கள் எல்லாக் கடவுச் சொற்களையும் இதில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்தக் குறுஞ்செயலியின் கடவுச் சொல்லை மட்டும் நினைவில் கொண்டிருந்தால் போதும். மீதிக் கடவுச்சொற்கள் அத்தனையையும் லாஸ்ட் பாஸ் நினைவில் வைத்துக்கொள்ளும்.
6. டிக்சனரி
இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தால் போதும். டிக்சனரி குறுஞ்செயலி அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அனைத்து விவரங்களையும் பாப் அப் வடிவில் காட்டி விடும்.
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
வண்டியில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றிற்கு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். எதிர்பாராமல் வண்டி பஞ்சராகி நின்று விடுகிறது. அடடா! இது என்ன சோதனை என்று நினைத்த படி, பக்கத்தில் உள்ள பஞ்சர் பார்க்கும் கடைக்கு வண்டியைக் கொண்டு போய் விடுகிறீர்கள். திடீரென ஒரு கை உங்கள் கையைப் பற்றுகிறது. 'சார்! என் பெயர் குமார். நீங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியைத் தயாரித்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வண்டி வாங்கி விட்டு வேறு ஒருவரிடம் பஞ்சர் பார்க்க விட முடியாது. பாருங்கள் - இந்தக் கடை ஊழியரால் எங்கள் வண்டி டயரைக் கழற்றவே முடியாது' என்கிறார். நீங்கள் திரும்பிப் பார்க்கிறீர்கள். அவர் சொன்னது போலவே, கழற்ற முடியவில்லை.
'இதென்ன அநியாயம்? காசு கொடுத்து வண்டி வாங்கிய பிறகு, அந்த வண்டியைக் கழற்ற எனக்கு உரிமை கிடையாதா?' என்று கேட்பீர்கள் இல்லையா? 'ஆமாம் சார்! உங்கள் வண்டியை நாங்கள் மட்டும் தான் சரி பார்க்க முடியும். அதற்கும் நீங்கள் தனியாக வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று பணம் கட்டினால் மட்டும் தான் வண்டியைத் தொட்டே பார்ப்போம் – இல்லாவிட்டால் நீங்கள் ஓட்டை வண்டியோடு உலாவ வேண்டியது தான்! பாருங்கள், நீங்கள் இதற்கெல்லாம் சம்மதம் சொல்லித் தான் வண்டி வாங்கியிருக்கிறீர்கள்' என்று ஓர் ஆவணத்தைக் காட்டுகிறார் குமார்.
இது ஒரு கற்பனை தான்! வண்டி மட்டுமல்ல, டிவி, செல்போன், பேன், மிக்சி, கிரைண்டர் என்று எந்தப் பொருளானாலும் சரி, வாங்கிய பிறகு அதன் முழு உரிமையும் வாடிக்கையாளருக்குத் தான்! அதை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, என்று என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதை எல்லாம் செய்வதற்கு பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் அனுமதியெல்லாம் தேவை இல்லை.
ஆனால் இந்த உரிமை நீங்கள் வாங்கும் புரோபரைட்டரி சாப்ட்வேருக்குக் கிடையாது. புரோபரைட்டரி சாப்ட்வேரா – அப்படி என்றால் என்று குழம்ப வேண்டாம். இந்த உரிமையை உங்களுக்குக் கொடுக்காத எல்லா சாப்ட்வேரும் புரோபரைட்டரி சாப்ட்வேர் தான்! எ.கா. உங்களுக்கு நன்கு தெரிந்த விண்டோஸ். விண்டோசில் இயங்கும் உங்கள் கணினியின் ஓஎஸ் பழுதாகி விட்டால், விண்டோசில் என்ன பிரச்சினை என்று பார்க்கவே முடியாது - விண்டோசை நடத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் கட்டியிருந்தால் ஒழிய! விண்டோசுக்கு மட்டுமல்ல, புரோபரைட்டரி சாப்ட்வேர் எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கும் இதே கதை தான்! இது என்ன அக்கிரமமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க வந்த நாயகன் தான் ஓப்பன் சோர்ஸ்!
