இந்தியாவில் எப்பொழுதெல்லாம் குண்டு வெடிக்கின்றதோ, அதன் அடுத்த நாள் முழுவதும் ஊடகங்கள் ஒரு செய்தியைத் தாங்கிவரும், அது தான் “இசுலாமிய பயங்கரவாதம்”. அந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாகவும், அதன் மூளையாகவும் செயல்பட்டதாகக் கூறி சில இசுலாமியர்களை அரச அதிகாரம் கைது செய்யும். அரசு மற்றும் ஊடகங்களினால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது இந்த இசுலாமியப் பயங்கரவாதம். ஆனால் இதன் பின்னர் நடப்பவை எதுவுமே பெரும்பான்மையான ஊடகங்களில் வெளிவருவதில்லை (அ) வெளிவிடப்படுவதில்லை. இதைப் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். ஆனால் செய்திகளில் குற்றவாளிகளாக்க் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்கள் மனதில் தீவிரவாதி என்ற உருவத்தை பெறும்வரை ஊடகங்கள் விடுவதில்லை. இந்த செய்திகளெல்லாம் உண்மை, அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், எல்லா இசுலாமியர்களும் இவ்வாறு தான் என்ற எண்ணம் கொண்ட ஒரு வர்க்கம் உருவாகிவருகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த கருத்தாக்கம் புனையப்பட்ட ஒன்று என்பதை விளக்கவே இந்த மொழிபெயர்ப்பு. அரசு புனையும் வழக்குகளும், அதில் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றியும், அந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் இங்கு நாம் காணப்போகின்றோம். இந்தக் கட்டுரை இசுலாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்ற கருத்தாக்கத்தை உடைப்பதற்கான ஒரு மிகச்சிறிய முயற்சி.
தில்லி காவல்துறையில் 1986ல் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. 1990களில் இது பரவலாக எல்லோராலும் அறியப்பட்டது. இதற்குக் காரணம் இவர்கள் பல தீவிரவாதிகளைக் கொன்றதும், பல வழக்குகளை விசாரித்து முடித்து வைத்ததுமே. இதே நேரத்தில் இந்தத் துறையில் உள்ள அதிகாரிகளே இந்தத் துறையில் பல தவறுகள் நடைபெறுவதாகவும், போலியான காரணங்களைக் காட்டி கொலை செய்வதும் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். மிகவும் முக்கிய வழக்கறிஞரான பிரசாந்த் பூசன் கூறுகையில் “துரதிஷ்டவசமாக எப்பொழுதெல்லாம் நீதிமன்றம் அவர்களால் (சிறப்புப் பிரிவு) புனையப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு வழக்கை உருவாக்கியுள்ளார்கள் எனத் தெரிந்துகொள்கின்றதோ அந்த வழக்குகளில் அவர்களுக்கு எதிராக “ஒரு கண்டனத்தைக் கூட” பதிவு செய்வதில்லை. இவ்வாறு செய்யும் அதிகாரிகள் மிகக் கடுமையாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும் வரை, இந்த காவல்துறை அதிகாரிகள் அப்பாவிப் பொதுமக்களை தீவிரவாதி என்று சித்தரிப்பதை நிறுத்தமாட்டார்கள்” என்கிறார்.
தில்வார் கான் மற்றும் மசூத் அகமது
தன்னைக் கடந்து செல்லும் காவலாளியின் ஒரு சிறு பார்வை போதும் இவர்கள் இருவரின் முதுகுத்தண்டு வழியே பயம் படர்ந்து செல்ல. இதற்குப் பின்னால் ஒரு காரணமும் உண்டு. தில்வார் இவர் டெல்லியின் வட கிழக்குப் பகுதியில் உள்ள இமாம்- உல்- உலூம் மதராசாவில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். மசூத் பகவாலி மசூதியில் இமாமாக இருப்பவர்.
மார்ச் 2005 அன்று அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, அங்கிருந்து டெல்லியின் தெற்குப் பகுதியான லோதி காலனியில் உள்ள டெல்லி சிறப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன்பின்பு இவர்கள் இருவரும் வெளியில் வந்து பொதுமக்களை பார்த்து ஐந்து வருடங்கள் ஆனது. இலசுகர் இ தொய்பா தீவிரவாதிகள் என இவர்கள் இருவரும் முத்திரை குத்தப்பட்டார்கள். மேலும் டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பள்ளியில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
பாட்டியாலா நீதிமன்றம் இவர்களின் மேலான குற்றச்சாட்டிற்கு ஆதாரமான ஆவணங்கள் இல்லாததால் போன சனவரி 2010ல் விடுவிக்கும் வரை இவர்கள் இருவரும் ஐந்து வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சிறப்பு பிரிவு காவலர்கள் விசாரிக்கும் முறையில் உள்ள குழப்பங்களையும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியமைக்கும் கண்டனம் தெரிவித்தது.
