“இந்தியா பிரியக்கூடாது; இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு மொழி பேசுபவர்களாகவும், பல்வேறு கலை, பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும், உடையவர்களாகவும், இருந்தாலும் பல்வேறு சாதிப் பிரிவுகளையும் மதப் பிரிவுகளையும் கொண்டவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் தங்களின் வேறுபாடுகளையும் பிரிவுகளையும் மறந்து(!) ஒற்றுமையுடையவர்களாகவும், ஒருமையுணர்வு பெற்றவர்களாகவும் இந்திய தேசியம் என்னும் ஒரு நாட்டுணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்" என்று இக்கால், வரலாறும், வாழ்வியலும் அறியாத பலரும் கூறிக் கற்பனைக்கனா கண்டு வருகிறார்கள்.

இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை; அஃது இங்குள்ள தேசிய இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான சொத்து ஆகும். இதை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட வெள்ளைக்காரர்களை ஏமாற்றி, அல்லது சமநிலைத் தரகு (பேரம்) பேசி அவர்களிடமிருந்து எக்குத் தப்பாக ­ஒற்றுக்குத்தலாகத் தங்கள் ஆளுமைக்கு ஏற்றுக் கொண்ட வடவாரியப் பார்ப்பனர்களும். வல்லரசுகளின் அடிநிலை முதலாளிகளும், இந்தியா பிரியக் கூடாது. பிரிக்க விட மாட்டோம் என்று ஏகடியமும் எகத்தாளமும் கொண்டு பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு, பிரிவினை கூடாது என்று கூறுவதற்குப் பிறர்க்கு எத்துணை உரிமை உண்டோ, அத்துணை உரிமை உண்டு, நாங்கள் பிரிவினை வேண்டும் என்பதற்கும்!

இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு கருத்துதான்! என்றும் மாறாதது, அல்லது மாற்ற முடியாத இயற்கை நெறியன்று. இவர்கள் கூறுவதுபோல் இந்தியா என்றுமே ஒன்றாக இருந்ததில்லை. வரலாற்றுக் கெட்டாத காலந் தொட்டு, இதில் பல்வேறு இன மக்கள், அவர்களின் சிறியதும் பெரியதுமான பல்வேறு மொழிகள், அவை தழுவிய கலை, பண்பாடுகள், நாகரிகங்கள், பழக்கவழக்கங்கள், கடவுள் கொள்கைகள், ஆட்சி முறைகள் முதலியவை என்றுமே இந்தியாவை ஒன்றாக, ஒரே தன்மையாக இருக்க விட்டதில்லை. எனவே, இந்தியா ஒன்றாக, ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஒரு பொருளற்ற ஆட்சிப் பேராசைக் கொண்ட வெறுங் கருத்துதான். அதனை இயற்கையாக்கிவிட வடநாட்டிலுள்ள அரசியல் வீணர்கள் சிலர் கற்பனைக் கனாக் கண்டு வருவதும், அக்கனவை நனவாக்க இங்குள்ள சில அடிவருடிகளும், பதவி மோப்ப நாய்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அங்காந்து திரிவதும் வேடிக்கையிலும் வேடிக்கையாகப் போய்விட்டது. மேலும். இயற்கையே காலப்போக்கில் பல்வேறு படிநிலை மாறுதல்கள் அடையும்போது, இப்பொருளற்ற புன்னிலைப் பொய்க் கருத்துகள் மாறுபாடு அடைவதற்கு என்ன தடையாக இருக்க முடியும்! இவ்வகையில் இந்தியா ஒன்றாக இருப்பதைத் தங்கள் வாழ்க்கைக்கு ஊதியமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தந்நலக் கூட்டமே, பிரிவினை வேண்டாம். ஒற்றுமை வேண்டும். ஒருமைப்பாடு வேண்டும் என்று முரண்டு பிடிக்கின்றனர்.

ஓர் ஐந்தாண்டுக் காலம் ஆட்சி செய்ய வந்தவர்கள் 'இந்தியாவைப் பிரிக்கவிட மாட்டோம்' என்று கூறுகின்ற அளவில் அதிக உரிமை கொண்டாடுவது வல்லதிகார மனப்பாங்கே தவிர வேறில்லை. வலிவும் பொலிவும் பெற்றிருந்து அவற்றைக் காலப் போக்கில் இழந்து நிறகும் ஒரு தேசிய இனத்தை, சாதி, மத அரசியல் பொருளியலால் வல்லாண்மை பெற்று, நிற்கும் ஓர் இனத்தவர்கள் தங்கள் ஆளுமைக்குக் கீழ்தான் அடங்கி ஒடுங்கி உரிமையிழந்து வாழ்விழந்து கிடக்க வேண்டும் என்று கூறுவதற்கு என்ன உரிமையிருக்கிறது? தாக்குண்ட இனம் ஒட்டியிருக்க விரும்பினால் ஒட்ட வைத்துக் கொள்வதிலும் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பேசுவதிலும் தவறில்லை. ஆனால் விரும்பத் தகாத ஒட்டுறவினின்று விடுபட்டுப் பிரிந்து போய், முழு உரிமை யுள்ள தனி நிலை ஆட்சி அமைத்துக் கொள்ள விரும்பும் ஓரினத்தைச் சட்ட திட்டங்களாலும், ஆளுமைத் தந்திரச் சூழ்ச்சிகளாலும் அடக்கு வன்முறைகளாலும், கிடுக்குப் பிடி போட்டு, ஒடுங்கியே கிட என்று சொல்வது எந்த வகையில் மாந்த நேயமும், மக்கள் ஞாயமும் ஆகும் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை... இவ் விழிநிலைக் கோட்பாடுகளால் இந்தியா பிளவுபடக் கூடாது என்பதற்கோ, தமிழ்நாட்டுப் பிரிவினை கூடாது என்பதற்கோ, அல்லது இங்குள்ள தேசிய இனங்கள் பிரிந்து போக ஒப்ப மாட்டோம் என்பதற்கோ யாருக்குமே உரிமையில்லை என்று தெளிவாக உணர்ந்து கொள்க! தேசிய இன விடுதலை இயற்கையானது; தேவையானது!

(திசம்பர், 1989)

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Pin It