ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (2)

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பியுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்காக அவர் எழுதிய கட்டுரை இது.(சென்ற இதழ் தொடர்ச்சி)

சமயம்

இலங்கையில் பௌத்தம், கிறித்தவம், இந்து. இசுலாம் போன்ற மதங்கள் இருந்தா லும் பௌத்தம் ஆட்சி செலுத்துகிறது. இதனால் எல்லா சமய தலைவர்களும் இலங்கை பௌத்த நாடு அல்லது சமயம்சார்ந்த நாடு என்று கூறுகின்றனர். இதனால் பௌத்த சமயத்தின் பெயரில் புத்தர் விகார்களை(சிலைகளை)தமிழர் பகுதிகளில் அதிகமாக நிறுவுகின்றனர். இரணைமடு அம்பகாமம் என்ற இடத்தில் உள்ள கனக சொக்கலிங்க நாதர் கோவிலுக்கு அருகில் புத்தர் சிலையை வைத்தனர். இதனால் நான்கு குளங்களையும் 8,000 ஏக்கர் நிலங்களை இராணுவத்தின் உதவியால் சமயம் கட்டுப் படுத்துகின்றது. மன்னார் திருக்கேதீஸ்வரர் கோவில் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை புத்தர் சிலையை வைத்து ஆக்கிரமிப்பு செய்தனர். நயீனா தீவில் 67 அடி உயரமுள்ள புத்தர் சிலையை நிறவினர். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலையை வைப்பது சிங்கள மயமாக்கலின் வெளிப்பாடாகும் என்று வடக்கு மாகான சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கூறுகிறார். நல்லிணக்கம் என்று கூறும் அரசு தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் ஏன் இத்தகைய செயல்பாட்டைத் திணிக்கிறார்கள். திரிகோண மலையில் உள்ள சுடுநீர் கிணறு என்ற இந்துக்களின் மையம்  புத்த மையமாகவும் சுற்றுலா தலமாகவும் மாற்றப்பட்டுள்ளது. முருங்கனுக்கு அருகிலுள்ள குயவன் தெரு என்ற தமிழரின் ஊரிலுள்ள முருகன் கோவிலுக்கு அருகில் புத்த சிலையை வைத்திருக்கின்றனர். அதை பாதுகாக்க ஒரு புத்த பிக்கு இருக்கின்றார்.

பழைய, உடைந்த, புதிய புத்த சிலைகளை நிறுவி தமிழ்ப் பகுதிகளை சிங்கள பகுதிகளாக மாற்று கின்றனர். புத்தர் சிலைகளை அத்துமீறி நிறுவது பௌத்தத்திற்கு எதிரானது என்று கிளிநொச்சி பௌத்த துறவிகளின் தலைவர் விமலகாணதேரர் கூறுகிறார். புத்த சிலையை அமைப்பது தமிழர்களுக்கு சினமூட்டு கிறதென யாழ்ப்பாண இந்து சமய பேரவை கூறகிறது(16. 08.2016). புத்தரை அதிகாரம், அடிமைத்தனம், ஆக்கிரமித்தல், அழித்தல் ஆகியவற்றின் குறியீடாக பயன்படுத்து கின்றனர்.

2614 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முல்லைத்தீவில் 40, 000 ஏக்கர் நிலங்களை இராணுவ உதவியுடன் பௌத்த சமயம் ஆக்கிரமிப்பு செய் திருக்கிறது. இதில் இராணுவம் சிங்களர்களை குடியமர்த்தி டொலர்பாம், கென்பாம் போன்ற பண்ணைகளை உருவாக்கி உதவி செய்கிறது. சமய ஆக்கிரமிப்பு மிகவும் வன்முறையானது. எனவே பௌத்த சமயம் பௌத்த தேசியத்தை கட்டமைக்க உழைத்துக் கொண்டிருக்கிறது.

பன்னாட்டு, தேசிய நிறுவனங்கள், தலை மன்னார் கடற்கரை செருமானிய விளையாட்டுத் துறை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அந்த பகுதியில் தமிழ் மீனவர்களை மீன் பிடிக்க தடை விதிக்கிறது.  புதுக் குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் சிங்களவர்கள் மீன் பிடிக்கின்றனர். கீரிமலையில் இராசபக்சே உல்லாச விடுதிகளை கட்டியுள்ளார். காங்சேன் துறையில் கோத்தபாய உல்லாச விடுதிகளை கட்டியுள்ளார். தமிழர்களின் கடற்கரைகளை தமிழர் அல்லாதவர் களுக்கு கொடுத்து கட்டுப்படுத்து கின்றனர். நாட்டை Magic Exide போன்ற பன்னாட்டு, தேசிய நிறுவனங்களுக்கு அடகு வைத்துவிட்டனர். அதனால் தமிழர்களை கட்டுப்படுத்தி சிங்களவர் களை குடியமர்த்தி சிங்கள மயமாக்கு கின்றனர். இதனால் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழித்து தமிழர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றனர். தமிழ்ப் பகுதியில் புதிய வரலாற்றை எழுதுகின்றனர். தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க அமைச்சர்கள் தூண்டுகின்றனர். எடு. கடந்த மே திங்கள் பனாகொட இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க “வடக்கில் சிங்கள மக்கள் வாழவும் கல்வி கற்கவும் விகார்களை அமைக்கவும் முடியாது என்றால் பெற்ற சுதந்திரத்தினால் பயனில்லை என்று  பகைமையை விதைக்கிறார். வகுப்புவாதத்தை திட்டமிட்டு தூண்டிவிடுகிறார்.

(தொடரும்)

Pin It