அதென்ன ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறீர்களா? ஓப்பன் சோர்ஸ் கதைக்கு முன்னால் - சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா? கிட்டத்தட்ட இதே கதை தான்! ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா? அப்படித் தெரிந்து கொள்ள அனுமதிக்கும் மென்பொருட்களை ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறார்கள். தமிழில் திறந்தமூல மென்பொருள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது!
இதென்ன புதுக்கதை? நான் ஒரு டிவியோ வண்டியோ வாங்கினால் கூட, உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று பார்க்கும் உரிமை எனக்கு இருக்கத்தான் செய்கிறது. அதே போல் தானே மென்பொருளுக்கும்! ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருக்குத் தானே சொந்தம்? அவரால் அப்படி எல்லா மென்பொருட்களையும் திறந்து பார்க்க முடியாதா என்றால் முடியாது என்பது தான் உண்மை. என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கிய பிறகு அதில் என்னென்ன இருக்கிறது என்று வாடிக்கையாளர் பார்க்கக் கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்? இதைக் கேள்வி கேட்க யாருமே இல்லையா? இதுவரை இதைக் கேள்வி கேட்ட ஒருவரும் இல்லையா? என் மென்பொருள் - என் உரிமை என்று உரிமைப் போராட்டத்திற்குத் தயாராகிறீர்களா?
கொஞ்சம் உங்கள் போராட்டத்தை ஒத்தி வையுங்கள். மென்பொருளில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கும் உரிமை எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தலைமுறைக்கு முன்னரே போராடத் தொடங்கிவிட்டார்கள். அப்படிப் போராடத் தொடங்கியவர்களுள் முக்கியமானவர் தான் ரிச்சர்டு ஸ்டால்மேன். ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள், படித்த பின் நன்றாக இருக்கிறதே என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் படிக்கக் கொடுக்கிறீர்கள். திரைப்பட சிடி ஒன்று வாங்குகிறீர்கள் - பார்த்து விட்டு நண்பர் ஒருவருக்குக் கொடுக்கிறீர்கள். இதே போல் விண்டோஸ் போன்ற மென்பொருள் சிடி ஒன்றை வாங்குகிறீர்கள். உங்கள் கணினியில் நிறுவிய பிறகு 'நன்றாக இருக்கிறதே! நண்பருக்கும் கொடுக்கலாமே!' என்று நினைத்தால் அது முடியாது. உங்கள் கணினியில் (அதுவும் ஒரு முறை தான்) பயன்படுத்த முடியும். இது அநியாயமாக அல்லவா தெரிகிறது என்று குரல் கொடுத்துப் போராடி வருபவர் தான் அவர். 'ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருடையது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மென்பொருள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தீர்மானிக்கும் உரிமை வாடிக்கையாளருக்குத் தான் உண்டே தவிர, மென்பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கு அல்ல' என்பது அவருடைய வாதம்.
ஒருவர் கையில் பணம் இருந்தாலே அது நல்ல பணம் தான்! அதைப் பணம் என்று சொன்னாலே போதும். 'வெள்ளைப் பணம்' 'வெள்ளைப் பணம்' என்று சொல்ல வேண்டிய தேவையில்லை அல்லவா? வருமான வரி கட்டப்படாமல் சேர்க்கப்படும் பணத்தை வேண்டுமானால் கருப்புப் பணம் என்று சொல்லலாம். அதே போல், உருவாக்கப்படும் எல்லா மென்பொருட்களுமே 'ஓப்பன் சோர்சாக'த் தான் இருக்க வேண்டும். எனவே, ஓப்பன் சோர்ஸ் ஓப்பன் சோர்ஸ் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. ஓப்பன் சோர்சாக மென்பொருளை உருவாக்க மாட்டேன் என்று சொல்லும் கணினி வல்லுநர்களை வேண்டுமானால் தவறு செய்பவர்கள் என்று சொல்லலாம் என்று பார்க்கிறார் ரிச்சர்டு ஸ்டால்மேன். அவர் சொல்வதும் சரியாகத் தானே தெரிகிறது.
