சட்டீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் உள்ளடர்ந்த காட்டுப்பகுதியான தண்டேவாடாவில் மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 70 பேர், கடந்த ஏப்ரல் 6 அன்று மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். ராணுவ ரீதியான பாதுகாப்புக் குளறுபடிகளால் இந்த இழப்பு ஏற்பட்டது என, பாதுகாப்புத் துறை தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய, எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநரும், காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நீண்ட காலம் இந்திய ராணுவத் துறையில் பணியாற்றியவரும், நேர்மையான அதிகாரி என (பணிக்காலத்தில்) நற்சான்றிதழ் பெற்றிருப்பவருமான இ.என். ராம் மோகன் என்பவரை, உள்துறை அமைச்சரான ப. சிதம்பரம் முன்வந்து நியமித்திருக்கிறார்.

rammohan_350மனித உரிமை ஆணையம் அல்லது நீதித்துறை விசாரணை எனில், குடிமக்களின் தரப்பிலான நியாயங்கள் கவனம் கொள்ளப்படும். ஆனால், இது முற்றிலும் (ராணுவ) துறை ரீதியான விசாரணையே. இந்திய அரசு மற்றும் ராணுவத் துறைக்கு ஆதரவான அதிகாரியாகவே செயல்பட்டாலும், இ.என். ராம் மோகன் அண்மையில் "தெகல்கா' (சூன் 12, 2010) ஆங்கில வார இதழுக்கு அளித்திருக்கும் நேர்காணல், போராடும் மக்களுக்கு எதிரான; மாவோயிஸ்ட் போன்ற போராளிகளுக்கு எதிரான; அரசுக்கு ஆதரவான பலருக்கும் உறைந்து போகாத சில உண்மைகளை உணர்த்தி நிற்கிறது.

இவர் தனது நேர்காணலில், “சட்டீஸ்கரில் இது பெரும்பாலும் காடுகள் மீதான உரிமை சம்பந்தப்பட்டதே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆதிவாசிகள், சாதி மேலாதிக்கத்தினால் காடுகளில் வாழ தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். காடுகளில் கிடைக்கப் பெறும் பொருட்களை சேகரித்து, காடுகளுக்கு வெளியே இருக்கும் சந்தைகளில் அவர்கள் விற்க வருகின்றனர். அப்பொருட்களை வாங்குபவர்களாக இருப்பவர்கள் "வைசிய' வணிகர்கள். பொருட்களின் விலை மதிப்பு அறியாத ஆதிவாசி மக்களை, மிகக் குறைந்த விலை தந்து வணிகர்கள் ஏமாற்றுகின்றனர். ஆதிக்க பிராமணர்கள், அராஜக சத்திரியர்கள், சுரண்டும் வைசியர்கள் என்ற மூவகை மேலாதிக்கம் இங்கு நிலவுகிறது. தற்செயலாக, ப. சிதம்பரம் ஒரு வைசியர்.

“இம்மூவகை சமூகங்களும் பல நூறு ஆண்டுகளாக அடித்தட்டு மக்களை ஒடுக்கி வருகின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரும் கம்யூனிஸ்டுகளை, நாம் ஏன் குற்றம் சுமத்த வேண்டும்? இவர்களே, வணிகர்களின் வரவினங்களை அறிந்து கொண்டு, ஆதிவாசி மக்களுக்குச் சேர வேண்டிய நியாயமான விலையை அவர்களின் பொருட்களுக்குப் பெற்றுத் தருகிறார்கள். பீடி இலை வியாபாரம் பற்றி நீங்கள் அறிந்தால், அதில் கிடைக்கும் வருமானம், டெல்லி அரசியல்வாதிகள் வரை போய்ச் சேர்வது உங்களுக்குத் தெரியவரும். ஆனால் அதைப் பறித்து, சேகரிக்கும் ஏழை மக்களுக்கோ கிடைப்பது ஒன்றுமில்லை'' எனக் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இரு சட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ராம் மோகன், “ஒன்று நிலங்களை கையகப்படுத்துவது, மற்றொன்று வன உரிமைகள் தொடர்பானது. ஆனால் கெடுவாய்ப்பாக, இந்தக் காடுகளில் நிறைந்திருக்கும் கனிம வளங்கள், அதிகாரத்தில் வீற்றிருக்கும் கட்சிகளுக்குப் பெரிய புதையல் கிடைத்தது போல இருக்கிறது. நீங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டால், தோண்டியெடுக்கப்படும் கனிமங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு, உங்கள் சுவிஸ் வங்கிக் கணக்கை உயர்த்தும். வனத்தில் வாழும் ஏழை மனிதன் வசதியாக மறக்கப்படுவான். பீகாரில் பூமிகார் உயர் சாதியினர் வெளிப்படையாகவே சொல்கிறார்கள், "எங்கள் வீட்டு நாய்கள், பூனைகளின் பெயர்களில்கூட எங்கள் நிலங்களைப் பதிவு செய்திருக்கிறோம்' என. எவ்வளவு காலம் இச்சூழல் எதிர்ப்பின்றியே இருக்கும்? இதைச் சரி செய்வதற்கு ஏன் நீங்கள் முன்வரவில்லை? இந்த அரசாங்கம் அறிவுடையதாக இருந்தால், இதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் மோசமான சூழலே உருவாகும். அது பேரழிவை விளைவிக்கும்'' என ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் எச்சரிக்கை விடுக்கிறார்.