கமீத் என்ற இலசுகர் இ தொய்பா உறுப்பினரின் வாக்குமூலம் ஒன்றை வைத்து மட்டுமே காவல்துறை தில்வாரி மற்றும் மசூத்தைக் கைது செய்தது. மேலும் கமீத் தனது வாக்குமூலத்தில் தில்வாரியிடம் பாகிசுதான் தீவரவாதிகளின் வெடிமருந்து பெட்டகம் ஒன்று இருப்பதாகவும் கூறினான். கமீதே தில்வாரி மற்றும் மசூதை அடையாளம் காட்டினான். இவர்களிடம் இருந்து ஒரு வெடிகுண்டும், சீன வகை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை கூறியது.
தில்வார் தனக்கு நடந்த விசாரணை பற்றி நினைவு கூறுகின்றார் ”என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிவதற்கே எனக்கு வெகு நேரமாயிற்று. அவர்கள் கேட்ட கேள்வியெல்லாம் ஒன்று தான். உனக்கு கமீதை தெரியுமா. அவரை எனக்குத் தெரியாது எனக் கூறிய போதெல்லாம் அவர்கள் என்னைத் தொந்தரவு செய்து திரும்ப திரும்ப அதே கேள்வியையே கேட்டனர். அவர்கள் என்னை ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திடக் கோரினர். நான் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வந்தேன். உன் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை நீ படிப்பாய் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்."
மசூத்திற்கும் அதே நிலையே, "முதலில் அவர்கள் கமீதை அடையாளம் காட்டச் சொன்னார்கள், பின் அந்த தற்கொலை தாக்குதல் திட்டத்தை பற்றி விவரிக்கச் சொன்னார்கள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நேரம் ஆக ஆக நிலைமை மோசமானது. நாங்கள் ஒளிவாங்கியின் முன்னால் மிருகங்களைப் போல நடத்தப்பட்டோம். சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்ட எங்களுக்கு அருகில் நின்று கொள்வதற்கு மிகவும் ஆசைபட்டனர். ஏனென்றால் அப்பொழுது தானே செய்திகளில் அவர்களும் தோன்றுவர். ஒரு அதிகாரி என்னை நன்றாக நிற்க சொன்னார் (தில்வாரி). கடவுளின் மீதான எனது நம்பிக்கை அந்த ஒரு நிலையில் என்னை சோதித்தது. நான் இந்த நிலைக்கு வர என்ன செய்தேன்?"
கைதான பின்னர் இவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியவில்லை. பொறுமையாக இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்காக காத்திருந்தனர்.
வழக்கில் தீர்ப்பு வருவதற்கு நீண்ட காலமாகியது, சனவரி எட்டு வந்த அந்தத் தீர்ப்பு இவர்களை எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவித்தது. நீதிபதி சர்மா இவ்வாறு தனது தீர்ப்பில் கூறுகின்றார் “அரச தரப்பினால் வைக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நம்பும் விதம் இல்லை. தில்வார் கைது செய்யப்பட்டதாகக் கூறும் வீட்டில் அவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே இல்லை. மேலும் சிறப்புப் பிரிவு ஆய்வாளரான இரமேசு லாம்பா டெல்லியின் வடகிழக்கு பகுதியின் நுழைவுப் பகுதியில் இருந்த தில்வார் மற்றும் மசூதை அரை மணி நேர இடைவெளியில் கைது செய்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறும் வெடிமருந்துப் பொருட்களை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த வழக்கு விசாரணையில் அவர் கூறவில்லை. இதில் மிகவும் விசித்திரமானது என்னவென்றால் ஆய்வாளார் இரான் சிங்கின் கூற்றே. அவர் கூறுகிறார் தில்வாரைக் கைது செய்த பின்னர் நாங்கள் அலுவலகத்துக்கு சென்ற பின்னர் திரும்பச் சென்று மசூதைக் கைது செய்தோம் (மசூதும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்க). இந்தக் கூற்றும் ஆய்வாளர் இரமேசின் கூற்றும் வேறுபடுகின்றன. அவர் கூறுகையில் இருவரையும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்தோம் என்றார். அதாவது ஒரே பகுதியில் வாழ்ந்த இருவரில் ஒருவரைக் கைது செய்ய மட்டும் இரான் சிங்கை சேர்த்தும் இரண்டாமவரைக் கைது செய்யப்போகும் போது அவரை சேர்க்காததும் விசித்திரமானது. மேலும் நீதிபதி கூறுகையில் ”இவர்களை கைது செய்யப்போகும்போது அடையாளம் காட்ட கமீது சென்றாரா என்பது ஐயத்திற்கிடமானது. ஏனென்றால் காவல்துறை தினக்குறிப்புகளில் அப்படி ஒரு பெயரே இல்லை”.
