ஈழத்தார்க் கிழைத்திட்ட இரண்டகத்தை மக்களிடம்
        எடுத்துச் சொன்னால்
ஆழத்தான் பதறுகிறார் அடக்குமுறைச் சட்டத்தை
       அழைக்கின் றாரே!
ஊழலுறை இரண்டகத்தை உண்மையினை மிகவிளக்கி
      உரைப்போர் தம்மைத்
தோழமெனும் சிறையிட்டே தொடுக்கின்றார் பொய்வழக்கு
     தொல்லை தோய்த்தே!
 
பாட்டன்பூட் டன்சேயோன் பழந்தமிழோட் டன்மார்கள்
     பரவர் என்றே
வேட்டாழி தனிலோடி விருப்பமுடன் மீன்பிடித்தார்
    விளக்கி ஓங்கும்
பாட்டாலே முழக்கமிடும் பழந்தமிழர் இலக்கியங்கள்
    படித்தீர்! இன்றே
வேட்டையெனக் கொல்கின்றார் வெறியர்நம் மீனவரை
    வீணில் பார்ப்பீர்!
 
எம்மீழ உறவுகட்கே இழைத்தயிரண் டகஞ்சொன்னால்
      எழுந்து வந்தே
வெம்பலுடன் உறுமுகிறார் வீணிலுறை ஓரமைச்சர்
      விரைவில் இங்கே
தும்முதற்கும் தடைசெய்தோர் துடைமாறு புதுச்சட்டம்
     தொடுப்போம் என்றே!
மொய்ம்புறவே முழங்கிடுவோம்! முழுஉருவம் வெளித்தெரியும்
     முனைந்து செய்வீர்!

- தமிழநம்பி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It