ஊடகங்கள், பழங்குடி மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்வது குறித்து ராம் மோகன், “அனைவரும் நக்சலைட்டுகளை மய்யப்படுத்தியே இப்பிரச்சனையை அணுகுகின்றனர். மிகச் சிலரே இதன் இருவித அடுக்குகள் பற்றி புரிந்து கொள்கின்றனர். சி.பி.அய்., சி.பி.எம்., சி.பி.அய். (எம்.எல்.), சி.பி.அய். (மாவோயிஸ்ட்) என இக்கட்சிகளின் தலைவர்கள் 90 சதவிகிதத்தினர் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்களே. ஆனால் அவர்கள் அரசியல் - தத்துவம் சார்ந்து சாதியற்றவர்களாக, ஏழை மக்களின் தோழர்களாக அறியப்படுகிறார்கள். தங்கள் அரசியல் திட்டப்படி, அவர்கள் இந்நாட்டின் அதிகாரத்திற்கு வர விழைகிறார்கள். தனிப்பட்ட வகையில் ஒரு மாவோயிஸ்ட் அரசில் நான் வாழ விரும்பவில்லை. ஆனால், நமது சமகால அராஜக சூழல் இது போன்றே தொடருமெனில், வேறு என்னதான் நிகழும்?

“எந்தவொரு பிரச்சனைக்கும் மக்கள் வேறு வழியின்றியே ஆயுதம் தூக்குகின்றனர். பழங்குடிகளை அவர்களின் உரிமைகளுக்காகப் போராடவே, மாவோயிஸ்டுகள் ஆயுதம் தூக்கப் பயிற்றுவிக்கின்றனர். மார்க்சிய வகுப்புகளில் கெரில்லா போர் முறையும் ஒரு பாடமாக இருக்கிறது. தண்டேவாடாவில் 76 பேரை நாம் இழந்து விட்டோம் என ராணுவத்தினர் என்னிடம் குமுறுகின்றனர். இதற்குப் பழி தீர்க்கும் வகையில் அவர்கள் செயல்பட்டால், அது இன்னும் வலுவான தலைமையை, கட்டுப்பாட்டை அம்மக்களிடம் உருவாக்கும்'' என அனுபவபூர்வமாகவும், நேர்மையாகவும் தனது அணுகுமுறையை முன்வைக்கிறார்.

ஆனால் "சொந்த மக்கள் மீது ராணுவ ரீதியான போரை நாங்கள் விரும்பவில்லை' என சொல்லிக் கொண்டே, "பசுமை வேட்டை' என்று பெயரிடப்பட்ட உள்நாட்டுப் போரை, இந்திய அரசு நடத்தி வருகிறது. இப்போருக்காக மத்திய துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்புப் படை, நாகா போர்ப்படை ஆகியவற்றின் ஒரு லட்சம் துருப்புகள் தன்டகாரண்ய காடுகளில் இறக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மகாராட்டிரம், ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இரண்டரை லட்சம் காவல் படைகள், நேரடியாக பழங்குடியின மக்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பழுப்பு வேட்டை நாய்கள், கோப்ராக்கள், தேள்கள் என பெயரிடப்பட்ட சிறப்புப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, போராடும் மக்களிடையிலான சாதி மற்றும் இனக்குழு முரண்களைப் பயன்படுத்தி, "சல்வா ஜுடும்' என்ற கூலிப்படையும் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஏப்ரல் மாதம் சட்டீஸ்கரில் உருக்காலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, சல்வா ஜுடும் அமைக்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது.