"நான் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் நான் ஒரு விசித்திரமான உலகில் வாழ்வது போல எனக்குத் தோன்றியது. என் மேலான தீவிரவாதி என்ற முத்திரை என்னை விட்டு போய்விட்டது என நான் நம்பவே எனக்கு சில காலம் ஆயிற்று" எனக் கூறுகின்றார் தில்வார். மசூத்தோ ஒரு சிறிய புன்னகையுடன் கடவுளுக்கு நன்றி சொல்கின்றார். ஆனால் இந்த மனநிலை சில நேரமே நீடித்தது. அதற்கு அடுத்த நாளே காவல் துறை அதிகாரிகள் வந்து வேறொரு வழக்கிற்காக சந்தேகத்தின் பேரில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தில்வாரியை வரச் சொன்னார்கள். தில்வாரியின் கண்முன்னே கடந்த ஐந்து வருட கால துன்பமும் வந்து சென்றது. ஆனால் தில்வாரின் வழக்கறிஞர் மீட்டுச்சென்றார். 'நீதிமன்றம் நான் குற்றமற்றவன் எனக் கூறிய பின்னும் என்னை விட்டு அந்த பயம் மட்டும் அகலவே இல்லை. என் இறப்பிற்கு பிறகுதான் அது மறையும்' என விரக்தியுடன் கூறுகின்றார் தில்வாரி.
——————————–
வேலை பார்ப்பதற்காக தான் சிங்கப்பூர் செல்வது தன்னை இந்த அளவில் பாதிக்கும் என கரூண் ரசீத் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் பீகாரில் இயந்தரவியல் தொழில்நுட்பம படித்தவர். 2004ல் இந்துசுதான் ஏரோநாட்டிகல் நிறுவனப் பணியிலிருந்து வெளியேறி சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 22 மாத கால பயிற்சியில் சேரச் சென்றார். பின்னர் மே 16, 2005ல் தனது குடும்த்தாரைப் பார்க்க வந்த இவரை இந்திராகாந்தி விமான நிலைத்திலேயே சிறப்புப் பிரிவு கைது செய்தது. டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பள்ளியில் தற்கொலைத் தாக்குதல் நடத்த பண உதவி புரிந்ததாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி சிறப்புப் பிரிவு அதிகாரிகளின் கூற்றுப்படி கரூண் இரண்டு முறை சிங்கப்பூரிலிருந்து மொத்தம் ரூபாய் 49,000ஐ தனது தம்பி மொகமதிற்கு சனவரி 10 மற்றும் 15 திகதிகளில் இரண்டு தவணைகளில் அனுப்பி உள்ளார். மொகமது அந்த பணத்தை சாமிற்கு அனுப்பி உள்ளார். இந்த சாம் என்பவர் உத்தம் நகர்(மார்ச் 2005) துப்பாக்கிச் சண்டையில் இறந்த மூவரில் ஒருவராவர். அதே போல கரூண் தான் பாகிசுதானின் அப்துல் அசீசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் 76 பக்க மின்மடல் ஒன்று ஃபரூக் என்ற பெயரில் இவர் சங்கேத மொழியில் மற்றொரு தீவிரவாத இயக்கத்திற்கு எதிர்காலத் திட்டம் பற்றி அனுப்பி உள்ளதாகவும், இவரைக் கைது செய்தது ஒரு முக்கியமான நிகழ்வு என்றும் காவல் துறை கூறியது.
