அரசுப் பள்ளிகளில் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  

அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில்கூட பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தான் தொடர்கிறது. அந்த ஒரு ஆசிரியர் பணியிடத்திற்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் மாணவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காட்டில் சரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சில தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்கிறார்கள்.

இந்த பெற்றோர்-ஆசிரியர் கழக நியமன ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்த முடியாத சூழல்தான் நிலவி வருகிறது. கல்விப் பணி மட்டுமல்லாமல் நிர்வாகப் பணிகளுக்கும் ஆள் பற்றாக்குறையோடு பள்ளிகள் இயங்கி வருகிறது. அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள அலுவலகப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அலுவலகப் பணிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பணியாட்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தூய்மைப் பணி செய்வதற்கு போதிய பணியாளர்களை அரசு நியமனம் செய்யாததால் தூய்மை பணியாளர்களையும் நியமனம் செய்ய வேண்டிய நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று ஒரு பள்ளியின் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்காவது பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமனம் செய்ய வேண்டிய சூழல்தான் அரசுப் பள்ளிகளின் நிலை. இவ்வளவு பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டியது இந்த பெற்றோர் ஆசிரியர் கழகமே.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் உளவியல் சிக்கலை தீர்ப்பதற்காக மாணவர்கள் குறித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிகளில் பணியாளர்களை பணியமர்த்தி சம்பளம் கொடுக்கும் அமைப்பாக மாறி வருகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அரசியல்வாதிகளாகவும் ஊர் பெரும் புள்ளிகளாகவுமே இருக்கிறார்கள்.  சில பள்ளிகளில் கால நிர்ணயம் இல்லாமல் பல ஆண்டுகளாக ஒரு சிலரே தலைவராக, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தொடர்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர் கழக தலைமைப் பதவி கௌரவம் மிக்க பதவியாக மாற்றப்பட்டு விட்டது.

பள்ளி நிர்வாகத்தில் கல்விச் சூழலில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பங்கு அதிகரித்து வருகிறது இந்நிலையில் கழகத்திற்கு என்று நிதி ஆதாரம் இல்லாத நிலையில் மாணவர்களிடமிருந்து பள்ளி செயற்கையின்போதும் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பெறும் போதும் பெரும் கட்டணம் கட்டாய நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடை பணத்திற்கு ரசீது வழங்கப்படுவதில்லை.  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களான பெற்றோர்களுக்கு வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லை.

பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் அல்லாத பள்ளி வளர்ச்சியில் பங்கெடுப்பதாக கூறிக்கொள்ளும் உள்ளூர் அரசியல் தலைவர்களே பெரும்பாலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் நிதி வரவு செலவுகள் குறித்த நிலையைக் கேட்க தயங்கும் நிலையே உள்ளது.  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகக்குழு பெற்றோர்களை உள்ளடக்கியதாக இல்லாததாலும் பெரும்பாலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளாக இருப்பதாலும் பெற்றோர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தினருக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. சீருடை வழங்குவது; புத்தகம் வழங்குவது; புத்தகப்பை வழங்குவது; மடிகணினி வழங்குவது; மிதிவண்டி வழங்குவது என பள்ளி சார்ந்த நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் உடனடியாக 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் ஆசிரியர் நியமனத்தை செய்ய வேண்டும்.                             

Pin It