"அமைதிக்கான ஒருங்கிணைந்த முனைப்பு' என்று பொருள்படும் சல்வா ஜுடும், பழங்குடி மக்களின் கிராமங்களில் துணை ராணுவப் படையுடன் நுழைந்து, அம்மக்களை அடித்து, சித்திரவதை செய்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது, குடிசைகளுக்குத் தீ வைப்பது என கடந்த நான்கு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சூறையாடி நிர்மூலமாக்கியுள்ளனர். இதன் விளைவாக, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் காடுகளுக்குள் உயிர் தப்பி வாழ்கின்றனர். பயிர்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்குவது, குடிநீரில் நஞ்சு கலப்பது என வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டனர். வனங்களில் கிடைக்கும் பொருட்களை சந்தைகளில் விற்று, அரைப் பட்டினியோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு, சந்தைகள் அழிக்கப்பட்டு மூடப்பட்டதால், அதுவும் இல்லாமல் போனது. சல்வா ஜுடும் குண்டர் படைக்கு இப்பகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேந்திர கர்மா தலைமை தாங்குகிறான். தமிழகத்தில் தஞ்சைத் தரணியின் நில உடைமையாளர்களை காங்கிரஸ் கட்சியில் கருப்பையா மூப்பனார் பிரதிநிதித்துவப்படுத்தியது போல, மகேந்திரகர்மா அப்பகுதி நில உடைமையாளர்களின் காங்கிரஸ் கட்சி பிரதிநிதி.

ஏறத்தாழ 1 லட்சம் மக்கள் சட்டீஸ்கர், லால்கர், ஜார்க்கண்ட் பகுதிகளின் அரசு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சல்வா ஜுடும்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் இம்முகாம்களில், பழங்குடியின மக்கள் கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். "இம்முகாம்கள் அம்மக்களைக் குற்றவாளிகளாகவே உற்பத்தி செய்யும்' என வேதனை தெரிவிக்கிறார், பதினேழு ஆண்டுகள் இப்பகுதியில் மக்கள் நடுவில் பணிபுரியும் வினோபாவேவின் பூமிதான இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதியான ஹிமான்சுகுமார். “சல்வா ஜுடும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. அது சூழலை மேலும் மோசமாக்குகிறது. முன்னர் நிலப்பிரபுக்கள் செய்ததையே இன்றைக்குக் காவல் துறையும், மத்திய சிறப்புக் காவல் படையும் செய்து வருகின்றன. பாலியல் வன்புணர்ச்சி, படுகொலைகள் ஒரு புறமிருக்க, காவல் படையினர் ஆதிவாசிகளின் ஆடு, கோழிகளைக்கூட களவாடிச் செல்வதாக அம்மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இது சகித்துக் கொள்ள முடியாதது'' என்று முன்னாள் ராணுவ அதிகாரி ராம் மோகனும் குற்றப்படுத்துகிறார்.

tribes_380சல்வா ஜுடும் கூலிப்படையில், மாதம் 1500 ரூபாய் சம்பளத்தில் அரசுக்கு ஆதரவான பழங்குடி இளைஞர்கள் சிறப்புக் காவலர்களாக (குகOண்) நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கூலிப் படையின் செலவினங்களை டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் பார்த்துக் கொள்வதாக, எழுத்தாளர் அருந்ததிராய் குற்றம் சுமத்துகிறார். போராடும் மக்களுக்கு எதிராக, அவர்களில் ஒரு பிரிவினரையே பயன்படுத்தும் தந்திரம், வெள்ளைக் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து இந்திய ஆளும் வர்க்கம் கற்றுக் கொண்ட கயமைத்தனங்களில் ஒன்று.

துணை ராணுவப் படையினராலோ, காவல் துறையாலோ, சல்வாஜுடும் கூலிப்படையாலோ கொல்லப்படும் அல்லது காணாமல் ஆக்கப்படும் பழங்குடியின மக்களைத் தேடுவதற்கும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைப் பெற்று இறுதி நிகழ்ச்சிகளைச் செய்வதற்கும் என்றே "தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூட்டிணைவு' என்ற அமைப்பு ஆந்திராவில் உருவாக்கப்பட்டுள்ளது. "சிலருடைய பிணங்கள் அழுகிய நிலையில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட உடல் காயங்களுடன் காடுகளில் தேடிக் கண்டெடுக்கப்படுகின்றன' என இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். சல்வாஜுடும் கட்டுப்பாட்டிலுள்ள பழங்குடியினரின் பல்வேறு கிராமங்களில் ஒன்றான "கொட்டச்சேறு' தீக்கிரையாக்கப்பட்டு,

மாவோயிஸ்டு என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் கொல்லப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட சூழலில் ஆந்திராவில் 2008 ஆம் ஆண்டு "செர்லா' என்னும் இடத்தில் தேசிய மனித உரிமை ஆணையம், ஒரு பொது விசாரணையை நடத்தியது. கொட்டச்சேறு கிராமவாசிகள் பலர் அதில் பங்கேற்றனர். சல்வாஜுடும் கூலிப்படையினராலும், பாதுகாப்புப் படையினராலும் தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை மனித உரிமை ஆணையத்திடம் சாட்சியம் அளித்தனர். ஆனால் ஆணையமோ, தனது அறிக்கையில் எவர் மீதும் குற்றம் சாட்டவில்லை. "நந்தினி சுந்தர்' எனும் மானுடவியல் ஆய்வாளர் 2005இல் இருந்து சல்வாஜுடும் செய்து வரும் அட்டூழியங்களைப் பட்டியலிட்டு, மய்ய நீரோட்ட பத்திரிகைகளின் வெளியீட்டாளர்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் பலருக்கும் விரிவான அறிக்கைகள் அனுப்பினார். ஆனால், அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. வன உரிமைகள், நில உரிமைகள், விவசாயத்துறை மேம்பாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சுரண்டல், பட்டினி, குழந்தைத் தொழிலாளர்கள், இடப்பெயர்வு, மறுவாழ்வுத் திட்டங்கள், குடிநீர் தட்டுப்பாடு, உத்தரவாதமற்ற இருப்பு என பழங்குடி இன மக்களின் வாழ்க்கை குறித்துப் பேச மறுக்கும் மய்ய நீரோட்ட ஊடகங்களும் அரசுத் துறைகளும் "மாவோயிஸ்டுகளின் வன்முறை' என்ற ஒற்றைப் பிரச்சாரத்தை மட்டுமே செய்து வருகின்றனர்.

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்திலிருந்து உள்நாட்டு அகதிகளாக ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் 16,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஒருவேளை உணவுக்கும் வழியற்ற நிலையில் இவர்கள் வறண்ட ஆற்றுப்படுகைகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரை நெடுந்தொலைவு நடந்து சென்று கொண்டு வந்து குடிக்கின்றனர். இதன் விளைவாக மலேரியா, தோல் நோய்கள், மற்றும் இனம் தெரியாத நோய்களாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த மே மாதத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் நாம் அனர்த்திக் கொண்டிருந்தபோது, கிழிந்த மேற்கூரைகளும், உடைந்த தடுப்புச் சுவர்களுமாக இருந்த அம்மக்களின் முகாம்கள் அமைந்திருக்கும் நிலப்பகுதியின் வெப்பநிலை 1170 பாரன்ஹீட் ஆக இருந்தது. இனி மழைக்காலம் வரும் போது, நிலைமை இதைவிட மோசமானதாகவே இருக்கும். வனத்துறையினரோ இவர்களை இக்காடுகளிலிருந்தும் விரட்டியடிக்கவே முயன்று வருகின்றனர். “அவர்களின் குடியிருப்புகளை நாங்கள் இதுவரை ஏழு, எட்டு முறைகளாவது உடைத்து சேதப்படுத்தி இருக்கிறோம். ஆனாலும் அவர்கள் இவ்விடத்திலிருந்து திரும்பிப் போக மறுக்கிறார்கள்'' என்கிறார் சபியுல்லா என்கிற மாவட்ட வனத்துறை அதிகாரி ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூன் 27, 2010).

"நாங்கள் எங்கே போவது? எங்களால் திரும்பிப் போக முடியாது!' என நிர்கதியாய் தவிக்கின்றனர் இம்மக்கள். இதே பகுதியில் வாழும் சிறு உடைமையாளர்களின் நிலங்களில் மிளகாய் பறிப்பது போன்ற வேலைகளுக்கு உள்ளூர் கூலியை விடக் குறைவான கூலிக்கு இவர்கள் செல்கின்றனர். கோத்திகோயா, முறியா போன்ற இப்பழங்குடி மக்களை பழங்குடியல்லாத பிற உள்ளூர் சமூகத்தினரே இப்படியாகச் சுரண்டுகின்றனர். "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சில கோத்திகோயாக்களுக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் ஊதியத்தில் பணி ஏற்பாடு செய்த போதும், அவர்கள் உள்ளூர் சமூகத்தினரிடம் 50 ரூபாய் கூலிக்கே செல்கின்றனர், என இத்திட்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். ஆனால் இவர்கள் அம்மக்களுக்குத் தர விரும்பும் வேலை என்னவென்றால், அக்காட்டிலுள்ள மரங்களை வெட்டுவதுதான். "நாங்கள் இதைச் செய்தால் வேறு எங்கு போய் வசிப்பது?' என்கிறார் ஒரு முறியா பழங்குடி. தங்கள் வாழ்விடமாகவும் வாழ்க்கையாகவும் இருக்கும் வனத்தை அழிய விடாமல் காப்பதற்காகத்தானே பழங்குடியின மக்களின் இப்போராட்டமே என்பதை, அந்த வனத்துறை அதிகாரிக்கும் அரசு எந்திரத்திற்கும் வேறு எங்ஙனம் உணர்த்துவது?

“ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தின் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அரசுகள் தவறிவிட்டதால்தான், மாவோயிசமும் வன்முறையும் பழங்குடிப் பகுதிகளில் வளர்ந்துள்ளன. மேலும், மதங்கள் மற்றும் மதத் தலைவர்களின் தலையீடும் நடவடிக்கைகளும் இல்லாமல் போனதும் ஒரு முக்கியக் காரணம். காஞ்சி காமகோடி பீடம் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மய்யங்களை இப்பகுதியில் நிறுவி, பழங்குடி மக்களிடம் பல்வேறு வேலைத் திறன்களையும் தகுதிகளையும் வளர்த்தெடுக்க முன்முயற்சி எடுக்கும். மதத் தலைவர்கள் குறிப்பாக, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் தங்களிடம் உள்ள அரசியல் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, அம்மக்களிடம் ஆன்மிகப் போதனைகளைக் கொண்டு செல்ல வேண்டும். சமூக அமைப்பின் மதிப்பீடுகளையும், வாழ்வின் அர்த்தங்களையும் புரிந்து கொண்டால், சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதற்கு இந்துவாகவோ, முஸ்லிமாகவோ அல்லாமல் இந்தியர்களாக மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சமூக நல்லிணக்கமும் அமைதியும் நாட்டில் நிலவும்'' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார் காஞ்சி சங்கராச்சாரி ("தி இந்து', சூன் 29, 2010).

ஒரிசாவின் பழங்குடி மக்களிடையே மருத்துவப் பணி செய்து வந்த கிறித்துவப் பாதிரியார் குடும்பத்தை தீயிட்டுக் கொளுத்தியும், கிறித்துவப் பெண் துறவிகளைப் பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கியும் கிறித்துவ மத நம்பிக்கை சார்ந்த பழங்குடி மக்களின் கிராமங்களைத் தீக்கிரையாக்கி, பலரையும் படுகொலை புரிந்த, இந்து மத ஆன்மிகவாதிகள் மற்றும் தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்கிறாரா சங்கராச்சாரி? சமூக நல்லிணக்கமும் அமைதியும் மாவோயிஸ்டுகளால் அல்ல, இவர் குறிப்பிடும் மதத் தலைவர்களாலும், ஆன்மிக நடவடிக்கைகளாலும்தான் பலநூறு ஆண்டுகளாக சீர்குலைந்து போயுள்ளன என்பதைக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலிருந்த காஞ்சி சங்கராச்சாரி அறியாதவரல்ல. அரசின் வளர்ச்சித் திட்டங்கள், தனது மடத்தின் வழியே முன்னெடுக்க விரும்பும் நலத்திட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும் சங்கராச்சாரி, பழங்குடியின மக்களைக் கொன்று குவிக்கத் திட்டமிடும் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்தும், ராணுவத் துருப்புகளின் வன்முறை வெறியாட்டங்கள் குறித்தும் பேச முன்வருவாரா?

சனாதன சங்கராச்சாரி போன்றவர்களே இப்படி மென்மையான குரலில் பேசிக் கொண்டிருக்கும்போது, பாட்டாளி வர்க்கத்தின் காவலனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் முன்னணித் தலைவருமான சீத்தாராம் எச்சூரி போன்றவர்களோ, "மாவோயிஸ்டு வேட்டைக்கு விமானங்களைப் பயன்படுத்த வேண்டும்' என கூக்குரலிடுகின்றனர். அண்மையில் நடந்து முடிந்து போன மேற்கு வங்க உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி மூன்றில் இரண்டு பங்கு செல்வாக்கை இழந்து நிற்கிறது. சிங்கூர், லால்கர் என மக்கள் போராட்டங்களில் எதிர்நிலை எடுத்து, தாம் முன்வைக்கும் சோசலிச அரசியல் லட்சியத்திற்காகப் போராடி வரும் கம்யூனிஸ்ட் கட்சியாக இருப்பினும் - மாவோயிஸ்டுகளுக்கு எதிராக முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்து நிற்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இடதுசாரித் தலைமை பார்ப்பனமயமானால், உழைக்கும் மக்களைக் காட்டித் தரும் என்பதற்கு வரலாற்றில் இன்னுமொரு எடுத்துக்காட்டாக அம்பலப்பட்டுப் போயுள்ளது இக்கட்சி! தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக அடித்தளத்தை அரசியல் தலைமைப் பாத்திரமாக உயர்த்த முன்வராத கம்யூனிசப் போலிகளாக, இத்தகைய சோசலிச வேடதாரிகள் தம் செல்வாக்கை இழந்து நிற்கின்றனர்.

“99 சதவிகித பழங்குடிகள் மாவோயிஸ்டுகள் அல்லர்; ஆனால் 99 சதவிகித மாவோயிஸ்டுகள் பழங்குடிகளே'' என அருந்ததிராய் தெளிவுபடுத்துகிறார். கடந்த 4.6.2010 அன்று "உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சென்னையில் ஏற்பாடு செய்திருந்த பசுமை வேட்டைக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் உரையாற்றும்போது, “போராடும் மக்களுக்கு ஆதரவாகத்தான் நிற்கிறேன்; பேசுகிறேன் என்பதை "நான் ஒரு மாவோயிஸ்டுதான்' என்பதாக ஊடகங்கள் செய்தியைத் திரித்து வெளியிடுகின்றன. சிறை செல்வதற்கு அஞ்சி இதை நான் மறுக்கவில்லை. ஒரு எழுத்தாளர் என்ற முறையில் எனக்கு எதையும் கேள்வி கேட்க உரிமை இருப்பதாகவே நம்புகிறேன்'' என தயக்கமின்றி குறிப்பிட்டார் அருந்ததிராய்.

மேலும் அவர், “நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும்தான் இந்த அரசுகளின் அனைத்துக் கயமைத்தனங்களுக்கும் முட்டுக் கொடுப்பவையாக இருக்கின்றன'' என்றும் சாடினார். நுகர்வு வெறி, தன்னலம், பேராசை, பண்பாட்டுச் சீரழிவு, போலிப் பெருமிதம் ஆகிய எதிர்மறைக் குணநலன்களை உயர்த்திப் பிடிக்கும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க மனிதாபிமானிகளின் உளவியல் பாத்திரமாக, தத்துவப் பண்டமாகத்தான் நாடாளுமன்றவாத இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகள் உருமாறி இருக்கின்றன. சங்கராச்சாரிகளின் மனிதாபிமானமும், பார்ப்பனிய கம்யூனிசப் போலிகளின் மனிதாபிமானமும் - இத்தகைய நடுத்தர வர்க்க ஊசலாட்டத்தின் மயிரிழையில்தான் ஊடாடி நிற்கின்றன. அது மட்டுமல்ல, சில நேரங்களில் அவை ஒரே புள்ளியில் குவிந்தும் விடுகின்றன.

- அடுத்த இதழில்

Pin It