ஆனால் கரூணின் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது முற்றிலும் மாறுபட்ட உண்மை வெளிப்பட்டது. தீவிரவாத நிகழ்வுகளைத் தடுப்பதற்காக கொடுத்த அதிகாரங்களை சிறப்புப் பிரிவு தவறாக பிரயோகப்படுத்துவதாக கரூணின் வழக்கறிஞரான கான் வாதம் செய்தார். “கரூண் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூர் செல்வதற்காக தனது மாமாவிடமிருந்து ஒரு இலட்சம் கடன் வாங்கியுள்ளார். அங்கு சென்றவுடன் தனக்கு இவ்வளவு பணம் தேவையில்லை என்று தெரிந்தவுடன் இவர் ரூபாய் 49,000ஐ தனது தம்பிக்கு அனுப்பி, கடனை திருப்பிச் செலுத்தக் கோரியுள்ளார். அந்தப் பணம் தீவிரவாத செயல்களுக்குப் பயன்பட்டது இவருக்கு எப்படித் தெரியும்?” இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூணின் தம்பி மொகமது தான் சாமிற்கு பணம் கொடுக்கவே இல்லை என நீதிமன்றத்தில் கூறினார். காவல்துறையும் கரூணிற்கும் இலசுகர் இ தொய்பா அமைப்பிற்கும் தொடர்பு படுத்தி எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை. மேலும் கரூணிடம் இருந்து சென்றதாக கூறப்பட்ட மின்மடலும் போலி என்று குறுக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. மே 18 ஆம் திகதி கரூணின் மின்மடல் முகவரியின் சங்கேதக் குறி சொல்லின் மூலம் அந்த மின்மடலை கண்டுபிடித்து ஒரு பிரதி எடுத்ததாக நீதிமன்றத்தில் கூறினார் ஆய்வாளர் கைலாசு. ஆனால் ஆய்வாளர் பத்ரிநாத்தின் கூற்றுப்படி மே 13, 2005 அன்றே கரூண் தனது மின்மடல் முகவரிக்கான சங்கேத குறிச்சொல்லை தங்களிடம் கொடுத்ததாகவும் அன்று நடந்த விசாரணையின் போது ஆய்வாளர் கைலாசும் இருந்தார் என்றார். அப்படியானால் இந்த ஐந்து நாட்களில் காவல் துறையின் மூலம் புனையப்பட்ட ஒன்றே இந்த மின்மடல் என நிறுவப்பட்டது. இந்த மின்மடலின் பிரதி கூட வழக்கின் பிரதியுடன் இணைக்கப்படவில்லை. இந்த மின்மடலை பற்றிய எந்த ஒரு குறிப்பும் காவல்துறையின் குறிப்பேடுகளில் இல்லை. இதன் மூலம் ஆய்வாளர் கைலாசு பொய் கூறியது நிரூபணமாகியது.
இறுதியாக கரூண் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இன்னமும் அவரிடம் இருந்து அந்த பயம் போகவில்லை எனக் கூறுகின்றார் அவரது வழக்கறிஞர் கான். மீண்டும் காவல் துறையின் மீது அவருக்கு நம்பிக்கை வர பல காலம் பிடிக்கும் எனவும் கூறுகின்றார் அவர்.
——————————-
எனது இளமை காலத்தை யார் திருப்பித் தருவார் சொல்லுங்கள்? இஃப்திகார் மாலிக்
டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பள்ளியில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் இலசுகர் இ தொய்பாவுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் இருந்த இஃப்திகாரின் வாழ்க்கையில் இப்பொழுது தான் வெளிச்சம் வர ஆரம்பித்துள்ளது. இஃப்திகார் வயது 26, டேராடூனில் உள்ள டால்பின் உயிரி மருத்துவம் மற்றும் இயற்கை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிரி மருத்துவம் பயிலும் ஒரு மாணவர். இவர் மார்ச் 7,2005 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பேட்டில், குசராத் மதக்கலவரத்தின் மறுவினையாக டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சி பள்ளியின் அணிவகுப்பின் போது தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், மேலும் குரானில் இருந்து தீவிரமான சில பத்திகளும் அதில் உள்ளதாகவும் கூறியது சிறப்புப் பிரிவு. மேலும் இஃப்திகார் பாகிசுதானிய தீவிரவாதி சாமுடன் எப்பொழுதும் தொடர்பிலேயெ இருப்பதாகவும், சாமின் அறிவுறுத்தலின் பேரிலே இசுலாமிய மாணவர்கள் முன்னணி நடத்திய கூட்டங்கள் பீகாரில் நடைபெற்ற போது இஃப்திகார் அதில் கலந்து கொண்டதாகவும் கூறியது. மேலும் இஃப்திகார் ,சாமின் நாட்குறிப்பேட்டில் சாகித் என்று குறிக்கப்பட்டதாகவும், இஃப்திகாருக்கு இலசுக்கர் கல்வியுதவி செய்ததாகவும் கூறியது. ஆனால் இஃப்திகாரோ இதற்கும் எனக்கும் சம்மபந்தமில்லை என கூறிய பின்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.