இதனால் தான், அவர் 'ஓப்பன் சோர்ஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'ஃப்ரீ சாப்ட்வேர்' என்று சொல்கிறார். அதென்ன 'ஃப்ரீ'? விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர் என்று நம்மூரில் இருப்பது போல, விலையில்லா மென்பொருள் என்று நினைத்து விடாதீர்கள். இங்கு 'ஃப்ரீ' என்பது இலவசம் என்னும் அர்த்தத்தில் இல்லை. 'ஃபிரீ' என்பது 'ஃபிரீடம்' என்னும் 'கட்டற்ற சுதந்திரத்தின்' சுருக்கம். அதாவது ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு, அந்த மென்பொருளைத் திறந்து அதன் மூல நிரலைப் பார்க்கும் உரிமை, திருத்தும் உரிமை, மாற்றும் உரிமை ஆகிய கட்டற்ற உரிமைகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு மென்பொருளும் 'ஃபிரீ சாப்ட்வேராக' இருக்க வேண்டும் என்கிறார் அவர். அட! இதுவும் சரிதானே! என்று தோன்றுகிறதா?
அனைவருக்கும் பயன்படும் சில கட்டற்ற மென்பொருட்கள்
1) மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசர்
2) லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
3) லிபர் ஆபீஸ் (மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்று)
4) விஎல்சி மீடியா பிளேயர்
5) கிம்ப் (போட்டோஷாப்பிற்கு மாற்று)
6) கோப்புகளை அனுப்பப் பயன்படும் ஃபைல்சில்லா
7) தண்டர்பேர்டு (அவுட்லுக்கு மாற்று)
8) ஒலிப்பதிவுக்குப் பயன்படும் அடாசிட்டி
இப்படிப்பட்ட சரியான வாதங்களை முன்வைத்து அவர் தொடங்கியது தான் 'ஃபிரீ சாப்ட்வேர் பவுண்டேஷன்' என்னும் அமைப்பு. 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இப்போது உலகம் முழுக்கக் கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளையிலும் ஃபிரீ சாப்ட்வேர் எனப்படும் கட்டற்ற மென்பொருளுக்கு ஏராளமான கணினி வல்லுநர்கள் இலவசமாக உழைத்து வருகிறார்கள்.
இப்படி உலகம் முழுக்க கட்டற்ற மென்பொருளுக்கு உழைக்கும் கணினி வல்லுநர்கள் மூலம் தான் கணிப்பொறியில் படம் பார்க்க உதவும் விஎல்சி மீடியா பிளேயர், இணையத்தில் உலாவ உதவும் பயர்பாக்ஸ் பிரெளசர், விண்டோசுக்குப் போட்டியாகத் திகழும் லினக்ஸ், இளைஞர்கள் பலர் வேலை தேடப் படிக்கும் ஜாவா, பைத்தான் – என்று பல்வேறு மென்பொருட்கள் இலவசமாகவும் கட்டற்ற வகையிலும் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டிலும் இதற்காக நிறைய ஐ.டி. வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள். https://fsftn.org/, http://www.kaniyam.com/ ஆகிய இணையத் தளங்கள் மூலம் எளிய தமிழில் கணினி சார்ந்த கட்டுரைகள், மின் நூல்கள் ஆகியவற்றை இலவசமாக வெளியிடுவது, கல்லூரிகளில் இலவசக் கருத்தரங்கங்கள் நடத்துவது எனப் பல்வேறு கணினி சார்ந்த விழிப்புணர்வு வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் அவர்களுடன் இணைந்து கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்திற்கும் வலு சேர்க்கலாம் - கன்னித் தமிழையும் கணினித் தமிழாக்கலாம்.
(கட்டுரை - புதிய வாழ்வியல் மலர் செப். 1-15 2016 இதழில் வெளியானது)
- முத்துக்குட்டி
- வாட்சப்பை முந்தும் டெலிகிராம்
- Compression Test என்றால் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது?
- இணையத் திருவிழா
- ஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்
- ஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம்
- ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா?
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?
- சாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்
- கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்
- விமானம் பறப்பது எப்படி?
- நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்
- இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா?
- ஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்?
- ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்
- இலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா?
- Facebook’இன் அடுத்த நாடகம்
- அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்?
- Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம்