சட்டென பெயர் மறந்து போன
ஒருவரின் முகம்
நினைவில் ஏனோ
தங்கிப் போனது.
அடர் நிறத்தவர்
கொழுகொழுவென
வாய்த்திருக்கும் கன்னம்
பேரழகு.
நிமிர்ந்தே
பார்க்கும் படியான உயரம்
மடித்த முழுக்கைச் சட்டை
எப்போதும் மாட்டப்படாத
முதல் பித்தான்..
அகண்ட உள்ளங்கையால்
உறுதியாகக் கையைப்
பற்றிக் கொள்வார்
அதிர்ந்து சிரிப்பார்
அவருடைய பெயர்....
அது சரி
வெறும் பெயர்களைச் சுமந்து கொண்டு
என்ன செய்வது?
- இசைமலர்