நீதிபதி சர்மாவே இந்த வழக்கில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் இவ்வாறு கூறுகின்றார் “ஆய்வாளர் இரமேசின் கூற்றுப்படி ஆய்வாளர் கைலாசு டேரா டூன் சென்று இஃப்திகார் வீட்டில் இருந்து கைப்பற்றியதாக்க் கூறிய இராணுவப் பள்ளி நுழைவு சீட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அது ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வு என்றும் அணிவகுப்பு சமீபத்தில் தான் நடைபெற்றது என பின்னர் குறுக்கு விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஆய்வாளர் கைலாசு டேராடூன் சென்றதே இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியும் தெரிய வந்தது. மேலும் இஃப்திகார் தன்னை வற்புறுத்தித்தான் குசராத் மதக்கலவரத்திற்கு எதிரான தாக்குதல் தொடர்பான குறிப்பு எழுதிவாங்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் கூறினார். மேலும் குரானில் இருந்து தீவிரமான பத்திகள் எழுதப்பட்டதாக காவல் துறை கூறியதும் பொய். அந்தப் பத்திகளில் உள்ளது சாதாரண வார்த்தைகளேயாகும். மேலும் இஃப்திகார் கைது செய்யப்படுவது பற்றி வீட்டின் உரிமையாளருக்குக் கூறவில்லை. மேலும் கைதின் போது எந்த ஒரு பொது மக்களுமே பார்க்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமானது” என தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும் குறுக்கு விசாரணையின் போது இஃப்திகாரின் நாட்குறிப்பு மற்றும் தீவிரவாதக் குறிப்பை டேராடூன் சென்று கைப்பற்றியதாகக் கூறிய ஆய்வாளர்கள் இதுவரை டேரா டூன் சென்றதே இல்லை என்றும், அது ஒரு புனையப்பட்ட ஆதாரம் என்றும் நிரூபணமானது. மேலும் ஒரு ஆய்வாளர் அந்த குறிப்புகள் இந்தியில் இருந்ததாகவும் மற்றொருவர் ஆங்கிலத்தில் இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் கூறினர். மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் இஃப்திகார் இலசுகர் அமைப்புடன் தொடர்புடையவர் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், மேலும் உத்தம் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளை இவருக்குத் தெரியாது என்றும் கூறியது. இறுதியாக இஃப்திகார் விடுதலை செய்யப்பட்டார். இவரின் சகோதரியின் திருமணம் 2010ல் நடக்க உள்ளது , இந்த வருடம் இவருக்கு சில நம்பிக்கைகளைத் தந்தாலும் காவல்துறையின் மீதான பயம் மட்டும் போகுமா என்பது ஐயமே.
——————————————
குல்சார் அகமது ஞானி மொகமது அமின் கசாம் “இன்னும் அவர்கள் என்னை தீவிரவாதி என்றே கருதுகின்றனர். இனி ஒரு பொழுதும் இந்தியாவில் எங்கும் நான் பயணிக்கமாட்டேன்”எனக்கூறுகின்றார். ஏனென்றால் அவர் 2006ல் முதல் முறையாக காசுமீரை விட்டு டெல்லி நோக்கிப் பயணித்தது அவரது வாழ்க்கையில் பல விபரீத மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.
இவர் ஒரு இளங்கலை அறிவியல் மாணவராவார். மொகமது அமின் சம்மு காசுமீர் வருவாய் துறையில் உதவியாளராக பணியாற்றியவர். மொகமது அமீனின் சகோதரி திருமணத்திற்கு தங்க ஆபரணங்கள் வாங்குவதற்காக இருவரும் நவம்பர் 23, 2006 அன்று டெல்லி சென்றனர். ஆனால் இவர்கள் டிசம்பர் 10, 2006 அன்று காவல்துறை சிறப்புப் பிரிவால் பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டார்கள். மேலும் இவர்கள் இருவரும் இலசுகர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடம் இருந்து 1.5 கிலோ வெடி மருந்தும், ரூபாய் 6 இலட்சம் பணமும் கைப்பற்றப்பட்டதாக்க் கூறியது காவல் துறை. மேலும் காவல் துறை அபு தகிர் என்ற இலசுகர் இ தொய்பாவின் பிராந்தியத் தலைவர் ஒருவரின் அலைபேசியை ஒட்டுக்கேட்டதாகவும், அதில் அவர் காசுமீரில் இருந்து இரண்டு நபர்களை வெடிமருந்து வாங்கிச் செல்வதற்கும், பணம் வாங்கிச் செல்வதற்கும் அனுப்புவதாக்க் கூறியதாகவும் கூறினர். இந்தக் குறிப்பின் மூலம் முன்னாள் ஆய்வாளர் மோகன் தலைமையிலான குழு சென்று இவர்கள் இருவரையும் டிசம்பர் 10 அன்று தாவுலாகானிலிருந்து மாகிபல்பூர் செல்லும் வழியில் கைது செய்தனர்.
