நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு சட்ட முன்வரைவு 2011

சமீபத்தில் அவதார் என்ற உலக அளவில் பெயர் பெற்ற ஆங்கில திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் வேற்று கிரகவாசிகளின் நிலத்தையும் அவர்களின் பண்பாட்டையும் அழிக்க முயற்சிக்கும் அமெரிக்கப் படைகளை எதிர்த்து உக்கிரமான போர் நடைபெறும். போரின் இறுதியில் அந்த கிரகத்தின் மக்கள் வெற்றி பெறுவார்கள். இது ஏதோ ஒரு வகையில் பன்னாட்டு கம்பெனிகள் பழங்குடி மக்களின் மற்றும் விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்வதை எதிர்த்து உலகம் முழுவதும் நடைபெறும் போரட்டங்களை பிரதிபலித்தது என்பதால் அத்திரைப்படம் வெற்றி பெற்றது. அவதார் நிகழ்வுகள் நாடு முழுவதும் உலகமயமாக்கல், பொருளாதார கொள்கைகள் அமல்படுத்த துவங்கியதிலிருந்தே நடைபெறத் தொடங்கி விட்டன. மேற்கு வங்கத்தில், சட்டிஸ்கரில், ஜார்கண்டில் என இப்போராட்டங்கள் கண்முன் சாட்சியங்களாக இருக்கின்றன. இப்போராட்டங்களில் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து நடைபெறும் மக்களின் எழுச்சி மிக்க போராட்டமும் அதற்கான ஆதரவு அலையும் அம்மாநில அரசையும் நடுவண அரசையும் ஆட்டங்காண வைத்துள்ளது. இதன் எதிர்வினையாக சட்டவிரோதமாக செய்து வந்த நில பறிப்பை அல்லது கையகப்படுத்துதலை மற்றும் ஆக்கிரமிப்பை சட்டபடியே செய்ய நடுவண அரசு துணிந்து விட்டதாகவே தெரிகிறது. 

நடுவண அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுவாழ்வு குடியமர்வு சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள இது தொடர்பான மூலச்சட்டமான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1984ல் காலனியாதிக்கவாதிகளால் இயற்றப்பட்டது. அச்சட்டம் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதால் இப்புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்மயமாக்குதல், அடிப்படை கட்டுமானம் மற்றும் நகரமயமாக்கலுக்குத் தேவையான நிலங்களை கையயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதே சமயத்தில் விவசாயிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நிலங்களையே சார்ந்து இருக்கக்கூடியவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதில் வெளியேற்றப்படுபவர்களுக்கு மறுவாழ்வு/மறு குடியமர்வு வழங்கும் முதல் தேசிய சட்டமாகும் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கப்பட்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய விவசாயிகளின் அமைப்புகள் ஒருங்கிணைந்து கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறப்படுவதாவது:

 முதலாவது சட்டத்தில் பொது நோக்கம் என்பதே கிராமப்புறங்களை வளர்ச்சியடையச்செய்வது, அதன் சுற்றுச்சூழலை பாதுகாப்பது; நிலத்தை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதாக இல்லை. மாறாக கிராமப்புறங்களையும் விவசாயத்தையும் அழித்து தொழில்மயமாக்குவதாகவும் நகரமயமாக்குவதாகவும் உள்ளது. விவசாயம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையில்லை என்றும் தொழிற்சாலைகள்தான் அவசியம் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அவர்களின் நலன்களை தலை மேல் தாங்கி பூர்த்தி செய்ய காட்டும் அவசரமாகவே தெரிகிறது.

 100ஏக்கருக்கு குறைவாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தால் நட்ட ஈடோ அல்லது மறுவாழ்வோ அல்லது மறுகுடியமர்வோ கிடையாது.

 உணவு உற்பத்திக்கும் நாட்டின் உணவு பாதுகாப்பிற்கும் பேரழிவு ஏற்படும் வகையில் விவசாய நிலங்களை தொழிற்சாலைகளை மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

 இச்சட்டத்தில் தம்பட்டம் அடித்துக்கொள்வது போன்று விவசாயிகள் வெளியேற்றப்படுவதை தடுத்திடவோ அல்லது குறைத்திடவோ எந்த பிரிவும் இல்லை.

 விவசாய நிலங்களை அடிமாட்டுவிலைக்கு வாங்கிட பணபலம், அடியாள் பலம் உள்ளிட்ட அதிகாரத்துடன் நடைபெறும் பேரங்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட சட்டத்தில் எந்தப் பிரிவும் இல்லை.

 மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு அளித்திடுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. விவசாய நிலத்தை இழந்து நிற்பவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கருணையின் அடிப்படையில் நட்ட ஈடோ அல்லது மறுவாழ்வோ அளித்தால் தான் உண்டு. அதுமட்டுமின்றி நிலத்தை விற்க முடிவெடுப்பதில் விவசாயிகளுக்கோ பழங்குடியினருக்கோ எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

ஆக ஒட்டு மொத்தமாக நாட்டின் விளைநிலங்களையும் வளங்களையும் சட்டப்பூர்வமாகவே பன்னாட்டு கம்பெனிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடகுவைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது விவசாயிகளின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள கத்தி நாளை கடற்கரை நிலங்களிலிருந்து மீனவர்களை விரட்டியடித்திட வைக்கப்படும் என்பது நிச்சயம்.

- சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It