* ஒரு உள்ளங்கை
கதகதப்பு
என்ன செய்யும்?
பற்றிக் கொண்டவரை
பத்திரமாய் வைத்துக்
கொள்ளச் சொல்லும்.

* ஒரு புன்னகை
என்ன செய்யும்?
நீ
எனக்கானவன் என
குறிப்பாலுணர்த்தும்.

* ஒரு முத்தம்
என்ன செய்யும்?
முகமுரசிச் சென்ற
அந்த மூச்சுக்காற்றை
தொடர்ந்தலையும்.

* ஒரு சொல்
என்ன செய்யும்?
வாதை விலக்கி
நெஞ்சுக்குழிக்குள்
ப்ரியம் கடத்தும்.

* ஒரு அணைப்பு
என்ன செய்யும்?
வாழ்வின் இறுதிவரை
வருவேன் எனும்
நம்பிக்கை கிளர்த்தும்.

* ஒரு குரல்
என்ன செய்யும்?
வாஞ்சையோடு
கழுத்தணைத்து
கட்டிக்கொள்ளும்.

* ஒரு தலை கோதல்
என்ன செய்யும்?
இன்னுமின்னும்
மடிக்கிடத்தி
கொஞ்சச் சொல்லும்.

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.