மேலும் காவல் துறை அவர்களைக் கைது செய்த இடத்திலிருந்து ஒரு ஒளிப்படத்தையும் வெளியிட்டது. ஆனால் குல்சார் வேறுவிதத் தகவலைத் தருகின்றார். அதை நீதிபதி சர்மா தனது தீர்ப்பில் வெளிபடுத்தியுள்ளார். “வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் எல்லாம் கண நேரத்தில் தயாரிக்கப்பட்டவை”, “இது ஒரு தவறான அணுகுமுறையாகும்”, ” நான் இது ஒரு மனிதனின் தவறான செயலா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என வியக்கின்றேன்”, “இந்தத் தவறுகள் எல்லாமே இது ஒரு புனையப்பட்ட வழக்கு என்பதை தெளிவுற காட்டுகின்றது” என தனது தீர்ப்பில் நீதிபதி கூறுகின்றார். குல்சாரி கூறுகின்றார், தானும் மொகமதும் டெல்லியில் கடந்த நான்கு நாட்கள் இருந்ததாகவும், தாங்கள் காசுமீரிக்குத் திரும்பச் செல்லும் போது 30 ஆயுதமேந்திய பொது மக்கள் உடையிலிருந்த சிலர் நாங்கள் பயணம் செய்த தானியை மறித்து எங்களை வெள்ளை நிற வண்டியில் ஏற்றினார்கள். எங்கள் கண்கள் கட்டப்பட்டன. பின்னர் தான் தெரிந்தது நாங்கள் லோதி காலனியில் உள்ள சிறப்புப் பிரிவுச் சாலையில் இருக்கின்றோம் என்பது. எங்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தினார்கள் எங்களுக்கு மின்சார அதிர்வுகள் தொடர்ந்து 12 நாட்கள் கொடுக்கப்பட்டன.
அவர்கள் திரும்பத் திரும்ப நீங்கள் இலசுக்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், நீங்கள் இங்கே வெடி மருந்து வாங்கவே வந்தீர்கள் என சொன்னார்கள். டிசம்பர் 10, 2006 அன்று இரவு 10.30 மணி அளவில் எங்களிடம் வந்து உங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்கள். நாங்கள் நினைத்தோம் அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என. அவர்கள் எங்கள் கண்களைக் கட்டி ஒரு வெள்ளை நிற கனரக வண்டியில் ஏற்றிச் சென்றார்கள், அது ஒரு சந்தைப் பகுதியில் நின்றது. அங்கு நாங்கள் இறக்கிவிடப்பட்டு உட்காரவைக்கப்பட்டோம். எங்கள் அருகே ஒரு பையையும் அவர்கள் வைத்தனர். அதில் அதிக பணமும் மற்றும் சில பொருட்களும் இருந்தன. ஆனால் அவை யாவும் எங்களுடையவை அல்ல. அந்த வண்டியிலிருந்த ஒருவர், கையில் ஏ.கே இரகத் துப்பாக்கிகளையும், சில கைத்துப்பாக்கிகளையும் வைத்து ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டார். பின்னர் அவர்கள் அங்கு இருந்தவர்களிடம் தாங்கள் வெடி மருந்து மற்றும் பணத்துடன் இரு தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாகவும் கூறினர்.
மீண்டும் அவர்கள் எங்களை சிறப்பு பிரிவுக்கே அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் அவர்கள் தீசு கசாரி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நீதிபதி எங்களை எதுவும் கேட்கவில்லை. மேலும் ஐந்து நாட்கள் சிறையில் வைத்திருக்க அனுமதி அளித்தார். அந்த ஐந்து நாட்களில் அவர்கள் எங்களை வெறும் காகிதத்தில் பல முறை கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர் நாங்கள் மூன்று வருடம் தீகார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோம். சிறப்புப் பிரிவு காட்டிய ஆதரங்கள் அனைத்தும் புனையப்பட்டவையே ஆகும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அவர்கள் பயணம் செய்ததாக்க் கூறப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சாட்சியம் அளிக்க ஆரம்பித்த அந்த கணத்திலிருந்து வழக்கு குல்சாரி மற்றும் மொகமதிற்க்கு ஆதரவாக மாற ஆரம்பித்தது. அந்த நடத்துநரிடம் விசாரித்த வழக்கறிஞர் கானிடம் அவர்கள் காவல் துறை கூறும் அந்த நாளில் எங்கள் பேருந்து ஓடவே இல்லை என்று ஆதாரத்துடன் கூறினார்கள். எங்களை வியப்பில் ஆழ்த்தியது இந்த நிகழ்வு. காவல்துறை ஒரு வழக்கைப் புனைய முயலும்போது அந்த நாளில் அந்த பேருந்து இயங்கியதா , இல்லையா எனக் கூட தெரிந்து கொள்ள முயலவில்லை.
மேலும் அவர்கள் கைது செய்யும்போது எடுத்ததாகக் கூறிய ஒளிப்படங்களில் சுற்றியுள்ளவர்கள் யாரும் தெரியவே இல்லை. அது ஒரு மயான பூமியில் எடுக்கப்பட்டது போல் இருந்தது. மேலும் அந்தப் படத்தை எடுத்த ஒளிம்பு நோக்கியை அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவே இல்லை. மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆர்.டி.எக்சு என்ற வெடி மருந்தும் சோதனையின் போது தவறான ஒன்று என நிறுவப்பட்டது. இது போல பல புனைவுகளும் விசாரணையின் போது வெளிவந்தன. பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் ஆளான இந்த உளவியல் மற்றும் உடல் ரீதியான தொல்லைகளுக்கு யார் பொறுப்பு? அவர்கள் இழந்த இந்த ஐந்து வருடத்தையும், நிம்மதியான வாழ்வையும் யாரால் திரும்பக் கொடுக்க முடியும்? இந்தத் தொல்லைகளின் காரணமாக குல்சாரி தன்னை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனவும் கூறிவிட்டார். குல்சாரியிடம் அந்தக் கிராமத்தில் வாழும் ஒருவர் தனது மகனும் கிராமத்திற்கு வெளியே வைத்து கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக சிறையில் இருப்பதாகவும், யார் அவரை வெளியே கொணர்வார், யார் உதவுவார் எனவும் கேட்டார்.
அமெரிக்காவின் பாதச் சுவடை பின்பற்றி அதே வல்லரசுக் கனவில் பயணிக்கும் இந்தியாவில் இனி இது போன்ற நிகழ்வுகள் வழமையான ஒன்றாகவும் ஆகக்கூடும் என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. இஸ்லாமியர்கள் என்ற ஒரு காரணத்திற்காகவே சிறுபான்மையினச் சகோதரர்கள் இந்துத்துவ வெறியர்களால் இங்கு தீவிரவாதிகளாகக் கட்டமைக்கப்படுகிறார்கள். ஆனால், அதற்கு எதிராக உண்மையைக் கண்டறிந்து அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே இங்கு, அத்தகைய காவாலித்தனங்களை முன்னின்று செய்கிறது அந்தக் கேவலத்தை எங்கு போய்ச் சொல்ல?. நாளை இது போன்ற நிகழ்வில் நீங்கள் கைது செய்யப்பட்டால், அந்தக் கிராமவாசி கேட்ட அதே கேள்வியையே உங்களிடம் கேட்கிறேன், யார் வருவார் உங்களைக் காப்பற்ற?
- ப.நற்றமிழன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
அதனினும் கேவலமான உயிரினமாக கருதப்படுவது இசுலாமியர்களின் உயிர்.
உங்கள் கட்டுரை படிக்கும் அதே நேரத்தில் காசுமீரில் இராணுவ போலி என்கவுண்டரிலிரு ந்து தப்பிய இரு இளைஞர்களின் கண்ணீர் பேட்டியை காண முடிந்தது.
பண்டிகைக்கு பலி இட ஆடு வளர்ப்பது போல் வேலையில்லா வறுமையில் இருக்கும் அப்பாவி இளைஞர்களை 15000 ரூபாய் ஊதியம் கொடுத்து வளர்த்து கடைசியில் அவனை போலி எண்கவுண்டருக்கு பலியாக்கும் சமுகம் நம் இந்திய சமுகம்.
ஒரு அரபிகல்லூரி முதல்வர் டெல்லி விமாண நிலையத்தில் லண்டன் போகும் முன் அவசர அவசரமாக இறக்கிவிடபட்டு தீவிரவாதி என கைது செய்யப்பட்டு விசாரனை நடத்தப்பட்டது. லண்டன் செல்லும் விமாணத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க ச்தி செய்த்தாக 2 நாள் காவலில் வைத்து விசாரனை முடிவில் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.
கைது செய்வதற்கான காரணம் அவர் விமாணம் கிழம்பும் சற்று நேரத்திற்கு முன்னர் செல் போனில் அவர் மகனிடம் உருதுவில் பேசியது தான் காரணம்.
“ இன்னும் சற்று நேரத்தில் விமாணம் கிழம்பிடும் (udugaya ?)என்பதை இன்னும் சில நேரத்தில் விமாணம் வெடித்து விடும் என்று கூறியாதாக தவறாக புரிந்து கொண்டு அவரை கைது செய்தனராம்.
இங்கு மனித உரிமை பேசுபவர்கள் கூட இசுலாமியன் என்று வரும் போது கொஞ்சம் அச்சத்துடனே வெளியில் நின்று வேடிக்கை பார்கின்றனர்.
இன்னும் நம் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கொள்வோமாக!
சந்தேகம் என்று வந்தால் அவர்களை கைது செய்து விசாரிப்பது இயலபானது,
ஏன் இலங்கை தமிழர்கள் கூட இந்தியா வரும் போது இத்தகைய தொல்லைகளை அடைகிறார்கள்,அத ற்காக அதை ஈழத்தமிழ் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது நம் அரசு என்று சொல்லமுடியுமா?
ராஜிவ் காந்தி கொலைக்கு பிறகு ஈழத் தமிழ் இந்துக்களும் இத்தகைய இடர்பாடுகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை பற்றி கலைப்படாமல் இருப்பது ஏன்,
இஸ்லாமியருக்கு மட்டு இத்தகைய முதலைக் கண்ணிர் வடிப்பது ஏன்,
அந்த விமானத்தில் இருந்தவர் உண்மையில் தீவிரவாதியாக இருந்து, அவரை தாங்கள் எண்ணுவது போல் விசாரிக்காமல் விட்டிருந்தால், அப்போது விமானத்தில் வெடி குண்டு வெடித்திருந்தால ்,.அப்போது என்ன சொல்லி இருப்பீர்கள்,ஏன ் போலிஸார் சரியாக கண்கானிக்க வில்லை என்று சொல்லி இருப்பீர்கள்,
ஆகவே இஸ்லாமியருக்கு மட்டும் எதிராக இந்த நாட்டில் உள்ள அரசாங்கம் செயல்படுவது போல் எழுதுவது, நினைப்பது முட்டாள்தனமான சிந்தனை,
இப்படி மூஸ்லீம் சம்பந்தமாக மட்டும் பேசி ,மத ரீதியாக ஒரு பிரச்சனையை அனுகுவது, மேலும் இந்தியாவில் இந்தியர்களிடம் மத பிரிவினையைத் தான் வளர்க்கும்,
இப்பவும், நாம் ஒன்றும் மதசார்பற்றவ்ர்க ள் இல்லை. இஸ்லாத்தை சார்ந்தவர்கள். அதுபோலவே, அவ்ர்களும் இருக்கலாமே? நாம் ஏன் பயப்படனும்.
உண்மையான முஸ்லீம், அல்லாவுக்கு ம்ட்டும் க்ட்டுப்படனும். தீவீர வாதத்திற்க்கு அல்ல.
who made Bangalore Bomb blast???? Christian???? Who made Delhi blast??? German Bakery Pune Blast???? Indian Mujhadeeen is not being managed by Ramasamy or Kuppusamy..It is muslims only!!!! Hizbul Mujhadeen,Simi, Al -Umma are being managed by muslims only!!!!You say 'In the name of allah, jihad is done'...why no muslim community came forward to explain terror groups about it???? Instead of asking Police, go and speak wth terror groups and explain that in quran,Jihad is wrongly interprettd!!! not all muslims are terrorists!!! but all treeorists are muslims..that is what the point is!!!!
Have you lost your mother/father/s ister/brother in bomb blast done by Indian Mujhadeend!!!! My close friend lost his family in the pune bomb blast!!!
First understand what is happening in your community and blame others!!!!
RSS feed for comments to this post